ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 24, 2018

இறப்பை யாரும் தடுக்க முடியாது…! – துருவ நட்சத்திரத்தின் உணர்வை “வாழும் இந்தச் சிறிது காலத்தில்” எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் அனைவரது குடும்பங்களிலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அனைவரது இரத்த நாளங்களில் கலந்து உடல்களிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற்று அவர்களது வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீயவினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் பாவ வினைகள் அனைத்தும் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவனும் மனைவியும் பெற்று வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி வாழ்ந்து இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள் பெற்று கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும் பெற்று உலக ஞானம் பெற்று உலகைக் காத்திடும் அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்து அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரது உடல்களிலும் படர்ந்து மன நோய் நீங்கி மனபலம் பெற்று உடல் நோய் நீங்கி உடல் நலம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

கூட்டுத் தியானங்களில் நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்று போலச் இதைச் சொல்ல வேண்டும்.
1.எல்லாருடைய செவிகளிலும் இது படர்கின்றது.
2.இந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டுகின்றது.
3.அந்த நினைவலைகள் கண்ணுக்கு வருகின்றது.
4.கண்ணின் கருவிழி பதிவாக்குகின்றது.
5.கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் இந்த உணர்வை இழுக்கின்றது.
6.நம்மைச் சுவாசிக்கச் செய்கின்றது. உயிரிலே மோதுகின்றது.
7.இந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களிலே கலக்கின்றது.
8.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற இந்த உணர்வு வலுப் பெறுகின்றது.
9.நாம் சொன்ன உணர்வெல்லாம் பூமியில் பரவி படர்கின்றது.

எல்லோரும் நன்றாக ஆகும் போது எல்லா உணர்வும் நமக்கும் நல்லதாகின்றது. இதைப்போல கூட்டமைப்பில் நாம் சொல்லப்படும் போது மிகச் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.

குடும்பத்தில் சிரமங்கள் நீங்க மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று கூட்டுத் தியானங்கள் வைத்து இந்தக் குடும்பத்தைப் பரிசுத்தப்படுத்தலாம். இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

ஒரு நோய் உள்ளவருக்குக் கூட இந்த மாதிரி கூட்டாகச் சொல்லித் தியானித்தால் நோய் எல்லாம் நீங்கிப் போய்விடும்.

எந்த நோயாக இருந்தாலும் அதனுடைய வலிமையைக் குறைக்கலாம். ஆனால் “இறப்பவர்கள் யாரையும்… தடுக்க முடியாது…!”

அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப உடலை விட்டுச் சென்றாலும் அந்த உயிராத்மாவைக் கூட்டுத் தியானத்தின் மூலம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துப் பிறவியில்லா நிலை பெறச் செய்யலாம்.

1.ஆயுள் காலம் முழுவதும் நோயெல்லாம் நீக்கி விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால்
2.முழுமையாக இருக்கப் போவது யாரும் இல்லை.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவர்களைப் பெறச் செய்வதற்காக வேண்டி
4.சிறிது காலம் வாழ வைக்க முடியுமே தவிர
5.முழுமையாக யாரையும் நாம் காப்பாற்ற முடியாது.
6.நம்மையே நாம் காப்பாற்றப் போவதில்லை… யாரை நாம் காப்பாற்ற முடியும்..!
7.முழுமை என்பது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் முழுமையாகப் பெறுவதற்குத் தான்.