ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 11, 2018

“என்னைப் போல்…” பிறருடைய தீமைகளை நீக்கக்கூடிய பயிற்சியாக இதை நீங்கள் அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள் – ஞானகுரு

(1)  தபோவனத்திற்கு வருபவர்கள் கவனத்திற்கு:-

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்கு வருபவர்கள்
1.நாங்கள் அருள் ஞானம் பெற வேண்டும்
2.மெய்ப் பொருள் காணும் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும் என்ற உணர்வுடன் வருதல் வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலேயும் தியான நிலைகளை முன் நின்று நடத்துவோர்கள் ஆங்காங்கு இருக்கும் அனைவரையும் ஒன்று சேர்த்து இணைத்துத் தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கும் பழக்கத்திற்குக் கொண்டு வருதல் வேண்டும்.

கூட்டுத் தியானங்களை அமைத்து அருள் ஞானத்தைப் பெருக்கி உங்கள் பார்வையால் பிறரின் நோய்களைப் போக்கும் தன்மையும் தீமைகளைப் போக்கும் நிலைகளையும் நீங்கள் வழிப்படுத்தி வருதல் வேண்டும்.

இது உங்கள் தலையாயக் கடமையாக இருத்தல் வேண்டும்.

அருள் வழியைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கிப் பெற்றுப் பிறருடைய தீமைகளைப் போக்கும் தன்மைக்கு வர வேண்டும். இருள் சூழ்ந்த நிலைகளை நீக்கிடும் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்.


(2)  மற்றவர்களின் நோய்களை நீக்கும் கூட்டுத் தியானப் பயிற்சி:-

நோய்களைப் போக்க வேண்டும் என்றால்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் உடலிலுள்ள அது எந்த நோயோ அது  நீங்க வேண்டும் என்று
4.அதே எண்ணத்தில் தியானம் செய்ய வேண்டும்.

நோய் உள்ளவர்கள் கண்ணைத் திறந்து துருவ நட்சத்திரத்தை எண்ணி ஏங்கி அந்த அருள் சக்தி என் உடலில் படர வேண்டும். என் நோய் நீங்க வேண்டும் என்று எண்ணினால் உடல் நலமாகும்.

உதாரணமாக ஒருவரால் முடியவில்லை என்றால் பத்து பேர் சேர்ந்து கூட்டுத் தியானமிருந்து அவர் நோயைக் குணப்படுத்த முடியும்.

அவரை எழுந்து நிற்கச் சொல்லி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும் என்று ஏங்கி இருக்கும்படி சொல்லுங்கள்.

மற்றவர்கள் தியானத்தில் இருந்து மகரிஷிகளின் அருள் அவர் உடலில் படர வேண்டும். அவர் உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும், அவர் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும், அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்போது அவரின் உடலில் ஒரு விதமான கரண்ட் பாய்வது போல் இருக்கும். அப்போது அவர் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
1.அவரால் முடியாததை நீங்கள் எல்லோரும் சேர்ந்து சொல்லி
2அவரின் நோய்களை இவ்வாறு மாற்றிப் பழக வேண்டும்
3..இதில் பல அற்புதங்களைப் பார்க்கலாம்.
நீங்கள் இதைச் செய்து நல்லதாக்க வேண்டும்.

உங்கள் எண்ணத்தால் மற்றவர்களில் நோய்களைப் போக்கச் செய்து ஒருவருக்கொருவர் உதவும் நிலையாக இந்தப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஒருவருக்கு நோய் இருக்கிறதென்றால் முதலில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற வலுவை நமக்குள் ஏற்றிக் கொண்ட பிற்பாடு தான் நோயாளியின் உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து நோய் நீங்கி உடல் நலமாக வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

உடல் நலமாக வேண்டும் என்று முதலிலேயே தியானிக்கக் கூடாது. அருள் சக்தியை எடுத்துத் தியானித்து விட்டுத்தான் செய்ய வேண்டும்.

கடையில் வாங்கிய காய்கறிகளை அப்படியே நறுக்கிவிட்டுப் பறிமாறினால் ருசி வருமோ? வேகாத நிலையில் தான் இருக்கும்.

