ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2021

நம்முடைய பொறுமை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

பாட்டை மட்டும் பாடி விட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலையை எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்று வேண்டுகின்றோம். அதனின் உட்பொருளை நாம் உணர்ந்து அந்தப் பக்குவத்தைப் பெறுதல் வேண்டும்.
 
நம் பிள்ளையைச் செல்லமாக வளர்க்கின்றோம் என்று சொல்கின்றோம். அவன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றும் சொல்கின்றோம். ஆனால் “அவனுடைய குறும்புத்தனம் மட்டும் போகவே மாட்டேன் என்கிறது…!” என்று இப்படியும் சொல்லி விடுகின்றோம்.
 
அதைப் பக்குவமாக எடுத்துச் சொல்கிறோமா என்றால் இல்லை…!
 
நம் பிள்ளை தான்…! என்ற ஆசையின் நிமித்தம் இருந்தாலும் அவன் நல்லவனாக வேண்டும் என்று சொல்வதற்கு மாறாக நாம் தவறிப் பேசும் பொழுது அது நல்லதாக ஆவதில்லை…!
 
எல்லாருடனும் நாம் நன்றாகப் பழகுகிறோம். இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அவர்களிடம் பக்குவமாகப் பேசத் தெரியாதபடி…
1.எதிர் மறையான உணர்வு வந்தபின் கொஞ்சம் விரக்தியாகப் பேசிவிட்டால் போதும்
2.அந்த உணர்வுகள் பகைமையாகி விடுகின்றது.
3.அவர்களுடன் நாம் பழகிய அந்த நல்ல பண்புகளும் அங்கே சீர் கெட்டு விடுகின்றது.
 
ஆகையினால்தான் பாட்டை மட்டும் பாடி விட்டுப் பல நினைவில் நாம் இல்லாமல் அந்த பரிபக்குவ நிலை பெற வேண்டும் என்று சொல்லச் சொல்வது.
 
அந்தப் பக்குவ நிலை பெற வேண்டுமென்றால்
1.உயிரை ஈஸ்வரா… என்று எண்ணி ஏங்கி
2.நம்மிடம் இருந்து அடுத்து வரக்கூடிய சொல்கள் சிந்தித்து செயல்படும் தன்மையாக
3.நல்ல சொல்லாக எதிர் சொற்களைச் சொல்வதும்
4.சொல்லால் அதை அடக்குவதும் என்ற இந்த நிலையில் செயல்பட்டால் பகைமை அங்கே வராது.
 
உதாரணமாக ஒருவர் நம்மிடம் வந்து பிறரைப் பற்றி அதிகமாகக் குறை கூறுகிறார் என்றால் உடனே நாம் “ஏம்ப்பா இந்த மாதிரிக் குறை சொல்லிக் கொண்டிருகின்றாய்…? என்று நாம் அழுத்தமாகக் கேட்டால் அங்கே பகைமை வந்து விடுகின்றது.
 
அப்படி பகைமை வராதபடி தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
 
சரி… என்று அவர் சொல்வது வரைக்கும் அமைதியாக இருந்து… “உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டு கொஞ்சம் பொறுமையுடன் நாம் இருக்க வேண்டும்.
 
சமயம் பார்த்து… அடுத்து ஒரு நல்ல சந்தர்ப்பம் வரும் பொழுது எப்பா…! மற்றவர்கள் மீது நீ குறை கூறும் உணர்வுகள் எனக்குப் பிடிக்கவில்லை. நீ இதைக் கொஞ்சம் யோசனை செய்து பாரப்பா…! என்று சொல்லிவிட்டோம் என்றால் அங்கே சிந்திக்கக்கூடிய தன்மை வருகின்றது.
 
இப்படி இல்லாதபடி… அந்தந்த நிமிடமே நான் பதிலுக்குச் சொல்லி விட்டால்
1.அவன் சொல்வதை அங்கேயே மறுத்தோம் என்றால் நம்மையும் அவன் வெறுப்பான்
2.யாரைக் குறையாகச் சொல்லிக் கொண்டிருந்தானோ… அடுத்து நம் மீதும் இதே குற்ற இயல்புகளைச் சொல்லத் தொடங்குவான்.
 
ஆகவே சமயம் வரும் பொழுது அதை நாம் மாற்றி அமைக்க வேண்டும்.
 
பாட்டை மட்டும் பாடி விட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் என்று சொன்னால்… நாம் எதை எதையோ நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அவன் இப்படிப் பேசுகின்றான்… இவன் இப்படிப் பேசுகின்றான்… என்று அடுத்தவரின் குறை கூறும் நினைவுகளுக்கே நாம் சென்றுவிட்டால் அந்தப் பக்குவமாக எடுத்துச் சொல்லும் நல்ல நிலை இழந்து விடுகின்றது.

அதனால்தான் இந்த நிலையை மாற்ற பாட்டை மட்டும் பாடிவிட்டு பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலை பெற எனக்கருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டச் சொல்கிறோம்.

உணர்வுடன் கூடிய... “எண்ணத்தால் எண்ணி எடுக்கும் தியானத்தால் தான்” நாம் எண்ணுகின்ற இலக்கை அடைய முடியும் - ஈஸ்வரபட்டர்

மனித எண்ணத்தின் ஆற்றல் தியானத்தின் வழியாக எண்ணுகின்ற எண்ணமே ஒன்றை எண்ணிப் பெற்றிட வேண்டும் என்ற தீவிர வைராக்கிய சிந்தனைகே முதலிடம் தந்து ஈர்த்திடும் பக்குவத்தில் செயல்படுகிறது.
 
சரீரத்தில் மறைந்து கிடக்கும் சக்திகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள யாம் (ஈஸ்வரபட்டர்) கூறும்
1.“உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எண்ணி எடுக்கும் தியானத்தைப் பயிற்சியாகக் கொண்டு
2.அதன் மூலம் ஒருமுகப்படுத்தப்படும் சக்தியின் குவிப்பால்
2.விண்ணிலிருந்து வரும் ஒளி காந்த நுண் அணுக்களின் (மகரிஷிகளின்) ஒளி அமில சக்திகளை ஈர்த்து
3.வளர்ப்பின் வளர்ப்பாக... வளர்ப்பவனின் செயலில்... நாம் பேரருளை வளர்க்க முடியும்.
 
இன்று உடல் பயிற்சி முறைகளுக்கும் தற்காப்புக் கலைகளுக்கும் இதே போல் பல தொடர்களுக்கும் தியானம் (YOGA, KUNDALINI) கற்பிப்பதாகக் கூறுகின்றார்கள்.
 
