ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 29, 2018

“வெறும் சொல்லாக…” நான் சொல்வதாக யாரும் எண்ணாதீர்கள்…! மெய் ஞானம் பெறுவதை நீங்கள் உணரவும் முடியும்… பார்க்கவும் முடியும்…!

எத்தனையோ கோடி சரீரங்களைப் பெற்ற பின் மனிதனாக நாம் உருவானாலும் நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் தீமையான உணர்வுகள்
1.மனித உடலை எப்படி அழிக்கின்றது?
2.நம் நினைவாற்றலை எப்படி மாற்றுகின்றது?
3.மீண்டும் பரிணாம வளர்ச்சியில் தேய் பிறையாகி
4.மனிதனல்லாத உடலுக்குள் எப்படிச் செல்லுகின்றோம்? என்று
5.இதையெல்லாம் நாம் யாருமே சிந்திப்பதில்லை…!

அந்தத் தேய் பிறையான நிலைகளுக்குச் செல்வதை நிறுத்த வேண்டும் என்றால் அருள் ஞானியின் உணர்வை நமக்குள் விளைய வைக்க வேண்டும்.

தீமையின் நிலைகளுக்குச் செல்லாது அருள் ஞானியின் உணர்வை எடுத்து ஒளியாக மாற்றி என்றும் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலைகளுக்கு உங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே குருநாதர் எமக்கு (ஞானகுரு) இட்ட அருள் பணியாகும்.

உங்களுடைய நினைவாற்றல் மகரிஷிகளின் பால் இருக்கச் செய்வதே இந்த உபதேசத்தின் நோக்கம். உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் உணர்வுகள் ஊடுருவும் போது தீமையின் நிலைகளைக் கரைத்துவிடும்.

நான் வெறும் சொல்லாகச் சொல்வதாக நீங்கள் எண்ணலாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் (குருநாதர்) என்னிடம் சொல்லும்போது
1.அவன் சொல்லுகின்றான்… நான் எதைப் பெற முடியும்..?
2.அவன் காட்டுகின்றான்… நான் எதைப் பெற முடியும்…! என்று இப்படித்தான் முதலில் எண்ணினேன்.

அவன் (குருநாதர்) சொன்னதை
1.அந்த வலுவின் தன்மை எனக்குள் வரப்படும் பொழுது
2.பின்னாடி தான் அவர் சொன்ன உணர்வுகள் அனைத்தையும்
3.காட்சிகளாக நான் காண முடிந்தது… உணரவும் முடிந்தது…!

மெய் ஞான அறிவின் தன்மை அது எப்படி…? என்றும் ஒவ்வொரு உயிரிலும் உணர்வுகள் எப்படி விளைகின்றது…? என்ற நிலையும் பின் தான் நான் உணர முடிந்தது.

அதைப் போல இன்றைய நிலைகள் நான் சொல்வதை “ஏதோ…” என்று இலேசாக விட்டுவிடாதீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த தீமையின் நிலைகளை நிறுத்த அருள் மகரிஷிகளின் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துப் பழகிக் கொள்ளுங்கள்.

தீய வினைகளைக் கரைத்து மெய் ஞானிகளின் அருள் ஒளியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் அதிகரிக்கும் போது அது உங்கள் ஆன்மாவின் முன்னாடி நின்று தீமைகளை அகற்றும் நிலையாக மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக உருப்பெறுகின்றது. ஆன்மா சுத்தமாகின்றது.

இதையே கூட்டமைப்பாக அனைவரும் ஒன்று கூடி அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற நிலையில் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லோரும் ஏகோபித்த நிலைகளில் மகரிஷிகளின் எண்ண அலைகளைப் பரப்பப்படும் போது பூமியில் தீமைகளை விளைவிக்கும் உணர்வின் அணுக்கள் விலகுகின்றது.

அப்பொழுது இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.