ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2021

தியானம் செய்தால் தான் பலன்... தியானம் செய்து பலன் கிடைக்கவில்லை என்ற எண்ணத்திற்குப் போகக்கூடாது

 

யாம் கொடுக்கும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் உயிரையும் துருவ நட்சத்திரத்தையும் இணைக்கும்படி செய்கிறோம். துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். துருவ தியானத்தின் மூலமாகவும் ஆத்ம சுத்தி மூலமாகவும் அந்த அருள் சக்திகளைப் பெறும்படி செய்கிறோம்.

இருந்தாலும்...
1.இத்தனை நாள் தியானம் செய்தேன்... என் தொழில் சீராக வில்லையே...
2.நான் இவ்வளவு தியானம் செய்கின்றேன்... என் குடும்பத்தில் இப்படி இருக்கிறதே...! என்று
3.இப்படித்தான் கலந்து கொண்டு போகின்றோம்.

ஆக பல கேள்விகளை எண்ணிக் கொண்டு “நான் தியானம் செய்தேன்... என் கஷ்டம் என்னை விட்டுப் போகவில்லையே...!” என்று மீண்டும் கலந்து கொண்டே வருகிறோம்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிய பின்பு அதே நஞ்சை மீண்டும் சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்ட மாதிரித்தான் பெரும்பகுதியானவர்கள் இருக்கின்றார்கள்.
1.நஞ்சைக் கழிக்கின்றோம்.
2.ஆனால் மீண்டும் எண்ணத்தால் நஞ்சைச் சேர்க்கின்றோம்.

பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நிலையில் நம் உடல் தன்னிச்சையாக நஞ்சை நீக்குகின்றது. ஆனால் நாம் என்ன செய்கின்றோம்...?

வெறுப்பு சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்று இந்த வாழ்க்கையில் வருவதை எண்ணி மீண்டும் இந்த உடலில் நஞ்சாக அதை எல்லாம் சேர்த்துக் கொள்கிறோம். இந்த உடல் எத்தனை நஞ்சைத்தான் கழிக்கும்...?

சொல்வது அர்த்தம் ஆகிறதல்லவா...!

நல்ல உணவுடன் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து நல்ல உணர்வுகள் எல்லாம் பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனாக ஆன நிலையில் நம் உடல் நஞ்சை மலமாக மாற்றுகின்றது. ஆனால் நாம் நல்ல உணர்வுகளை இன்று நஞ்சாக மாற்றுகின்றோம்.

ஏனென்றால் ஆசையின் நிமித்தம்... உடல் பற்று என்று வரப்படும் பொழுது
1.இது கிடைக்கவில்லையே... அது கிடைக்கவில்லையே...! எல்லாம் செய்தேனே...
2.என் பையனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன்...
3.அவன் சொன்னபடி கேட்கவில்லையே...! காசையெல்லாம் செலவழித்து விட்டானே...! என்ற இந்த உணர்வுகளை வளர்த்து
2.வேதனையைக் கூட்டி நஞ்சாகச் சேர்த்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் மாற்றிவிடுகின்றோம்.

விஞ்ஞானிகள் சொல்கிற மாதிரி எத்தனை வகையான வேதனைகளை இணைத்தோமோ வைரஸ் என்ற கிருமியாகத் தான் நமக்குள் மாற்றுகிறோம்.

மூஷிகவாகனா...! நாம் சுவாசித்த உணர்வுகள் தான் வாகனமாக அமைகிறது. அதன் வழிப்படித் தான் இந்த வாழ்க்கை நடத்துகின்றது. அடிக்கடி கோபப்படுகிறோம் என்றால் நம்மைக் கோபக்காரராக மாற்றுகின்றது. கணங்களுக்கு அதிபதி ஆகி நம்மைக் கோபக்காரனாக மாற்றுகின்றது.

1.கோபக்காரனாக மாற்றினாலும் பரவாயில்லை.
2.கடைசியில் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.
3.எதன் வழியில் கோப உணர்வுகளை நாம் சேர்த்தோமோ அதன் வழி இந்த உடலை மாற்றுகின்றது.

இந்த இரத்தக் கொதிப்புடன் சாகிறவர்கள் எல்லாம் பெரும்பகுதி அடுத்துப் புலியாகத்தான் பிறப்பார்கள். வேறு எங்கும் போக முடியாது. அல்லது இன்னொரு மனித உடலுக்குள் சென்றாலும் அங்கேயும் இரத்தக்கொதிப்பாக மாற்றி அவனை வீழ்த்தி விட்டு வெளி வந்துவிடும்.

அதாவது கொஞ்ச நஞ்சம் தொக்கி இருந்தது என்றாலும் இன்னனொரு மனித உடலில் யார் கோபமாக இருக்கின்றார்களோ அந்த உடலுக்குள் சென்று அங்கேயும் கோபத்தை உண்டாக்கி எல்லாவற்றையும் முழுமையாக்கி உயிர் வெளியில் வந்த பிற்பாடு புலியின் ஈர்ப்புக்குள் சென்று புலியாகப் பிறக்கச் செய்யும்.

நாம் ஏதாவது ஒன்றை எண்ணுகின்றோம். அது நடக்கவில்லை என்றால் இப்படி ஆகிவிட்டதே... இப்படி ஆகிவிட்டதே... இப்படி ஆகிவிட்டதே...! என்று வேதனையைத் தான் அடைகிறோம்.

எந்தெந்த வேதனை உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த வேதனைக்குத் தக்க அடுத்த உடலை உயிர் அமைத்துவிடும்.

கை கால் குடைச்சல் வரும் மூட்டு வாதம் கீழ் வாதம் வரும். இது எல்லாம் நமக்குள் சேர்த்துக் கொண்ட வினைகள் தான் இந்த வினைக்கு நாயகனாக நம்மை இயக்கிய தீரும்.

இப்படி ஆகிவிட்டால் அது சொன்னபடி தான் (நடக்க முடியவில்லை... அசைக்க முடியவில்லை... வலிக்கிறது) நாம் கேட்க வேண்டும் வேதனை அதிகமாகி உடலிலே அனைத்தையும் முழுமையாக்கிவிடும்.

ஆனால் இப்படி நோயாக ஆன பின்பும் கூட மருத்துவரிடம் சென்று நோயை நீக்கினாலும் ஆசை (உடல்) யாரை விட்டது...?

இவன் இப்படிச் செய்கின்றான்... அவனுக்குப் பணம் கொடுத்தேனே...! அவன் ஒன்றும் செய்யவில்லையே...! என்று வேதனை உணர்வை எடுத்து மீண்டும் உடலுக்குள் பல மாற்றங்கள் ஆகின்றது.

கடைசியில் எந்த மருந்து கொடுத்தாலும் அடுத்து ஒன்றுமே வேலை ஆகாது. இதையும் பார்க்கலாம்.

அதற்குத் தான் ஞானிகளைப் பற்றி இங்கே உணர்த்துகின்றோம்.
1.அந்த அருள் ஞானியின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து...
2.அதை வலுக் கூட்டினால் இந்த உணர்வின் தன்மை நம்மை வாழ வழிவகுக்கும்.... அமைதி பெறச் செய்யும்.
3.மன வலிமை கிடைக்கும்... சிந்திக்கும் ஆற்றல் கொடுக்கும்... சிந்தித்து செயல்படும் தன்மையும் வரும்

அந்த அருள் உணர்வைப் பெருக்கினால் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை மாற்றும். உடலை விட்டுச் சென்றபின் அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

ஆகவே மெய் உணர்வோடு நாம் ஒன்றிச் செல்வோம்.

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள முடியும் - ஈஸ்வரபட்டர்

உணர்வின் எண்ணத்தை நல் வழி அமிலமாக நமக்குள் வளர்க்கச் செய்து தன் ஞானத்தை மெய் ஞானிகளின் தொடர்பலையில் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
1.இவ்வுலகில் எந்தப் பாகத்திலும் உடல் உள்ளவர்களுடனும் சரி
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களுடனும் சரி
3.சூட்சம நிலை கொண்ட சப்தரிஷிகளின் நிலையுடனும் சரி
4.இவ்வுணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.

இது… ஆண்டவனாக வந்து நமக்கு அருள் புரிவதல்ல…!

“ஆண்டவன்” என்று நாம் உணரும் சக்திகளுடன் நம் எண்ண அலைகளைச் செலுத்தினோமானால் அவர்களின் தொடர் அலையின்
1.ஒலியையும் கேட்கலாம்…
2.உருவையும் காணலாம்.

ஆனால் ஆவி நிலையில்… “பல எண்ண அலையில்” உள்ளவர்களுக்கு என்ன ஆகிறது…?

அவர்களின் எண்ண வீரிய குண நிலைக்கொப்ப அவர்களின் உணர்வுடன் ஒத்த எண்ணமும் தன் எண்ணமும் ஒன்று போல் உள்ள நிலையில் “இவ்வுலகில் வாழ்ந்த பொழுது நிறைவேறா ஆசையுடன் சென்ற ஆவிகள்” (அதன் ஆசையை நிறைவேற்ற) இவர்களின் எண்ணத்தின் ஒத்த நிலை ஈர்ப்பு உள்ளதனால் இவர்கள் உடலில் அவைகள் ஏறிச் செயல்படத் தொடங்கிவிடுகிறது.

அப்படிச் செயல்பட்டாலும் அவ்வாவிகள் வளர்ந்த நிலையும் அவ்வாவிகள் வளர்த்துக் கொண்ட சக்தி அலையும் இவர்களின் உணர்வு ஞான சக்தி அலைக்கும் உகந்த செயல் வடிவ வளர்ச்சி ஓட்டத்தில் தான் “அதுவும்” அந்த உடல் உள்ளவரை தான் செயல்புரிய முடியும்.

1.ஆக… எந்த ஒரு செயல் ஞானம் கொண்ட நிலை கொண்டுள்ளனரோ
2.அதே வட்ட உணர்வு வளர்ப்பில் வாழ்ந்து
3.தன் வாழ்க்கையில் அவர்களின் ஆசையின் மேம்பாடு என்று உணரும் ஒவ்வொரு செயலிலும்
4.அதனின் வளர்ச்சி ஓட்டத்தில் உடலுடன் உள்ளவரையிலும் (இறக்கும் வரை) அந்த ஞானம் செயல்பட்டு
5.உடலை விட்டுப் பிரிந்த பிறகு மீண்டும் இதே உணர்வலை சுற்றலைக் கொண்டு
6.எத்துறையில் உயர்ந்து உழன்று உருப்பெற்று வாழ்ந்ததோ அதே சுழற்சி ஓட்டத்தில்
7.மீண்டும் மீண்டும் அந்நிலைக்குகந்த வளர்ச்சி ஈர்ப்பிற்குத்தான் செல்கிறது.

முன்னேறிய விஞ்ஞானம்… விஷய ஞானம்… இசை ஞானம்…! எதுவாக இருந்தாலும் சரி…
1.ஓர் சுழற்சி வட்ட ஞான ஓட்ட வளர்ச்சி சுழற்றலில் தான் சுழன்று கொண்டே இருக்க முடியுமேயன்றி
2.உயர் ஞானச் செயலுக்கு ஒளி ஞானத்திற்குச் செல்ல முடியாது (இது முக்கியம்)

எனவே ஞானத்தை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையுடன்… உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு உடலின் அமிலக் கூட்டை நற்சக்தியின் உணர்வலையின் செயலாக்கி நம் எண்ணத்தை அந்த ஞானிகளின் சித்தர்களின் சப்தரிஷிகளின் உணர்வு எண்ணமுடன் மோதவிட வேண்டும்.

அவர்களின் ஈர்ப்பலையின் சுழற்சி வட்டத்திற்குள்… அவர்களின் ஒளி ஞான ஈர்ப்பின் சக்தியுடன் சுழலவிட்டுச் செயல் கொள்ளும் ஜெப முறையை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

அப்பொழுது உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் அந்தச் சுவாசத்தின் மூலம் சகல சித்தர்களின்… சப்தரிஷிகளின் ஒளி அலையுடன் நம் உணர்வலைகள் கலந்து அவர்கள் பெற்ற சக்தி அலையின் தொடரை நாமும் நிச்சயம் பெற முடியும்.

July 29, 2021

இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.. அதற்குத் தான் எமது உபதேசம்

 

குருநாதர் காட்டிய வழியில் பல அதிசயங்களைச் செயல்படுத்தலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இது எல்லாம் எதற்கு உதவும்...?

1.இந்த உடலுக்குப்பின் என்ன...? என்பதை இங்கே உடைத்துச் சொல்கின்றேன் (ஞானகுரு).
2.பிறவியில்லா நிலை அடையும் அதற்குண்டான சக்தியை நாம் பெற வேண்டும். அது தான் முக்கியம்.

உடலை விட்டுப் பிரிந்தால் நாம் கொண்டு போவது என்ன இருக்கின்றது...? அந்த அருள் ஒளியின் தன்மையை நீங்கள் பெற வேண்டும். நீங்கள் தயாராக வேண்டும்... அதன் வழி தான் எல்லோரும் தயாராக முடியும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நீங்கள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும். அதை நீங்கள் வலுவாகப் பெற்றால்தான் மற்றவர்களுக்கும் அதைப் பாய்ச்ச முடியும்.

அவர்கள் இந்த உணர்வைப் பெற... ஒன்றன் பின் ஒன்றாக அவர்கள் மூலமாக... மற்ற எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய முடியும்.

ஒரு நோயாளியைப் பார்த்தபின் அவருடைய நோயைக் கேட்டறிகின்றோம். அதை விசாரித்த பின் அதே நோய் எப்படி வருகின்றதோ இதைப்போல
1.அருள் உணர்வைக் கேட்டபின்
2.அருள் உணர்வைப் பெற செய்யக் கூடிய தகுதி
3.நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

எல்லோரும் மகிழ வேண்டும் என்ற உணர்வை நான் எண்ணும் பொழுது அந்த மகிழ்ந்த உணர்வுகள் எனக்குள் விளைகின்றது. அதே போன்று நீங்களும் செயல்படுத்தி அந்த மகிழ்ச்சியான உணர்வுகள் உங்களுக்குள்ளும் தோற்றுவிக்க வேண்டும்.

யாரும் எதையும் கொண்டு போக முடியாது. இந்த அருள் ஒளியை... அந்த மகிழ்ச்சியைத்தான் கொண்டு போக முடியும்.

அந்த அரும் பெரும் சக்தியைக் காடுகளில் தவமிருந்து பல அருள் ஞானிகள் பெற்ற அந்தப் பேரின்பத்தை நீங்களும் பெற வேண்டும். இதை நீங்கள் எளிதில் பெற முடியும்.

ஆகவே எது பதிவோ அது மீண்டும் நினைவுக்கு வரும். அதன் வழி இந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கி மீண்டும் நினைவு கொண்டால் இதை நீங்கள் வளர்க்க முடியும்.

உதாரணமாக ஒரு வித்தை உருவாக்குகின்றனர். எந்த வித்தை உருவாக்குகின்றார்களோ அதன் ஊன்றப்படும் போது அது விளைச்சலாகி பல வித்துகளாக வரும்.

அதைப் போன்று தான் இந்த ஞான வித்தை உங்களுக்குள் உருவாக்குகின்றேன். அதை நீங்கள் பெற வேண்டும்... வளர்க்க வேண்டும்.

ஆனால் தொழிலுக்கும் குடும்பத்திற்கும் இதைச் செய்தேன்... கஷ்டம் நஷ்டம்...! என்று சொல்வதை விடுத்து விட்டு
1.நாங்கள் அந்த அருள் சக்திகளைப் பெறுகிறோம்
2.அதை வைத்துச் சீர்டுத்துவோம் என்று இந்த உணர்வை வலுப் பெறுங்கள்.
3.இந்த வாழ்க்கையை உங்களால் செம்மைப்படுத்த முடியும்.

ஆசை ஒரு பக்கம்... எண்ணம் ஒரு பக்கமாகச் சென்றால் நிறைவேறுவது கஷ்டமாகி விடுகிறது.

அதே சமயத்தில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பதிலும் ஒரு சிலர் குறை காணுவதிலேயே இருப்பார்கள். குறையை ஊன்றும் தன்மை தான் அவர்களுக்கு வருகின்றது.

குறையிலிருந்து மீட்க வேண்டும் என்ற உணர்வு வருவதில்லை அப்போது அந்த வளர்ச்சியும் குன்றுகின்றது.

இதைப் போன்ற நிலையெல்லாம் மாற்றி அருள் வழியில் நாம் வளர்த்துக் காட்டும் தன்மைக்கு வரவேண்டும். இருளைப் போக்கும் அருள் சக்திகளைப் பெற வேண்டும். அருள் வழியில் நாம் வாழ வேண்டும்.

இந்த உணர்வை நாம் வளர்த்தால் நிச்சயம் அந்த ஆற்றலைப் பெறுகின்றோம்.

1.குறை கூறுவது எளிது
2.குறையை நிவர்த்தி செய்வது மிக மிகக் கடினம்
3.அது நம்மை அடிமையாக்கக் கூடாது... அதை அடிமையாக்கி அந்த அருள் உணர்வைப் பெருக்குதல் வேண்டும்.

நம்மிடம் உள்ள அரிதான சக்திகளை அறிந்திருக்கின்றோமா…? ஈஸ்வரபட்டர்

 

இன்று விஞ்ஞானத்தில் ஒலிப் பதிவு செய்த நாடாக்களில் காந்த அலையை மின்சாரத்தினால் பாய்ச்சி அதனை ஒலிக்கச் செய்து கேட்கின்றனர்.

அதைப் போன்று இவ்வுடல் என்ற கூட்டு அமிலமுடன் உயிர் அணு தோன்றி ஜீவ உணர்வு எண்ண சக்தி வளர்ந்த நாள் தொட்டே பல கோடிச் சரீரங்களில்.. ஒவ்வொரு உயிர் ஜீவனின் உணர்வு எண்ண சுவாசத்தில் எடுத்த நினைவலைகள் அனைத்துமே நம் உடலில் பதிவாகியுள்ளது.
1.அப்படிப் பதிவான உணர்வெண்ண அலையில்
2.பல ஜென்மங்களில் எடுத்த எண்ண நினைவலைகளும் உண்டு.