அப்படிக் கற்பித்தாலும்... அவர்கள் குடும்ப வாழ்க்கையில் தங்கள் எண்ணத்தில் அறியாமல் திணித்துக் கொண்ட மாற்று எண்ணச் செயல்கள் (கோபம் சலிப்பு சங்கடம் வேதனை) வீரியமாக இருந்திட்டால் தியானத்தில் பெறும் சக்திகள் அனைத்தும் அவ்வெண்ண வலுவிற்கே செயல்படுமப்பா! நல்லதைத் தடைப்படுத்தும் செயலாக வந்துவிடும்.
 
வெறும் தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது...! (இது மிகவும் முக்கியமானது)
 
சந்தர்ப்பத்தால் தனக்குள் ஊட்டப்பட்ட சங்கடமான உணர்வின் வித்துக்களின் காந்த ஈர்ப்பின் செயல் தொடர்பால்
1.எந்தக் காழ்ப்பு (வெறுப்பு) உணர்வு கொண்டு ஊட்டப்பட்டதோ
2.அதைச் செவிமடுப்போர் கொள்ளும் எண்ணம் அனுதாப நீர் (உமிழ் நீர்) பாய்ச்சி
3.விஷ விருட்சமாகச் செயல் கொண்டால் அதை உடலிலிருந்து களைந்திடும் செயல் மிகவும் கடினமப்பா!
 
இராமபாணம்...” உரமேறிய ஆச்சா மரங்களைத் துளைத்தது... என்ற தத்துவ உண்மை உண்டு...!
 
அதைப் போல் சமமான உணர்வாக... நல்லெண்ணச் சுவாசமாக... உயிரான ஈசனுடன் ஒன்றி... ஞானிகள் காட்டிய நல் நெறியைச் சீராகக் கடைப்பிடித்து மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று பிறவாமை என்ற நிலை பெற வேண்டும்.
1.இந்த எண்ண உறுதியே
2.சங்கட அலைகளைத் தகர்த்திடும் “அருமருந்து...”
 
(ஏனென்றால் நடக்காத... முடியாத... நடைபெறாத ஆசைகளை... முன்னாடி வைத்துக் கொண்டு “அதை எப்படியும் அடைந்தே தீர வேண்டும்...!” என்று முயற்சி செய்து... முயற்சி செய்து... அதனால் தோல்வியாகும் பொழுது சங்கடமும் சலிப்பும் விரக்தியும் ஏற்படுகிறது. அதனால் எந்த நன்மையையும் நாம் அடைய முடியாது. நடக்காததை மறந்து விட்டு நடக்கக்கூடியதை... நடக்க வேண்டியதை... எண்ணிச் சீர்படுத்திக் கொள்வதே தியானத்தைப் பயன்படுத்தும் முறையாகும்)
 
நல்லெண்ணம் கொண்டு பெற்றிடும் உண்மை ஞான வளர்ப்பால் நல்லாக்கம் பெற்றிடுவோம் என்ற எண்ணத்தின் உத்வேகச் செயலுக்கு “விவேகம் தான் தேவை...!”

(வேகமும் வலிமையும் மட்டும் இருந்தால் இலக்கை அடைய முடியாது)

January 30, 2021

கூட்டுத் தியானத்தின் மிக முக்கியமான பலன்

நாம் எடுக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று கூட்டுத் தியானத்தின் மூலம் ஒன்று சேர்த்த உணர்வு கொண்டு வெளிப்படுத்துகின்றோம்.
1.எல்லோருடைய செவிகளிலும் இந்த உணர்வின் ஒலிகள் படுகின்றது
2.அந்த உணர்வுகள் கண்களால் கவரப்படுகின்றது... அதே சமயத்தில் உயிரிலே மோதுகின்றது.  
3.துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் இரத்தநாளங்களில் கலக்கின்றது.
 
அந்த அருள் சக்தியைப் பெற்று “எல்லோரும் பெற வேண்டும்...” என்று அதைப் பாய்ச்சப்படும் பொழுது அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளை மாற்றும் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.
 
கூட்டுத் தியானத்தின் மூலம் இந்த உணர்வுகளை நாம் வெளிப்படுத்தும் பொழுது பூமியில் உள்ள காற்று மண்டலத்திலிம் இது அடர்த்தியாகப் பரவுகின்றது.
 
உதாரணமாக ஒரு நோயாளியை நீங்கள் பார்க்க நேர்ந்தாலும் அடுத்தகணம் ஆத்ம சுத்தி செய்து விட்டு மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து... நோயிலிருந்து விடுபட்டு அவர்கள் குடும்பமும் தொழிலும் நலமாக வேண்டும்...! என்று சொல்லுங்கள்.
 
இப்படிச் சொல்லப்படும் பொழுது அவர்கள் நோய்களை மாற்றியமைக்கக் கூடிய திறனும் உங்களுக்குக் கிடைக்கின்றது. அவர்கள் நோய் உங்களுக்குள் வராது தடுக்கும் சக்தியாகவும் உங்களுக்குள் இது வருகின்றது.
 
ஏனென்றால் பிறர் படும் துயரங்கள் வேதனைகளை எல்லாம் நாம் கேட்டறிந்தால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டு அதே வேதனைப்படும் அணுக்களை நமக்குள்ளும் வளர்த்து விடுகின்றது. அதனால் நம் உடலிலும் நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.
 
கோபப்படுவோரை அடிக்கடி உற்று நோக்கினால் அந்த உணர்வுகள் நமக்குள் இரத்தக் கொதிப்பாக மாற்றி விடுகின்றது. ஆஸ்த்மா நோயால் அவதிப்படுவோர் சொல்வதைக் கேட்டு உணர்ந்தால் நமக்குள்ளும் அந்த ஆஸ்மா நோய் வந்துவிடுகின்றது.
 
சர்க்கரைச் சத்து உள்ளோர் நிலைகளைக் கேட்டறிந்தால் அவர்களிடம் பேச நேர்ந்தால் அதே சர்க்கரை நோய் உங்களுக்குள் மாறி வந்து விடுகின்றது.
 
வாத நோய் முடக்குவாதம் போன்றவர் உணர்வுகளைக் கேட்டறிந்தால் அதே உணர்வுகள் உங்கள் உடலில் உள்ள இரத்தத்தில் கலக்கப்பட்டு அதே தீமை இங்கேயும் வந்து விடுகின்றது.
 
