ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2016

காண்டீபத்தை ஒடித்ததால் சீதையை மணந்துகொள்கின்றான் “கல்யாணராமன்” - விளக்கம்

காட்டில் வாழும் உயிரினங்கள் ஒரு கூட்டமாகச் செல்லும்போது ஒரு தாய் தன் குட்டி வரவில்லை என்றால் கூட எட்டிப் பார்க்கும். வந்துவிட்டதா.., இல்லையா? என்று பார்த்துக் கொள்ளும்.

வெளியிலே சென்றால் ஒரு மிருகத்தை தன் எதிரியைப் பார்த்ததென்றால் உள்ளே பாதுகாப்பாகக் கொண்டு வைத்துக்கொள்ளும்.

இதெல்லாம் எப்பொழுது? மிருகமாக இருக்கும்போது இந்த உணர்வு வந்தது. அது ஒன்று சேர்த்து வாழும் அரவணைக்கும் தன்மை ஒரு குடும்பத்திற்கு வருகிறது.

ஆனால், நமக்கு நம் குடும்பத்தில் இன்று வருகிறதா? இல்லை. எத்தனை பேர் வருகின்றார்கள்? பாருங்கள்.

இவன் என்னை இப்படியே பேசிக் கொண்டிருக்கின்றான். அம்மா அவன் பக்கம்தான் பேசிக் கொண்டுள்ளது என்று சண்டை போடுபவர்கள்தான் இருக்கின்றார்கள்.

அவனுக்குத்தான் அம்மா ஆதரவு கொடுக்கின்றார்கள், எனக்கு ஒன்றும் செய்ய மாட்டேன் என்கிறது. நான் அம்மா சொன்னபடியெல்லாம் கேட்கிறேன் என்று சொல்வதை நீங்கள் பார்க்கலாம்.

அம்மா என்ன செய்வார்கள்? அவன் அறியாமல் செய்கின்றான், எப்படியும் திருந்திவிடுவான் என்று கொஞ்சம் அரவணைப்பார்கள். அது இங்கே பொறாமையாகிவிடும்.

நான் உதவி செய்கிறேன், அவன் அம்மாவிற்கே எதிரியாக உள்ளான். ஆனாலும், அம்மா அவனுக்குத்தான் உதவி செய்கிறது என்பார்கள்.

இந்த மனித வாழ்க்கையில் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் உருவாகும்போது மனிதனுடைய சிந்தனைகள் நம்மையறியாமலே பகைமை உணர்வுகளை உருவாக்கிக் கொள்கிறோமே தவிர நல்லதை எண்ண முடியவில்லை.

அதாவது, அவனும் தாயின் எண்ணப்படி தெளிவாக வேண்டும், தெளிந்தவனாக வேண்டும், தாயின் அருளை அவன் பெறவேண்டும் என்று எண்ணினால் இங்கே பகைமைகள் வராது.

இதையெல்லாம் நம் ஞானிகள் காட்டிய நிலைகளில் இராமாயணத்தில் உற்றுப் பார்த்தால் தெரியும். ஒன்று சேர்த்த உணர்வுகள் எப்படி விளைகிறதென்றும் எண்ணங்கள் ஒன்று சேர்க்கும் நிலைகளைப் பற்றி அதில் சொல்லியுள்ளார்கள்.

இராமன் எப்பொழுது “கல்யாணராமன்” ஆகின்றான்?

ஜனகச் சக்கரவர்த்தி சீதாவிற்குத் திருமணம் செய்ய சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றான். வருபவர்கள் அவரவர்கள் எண்ணங்கள் கொண்டு கற்றுக் கொண்ட வித்தைகளையெல்லாம் வைத்து காண்டீபத்தில் நாண் ஏற்றி ஏவுகிறார்கள்.

ஆனால், இராமன் என்ன செய்கிறான்? வந்தவுடன் காண்டீபத்தையே ஒடித்துவிடுகிறான்.
காண்டீபத்தில் நாண் ஏற்றினால்தான் அங்கே தாக்க முடியும்.
ஆகவே அதை ஒடித்துவிடுகின்றான்.

ஏன்?

தனக்குள் இருக்கும் மற்றவருடைய பகைமை உணர்வை எல்லாம் நீக்கிவிடுகின்றான். அப்பொழுதுதான் அந்த அரவணைக்கும் எண்ணம் அங்கே வருகின்றது.

அடுத்து என்ன செய்கின்றான்? “சீதா” அந்த சந்தோசமான உணர்வைத் தனக்குள் அரவணைத்துக் கொள்கின்றான்.  சந்தோசமான உணர்வை அரவணைக்கும்போதுதான் “கல்யாணராமா”.

தனக்குள் இருக்கும் தீங்கான உணர்வுகளுக்கு ஆகாரம் போகாதபடி தடுத்து, தீமைகளை நீக்கிவிட்டால் அந்த அருள்ஞானம் என்ற உணர்வு வருகின்றது.

இதைத்தான், வான்மீகி அன்று கல்யாணராமா என்று காட்டினார்.

