ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 24, 2018

“கண நீரை வைத்து…” அணுக்கதிரியக்கங்களைப் பரப்பியதால் ஏற்பட்ட விளைவுகள்…!

விஞ்ஞான அறிவால் அணுக்கதிரியக்கங்களைப் பாய்ச்சி ஒரு நாட்டை எப்படி அழிக்க வேண்டும் என்று எண்ணத்தால் எண்ணினார்களோ அது அனைத்தும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இன்றும் பரமாத்மாவில் கலக்கச் செய்துள்ளது.

அந்த விஷக் கதிரியக்கங்கள் பரவி பூமியின் ஈர்ப்பின் நடு மையம் அடையப்படும் போது பூமியில் கொதிகலனாக மாறுகின்றது. இன்று பூமி கொதிக்கும் நிலையில் தான் உள்ளது.

தன் சுக போகங்களுக்காகப் பல காலம் அதாவது ஒரு வருடமோ பத்து வருடமோ கடலுக்குள் மறைந்திருந்து (SUBMARINE) எதிரியை வீழ்த்த இதே அணுக் கதிரியக்கச் சக்தியின் வீரிய உணர்வு கொண்டு மற்ற நாட்டை அடக்கி ஆட்சி புரிய வேண்டும் என்று செயல்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

இதை யார் யார் வைத்துச் செயல்படுத்துகின்றார்களோ இதனின் உணர்வுகள் ஹைட்ரஜன் என்ற நிலைகள் கடலுக்குள் பரவி கடல் வாழ் உயிரினங்களிலே அது இணைத்துக் கொண்டாலும் அது அனைத்தும் வீரிய உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.

ஆனால் வளர்ச்சி பெற்ற மனிதனின் உடலுக்குள் வரும்போது இந்த உணர்வுகள் சிதைந்து மீண்டும் நலிந்திடும் நிலையை அடையச் செய்கின்றது.

விஞ்ஞான அறிவால் இத்தகைய நிலைகளைச் செய்து செய்து செய்து காற்று மண்டலமே நச்சாகிவிட்டது.

அணுக் கதிரியக்கங்கள் பூமியின் நடு மையம் அடைந்து கொதிகலனாகி அன்றைய பாறைகளைக் காட்டிலும் விஷத் தன்மை கொண்ட பாறைகளாக உருமாற்றிக் கொண்டிருக்கின்றது.

துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி நீர் நிலைகள் பெருகி இந்தப் பூமியே மிகத் துரித நிலைகள் கொண்டு நிலங்கள் குறுகும் நிலை வரப் போகின்றது.

குறுகிய நிலத்திற்குள் மனிதர்கள் எப்படி விஷப் பூச்சிகள் மற்றொன்றைத் தீண்டினால் மடிகின்றதோ இதைப்போல விஷத்தின் தன்மை அடையும் தருணம் வந்து கொண்டே உள்ளது.

ஹைட்ரஜன் (கண நீர்) எப்படி அடக்குகின்றதோ அதைப் போன்று விஷத் தன்மையை அடக்கிக் கொண்டு பூமிக்குள்ளிருந்து கொதிகலனாக குழம்பாக வெளிப்படும் சமயம் இந்தப் பூமியே நட்சத்திரமாக மாறும்.

இயற்கையில் விளைந்த உணர்வின் தன்மை வேறு.

ஆனால் மனிதன் அணுவைப் பிளந்து ஒருக்கிணைந்த நிலைகள் வரும் போது மற்றதைச் சுட்டுப் பொசுக்கி தன் இனத்தின் தன்மையைப் பெருக்கி அது வளரும் தன்மை வரப்படும் போது பூமியே நிலை குலைந்து போகும்...!

அதனால் பூமியிலிருக்கும் உயிரினங்களிண் வளர்ச்சி குன்றி நீருக்குள் அல்லது பனிப் பாறைக்குள் சிக்கப்பட்டு நச்சுத் தன்மை கொண்டதாக மாறி நரக லோகத்தையே அனுபவிக்கும் நிலைகள் வரும். இதைப் பல காலம் முன்பே உணர்த்தியுள்ளார்கள்.

இதைப் போன்ற விளைவுகள் வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் மனிதனான நாம் நல்ல நினைவு இருக்கும் பொழுதே
1.மகரிஷிகளின் உணர்வுகளைப் பெருக்கி
2.நஞ்சின் தன்மையைப் பிளந்திடல் வேண்டும்.

விஞ்ஞான அறிவால் எப்படி அணுவைப் பிளந்தானோ இதைப் போல நமக்குள் அந்த மகரிஷிகளின் உணர்வைக் கொண்டு தெளிந்திடும் உணர்வின் தன்மை கொண்டு தீமையான உணர்வுகளைப் பிளந்திடல் வேண்டும்

மகரிஷிகள் காட்டிய நிலைகளைக் காலத்தால் இழந்தோம். தன்னை மறந்தோம் என்ற நிலைகளில் “தான் யார்...?” என்ற சிந்திக்கும் திறனை இழந்தோம்.

சாங்கிய சாஸ்திரங்களைக் கடைப்பிடித்துக் கொண்டு ஆலயங்களில் சிலைகளுக்கு உணவு படைத்து
1.அந்தச் சிலைதான் செய்யும் என்ற எண்ணத்தில் நாம் வாழுகின்றோம்
2.யாகங்கள் செய்து ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்தால் அவன் செய்வான் என்று
3.ஆண்டவனிடம் வரம் கேட்கும் முறைகளைத்தான் வைத்துள்ளோம்.

அறியாத மக்களாக இருந்தாலும் அறிந்துணர்ந்து தனக்குள் தீமையை எப்படிச் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்ற நிலையைச் சாதாரண ஒரு சிலையை வைத்து மகரிஷிகள் விநாயக தத்துவத்தின் மூலமாக உணர்த்தியுள்ளார்கள்.

1.மிருகத் தலையை வைத்து
2,மனித உடலைப் பொருத்தி
3.நீ எப்படிப் பிறந்தாய் என்று உணர்த்தி சிந்திக்கும்படி செய்து
4.அதை அறிந்துணர்ந்த மகரிஷிகளின் சக்திகளைப் பெறுவதற்காக
5.விநாயகர் சிலையாக உருவாக்கினார்கள் ஞானிகள்.

“தான் யார்...! இந்தப் பிள்ளை யார்…? நாம் என்ன செய்ய வேண்டும்...? என்ற நிலையைத் தெளிவாக விநாயகர் தத்துவத்தின் மூலமாக எடுத்துரைத்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்திகளை நாம் அனைவரும் பெறுவோம்.

அகஸ்தியன் ஒரு காலம் இந்தப் பூமியைச் சமப்படுத்தியது போல் நம் பேச்சால் மூச்சால் சொல்லால் செயலால் இந்த உலகைச் சம நிலை பெறச் செய்வோம்.