அதைப் போன்ற தீமைகள் நமக்குள் வராது தடுக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் அவசியம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
 
பின்...
1.நாம் மொத்தமாக ஒரே உணர்வுடன்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோரும் பெற வேண்டும் என்று சேர்ந்து சொல்லும் பொழுது
3.எல்லோர் செவிகளில் பட்டு இந்த உணர்வலைகள் எல்லோர் உயிர்களிலும் மோதப்பட்டு
4.உடலில் உள்ள இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது தீமைகளைப் போக்கிடும் சக்திகளாக நாம் பரப்ப முடிகின்றது.
 
 இப்படிப் பரப்பபடும் இந்த உணர்வலைகள் காற்று மண்டலத்தில் பரவும் போது அந்த உணர்வுகளை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் பெறலாம்.
 
அந்த வலுக் கொண்ட உணர்வுகள் மூலம்
1.பிறருடைய தீமைகளை போக்கும் வல்லமையும் நீங்கள் பெறலாம்.
2.பிறருடைய தீமைகள் உங்களுக்குள் வராதபடி தடுக்கும் அந்த ஆற்றலையும் நீங்கள் பெறலாம்.
 
ஆகவே இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் யாருடைய நோய்களையும் நீங்கள் கவர்ந்து விடாதீர்கள். அவர்கள் நோயைப் போக்கிடும் சக்தியாகவே நீங்கள் செயல்படுங்கள்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அந்த உணர்வின் துணை கொண்டு அவர்கள் உடலில் உள்ள தீமைகள் நீங்க வேண்டும்... அவர்கள் உடல் நலம் பெற வேண்டும்... அவர்கள் குடும்பங்கள் ஒன்றுபட்டு வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்... குடும்பத்தில் பற்றுடன் பாசத்துடன் பண்புடன் வளர வேண்டும்... அவர்கள் உணர்வுகள் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சியூட்டும் உணர்வாக வளர வேண்டும்... தொழில்கள் வளம் பெற வேண்டும்...! என்று நாம் இப்படித்தான் எண்ணிச் செயல்படுதல் வேண்டும்
 
மாறாக... பிறரைப் பழித்துப் பேசுவதோ தவறு செய்வோரை உற்று நோக்கித் தவறு செய்கிறான்... தவறு செய்கிறான் என்ற உணர்வுகளை அடிக்கடி எடுத்துக் கொண்டாலோ... நாமும் தவறு செய்வோராக மாறி விடுகின்றோம்.
 
அந்தத் தவறு செய்வோர் உணர்வுகள் நமக்குள் வராது அருள் உணர்வு கொண்டு நாம் தூய்மைப்படுத்தி அவர்களும் தவறிலிருந்து விடுபட்டு மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
 
1.ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ணி விட்டால்
2.அந்த மனிதனை நாம் எண்ணுவதில்லை.... அந்த உயிரை ஆண்டவனாக எண்ணுகின்றோம்.
3.அவனால் உருவாக்கப்பட்ட நல்ல குணங்களைத் தெய்வமாக எண்ணுகின்றோம்.
 
நல்லது எண்ணும் பொழுது நல்லது செய்கின்றோம். தக்க சமயத்தில் நண்பன் நமக்கு நன்மை செய்தான் என்றால் அவனைத் தெய்வமாகக் கருதுகின்றோம்.
 
ஆனால் தொழிலிலோ மற்ற நிலைகளிலோ நண்பருக்குள் குறையானால் துரோகி என்று பழித்துப் பேசி ஒருவருக்கொருவர் பகைமையாகி விடுகின்றது.
 
இருவருடைய உணர்வும் இங்கே தான் உள்ளது...!
 
நல்லது செய்கிறான் என்று எண்ணினால் நல்லவனாக மாற்றுகின்றது. தீமை செய்கிறான் என்ற உணர்வாக மாற்றினால் இருவருடைய உணர்விலும் பகையாகி விடுகின்றது.
 
நண்பன் எதிரியாக மாறுகின்றான். எதிரியான உணர்வே வளர்க்கின்றது. நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற பகைமையை அகற்றிட ஒவ்வொரு நொடியிலும் அருள் உணர்வைச் சேர்த்து பழக வேண்டும்.
 
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் அது விஷ்ணு தனுசு. எல்லாவற்றிலும் முழுமையாக அந்த அருள் உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டே வந்தால் வேகா நிலை அடைகின்றோம். இதைத் தான் தனுசுகோடி என்று சொல்வது.
 
1.நம் உடலில் எல்லா குணங்களிலும் மற்ற எல்லாருடைய உணர்வுகளிலும்
2.அருள் உணர்வை வளர்க்கும் சந்தர்ப்பமாக மாற்றிடும் போது எல்லா குணங்களையும் மாற்றி
3.உயிருடன் ஒன்றிடச் செய்யும் போது ஒன்று என்ற நிலையை அடைகின்றது.
 
அதை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு). அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தான் உங்களிலே தொடர்ந்து பாய்ச்சுகின்றேன்.
 

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் தீமையிலிருந்து விடுபட்டுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். இருளை அகற்றும் வல்லமை பெற வேண்டும்.

வள்ளுவனும் வாசுகியும் போல் வாழ வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 “வள்ளுவர் வாக்கு…! (திருக்குறள்) என்னும் உலக வேதத்தைத் தொகுத்தளித்த வாசுகி அம்மை அதைத் தன் பெயர் கொண்டு வெளி உலகிற்கு வெளியிட விரும்பாமல் “வள்ளுவன் வேதம்…” என்று உலகுக்குக் கொடுத்ததற்குப் பலமான பின்னணிக் காரணமும் உண்டு.
 
அது என்ன…?
 
தன் கணவர் (திருவள்ளுவர்) ஓர் சாதாரண ஆடை நெய்பவர் மட்டுமல்ல. அளவிடற்கரிய சித்து நிலை பெற்ற ஓர் சித்தன் என்று அறிந்து கொண்டதற்கு மூலமும் அங்கிருந்த வறுமைதான் காரணம்.
 
பல காலம் வறுமைப் பிடிப்பில் சிக்கி ஆகாரச் செலவுக்குத் தக்க பொருள் இல்லாமல் சிறிதளவு பொருள் கிடைத்தாலும் நிறைவாக வாழலாம் என்ற எண்ண ஓட்டம் கொண்டவர்கள் தான் அவர்கள் இருவருமே...!
 
1.இருந்தாலும் காற்றிலிருந்து ஆகாரம் உட்கொள்ளும் பக்குவச் செயல்பாட்டுக்கு
2.முழுமையாக வந்துவிட்டால் அப்புறம் திட ஆகாரம் எதற்கு..?
 
ஏனென்றால் இல்லறத் தொடரிலோ சரீர கதிச் செயல்பாட்டிற்குச் சிறிதளவு திட ஆகாரமும் தேவை தான்.
 
