ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2013

இறந்தவர்களை அதிகப் பாசத்துடன் எண்ணினால் என்ன ஆகும்?

ஒருவர் தீயிலே கருகி இறந்துவிட்டால், அந்த உயிர் அழிவதில்லை. ஆனால், இந்த உணர்வுக்குள் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாகப் பேசினோமோ,
அந்த உணர்வின் நிலைகள் அனைத்தும் மறைந்து,
தீயில் எரிந்த வேகத் துடிப்பின் நிலைகளாக
அங்கே மாறிவிடுகின்றது.

அவ்வாறு அந்த மனிதன் இறந்துவிட்டால் உடலை விட்டு உயிரான்மா வெளியில் சென்றுவிடுகின்றது. உடல் கருகிவிடுகின்றது. கருகிய உணர்வுடன் ஆன்மா வெளியில் வருகின்றது.

உயிருடன் இருக்கப்படும் பொழுது, யாராவது அவர் மேல் பாசம் வைத்திருந்தால் போதும். “இந்த மாதிரி தீயில் கருகி இறந்துவிட்டதே” என்ற ஏக்க உணர்வை அதிகமாகக் கூட்டினாலும், அதே சமயத்தில் இறக்கும் பொழுது அந்த உயிரான்மா, யார் மேலாவது அன்பு கொண்டு “அவரை விட்டுப் பிரிகின்றோமே” என்ற ஏக்கத்துடன் இருந்தாலும் சரி, அவரின் உடலுக்குள் சென்றுவிடும்.

அதாவது தீயில் கருகும் பொழுது, அந்த உணர்வின் எண்ண அலைகளுக்குள்
பிறர் மேல் உள்ள அந்தப் பாசம் அது இழுத்து
அந்த மணம் முன்னிலையில் கூடி,
பாசமாக உள்ளவரின் உடலுக்குள் சென்று,
இது தீயில் கருகும் பொழுது
எத்தனை அவஸ்தைப் பட்டதோ
அதே செயலை அந்த உடலுக்குள் போய்ச் செய்யும்.
இதற்குப் பெயர் சாகாக்கலை.

August 30, 2013

தீமைகள் விளையாமல் தடுப்பதே "விநாயக சதுர்த்தி" (சதுர்த்தி - நிறுத்துதல்)

வினை என்பது எது?
வினைக்கு நாயகனாக எப்படி உருவானது?
அதை எப்படி நிறுத்துவது? என்பதுதான் விநாயகர் சதுர்த்தி.

ஒரு உயிரணு பிறந்ததிலிருந்து, பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்தபின், நமக்குள் பாசத்தால், அன்பால், பரிவால் பிறருடைய துன்பங்களைக் கேட்டறியும் பொழுது, நமக்குள் வேதனை என்ற தீயவினைகள் சேருகின்றது. அதை நாம் எப்படித் தடுத்து நிறுத்துவது?

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நல்ல குணங்கள் கொண்டு செயல்பட்டாலும், வேதனைப்படும் பொழுது, தீயவினைகள் சேர்க்கப்படுகின்றது. அதையெல்லாம் நாம் துடைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நாள்தான் விநாயக சதுர்த்தி. ஒருவர் மேல் உள்ள பகைமைகளை நிறுத்துவதற்குத்தான் விநாயக சதுர்த்தி என்பது.

ஒருவர் என்னை ஏசுகின்றார் என்றால், அந்த ஏசிய உணர்வுகள் எனக்குள் நிலைக்காமல் செய்வதும், அந்த உணர்வு எனக்குள் விளையாமல் தடுப்பதும் “விநாயகர் சதுர்த்தி”.

நமது வாழ்க்கையில் நாம் யார் யார் மீதெல்லாம்
தொழில் முறையிலோ, நண்பர் என்ற முறையிலோ,
கொடுக்கல் வாங்கல் என்ற நிலையிலோ, அல்லது
ரோட்டில் நடக்கும் பொழுது, இடித்துத் தள்ளிவிட்டால்
அவர் மேல் குரோதம் கொண்டோ,
இப்படிப் பல சமயங்களில், பல சந்தர்ப்பங்களில் வேதனையான எண்ணம் சேர்ந்துவிடும்பொழுது, அப்படிச் சேர்ந்த இந்த நிலைகளை நீக்குவதற்குத்தான் விநாயக சதுர்த்தி.

ஒருவருக்கொருவர் பகைமைகளை நீக்கி, நமக்குள் மெய்ஞானிகளின் உணர்வை வினையாகச் சேர்த்து, மனித வாழ்க்கையில் இந்த விநாயக சதுர்த்திக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் பொருளறிந்து செயல்படும் தன்மையைப் பெறவேண்டும்.