அதன் குண நிலைத் தொடரில் தான் இன்றைய பிம்ப உடலின் உணர்வு நினைவு எண்ண ஓட்டங்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளது. அப்படிப் பதிவாகியுள்ள உடல் கூறு தான் இது.

ஆகவே…
1.இவ்வுடல் உணர்வு எண்ணமுடனே (அந்த ஓட்டத்திலேயே) நம் எண்ணத்தைச் செலுத்தினோமானால்
2.ஆத்ம சக்தி நல்லுணர்வின் வழித் தொடர் பெற முடியாமல்
3.அணைகட்டாமல் செல்லும் நீரைப் போல் தான் அதன் வேக நிலைக்கொப்ப செல்லும்.

உணர்வின் எண்ணம் கொண்டு நற்சக்தியின் ஞான ஒளி அலையை இவ்வுடலில் ஏற்கனவே பதிவாகியுள்ள பலவான உணர்வுகளில் கலக்கச் செய்திட வேண்டும் (இது முக்கியம்).

1.அத்தகைய எண்ணங்களையும் நினைவுகளையும்
2.நற்சக்தியின் நல் எண்ண குணத்தை வழிப்படுத்தக்கூடிய எண்ணத்தில் நம் வாழ்க்கை நடைமுறை இருந்திட்டால்
3.நாம் எச்சக்தியைப் பெற வேண்டும் என்று உணர்வின் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ
4.அச்சக்தியின் எண்ணமுடன் நம் வாழ்க்கை செயல் இருந்திட்டால்
5.நம் ஆத்மாவும் நல் ஞானச் சக்தியின் வழித் தொடரைப் பெற முடியும்.

உடலில் மட்டுமல்லாமல் உடலை விட்டுப் பிரிந்தவர்களின் (இறந்தவர்களின்) எண்ண நினைவு சப்த அலைகள் “அந்தந்த உயிராத்மாவின் சுழற்சியுடன்” இக்காற்று மண்டலத்தில் சுழன்று கொண்டே அழியாமல் தான் உள்ளது.

இதனை உணர முடியுமா…?

இன்று நாம் பேசியதை நாடாக்களில் அமிலத்தைப் பூசி காந்த மின் அலையின் சக்தியினால் பதிவு செய்து பல காலங்களுக்கு அதனைக் கேட்க முடிகின்றது.

உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்களின் தொடர்பலையையும் நாம் நம் எண்ணத்தால்… அவர்கள் பால் செலுத்தும் உணர்வு ஞானத்தால்… எந்த ஒரு உடலை விட்ட ஆத்மாக்களுடனும் தொடர்பு கொள்ள ஜீவ பிம்ப மனித உடல் கொண்டோரால் முடியும்.

இம்மனித ஞானத்தில் மட்டும் தான் முடியும் என்பதல்ல…!

நம்முடன் வாழ்ந்த ஜீவன் பிரிந்த ஆன்மாக்கள் அவர்கள் அவர்களால் விரும்பி வாழ்ந்த காலத்தில் அவர்களின் உடம்புடன் தரித்திருந்த பொருள்களில் காந்த மின் அலையின் சக்தியை சில அமிலங்களின் கலப்புக் கூட்டைப் பூசி அவர்கள் பேசிய அலையையும் எடுக்க எடுக்கலாம். அவர்களின் இன்றைய எண்ண ஒலியையும் எடுக்கலாம்.

இவ்வுடல் கூட்டிற்கு ஜீவ நீர் சக்தியினால் எச்சக்தியையும் செயலாக்கவல்ல ஆற்றலுண்டு. “சகல லோகங்களையும் காணவல்ல ஆத்மக் கூடு இது” (நம் ஆன்மா).

1.ஆனால் நம் உணர்வின் எண்ணமெல்லாம் “இவ்வாழ்க்கை” என்ற ஏக்கச் சலிப்பு நிலையுடனே இருப்பதாலும்
2.பெரும்பாலும் தன் சக்தி குண அமிலத்தையே கூட்டும் வழியிலிருந்து
3.குறைக்கும் ஈர்ப்பு ஓட்டமான ஓட்ட கதியில் செலுத்தி விடுவதாலும்
4.நம் ஆன்மாவுக்குண்டான சக்தியை அறியாமலேயே வாழ்கின்றோம்.

இவ்வுணர்வின் எண்ணத்தையே நாம் நல்லெண்ண குண அமில நிலையில் வளர்த்துக் கொண்டோமானால்... ஒவ்வொரு மனித ஆத்மாவும் எந்த ஒரு பேரின்ப நிலை பெற வேண்டும் என்று அன்றைய ஞானிகளும் சபதரிஷிகளும் உணர்த்தி உள்ளார்களோ... அதன் உணர்வெண்ண நினைவுப்படி அவர்கள் அடைந்த நிலையை நாமும் அடைய முடியும்.

July 28, 2021

நம் எண்ணத்திலும் பார்வையிலும் வரக்கூடிய தீமைகளைப் போக்க வேண்டும் என்பது தான் “அஷ்டமி நவமியின் தத்துவமே...”

 

1.கண் வழி தான் நாம் கவர்கின்றோம்... அது தான் பதிவாக்குகின்றது.
2.கண்ணின் காந்தப் புலன் கவர்வது நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
3.இந்த உடலுடன் இணைந்தது எதுவோ அது பதிவான பின் உயிர் அந்த உணர்வின் தன்மையை இழுக்கின்றது.

அதாவது... நமக்குள் எத்தனையோ உணர்வுகள் அணுக்களாக இருப்பினும் கண் கொண்டு பதிவாகி உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ அதைக் காற்றிலிருந்து பிரித்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

மாற்றியபின் சுவாசித்து உயிரால் தான் அது இயக்கப்படுகின்றது... நவமி.
1.எதன் உணர்ச்சிகளை எண்ணுகின்றோமோ அந்த எண்ணம் நவமி,
2.ஆனால் அதே சமயம் அஷ்டமி...! கண்களின் வழி நாம் நுகர்ந்தாலும் ஆன்மாவாகிறது... (தானாக) இயக்கும் சக்தி இல்லை.

நுகர்ந்து உயிரிலே பட்ட பின் அஷ்டமி என்றாலும் உயிருடன் ஒன்றிய பின் அந்த உணர்வின் அறிவாக நாம் தெரிந்து கொள்வது தான்.

அஷ்டமி இருள் சூழ்ந்த நிலைகள். அந்த இருளிலே எதையும் செய்யாதீர்கள் என்பார்கள். ஆக... அஷ்டமியிலும் நவமியிலும் நல்லது எதையும் செய்யாதீர்கள் என்பார்கள்.

எதன் உணர்வின் தன்மை சேர்த்து அந்த உணர்வை அறிகின்றோமோ அறிந்து கொண்ட உணர்வு அதை அறியச் செய்வது இந்தக் கண்கள் தான்.

1.அறிந்து கொள்ளும் அறிவின் தன்மை கொண்டு நாம் எந்த நல்லதை எண்ணுகின்றோமோ
2.அதன் அறிவாக நம் உயிர் இயக்கும் என்பதைத்தான் அஷ்டமி நவமி... எதன் தெளிவின் தன்மை வருகின்றதோ ஈர்க்கும்.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்று பார்க்கின்றோம். இந்த உணர்வின் தன்மை இது அஷ்டமி என்றாலும் அந்த உணர்வுகள் இருள் சூழ்கிறது.

1.வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் இப்படி இருள் சூழ்ந்தால்
2.அந்தத் தீமையை எண்ணாதே என்று தான் சாஸ்திரங்கள் கூறுகிறதே தவிர
3.இவர்கள் சொல்வது மாதிரி சாங்கிய சாஸ்திரம் அல்ல.

வேதனை என்ற உணர்வுகள் உயிரில் பட்ட பின் அது இருள் சூழ்ந்து விடுகின்றது. ஒன்பதாவது நிலையில் நவமி என்றாலும் வேதனை என்ற உணர்வுகள் தான் நமக்குள் எண்ணங்களாக வருகின்றது.

ஆகவே அந்த வேதனையை நவமிக் காலங்களில் எண்ணக்கூடாது என்று காட்டுகிறார்கள். அதே மாதிரித் தான் அஷ்டமி இருள் சூழ்ந்த நிலைகளை எடுக்கக்கூடாது என்று காட்டுகிறார்கள்.

1.அதாவது தீமை என்று தெரிந்து கொண்ட பின் அந்தத் தீமையை நீக்கும் உணர்வுகளை
2.நாம் நுகர்ந்தறிவதற்குத் தான் இந்தக் கண்களைக் காட்டுகின்றார்கள்.

அன்றைக்கு நாம் நல்லது செய்ய வேண்டும்... நல்லவர்களாக வேண்டும்... நல்ல பயன்களை அடைய வேண்டும்...! என்று இப்படி எண்ணினால் அதன் உணர்வின் தன்மையே நமக்குள் அறிவாக அது இயக்குகின்றது.

சாஸ்திரங்களிலும் வேத நூல்களிலும் மூலங்களை இப்படிக் கொடுத்துள்ளனர்.
1.ஆனால் அந்த மூலத்தை மற்றவர் யாரும் அறிந்து கொள்ளாத நிலைகளில்
2.அஷ்டமி நவமி என்ற அந்த இரண்டு நாளும் நல்லதையே எண்ணி விடாதே என்று மாற்றிவிட்டார்கள்.

ஒரு நல்ல காரியத்தை முழுமையாகச் செய்து சந்தோஷப்பட்டு அதை எண்ணினோம் என்றால் நம் உயிர் அதன் உணர்வின் உணர்ச்சியாக இயக்குகின்றது.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்று கண் கொண்டு பார்த்தால் அந்த வேதனையை நுகராதபடி எப்படி அவரை நல்லவராக்க வேண்டும் என்ற உணர்வின் தன்மை எடுக்க வேண்டும்.

தீமை வரும் நேரத்தில் எப்படி எண்ண வேண்டும் என்று தான் ஞானிகள் காட்டியுள்ளனர்.

இப்படி அந்த அஷ்டமி காலங்களிலும் நவமிக் காலங்களிலும் நாம் நல்ல காரியங்களைச் செய்து அந்த உணர்வின் தன்மை தெளிவாக்க வேண்டும் என்பதையே வேத பாட நூல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

நம் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று உள்முகமாக நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

அதன் பின் எந்த நல்ல காரியமோ அது நடை பெற வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்தினால் அது நிச்சயம் நல்லதாகும்.

உணர்ச்சி வேகத்தை மனிதன் சமப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் - ஈஸ்வரபட்டர்

 

1.உணர்வையும்
2.எண்ணத்தையும்
3.ஒவ்வொருவரும் செலுத்தி வழிப்படுத்தும் முறை கொண்டு தான் “ஞான ஈர்ப்பு” வளரும்.

இவ்வுணர்வையும் எண்ணத்தையும் ஞானத்தில் செலுத்திட நற்குணங்களின் சக்தி அலை ஆறு வகையை உணர்த்தினோம். மனித குண அமிலங்கள் பன்னிரெண்டு இருந்தாலும் அதிலே அந்த ஆறு நற்குணங்களின் அமிலங்களின் சக்தி நிலை மனிதனுக்குள் பெருக வேண்டும்.

ஒவ்வொரு மனிதனின் குண அமிலத்தின் உணர்வு உந்தச் செய்யும் எண்ண ஓட்டம் உடலின் உணர்வைக் கொண்டே மீண்டும் மீண்டும் வரத்தான் செய்யும். அதனால் ஏற்படும் சலிப்பைச் சாந்தமாக்க வேண்டும்.

இவ்வுடல் பிம்ப உணர்வு கொண்டு வாழும் வாழ்க்கையில்
1.ஒவ்வொரு நிலையையும் காணும் பொழுதே
2.நாம் எடுக்கும் சுவாசத்தினால் அவ்வுணர்வலைகள் இவ்வுடலில் சாடத்தான் செய்யும்.
3.இன்று நாம் காணும் உணரும் எண்ணத்தால் மட்டும் நம் சுவாசம் அத்தகைய நிலையை ஈர்க்கும் நிலை ஏற்படுவதல்ல.

ஏன்… எப்படி…? எதனால்..?

ஜீவ பிம்ப உணர்வு (மனித) உடலில் “எல்லா உணர்வின் நிலையையும் உணரவல்ல ஈர்ப்பு குணங்கள்” இப்பிம்ப உடலின் அமில குணச் சேர்க்கை வடிவெடுத்த ஆரம்பக் காலத்திலிருந்தே…! பல ஜென்மங்களின் கூட்டுக் கலவை வளர்ப்பு அமிலங்கள் இந்த உடலில் உண்டு.

1.முந்தைய காலத்தில் நாம் எடுத்துக் கொண்ட உடலின் உணர்வலைகள்
2.இன்று… இப்பொழுது… நாம் எடுக்கும் நற்சக்தியின் அலையின் உணர்வினால் மட்டும் தடைப்படுத்திட முடியாவண்ணம்
3.நம் உடலின் கூட்டு உணர்வமில… முந்தைய சேமிப்பு அமிலத்தில் “உயர்ந்து நிற்கும் குணத் தொடர் உணர்வு” (முன் ஜென்மத் தொடர்)
4.அதன் ஈர்ப்பு வட்டத்திலிருந்து நம்மை மாறவிடாமல் தடைப்படுத்தும்.

இயற்கையின் உரு குண நிலையே இதன் அடிப்படை குண ஈர்ப்பு ஓட்டத்தில் தான் இவ்வுலகம் முழுமைக்கும் ஓடிக் கொண்டுள்ளது.

1.அதி மழை காலத்தில் அதன் வேகத்தைக் கொண்டு பெய்யும் மழை நீர்
2.அதே ஓட்டத்தில் சுழன்று அதி வேகமாக ஓடிக் கலக்கின்றது.
3.அதே நீர் தான் அமைதியாகவும் தெளிந்த நிலையிலும்
4.நாம் அணை கட்டி விடும் வேகத்தின் விகிதப்படி நிதானமாக ஓடுகின்றது.

உணர்வின் வேகத்தை மழை நீரானது மழை பெய்யும் வேகத்தைக் கொண்டு அதன் ஓட்ட நிலையில் விட்டு விட்டால் அதே வேகத்தில் பாய்வது போல் நம் உணர்வின் வேகத்தையும் அப்படியே விட்டால் அதனின் வேகத்திலேதான் பாயும்…!

ஆனால் மழை நீரை அணையைக் கட்டித் தேக்கி அந்நீரை நமக்கு வேண்டியபடி வெளிப்படுத்தும் விகிதம் கொண்ட ஓட்டத்தில் திறந்து விடும் பொழுது அதே நீர் அதற்கு உகந்த வேக நிலை ஓட்டத்தில் தான் அது ஓடும்.

ஆக.. இவ்வெண்ணத்தை நம் வாழ்க்கையில் நடத்திடும் எந்தச் செயலுக்கும் அச்செயலை ஈர்க்கவல்ல எண்ண ஓட்ட கதியில் விட்டு விட்டோமானால் என்ன ஆகும்…?

வாழ்க்கையில் நடந்திடும் எந்த ஒரு செயலையும் அணை கட்டி ஒழுங்குமுறைப்படுத்தி விடும் நீரைப் போல் இல்லாமல் விட்டு விட்டால்
1.மழை நீரின் வேகத்தைக் கொண்டு பாய்ந்தோடும் துரிதத்தைப் போலவும்
2.மழையின் தன்மை குறையக் குறைய மழை நின்ற பிறகும் அதன் செயல் நிலைக்கொப்பச் செல்லும்
3.நீரின் வேக நிலையைப் போலவும் தான் இவ்வெண்ண உணர்வும் செயல்படும்.
4.காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற பிறகு அது நிதானப்பட்டாலும் “வெள்ளத்தின் பாதிப்பு பாதிப்புத்தான்…!”

அதைப் போன்று நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நொடிக்கும் நாம் எடுக்கும் சுவாசத்தின் உணர்வு எண்ணம் கொண்டு பல மோதல்கள் வருகிறது.

ஏனென்றால் நம் பூமியின் காற்று மண்டலத்தில் இயற்கையின் அமில சக்திகளுடன் இம்மனித எண்ணத்தின் சுவாச அலையின் குண அமிலங்கள் நிறைந்தே சுழல்வதால்
1.நாம் எடுக்கும் சுவாசத்துடன் இக்காற்று மண்டல அமில சப்தங்கள்
2.நம் உணர்வு எண்ணத்தில் மோதிக் கொண்டே தான் உள்ளன.

ஒவ்வொரு நொடிக்கும் நம் சுவாச நிலைக்கொப்ப உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சக்திகள் இவ்வுடல் பிம்ப அமில சப்த அலையுடன் பதிவாகிக் கொண்டே தான் உள்ளது… அதனின் இயக்கமும் இருந்து கொண்டே தான் உள்ளது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஆகவே எதிர் மோதலாகும் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம்… நம் உணர்வையும் எண்ணத்தையும் சமப்படுத்திச் சீராக்கத் தான் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்படி சொல்கிறோம்.

July 27, 2021

உபதேசம் கொடுக்கும் போது அதைக் கேட்பவர்களுக்கு அடிக்கடி ஏன் தூக்கம் வருகிறது...?

 

கேள்வி:
சாமிகள் உபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம் சிலருக்குக் கிறக்க நிலைகள் ஏற்படுகிறது. தூக்கம் வருகிறது. அந்த நேரத்தில் சாமிகள் கூறும் உபதேசக் கருத்துகள் அவர்களுக்குள் பதிவாகிறதா என்பது பற்றிய விளக்கம் வேண்டும்.

ஞானகுருவின் பதில்:
உதாரணமாக நல்லதாக நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். அந்த நேரத்தில் ஒருவர் வந்து வேதனைப்படும் சொல்லைச் சொன்னவுடனே என்ன ஆகிறது...?

நல்ல அணுக்கள் சோர்வடைகிறது அல்லவா...!

இதே மாதிரித் தான்
1.அந்த வேதனையை நீக்கிய ஞானிகளின் உணர்வை நுகரப்படும் போது
2.உண்மையிலே அதைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் போது வசிஷ்டர்... (கவர்ந்து கொண்ட சக்தி) உள்ளுக்குள் போகிறது.
3.இதற்கு முன்னாடி எத்தனையோ கஷ்டங்கள் சங்கடங்கள் எது எல்லாம் இருந்ததோ அதை அடக்கி இந்த உணர்வுகள் மேலோங்கும்.