காற்றின் ஆகாரத் தொடருக்கு முழுப் பக்குவச் செயல் கொண்டிடக்கூடிய பக்குவமும் கூடி வரும் வரை சிறிதளவு திட ஆகாரமும் உட்கொள்ளுதல் வேண்டும். அதற்குரிய பொருளும் வேண்டும் என்ற தொடரையே சூசகப்படுத்தி வள்ளுவப் பெருமானிடம் வாசுகி கூறுகின்றார்கள்.
 
எத்தனையோ புலவர் பெருமக்கள் புரவலர் (அரசர்கள்) பெருமக்களை நாடிப் பொருள் பெற்றுச் சிறப்படைந்து வாழ்கின்றார்கள். வள்ளல் தன்மை இன்னும் நம் ஞான பூமியிலே குறைவுபட்டு விடவில்லை என்று அமைதியாகவும் சூசகமாகவும் வாசுகி வள்ளுவரிடம் தெரியப்படுத்துகின்றார்.
 
1.“பரிசு பெறும் எண்ணம் புலவர்களுக்குத் தான் உண்டு…!
2.அது வாசுகிக்கும் வந்தது விந்தை…!” என்று உணர்ந்து கொண்டு
3.வள்ளுவப் பெருமான் அம்மையின் மனத்தின் எண்ணச் செயல்கள் விபரீத வழி செல்லும் செயலை மாற்றி
4.நல்லதைச் செயலாக்க வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததார்.
 
தன் மனைவியை வீட்டின் பின்புறம் அழைத்துப் போய் அங்குள்ள சிறு கல்லின் மீது அம்மையைச் சிறுநீர் பெய்யச் செய்தார்.
 
வெறும் உடலின் கழிவு நீரைக் கொண்டே தமது சித்தின் திறத்தால் அக்கல்லையே சொக்கத் தங்கமாக மாற்றி அமைத்தார், “தான் ஒரு சித்தன்…! என்ற சூட்சமத்தை அம்மையிடம் காண்பித்தார் வள்ளுவர்.
 
“கல்லைக் கூடத் தங்கமாக மாற்றும் செயல் திறன்…” நம்மிடமே உள்ள பொழுது
1.வெறும் உலக ஆசையைத் தூண்டி அந்தச் செயல் வீரியத்தை நாம் பெற எண்ணினால்
2.நமது எண்ணச் செயலிலும் மாற்றுக் கலந்தால் தங்கம் மாசுபடுவது போல் ஆகிவிடும்.
3.நல் வழி செல்வதே நமக்கு நன்மை பயக்கும்... தியான வழி அதிலேயே ஆகாரம் பெறுவோம்.
4.சரீர நலத் தொடருக்கும் நம்மிடம் கை வசம் நெசவுத் தொழில் உள்ளது.
5.எந்த அவதார நிலை சூட்சமமோ அது தொடங்கப் போகின்றது…!
6.ஆகவே அனைத்தும் நல்லதாகவே நடக்கும்…! என்று கண்டிப்பது போல் தன் மனைவிக்கு எடுத்துரைத்தான் வள்ளுவச் சித்தன்.
 
இந்தச் சம்பவம் வாசுகியம்மைக்கு... வள்ளுவன் வேதத்தை உலகினுக்கு அவர் பெயரிலேயே வெளியிடக் காரணமாக அமைந்த சம்பவம் ஆகும்…!
 
இதை எல்லாம் தவத்தில் ஆழ்ந்திருந்த கொங்கணர் உணர்கின்றார். வள்ளுவச் சித்தரின் இந்தச் செயல் ஒரு படிப்பினையாக வெளிப்பட்டதன் கருத்தின் பயனை ஞான திருஷ்டியால் முழுமையாக அறிந்து கொண்டார் கொங்கணர்.
 
வாசுகி தனக்கு உணர்த்தியதையும் வள்ளுவரின் ஆற்றலையும் அவர் உணர்ந்த பின் அதனால் தனது வைராக்கியத்தை வளர்த்து சக்தி நிலை பெறக் காரணமாக அமையப் பெற்றுச் சிந்தனையின் வசமாக ஆனார்.
 
வெளி உலகின் நிகழ் செயல் தன்மையின் முழுப்பயனையும் வீட்டினுள் இருந்து கொண்டு இல்லற ஒழுக்கவியலில் செயல்பட்டுத் தவத்தின் சிறப்பை நல்லறமாக நடத்தி ஒழுகி வரும் “வள்ளுவன் வாசுகி அம்மை பெறுகின்ற ஞானப்பால்…” உலகினுக்கு ஓர் நீதி போதனையாக வெளிப்பட வேண்டும்…!
 
வாசுகி அம்மை வீட்டில் இருந்து ஞானத்தைப் போதித்தாள். ஆனால் இந்த வள்ளுவரோ உலகம் அறிந்து கொள்ள முடியாத தன்மையில் “தான் ஒரு சித்தன் செயல் நிலைக்கும் மேற்பட்ட சக்தி பெற்றவன்...!” என்பதை வாசுகி அம்மையை வைத்துத் தங்கம் செய்வித்துக் காட்டினார்.
 
வறுமைப் பிணி விரட்டும் சக்தி மனித எண்ண ஞான வளர்ச்சியின் செயல்பாட்டில் உள்ளது என்ற போதனையையும் காட்டி உண்மையின் சூட்சமத்தைத் தெளிவுபடுத்தி விட்டார்.
 
ஆக...
1.வாசுகி சொல்லால் போதனைப்படுத்தினார்.
2.ஆனால் சொல்லாமல் செய்வித்து வாசுகி அம்மையாரின் ஞானம் வளர் ஞானமாக்கும் தொடருக்கு வள்ளுவர் வித்திட்டு விட்டார்.
3.என்னே இவர்கள் பெற்ற தவத்தின் பயன்…! என்று வியந்தார் கொங்கணர்.
 
இது போன்ற வறுமைப் பிடிப்பைப் போக்கச் செல்வ நாயகன் ஆவேன். என்னை எண்ணும் அலைத் தொடருக்கு சக்தியளிக்கும் செல்வச் சக்தி பெறுவேன்.
 
இத்தகைய “ஞானச் செல்வங்கள்…” வறுமையில் வாடும் கொடுமையை வெல்வேன். செல்வ நாயக சூட்சமம் பெற்று உலகுய்ய வழி காட்டிடுவேன்…! என்ற உறுதி கொண்டார் கொங்கணர்.
 