ஆக, ஒவ்வொரு நிமிடத்திலும் பொருளை அறியும் பொழுதும், பொருளை அறியாத நிலைகளிலும், அந்த ஞானியரின் அருளை எடுத்து, பொருளை மறைக்கும் உணர்வின் தன்மையைத் துடைப்பதற்கு,
இந்த நாளைத் தேர்ந்தெடுத்து,
வருடத்தில் ஒரு நாள் விநாயகர் சதுர்த்தி என்று வைத்து,
நம்மை இயக்கும் நிலைகளை
அறியும் வண்ணம் ஞானிகள் செய்தார்கள். 
நாம் தீயவினைகளைத் தடுத்து நிறுத்தும் நாளாக, நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய அருள் வழிப்படி, மெய்ஞானியான, முதன் முதல் மனிதன் அணுவைக் கண்டறிந்து, அணுவின் ஆற்றலைத் தனக்குள் உணர்ந்தறிந்து, அந்த ஆற்றல்மிக்க நிலையாக அந்த மெய்ஞானி அகஸ்தியன் தனக்குள் தீயவினைகளை அகற்றி, மெய் ஒளி பெற்ற நிலையை நீங்களும் பெறவேண்டும் என்பதற்காக, யாம் உபதேசிக்கின்றோம். எமது அருளாசிகள்.

August 29, 2013

“அருட் பெருஞ்சோதி, நீ தனிப்பெருங்கருணை” - இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது

ஒவ்வொரு நொடியிலும் வரக்கூடிய துயரங்களையும், சங்கடங்களையும் நமக்குள் வராதபடி, ஒவ்வொரு நிலைகளிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்த்துக் கொண்டே வந்தால், இது விஷ்ணு தனுசாகின்றது.

விஷமென்ற நிலைகள் சிவ தனுசு தாக்கிவிட்டால், அடுத்த உடலைப் பெறுகின்றோம். அருள் ஒளி என்ற உணர்வை எடுத்தால், இன்னொரு உடல் பெறுவதில்லை. உயிருடன் சேர்த்து, உணர்வின் தன்மை தீமைகளை நீக்கக்கூடிய சக்தி பெறுகின்றது, அதுதான் விஷ்ணு தனுசு.

சூரியன் அழிந்தாலும், துருவ நட்சத்திரம் அழிவதில்லை. இந்தப் பிரபஞ்சம் ஏகமாக ஒளியின் சரீரமாக மாற எத்தனையோ கோடி ஆண்டுகளாகும். இப்பொழுது மனிதனாகி ஒளியாகின்றது.

முதலில் இருண்ட உலகமாக இருந்தது. அது கோள்களை உருவாக்கி மனிதனானபின், இந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது, அருள் ஒளி என்ற நிலை அடைகின்றது.
அது என்றும் ஏகாந்த நிலை,
பெருவீடு, பெரு நிலை.
நாம் வளர்ந்து கொண்டே போகலாம்.

நமது கூட்டுத் தியானங்களில் வெளிப்படுத்தும் உணர்வுகளெல்லாம் இந்த பூமியில் படருகின்றது. இந்த உணர்வுகள் கூடக் கூட, மனிதர்கள் வெறித்தனமாகவும், சங்கடமான நிலைகளில் வாழ்வதும் குறையும். அதே சமயம், துருவ நட்சத்திரம் நம்மை ஒளி உடல் பெறச் செய்யும்.

நம் வாழ்க்கையில் என்னதான் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்தாலும், நம்முடன் வரப்போவதில்லை. ஆகவே, அருள் உணர்வுடன் பிறவியில்லா நிலை அடைவதுதான் கடைசி நிலை. அந்த அகஸ்தியன் வழியில் வந்தவர்கள் அநேகம் பேர்கள் உண்டு.

அன்று இராமலிங்க அடிகள் தெளிவாகப் பாடியுள்ளார். இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது. இந்த உடலிலே ஒளியாக வேண்டும். “அருட் பெருஞ்சோதி, நீ தனிப்பெருங்கருணை” நீ உயிராக இருக்கின்றாய், என் உணர்வுகள் அனைத்தையுமே ஒளியாக மாற்று என்று பாடியுள்ளார்.

நம் உயிர் அருட்பெருஞ்சோதியாகிறது.
நீ தனிப் பெருங்கருணையாக இருக்கின்றாய்.
நீ ஒளியாக இருப்பது போல்
என் எண்ணங்களெல்லாம் ஒளியாக வேண்டும்.
பிறருடைய தீமைகள் எனக்குள் வரக்கூடாது.
பிறருக்கு நாம் நல்லது செய்யக் கூடிய உணர்வு வரவேண்டும்.