நன்றாக இருக்கின்றீர்கள்.. ஒருவர் வந்து திடீரென்று வேதனையாகச் சொல்லப்படும் போது என்ன ஆகிறது...? நல்ல மனது எல்லாம் ஒடுங்கி விடுகிறது.

அந்த நல்ல மனதை “வேதனை” என்ற உணர்வு ஒடுங்கச் செய்கிறது. வேதனை நீக்கிய ஞானிகளின் உணர்வைக் கேட்கும் போது என்ன ஆகிறது...?

1.இந்த உணர்வு ஆன பின் உடல் ஆசை எல்லாம் மாற்றிவிடுகிறது.
2.ஒரே நினைவுடன் உங்களைத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்கிறது.
3.அந்த உணர்வு உங்களுக்குத் தூங்குகிற மாதிரித் தெரியும்.

ஏனென்றால் மற்ற தீமைகளை எண்ணாதபடி ஒரே நினைவாக உங்கள் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம் அந்த உயர்ந்த சக்திகளைப் பெறுகிறது.

அப்படிப் பெருகிய நிலையில் உங்கள் எண்ணத்தை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சொன்னால் அங்கே கொண்டு போகிறது.

உங்களை மேலே தூக்குகிற மாதிரி இருக்கும்...!

இங்கே உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது இந்தப் புவியின் கனம் இருக்காது. துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் போது உடல் எடை இல்லாது இருக்கும். சங்கடம் சலிப்பு என்ற நிலைகள் இருக்காது.

தூங்காமல் தூங்கும் காலம் எக்காலம்...? என்று சொல்வார்கள். ஆக தீமை என்ற உணர்வு வராதபடி... அந்த அருள் உணர்வுடன் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

1.தூக்கம் வருகிறது... மயக்கம் வருகிறது... சாமி சொல்வதைக் கேட்க முடியவில்லை.
2.சாமி சொல்கிறார்... பெரியவர் என்னமோ சொல்கிறார்... என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது.

இதை எல்லாம் கேள்வியாகச் சாமியிடம் கேட்கலாமா...? என்று இருக்கக்கூடாது. கேட்டால் தான் தெளிவு வரும். மற்றவர்களுக்கும் தெளிவு வரும்.

ஏனென்றால் நாளைக்கு அந்த மெய் உலகம் வர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வு ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் எப்படி ஒளியாக ஆனானோ அந்த உணர்வுகள் பெருகும் காலம் வரும்.

காரணம்...
1.என்றைக்குமே ஒரு துன்பத்தின் நிலை அது எல்லை கடந்து வரப்படும் போது தான்
2.அதிலிருந்து மீண்டிடும் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெருக்க முடிகின்றது... வளர்க்கவும் முடிகின்றது.

இப்போழுது நான் சொல்வது உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியும்.
1.பின்னாடி போகப் போகப் போகத் தான்
2.இந்த அருள் உணர்வுகள் உலகம் முழுவதற்குமே தெரியக்கூடிய தன்மை வரும்.

ஏதோ நான்கு பேர்... பத்துப் பேர் வருகிறீர்கள்... நூறு பேர் வருகிறீர்கள் என்று லேசாக நினைக்கலாம். அந்த நூறு பேரால் இந்த உலகம் முழுவதற்குமே அருள் ஞானமாக மாற்றும் சக்திக்கு வரும்.

நீங்கள் அனைவருமே எதிர்காலத்தில் உலகை வெல்லக் கூடிய சக்தி பெற வேண்டும் என்பது தான் என்னுடைய (ஞானகுரு) பிரார்த்தனை எல்லாம்.

கிருஷ்ணன் வாயிலே காட்டிய அண்டசராசரத்தின் ஆற்றலை நாம் பெற வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

பல நிலைகளால் பூமியின் நிலையே பூமியின் சுவாச நிலையே மாறு கொள்ளும் இத்தருவாயில் நம் உணர்வின் எண்ணத்தால் ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தில் மடியப் போகும் உயிரினங்களின் வழித் தொடர் செல்லும் மிகவும் ஈன நிலையிலிருந்து மீள முடியும்.
1.இப்படி உயர் செயல் குணமுள்ளது
2.இன்றைய மனித உடல் உள்ளவர்களுக்கு…!

உடல் இல்லாதவர்கள் (உடலை விட்டுப் பிரிந்தவர்கள்) என்ன செய்வது…?

தன் உணர்வின் எண்ணத்தால் தான் எடுக்கும் ஜெபத்தால் தான் மட்டும் சக்தி பெறுவதோடு அல்லாமல் தன் உணர்வின் எண்ணத்தைப் பாய்ச்சி தான் வணங்கும் தன் முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களையும் உயர் நிலைப்படுத்திட முடியும்.

எவ்வுடலில் இருந்து உடல் பெற்று வழி வந்துள்ளோமோ அவ்வுடலின் முன்னோர்களையும் தம் ஈர்ப்பு ஜெபத்தால் நாம் வணங்கி நாம் செல்லும் சப்தரிஷி மண்டலக் கூட்டுடன் சுழல விட்டுக் கொள்ள முடியும்.

ஏனென்றால் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளுக்குத் தன் உணர்வினால் மனம் சுவை இவைகளைத்தான் எடுக்க முடியும். ஞானத்தை வளர்த்துக் கொள்ள உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களால் முடியாது.

அவர்களின் நிலை சிதறாமலும் மாறுபடாமலும் இருக்க உடலுடன் கூடிய ஜீவ பிம்ப உடல் மனிதனால்தான்
1.தன் எண்ண உணர்வில் அவர்களை நினைத்து வணங்கினால்
2.அவர்களின் உயிராத்மா வேறு ஈர்ப்பலைக்குச் செல்லாமல்
3.நாம் பாய்ச்சும் ஞானிகளின் எண்ண உணர்வு ஈர்ப்புக்குள் அவர்களின் நிலையும் சுழன்று கொண்டிருக்கும்.

ஏனென்றால் இன்று விஞ்ஞானத்தால் பூமியினுள் உள்ள நுண்ணிய காந்த அலையையும் காற்றில் கலந்துள்ள இவ்வலையையும் ஈர்த்தெடுத்து “எலெக்ட்ரானிக் காந்த மின் அலை ஈர்ப்புச் செயல் காண்பதினால்…”
1.மிகச் சக்தி வாய்ந்த உடலை விட்ட உயிராத்மாக்களுக்குக் கூட
2.ஈர்ப்புச் சிதறல் நிலை இன்றுள்ளது… உயர் நிலை பெறத் தடையாகி விட்டது.

இன்று விஞ்ஞானத்தில் இவ்வலையைப் பிரித்தெடுத்து பல செயல்களைச் செயற்கைக்கு உணர்த்துகின்றான்.

ஆனால் அதே காந்த நுண்ணிய மின் அலை ஈர்ப்பை ஈர்த்துத்தான் ஜீவன் கொள்கின்றது ஒவ்வொரு ஜீவனும். மனிதனின் உடல் பிம்பச் செயலே இக்காந்த நுண்ணிய மின் அலை ஓட்டம் தான்.

விஞ்ஞானத்தில் உலோகத்தின் இம்மின் அலை ஈர்ப்பைக் கொண்டு பல மண்டலங்களுக்கும் பல சாதனங்களைச் செலுத்தி உணர்ந்து வருகின்றான்.

1.இஜ்ஜீவ பிம்ப உடலிலேயே…
2.இவ்வுலகம் மட்டுமல்ல எவ்வுலகையும் சென்று காண வல்ல
3.அமிலப் படைப்பு ஈர்ப்பு காந்த மின் அலைகள் உண்டு.

இக்காந்த மின் அலையை எவ்வெண்ணத்தில் எவ்வுணர்வைக் கொண்டு பாய்ச்சுகின்றோமோ அதன் நிலையை நாம் அறிய முடியும். இவ்வுடலில் எல்லா உணர்வலையையும் ஈர்க்க வல்ல சக்தியுண்டு.

இதனை உணர்த்தத்தான் ஒவொரு கால கட்டத்திலும் கதை வடிவில் இராமனையும் கிருஷ்ணனையும் படைத்தான் அன்றைய ஞானி.

நற்குணங்களின் உருவமாய் இராமனின் கதையைப் படைத்தான். உலகமே இம்மனித பிம்ப ஈர்ப்பில் காண முடியும் என்பதனை உணர்த்த கிருஷ்ணனைப் படைத்துக் காட்டினான்.

கிருஷ்ணன் வாயைத் திறந்தால்… அண்ட சராசரங்களையும் கண்டதாகக் கதை உருக்காட்டினான் அன்றைய ஞானி.

இக்காற்றில் தான் பூமி ஈர்த்து வெளிக்கக்கும் அனைத்துச் சக்திகளும் உண்டு.
1.உணர்வுடன் உருவமுடன் உள்ள நாம்
2.இவ்வெண்ணச் சுவாசத்தால் இராமனின் குண அமிலத்தை ஈர்த்துக்
3.கிருஷ்ணனின் வாயில் கண்ட அண்ட சராசரங்களையும் காண முடியும்.

மனித பிம்ப உணர்வு எண்ணச் சுவாசத்தால் காந்த மின் நுண்ணிய அலை ஈர்ப்பை எச்செயலில் செலுத்தி நம் உணர்வு எண்ணச் சுவாசம் செல்கிறதோ அதன் செயலை நாம் செயலாக்க முடியும்.

நம்மைக் காட்டிலும் மிகச் சக்தி வாய்ந்த நம்மையே படைக்க வழி தந்த சப்தரிஷிகளின் தொடரில் இவ்வெண்ண உணர்வு சுவாச ஈர்ப்பிற்குச் செயலாக்க முடியும்.

1.முதலில் இராமனைப் போன்ற குணமாகுங்கள்
2.பிறகு கிருஷ்ணனின் காந்த நுண்ணிய மின் அலை உருவாகுங்கள்.

July 26, 2021

தியானத்தின் மூலம் பலனைப் பெற்றால் தான் யாம் கொடுக்கும் சக்தியை நீங்கள் உணர முடியும்

 

கேள்வி:
ஈஸ்வரபட்டர் உங்களுக்கு எல்லாச் சக்திகளும் கொடுத்தார்... நீங்கள் அதை எல்லாம் பெற்றீர்கள். ஆனால் எங்களுக்கு நீங்கள் ஒன்றும் கொடுக்கவில்லையே... உபதேசமாகத் தான் சொல்லிக் கொண்டே போகிறீர்கள்...!

யாருக்காவது நீங்கள் கொடுத்து அதைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நாங்களும் ஆர்வமாகச் செய்வோம். இது எங்களுக்குச் சந்தேகமாகவும் ஒரு யோசனையாகவும் இருக்கிறது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் சாமி.

ஞானகுருவின் பதில்:
நீங்கள் சாப்பாடு போடுகிறீர்கள். “நன்றாகத்தான் இருக்கின்றது...” என்று நான் சொல்லிவிட்டால் மட்டும் போறுமா...?

நல்ல சுவையான சாப்பாடை நான் சாப்பிட்டால்தான் எனக்கு நல்லது. ஆகையினால் போடும் சாப்பாட்டைச் சரியான முறையில் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் அந்த ருசியின் தன்மை தெரியும்

1.இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு “நன்றாகத் தான் இருந்தது” என்று சொல்கிறார்.
2.எப்படி இருந்தது...? என்று கேட்கும் போது நன்றாக இருந்தது... நன்றாக இருந்தது... என்றே சொன்னால்
3.அது எப்படி நன்றாக இருந்தது...? என்று திரும்பவும் கேட்டால் சொல்லத் தெரியாமல் இருக்கின்றோம்...!

உதாரணமாக... உடலில் ஒரு இடத்தில் புண்ணாகி விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அது நம்மை வேதனைப்படுத்தினாலும் மருந்தைப் போட்டு குணப்படுத்த விரும்புகின்றோம்.

ஆனால் அப்போதும் சிறிது வேதனை இருக்கிறது. ஆற வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தால் புண்ணுக்கு அந்த மருந்தை போட்டுக் கொள்கிறோம்.

ஆனால் மருந்தைப் போட்டுக் கடுகடுப்பாகி விட்டால் என்ன...! இப்படி ஆகி விட்டதே...? என்று மருந்தைத் தூக்கி எறிந்து விட்டால் புண் ஆறுமா...?

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிலையில் நமக்குள் எத்தனையோ விதமான வேதனைகளைத் தோற்றுவிக்கும்.
1.எத்தனை விதமான வேதனைகளைத் தோற்றுவித்தாலும்
2.அதை மாற்றியமைத்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை நாம் அடிக்கடி நுகர்தல் வேண்டும்.

அப்பொழுது அந்த வேதனையைப் போக்கும் சக்தி கிடைக்கின்றது

1.இப்பொழுது என்ன தான் நான் (ஞானகுரு) உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுத்தாலும்
2.நீங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில்தான் அது இருக்கின்றது.

உங்களுக்குத் தெரியாமலே எவ்வளவோ மிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கிறேன். ஆனால் உங்களுக்கு அது தெரியாது.

ஆனால் அது எப்படி இருக்கிறது...? என்று உங்களிடம் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்...? “ஜீபூம்பா...” வேலையெல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

அப்படி நடந்ததுதான் முந்திய கால நிலைகள்.
1.எனக்கே சக்தி இருக்கின்றது...
2.சாமி தயவு என்ன வேண்டிக்கிடக்கிறது...? என்று
3.பிய்த்துக் கொண்டு போனவர்கள் தான் பெரும்பகுதியான நிலைகள்.

குருநாதர் மூலம் பெற்ற அரும் பெரும் சக்திகளை எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த அற்புதமான நிலைகளைத் தெரிந்து கொண்டால் “உலகத்திற்கு எவ்வளவோ நன்மை பயக்கும்...” என்றும் நினைத்தேன்.

கடைசியில் எல்லோருக்கும் அது ஆசையைத் தூண்டி விடும் நிலையில் தான் முடிந்துவிட்டது. ஆக மொத்தம்
1.ஒருவருக்கு புரியக் கூடிய சக்தியைக் கொடுத்தாலும்
2.அடுத்தவர்கள் புரிந்து விடக் கூடாது என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
3.எல்லாம் தெரிந்த பின் அவர்கள் குருவாகவே மாறிவிட்டார்கள்.

நான் கொடுப்பதை விட நீங்கள் எந்த அளவுக்கு அந்தச் சக்திகளை எடுக்கின்றீர்களோ... குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிக்கின்றீர்களோ... அதை மற்றவர்களுக்கு அப்படியே பெறச் செய்கிறீர்களோ… அதிலே நீங்கள் இந்தச் சக்திகளைக் காண முடியும்.

வியாழனின் ஞானரிஷியின் செயல் என்ன…? ஈஸ்வரபட்டர்

 

ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்கின்றது. வளர்ப்பின் படர்… பலவாகிப் பலவின் பல வளர்ந்தே உருவாகி… உருவாகி… உருண்டோடும் உரு குண வளர்ப்புச் செயலில்… தொடர் கொண்ட நிலையில் வளர்வது தான் அனைத்துமே.

ஒன்றிலிருந்து ஒன்று பிறந்து ஒவ்வொன்றாக வளரும் வளர்ச்சி கதியில் உருவாகி… உணர்வாகி… செயலாகி… செயலில் வழி பெறுவது பல.

1.இயற்கையின் உண்மை உணர்வில் உருண்டோடும் சக்திகள் எல்லாமே “அவன் படைப்பென்றாலும்”
2.அவன் படைப்பிலிருந்து நல் ஒளி படைப்புப் பெறுவது தான் “இறை ஞானம்..” என்பது.

பலவாக உள்ள இந்த உலகில் இயற்கைப் படைப்பில் மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் மனித ஞானத்தை உயர்வாகச் செயலாக்கும் சக்தி உருவாகியுள்ளது.

1.இறை ஞானத்தின் சக்தியை உணர்ந்து வழி ஞானம் பெறவல்ல ஆற்றல் மனித குண ஞானத்திற்குத் தான் உண்டு.
2.உயர்த்துபவன்… உயர்ந்தவன்…! என்ற வமிசக் கோட்பாட்டை அறியும் ஞானம் மனிதனுக்குண்டு.

மனிதன் வாழ மற்ற இயற்கையும் துணை கொள்கின்றது. தீயது என்ற நிலை உள்ளதினால் தான் நல்லதைப் பிரித்துக் காண முடிகின்றது. நற்சக்தியின் செயலிலே சகல வளர்ப்பும் இருந்ததென்றால் ஞானத்தின் வளர்ப்பு நிலை பெறுவது எப்படி…?

1.சக்தியின் ஸ்வரூபத்தில் சகலமும் உண்டு.
2.சகலமும் இருந்தால் தான்… சகலத்திலும் இருந்து “உயர் உணர்வு எது…?” என்று செயல் கொள்ள முடியும்.

உயர் நிலை உணர்ந்து… உயர் ஞான இறை சக்தி அடைய… ஞானத்தை உணர்ந்து செயல் கொள்ளக்கூடிய நிலை “மனித உரு வளர்ச்சி கொண்ட வழித் தொடரில் தான் உண்டு…!” என்பதை உணர்ந்து இந்தப் பூமியில் மனித இன வளர்ச்சியை ஊக்குவித்தனர் சப்த ரிஷிகள்.

குருவாக இன்று நாம் சொல்லும் “வியாழனின் ஞான ரிஷி” தான் வியாழனின் மனிதக் கரு உரு நிலையிலிருந்து மனிதனின் அமில குண வளர்ச்சி சக்தியை அம்மண்டலத்தில் மனித இனங்கள் வாழ முடியாத வளர்ப்பு நிலை கொண்ட மண்டலமாக வியாழன் மாறும் தருவாயில் இங்கே பூமியில் மனிதக் கரு வளரக் காரணமானவர்.