வீட்டில் உள்ளதோ வறுமை… வீட்டில் உள்ளதுவும் ஒன்றில்லை…!
1.தன் சூட்சம சரீரம் செயல்படும் இரகசியம்
2.இந்தத் தூலத்தில் உள்ளதடா அத்தனை செல்வங்களும்…! என்று எனக்கே போதனை தந்துவிட்டார்…
3.சொல்லாமல் உபதேசிக்கும் வள்ளுவன் வாக்கு…!

January 29, 2021

கர்வத்தை அகற்றினால் தான் ஞானம் பிறக்கும் - ஈஸ்வரபட்டர்

கொங்கணர் தன் ஞான வளர்ச்சிக்கு வித்தாக அன்று தேர்ந்தெடுத்துப் பிட்சை கேட்ட இல்லம் “உலகுக்குப் போதனை தந்த வள்ளுவனார் வாசுகி வாழ்ந்து வந்த இல்லம் தான்…!”
 
பிச்சாந்தேஹி..! என்று பல முறை கேட்டும் (ஒரு முறை தான் கூப்பிட வேண்டும் என்பது நியதி) அன்னமிட வராத காரணமும் பசியின் ஆதிக்கம் அன்று அதிகரித்து விட்டது.
 
அதே சமயத்தில் எச்சமிட்ட கொக்கை எரித்த தன் வல்லமையை நினைத்துக் கர்வம் மீண்டும் தலைக்கேற அதன் வழி கோபத்தின் வசமாக ஆவேசத்துடன் படபடத்துப் போன அந்த மகான் விழி சிவந்து நாசி புகை கிளம்ப கோபக் கனலாகத் தகித்து நின்றார்.
 
தனக்கு அன்னமிட வராத காரணம் அறியாமல் இங்கிருந்து போகக் கூடாது என்ற எண்ணம் கொண்டு விறைத்து நின்றார்.
 
வெளி வந்த வாசுகி அம்மையும் கோபக்கனலாக ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயலாக நிற்கும் முனிவரின் நிலை கண்டு “எதனால் இந்த நிலை வந்தது...?” என்று சிந்திக்கத் தலைப்பட்டார்.
 
1.பின் தன் அறிவின் ஞானத்தால் தெளிந்து
2.முனிவரின் கோபத்தின் மூல காரணத்தையும் அறிந்து...
3.அவரின் “நான்” என்ற நிலை கண்டு அமைதியாகச் சிரித்தார்.
 
வெகுண்டெழுந்த கோபத்தால் முனிவன் வாசுகி அம்மையிடம் “ஆஹா… ஓர் தபசியைக் காக்கச் செய்த பின்னும்.. பல முறை குரல் கொடுத்தும்.. வெறும் கையோடு வந்ததன் காரணம் என்ன..? மமதை கொண்டு தாமதமாக வந்ததன் காரணம் கூறு..! என்றார் கொங்கணர்.
 
வாசுகி அம்மையோ அந்த முனிவரின் கர்வத்தை அடக்கும் விதமாக… முனிவரின் கோபத்தின் மூல காரணத்தை நொடியில் கூறி அவர் தம் கர்வத்தை நீக்கினார்.
 
“என்னையும் கொக்கென்று நினைத்தீரோ கொங்கணரே…!” என்றார் வாசுகி.
 
அந்தச் சொல்ல்லால் திகைத்துப் போன கொங்கணரும் தன் கோப நிலையை மாற்றிக் கொண்டு வீட்டிற்குள் இருக்கும் இந்தப் பெண் பிள்ளை கூறியதைக் கேட்டு அமைதியாகச் சிந்தனையின் வசமானார்…!
 
ஆற்றோரம் அமைதி பெறவேண்டி எடுத்த தவம் முற்றுப் பெற்று சக்தியின் பரிபூரணத்துத்தை முழுமை பெற விடாமல் என் கோபமே எனக்குத் தடையாகிப் போனது என்று உணரத் தொடங்கினார்.
 
காரணம்… அன்று நான் அமர்ந்திருந்த மரக்கிளை மேல் அமர்ந்த கொக்கு தன் எச்சத்தை இட அது என் தலை மேல் விழுந்தது. பகுத்தறிவற்ற ஓர் பறவை அறியாமல் செய்துவிட்ட செயலை என்னால் பொறுக்க முடியவில்லை.
 
பொறுக்காமல் நான் பெற்ற சக்தியின் செயல் கொண்டு சுட்டெரித்து விட்டேன்.
1.எச்சமிட்ட அந்தக் கொக்கை நான் சுட்டெரித்தேன்.
2.இன்றோ இந்தப் பெண்மணி என் கோபக்கனலையே சுட்டெரித்து விட்டாள்.
3.எம் அகத்தினைக் குளிரச் செய்து எனது “நான்…” என்ற அகங்காரத்தைப் பொடிப் பொடியாக்கி விட்டாள்.
4.வீட்டினுள் இருந்து கொண்டு இல்லறப் பயன் ஒழுகும் இந்தப் பெண்மணி பெற்ற தவத்தின் பேறு தான் என்னே…?
5.நான் காட்டில் தவம் கிடந்து என்ன பயன்…? இவள் அறிவின் ஞானக் கண் திறந்தாள் என்றெல்லாம் சிந்தித்தார் கொங்கணர்.
 
வாசுகி அம்மையைக் கும்பிட்டு “அம்மா ஞானம்பிகே..!” என் கர்வம் ஒழியப் பெற்றது. புத்துணர்ச்சி பெற்றேன். ஆனால் திரும்பும் முன் ஓர் காரணத்தைப் பணிவோடு கேட்கின்றேன்.... பதில் கூற வேண்டும்...! என்று பணிவோடு பகர்ந்து... அன்னமிடக் காலதாமதமாக வந்த காரணத்தைக் கூற வேண்டும்...! என்று வேண்டினார்.
 
வாசுகி அம்மை கூறுகின்றார்கள்…!
 
1.மண் சட்டியில் உணவில்லை (காரணம் வறுமை)
2.ஆதலால் விண் சட்டியில் உணவு உட்கொண்டிருந்தோம்…! (விண்ணின் ஆற்றலை எடுத்துக் கொண்டிருந்தோம்)
3.உமது குரல் எட்டா நிலையான அந்தப் பரவசத்தில் ஆழ்ந்திருந்ததாலேயே காலதாமதம் ஆனது...! என்று சொல்கிறார்.
 
அம்மா..! இவ்வளவு ஞானத்தையும் உமக்குப் போதித்த குரு யாரம்மா…? என்றார் கொங்கணர்.
 
அவன் ஒரு “கசாப்புக் கடைக்காரன்…!” என்றார் கொல்லாமை போற்றிய வாசுகி அம்மை.
 