அந்த அருட்பிரசாதம், அவன் இல்லையென்று சொல்லாதபடி
என்றுமே பசியை ஆற்றக் கூடியநிலை. சாப்பாட்டுப் பசி அல்ல,
அருட்பசி மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.
இருளிலிருந்து விடுபடவேண்டும்,
ஏகாந்த நிலை பெறவேண்டும்.

யாருக்கும் நான் இல்லை என்று சொல்லக் கூடாது. எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்றுதான் அவர் பாடல்களில் பாடியுள்ளார்.

August 28, 2013

விஷ்ணு தனுசு - தனுசுகோடி

நாம் பல கோடிச் சரீரங்களில்
பல கோடி உணர்வுகளை எடுத்து,
கோடிக்கரையாக இருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி, எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று ஒவ்வொரு அணுக்களிலும் சேர்க்க வேண்டும். அப்பொழுது கோடி அணுக்களும் தனுசுகோடி ஆகின்றது. அந்த அணுக்கள் அனைத்தும் ஒன்றாக்கப்படும் பொழுது உயிரைப் போலவே ஒளியாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும். நாங்கள் பார்த்தவர்கள் குடும்பமெல்லாம் படரவேண்டும் என்று எண்ணிப் பழகவேண்டும்.
இது விஷ்ணு தனுசு.
விஷ்ணு தனுசை உங்களிடம் கொடுக்கிறோம்.

அந்த மீறிய சக்தி வாய்ந்த நிலைகளைப் பெற்று, நல்லவைகளை உருவாக்கி, தீமைகளை நீக்கி அவைகள் உட்புகாத வகைகளில் தடுத்துப் பழகவேண்டும்.

சாமி செய்வார் என்று எண்ணவே கூடாது.
நீங்கள் நினைப்பதை உங்கள் உயிர் உருவாக்குகின்றது.
உருவாக்கியதை உடலுக்குள் அணுவாக்குகின்றது.
அந்த அணுவின் மலம் உடலாகின்றது.
அதன் வழி தான் நாம் செயல்படுகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் தீமைகளைக் காணும் பொழுதெல்லாம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணவேண்டும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு குணங்களைச் சந்திக்கும் பொழுதும் இதை எண்ண வேண்டும். ஒவ்வொரு நொடியிலும், வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

எத்தனையோ கோடி உணர்வுகள் நமக்குள் உண்டு. அனைத்தையும் ஒன்றாக்கிவிட்டால், தனுசுகோடி.
உயிரோடு சேர்த்து,
உணர்வுகள் எல்லாம் ஒன்றாகின்றது
அப்பொழுது நமக்கு வேறு எண்ணமே இருக்காது.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டமான சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றோம். எமது அருளாசிகள்

August 26, 2013

துருவ நட்சத்திரத்துடன் உங்களை ஆயுள் மெம்பராக இணைக்கின்றோம் - ஞானகுரு

1. அகஸ்தியன் தாய் கருவில் பெற்ற பூர்வ புண்ணியம் - அபூர்வ சக்தி
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் இருவரும், மிருகங்களிடமிருந்தும், விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொள்வதற்காக, விஷத்தை முறித்திடும் பச்சிலைகளையும், மூலிகைகளையும் அரைத்து தங்கள் உடலில் பூசிக் கொள்கின்றார்கள்.

அந்தத் தாய் கர்ப்பமுற்ற சந்தர்ப்பத்தில் அந்த வாசனகளை நுகர நேருகின்றது. தாய் நுகர்ந்த அந்த பச்சிலைகளின் வாசனைகள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து,
கருவில் இருக்கும் குழந்தைக்கு
விஷத்தை முறித்திடும் சக்தியாகக் கிடைக்கின்றது.

இப்படி பத்து மாதம் கருவில் வளர்ந்து பிறந்தபின், அந்தக் குழந்தை இருக்கும் பக்கம் பாம்போ, தேளோ, புலியோ, நாயோ, நரியோ வருவதில்லை. இவனைக் கண்டால் அஞ்சி ஓடிவிடுகின்றது. இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வருபவை அனைத்தும் கடும் விஷமானது. அவைகளும் இவனுக்குள் அடங்குகின்றது.
அவனுடைய பருவம் வரும் பொழுது, செடி கொடிகளின் உணர்வுகளைத் தெரிந்து கொள்கின்றான். மனிதன் தன் உணவிற்காக ஆடு மாடுகளைச் சாப்பிட்டால், அந்த உணர்வுகள் பெருகி, மனிதன் ஆடாக, மாடாகப் பிறக்கின்றான் என்பதைத் தெரிந்து கொள்கின்றான்.