“புதிய பூமி”

நீங்கள் அனைவரும் இந்த உலகுக்கு எடுத்துக்காட்டாக நிறைவுபடுத்தி அந்த உணர்வின் தன்மை நாம் பெறவேண்டும் என்று “நான்…,” மட்டும் இல்லாதபடி அனைவரும் பெறவேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.

அருள் ஞானத்தை நாம் நமக்குள் சமைத்து விளைய வைத்த அந்த அருள் ஞானிகளின் உணர்வை எல்லோருக்கும் ஊட்டுதல் வேண்டும்.

ஆக, பிறர் அந்த எண்ணங்களை எண்ணும் பொழுது அவர்களும் அதைச் சுவைத்து அதன் வழியில் அவர்கள் பெற முடியும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதைத்தான் புதிய பூமியாக அமைத்தது. அதிலே புதிய உணர்வை வளர்ப்பதும் அங்கே மத பேதம் இன பேதம், மொழி பேதம் என்று எத்தகைய பேதமும் வரக்கூடாது.

அருள் ஞானத்தின் நிலைகளே ஒளிச் சுடராக அங்கே வளர வேண்டும். அங்கே வரும் அனைவருக்குள்ளும் மகிழ்ச்சியின் தன்மை பெருக வேண்டும். அருள் ஞானம் அவர்களும் பெறவேண்டும்.

ஏனென்றால், “உலகைக் காக்கும் அருள் உணர்வுகள்..,” வளரவேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்வது.

நான் ஒருவனாகச் செய்யவில்லை. நானாகச் செய்வதற்கு வலுவில்லை.

அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் ஒலிக்கின்றது. உணர்வின் அலைகள் படர்கின்றது. உங்கள் மனங்கள் உருவாகின்றது. அந்த உணர்வின் செயலாக.., “நீங்கள் தான் உருவாக்குகின்றீர்களே.., தவிர நானல்ல”.

நீங்கள் எங்கே இருந்தாலும் சரி குருவின் உணர்வுகள் உங்களுக்குள் ஊடுருவி அந்த ஐக்கியமாகும் உணர்வு கொண்டு செயல்படுத்துங்கள். அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் இணைந்து அதுவே உங்களுக்குள் வளர்ந்து அதனின் செயலாக்கமாக உங்களை அது இயக்கத் தொடங்கும்.

பதிவு செய்த நாடாவில் உள்ள இசையை மீண்டும் போடும் பொழுது அதை மகிழ்ந்து கேட்கின்றோம், அதைப் போன்று மகரிஷிகளின் உணர்வு (அதைப்) பதிவு செய்த “நாடாவாகத்தான்.., நான் இருக்கின்றேன்”.

அந்த நாடாவில் வரும் ஒலியை நானும் நுகர்கின்றேன். எனக்குள் மகிழ்ந்திடும் நிலையைப் பெருக்குகின்றேன். எல்லோரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்ற நிலையைத்தான் உருவாக்குகின்றேன்.

ஒரு இனிமையான இசையைக் கேட்கும் பொழுது அகமகிழ்ந்திடும் நிலைகளை நீங்கள் வெளிப்படுத்துகின்றீர்கள்.

அதைப் போன்று உங்களுக்குள் அந்த அருள் உணர்வுகள் இசைந்து “உங்களை அது மகிழ்ச்சி அடையச் செய்யும் பொழுது..,” அதைக் கண்டு நான் சந்தோஷப்படுகின்றேன்.

இதைத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார்.

ஆகவே, இதைச் சீராகக் கடைப்பிடிக்கும் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். எந்தத் துயரத்திற்கும் நீங்கள் இடம் தராதீர்கள். குறையான உணர்வுகளை உங்களுக்குள் புகவிடாதீர்கள்.

கணவன் மனைவி நீங்கள் இருவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை சிஷ்டரும் அருந்ததியும் போன்று கவர்ந்து கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் அந்த அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று உங்கள் மனதினை உயர்த்துங்கள். இவ்வாறு செய்து வந்தீர்கள் என்றால் அது சொர்க்கபூமியாக.., “புதிய பூமியாக” இருக்கும்.

ஆக, புதிய பூமி என்பது தீமைகளிலிருந்து விடுபட்டு அருள் ஞான நிலைகள் கொண்டு உருவானது. அதை நாம் அனைவரும் உருவாக்கிக் கொண்டுள்ளோம்.

“அதனின்.., உருவின் தன்மையை.., உலகம் பார்க்க வேண்டும்” என்றால் அங்கே அருள் ஞானம் பேச வேண்டும். அருள் ஞானத்தின் உணர்வுகளை அங்கே பரப்ப வேண்டும். அருள் ஞானம் வளர வேண்டும்.

இந்தப் புதிய பூமியில் ஒவ்வொருவரும் தன்னை அறிதல் வேண்டும். தன்னை அறிந்து செயல்படும் திறன் அனைவரும் வேண்டும். “அனைவரும் வாழ வேண்டும்..,” என்ற எண்ண உணர்வுகள் உருப்பெறவேண்டும்.

உலகில் வாழும் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அதைத்தான்  நமக்குள் பெருக்க வேண்டும்.