என்ன…! கசாப்புக் கடைக்காரன் ஞானம் போதித்தானா..? என்று ஆச்சரிய மேலிட்டால் கொங்கணவர் திகைத்து விட்டார்.
 
ஆம் கொங்கணரே..! கசாப்புக் கடைக்காரன் தான் என் குரு…! உண்மையைக் கூறுவது என்றால் என் உயிர் தான் அந்தக் கசாப்புக் கடைக்காரன்.
 
பேரண்ட இரகசியம் தெரியுமா…? என்றார் வாசுகி.
 
ஓர் உயிர் சக்தி சரீர கதி வளர்ச்சிக்கு உயிரணுக்களை உண்டு... உண்டுதான் வளர்ச்சியின் வலுவாகின்றது. ஆனால் அதுவே உணர்வுகளின் அதி ஆவேச செயலுடைய சரீரம் தொட்டுச் செயல்படும் “அணு செல்களின் மாமிசம்… என எண்ண வேண்டாம்….!”
 
1.உயரிய உயிர் சக்திக்கு வலு ஊட்டும்
2.காற்றின் ஆகார அமில அணுக்களைக் கொன்று சமைத்து உண்ணும் கசாப்புக் கடைக்காரன்... “என் உயிர் சக்தி தான்...”
3.அதுவே என் குரு…! என்று கொங்கணருக்கு சூட்சமப் பொருள் விளங்கக் கூறுகின்றார் அந்த வாசுகி அம்மை. 

உட்கொள்ளத் திட ஆகாரம் இல்லை என்றால்… வல்லமை கொண்ட உயரிய சக்தி பெற்ற முனிபுங்கவன் காற்றில் ஆகாரம் உண்ணும் ஞானப்பால் உட்கொண்டே தன் வளர்ச்சிக்கு வித்தாக்க வேண்டும் என்ற இந்தச் சூட்சமத்தை வாசுகி கூறியருள “கொங்கணர் வைராக்கியம் பெற்றார்…! கோபத்தை அகற்றித் தன் ஞானக்கண் திறந்தார்…!”

“மானிடராகப் பிறப்பது மிகவும் அரிது...! என்று அக்காலத்தில் சொன்னதன் உட்பொருள் என்ன...?

நாம் இந்த வாழ்க்கைக்குப் பின் உடலை விட்டுச் சென்றால் இன்னொரு மனிதப் பிறவி எடுப்பது என்றால் இன்னொரு உடலுக்குள் சென்றால் தான் அது வர முடியும்.
 
ஆனால் பாம்பு தீண்டினால் உடலுக்குள் விஷமான பின் பாம்பின் நினைவு கொண்டு அதனின் ஈர்ப்புக்குள் சென்று பாம்பாகப் பிறப்போம். பாம்பாகப் பிறந்தாலும்...
1.அந்தப் பாம்பை ஒரு காகமோ கழுகோ கொத்தினால் அது காகமாகவோ அல்லது கழுகாகவோ அடுத்து மாறுகின்றது.
2.மனிதன் அடித்தால் தான் மனிதனாகின்றது.
 
ஆக... அதனின் சந்தர்ப்பத்திற்கொப்பத்தான் மனிதனாக ஆவதும்... காகமாவதும்... கழுகாக ஆவதும்... நரியாவதும் நாயாவதும்...
1.ஒன்றைக் கொன்று புசிக்க எண்ணும் உணர்வுகள்
2.அது கொன்று புசிக்கும் போது அதனின் நினைவு கொண்டு தான் இப்படி உடல்கள் மாறுகின்றது.
 
அதே சமயத்தில் மனிதனுக்குள் வந்து மனித உருப் பெறும் கருவானாலும் இப்பொழுது எல்லாம் குடும்பக் கட்டுப்பாடு என்று இருக்கிறதல்லவா...!
 
எத்தனை உயிரினங்களைக் கொல்கிறோமோ அத்தனையும் நமக்குள் இருக்கின்றது. அதில் எது முந்திக் கருப்பைக்கு வருகின்றதோ அது தான் மனிதனாகப் பிறக்கின்றது.
 
கருப்பைக்கு வரவில்லை என்றால் அதிலே விந்துகள் கசிந்து வீணாகி விட்டால் அந்த விந்துக்குள் கலந்த அந்த உயிரணுக்கள் மனித உடலுக்குள் சென்றாலும்
1.சாக்கடைக்குள் வந்தால் சாக்கடையில் உருவாகும் புழுவாக மாறுகின்றது.
2.மற்ற தாவர இனங்களிலோ செடிகளிலோ பட்டால் தாவர இனத்தின் சத்தை நுகர்ந்து அங்கே கருவாகி புழு பூச்சியாக மாறுகின்றது.
3.கடலில் விழுந்தால் அங்கே கருவாகி அந்த விந்துகளை மீன் விழுங்கினால் அந்த மீனின் ரூபமாக உருவாகின்றது.
 
மனித உடலுக்குள் கசியும் விந்துகள் வீணானால் அந்த உணர்வின் தன்மை கொண்டு அதிலே வரும் கரு முட்டைகள் இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது.
 
மனிதனாகும் தகுதி இருந்தாலும் மனிதனல்லாத பிறவிக்குப் போகும் நிலை வந்து விடுகின்றது. எல்லாமே சந்தர்ப்பம் தான். இயற்கையின் நிலைகள் இப்படி எல்லாம் மாறுகின்றது.
 
ஆககே நாம் எதுவாக ஆக வேண்டும்...? என்று ஒவ்வொருவரும் சற்று சிந்தியுங்கள்.
 
இந்த உடலுக்குப் பின் உணர்வை ஒளியாக மாற்றி... உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நாம் பெறுதல் வேண்டும். அது தான் மனிதனின் கடைசி எல்லை.
 
எத்தனையோ கோடி உணர்வுகள் நமக்குள் உண்டு. அதிலே உயிரைப் போன்ற உணர்வின் தன்மை ஒன்றென இணைந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் கவர்ந்து நாம் ஒளியாக மாறுதல் வேண்டும்.
 
வேகா நிலை பெற்ற ஞானிகளின் அருள் உணர்வை நாம் தியானித்து அதை நம் உடலில் பெருக்கி நாமும் வேகா நிலையாகி இன்னொரு பிறவிக்குப் போகாதபடி “போகாப்புனல்...” நாம் இந்த உடலிலேயே உணர்வை ஒளியாக மாற்றுதல் வேண்டும்.
 
நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவருடைய உடலுக்குப்பின் உயிர் என்ற உணர்வு கொண்டு அவர் ஒளியானார். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஏகாந்தமாக வாழ்கின்றார்.
 