அதாவது அந்தச் சூட்சம ஞானச் செயல்… மனித இனத்தின் சுழற்சி வட்டம் சப்தரிஷியினால் ஈர்த்தெடுக்கப்பட்டு மீண்டும் மனிதக் கரு உருவாகவும்… மண்டலமாக நம் பூமியின் சக்தி அலையை வளர்க்கவும் செய்து… இப்பூமியின் ஈர்ப்பிற்கு மனித இனக் கருவை வளர்க்க விட்டனர் அன்று சப்தரிஷிகள்.

1.இன வளர்ச்சியில் ஞானத்தை உணர்ந்த அவர்கள் செயல்
2.அந்தந்தக் கால நிலைக்கொப்ப அவர்கள் பதித்த வளர்ச்சியிலிருந்தே
3.தன் வளர்ச்சிக்குப் பலம் கூட்ட தன் வளர்ப்பில் பயிராக்கிய பயிரிலிருந்து
4.மீண்டும் பயிராக்க “விதையைத்தான்” இன்று அவர்கள் சேமிக்கின்றார்கள்.

சப்தரிஷி உருவான அமிலக் கூட்டு இன நிலைக்கொப்ப தன் குண உணவையே தான் எடுத்து தான் வளர்ந்து இவ்வின வளர்ச்சி மங்கா நிலைக்காகத்தான் “சப்தரிஷிகளின் செயல்” இன்றுள்ளது.

இறைவனின் படைப்புத்தான் ஒவ்வொன்றும். படைப்பின் படைப்பெல்லாம் அவனே தான். அவனின் படைப்பில் இறை ஞானம் பெறும் மனித ஞானம் கொள்வது தான் படைக்கப்பட்டவன் படைப்பின் பொருள் காணும் நிலை.

நாம் நம் வாழ்க்கையில் சாதாரண நிலையில் உணர்ந்து வாழ்ந்து ஜீவன் பிரிந்து செல்லும் நிலையில் உள்ள நிலையை அந்தந்தக் காலங்களில் சப்தரிஷிகள் பல உடல்களை ஏற்று பல ஞானிகளை உருவாக்கிச் சென்றார்கள்.

ஆனால் இன்று வளர்ந்து பெருகியுள்ள மனிதனின் குண வழித் தொடர் யாவையுமே விஞ்ஞானம் என்ற உடல் பிம்ப சுகம் காணும் செயல் ஞானமாக வளர்ந்து வேரூன்றி கிளை விட்டுப் படர்ந்து விட்டது.

1.இதனை மாற்றியமைத்து
2.உயர் ஞானமான ஆத்ம ஞானத்தை வளர்த்து
3.இறை ஞானம் என்ற மனித அமில குண சக்தி ஈர்ப்பு வளர்ச்சி தரும் சப்தரிஷியின் ஞானமுடன்
4.நம் உணர்வின் செயல் இன்றுள்ள கால கட்டத்தில் செல்ல வேண்டிய குறுகிய காலமிது…!

July 25, 2021

வாழ்க்கையில் புயல் போன்று வரும் தீமைகளிலிருந்து மீளும் வழி

 

நாம் ஒரு கட்டிடத்தைக் கட்டுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். கட்டும் போது அங்கங்கே முட்டுகள் (பொய்க்கால்) கொடுத்துத்தான் கட்டுகின்றோம்.

கட்டிடம் வலுவாக நின்ற பின் சிமெண்ட் நன்றாகக் காய்ந்துவிட்டதா என்ற பதத்தைப் பார்த்த பின் அந்த முட்டுகளை எடுக்கின்றோம். அப்புறம் முட்டு இல்லாமல் கட்டிடம் தன்னாலே நிற்கின்றது.

ஆகவே முட்டு இல்லாமல் எந்தக் கட்டிடமும் கட்ட முடியாது.

ஆனால் கட்டிடம் சரியாகக் காய்வதற்கு முன்னனாடியே முட்டைத் தட்டி விட்டோம் என்றால் என்ன செய்யும்? கீழே விழுந்துவிடும்.

சிமெண்ட் பாலை ஊற்றிக் கட்டிடத்தைக் கட்டிவிட்டு அடுத்தாற்போல் உடனே அந்த முட்டுகளைத் தட்டிவிட்டோம் என்றால் நம்மைத் தான் போட்டு அமுக்கும்.

இந்த மாதிரித் தான் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு அணையாக‌ இருக்கக்கூடிய நல்ல உணர்வுகளைக் கழற்றி விட்டு விடக்கூடாது.

இப்போது மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்கிறோம் என்று சொன்னால்
1.யாம் வலுவாகக் கொடுக்கும் அந்த முட்டுகளை (உபதேச உணர்வுகளை)
2.அந்த ஞானிகளின் அருள் சக்திகளைத் தட்டிவிடக் கூடாது.

நான் எல்லாச் சக்திகளையும் பெற்றுவிட்டேன் என்கிற வகையில் கொடுக்கும் ஞானிகளின் உணர்வைக் கழற்றி விட்டு விட்டு எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்வேன் என்று சொன்னால் என்ன ஆகும்?

இப்படிக் கொஞ்ச பேர் இருக்கின்றனர்.

தீமைகளிலிருந்தோ அல்லது துன்பங்களிலிருந்தோ விடுபட மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்
1.அதிலிருந்து (உடனடியாக) “தப்ப முடியவில்லையே…” என்ற வேகத்தில்
2.எடுத்துக் கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தட்டிவிட்டு விடுகின்றார்கள்.

ஏனென்றால் இதையெல்லாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து நான் சொல்கின்றேன். குருநாதர் அனுபவத்தின் மூலமாகத் தான் பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறச் செய்தார்,

மனிதருடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் பாச அலைகள் துன்ப அலைகள் மற்ற உணர்வுகள் எப்படித் தாக்குகின்றது…? இதிலிருந்து எப்படி மீள வேண்டும் என்று குருநாதர் உணர்த்தினார்.

உதாரணமாகப் பெண் குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் திருமணம் நடக்கவில்லை.. சிறிது கால தாமதம் ஆகிறது என்றால் எப்படி எண்ண வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குழந்தை உடல் முழுவதும் படர்ந்து
1.குழந்தையின் எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டும்
2.எந்தக் குடும்பத்திற்குப் போனாலும் நன்றாக வாழ வேண்டும்
3.நல்ல மாப்பிள்ளையாக வர வேண்டும். நல்ல வரனாக வர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

“இந்த மாதிரிச் செய்யுங்கள்…!” என்று சொன்னால் எங்கள் பிள்ளைக்கு இப்படி நினைக்காமல் வேறு எப்படிங்கெ நினைப்போம்…! என்று எனக்கே திருப்பிச் சொல்கிறார்கள்.

நாங்கள் இப்படித்தான் நினைக்கின்றோம்…! ஆனால் எங்கெங்க மாப்பிள்ளை வருகின்றது…? என்று திருப்பி இதே ராகத்திலேயே சொல்லிக் கொண்டு போகிறார்கள்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். பாலில் சிறிதளவு நஞ்சை ஊற்றினால் எப்படி இருக்கும்..? அந்த விஷமான உணர்வு தான் அங்கே இயக்கும்.

இதைப் போல தான் மனிதனுடைய வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் மீளாத் துயரத்தில் சுழன்று கொண்டு இருக்கின்றோம்.

எவ்வளவோ உயர்ந்த சரக்குகள் இருந்தாலும் அதில் நஞ்சினை கலந்தால் அந்த நஞ்சின் செயலாக்கம் எவ்வாறு இருக்குமோ அதைப்போல
1.உயர்ந்த குணங்கள் கொண்டோர் அனைவரும்
2.எத்தனையோ புயல்களிலேயும் அலைகளிலேயும் வாழ்க்கையில் இன்னல்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

ஒரு புயல் அடித்தால் என்ன நடக்கின்றது? எல்லாவற்றையும் அழித்துச் செல்லுகின்றது. புயல் ஓய்ந்த பின் பார்த்தோம் என்றால் இயல்பாக இருக்கும் அனைத்தும் காணாமல் போய்விடுகிறது.

இதைப் போல மனிதனின் உடலில் இப்படி பெரும் புயல் வீச ஆரம்பித்தால் “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் அனைத்தும் இருள் சூழச் செய்து தற்கொலைக்கே அழைத்துச் செல்லுகின்றது.

நாம் ஆசையுடன் தான் வாழ்கின்றோம். ஆனால் வாழ்க்கையில் சந்தர்ப்பபேதத்தால் வரும் இன்னல்களுக்குள் புயலில் சிக்கியது போன்று ஆகிவிட்டால் என்னென்ன ஆசைகள் இருந்ததோ அனைத்தும் நொறுங்கி விடுகின்றது. ஆகவே
1.புயலைப் போன்று வரும் இன்னல்களை
2.தீமையாக இயக்கும் கடுமையான அலைகளை
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் பிளந்து
4.நம் பயணத்தின் பாதையை அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்துவோம்
5.அருள் ஞானிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்தை நம் எல்லையாக வகுப்போம்.

July 24, 2021

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போருக்கு உடலுக்குப் பின் எங்கே போகிறோம் என்று தெரியும்... அடுத்தவருக்கும் உணர்த்தும்

 

இந்த உலகம் முழுவதற்குமே விஷத் தன்மை பரவிக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து நாம் ஒவ்வொருவருமே மீள வேண்டும்.

சாக்கடைக்குள்
1.எப்படிப் பன்றி நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்ததோ
2.இதைப் போல் அதன் உணர்வை நுகர்ந்து மனிதனானதோ
3.மனிதனாக ஆன பின் இருளை வென்று உணர்வின் தன்மை ஒளியாக ஆனானோ
4.அதன் உணர்வை (துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம்) உங்களைப் பெறச் செய்கின்றோம்.

அதை உங்களைப் பெறச் செய்து அந்த உணர்வினை வலுவாக்கச் செய்கின்றோம். அந்த வலுக் கொண்ட பின் வராகன் எப்படி நாற்றத்தைப் பிளந்ததோ காற்று மண்டல விஷத் தன்மையைப் பிரித்து உடலுக்குப் பின் நீங்கள் அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலம் சென்றடைய முடியும்.

இந்த உடலிலே ஒவ்வொரு நிமிடமும் அதைப் பெற்றால்
1.அந்தக் கடைசிக் காலத் தன்மைகள் உங்களுக்குத் தெரியும்
2.அந்தத் தெரிந்த நிலைகள் கொண்டு எங்கே போகிறோம்...? என்ற நிலையும் தெரியும்.
3.வெளியிலே சென்ற பின் இந்த உணர்வுகள் எங்கே பதிவாகி இருக்கிறதோ அந்த விண் சென்ற நினைவை நிச்சயம் ஊட்டும்.

நாம் போன பிற்பாடு இது யாருக்குத் தெரியும்... இங்கே எவருக்குத் தெரியும் என்ற வகையில் சிலர் நினைக்கலாம்...!

இதெல்லாம் அந்த உணர்வின் இயக்கங்களை அறியும் பருவம் உண்டு. நான் (ஞானகுரு) எல்லாவற்றையும் அறிந்து கொண்டு தான் இருக்கின்றேன். நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

ஆக நாம் நினைவைக் கூட்டினால் தானே...!

வசிஷ்டர் - நாம் எதைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு எண்ணுகின்றோமோ நமக்குள் அது பிரம்மமாகின்றது. நம் எண்ணங்கள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்றும் ஒவ்வொரு நொடியும் விரும்பினால் அது வசிஷ்டர்.

அந்த உணர்வின் சக்தியை நமக்குள் பெறப்படும் போது அது பிரம்மமாகின்றது. பிரம்மகுருவின் மனைவி யார்...? அருந்ததி. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம்முடன் இணையச் செய்யப்படும் போது தீமைகளை அகற்றும் சக்தியைப் பெறுகின்றோம்.

1.இந்த மனித வாழ்க்கையில் எத்தனை சங்கடங்கள் வந்தாலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்தீர்கள் என்றால் அது மறக்கும்
3.தீமைகள் சிறுக்கும்... சிந்தனைகள் வலுப் பெறும்... சிந்தித்துச் செயல்படும் தன்மை வரும்.

வராகன் எப்படித் தீமையை நீக்கியதோ அதே போல் ஒவ்வொரு சமயத்திலும் உங்களுக்குக் கொடுக்கும் சக்தியை நீங்கள் சீரான நிலைகளில் பயன்படுத்தினால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்க முடியும். நஞ்சை நீக்க முடியும்.

இதை எல்லாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையே தியானமாக்கச் சொல்வதற்கு இதற்குத் தான்...!

எல்லாவற்றையும் படைத்த இறைவன் அவனை வணங்குவதற்குத் தான் அதைப் படைத்தானா…! - ஈஸ்வரபட்டர்

 

புல்லைப் படைத்தான்… பூண்டைப் படைத்தான்… செடி கல் மண் நீர் அனைத்தையும் படைத்தான்… சகல ஜீவராசிகளையும் படைத்தான்… மனிதனையும் படைத்தான்…! இறைவன் படைப்புத் தான் எல்லாமே…!

1.மனிதனைப் படைத்த இறைவன்
2.மற்ற எல்லா நிலைகளைக் காட்டிலும் “மனிதனை” உயர் ஞானத்துடன் படைத்துள்ளான்
3.ஆனால் அவற்றை எல்லாம் படைத்த இறைவன் நம்மையும் படைத்து… அவ்விறைவனையும் வணங்கச் செய்கின்றானா..?

இயற்கையின் படைப்பில் படைப்புகள் அனைத்தும் அவன் படைப்பென்றால்
1.அவன் படைப்பில் “தீமைகளை எதற்குப் படைக்கின்றான்…?”
2.நல்லுணர்வையை படைத்து நற்சக்தியின் செயலையே அவன் பெற்றிருக்கலாம் அல்லவா…!

படைப்பில் ஏன் இறைவனுக்கு ஓரவஞ்சனைகள்…? நீங்கள் வணங்கும் ஆண்டவனுக்கு ஏன் படைப்பில் இப்படி மாற்றம்..?

தீயோனையும் நல்லவனாக்கலாம். தீய படைப்புகள் அனைத்துமே படைக்கப்படுவதற்கு முதலிலேயே நல்ல படைப்புகளாகப் படைத்திருக்கலாம் அல்லவா…!

1.கொடூர குணம் படைத்தவனும் நயவஞ்சகனும் இறைவனை வணங்கினால் இருள் நீங்கும்…!
2.இறைவன் ஒருவன் தான் அவர்களை மாற்ற முடியும்…! என்று
3.இறைவன் படைப்பையே… இறைவனிடம் வேண்டச் சொல்கிறான்
4.அப்படி என்றால் இறைவன் படைப்பில் “இனியவன்” என்பவன் யார்…?

ஆக… இறைவன் என்பவன் யார்…? அவன் எங்குள்ளான்…?

மனிதன் பிறப்பெடுத்து வாழும் காலத்திலேயே தன் பிறப்பை உயர்வாக உணர்ந்து தெய்வத்தின் படைப்பிலேயே உயர்ந்து நிற்கும் மனிதனுக்கு
1.எந்த இறைவனால் பலவும் படைக்கப்பட்டன என்று உணர்கின்றானோ
2.அவற்றின் துணை இல்லாவிட்டால் இவனால் வாழ முடியுமா..?

இயற்கையில் கலந்துள்ள தாவர இனங்களிலிருந்துதான் உணவை எடுக்கின்றான். நீரும் காற்றும் நிலமும் இவனை வளர்க்கிறது. இவன் உணர்வில் “தீயது” என்று உணர்த்தப்பட்ட ஒவ்வொன்றிலும் இருந்துதான் “நன்மை எது…?” என்று இவன் (மனிதன்) உணர்ந்து வாழ முடிகிறது.

1.படைக்கப்பட்ட இறைவனுக்கு எது சொந்தம்…?
2.அவன் படைப்பில் உருவான உரு அனைத்துமே “இப்படி இப்படித்தான் வளர வேண்டும்…” என்ற அவன் படைத்தானா…?
3.இறைவன் படைப்பு என்பது யாது…? உருவானது எந்நிலை கொண்டது…?
4.படைப்பில் பலவும் உள்ள பொழுது இறை ஞானம் என்று உயர்ந்து காண்பது எது…?
5.இன்றைய இவ்வுலகின் உண்மை நிலை என்ன…?
6.உலகை உருவாக்கி உருளச் செய்த உணர்வு உண்மை நிலை என்ன…?
7.இயற்கையின் படைப்புத்தான் எல்லாமே…! என்றாலும் படைப்பின் உரு நிலை எப்படிக் கொள்கிறது…?
8.இறை ஞானத்தின் உண்மையை உணர முடியுமா…?
9.உணர்ந்தோர் சொல்லும் நிலை உண்மைதானா…? என்ற எண்ணமும் எழலாம்.

மின்சாரத்தினால் நீங்கள் உபயோகிக்கும் சாதன முறைகளுக்கு எப்படி அந்த மின் விசை எந்தெந்த நிலையில் பாய்ச்சப்பட்டு அதற்குகந்த சக்தி வெளிப்படும் தன்மையில் மின் விசிறியும் மின் இயந்திர இழுவை நிலையும் ஒளி விளக்குகளும் செயல்படுகின்றனவோ அதைப் போன்று
1.ஒவ்வொரு மனிதனும் தன் உணர்வின் எண்ண ஞானத்தை
2.எச்சக்தி அலையின் ஈர்ப்பில் பதிய விடுகின்றானோ
3.அதற்குகந்த சாதனை செயல் ருப வழியில் தான் மனிதன் இன்றுள்ளான்.

இது தான் உண்மை…! இறைவன் தனியாக யாருக்கு என்றும் எதுவும் கொடுக்கவில்லை.

July 23, 2021

பழனி மலை முருகனிடம் என்ன கேட்க வேண்டும்...? என்று சொன்னார் குருநாதர்

 

நான் (ஞானகுரு) வேலையை விட்டு நின்று... சரியான சாப்பாடு இல்லாது... நண்பர்களும் மற்றவர்களும் கேவலமாகப் பேசி மனம் மிகவும் சோர்ந்த நிலையில் படுத்திருக்கின்றேன். அந்த நேரத்தில் என்னை ஒரு உணர்வு இழுத்து பழனி மலைக்கு மீதாவது போய்ப் பார்க்கலாம் என்று இயக்குகிறது.

அங்கே போகத் தொடங்கியதும் குருநாதர் இங்கிருந்து குறுக்காட்டுகிறார்.