அதனால், தன் உணவிற்காக பழங்களையும், காய்களையும் சாப்பிடுகின்றான். அவைகள் தன் உடலில் சேர்ந்து கொள்கின்றது. அவ்வாறு சேர்ந்து கொண்டபின், உடலை விட்டுச் சென்றால் காய்களையும், பழங்களையும் சாப்பிடுகின்ற ஜீவராசிகளாகப் பிறக்கின்றது என்று அறிகின்றான்.
2. வேகவைத்துச் சாப்பிடும் பழக்கத்தை முதலில் உருவாக்கியவன் அகஸ்தியன்
அதற்காக வேண்டி, பல பயிரினங்களை ஒன்றோடொன்று சேர்த்து மனிதனுக்கு உகந்த சாப்பாடு செய்யக்கூடிய பயிரினங்களை முதன் முதலில் அகஸ்தியன்தான் உருவாக்குகின்றான். புல்களில் இருப்பதை மற்றதுடன் சேர்த்து அரிசி, கேழ்வரகு, வரகு போன்ற நவ தானியங்களை உருவாக்குகின்றான்.

அப்படி உருவாக்கினாலும், அதை வேகவைத்துப் பக்குவப்படுத்தி ருசியாகச் சாப்பிட ஆரம்பிக்கின்றான். நெருப்பு இருந்தால்தான் வேக வைக்க முடியும். கல்லுடன் கல் உராயும் பொழுது நெருப்பு உருவாகும். அதில் கரியைப் போட்டால் பற்றிக்கொள்ளும்.

பின்பு, அதில் காய்ந்த செத்தைகளைப் போட்டு, ஊதி அணையாமல் செய்துவிடுவார்கள். இப்படி உணவைச் சமைத்துப் பழகினார்கள். ஒன்றை வேகவைத்தால் அது முளைக்காது என்று முதன்முதலில் கண்டுபிடித்தவன் அகஸ்தியன் தான். இப்படி பல உணர்வின் நிலைகளை அறிகின்றான்.

அந்தச் சமயத்தில் அவனுக்கு வயது 16 ஆகின்றது. அப்பொழுது அவனுக்குத் திருமணத்தை முடிக்கின்றார்கள். திருமணமானபின், அகஸ்தியன் தான் கண்ட பேருண்மைகளை, தன் மனைவிக்குச் சொல்கின்றான்.

அதைக் கேட்டு, தன் கணவன் கண்ட நிலைகளை மனைவியும் தெரிந்து கொள்கின்றாள். கணவன் மேலும் உயரவேண்டும் என்று இரண்டு பேரும் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியை எடுத்து வளர்க்கின்றார்கள்.
3. மின்னலைச் சுவாசித்து, பேரொளியாக மாறினான் அகஸ்தியன்
இப்படி அண்டத்தின் அகண்ட நிலைகளை இருவரும் அறிந்து கொண்டபின், இரு உணர்வும் ஒன்றாகின்றது. அப்படி ஒன்றானபின், ஒளியின் தன்மையும் இருளை நீக்கக்கூடிய சக்தியும் அவர்கள் உடலிலே விளைகின்றது.

பூமியின் துருவப்பகுதியை உற்று நோக்கி இதிலிருந்து வரும் சக்தியை எடுக்கின்றான். அப்படிச் சேர்த்த உணர்வுகள் இருவர் உடலிலும் விளைகின்றது.

மின்னலின் ஒளிக்கற்றைகளைச் சுவாசித்து,
உடலுக்குள் சேர்த்தவுடன், இருவரின் உடலிலும்
ஒளியின் உணர்வுகள் உருவாகின்றது.

அவர்கள் இருவரும் துருவப் பகுதியைக் குறி வைத்து எண்ணும் பொழுது, இருவரின் உயிரும் ஒன்றாகி, வெளியில் வரும் பொழுது, அந்த எல்லையைச் சென்றடைகின்றது.

இவர்கள் இரண்டு உயிர், இரண்டு நட்சத்திரங்கள். கார்த்திகை நட்சத்திரம், ரேவதி நட்சத்திரம் இது இரண்டும் ஒன்றாகிவிட்டால், நான்கும் சேர்ந்து பிரம்மமாகின்றது. மின்னல் எப்படி ஆகின்றதோ அதை உருவாக்கக்கூடிய சக்தியாகின்றது. துருவ நட்சத்திரமாகின்றான்..