அதைச் சமைத்து ருசியாக ஆக்கிய பின் தான் மற்றவருக்குக் கொடுக்க முடியும். ஆகவே அருள் ஞானத்தை நமக்குள் படைத்து அந்த வலுவின் தன்மை கொண்டு மற்றவர்களுக்கு அந்தச் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று ஒரு மனதோடு ஏங்கி இணைக்க வேண்டும்.

மகரிஷிகளி அருளை அப்படி இணைக்கப் போகும் போது மற்றவர்களும் ஏங்கிப் பெற்றார்கள் என்றால் நாம் பாய்ச்சும் உணர்வுகள் அங்கே அவர்களின் நோயை நீக்க உதவும்.

ஆனால் சில நோய்களுக்கு உடனடியாக மருந்து கொடுக்க வேண்டியதிருக்கின்றது. மருத்துவர்களிடம் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தியால் மருந்து உங்களுக்கு வேலை செய்து நன்றாக ஆகும் என்று சொல்லலாம். விரைவில் நல்லதாக்கவும் உதவும்.

அதே சமயத்தில் நோயாளி (வெளிநாட்டில்) மருத்துவமனையில் படுத்திருக்கிறார். அவர் குடும்பத்தினர் வந்து சொல்கிறார்கள் என்றால் எல்லோரும் கூட்டுத் தியானம் இருந்து
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும்,
2.அவர் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும்
3.அவர் உடல் நலம் பெற வேண்டும்
4.மகிழ்ச்சியான நிலைகள் பெற வேண்டும் என்று
5.தியானம் முடிந்தவுடன் எல்லோரும் சேர்ந்து அந்த உணர்வை எடுக்க வேண்டும்.

அவர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்து அவர் குடும்பத்தாரையும் கலக்கச் செய்து அந்த உணர்வை எடுக்கச் செய்ய வேண்டும். கூடுமான வரை அந்த நோயிலிருந்து விடுபட முடியும்.


(3)  உடலில் ஆவி புகுந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய பயிற்சி:-

இதே போல சில ஆவியின் நிலைகள் சிலர் உடலில் புகுந்துவிடும். ஆவியின் தன்மை ஒரு உடலுக்குள் வந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளோருக்கும் அதனால் பல தொல்லைகள் வரும்.

அந்தத் தொல்லைகள் வரும் போது நீங்கள் அனைவரும் கூட்டுத் தியானம் இருந்து  
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்,
2.அவர் உடலில் உள்ள அந்த ஆன்மா மகரிஷியின் அருள் சக்தி பெற்று
3.அது பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்,
4.அந்த உடலிலே நன்மை பெறும் சக்தியாக அதை மாற்றுதல் வேண்டும்.
5.அந்த உடலை வாட்டி வதைக்கும் தன்மையிலிருந்து அவர்களை மீட்கலாம்.

மாறாக “இப்படி இருக்கிறதே…!” என்று ஆவிகள் ஓட்டுவோரிடம் சென்றால் அதை ஓட்ட முடியாது.

விரட்ட வேண்டும் என்று அதிகாரத்தில் செயல்பட்டால் எதிர் மறைகள் அதிகமாகி எதன் வேகத்தில் அந்த அணுக்கள் இருக்கின்றதோ அது தான் பெருகும்.

ஆகவே தியானம் செய்பவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தியை அவருக்குள் பாய்ச்சி
1.உள்ளிருந்து அந்தத் தீவினையைத் தடுத்தல் வேண்டும்.
2.அருள் சக்தியை நமக்குள் கூட்டும் போது
3.அது  இதை உணவாக உட் கொண்டு அதன் வீரியத்தைக் குறைக்கும்.
4.அதற்கும் நன்மையாகிறது நமக்கும் நன்மையாகிறது.

இப்படி நீங்கள் ஒவ்வொருவரும் தீமைகளை அகற்றக் கூடிய வல்லவர்களாக மாற வேண்டும்.
1.மகரிஷிகள் எவ்வாறு தன் பார்வையில் பல பிணிகளைப் போக்கினார்களோ
2.இதே போல அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் வாழ வேண்டும்.
3.உங்கள் பார்வையில் தீமைகளைப் போக்கும் சக்தி பெற வேண்டும்.
4.தீமைகளைக் கேட்டறிந்தால் உங்களுக்குள் வராது தடுத்துக் கொள்ளும் நிலைகள் பெற வேண்டும்.