1.டேய்....... பணம் வேண்டும்... செல்வம் வேண்டும்... செல்வாக்கு வேண்டும்... சொல்வாக்கு வேண்டும்...
2.இந்த மூன்றும் வேண்டும்...! அது இல்லை என்றால் பிழைக்க முடியாது.
3.போகிறாய் அல்லவா... அவனிடம் கேளுடா...! என்று சப்தமிடுகிறார்.

யாரிடம்..?

இந்தப் பக்தியில் (ஆரம்பத்தில்) நான் இருப்பதால் “முருகனிடம் கேளுடா...!” என்கிறார் குருநாதர்.

ஏற்கனவே குரு பல உண்மைகளை எனக்கு உணர்த்தியிருக்கின்றார். உலகத்தில் இருக்கும் மந்திரவாதிககள் செயல்களிலிருந்து... மற்ற உலக நடப்புகள் அனைத்தையும் சொன்ன பிற்பாடு “நீ முருகனிடம் சென்று பணத்தைக் கேள்...” என்று சொன்னால் எப்படி இருக்கும்...!

அங்கே பசியுடன் தான் மேலே போகிறேன். ஒன்றுமே புரியவில்லை. என்ன செய்கிறோம் ஏது பண்ணுகிறோம் என்று தெரியாதபடி படி மேல் கிடு... கிடு... என்று ஏறிப் போகின்றேன்.

உள்ளே முருகன் சிலை இருக்கும் சந்நிதிக்கே சென்றுவிட்டேன். முன்னேப் பின்னே முருகனை நேரடியாகப் பார்த்ததில்லை. “சிரித்த முகமாக முருகனே வருகிறார்...!”

இதைத் தான் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது குருநாதர்.. முருகன் வந்ததும் கேளுடா என்று... இந்த நினைவு வருகிறது. சிலையிலிருந்து அப்படியே முருகன் வருகிறது.

அந்த நேரத்தில் அங்கே கூட்டமும் இல்லை. யாரோ கொடுத்த மாலையை என் கழுத்தில் கொண்டு வந்து போடுகிறார்கள். ஏனென்றால் அங்கே தெரிந்தவர்கள் இருப்பதால் நான் டிக்கெட்டும் எடுக்கவில்லை உள்ளேயே போய்விட்டேன்.

மொத்தம் அங்கே இரண்டே பேர் தான் இருக்கிறோம். மாலை எனக்கு விழுகிறது. முருகன் சிரித்துக் கொண்டே வருகிறார்.

பார்த்ததும் குருநாதர் சொன்ன ஆசையெல்லாம் விட்டுவிட்டது. அங்கே முருகனிடம் என்ன கேட்கிறேன்...?

1.முருகனே காட்சி கொடுத்துவிட்டான் இனி நமக்கு வேறு என்ன வேண்டும்...?
2.எல்லாம் அவனே பார்த்துக் கொள்கிறான்...! என்ற இந்த எண்ணம் தான் வந்தது.

குருநாதர் இதற்கு முன்னாடி காட்டிய நிலை எல்லாம் இருக்கிறது அல்லவா. இவ்வளவு பெரிய சக்தி நமக்குக் கிடைக்கிறது என்று சொன்னால் முதலில் “நம் புத்தி சரியாக இருக்க வேண்டும்...”

கோபம் வந்து ஏதாவது செய்து விட்டால்... இவ்வளவு பெரிய சக்தியைத் தவறாகப் பயன்படுத்தினால் என்னென்ன கேடுகள் வரும் என்று குருநாதர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஒரு கையைக் நீட்டினால்
1.வேருடன் மரம் கீழே சாய்கிறது
2.காக்காயைக் காட்டினால் காகத்தின் இறக்கை பிய்ந்து விழுகிறது.
3.பாம்பைக் காட்டினால் பாம்பு அப்படியே ஒடுங்குகிறது
4.மாட்டைக் காட்டினால் அது செயலற்றதாகிறது
5.மனிதனைக் காட்டும் போது கை கால் நின்று போகிறது
6.ரோட்டில் போகிறவனைக் கை கால் வராது ஆக்குகிறது

இத்தனையும் செய்து காட்டியவுடன் இந்தப் பவர்கள் இருப்பதால் நீ எவருக்கும் பயப்பட வேண்டியதில்லை... என்று சொல்லி குருநாதர் என்னென்னமோ காட்டுகிறார். இதை எல்லாம் சொல்லிச் செய்து பார்க்கவும் சொல்கிறார்... முதலில்...!

அந்தச் சக்தி எல்லாம் வந்தவுடன் திமிரும் கூட ஏறுகிறது.

முருகனை இதற்கு முன்னாடிப் பார்த்ததில்லை அல்லவா...! முருகனின் காட்சி கிடைத்தவுடன் இந்த எண்ணம் எல்லாம் ஓடுகிறது.

மேலே சொன்ன சக்தியெல்லாம் அடுத்தவர் மீது பாய்ச்சிச் செயல்படுத்தினால் அவர்கள் வேதனைப்படுவார்கள். அவர்களின் வேதனை எல்லாம் உன்னிடம் வந்து சேரும்....
1.கடைசியில் ஒட்டு மொத்தமாக எல்லா வேதனையும் நீ அனுபவிக்க வேண்டும் என்று குருநாதர் சொல்கிறார்.
2.இவ்வளவு தெரிந்த பிற்பாடு இது நமக்கு எதற்கு...?

இது எல்லாம் உன்னைக் காப்பாற்றுவதற்கு உதவும் என்று சொல்லிக் கொடுத்துவிட்டு இதையும் சொல்லி எச்சரிக்கை செய்கிறார் குருநாதர்.

ஆரம்பத்தில் நாயெல்லாம் என்னைக் கடிக்க வரும். அந்த நேரத்தில் குருநாதர் சொன்னபடி விரலை நீட்டினால் வாயைக் கட்ட முடிகிறது.

இந்த உணர்வின் தன்மையை எண்ணும் போது அந்த நாய் எவ்வளவு வேதனைப்படுகிறதோ உன்னை எண்ணியே தான் அது வேதனைப்படும். கடைசியில் அது எதையும் சாப்பிட முடியாதபடி ஆனது போல் நீயும் சோறு சாப்பிட முடியாமல் நீயும் வேதனைப்படுவாய். இதையும் குருநாதர் காட்டி இருக்கின்றார்.

அப்புறம் நமக்கு எப்படி அது மேல் ஆசை வரும்...? சாட்சாத் முருகனே சிலையிலிருந்து எழுந்து வருகிறார் என்றால் எனக்கு எப்படி இருக்கும்...?

நான் என்ன செய்தேன்...!

செல்வம் செல்வாக்கு சொல்வாக்கு வேண்டும் என்று கேட்பதை விட்டுவிட்டேன்.
1.நான் நல்லவனாக இருக்க வேண்டும்
2.நான் பார்ப்பது எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்
3.என்னை அறியாது ஏதாவது தீங்கான செயல் வந்தது என்றால்
4.அது வராது தடுக்க வேண்டும்... எனக்கு ஒன்றுமே தெரியாது.
5.நான் யாருக்காவது கெட்டதைச் சொல்லி விட்டேன் என்றால் அவர்களிடமிருந்து கெட்டது தான் போக வேண்டுமே தவிர
6.“என்னால் அவர்களுக்குக் கெட்டது ஆகிவிடக் கூடாது...!” என்று இதைக் கேட்டேன்.

அங்கிருந்து கீழே வந்த பின் பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் காத்துக் கொண்டிருக்கின்றார் குருநாதர். என் குடுமியைப் பிடித்தார். வாயில் வராத பேச்சுக்களைப் பேசினார். வார்த்தைகள் இன்னது தான் என்று இல்லாத அளவுக்குப் பேசுகின்றார். அடி... அடி... என்று அடிக்கின்றார். சட்டை எல்லாம் கிழித்து விட்டார்.

அங்கிருந்து சந்தோசமாகக் கீழே இறங்கி வந்தேன், அங்கே என்னென்னமோ காட்சி கிடைத்தது. இங்கே வந்தால் உதை விழுகிறது. குருநாதர் முகத்தையும் பல்லையும் கண்களையும் பார்த்தால் பயங்கரமாக இருக்கின்றார்.

இங்கே வாடா....... என்று சட்டையைப் பிடித்து இழுத்தார்.

நீ நல்லவன் தான்...! நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உன்னிடம் பணம் இல்லை என்றால் ஒருவரும் மதிக்க மாட்டான். செல்வம் வேண்டும்... செல்வாக்கு வேண்டும்... சொல்வாக்கு வேண்டும்... இந்த மூன்றும் வேண்டும்...! இது இல்லை என்றால் மனிதனுக்கு வழி இல்லை என்று சொல்கிறார். அதையே மீண்டும் சொல்கிறார்.

1.குருநாதராக இருந்து முருகனையே காண்பித்துக் கொடுக்கின்றீர்கள்
2.இங்கே முருகனும் இருக்கின்றார்... நீங்களும் இருக்கின்றீர்கள்...!
3.எனக்கு வேறு என்ன வேண்டும்...? இதைக் காட்டிலும் வேறு என்ன சொத்து வேண்டியிருக்கிறது...?
4.நான் இப்படியே கேட்டேன்... வேண்டியதில்லை...! என்று சொன்னேன்.

இது நடந்த நிகழ்ச்சி.

செய்வினை… ஏவல்… தோஷம்… மாந்திரீகம்… இவைகளில் சிக்கியவர்கள் மீளும் வழி என்ன…? ஈஸ்வரபட்டர்

 

மனிதன் நல் உணர்வு கொண்டு வாழ்ந்தாலும் சந்தர்ப்பத்தால் ஏற்படும் அவரின் பக்குவ முறை மாற்றத்தினால் ஏக்கம் சலிப்பு என்ற தொடர் குண ஆவேச எண்ணம் கொண்ட உணர்வலையில் சென்ற பின் உடலை விட்டு ஆவி பிரிந்தவுடன் அவர்கள் எங்கே செல்கிறார்கள்….?

பல எண்ண ஈர்ப்பில் சுழன்று ஆவி மிருக ஈர்ப்பிற்குச் சென்றும் மனிதனை ஒத்த அங்க அவயங்கள் அற்ற மிருக ஜீவிதத்திற்குச் செல்ல ஏதுவாகிறது.

உணர்வலையின் மாற்ற நிலை கொண்ட ஆத்ம பிம்பமே பல காலச் சேமிப்பு அமில ஈர்ப்பு உரு மாறி மனிதக் கருவிலிருந்து மிருகக் கரு நிலைக்குச் செல்லும் பொழுது
1.மாந்திரீக நிலைக்கு வசமாகிக் கொண்ட ஆவிகளின் உணர்வின் ஈர்ப்பும்
2.மாந்திரீகனின் ஆன்மா பிரிந்த பிறகு அவன் வசப்பட்ட ஆவிகளின் உணர்வு அமில சக்தி எந்நிலை பெறுகின்றது…?

மிருக ஜெந்துவிலேயே பல நிலை கொண்ட குண வளர்ச்சி ஜெந்துக்கள் உண்டு. மாந்திரீக வசப்பட்ட ஆவிகளின் ஈர்ப்பு மாந்திரீகன் வசப்படுத்தி வைத்துள்ள கால நிலை மாறுபட்டவுடன் இவ்வாவிகளுக்கும் சக்தி நிலை குறைந்து மீண்டும் பிறப்பு எடுக்க நாய்… குள்ள நரி… இவற்றின் ஈர்ப்பலை பிம்ப உடல் தான் பெற முடியும்.

நாய்க்கு உணர்வலைகள் அதிகம். மனிதனைக் காட்டிலும் நாய்க்கு மோப்பத்தால் ஈர்க்கும் நிலை துரிதப்படுகின்றது. சுவாச ஈர்ப்பின் நிலைக்கொப்பத்தான் செவி ஈர்ப்பும் கண் ஒளியும் அதற்கு உண்டு.

மாந்திரீகனால் வசப்படுத்திய ஆவிகள் மற்ற சாதாரண ஆவிகளைக் காட்டிலும் அதற்கு அதன் மாந்திரீக பூஜிப்பினால் ஈர்ப்பலை அதிகம் கொண்டுள்ளதினால் “நாயின் பிறப்பிற்குத் தான் செல்ல முடியும்…!”

ஆவிகளின் நிலையை உணர்த்தி வருகின்றேன். இதன் உண்மை நிலை என்ன…? ஆவிகள் உண்டா இல்லையா..? இதை உணர்வது எப்படி…? என்ற வினா எழும்பலாம்.

இன்று உலகின் பல பாகங்களில் மாந்திரீக முறையில் பல அதிசயங்கள் நடப்பதை “ஆண்டவனின் ரூபம்…” என்று காட்டி ஏமாற்றி லிங்கமும் வேலும் விபூதியும் வருகின்றதல்லவா…!

அதுவுமல்லாமல் சில பொருள்கள் தானாக ஆடுவதும்… சிலர் பல மொழிகளில் பேசுவதும்… இந்த ஆவிகளின் தொடர் தான்.

மாந்திரீகனால் வசப்படுத்தப்பட்ட ஆவிகள் அவன் சொல்படி செயல்படுகின்றன. இந்த ஆவிகளுக்கு விமோசனம் இல்லையா…? என்ற வினா எழும்பலாம்.

எல்லாமே ஆவி தான். மாந்திரீகனின் வசத்தில் சிக்குண்டு தன் நிலை உணராமல் செயல்பட்ட ஆவிகளுக்கும் உணர்வால் தன் நிலை பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

சித்தர்களினால் அமைக்கப்பட்ட சில கோவில்களில் உடலுடன் கூடிய ஜீவ சக்தி கொண்ட “பல சித்தர்கள்” உள்ளார்கள்.
1.அவர்கள் உடலில் ஏற்றிக் கொண்ட சக்தி வாய்ந்த நுண்ணிய மின் காந்த ஈர்ப்பு ஒளியினால் இன்றும் சித்தாகி
2.உடலின் உணர்வு கொண்டு கோவில்களில் அவர்களுக்கென்று சமாதி குகை அமைத்திருகின்றனர்.
3.நல் நிலை பெறவேண்டும் என்ற உணர்வு கொண்டுள்ள மாந்திரீகர் வசத்திலிருந்த ஆவிகளானாலும் சரி…
4.கொடூர வேட்கையில் ஜீவன் பிரிந்த ஆத்மாவாக இருந்தாலும் சரி…
5.ஜீவ சக்தி கொண்ட சித்தனிடம் தன் உணர்வின் எண்ணத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு - அவர்களின் ஆசி கிடைத்தால்
6.சித்தர்களின் ஜீவ உடல் ஈர்ப்பில் சென்று தன் உணர்வு ஈர்ப்பை மீண்டும் “நல் உணர்வு கொண்ட மனித இன வளர்ச்சியில் வரலாம்…”

July 22, 2021

துவாரகா யுகத்தில் கண்ணன் பிறக்கின்றான் - கண்கள் தோன்றுகிறது

 

பார்க்க வேண்டும்... பார்க்க வேண்டும்... என்று பல சரீரங்களில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான்
1.துவாரகா - உடலுக்குள் ஒளிக்கற்றைகள் பெருகி
2.சிறுகச் சிறுக மின் அணுவாக மாறி
3.அதன் உணர்வுகள் அணுக்களாகிக் கற்களாக மாறுகின்றது.

கற்களாகி உறையும் தன்மை வரும் போது “கருவிழி” என்ற உணர்வுகள் அது அணுத் தன்மை அடைந்து நரம்பு மண்டலத்தின் வழி கூடி ஒளிப்படலமாகப் பார்க்கும் தன்மை வருகின்றது.

ஆனால் இந்த ஒளிப் பிளம்பு கருவிழி மறைந்து விட்டால் ஒளிப்படலம் தெரியவே தெரியாது.

ஆனால் பார்க்கும் சக்தியாக அந்த அணுக் கருக்கள் எப்படி உருவானது..? கண்கள் எப்படி உருவானது..?

1.வாசு தேவன் நாம் சுவாசிப்பதை உருவாக்கக் கூடியவன் உயிர்.
2.தேவகி... நாம் பார்க்க வேண்டும் என்ற தேவைக்கு வரும் போது அது வருகிறது.

வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் பிறந்தான் கண்ணன் (கண்கள்) என்று நம் கண்கள் எப்படி உருவானது...? என்று இதைத்தான் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகிறது.

அதே சமயத்தில் மனித உடல் பெற்ற பின் ஒவ்வொரு நாளும் நாளை என்ன செய்வது...? என்று கற்பனை செய்கின்றோம். அதன் உணர்வின் தன்மை வடிவமைக்கின்றோம். அந்த வடிவமைப்பின் தன்மை தனக்குள் பதிவாகின்றது.

ஆக துவாரகா...! அந்த உணர்ச்சியின் தன்மை என்ன செய்கிறது...?

1.புறத்தால் கண்களானாலும்... அகத்திற்குள் உணர்வின் தன்மை முதலில் படமாக்குகிறது (நாம் எண்ணிப் பார்க்கும் நிலைகள்)
2.படமாக்கிய பின் புறத்தின் தன்மை கொண்டு நாம் எழுதுகின்றோம்.
3.இந்த உடலுக்குள் பதிவாகவில்லை என்றால் எதையும் எழுதவே முடியாது.

ஆகவே உணர்வின் தன்மை பதிவாகும் போது பதிவின் நினைவுகளை நாம் நினைவாக்குகின்றோம். துவாரகா - இந்த உடலுக்குள் சிந்தனை செய்து அந்த உணர்வுகளை எடுத்துத் தான் அடுத்து நாம் செயல்படுத்த வேண்டும்.

இது எல்லாம் நம் வாழ்க்கையில் எது எப்படி இயக்குகிறது என்ற நிலையைத் தெரிந்து கொள்வதற்குத்தான் இதைக் கொடுக்கின்றோம். ஆகவே இதன் உணர்ச்சிகளை நாம் வடிவமைத்து அப்புறம் என்ன செய்கிறோம்...?

புறத்தால் எழுதப்படும் போது அதிலே குறை என்று வரும் போது திருத்துகின்றோம். உள்ளுக்குள் மனதானாலும் பதிவான பின் அதை எழுத்திலே கொண்டு வருகின்றோம். எழுத்து என்று வரும் போது தவறு வந்தால் திருத்திப் பழக வேண்டும்.