அருள் ஞானிகள், அருள் மகரிஷிகளின் உனர்வுகள் அனைவரும் பெறவேண்டும். அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும். உலக மக்கள் அனைவரும் ஒன்றி வாழும் நிலைகள் பெறவேண்டும்.

இதைப் போன்ற எண்ணங்களை நாம் ஒவ்வொருவரும் வளர்த்தல் வேண்டும். இதுவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் “புதிய பூமி”.

December 30, 2016

“ஊன் உடம்பு.., ஆலயமடா..!” - திருமூலர் பாடியது

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருள் சக்திகளை நாம் பெற்று, அவர் வழியைப் பின்பற்றி பேரானந்தப் பெருநிலையை நாமும் பெறுவோம்.

அவரின் அருளை நாம் பெறவேண்டும் என்றால் நாம் பார்ப்போரெல்லாம் பேரானந்தப் பெருநிலை பெற வைக்க வேண்டும். அவர்கள் பேரானந்தப் பெருநிலை பெறும் உணர்வலைகள் வருவதை நாம் நுகர வேண்டும்.

நமக்குள் பேரானந்தத்தை வளர்த்திட வேண்டும்.

ஒரு நெல் பயிரை நாம் விளைய வைத்து அதை நாமும் உட்கொண்டு மகிழ்கின்றோம். அதே சமயத்தில் இதை மற்றவரும் உட்கொண்டு மகிழ்ந்திட வேண்டும், நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் நாம் அந்தப் பயிர்களை விளையச் செய்வோம்.

ஆக, “யாரும் இதை வாங்கக் கூடாது.., உட்கொள்ளக் கூடாது..,” என்ற எண்ணத்தில் விளைய வைப்பதில்லை. இதைப் போல குரு அருளை வளர்ப்போம். மற்றவர்களையும் நாம் பெறச் செய்வோம்.

ஏனென்றால், ஈஸ்வரபட்டாய குருதேவர் நமக்கு “எவ்வளவு பெரிய.., பொக்கிஷத்தைக் கொடுத்துள்ளார்..,” என்று எண்ணுங்கள்.

குறைகளை அகற்றுங்கள். மெய்ப்பொருளைக் காணும் உணர்வை உயர்த்துங்கள். உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்குங்கள். அதையே தவமாக்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானியுங்கள். தியானம் என்பது முதலில் அந்த உயர்ந்த சக்தியை நமக்குள் வளர்த்துப் பழகுவது.

ஒரு பாத்திரத்தில் நாம் பல பொருள்களைப் போட்டுச் சமைக்கின்றோம் என்றால் அதில் சமைத்த பொருள்களுக்கொப்பத்தான் வாசனை வரும்.

எல்லாப் பொருள்களையும் நாம் போட்டுச் சமைத்தபின் “சிறிதளவு.., உப்பைப் போட்டுப் பார்க்கலாமே..!” என்று தன் இஷ்டத்திற்குச் சேர்த்தால் என்ன ஆகும்?

சமைத்த அந்த உணவைச் சாப்பிடுபவர்கள் அனைவரும் “உப்பு அதிகமாகிவிட்டது..,” என்று தான் சொல்வார்கள். இதைப் போன்று நாம் சமைக்கும் உணர்வின் சுவையே அதைக் கேட்போரின் நிலைகள் மனம் மகிழும்.

ஆக, நமக்குள் அருள் ஞானியின் உணர்வுகளைத் தியானத்தால் எடுத்து அனைவரும் பெறவேண்டும் என்று ஏங்கி அனைவருக்கும் அதைக் கிடைக்கச் செய்யவேண்டும்.

அதைத்தான், “மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிப்போம். மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெறவேண்டும் என்று தவமிருப்போம்”.

எல்லா ஆலயங்களுக்கும் சென்று அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்று தியானிப்போம். இந்த ஆலயத்திற்குள் வரும் ஒவ்வொருவரும் அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்று தவமிருப்போம்.

அங்கே வைத்திருக்கும் கனியைப் போன்று மலரைப் போன்று பாலைப் போன்று பன்னீரைப் போன்று சந்தனத்தைப் போன்று அந்த நறுமணங்கள் அனைத்தும் நாங்கள் பெறவேண்டும்.

இந்த ஆலயத்திற்கு வரும் அனைவருக்கும் அந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும் என்று இதை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

மலரைப் போன்ற மணமும் மகரிஷிகளின் அருள் சக்தியும் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியும் நாங்கள் பெற வேண்டும். இந்தக் கோவிலுக்கு வரும் அனைவரும் அந்த நிலை பெறவேண்டும் என்று நாம் தவமிருக்க வேண்டும்.

அதற்குப் பதில் கோவிலுக்குள் போய் “நான் தவமிருந்து.., இந்தத் தெய்வத்தைப் பெறப் போகின்றேன்..,” என்றால் இது தவமில்லை.