அக்காலத்தில் வாழ்ந்த ஞானிகளும் வானுலக ஆற்றலை எடுத்துத் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலங்களின் துணை கொண்டு அங்கே இணைத்தனர்.
 
அதே வழிப்படி நாமும் நம்மைச் சார்ந்தவர்களை விண் செலுத்தப்படும்போது அந்த உணர்வை நாம் கவர்ந்தால் நாமும் அங்கே அழைத்துச் செல்லப்படுகின்றோம். இந்த முறைப்படி நாம் வரலாம்.
 
1.மீண்டும் மீண்டும் மனிதன் என்ற நிலைகள் வரப்படும் பொழுது
2,மனிதனின் ஈர்ப்புக்குள் வந்தால் நாம் இங்கே பிறவிக்கு வந்து விடுகின்றோம்.
 
ஆனால் அருள் உணர்வுகளைப் பெற்றால் நம்மை அங்கே மிதக்கச் செய்யும். அதன் வழி நாம் செல்ல
1.நம் குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற ஏங்கித் தியானிப்போம்.
2.வேகா நிலை என்ற உணர்வை இந்த உடலிலேயே உருவாக்குவோம்...!

ஏனென்றால் உயிர் வேகுவதில்லை... உயிருடன் ஒன்றி ஒளியாக்கினால் நம் உணர்வுகளும் வேகுவதில்லை என்ற நிலைக்கு நாம் அனவைரும் செல்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

January 28, 2021

இடும்பவனம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.கரங்களைச் சேர்த்து
2.சரீரத்தில் தலை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை
3.மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் ஓடுகின்ற உயிர்ச் சக்தியின் ஒளி வட்டத்தில்
4.ஈஸ்வர வேதி மூலிகையை அமிலமாக உள் நுழைத்துச் செயல் கொண்டிட்ட செயல் என்ன…?

இடும்பன் என்றால் யார்…?

1.நல்வினைகளுக்கு எதிர்மறையாக தீவினைச் செயல்படுத்தும் குணங்கள் என்று எண்ணும் பொழுதே
2.முருக குணம் என்று போகப் பெருமான் நல் வினைப் பயன் காட்டியதைப் போல்
3.தீவினைப் பயன் என்ற தொடரில் உலகிற்குக் காட்டியவனப்பா இடும்பச் சித்தன்.
4.இடும்பன் சுட்டிக் காட்டிய அந்தக் குணங்கள் போகப் பெருமானுக்குப் போதனையைத் தந்திட்ட
5.அந்த இடும்பச் சித்தன் அகஸ்தியரின் சீடனப்பா…!

இன்றைய பழனியின் அன்றைய பெயர் இடும்பவனம். போகப் பெருமானால் அது கடம்பவனமாகி பூஜித்த தொடருக்குத் திரு ஆவினன் குடி என்று சித்தர்களால் பெயர் நாமம் சூட்சமாகச் சூட்டப்பட்டது.

1.போகமாமகரிஷியின் சப்த அலைகள் பதியப் பெற்றுள்ள அந்த மலையில் இடும்பச் சித்தரின் சப்த அலையும் உள்ளது.
2.அதை எடுக்கும் பக்குவத்திற்கு வர வேண்டும்.

இடும்பனால் காட்டப்பட்ட தீவினை குணங்களைப் பற்றி போகர் அறிந்திட்ட வழியில் மும்மலம் (கோபம். ஆணவம். காமம் - சபல குணங்கள்) நீக்கிய தன்மையில் முருகா…! என்ற ஆறு குணம் கொண்ட செயல் சூட்சமம் உள்ளது.

போகர் பெற்றது போல் நாமும் அந்த இடும்பச் சித்தரின் தொடர்பைப் பெற வேண்டும்.

எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்று உள்ளன்புடன் செய்தால் தான் “எந்தக் காரியமும் உயர்வடையும்...!”

நம் உடலில் உள்ள கல்லீரல் இருக்கிறது என்றால் அது உப நிலைகளை வைத்து அது மற்ற உறுப்புகளுக்கு இரத்தத்தை வடிகட்டிக் கொடுக்கின்றது.
 
அதே போல் பித்தப்பை என்றால் அதன் உணர்வுகள் தனக்குள் எடுத்து பித்தத்தை வடிகட்டி மீண்டும் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுடன் கலந்து எடுக்கும் போது ஜீரணிக்கும் சக்தியாகக் கொண்டு வருகின்றது.
 
1.பித்தத்தின் சுரப்பு மாறினால் அஜீரணமாகும்
2.அதிகமானாலும் குறைவானாலும் அஜீரணமாகும்
3.சம அளவு கிடைத்தால் தான் ஜீரண சக்தி சீராகும்.
 
வேதனை என்ற உணர்வு நமக்குள் அதிகரித்தால் அதனால் விஷத்தின் தன்மை அதிகமாக அந்தப் பித்தப்பை உமிழ்த்தினால் அந்த உறுப்பின் தன்மை பாழாகும்.
 
பொதுவாக... நாம் உணவை உட்கொள்ளும் போது அதற்குத்தக்க பித்த சுரப்பிகள் சுரந்து உணவைச் சீக்கிரம் கரைத்து விடுகின்றது.
 
ஆனால் விஷத்தை அதிகமாகக் கூட்டும் போது பித்தம் அதிகமாக உற்பத்தியாகும் நிலை வருகின்றது. அதனால் பித்தப்பை சுருங்கி விடுகின்றது.
 
1.தனக்கு வேண்டியதைக் கவரும் நிலையோ அல்லது அதிகமானதை வடிகட்டும் நிலையோ
2.அந்தச் சமப்படுத்தும் நிலை இல்லை என்றால்
2.அதன் மூலம் விஷத் தன்மை உடலில் சேமிப்பு அதிகரிக்கத் தொடங்குகின்றது.
 
பயில்வான்கள் எடுத்துக் கொண்டால் பத்துக் கோழி பத்து முட்டை என்று இப்படி எத்தனையோ சாப்பிட்டுப் பழகுவார்கள். அவர்களின் கடைசி நிலை என்ன ஆகும்...?
 
இவ்வளவு கடினமான உணவை உட்கொள்ளும் நிலை வரும் போது அதற்குத்தக்க விஷம் இல்லை என்றால் ஜீரணிக்கும் சக்தி இழந்து அவன் சீக்கிரமே துர்மரணம் அடைந்து விடுவான்.
 
ஆனால் சமமாக இருக்கும் வரை உற்பத்தியின் நிலைகள் சீராக வருகின்றது.
1.அதிகமாகப் பித்தங்கள் சுரக்கும் தன்மை ஆகிவிட்டால்
2.சிந்தனையற்ற நிலையாகி முரட்டுத்தனமான புத்தியிலே வளர்வான்.
 