இதைப் போல் தான் துவாரகா யுகத்தில் தீமைகளிலிருந்து மீண்டிடும் சக்தியாகத் தன்னுடைய நிலைகள் வருகிறது... கண்களாகின்றது. (சிறைச்சாலைக்குள் இருக்கும் தன் அன்னை தந்தையரைத் தவறிலிருந்து மீட்கக் கண்கள் வருகிறது)

ஒரு படத்தை (சித்திரம்) பார்க்கின்றோம்... பிழை என்ற நிலை வருகிறது. ஒருவன் தவறு செய்கிறான் என்ற நிலைகளில் கண்கள் அதைப் பார்க்கின்றது. ஆனால் அவனின் அந்தத் தவறுகள் நமக்குள் பதிவாகக் கூடாது.

தவறு செய்பவன் உடல் கிரேதா. அவன் செய்யும் தவறை நாம் நுகரும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வு திரேதா யுகத்தில் நம் உடலுக்குள் செல்கிறது.

அப்போது அந்தந்த உணர்வின் உணர்ச்சிக்கொப்ப வைரஸ் (கிருமி) என்று சொல்கிறோமே அத்தகைய அணுக்கள் உருவாகின்றது.

அந்த அணுக்களின் உணர்வுக்கொப்ப அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகிறது. அதன் மலத்தின் தன்மை கொண்டு இரத்தத்தில் வருகின்றது. தீமையின் விளைவாக நோயாகிறது.

ஆனால் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து நம் இரத்தத்திலே கலக்கப்படும் போது நம் உடலில் உள்ள உறுப்புகளை அது சீராக்குகிறது. அப்போது அந்த ஞானிகளின் உணர்ச்சியின் எண்ணங்கள் நமக்குள் வரும்.

1.தீமை செய்வோன் அவன் திருந்தி வாழ வேண்டும்
2.தெளிந்து வாழ வேண்டும்
3.தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
4.அமைதி பெற வேண்டும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணி
5.இதன் உணர்வைக் கொண்டு நாம் தெளிவாக்க வேண்டும்.

இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆகவே கிரேதா திரேதா துவாரகா என்ற நிலையில் நம் உடலுக்குள் நடக்கும் ஒவ்வொரு நிலையையும் வேதங்களில் தெளிவாகக் கூறப்படுகின்றது. அதை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

மனிதனின் சக்திகளை வெளிப்படுத்தச் செய்யும் ஒரு முக்கியமான அங்கம் தான் “கை” - ஈஸ்வரபட்டர்

 =

நாசி சுவாசிக்கின்றது… கண் பார்க்கின்றது…!
1.கண் பார்க்கவும் செவி கேட்கவும்… வாயில் உமிழ் நீர் சுரக்கவும்…
2.உடலில் எல்லா நரம்பும்… அணுக்கள் துடிக்கவும் உணர்வுகள் உந்தவும்
3.எண்ண ஓட்ட நிலைகள் சர்வ சதா காலத்திலும் சுழன்றே
4.ஆத்ம பிம்பமுடன் ஜீவ உயிர் வாழுகின்றது.
5.உறக்கத்திலும் உணர்வுள்ளவனுக்கு எண்ணமுண்டு.

இவ்வெண்ணத்தின் ஓட்டம் எப்படி… எப்பாதையில் ஓடுகின்றதோ… அந்தப் பாதையின் உணர்வுடன் மீண்டும் மோதி அவ்வுணர்வின் சுவாசம் எடுத்து எண்ண ஓட்டத்தின் வழிப்படிச் செயலாக்க அங்க அவயங்களில் எச்சக்தியையும் செயல்படுத்திக் காட்டிடக் கையின் நிலை இல்லாவிட்டால் செயல் ரூபம் இந்த உலகில் எதுவுமே இல்லை.

செயலை வெளிப்படுத்தும் அவயம் தான் “கை…”

1.கையின் ஈர்ப்பிலே பிம்பத்தின் (உடலின்) சக்தி அனைத்தும் வெளிப்படுகிறது.
2.மற்ற அவயங்களின் சக்தியை வெளிப்படுத்துகின்றது.
3.ஞானத்தை உணர்த்துவதும் இக்கை தான்.

பலவாக உள்ள ஒன்றான பிம்ப உடலை… செயலை… எப்படி இந்தக் கை வளர்க்கின்றதோ அதைப் போன்று தான் பலவாக உள்ள உலக வாழ்க்கையில்… பக்தி கொண்டு தெய்வ நம்பிக்கையை வழி காட்டினான் நம் சித்தன்.

ஆத்ம பிம்ப மனிதச் சக்திக்கே செயலாக்கும் அங்கமாகக் கையைக் கொண்டு தான் செயல்முறை வெளிப்படுகிறது.

இந்த உடல் பிம்ப ஜீவன் பிரிந்த பிறகும் மீண்டும் மனிதக் கரு வளர்ச்சியில் வரும் சிசுக்கள் பிறந்து சில மாதங்கள் கருவின் வளர்ப்பிலேயே அவயங்களின் முக்கியமான கையை மூடிக் கொண்டே தான் பிறக்கும்.
1.கையை மூடிக் கொண்டு சுவாசம் எடுக்கும் பொழுது
2.உடலின் சக்திகள் விரயப்படாது.

மனித பிம்ப செயலை உணர்த்த வல்ல இக்கையின் ஈர்ப்பு குண அமிலம் மாறுபடாத ஈர்ப்புடனே தான் சிசு உற்பத்தியாகின்றது.

பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு கையின் அவயங்கள் செயல்படும் முறை கொண்டு தான் அக்குழந்தை வளரும் முறையை அறியலாம். பிறந்ததும் மற்ற அவயங்களின் உணர்வை அக்குழந்தை கையை ஆட்டித் தான் வெளிப்படுத்துகின்றது. சில நாட்களுக்குப் பின் காலை ஆட்டும்.

பிறந்த குழந்தைகள் சில பிறந்தவுடனே கையை ஆட்டிக் கொண்டிருக்கும். அக்கையை ஆட்டும் குழந்தையின் ஞானமும் அக்கை ஆட்டும் முறை கொண்டு ஞானத்தின் நிலையும் அறியலாம்.

மனிதனின் ஞானத்தைச் செயலாக்கும் கை என்ற உறுப்பு மனிதனுக்கு இல்லா விட்டால் மிருக நிலைக்கும் மனித நிலைக்கும் மாறுபாடில்லை.

மனிதனின் ஞானத்தை வெளிப்படுத்துவது கை. ஞான நல்லறிவு குறைந்த உடலை விட்டுச் சென்ற ஆத்மாக்களுக்கு அவ்வாத்மா மற்ற ஈர்ப்பலையில் சென்று மனிதக் கருவிற்கு வர முடியாத நிலை ஏற்படுகின்றது.

இன்று இந்தக் கலியின் மாற்ற காலத்தில் மனிதனின் ஞானம் குறைவுபட்டு கல்கியுக வளர்ச்சிக்கு ஞானத்தின் குறைவு கொண்ட மனித அமில குண பிம்ப உடல்கள் பெறும் ஆத்மாக்களுக்கு.. மீண்டும் இன்றுள்ள அங்க அவயப் பொலிவு இழந்தே… மிகவும் குறுகிய உடல் அமைப்பும் குரங்கினத்தின் அவயங்களை ஒத்த கை கால்களின் வளர்ச்சி பிம்பம் தான் ஏற்படும்.

மனிதர்களிலேயே இன்று சிலருக்கு அமில ஈர்ப்பு வளர்ச்சி அமையப்படாமல் கை கால்கள் சூப்பிய நிலையில் குறுகிய உடலமைப்பு கொண்டவர்களைப் பார்க்கின்றோம்.

மிகவும் அல்லல்பட்டு துன்புற்று ஜீவிதத்திற்கே கஷ்டப்படும் ஆத்மாக்களின் தாய்மார்கள் சிலருக்கு.. சிலருக்கென்ன…!
1.இந்நிலையில் உள்ள பல தாய்மார்களின் குழந்தைகள் இப்படித்தான் இன்றும் பிறக்கின்றன.
2.இதன் தொடர்ச்சி குண குழந்தைகள் தான் வரப்போகும் ஆண்டுகளில் அதிகமாகப் பிறக்கப் போகின்றன.

ஏனென்றால் எண்ணத்தில் வளர்ச்சி ஞானம் அற்று இம்மனித பிம்ப வாழ்க்கையில் அல்லலுறும் ஆத்மாக்கள் மலிந்து விட்டன. மனிதனான அமிலத்தை அழித்தவனே மனிதன் தான்.

ஞானமற்ற வாழ்க்கையைச் சலிப்புடனும் சங்கடமுடனும் ஏக்கமுடன் ஏங்கி வாழும் வாழ்க்கை முறை மாற வேண்டும்.

ஆண்டவனிடம் ஏங்கிக் கேட்கின்றான் மனிதன். ஏக்கத்தில் வளரும் சலிப்பு சங்கட குண மனிதனுக்கு ஞானத்தால் வெல்லும் நிலையற்றதாகி விடுகிறது.

இத்தகைய உணர்வுச் சுற்றல் குணங்கள் நிறைந்துள்ள இன்றைய இக்கலி மனிதனின் வளர்ச்சி இதே சுழற்சி ஓட்டத்தின் ஈர்ப்பு குண அமிலம் அவனுக்குள் கூடிக் கூடி… இதன் செயலில்தான் அடுத்த கல்கியுக இனக்கருவும் வளருமப்பா…!

வறுமையும் இன்னலும் அற்று மற்ற மேற்கத்திய தேசங்களிலுள்ள மனித ஆத்மாக்களில் பலரோ போதை நிலையின் அடிமையினால் எண்ண ஞானமற்ற நிலையில் வாழ்கின்றனர். அவர்களின் பிம்ப உடல் ஆத்மா பிரிந்து சென்ற பின் அந்நிலைக்கொப்ப வளர்ச்சி அமில குண கரு தோன்றி வரும்.

1.எண்ணத்தின் ஞானத்தை வெளிப்படுத்தும் சக்தி அவயமான கை தான்
2.மனித இனத்திற்கே மிகவும் முக்கியமானது… ஆனால்…
3.ஞானத்தின் வளர்ச்சி எடுக்காத பிறப்பற்ற உணர்வலையில் செல்லும் பொழுது
4.தான் பல ஜென்மங்களில் சேமித்த அமில குண சக்தியையே இழக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு
5.மனிதக் கரு உருவ நிலை மாறு கொண்ட பிம்பத்திற்குச் சென்று
6.அங்க அவயங்களின் சக்தியை வெளிப்படுத்தும் செயலாக்கும் திறமையுடைய – “கை இல்லாமல் பிறப்பு வருகின்றது…!”

அதாவது “பிறப்பு…!” என்பது மற்ற ஜீவராசிகளின் “ஈர்ப்பலையின் பிறப்பு...!”

July 21, 2021

ஞானிகள் உணர்வை வைத்துத் தீமைகளை அழிக்க வேண்டுமே தவிர தீமை செய்வோரை அல்ல...!

 

குருநாதர் எம்மைப் பல பரிசீலனைகள் செய்து அதிலே பட்ட அவஸ்தைகள் எத்தனையோ. ஏனென்றால் பல சக்திகளையும் கொடுத்து அந்தப் பரிசீலனை செய்கிறார்.

அவர் கொடுத்த அவஸ்தைக்கெல்லாம் ஆளாகித் தான் உங்களிடம் இந்த உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

ஏனென்றால் கஷ்டத்திலிருந்து தான் எல்லா உண்மைகளையும் எனக்கு உணர்த்தினார். ஆனால் உங்களுக்குக் கஷ்டம் வரும் போது அதை நிவர்த்தி செய்வதற்குச் சக்தி கொடுக்கின்றேன்.

1.உங்களுக்குக் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சக்தி கொடுத்தார் கஷ்டப்பட்டு...
2.நீங்கள் எங்களுக்கு எப்படிக் கொடுக்கின்றீர்கள்...? என்று கேட்டால் எப்படி...!

ஏனென்றால் இந்த இயற்கையின் உண்மையின் நிலைகளில் பல சக்திகளை குருநாதர் கொடுத்தார். ஆனால் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று பல பரீட்சைகளுக்கும் ஆளாக்கினார்.

இப்பொழுது வரையிலும் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது. யாராவது ஒருத்தர் இரண்டு பேர் வந்து நம் பவரைச் சோதிப்பதற்கு அது போல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

ஆனால் இது போன்று வரும்.

1.அதை எல்லாம் அந்த ஞானிகளின் உணர்வை வைத்துத் தான் தீமைகளை அழிக்க வேண்டுமே தவிர
2.தீமைகளிலிருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வைத் தான் நாம் வளர்க்க வேண்டுமே தவிர
3.அவனை எப்படியாவது அடக்க வேண்டும் என்று “தீமையை வைத்துத் தீமையை அழிப்பது அல்ல...”

எத்தனையோ நிலைகள் வருகிறது... எத்தனையோ தவறுகள் நடக்கிறது. தவறு நடக்கும் போது அந்தத் தவறைத் திருத்துவதற்குத் தான் நாம் வழியைக் காட்ட வேண்டுமே தவிர அதைச் சுட்டிக் காட்ட வேண்டும்... ஞானிகள் வழியில் அதைச் செயல்படுத்த வேண்டும்.

அதைத் தான் இப்பொழுது யாம் (ஞானகுரு) இங்கே உபதேச வாயிலாகத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வருகிறோம். ஆனால்
1.ஒரு நிமிடம் அந்த குரு உணர்வை விட்டு விலகிவிட்டோம் என்றால்
2.அந்தக் குரு அருள் இல்லை என்றால் இருள் சூழும் நிலைக்கே நாம் செல்ல நேரும்.
3.உலகில் பேரும் புகழும் பெற முடியும்... புகழ் தேடி வரும்... அந்த நேரத்தில் இருள் சூழும்.
4.குரு கொடுத்த சக்தியை நாம் பெற முடியாது.

குருநாதர் கொடுத்த அளவுப்படி இந்த உலகில் எத்தனை தீமை இருந்தாலும் அந்த உண்மையின் நிலைகளைத் தெரிந்து கொண்டதனால்
1.மகரிஷிகளின் உணர்வை விளையச் செய்வதற்குத்தான்
2.இத்தனையும் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் இந்த உண்மையை உணர்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து அனுபவபூர்வமாக உணரச் செய்தார். பல நிலைகளைச் செய்து அந்த உணர்வுகள் எப்படி இயக்குகிறது...? என்று தெரிந்து கொண்டோம்.

அதன் வழிகளில் நீங்கள் எல்லோரும் மெய்ப் பொருள் காண முடியும்... மெய் ஞானம் பெற முடியும்... என்ற நம்பிக்கையில் தான் இந்த உண்மைகளை உணர்த்துகின்றோம்.

மனித வாழ்க்கையில் காணும் இன்பம் அனைத்துமே சிற்றின்பம் தான் - ஈஸ்வரபட்டர்

 

சப்தரிஷிகள் தான் பூமியின் வளர்ச்சியில் மனிதக் கரு தோன்றி மனித ஞானம் பெற வழி வகுத்தனரே…!
1.இக்கலி மாறி கல்கியில் மனிதக் கரு வளரவும் மனித ஞானம் வளரவும்
2.சப்தரிஷிகளே ஏன் மீண்டும் அவர்களின் செயலைச் செயலாக்கிடக் கூடாது..? என்ற வினா எழும்பலாம்.

செடி சிறிதாக உள்ள பொழுது அதற்குகந்த ஆகாரத்தைச் செலுத்தினால் போதும். வளர வளர வளர்ச்சிக்குகந்த ஆகாரம் தேவைப்படுகிறது. வளர்ந்து முதிர்ந்த மரமாக ஆன பிறகு தன் உணவைத் தானாகவே எடுத்துக் கொள்ளும் வளர்ச்சியில் மரமுள்ளது.

சிறிய பயிர்களுக்கு நீர் ஊற்றித் தான் வளர்க்க வேண்டும். முற்றிய மரத்திற்கு அதன் உணவை அதுவே எடுத்துக் கொள்ளும்

அதைப் போன்று சப்தரிஷிகள் அவர்களின் சக்தியைப் பூமியின் கரு வளர்த்துச் செயல்படுத்த ஆரம்ப வளர்ச்சிக்கு ஆரம்ப நிலைக்குகந்த உணவு படைத்தால் போதும்.

வளர்ச்சியின் பெருக்கம் கொண்ட பிறகு வளர்ச்சிக்குகந்த உணர்வலைகளை அவர்கள் செலுத்த வேண்டியுள்ளது.

இன்று பலவாகப் பெருகியுள்ள மனித எண்ணங்களின் ஈர்ப்பு நிலைக்கும் கிருஷ்ணாவதாரம் இராமாவதாரம் காலங்களின் (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) எண்ண ஈர்ப்பிற்கும் பல மாற்றங்கள் உண்டு.
1.பெருகியுள்ள இன வளர்ச்சியின் அழிவு நிலை நெருங்கிவிட்டது.
2.மனித ஆத்மாக்களுக்குத் தன் உணர்வைத் தான் அறியும் பக்குவ முறைகள் எல்லாம் மாறிவிட்டது
3.உலகப் பொது எண்ணச் சுழற்சி ஈர்ப்பே நாகரீகம் என்ற உணர்வின் பேராசைப் பிடிப்பில் செயல்பட்டு விட்டது
4.ஆகவே அவ்வாறு பெருகிய மனித இனக்கரு இக்கலி மாற்றத்தில் மாறப் போகின்றது.

இந்த மாற்றக் காலத்திற்குள் சப்தரிஷிகளினால் இவ்வளவு காலங்களும் அங்கங்கு செடியாக உள்ள பயிருக்குகந்த உணவளித்த நிலையில்… அந்தப் பயிரே மரமாகித் தன் உணவை எடுத்துக் கொள்ளக்கூடிய ஞான நெறி முறைக்கு ஈர்த்துச் செல்கின்றனரப்பா…!