ஆக, இந்த உடலான கோவிலுக்குள் இந்த அருள் ஞானங்கள் அனைவருடைய அன்பையும் நீங்கள் பெருக்க வேண்டும். அனைவரும் மகிழ்ந்திட வேண்டும் என்று இங்கே கூட்டிட வேண்டும். இதுதான் கோவில்.

நம் உடலே கோவில். இதைத்தான் திருமூலர், “ஊன் உடம்பு.., ஆலயமடா..,” என்று பாடினார்.

நாம் அவர் சொன்ன நிலைகளை “சிறிதளவாவது உணர்ந்திருக்கின்றோமா..,” சற்று சிந்தித்துப் பாருங்கள்.

December 29, 2016

பேரானந்தத்தை நுகரும் ஆனந்த நிலைகள் பெறுங்கள்...!

இது வரையிலும் உபதேசித்த உணர்வின் தன்மை கொண்டு “நான் பேசுகின்றேன்..,” என்று யாரும் எண்ண வேண்டாம். மகரிஷிகளின் உணர்வின் அலைகளே இந்த “உணர்வின் ஒலிகளை..,” எழுப்பிக் கொண்டுள்ளது.

இன்று நாடக்களில் காந்த ஊசியை (COMPUTER DRIVES WITH LASER) வைத்துப் பதிவு செய்து கொண்ட பின் அதை இயக்கும்போது பதிவானது திரும்பவும் ஒலிக்கின்றது.

அதைப் போன்று தான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகள் எனக்குள் பதிந்தது. பதிந்த உணர்வின் அலைகளே உபதேசமாக இங்கே வெளி வருகின்றது.

“அவர்..,” எனக்குள் இருந்து கொண்டு பேசவில்லை.

சிலர் என்ன நினைக்கின்றார்கள் என்றால் என் உடலுக்குள் வந்து “அவர் பேசுகின்றார்..,” என்று. அவர் இந்த நரகலோகத்திற்குள்ளேயா வருவார்..,?

வர மாட்டார்.

அவர் தனக்குள் பெற்று வளர்த்துக் கொண்ட உயர்ந்த உணர்வுகளை எனக்குள் பதிவாக்கினார். அந்தப் பதிவைத்தான் நினைவாக்கி அந்த உணர்வின் தன்மை நீங்கள் பெறவேண்டும் என்று இதைச் செய்கின்றேன்.

அவரிடம், “எல்லாம் சரி..,” என்று சொல்லிவிட்டு காசுக்காக வேண்டும் என்று எண்ணி இருந்தேன் என்றால் இந்த உடலுக்குக் காசைத் தேட வேண்டும் என்ற உடலின் இச்சைதான் எனக்கு வந்திருக்கும்.

அருள் ஞானத்தை நான் பெற்றிருக்க முடியாது. அந்த ஆற்றல்களைப் பெறக்கூடிய தகுதியையும் இழந்திருப்பேன்.

ஆக, காடு மேடெல்லாம் பல காலம் என்னை அலையச் செய்தார் குருநாதர். அங்கே பல அனுபவங்களைப் பெறும்படி செய்தார். பேரண்டத்தின் பேருண்மைகளை எல்லாம் எனக்குள் காட்டினார்.

அப்பொழுது, நான் அவரை உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்த அந்த உணர்வுகளே எனக்குள் அழமாகப் பதிவானது. அதைத்தான் உங்களிடம் சிறுகச் சிறுக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

குருநாதர் தன் உடலை விட்டு அகன்றபின் ஒளியின் நிலைகள் பெறவேண்டும் என்றார்.

ஒளியின் நிலைகள் பெறும் உணர்வை நாடாக்களில் (MEMORY DEVICE) பதிவு செய்வது போல் என் உடலுக்குள் அதை ஊழ்வினையாகப் பதிவு செய்தார்.

பதிந்த உணர்வை நான் திரும்ப எண்ணும் பொழுது வினைக்கு நாயகனாக அது இயக்குகின்றது. அதன் மூலம் “நானும் பெறுகின்றேன்.., உங்களையும் பெறச் செய்கின்றேன்.

இது தான் இதில் உள்ள நிலை.

அவ்வாறு பதிந்த நிலைகள் கொண்டு எனக்குள் கண்டுணர்ந்த உணர்வுகள் தான் இசையாக மாறுகின்றது. ஆனால், அவ்வாறு பெற்ற அருள் ஞானத்தை எனக்குள் அடக்கி வைத்துக் கொண்டால் நான் நுகரும் தன்மை இல்லை.

குருநாதர் காட்டிய அருள் வழியில் “ஒன்று.., இரண்டு.., மூன்று..,” என்று படிப் படியாகத் தொடச் சொன்னார்.

அவர் எந்த இசையில் படித்தாரோ அந்த உணர்வின் தன்மை தான் இங்கே இயக்கப்படும் பொழுது நானும் பெறுகின்றேன். உங்களுக்கும் கிடைக்கச் செய்யும் சந்தர்ப்பதை ஏற்படுத்துகின்றேன். இவ்வளவு தான்.

யார் ஒருவர் இதைப் பெற்று மகிழ்கின்றீர்களோ அந்தப் பேரானந்தத்தை நுகரும் ஆனந்த நிலைகள் உங்களுக்குள் வளரும். அதைத்தான் செய்யச் சொன்னார் குருநாதர்.

