ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 22, 2018

மகிழ்ச்சியை ஊட்டும் இந்திரலோகமாக இருக்கும் நம் உடல் வேதனையைத் தரும் நரகலோகமாக எதனால் மாறுகின்றது?

எமன் என்ன செய்கின்றான்? அக்னி குண்டத்தில் போட்டு வறுக்கின்றான்.
1.ஒருவர் ஐய்யய்யோ.. எரியுதே…! என்று சொல்கின்றார்
2.அம்மம்மா.. குத்துகிறதே…! என்று ஒருவர் சொல்லுகின்றார்
3.மண்டையெல்லாம் இடிக்கிறதே என்று சொல்லுகின்றார்கள்
இப்படி நமக்குள் குத்தல் குடைச்சல் எல்லாம் வருகின்றது.

ஏன் வருகின்றது…?

நம் கண்கள் – சித்திர புத்திரனாக நாம் உற்றுப் பார்ப்பதையெல்லாம் உடலுக்குள் பதிவாக்கி விடுகின்றது. உயிரோ அதை அணுவாக உருவாக்கிவிடுகின்றது.

தீமை செய்வோர் வேதனைப்படுவோர் ஆத்திரப்படுவோர் உணர்வுகளை எல்லாம் நாம் உற்றுப் பார்த்துக் கவரும் பொழுது அவையெல்லாம் சுவாசத்தின் வழியாக நமக்குள் வந்து அணுக்களாக உருவாகிவிடுகின்றது.

அப்பொழுது உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களால் உருவான அணுக்களுக்கும் இதற்கும் போர் முறையாகிவிடுகின்றது. அப்பொழுது உடலுக்குள் வலியும் வேதனையும் வருகின்றது. பின் நோயாகின்றது.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. வேடிக்கை தான் பார்த்தோம்.
1.பார்த்தது சித்திரம் (படமாக) தான்
2.ஆனால் புத்திரனாக (உடலுக்குள் அணுக்களாக) விளைந்து
3.அதனின் கணக்குப் பிரகாரம் (நல்ல அணுக்கள்- கெட்ட அணுக்கள்)
4.எமன் தண்டனை கொடுக்கின்றான் எனும் நிலையாக
5.நாம் நுகர்ந்த எண்ணங்களே எமனாக மாறுகின்றது.
6.நல்ல குணங்களுக்கெல்லாம் நம்முடைய எண்ணமே எமன் ஆகின்றது.

எமன் என்ற இந்த எண்ணம் நமக்குள் செயலாகி எமலோகத்திற்கு அழைத்துச் சென்று அதனால் நரகலோகத்தை அனுபவிக்கின்றோம்.

நம் உடல் ஒரு இந்திரலோகம் தான். ஆனால் வேதனை என்ற நிலைகள் வரும்போது நரக லோகமாக மாறி விடுகின்றது. இந்திரலோகமாக இருக்கும் இந்த உடலை நரக லோகமாகவே மாற்றி விடுகின்றோம்.

எமன் எருமை மேல் வருகின்றான். நாம் எதன் மேல் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ அது தான் பாசக் கயிறு. அதன் வழி கொண்டுதான் இந்த எண்ணங்கள் இயக்குகின்றது என்று இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்.

படங்களும் போட்டு காட்டுகின்றார்கள். நாம் அதைப் புரிந்து கொள்கிறோமோ என்றால் இல்லை.

ஞானிகள் நமக்குக் காட்டிய சாஸ்திரங்கள் சாதாரணமானவை அல்ல.