பஞ்சாக உள்ள எண்ணங்களை… பஞ்சைப் பக்குவப்படுத்தி பதம் பிரித்து அதனதன் குணத்திற்கொப்ப நூற்பு நிலை ஏற்படுத்தி இந்தப் பஞ்சுடன் கலக்கும் அமில வண்ணத்தை ஏற்றி ஆடை நெய்கின்றோம் அல்லவா…!

அதைப் போன்று பஞ்சாக உள்ள பக்தி நெறி முறை உணர்த்தி அந்தந்தக் கால நிலைகளுக்கு ஒப்ப சப்தரிஷிகளின் உணர்வலையால் அவர்களின் உணர்வுக்குகந்த பக்குவ முறைகளை ஏற்றித் தன் ஈர்ப்பின் ஞானச் சுழற்சியுடன் சுழல விட்டுக் கொள்கின்றனர்.

சப்தரிஷிகளின் நிலையை… சப்தரிஷி தான் ஆண்டவன் என்று உணர்த்துகின்றீரே…! அப்பொழுது இந்தப் பூமியின் சக்திகளை எல்லாம் தந்தது அவர்கள் தானா…? என்ற வினா எழும்பலாம்.

இவ்வினாவிற்கு விடை ஆம் என்பது ஒன்றே தான்.

சப்தரிஷியினால் ஏற்படுத்திக் கொண்ட மண்டலங்களின் நிலையினால் தான் ஒவ்வொரு மண்டலத்தின் தொடர்பைக் கொண்டு… அதனதன் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு… அது வெளிப்படுத்தும் உணர்வு குணத்தினால் தான் மணமும்… மணத்திற்குகந்த சுவையும் வண்ணங்களும் நம் பூமியில் தோன்றின.

பல சக்தி அலைகள் நிறையப் பெற்ற நம் பூமியில் மனித இன ஞானங்கள் வளர்ந்தோட வளர்த்தியதே “பல மண்டலங்களின் ஈர்ப்பு உணர்வினால் தான்…!”

1.ஒவ்வொரு ஞானியும் அவனவன் எடுத்த உணர்வின் குண அமிலத்தை வளர்த்த ஞானத்தால் மண்டல நிலை எய்தி
2.இம்மண்டல வளர்ச்சி ஞானத்தால் இன்றைய இந்நிலை உருப்பெற்றுள்ளது.

அத்தகைய ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பல ஆத்மாக்கள் நிலை என்ன…?

இக்கலி மாறி கல்கி தோன்றி இச்சுழற்சி வட்டத்திலிருந்தே மாறி இம்மனிதக் கரு ஞான வளர்ச்சி கொண்ட மனிதன் பிறிதோரு மண்டல வளர்ச்சிக் கருவுடன் பிறப்பில் மனிதக் கரு வளரும் நிலையில்
1.மனிதனின் உருவ அழகுப் பொலிவு பெற்று
2.இன்று பூமியின் ஈர்ப்பில் நடக்கும் மனிதன்
3.நாளை “பறக்கும் நிலை” கொண்ட வளர்ச்சி ஞானம் பெறுகின்றான்.

சப்தரிஷியின் உணர்வின் வட்டத்திலுள்ள மனிதக் கருக்கள் எல்லாம் இந்நிலை பெறுகின்றன. இன்று சித்து நிலையில் சுழன்று ஓடும் பல ஆத்மாக்களும் இவ்வுணர்வின் கூட்டத்துடன் செல்கின்றன.

சப்தரிஷியின் உணர்வின் சுழற்சி ஈர்ப்பில் உள்ளவர்களுக்கே இந்நிலை என்றால்…!
1.சப்தரிஷியின் உணர்வுடனே சப்தரிஷியின் செயலாகச் சுழலப்பெறும் ஆத்மாக்கள்
2.இன்றெப்படி சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றனரோ அந்நிலையின் ஒளி ஞானம் பெற்று
3.ஒவ்வொரு மண்டலத்துக்குமே தன் ஈர்ப்பின் உணர்வு சக்தியைப் பரப்பித் தன் உணர்வின் இன்பத்தை உணர முடியும்.

மனித வாழ்க்கையில் வாழும் இந்தக் குறுகிய காலத்தை “இவ்வாழ்க்கை என்ற… கூட்டுக் குடும்பப் பொருள் சேர்க்கையில் தான் அந்த இன்பம் உண்டு…!” என்பது மனிதனின் எண்ணம்.

1.இந்த மனித வாழ்க்கையில் காணும் இன்பம் சிற்றின்பம் தான்.
2.பேரானந்தப் பெரு நிலை என்னும் உணர்வு ஞான வளர்ச்சி இன்பம் தானப்பா அழியா இன்பம்.

ஆனாலும் எவ்வின்பம் பெறவும் இந்த மனித வாழ்க்கை நிலையின் சமமான உணர்வு எண்ணச் சுவாச நிலையில் தான் பெற முடியும்.

July 20, 2021

தவமிருந்து ஆண்டவன் அருளை எப்படிப் பெறுவது…?

 

கூட்டுத் தியானத்தில் கலந்து கொண்டு தியானித்தவர் அனைவருமே “நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன…?” என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஒரு நான்கு பேர் சேர்ந்து கூட்டமைப்பாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வலுவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
1.அந்தந்தக் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தியானம் செய்ய வேண்டும்.
2.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் இதைச் செய்து பழக வேண்டும்.

அதே போல் ஒரு குடும்பத்திற்கு எதிரியாக இருந்து பல பேர் பல நிலைகளைச் செய்கின்றார்கள் என்றால்
1.அடுத்த நிமிடம் கூட்டாக அந்த வீட்டிலே இந்தத் தியானத்தைச் செய்து
2.அவர்களை அறியாது இயக்கும் இருள்கள் நீங்க வேண்டும்.
3.அவர்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும் என்று இதை நமக்குள் வளர்க்க வேண்டும்.

இதை ஒவ்வொரு நாளும் நாம் செய்து வர வேண்டும். இதை நாம் செய்தோம் என்றால் அந்த ஞானிகளின் உணர்வை நாம் பெறுகின்றோம். தியானமும் தவமும் என்பது இது தான்.

ஞானிகளின் உணர்வை நமக்குள் வலுவாக எடுக்கின்றோம்… நமக்குள் வளர்க்கின்றோம். எல்லோரும் பெற வேண்டும் என்று தவத்தைச் செய்கின்றோம்.

எங்களைப் பார்க்கின்றவர்கள் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அந்தக் குடும்பங்கள் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும் என்று தவமிருக்க வேண்டும்.

அதாவது
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானிக்கின்றோம்... அதை வளர்க்கின்றோம்.
2.நீங்கள் அதைப் பெற வேண்டும்… நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தவமிருக்கும் போது
3.உங்களைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்… இது தான் தவம்.

தவத்திற்கு இலக்கணம் வேண்டுமல்லவா…! அந்த ஆண்டவனின் அருளைப் பெறுவதற்காகத் தவமிருக்கின்றோம் வேண்டும் என்றால் அந்த ஆண்டவன் எங்கே இருக்கின்றான்…?

1.உங்கள் உயிர் தான் ஆண்டவனாக இருக்கின்றது
2.அந்த ஆண்டவன் இருக்கும் ஆலயத்திற்குள் தீமையின் உணர்வுகள் வாட்டுகின்றது.
3.அந்தத் தீமையிலிருந்து விடுபட அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.மகரிஷிகளின் அருளைத் தியானித்து அந்த வலுவை ஏற்றி
5.நீங்கள் பெறவேண்டும் என்று தவம் இருக்கின்றேன்.
6.அப்பொழுது உங்கள் உயிரான ஆண்டவனிடத்திலிருந்து மகிழ்ந்திடும் உணர்வுகள் விளைந்து வருகின்றது.
7.அந்தத் தவத்தின் பலனை நான் பெற முடிகிறது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

இந்த மூலக்கூறை நாம் தெரிந்து கொள்ளாது ஆண்டவன் எங்கேயோ இருக்கின்றான் என்றால் நம்மை ஆண்டு கொண்டிருப்பவன் தான் உயிர்.

1.அருள் சக்திகளைத் தியானித்து அதை எல்லோரும் பெற வேண்டும் என்ற தவத்தினைச் செய்தால்
2.அதனின் பயனாக நல்ல விளைவின் நிலைகளை… அந்த உயர்ந்த உணர்வினை நாம் நுகர முடியும்.

விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி அந்த மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று தியானித்த பின்… மகரிஷிகளின் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணமும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்று உள்ளபூர்வமாகச் செய்தால் அது தான் உண்மையான தவம்….!

நம்மைப் படைத்தவனின் நோக்கம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

 

போகரின் காலத்திற்குப் பிறகு போகரால் வழிப்படுத்திச் சென்ற பண்டிகை தான் தீபாவளிப் பண்டிகை.
1.நம்முள் உள்ள அசுர குணங்களை அழித்து நற்குணங்களின் ஒளியைப் பெறத் தான்
2.தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் முறை உணர்த்தப்பட்டது.

ஆனால் இன்றைய எண்ண ஓட்டத்தில் அசுரனையே வணங்கும் முறைப்படுத்திச் செயல்படும் வழியில் எண்ண ஓட்டங்கள் வளர்ந்து விட்டன.

தீய குணங்களை அகற்ற வேண்டிய அந்த நந்நாளில் சமமான எண்ணத்தைச் சாந்தமுடன் புத்தாடை புனைந்து… மகிழ்ந்து… தீபமேற்றி… உற்றார் சுற்றமுடன் இனிமையுடன் கலந்துறவாட ஏற்படுத்திய தினத்தைச் “சந்தோஷமுடன் எந்த ஆத்மா எந்த வழியில் கொண்டாடுகிறது…?”

1.இன்றைய சமுதாய இனப் பிடிப்பாக “அந்த நாள்”
2.பல இன்னல்களுக்கு மனித ஆத்மாக்கள் செல்லக்கூடிய உணர்வு ஓட்டத்தில் சுழன்று கொண்டுள்ளது.
3.அன்று சித்தர்களினால் ஒவ்வொன்றையும் உணர்த்திச் சென்றதன் பொருள் வேறு
4.இன்றைய மனித ஆத்மாக்கள் செயலாக்கும் பொருள் வேறு…!

ஒவ்வொரு காலத்திலும் சப்தரிஷிகள் சில உடல்களை ஏற்று எதற்காக அவர்களின் உணர்வலைகளை வெளிப்படுத்திச் செல்கின்றனர்…?

1.படைப்பின் படைப்பையே
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக்க…
3.அவர்களின் செயல் முறை செயலாக்குகின்றதப்பா…!

ஆவியாகிப் பிம்பமாகி ஆவியாகிச் சுழலும் வளர்ச்சியில்
1.சுழற்சி நிலைக்கொப்ப வழி நிலை செல்லாமல்
2.சுழற்சியின் சக்தியைப் படைக்கப்பட்டவனிடம் சமர்ப்பிக்கும் செயலுக்குத் துணை செய்கின்றார்கள் சப்தரிஷிகள்.

நீரின் ஓட்டத்தை நாம் அதன் இச்சையில் (போக்கில்) விடாமல் அந்த நீரைத் தேக்கி வைத்து “அணையைக் கட்டி” அந்த நீரின் சக்தியைப் பல ரூபங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

அதைப் போல்… பால்வெளி மண்டலத்தில் படர்ந்து சுழன்று நிறைந்துள்ள அமில குணங்களின் ஈர்ப்பை
1.உருவான உலகமாக்கி
2.உலகினிலே கருவைக் கொண்டு உருவாக்கி
3.உருவின் உருக்களாகப் பல உருக்களை வளரச் செய்து
4.தன் ஞானத்தின் சக்தி அலைக்குச் சக்தி எடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்

நாம் பலன் காணத்தான் பலவற்றையும் செய்கிறோம். ஒவ்வொரு மனிதனும் அவன் எண்ணத்திற்குகந்த நிறைவைக் காண நித்தமும் செயலாற்றுகின்றான்.

இருந்தாலும்… எண்ணியோ எண்ணாமலோ எல்லா ஆத்மாக்களும் தன் உணர்வில் வழி பெறுவது எதனை…?

வாழ்க்கையில் தன் உணர்வுக்குகந்த எண்ணச் செயல் நிறைவுறாதவன் விரக்தி என்ற வீண் சலிப்புடன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தற்கொலை என்ற நிலைக்கும் தன் உணர்வைச் செயலாக்குகின்றான்.

வெறுப்பு விரக்தி என்ற நிலை மனிதனுக்கு எப்படி ஏற்படுகின்றது..?

தன் உணர்வின் எண்ணத்திற்கொப்ப எண்ணச் செயல் நிறைவுறாத தருணத்தில் சலிப்பும் சோம்பலும் விரக்தியும் உட்பட்டுத் தன் ஆத்மாவையே மாய்த்துக் கொள்ளும் வழிக்குச் செல்கின்றான்.

உணர்வாலும் உருவாலும் தன் நிலையை எண்ணுபவன்…
1.உருவ எண்ணத்தின் சுழற்சியிலேயே சிக்குண்ட வாழ்க்கை உணர்வை மாற்றி
2.எண்ணத்தால் உணரும் ஞான வழிபாட்டில் தன் உணர்வைச் செலுத்தினால்
3.விரக்தியும் சலிப்பும் அற்று விவேகம் பெறலாம்.

இவ்விவேக உணர்வலையின் ஞானத்தை உணர்ந்து வாழ்க்கையில் எண்ணும் நிறைவைப் பல ஆத்மாக்கள் பெறுகின்றனர்.

ஆனால் இன்றைய காலத்தில் மனிதனின் உணர்வலை அனைத்தையுமே அரசர்கள் ஆண்ட காலத்தில் தன் உயர்வை வெளிக்காட்ட
1.“கதைகளையும்… கற்பனைக் காவியங்களையும்..” உண்மை போல் வெளிப்படுத்தியதை…
2.அந்த மாய உணர்வுகளையே உண்மை என்ற வாழ்க்கையின் நெறியில் கலந்து விட்ட
3.அத்தகைய உணர்வலையின் சுழற்சியில் சிக்கி (CINEMA, TV, SOCIAL MEDIA) உழன்று கொண்டுள்ளது.

இந்த நிலை மாறிச் சப்தரிஷிகளின் செயல் வட்டத்திற்குள் சென்றால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே அவர்களின் உணர்வின் உணவு கிடைக்கப் பெறும்.

அதன் வழியில் அவர்களுக்கும் அவர்களின் சக்தி அமிலத்தைக் கூட்டிடல் முடியும். அதன் மூலம்
1.மீண்டும் மனிதக் கரு தோன்றினால் தான்
2.மனிதக் கருவின் பிம்ப உடல் ஞானத்தை வைத்துத்தான் மீண்டும் மனித சமுதாயம் காண முடியும்.

மனித சமுதாயத்தின் எண்ண ஈர்ப்பு அலை இருந்தால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே உணவு கிடைக்கும். உணவு இல்லாவிட்டால் அவர்களின் உணர்விற்கு உருவில்லை.

சப்தரிஷிகளின் செயல் அந்தந்தக் காலகட்டத்தில் உணர்த்தப்படுகின்றதென்றால் இந்த அடிப்படையில் தான்…!

இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் இன்றுள்ள எண்ண உருவ சுவாச மக்கள் இதே உணர்வலையில் இந்தப் பிம்பங்களை மாற்றி மீண்டும் மனித அமில ஜீவன் தோன்றினால்… இன்றுள்ள ஞானத்தைக் காட்டினாலும்… உருவ பிம்ப அழகைக் காட்டிலும்.. முற்றும் மாறுபட்ட உருவ அமைப்பு ஞான உருவங்கள் தான் அமையப் பெறும்.

அதுவும் கலி மாறி கல்கி மனித ஜீவன் கொள்ளப் பல பல ஆண்டுகள் ஆகிவிடும்.
1.காற்று மண்டலத்தில் உருளும் அமில உயிர்களுக்கெல்லாம்
2.மீண்டும் ஜீவன் கொள்ளும் காலத்திற்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டு விடும்.

அதனால் இன்றைய ஞான சக்திகளைச் செயலாக்கக்கூடிய பிம்ப ஜீவன்களான நாம் நம் சப்தரிஷிகளின் உணர்வலையின் சக்தியுடன் ஜெபம் கொண்டால்
1.அவர்களின் செயலின் சக்திக்கு
2.நம் சக்தியும் கூடிச் செயல் கொள்ள முடியும்.

July 19, 2021

தீமையான அணுக்கள் உருவான பின் அதை நீக்குவதற்குப் பதில் அதை உருவாகாதபடியே நாம் செய்ய முடியும்

 

தீமைகளைப் பிளந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் இங்கே உண்டு. அந்த மகரிஷிகளின் உணர்வை உங்களில் பதிவு செய்யும் போது நீங்கள் எப்போது எண்ணினாலும் அதைப் பெற முடியும்.

உங்களுக்குள் தீமையை விளைவிக்கும் உணர்வுகளைப் பிளந்து காற்றிலிருக்கும் அந்தத் தீமையைப் பிளக்கவும்... நல்ல உணர்வை நுகரவும்... அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் தீமை என்ற நிலைகளைப் பற்றற்றதாக மாற்றவும் முடியும்.

பற்றற்றது என்றால் வெறுப்பு வேதனை கோபம் பாசம் போன்ற உணர்வுகளைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் அதாவது...
1.பாசத்தாலும் கூட வேதனையைத் தான் நாம் அதிகமாக நுகர்கின்றோம்.
2.பாசம் எவர் மேல் அதிகமாகிறதோ வேதனை என்ற அந்த நஞ்சு கூடவே வந்து நல்ல குணங்களைச் சாப்பிடும்.

எப்படி...?

நம் பையன் மீது பாசம் அதிகமாக வைக்கின்றோம். மற்ற நண்பர்களுடன் சேர்ந்து அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே வேதனை என்ற விஷம் தனக்குள் கலந்து விடுகிறது.

இப்படி இருக்கின்றானே...! என்று அவனை எண்ணியே நமக்குள் வேதனையை எடுக்கும் போது நம் உடலே கிறங்கிப் போகிறது. விஷத்தைச் சாப்பிட்டால் எப்படியோ அந்த உணர்வு நோயாக மாறுகிறது. நோயின் தன்மை பேயாகவே மாறுகிறது.