ஆகவே, நீங்கள் இதைப் படித்துணர்ந்தபின் எப்பொழுதெல்லாம் இதை நினைவுக்குக் கொண்டு வருகின்றீர்களோ பதிந்த மகரிஷிகளின் பேராற்றல்மிக்க அருள் சக்திகள் உங்களுக்குள் வந்து கொண்டே இருக்கும்.

தீமைகளை அகற்றிடும் பேராற்றல் பெறுவீர்கள். அந்தச் சக்திகளை நீங்கள் நுகர முடியும். அதே சமயத்தில் உங்கள் சொல்லைக் கேட்போருக்கும் அந்த அருள் உணர்வுகள் உண்வாகக் கிடைக்கின்றது.

அப்பொழுது அவர்களும் மகிழும் நிலைகள் பெறுகின்றார்கள். இதுதான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய பேரானந்தப் பெரு வாழ்வு.

December 28, 2016

ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி "இவ்வளவு தான்..," என்று அளவிட முடியாது

உயிருடன் ஒன்றிடும் உணர்வினை ஒளியாக மாற்றி விண்ணின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்து என்றும் அழியாத ஒளிச்சரீரமாக மாற்றும் நிலை நிலையே இப்பொழுது உபதேசிக்கும் தியானத்தின் அற வழிகள்.

ஆக, எமது உபதேசத்தைக் கேட்டுத் தியானமிருக்கும் அனைவருமே குடும்பத்திற்குள் ஒற்றுமையின் நிலையைப் பெருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இல்லை என்றால் பயனற்றது. ஆகவே, பயனுள்ள நிலையாகப் பெருக்குதல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி இவ்வளவு தான் என்று உங்களால் அளவிட முடியாது. “அவ்வளவு உயர்ந்த சக்தியை..,” குரு அருளால் உங்களுக்குள் பதியச் செய்திருக்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் துணை கொண்டு பேரண்டத்தின் இயக்கத்தையே கவர்ந்து அந்த உணர்வின் தன்மை கொண்டு அறியாது வந்த இருளை மாய்த்திடும் சக்தியாக குரு உங்களுக்குக் கொடுக்கும் உணர்வைத்தான் ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

இதை நீங்கள் அமர்ந்து எளிதாகக் கேட்கின்றீர்கள், படிக்கின்றீர்கள். நான் காடு மேடெல்லாம் அலைந்துதான் அதைப் பெற்றேன்.

பெற்ற உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்டதை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும்.

உங்களை அறியாது சேர்ந்த இருளிலிருந்து உங்களை நீங்கள் மீட்டிட வேண்டும். அந்த எண்ணத்தின் வலு கொண்டே உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும்.

எவரும் உங்களைக் காக்க முடியாது. “காத்திடுவேன்…, என்று சொல்வதெல்லாம்.., பிரமையே”.

யாரையும் புகழ் பாடும் நிலைக்கும் போற்றித் துதிக்கும் நிலைகளை நாம் மறப்போம். அவர்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற ஏக்கத்தை நமக்குள் பெருக்குவோம்.

ஆகவே, இந்த மனித வாழ்க்கையில் குருநாதர் காட்டிய அருள்வழிப்படி, விண்ணின் ஆற்றல் நீங்கள் பெற்று, இந்த மண்ணின் ஆற்றலுக்குள் இருக்கும் தீமைகளை அகற்றுங்கள்.

ஆகவே, ஒவ்வொரு நாளும் இதைத் தெளிவாகத் தெளிந்து, இந்த வாழ்க்கையில் குருநாதர் காட்டிய அருள் வழியில், நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அதே உணர்வின் சக்தியாக, ஒளியாக மாறும் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் நினைவலைகள் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

December 27, 2016

உபநிஷத்துகளில் கூறப்பட்டுள்ள பேருண்மைகளை அனைவராலும் புரிய முடியும் – சாம - இசை

உதாரணமாக பூனை ஒரு எலியை உற்றுப் பார்க்கிறது. அதைத் தன் உணவுக்காகத் தாக்க வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

பூனையின் உணர்வின் அழுத்தம் எலிக்குள் வரப்படும்போதுதான் அந்த எலியின் உணர்வின் இசைகள் மாறுகின்றது. எலியின் சுருதிகள் குறைகின்றது. எலி உடலுக்குள் (உயிர்) இருக்கும் வரையிலும் சோக கீதமாகின்றது.

அதை அடக்கி வெளிவந்தபின் இது பூனையின் ஒலியின் உணர்வுகளுடன் இசைக்கப்படும்போது இனிமை கொண்ட உணர்வாக அந்தப் அது பூனையின் உடலுக்குள் சென்று மகிழ்ந்திடும் உணர்வின் ஒலியாக அது பெறுகின்றது.

பூனை தன் இரைக்காகப் பார்த்த இந்த உணர்வுகள் அல்லது இரையாக்கப்படவில்லை என்றாலும் பூனையின் உணர்வுகள் எலிக்குள் நுகர்ந்தபின் “அதர்வண”.