இத்தகைய முரட்டுத்தனமானால் விஷத் தன்மைகள் வளர்ந்து பித்த சுரப்பிகளில் அது அதிகமாகின்றது.
 
ஒரு யானை தன் உணவுக்காக வேண்டி கடினமான தட்டைகளை எடுத்து அதைத் தன் வாயினால் மென்று உட்கொள்கிறது. அதே சமயத்தில்
1.அதற்குள் ஊறும் உமிழ் நீரின் விஷத் தன்மைகள் பட்ட பின்
2.அந்தத் தட்டைகளில் உள்ள சத்தை ஆவியின் தன்மையாக மாற்றி அதை மிருதுவாக மாற்றுகின்றது. (பிஸ்கட் போல் கரைகிறது)
 
அதே போல் அந்த மிருகத்தின் நிலைக்கொப்ப விஷத்தின் தன்மை கொண்டு... மனிதன் விஷமான உணவுப் பொருள்களை அதிகமாக உட்கொள்ளும் போது அந்த உடலில் உள்ள அணுக்களை மாற்றிவிடுகின்றது.
 
1.இன்று “பயில்வான்” என்று சொல்லலாம்
2.ஆனால் நாளடைவில் அவர்களுடைய உறுப்புகள் பாழடைந்து விடுகின்றது...
3.ஜீரணிக்கும் சக்தி இழந்து விடுகின்றது... சீக்கிரம் மரணம் அடைந்து விடுகின்றனர்.
 
ஆகவே இந்த உடலின் தன்மை எந்த நிலையில் இருந்தாலும் நாம் நீடித்திருக்கின்றோமா...? இந்த உடலில் இருக்கும் பொழுது எல்லாம் சேமிக்கின்றோம்... வளர்கின்றோம்...! ஆனாலும் எத்தனை காலம் வாழ்கின்றோம்...? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்...!
 
 
என்னை (ஞானகுரு) எடுத்துக் கொண்டால் நான் ஒன்றுமில்லாதவன். இங்கே வந்தேன். இந்தத் தபோவனம் என்ற கட்டிடத்தைக் கட்டி வைத்தாகிவிட்டது.
1.இருந்தாலும் இதை “எனது...” என்று சொந்தம் கொண்டாட முடியுமா...?
2.எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த பண்புடன் நீங்கள் செய்கின்றீர்கள்... செயல்படுத்துகின்றீர்கள்.
3.இதை எனது (ஞானகுரு) என்று சொந்தம் கொண்டாடினால் என்ன ஆகும்...?
 
நீங்கள் எதற்காக இதைச் செய்தீர்கள்...?
 
தபோவனம் வரும் அனைவருக்கும் நல் உணர்வு பெறவேண்டும் என்ற அந்த அன்பு கலந்த உணர்வுடன் செய்தீர்கள். ஆனால் ஒரு சிலர் என்ன செய்கின்றார்கள்...?
 
என்னிடம் (ஞானகுரு) சக்தி இருக்கின்றது என்று சொன்னால் ஏமாற்றி எதையாவது முன்னாடி கொண்டு வந்து தர்மத்தைச் செய்வது போல் சொல்லி “நான் சொல்வதைச் செய்...” என்பார்கள்.
 
இதனின் செயல்கள் என்ன செய்கின்றது...? இது எல்லாம் சுயநலனுக்காகச் செய்வது...! அவர்களின் ஆசையில் நான் சிக்கினேன் என்றால் எனது ஆசையும் இங்கே கூடும். அப்படி ஆகக் கூடாது என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.
 
ஆகவே... நான் உபதேசித்த அருள் ஞானிகள் உணர்வு கொண்டு... என்னால் உங்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டது...? என்ற உண்மையை உணர்ந்து நீங்கள் நன்மைகளைப் பெற்றீர்கள்.
1.அதன் வழியில் நன்மையைச் செயலபடுத்த நீங்கள் இயல்பாகச் செய்யுங்கள்.
2.அந்த உயர்ந்த பண்புடன் செய்தால் தான் அது எல்லோருக்கும் நல்லதாகும்.
 
ஒரு சிலர் பொருள்களை அதிகமாகச் செலவழித்து விட்டால் அவருடைய உணர்வு “நான் தபோவனத்திற்குச் செய்தேன்...” என்ற உணர்வுகள் வரும்.
 
இப்படிப்பட்ட உணர்வுகள் கொண்டு செயல்படுத்தும் பொழுது “நான் செய்தேன்...” என்ற உணர்வுகள் வரும்.
1.நான் செய்தேன் என்றால்...
2.அவர் செய்த அன்பின் தன்மையைப் பெருக்க விடாத நிலை ஆகி
3.நல்லதைச் செய்யத் தடைப்படுத்தும் நிலையாகி விடுகின்றது.
 
ஆகவே மனம் கனிந்த நிலைகளில் இந்த ஸ்தாபனத்திற்கு எது கொடுத்தாலும் “அந்த உள்ளன்புடன் வரும் நிலைகள் தான்” இந்தக் கட்டிடமோ மற்ற பொருளானாலும் அதைச் செயல்படுத்த முடியும்.
 
உதாரணமாக ஒருவருக்கு நீங்கள் பணம் கொடுக்கின்றீர்கள். வட்டிக்கு வரவு செலவுக்குக் கொடுக்கின்றீர்கள் என்றால் வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் என்ன சொல்வீர்கள்...?
 
அதை வாங்கும் தைரியம் உண்டு... பணத்தை எப்படித் திரும்ப வாங்க வேண்டும்...? என்று தெரியும்... என்பார்கள்.
 
இத்தகைய உணர்வின் வலிமை கொடுக்கும் பொழுது வாங்கியவருடைய நிலைகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக நேர்கின்றது. ஆக இதைப் போன்ற நிலைகள் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்பத் தான் பல நிலைகள் வருகின்றது.
 
கடினமான உணர்வின் தன்மை கொண்டு செயல்படுத்தினால் வேதனையும் பகைமையும் பழி தீர்க்கும் உணர்வும் தான் வளரும். அதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும். ஏனென்றால் நம் உடலோ இந்தக் கட்டிடமோ எதுவும் நம்முடன் வரப் போவதில்லை.

ஆகவே... நம் குருநாதர் காட்டிய வழியில் நாம் வாழும் இந்தக் குறுகிய காலத்திற்குள் அருள் உணர்வைச் சேமித்து அதை வளர்த்து விளைய வைத்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற வேண்டும். அது தான் முக்கியம்...!