நமது பூமிக்கு நேராக வடகிழக்கில் இருக்கின்றது துருவ நட்சத்திரம். இப்படி அகஸ்தியன் துருவனாகி, திருமணமாகி துருவ மகரிஷியாகி, இரு உயிரும் ஒன்றி துருவ நட்சத்திரமானான்.
4. துருவ நட்சத்திரத்துடன் உங்களை ஆயுள் மெம்பராக இணைக்கின்றோம்
இப்பொழுது இந்த உபதேசத்தின் வாயிலாக, துருவ நட்சத்திரத்துடன் உங்களை இணைத்து, அந்த ஒளி உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைந்துவிட்டால், தீமைகளை நீக்கிவிட்டு, தீமைகளை நீக்கக் கூடிய சக்தியை நீங்கள் பெறுகின்றீர்கள். அவன் கண்டுபிடித்த உணர்வகளெல்லாம் உங்களுக்குள் வருகின்றது. அத்தகைய நிலைகளை நீங்கள் எல்லோரும் பெற எமது அருளாசிகள்.

August 25, 2013

வாசனைகளை நுகர்ந்துதான் உயிரினங்கள் இயங்குகின்றது

புலி தன் இரையைத் தேடிச் செல்கிறது. தனக்கு எதிரியான நிலைகள் பக்கம் போவதில்லை. புலி வலுவானதுதான். ஆனாலும், மலைப்பாம்பு இருக்கும் பக்கம் அது போகாது. ஏனென்றால், மலைப்பாம்பு புலியைக் கொன்று தன் இரைக்காகத் தின்றுவிடும்.

குருநாதர் இதையும் எனக்குக் காட்டினார். ஒரு சமயம் ஆனைமலைக் காட்டிற்குள் என்னைப் போகச் சொன்னார். அங்கிருந்து என்னை ஒரு பொருளை எடுத்து வரச் சொன்னார். போகும் பொழுது என்னை அடிக்க ஒரு புலி பார்க்கின்றது. அதே சமயம் அங்கு செத்தைக்குள் ஒரு மலைப்பாம்பு பதுங்கியிருந்தது. புலி என்னைக் குறி வைத்ததால், அந்த மலைப்பாம்பின் வாசனையை நுகரவில்லை.

புலி என்னைப் பார்த்து ருசி பார்க்கும் ஆவலில் நிலத்தைப் பிரண்டுகின்றது. அப்பொழுது செத்தைக்குள் மறைந்திருந்த மலைப்பாம்பு புலியின் காலைப் பிடித்துக் கொண்டது. காலைப்பிடித்தவுடன், சட்டென்று புலியின் உடலைச் சுற்றிக் கொண்டது.

புலி தப்பித்துக்கொள்ள, “தையா, தக்கா” என்று குதிக்கின்றது. புலி கடித்துப்பார்க்கின்றது. பாம்பு ரப்பர் பந்து போல சுருண்டு கொள்வதால், அதைக் கடிக்க முடியவில்லை. பாம்பு தன் உடலைக் கொண்டு புலியை இறுக்குகின்றது.

இறுக்கியவுடன், புலி எகிறி விழுகின்றது. இறுகியவுடன் புலிக்கு மூச்சு திணறுகின்றது. இதையெல்லாம் நான் வேடிக்கை பார்க்கின்றேன். பாம்பு காலை அகற்றிவிட்டு, வாயைத் தலை மேல் வைக்கின்றது. காலில் தசைகளைக் காணவில்லை. பாம்பின் விஷம் அதைக் கரைத்துவிடுகின்றது.

ஆடு, மாடுகள் தட்டைகளை மிகக் கடினமானவற்றைச் சாப்பிடுகின்றது. அதை மொத்தமாக வைத்து அரைத்துவிடுகின்றது. அதன் வாயிலே ஊறக்கூடிய உமிழ்நீர் அதில் பட்டவுடன் பிஸ்கட் போன்று கரையும். அதைப் போன்று பாம்பின் விஷத்திற்கு எதனையும் கரைக்கும் தன்மை அதிகம்.

ஒரு சமயம் பண்ணாரி காட்டிற்குள் போயிருந்தேன். யானைகள் அங்கு அதிகம். குருநாதர் அங்கே போகச் சொன்னார். மாலை ஆறு மணிக்கெல்லாம் கூட்டமாகத் தண்ணீர் குடிக்க வருகின்றது. மணியைப் பார்க்க வேண்டியதில்லை. யானை வருகின்றதென்றால், மணி 6 ஆகிவிட்டதென்று வைத்துக் கொள்ளலாம்.