இப்படிச் செய்கிறானே... இப்படிச் செய்கிறானே... என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் பேயாகப் போய் அடுத்த உடலுக்குள் சென்று மீண்டும் நோயாகவே அங்கேயும் உருவாக்குகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு எந்த நிமிடமானாலும் நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா...! என்று உங்கள் உயிருடன் ஒன்றினால் போதும்.
1.அப்போது அந்தச் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
2.இதை விரயமில்லாது எந்த நிமிடத்திலும் எடுக்கலாம்.
3.அதற்குத்தான் ஆழமாக இதைப் பதிவு செய்கின்றோம் (ஞானகுரு)

இங்கே கொடுக்கக் கூடிய சக்தியை இந்த வாழ்க்கையிலேயே நீங்கள் பெற்று உங்களைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

1.உங்கள் பார்வை... உங்கள் சொல்... உங்கள் மூச்சு... அனைத்தும் புனிதம் பெற்று
2அந்த மூச்சலைகள் காற்றிலே பரவினாலும்
3.நீங்கள் யாரைப் பார்த்து அவர்கள் நன்மை பெற வேண்டும் என்று
4.இந்த எண்ணத்தை எண்ணினால் அதை அவர்களும் பெற முடியும்.

ஒரு செடிக்குப் பக்கம் களை இல்லாது இருந்தால் “தன் இனத்தின் சக்தி பெருகி” அந்தக் குவிந்த சக்தி கொண்டு அந்தச் செடி செழிப்பாக ஓங்கி வளரும். இது எல்லாத் தாவர இனங்களுக்கும் பொருந்தும்.

ஆனால் களைகள் முளைத்து விட்டால் அது வளர்வதில்லை.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் அந்தத் தீமை என்ற களைகள் முளைக்காது இருக்க வேண்டுமென்றால் நாம் யாரைப் பார்த்தாலும்...
1.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் பொருள் காணும் நிலைகள் பெறவேண்டும்
3.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
4.அவர்கள் தொழில் வளம் பெற வேண்டும்
5.அவர்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும் என்று எண்ணி
6.அவர்களுக்கு இந்த உணர்வின் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

இதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. அப்போது அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எடுக்கும் அந்த உணர்வின் சக்தி நமக்குள்ளும் வருகின்றது.

ஆனால்... எல்லாம் நல்லதாகத்தான் நினைக்கின்றேன்... என்னை ஆண்டவன் சோதித்துக் கொண்டே இருக்கின்றான்...! என்ற இந்த பழைய பழக்கம் நம்மிடம் வந்து விடுகின்றது.

அதற்கு முக்கியத்துவம் இல்லாதபடி யாம் சொன்ன நிலைகளைச் செயல்படுத்த வேண்டும்.

மனித குலத்தை மேம்படுத்த ஞானிகளின் செயல் இருந்த போதிலும் அதை எல்லாம் அரசர்களும் அரசியல் தலைவர்களும் மாற்றி அமைத்து விட்டனர் - ஈஸ்வரபட்டர்

இன்றைய சமுதாய மக்களின் நிலையில் குணங்கள் அவர்களால் ஏற்பட்டதல்ல. அவர்களை மாற்றியமைக்க
1.விஞ்ஞான ரீதியில் செயல்படுத்திய “இயந்திர மனிதர்கள் தான்”
2.இன்று இராணுவம் என்று செயல்படுத்தப்பட்ட மனிதர்கள்…!

மனிதனையே… அவன் உணர்வின் அலையையே… (புத்தியை) நாட்டின் இன வெறி உணர்வு கொண்ட செயலுக்காகப் பேராசையில் தன் நாடு என்ற உணர்விற்காகத் தன் நாட்டையும் தன் பலத்தையும் கூட்டிக் கொள்ளப் பல தவறான பழக்கங்களை அன்று ஏற்படுத்தினர்.

இராணுவ முறையினால் மனித ஆத்மாவின் உணர்வின் எண்ணத்தை மாற்றப் “போதை வஸ்துக்களை” உண்ணச் செய்தனர்.

அப்போதையின் உணர்ச்சியுடன் மனிதன் உள்ள நிலையில் அவன் எண்ணத்துடன் குரோத வெறி சக்தியான இராணுவப் பயிற்சி முறைகளை ஊட்டி வழிப்படுத்தினர்.

அதே உணர்வலையின் சுற்றலில் மனித ஆத்மாக்களின் எண்ணத்தை மாற்றியதில்… அன்றாண்ட அரசியல் வீரர்களில் சிலரால் வழிப்படுத்திய நிலை இன்றளவும் உள்ளன.

“சர்ச்சில்” ஆண்ட காலத்திலும் “ஹிட்லர்” ஆண்ட காலத்திலும் அவர்களின் ஆட்களின் உணர்வுடன் இப்போதை வஸ்துக்களைச் செலுத்தப்பட்டுப் போதை உணர்வுடன் மனிதன் உள்ள பொழுது அவனுக்குப் பல பயிற்சிகளைக் கொடுத்தனர்.

எந்த உணர்வின் பயிற்சி அலையைப் புகட்டினார்களோ… அதே உணர்வின் செயலைச் செய்யத்தக்க மனித ஆத்மாக்களை இப்படி உருவாக்கி விட்டனர் அன்றிருந்த அரசியல் தலைவர்கள்…! இன்றும் இதன் வழித் தொடர் சில நிலைகளில் உழன்று கொண்டு தான் உள்ளது.

மனிதனை மனிதனே உண்ணும் உணர்வலை கொண்ட வெறிக் குணங்களின் செயல்கள் சில பாகத்தில் நடந்து கொண்டு தான் உள்ளது.
1.விஞ்ஞான ரீதியிலும் சில மந்திரவாதிகளின் நிலையிலும்
2.தன் இன வர்க்க உணவையே உண்டால் தனக்கு வீரிய சக்தி கிடைக்கும் என்ற உணர்வில்
3.பல செயல்கள் நடக்கின்றன இந்த உலகின் பல பாகங்களில்.

இயேசு கிறிஸ்து அக்காலத்தில் தோன்றிச் சில ஒளி அலைகளைச் செயலாக்கிச் சென்றார். முகமது நபியின் காலத்திலும் அவர் எடுத்த அலையின் தொடர் அவர் வாழ்ந்த அவரின் எண்ணமுடன் செயல்பட்டவர்களுக்குத் தன் சக்தி அலையைப் பரப்பித்தான் சென்றார்.

1.இயேசு கிறிஸ்துவின் காலத்திலும் நபிகளின் காலத்திலும்
2.மனிதர்களின் எண்ணத்தை நல் உணர்வின் வழியில் சுழற்சிப்படுத்தி…
3.ஒளி அலைகளை அவர்கள் பால் செலுத்தி அவர்கள் ஆத்மாவை வளர்க்கச் செய்து
4.ஒன்றைப் பலவாக நல் ஒளியின் அலையைப் பரப்பச் செய்த செயலில்
5.அவ்வுணர்விற்கு உகந்த ஆத்மாக்களைச் செயல்படுத்துவது என்பது கடினமாகிவிட்டது.

அதை எல்லாம் மாற்றி அமைக்கத் தான் ஞானிகளைப் பற்றியும் சித்தர்களைப் பற்றியும் திரும்பத் திரும்ப உணர்த்திக் கொண்டே வருகின்றேன்.

நற்குணங்களின் வடிவாக முருகா என்ற ஆறு குணங்களைத் தெய்வமாக்கி அன்பு பண்பு பாசம் பரிவு வீரம் சாந்தம் என்ற நற்குணங்களை முருகனாக வடிவம் படைத்து மலை உச்சியிலும் மலைக்கு நடுவில் இடும்பன் என்ற தீய குணங்களைப் படைத்து இடும்பன் என்ற நிலையையும் உணர்த்தினார் போகர்.

ஒவ்வொரு மனித ஆத்மாவும் அவர்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் உயர்வான நிலை பெற வேண்டியதன் அவசியத்தைக் குறிக்க
1.மலை மேல் முருகனின் சிலையை அறுகுணங்களாக ஆறுமுகனாகப் படைத்து
2.சிலையை வணங்கும் முறையைப் போகர் ஏற்படுத்தினார்.

இடும்பனான குணங்களை அகற்றித் தெய்வ குணத்தை ஒவ்வொரு ஆன்மாவும் பெறவேண்டும் என்பதற்கே முருகன் சிலையை வைத்தார் போகர்.

அந்தச் சிலையை வணங்கும் ஆன்மாக்களுக்கு எல்லாம் நல் ஒளியின் அலையை இன்றும் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றார்.

July 18, 2021

நினைப்பதையும் எண்ணுவதையும் தாண்டி… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுக்கப் பழக வேண்டும்

 

தங்க நகை செய்கின்றோம். அதைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் தான் தங்கம் சுத்தமாகின்றது.

அதிலே அந்தத் திரவகத்தை ஊற்றினால் தானே அவ்வாறு ஆகும்.

ஆனால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றாமலே அதிலுள்ள செம்பு பித்தளை வெள்ளி எல்லாம் கரைந்து போய்விடும் என்று சொல்லிக் கொண்டு “நான் நிறையச் சக்தி பெற்றிருக்கின்றேன்…” என்றால் எப்படி முடியும்…?

அது முடியாது.

அதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் அன்றாடம் நமக்குள் வரும் கோபம் சலிப்பு வேதனை வெறுப்பு ஆத்திரம் பயம் இதைப் போன்ற எத்தனையோ உணர்வுகளை நுகர நேர்கின்றது. அறிய நேர்கின்றது.

நம் சுவாசத்தின் வழி நம் உடலுக்குள் போய் இரத்தத்தில் கலந்து அணுவாக உருவாகும் கருவாக ஆகிவிடுகின்றது. பின்
1.இரத்தத்தில் சுழன்று முட்டை வெடித்து
2.எந்த உறுப்பில் ஒட்டிக் கொள்கின்றதோ
3.அங்கே அது தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கும்.
4.அது பெருகிய பின் நல்ல குணங்களால் நல்ல அணுக்களால் உருவான நம் உறுப்புகள் செயலாக்கங்கள் குறையும்
5.பின் உடல் நோயாகி மன நோயாகும்.

அத்தகையை தீமையான அணு உருவாகாமல் தடுக்க வேண்டும் அல்லவா. அப்படி உருவானாலும் அதைக் கரைத்துப் பிரிக்க வேண்டுமா வேண்டாமா…?

சாமி செய்யுமா…! சாமியார் செய்வாரா…! ஜாதகம் காப்பாற்றுமா…! சிந்தித்துப் பாருங்கள்.

நாம் எதை எண்ணிச் சுவாசித்தோமோ அதை அணுவாக உருவாக்குவது நம் உயிரின் வேலை. “அவனன்றி அணுவும் அசையாது…”

ஆகவே
1.நம் வாழ்க்கையில் நாம் எந்தத் தொழில் செய்தாலும் எந்த வேலை பார்த்தாலும் எந்த நிலையிலிருந்தாலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் தியானப் பயிற்சியையும் ஆத்ம சுத்தியையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

அதைச் செய்யவில்லையென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற முடியாத தகுதியற்றவராக மாற்றிவிடும்.
1.துருவ நட்சத்திரத்தின் அலைகள் நமக்கு முன் இருக்கும்
2.அதை நாம் எடுக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆகையினால் எந்தச் சந்தர்ப்பத்திலும்…
1.ஈஸ்வரா என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணுவதும்
2.கண்ணின் நினைவை வானிலே செலுத்தி துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தச் சக்தியைச் சேர்க்கும் எண்ணமும்
3.நமக்குள் இது வந்து கொண்டே இருக்க வேண்டும்.

சிறிது நாள் பழகினால் தன்னாலே எல்லாம் வரும்.

இந்தக் கலியில் ஞானம் பெறுபவகள் தப்புவார்கள் - ஈஸ்வரபட்டர்

 

ஞானத்தின் வழி செல்லும் போதனை முறையையும்… தியான வழிபாட்டின் முறையையும்… மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதின் நிலை என்ன…?

இந்தப் பூமி தோன்ற இந்தப் பூமியின் ஜீவன் பெற அஜ்ஜீவனின் வளர்ச்சியினால் மனித ஆன்மாக்கள் தோன்ற…
1.இவர்கள் சொல்லும் “இயற்கைச் சக்தி…” என்றாலும்
2.இதற்கு மூல சக்தி வளர ஒரு சக்தி தேவை.

அச்சக்தி அமிலக்கூட்டு நிலை பெற்றோர்கள் நம் சப்தரிஷிகளின் செயல் வடிவம்தான் நம் பூமியும்… பூமியில் வளர்ச்சியான எல்லாமுமே…!

பல கோடி ஆண்டுகளாக எண்ணிலும் கருத்திலும் எடுத்துச் சொல்ல முடியாத மாற்றங்களின் செயல் திறனில் வழி வந்த நிலையில்
1.மனித இனம் தோன்றி மனித இன குண அமில வளர்ச்சியிலிருந்து தான்
2.மீண்டும் மீண்டும் சகல சக்திகளையும் சக்தி வழி பெறச் செயலாக்க முடியும் என்ற உண்மையின் தத்துவத்தில்…
3.தான் வடித்த வடிவான “மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்.

தன் செயலின் பலன் தான் மனித இனம். இந்த மனித இனம் தோன்றி வளர சப்தரிஷிகளின் செயல் காலத்தில் பல கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.

இவ்வினம் தோன்றி அவ்வினத்தின் ஒளியை எடுத்தால் தான் மீண்டும் மீண்டும் இவ்வின வளர்ச்சிக்கு அவர்கள் பயிர் செய்ய முடியும். செய்த மகசூலில் வரும் பயிரை எல்லாம் உணவாக உண்டு கழித்து விட்டால் மீண்டும் பயிர் செய்ய விதை நெல் தேவைப்படுகின்றது.

அவர்கள் செய்த பயிருக்கு மகசூல் பெற்று அந்த மகசூலில் மீதமான விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மகசூல் காண முடியும்.

இதன் அடிப்படையின் நிலையை ஒத்துத்தான் நம் சப்தரிஷிகளின் நிலையும் மகசூலைக் கண்டு அதிலுள்ள பலனால் மீண்டும் மீண்டும் பயிர் செய்யச் செயல் புரியும் நிலை தான் “இங்கே உணர்த்தும் நிலை…!”

இதனை ஒத்துப் பல நிலைகளில் செயல் புரிந்து வருகின்றனர் சப்தரிஷிகள்.

இந்த மனிதக் கரு தோன்றி இது நாள் வரை அவர்களின் ஒளி வட்டத்தில் கலக்கும் நிலை கொண்ட ஆன்மாக்களின் வளர்ச்சியைக் காண பல காலமாகப் பல செயல்களைப் புரிந்து வருகின்றனர். ஆனால்
1.இம்மனித ஆன்மாக்களின் எண்ண வாழ்க்கையில்
2.அவ்வொளி ஞானத்தின் சித்து நிலை பெறப்படுவது மிகவும் குறைந்தே வருகின்றது.

தன் ஞான வளர்ச்சியை உலகுக்கு உணர்த்தத்தான் அந்தந்தக் கால கட்டத்தில் அச்சப்தரிஷிகளே தோன்றி அக்கால மாற்றத்தின் சில நிலைகளைச் செயல் புரிந்து அவர்கள் நல் ஒளியின் ஆத்மாக்களை எடுத்ததின் நிலை தான் நாம் இன்று கேள்விப்படும் பல மகான்கள் தோன்றிய நிலை எல்லாம்.

அந்த மகான்கள் தோன்றியதன் நிலை எல்லாம் தான் வளர்த்த பூமியின் சக்தியிலிருந்து தன் சக்தியின் பலனைப் பெற்றால் தான்… மீண்டும் சப்தரிஷிகளுக்கு அவர்களின் செயலின் மண்டலம் தோன்றி வளர்ந்து… “ஜீவனை வளர்க்க முடியும்…”

சூரியனைச் சுற்றியுள்ள நாற்பத்தியேழு மண்டலங்களில் நம் பூமியில் மட்டும் இன்று மனித ஆன்மாக்கள் வாழ முடிகின்றது. இன்று வாழும் இதே நிலை இக்கலியின் மாற்றத்தில் அழியப் பெறுவதனால் மீண்டும் மனித ஜனனம் தேவை.

காற்று மண்டலமே விஷக் கோளமாகச் சுழலும் இந்தக் கலியில் இதன் வளர்ச்சி நிலையின் மாற்றத்தின் பொழுது மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்ளச் செயலாக்கியுள்ள இந்த விஷக் குண்டுகள் வெடிப்பதற்கு முதலிலேயே இம்மனிதனின் ஞானம் ஒளி பெற்றால் அச்சப்தரிஷிகளின் ஒளிக் கூட்டு அதிகப்படும்.

உலகமே விஷமாகி ஜீவராசிகள் அனைத்துமே மடியப் போகின்றன என்றால் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…?

ஒரு பானை சாதம் வடிக்கின்றோம்.
1.அப்பானையில் இட்ட அரிசி எல்லாம் வெந்து சாதமாக ஆனாலும்
2.அதில் உள்ள கல் வேகுவதில்லை அல்லவா…!

பூமியில் உற்பத்தி செய்தது தான் அந்தப் பானையும் அக்கல்லும் விறகும் கரியும் அடுப்பும் எல்லாமே…! அதனதன் வளர்ச்சி கொண்டு விறகு எரிந்து உஷ்ணத்தைக் கக்கிச் சாம்பலாகின்றது.

சுட்ட சட்டி எந்த உஷ்ணத்தை ஏற்றி அடுப்பு எரிந்தாலும் அது தாங்கி நீரை அவியாக்கி அரிசி எல்லாவற்றையும் வேக வைத்தாலும் அந்தக் கல் மட்டும் எந்த உஷ்ணமாக ஏறினாலும் அப்படியே உள்ளது.

அதைப் போன்று ஒளியின் சக்தியால் பிம்பம் கொண்ட “நாம்” அச்சக்தி பிம்பத்தின் பிம்ப ஞானம் பெற்றால் இந்தப் பூமியின் மாற்றத்தினால்
1.நீரும் நெருப்பும் விஷ வாயும் நம் ஒளியை எந்தப் பின்னமும் படுத்தாது
2.சாதத்தில் கொதித்து வந்த கல்லைப் போன்று…!