அந்தப் பூனையின் வாசனை - இந்த உணர்வுகள் எலி உடலுக்குள் வந்தபின் இதை அடக்கி இந்த உணர்வின் தன்மை மாறுபடுகின்றது.

ஒரு பெட்டிக்குள் (ஒரு டப்பாவிற்குள்) போட்டபின் நீங்கள் இசைத்தால் எப்படி இருக்கும்? சப்தம் வராது. இதனுடைய எதிரொலி அழிக்கப்பட்டுவிடுகின்றது.

ஏனென்றால், எலியின் உணர்வுகளுக்குள் இந்த அச்சுறுத்தி வாழும் அந்தப் பூனையின் உணர்வலைகள் வலுப்பெற்றபின் இதற்கு எதிர்மறை ஆகின்றது. அப்பொழுது எலியின் வீரிய உணர்வுகள் தடைபடுகின்றது.

இவ்வாறு ஆன பின், எலி உடலிலிருந்து வெளிப்பட்ட இந்த உயிரான்மா வலுக்கொண்ட அந்தப் பூனையின் உணர்வுக்குள் ஈர்க்கப்பட்டுவிடுகின்றது.

ஆக, எலி பூனையின் உடலுக்குள் சென்று அது மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாகி அதனின் ரூபத்தை உருவாக்குகின்றது அந்த உயிர். இது உபநிஷத்துக்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதற்காகத்தான் விநாயகர் அருகே வேம்பை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள். நம் வாழ்க்கையில் கசந்த உணர்வுகள் வந்தால் அது சோகக் கீதமாக நமக்குள் உருப்பெறும்.

அதனால் வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் உருப்பெற்று ஒவ்வொன்றும் இசைகள் மாறிவிடுகின்றது.

ஆக, மகிழ்ந்திடும் நிலைகள் கொண்டு ஒன்றிணைத்த நிலை இல்லாதபடி வேதனைகள் வளர்ந்து மகிழ்ச்சி என்ற உணர்வுகள் தோன்றும்போது இனிமையற்ற நிலைகளில் உருவாக்கிவிடுகின்றது.

இவ்வாறு மனிதனின் நிலைகள் உருப்பெறப்பட்டு இசைகள் மாறப்பட்டு இசையில் மாறிய அணுக்கள் ஒன்றொன்றும் மாற்றப்பட்டு இந்த உணர்வுகள் திசை மாறிவிடுகின்றது.

திசை மாறினாலும் இந்த உணர்வுக்கொப்ப உயிர் அணுக்கள் மாற்றம் அடைந்துவிடுகிறது. அதன் வழி ஒருக்கிணைந்த நிலைகளாக விஷத்தின் தன்மைகளை அது பெற்றதால் இன்னொரு உடலுக்குள் போனாலும் அதையே நிர்ணயப்படுத்திக் கொள்கின்றது.

சோகமான வேதனையான விஷமான உணர்வின் இசை அதற்குள் நிரப்பப்பட்டு அந்த உணர்வுகள் உண்டாக்கப்பட்டு அந்த மனித உடலை விட்டு வெளியே வந்தால் எங்கே செல்லும்?

இதிலே வளர்த்த இசையின் சுருதி எந்த உடலில் உள்ளதோ அதனின் ஈர்ப்பு வட்டத்திற்கு இந்த உயிர் அழைத்துச் சென்று அந்த மகிழ்ச்சி பெறும் இசையாக அதற்கொத்த நிலைகளில் உருமாற்றிவிடும். விஷமான உயிரினமாக மனிதனை மாற்றிவிடும்.

இது உபநிஷத்துக்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

துருவ மகரிஷி இத்தகைய நிலைகளை ஒடுக்கி மகிழ்ச்சி பெறும் உணர்வினை தனக்குள் வளர்த்து இன்றும் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கின்றான்.

அது “ரிக்”. அதனின்று வரக்கூடிய மணத்தை நாம் “சாம” அந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் கசந்த உணர்வுகள் அதிகரித்திருப்பினும் அதனால்  விளைந்த அணுக்களின் தன்மை நமக்குள் கூடியுள்ளது. கூடியுள்ள கசந்த உணர்வினை நாம் அடக்குதல் வேண்டும்.

வேதனையான உணர்வின் தன்மை நமக்குள் கூடியிருந்தால் வேதனை கொண்ட உடலைப் பெற்று அந்த விஷமான சக்தியைத் தனக்குள் எடுத்து அதை உணவாக உட்கொள்ளும் உணர்வின் இசையாக மாறிவிடும் - சாம.

ஒரு மனிதனுக்குள் மனிதன் அந்த மனிதன் பற்றுக்கொண்டு வந்தால் அவன் உடலில் உள்ள நஞ்சினைச் சுவாசிப்பதற்கே அங்கே வளர்த்து அதனைச் சுவாசித்துத் தனக்குள் பெருக்கிக் கொள்ளும்.