அங்கு ஒரு புலையர் வந்தார், நுகர்ந்து பார்த்து யானை வருகின்றது என்று சொன்னார். யானை வருகின்றது. இது யானை, இது புலி, இது நாய், இது நரி, இது பாம்பு என்று அத்தனை வாசனைகளையும் தெரிந்து வைத்துள்ளார்கள். நாமும் பழக்கப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.

ஜோதிடம் பார்ப்பவர்கள் நம் மணத்தை நுகர்ந்து பார்த்து வைத்துக் கொள்வார்கள். நாம் என்ன நினைத்துக் கொண்டுள்ளோம் என்று சொல்லிவிடுவார்கள். நம்மிடம் என்னென்ன இருக்கின்றது என்று சொல்லிவிடுவார்கள். இது மனிதன் செயற்கையாக அறிந்து கொள்வது. அதே போல பல மந்திர ஒலிகளின் துணை கொண்டு, சில உணர்வுகளை நுகர்ந்து எடுத்துக் கொண்டு ஜோதிடம் சொல்லுகின்றார்கள்.

மனிதன் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் சக்தி படைத்தவன். இன்று இயந்திரத்தைச் செய்து, இராக்கெட்டை மேலே ஏவி கோள்களுடய வாசனையைக் கண்டுபிடித்து அது என்ன அறிகின்றான்.

ஆனால் பண்டைய காலங்களில் மனிதன் காடுகளில் வாழும் பொழுது, மிருகங்களிடமிருந்தும் விஷ ஜந்துக்களிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவைகளுக்கு எதிரான பச்சிலைகளைக் கண்டுணர்ந்தார்கள்.

அவைகளைத் தாங்கள் படுத்திருக்கும் குகைளுக்கு முன் போட்டு, இரவில் படுத்துக் கொண்டார்கள். அந்த வாசனைகளை நுகரும் மிருகங்கள் அந்தப் பக்கம் வருவதில்லை, விலகிச் சென்றுவிடுகின்றது.

இன்று பாம்பு வீட்டிற்குள் வந்தால், வெள்ளைப் பூண்டைத் தட்டிப் போட்டு விட்டால், அந்த வாசனையை நுகர்ந்து தன்னாலேயே போய்விடும். 

August 24, 2013

மற்றொன்றை அடக்கும் சக்தியை வளர்ப்பதற்குப் பதில் அருளைப் பெறவேண்டும் – ஈஸ்வராய குருதேவர்

1. கர்நாடகா மலையில் அனுபவம்
காட்டிற்குள் மிருகங்கள் அனைத்துமே வாசனையை நுகர்ந்துதான் இரை தேடும். மற்ற உயிரினங்கள் புலியினுடைய வாசனையை நுகர்ந்தவுடன் ஓடி ஒளிந்து கொள்கின்றது. இதை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று காட்டினார்.

யாம் கர்நாடகத்தில் மங்களூரில் இருக்கும் பொழுது, அங்குள்ள ஒரு மலைக்குச் சென்றோம். அந்த மலையில் ஒரு குகை உண்டு. அங்கு ஒரு சாமியார் இருந்தார். அவரிடம் சில மந்திர வேலைகள் உண்டு.

அவர் அந்தக் குகையில் இருந்த பொழுது, எம்மை குருநாதர் அங்கே அழைத்துச் சென்று காட்டியிருக்கின்றார். அங்கே சில விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காகச் சென்றோம்.

எம்முடன் கூட சில பேர் வந்தார்கள். அங்கு சென்றவுடன், யாம் தியானத்தில் அமர்ந்துவிட்டோம்.

அப்பொழுது ஒரு பாம்பு எங்களை நோக்கி வந்தது. அந்தக் குகையிலிருந்து நாய் ஒன்று வந்து, பாம்பின் வாலைப் பிடித்து இழுத்துச் சென்றது. பின்பு, திடீரென்று அந்த நாய் கத்த ஆரம்பித்தது. அது பயந்து நடுங்கி, எங்களைச் சுற்றி வந்து ஒளிந்து கொண்டது.

என்ன என்று பார்த்தால், அங்கு ஒரு புலி வந்திருக்கின்றது. அதன் வாசனையை நுகர்ந்துதான் நாய் பயந்தது. அது படும் பாட்டைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருந்தது.

அந்தச் சாமியார் குகையிலிருந்து வெளியில் வந்து, “சாமி, புலி வருகிறது, அதனால் ஒரு கம்பி கட்டி வைத்திருக்கின்றேன், அதற்குள் சென்று இருந்து கொள்ளலாம்” என்றார்.

சரி, நீங்கள் எல்லோரும் அதற்குள் இருந்து கொள்ளுங்கள். நான் தியானத்தில் இருந்து கொள்கின்றேன் என்று சொன்னேன்.