(4)  உலகில் நடக்கும் அசம்பாவிதங்கள் மத இனக் கலவரங்கள் நம்மைப் பாதிக்காமல் தடுக்கும் பயிற்சி:-

வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நிலைகள் வரும் போதும் பத்திரிக்கைகளைப் பார்க்கும் போதும் மற்ற அரசியல் வாழ்க்கையில் கடும் தீமை என்ற நிலை வரும் போதும் மத பேதம் இன பேதம் என்ற போர்களில் பல நிலைகளைக் கேட்டறியும் போதும் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு உடலில் இருக்கும் உயிரை ஆண்டவனாக மதித்து
2.அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அமைதி பெற வேண்டும்
3.ஒன்று சேர்ந்து வாழும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
4.அப்பொழுது பிறிதொரு தீமையான உணர்வு நம்மை ஆட்டிப் படைக்காது.

இன்றைய மனிதனின் வாழ்க்கையில் மதத்திற்குள் இனமென்று இனத்திற்குள் இனமென்று இனத்திற்குள் இனமென்று பிரிந்து ஒருவருக்கொருவர் போர் முறை கொண்டு தாக்கி வாழும் நிலைகள் தான் வருகிறது.

என் இனத்தைத் தாழ்த்திப் பேசுகிறான் என்ற உணர்வுகளால் பகைமை உணர்வுகளை வளர்த்து மனிதனை அழித்திடும் நிலையாக மாறி விடுகிறது. நம் நல்ல குணங்களை மறைத்திடும் இந்த நிலைகளை நாம் நீக்கிடல் வேண்டும்.

இந்தத் தியானங்களை எடுத்து கணவன் மனைவி ஒன்று சேர்த்து வாழக்கூடிய பக்குவத்தையும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கக் கூடிய  நிலைகளையும் குழந்தைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டும் என்ற நிலைகளையும் நீங்கள் அனைவருக்கும் எடுத்துச் சொல்லுதல் வேண்டும்.

ஆனால் கேட்காதவர்களுக்குச் சொன்னால் எதிர்ப்பு தான் வரும்.

உங்களை அணுகி வருபவர்களுக்குத் தான் சொல்லிப் பழக வேண்டுமே தவிர அணுகாதவர்களுக்குச் சொன்னால் அவர்கள் உங்களை அசுத்தமான நிலைகளில் பேசத் தொடங்கி விடுவர்.

அந்த மாதிரி இருந்தாலும் அவர்களும் அந்த நல்ல நிலைகளைப் பெற வேண்டும் என்று நாம் தியானித்து அவர்கள் பொருளறியும் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக் கொண்டால் நாளடைவில் வேறொரு சந்தர்ப்பத்தில் அவர் நம்மைத் தொடர்பு கொண்டால் அவர் திருந்தி வாழும் அல்லது சிந்திக்கும் தன்மை ஏற்படும்.

இதையெல்லாம் மனிதனின் வாழ்க்கையில் நாம் தெளிவாக்கிடல் வேண்டும்.


(5)  தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களின்  கவனத்திற்கு:-

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவரும் எப்பொழுதுமே உங்கள் கஷ்டத்தைச் சொல்லிக் கேட்காதீர்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வியாபாரம் பெருக வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்
4.நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று சொல்லிவிட்டு
5.மகரிஷிகளின் அருள் சக்தியால் குடும்பத்தில் எல்லோரும் நலம் பெற வேண்டும்.
6.எங்கள் குழந்தைகள் சிந்தித்துச் செயல்படும் தன்மை வேண்டும்
7.என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று
8.இது ஒரு பழக்கமாக வைத்து நீங்கள் தியானிக்க வேண்டும்.

நீங்கள் கண்ணைத் திறந்தே இவ்வாறு தியானியுங்கள். கண்ணை மூடித் தியானிக்க வேண்டாம்.