பின் அந்த உடலை விட்டுச் சென்றுவிட்டால் விஷத்தை உணவாக உட்கொள்ளும் உடலின் ஈர்ப்புக்குள் சென்று தன் நிலையை (மனித) ரூபத்தை மாற்றிவிடும்.

இதைப் போன்ற நஞ்சின் தன்மையை அடக்கி ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானான்.

 துருவ நட்சத்திரத்தின் உணர்வை சூரியனுடைய காந்தப்புலனறிவு அது கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. நம் பூமிக்குள் நமக்கு முன் பரவி வருகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை நமக்குள் பதிவாக்கி நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நஞ்சினை ஒடுக்கிடும் வலுவைப் பெறவேண்டும்.

அதிகாலை 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் முழுவதும் பெற வேண்டுமென்று அந்த “உயர்ந்த இசையின் உணர்வை..,” நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

அந்த உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கி விட்டால் அதனின் உணர்வுகள் பெருகி தீமையின் உணர்வுகள் கொண்ட இந்த உடலில் தீமைகளை அகற்றிடும் உணர்வுகள் வளரத் தொடங்கும்.

அப்படி வளர்க்கப்படும்போது தீமையால் உருவாக்கப்பட்ட இந்த உடலின் அணுக்கள் மடிந்து தீமையற்ற உணர்வுகள் கொண்டு ஒளியின் அணுக்களாக மாறி இன்று விண்ணிலே அருள் வட்டமாக சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அங்கே நாமும் சென்றடையலாம்.


“மனிதனுடைய கடைசி எல்லை.., சப்தரிஷி மண்டலம் தான்

December 26, 2016

“உலகம் போற்றும் உத்தமர்களாக” நீங்கள் வளர வேண்டும் அதுதான் எனக்குத் தேவை

இன்று சில வீட்டிற்குள் பார்த்தால் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் கீரியும் பாம்பும் போல் தான் வாழ்கின்றனர். என்னுடைய உபதேசங்களையும் கேட்டுக் கொள்கின்றார்கள். ஆனால், அதைக் கடைப்பிடிப்பதில்லை.

ஆக, கேட்டுப் பயன் என்ன இருக்கின்றது? எதற்காக வேண்டி இதைக் கேட்கின்றோமோ அந்த ஞானத்தைப் பெறவேண்டும்.

எனக்குக் கூட்டம் தேவையில்லை. அருள் ஞானம் பெறும் அருள்ஞானிகளின் அமைப்பு தான் எனக்குத் தேவை. அந்த அருள் ஞானத்தை வளர்ப்போர் தான் தேவை.

என்னைப் போற்றித் துதிப்போர் தேவையில்லை. என்னைப் போற்றிப் புகழ்வதில் பயனில்லை. ஆனால், அந்தப் போற்றல் எவ்வாறு இருக்க வேண்டும்?

அந்த அருள் மகரிஷிகளின் அருள்ஞானத்தை நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டி அந்த உணர்வின் தன்மையால் உலகம் போற்றும் உத்தமர்களாக நீங்கள் வளர வேண்டும். அதுதான் என்னைப் போற்றுவதாகும்.

இல்லை என்றால் என்னைத் தூற்றுவதாகத்தான் ஆகுமே தவிர நமது குருநாதரையும் தூற்றுவதாகத்தான் வருமே தவிர இதில் பயனில்லை.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடும் அருள் சக்திகளை கணவன் மனைவி இரு பாலர்களும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

கணவன் மனைவிக்குள் நீங்கள் ஒன்றி வாழும் நிலைகள் பெற்று குடும்பத்தில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளை எப்படி மாற்றிட வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வாருங்கள்.

அதிகாலையில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியினைப் பெறவேண்டும் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அலைகளை எளிதில் கவர முடியும்.

யாம் உங்களுக்குள் பதிவு செய்த எண்ணம் கொண்டு அதை நுகர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று தியானியுங்கள். இருவரும் ஒன்று சேர்த்து இவ்வாறு எண்ணினால் உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கல்களிலிருந்து விடுபடும் உபாயங்கள் அங்கே தோன்றும்.

இதனின் துணை கொண்டு நீங்கள் வாழ்ந்து வந்தால் இன்று இந்த நஞ்சு கலந்த உலக உணர்வுகளிலிருந்து மீட்டிடும் நிலைகள் உங்களுக்குக் கிடைக்கும்.

ஏனென்றால், உலகம் எங்கேயோ போய்க் கொண்டுள்ளது. மனித உருவையே மாற்றிடும் அளவிற்கு இந்தக் காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக மாறி எங்கெங்கோ அழைத்துச் செல்கின்றது.

இதிலிருந்து மீள வேண்டும் அல்லவா.

அன்று அகஸ்தியன் தன் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரமானான். அவன் வழியைப் பின்பற்றியவர்கள் அவனுடைய அரவணைப்பில் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

கணவன் மனைவி நாம் அவர்களுடன் ஒன்றி வாழும் நிலைக்கு வளர வேண்டும். என்றும் பேரானந்த பெரு நிலை என்று வாழ்ந்திடல் வேண்டும். 