சாமி, தியானமெல்லாம் ஒன்றும் வேலைக்கு ஆகாது, பேசாமல் வந்துவிடுங்கள் என்றார் அந்தச் சாமியார்.

புலி என்னைக் கொன்று சாப்பிடும் பொழுது, நீ பார்த்துக் கொண்டிரு என்று நான் கூறினேன். எனக்கு குருநாதர் முழு சக்தியைக் கொடுத்திருந்தார். நான் குருநாதர் சொன்னபடி, புலிக்கு எதிர்மறையான உணர்வுகளைச் செலுத்தியவுடன் அது பேசாமல் உட்கார்ந்து கொண்டது.

முன்பு ஒரு முறை மூகாம்பிகைக் காட்டில் தியானத்திலிருந்த பொழுது, அட்டைகள் எம்மைக் கடித்து, உடலிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அந்த இரத்த வாடையை நுகர்ந்து, புலி என்னைச் சாப்பிட நின்று கொண்டிருந்தது. கண்களைத் திறந்து குருநாதர் சொல்லிய உணர்வைச் செலுத்தியவுடன் பேசாமல் போய்விட்டது.
2. மற்றொன்றை அடக்கும் சக்தியை வளர்ப்பதற்குப் பதில் அருளைப் பெறவேண்டும் – ஈஸ்வராய குருதேவர்
அப்பொழுதெல்லாம் குருநாதர் முழு சக்தியைக் கொடுத்திருந்தார். இப்பொழுது அந்த அருளை எடுத்து, இப்படி மாற்றிக் கொள் என்று கூறுகின்றார்.

எனென்றால், அது ஒன்றை அடக்கக்கூடிய சக்தி. அதை எடுத்தால் நீ கடைசியில் அதற்குத்தான் போவாய் என்று கூறினார்.

யாம் இந்த அனுபவத்தைத் தெரிந்து கொள்வதற்காக அதைச் செய்யும்படி செய்தார். ஏனென்றால்,
அதை அடக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது,
அதனுடைய உணர்வு இங்கே வருகின்றது.
அது நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது.
நாம் இறந்தால் அதனின் வாசனை கொண்டு
அங்கே தான் செல்ல முடியும்.

இந்த அனுபவங்களையெல்லாம் தெரிந்து கொள்வதற்காகக் காட்டிற்குள் யாம் சென்றோம். 

August 22, 2013

மீண்டும் மீண்டும் பூமியில் உடல் பெறுவதே - "சிவ தனுசு"

1. உயிரினங்களின் உடல்கள் எப்படி மாறுகின்றது?
ஒரு புழுவை, இன்னொரு விஷம் கொண்ட புழு தாக்கினால், அந்தச் சாந்தமான புழு இறந்துவிடுகின்றது. விஷமான அந்தப் புழுவின் விஷம் சிவ தனுசு. விஷம் தாக்கியபின், சாந்தமான புழு விஷப்புழுவின் தன்மைகள் போன்று மாறிவிடுகின்றது.

ஒரு பாம்பின் உடலில் ஏற்படும் விஷம், சிவ தனுசு. அந்த விஷத்தை ஒரு மனிதனின் உடலில் பாய்ச்சுகின்றது என்று வைத்துக் கொள்வோம். விஷம் பாய்ந்தபின், மனிதனை உருவாக்கிய உணர்வின் நினைவுகள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.

எந்தப் பாம்பு தீண்டியதோ, அந்தப் பாம்பின் நினைவே வருகின்றது. இந்த உடலை விட்டுச் சென்றால், பாம்பின் நினைவு கொண்டு பாம்பின் உடலுக்குள் சென்றுவிடுகின்றது நமது உயிர்.
பாம்பின் உடலுக்குள் சென்று
பாம்பின் உணர்வைக் கவர்ந்து, அதன் கருவாகி,
பாம்பாக உருவாக்குகின்றது உயிர்.
அதனால்தான் இதைச் சிவ தனுசு என்பது.

மான் சாந்தமானது, புலி கொடூரமானது. உணவிற்காகப் புலி மானைத் தாக்குகின்றது. அது தாக்குவதற்கு முன், புலியின் உணர்வை மான் நுகருகின்றது. புலியின் உணர்வுகள் அதன் உடலிலிருந்து வருவது சிவ தனுசு.

புலியின் உணர்வுகள் மானின் உடலுக்குள் சென்றபின், மானை உருவாக்கிய அணுக்களைத் தாக்குகின்றது. அதனுடைய உணர்ச்சியில் அச்சப்படும் உணர்வுகள் அதிகமாகி, மானிற்கு புலியின் நினைவே வருகின்றது.