1.நீங்கள் ஆயுட்கால மெம்பராகச் சேர்ந்து அங்கத்தினராக இருந்திடல் வேண்டும்.
2.நாம் வேறல்ல நீங்கள் வேறல்ல என்ற நிலைகளும்.
3.இந்த உலகம் நலம் பெற வேண்டும்
4.உலகம் இருட்டிலிருந்து அனைவரையும் மீட்டிடும் சக்தியாக நாம் கொண்டு வருதல் வேண்டும்.
5.குறைகள் நமக்குள் வராது பாதுகாத்தல் வேண்டும்.


(6)  குறைகளை வளர்க்காதீர்கள்:-

குறைகள் வந்தாலும் அடுத்த நிமிடமே அவர்களை அறியாமல் நம்மை ஆட்டிப் படைக்கும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற இந்த உணர்வினை இணைத்து ஒவ்வொரு நிமிடத்திலும் குரு காட்டிய அருள் வழிகளைக் கடைப்பிடித்தல் வேண்டும்.

தீமைகளையும் குறைகளையும் இப்படி நீக்கிக் கொண்டு வந்தால் உயிருடன் ஒன்றிய ஒளியின் கனியாக நாம் ஆகின்றோம். உயிருடன் இணைந்து என்றும் ஒளியின் நிலை பெற இது உதவும்.

இதைப் போல நாம் ஒவ்வொருவரும் தீமைகளிலிருந்து வெளிப்படும் உணர்வுகளிலிருந்து தீமைகளிலிருந்து விடுபட்டு அருள் ஒளியின் உணர்வுடன் நாம் வாழ்ந்திடல் வேண்டும். அருள் ஞானம் பெற்றிடல் வேண்டும்.


(7)  பிறருக்கு உதவி செயபவர்களுக்கு வரும் சிக்கல்கள்:-

உயர்ந்த மனிதர்களாக இருப்பார்கள். எல்லாருக்கும் உதவியும் செய்திருப்பார்கள். ஆனால் உதவி பெற்றவர் இறந்து விட்டால் “நான் உதவி செய்தேன்… அவர் இறந்துவிட்டாரே…!” என்று எண்ணுவார்கள்.

அதே சமயத்தில் உதவி பெற்றவரோ இறக்கும் பொழுது “மகராசன்…! தக்க சமயத்தில் எனக்கு உதவி செய்தார்… நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்…! என்ற எண்ணத்தில் ஆன்மா பிரிந்து விட்டால் உதவி செய்தவரின் உடலுக்குள்ளே நேராக வந்து விடுகிறது.

ஆனால் உதவி செய்தவர் தப்பு செய்யவில்லை. உதவி தான் செய்தார். அப்படி உதவிகள் செய்தாலும் பிறிதொரு ஆன்மா உடலுக்குள் வராது தடுக்க வேண்டும்.

வேதனை என்பது விஷம். அவர் வேதனையான உணர்வை நாம் எடுத்துக் கொண்டு உதவி செய்தோம் என்றால் அந்த நிலை ஆகிவிடும்.

ஆனால் அதை அடக்கியவன் மகரிஷி. அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி இதைச் சொல்லித் தான் அடுத்தவர்களுக்கு நாம் உதவி செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர் உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும். அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று சொல்லி மற்றவர்களுக்கு உதவி செய்தால் அவர்கள் உணர்வு நமக்குள் வராது.

ஒரு நோயாளியின் நிலையை நீங்கள் பார்க்கச் சென்றால்
1.உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த நோயாளியின் நிலையைக் கண்ட பின்
3.அந்த உணர்வு நம்மைத் தாக்காதபடி சமப்படுத்தி
4.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெற வேண்டும்.
5.என் உடல் முழுதும் படர வேண்டும்.
6.என் ஜீவான்மா பெற வேண்டும் என்றும்,
7.மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலிலே படர வேண்டும் என்று கூட்டு தியானங்களிலே இதைப் போல செய்து

நோய்களை நீக்கவும் அவர்கள் குடும்பங்களிலே மன நிலையை வலு பெறச் செய்யவும் இந்த மாதிரி ஒரு நிலைக்கு வர வேண்டும்.

ஏனென்றால் நாம் ஒவ்வொருவரும் இதைப்  பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். இதை எல்லோரும் நாம் செயல்படுத்த வேண்டும் என்று வேண்டிப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.