December 25, 2016

நம் உயிருக்குள் செய்ய வேண்டிய யாகம்...!

இன்றைய விஞ்ஞான உலகில் பேரழிவு வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பல முறை இந்த உபதேசத்தைக் கேட்கின்றார்கள், படிக்கின்றார்கள்.

கேட்டாலும் கூட “நாங்கள் அந்த அருள் சக்தி பெறவேண்டும்.., அந்த அருள் ஒளி எங்களுக்குள் வளரவேண்டும்” என்று எவரும் கேட்பதில்லை.

இந்த வாழ்க்கையில் வரும் “குறைகளையும்.., தன்னை ஏமாற்றியவர்களையும்.., ஏமாற்றப்பட்டதையும்தான்..,” எண்ணிக் கொண்டுள்ளார்கள்.

அதை எம்மிடமும் பாய்ச்சத் தொடங்கிவிடுகின்றார்கள். நூற்றுக்கு ஒன்று இரண்டு தான் தப்பித் தவறி அந்த “அருள் ஞானம் பெறவேண்டும்..,” என்ற நோக்கில் எம்மை அணுகுகின்றார்கள்.

குருநாதர் எமக்கு எவ்வளவு பெரிய சக்தி கொடுத்திருந்தாலும் நீங்கள் விடும் மூச்சலைகள் சங்கடத்தையும் வேதனையும் இங்கே என்னிடம் வெளிப்படுத்தினால் அதை ஜீரணிப்பதற்கே எனக்கு நேரம் போதாது போலிருக்கிறது.

இதிலிருந்து மீண்டுதான் நான் அந்த உயர்ந்த சக்தியை எடுக்க வேண்டும்.

நான் எந்த அளவிற்கு உபதேசித்து மக்கள் கூடுகின்றனரோ மக்கள் மத்தியிலே விளைந்த அவர்களுடைய வேதனையும் வெறுப்பு உணர்வுகளும் குறைகளும் குறையின் உணர்வுகளைத்தான் என் மேல் பாய்ச்சப்படுகின்றது.

ஆக, “நான் உணர்த்திய மெய் உணர்வை எடுத்து வளர்க்கும் தன்மை.., இன்னும் வளர்ச்சி அடையவில்லை”.

உடல் இச்சையின் உணர்வே வளர்கின்றது. “ஆயிரம் ஆண்டுகள் வாழ்கின்றோம்.., வாழ்வோம்..,” என்ற நம்பிக்கையில் வாழ்வது போல் தெரிகின்றது.

இன்றைய நிலைகளில் விபத்துக்களும் விபரீதங்களும் தீவிரவாதச் செயல்களும் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்று உலகில் பெரும் சக்தியாகப் பரவி மனிதனை மனிதன் இரக்கமற்றுக் கொன்று புசிக்கும் நிலையும் அதைக் கண்டு ரசித்து வாழும் நிலைகள் தான் அதிகரித்து வருகின்றது.

இந்த உணர்வுகளை நாம் நுகரப்படும்பொழுது நாம் பெறும் உயர்ந்த சக்தியும் பெற முடியாத நிலைகள் தடைப்படுகின்றது.

“சாமி செய்வார்.., சாமியார் செய்வார்.., ஜோதிடம் செய்யும்..,” என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம். யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம்

நமது உயிர் "நெருப்பாக..," இருக்கின்றது. துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை உயிர் என்ற யாகத்தீயில் போட்டவுடன் அதனின் உணர்ச்சிகள் நமக்குள் வருகின்றது.

புற யாகத்தில் பல பொருள்களை யாகத்தீயில் போட்டவுடன் புகை வருகின்றது. அதை அடக்குவதற்கு நெய்யை ஊற்றுகின்றோம்.

அதைப் போன்று, வேகமான உணர்வு வந்ததென்றால் அந்த நெடியான உணர்வு இயக்கும் பொழுது, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை இயக்கினால் அந்த நெடியை அடக்கும்.  அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் மகிழ்ச்சியூட்டும்.

ஆகவே, உங்களை தீமையான உணர்வுகள் இயக்கிவிடக் கூடாது. அந்தச் சந்தர்ப்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்தால் நெடியை அடக்கிவிடும் தன்னிலை அடையலாம்.

இப்படி எந்த நேரத்திலும் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து, சர்வ தீமைகளைலிருந்தும் விடுபட முடியும்.

ஆகவே, அந்த மெய்ஞானிகள் பெற்ற உயர்ந்த சக்திகள் அனைத்தும் உங்களுக்குள் அதைப் பெறவேண்டும் என்று நான் விரும்புகின்றேன். அந்த எண்ணத்தில் தான் உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றேன்.

எவரொருவர் “கூர்ந்து உற்று நோக்கி..,” அதைப் பெறவேண்டும் அது எங்களுக்குள் வளரவேண்டும் நஞ்சினை வென்றிட வேண்டும் அருள் ஒளி எங்களுக்குள் பெறவேண்டும் என்ற உணர்வை எடுக்கின்றார்களோ அவர்களுக்குள் அச்சக்தி நிச்சயம் கிடைக்கின்றது.