புலியின் உணர்வுகள் சிவ தனுசாக மானின் உடலுக்குள் சென்று, மானை வீழ்த்துகின்றது. மானின் உயிராத்மா உடலை விட்டுச் சென்றபின், புலியின் ஈர்ப்புக்குள் வந்து கருவாகி, புலியாக உருப்பெறுகின்றது.

ஒரு புழுவைக் குளவி எடுத்துக் கொட்டினால், அதுவும் சிவ தனுசு. குளவியின் உணர்வுகள் புழுவின் உடலுக்குள் சேர்ந்தபின், அந்தக் குளவியின் ரூபமாக மாறுகின்றது.

பாமபைக் கருடன் தாக்கினால், அதுவும் சிவ தனுசு. பாம்பின் விஷத்தின் தன்மையை ஒடுக்கி அதன் உணர்வு ஆனபின், அதைத் தன் இனத்திற்கே மாற்றிவிடுகின்றது.

ஒரு குருவி விட்டில் பூச்சியைக் கொத்தி அதைக் கொன்று விழுங்கினால், அந்த விட்டில் பூச்சி அடுத்து குருவியாக வருகின்றது.
2. மனிதனானபின் மற்றொருவரை இரக்கமற்றுத் தாக்கினால் என்ன ஆகும்?
இதைப் போன்றுதான்,
மனிதன் ஒருவனை அடித்துக் கொல்கின்றானென்றால்,
அடித்தவனின் உணர்வுகள்
தாக்கப்பட்டவனின் உடலுக்குள் அதிகமாகச் சேர்கின்றது.

அவன் இறந்தானென்றால், உடலைவிட்டுச் செல்லும் உயிரான்மா எவன் கொல்கின்றானோ, அவன் உடலுக்குள் வந்துவிடுகின்றது. இதுவும் சிவ தனுசு.

கொல்லப்பட்டவன் எப்படித் துயரப்பட்டானோ,
அதே உணர்வுகள் இந்த உடலுக்குள் உயிரான்மாவாக வந்தபின்,
இவன் உடலுக்குள் உள்ள ஒவ்வொரு அணுக்களையும்
அதே மாதிரி நாளடைவில் நரக வேதனைப்படுத்தி
அவனையும் வீழ்த்துகின்றது.

தாக்கும் உணர்வு கொண்ட உணர்வுகள் இவன் உடலுக்குள் ஆனபின், உடலைவிட்டுச் செல்லும் உயிரான்மா,
தாக்கி உணவாக உட்கொள்ளும் உடல் அமைப்பை
மிருகமாக உருவாக்கிவிடுகின்றது.

தாக்கப்பட்டவனுக்கும் இவனைத் தாக்கினான் என்ற உணர்வு ஏற்படும் பொழுது, அடுத்தவனைத் தாக்கவேண்டும் என்ற உணர்வுகள் வரும். இப்படி மாறி மாறி இந்த உணர்வுகள் சிவ தனுசாகின்றது.
3. மீண்டும் மீண்டும் பூமியில் உடல் பெறுவதே சிவ தனுசு
இப்படி ஒன்றுக்குள் ஒன்றாகி, அந்தச் சிவ தனுசாக மாறி அந்த வலிமை கொண்டு உயிர் அதற்குத் தக்கவாறு உணர்ச்சிகளை மாற்றி உருவாக்குகின்றது என்பதற்குத்தான் சிவ தனுசு என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.
         
இப்படிப் பல கோடி உணர்வுகள் சிவ தனுசாகி, பல கோடிச் சரீரங்களைக் கடந்து, பல கோடித் தீமைகளை நீக்கி, இன்று நம்மை மனிதனாக உருவாக்கியிருக்கின்றது நமது உயிர்.

இப்படி, புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும், சேர்த்துக் கொண்ட உணர்வுகளைத்தான் சிவ தனுசு என்று இராமாயணத்தில் சொல்லியிருக்கின்றார்கள்.
4. உடல் பெறும் நிலையை மாற்றி அமைத்தவன் மெய்ஞானி
மெய்ஞானிகள் விஷ்ணு தனுசை எடுத்து,
உயிரோடு ஒன்றி,
விண்ணின் ஆற்றலைச் சுவாசித்து,
உடல் பெறும் உணர்வை மாற்றி,
புவி ஈர்ப்பின் பிடிப்பைவிட்டுக் கடந்து சென்று,
ஓளியின் சரீரம் பெற்று ஒளியாகச் சென்றார்கள்.
நாமும் அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டும்.