ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 11, 2018

“உயிரைத் தாயாகவும்… கடவுளாகவும்… ஆண்டவனாகவும்… எண்ணித்தான்” மகா மகரிஷிகள் அனைவரும் விண்ணுலகம் சென்றுள்ளார்கள்

நம் உயிரே தாயாகின்றது. தாயாக இருக்கும் உயிர் தனக்குள் மோதும் உணர்வுகளை அணுவாக உருவாக்குகின்றது. உடலாக ஆக்குகின்றது.

உடலாக உருவாக்கியபின் அதற்குள் வளர்த்த அணுக்கள் அனைத்தையும்
1.காத்திட வேண்டும் என்ற உணர்வினைத் தூண்டித் தூண்டித் தான்
2.ஒவ்வொரு உடலையும் காத்துக் காத்து
3.நம் மனித உடலையும் உருவாக்கித் தந்திருக்கின்றது உயிர். (தாயாக இருந்து)

மனித உடல் உருவாக உயிர் காரணமாக இருந்தாலும் ஒரு தாய் தனக்குக் குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தின் ஏக்கம் கொண்டு தன் உடலுக்குள் கருவாக உருவாக்கிய பின் அந்தக் குழந்தையைக் காத்திடும் நிலையாக நம்மை வளர்த்தார்கள்.

பிறந்த பின் ஒவ்வொரு தீமையிலிருந்தும் குழந்தையைக் காத்து அதை வளர்த்திட அந்தத் தாய் படும் அவஸ்தைகளை நாம் பார்க்கிறோம். கடந்த காலத்தில் குழந்தையைக் காத்திட தாய்மார்கள் அந்த ஞானிகளை எண்ணி ஏங்கினார்கள்.

இப்பொழுது இருக்கும் தாய்மார்கள் எந்தெந்த ஆசைகளைக் கூட்டித் தெய்வங்களை எண்ணுகின்றார்களோ “இந்தத் தெய்வம் காக்கும்...!” என்ற நிலையில் மனித உடலில் உருவான ஆசையின் உணர்வு கொண்டு  எண்ணும் பொழுது மனித உடலின் செயலுக்குத்தான் வருகின்றார்கள்.

ஆனால் நமக்குள் அந்த அருள் ஞானியின் உணர்வின் தன்மையைத் தாயாக்க வேண்டியதுதான் முறை,

உயிர் ஒளியாக இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் உயிரைத் தாயாக எண்ணி அந்தத் தாயின் அணைப்பிலே நாம் ஒளியாக வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நம் குழந்தைகளை எப்படிக் காத்துக் கொள்கின்றமோ...? நம்முடன் அரவணைப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு எவ்வளவு பரிவுடன் செயல்படுகின்றோமோ...? இதே போலத்தான்
1.உயிருடன் ஒன்றிடும் நிலையாக அந்தப் பரிவைக் காட்டும் பொழுது
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றும் உணர்வினைப் பெறும்போது
3.தாயின் (உயிரின்) அணைப்பின் உணர்வுகள்  நமக்குள் அது தெளிந்து தெளிந்திடும் சக்தியாக விளையும்.

உயிரைத் தாயாகவும் கடவுளாகவும் நம்மை ஆளும் ஆன்டவனாகவும் எண்ணினால்
1.எந்தக் குறைபாடுகள் வந்தாலும்
2.அவைகளை நமக்குள் உட்புகாது தடுக்க முடியும்.

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக இருக்கும் ஆறாவது அறிவின் துணை கொண்டு பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்ற நிலைகளை நமக்குள் உருவாக்கிக் கொடுத்ததும் தாயான நமது உயிர் தான்.

அதனின் துணை கொண்டு மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று ஒளியின் சிகரமாக விண்ணுலகம் சென்ற “மகரிஷிகள் வெளியிட்ட மூச்சின் அலைகளை” நாம் பெற்றுப் பழக வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் எத்தகைய துயரங்களைப் பார்த்தாலும் அல்லது வேதனைப்படுவோரைக் கண்டாலும்
1.அவைகளை எல்லாம் அறிந்து கொள்ளும் நிலையில்
2.உயிரான ஈசனுக்கு அந்தத் துன்பம் வரும் பொழுது தான்
3.”துன்பப்படுகின்றார்கள்...” என்று அறிந்து கொள்கிறோம்.

அந்தத் துன்பம் இல்லாத நிலைகள் பெறவேண்டும் என்றால் அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து
1.உயிரைத் தாயாகவும் குருவாகவும் ஆன்டவனாகவும் மதித்து
2.அந்த ஈசனுக்குத் தீங்கிழைக்கும் உணர்வினை நீக்கி
3.தீங்கினை நீக்கிடும் உணர்வினைத் தனக்குள் வளர்த்து
4.அவனுடன் ஒன்றி அவனின் அணைப்பிலே அவனாக நாம் ஆக வேண்டும்.

மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் மெய் ஒளியைப் பெறுவேன்... மெய் அருளைப் பெறுவேன்... என்னை அறியாது வந்து சேர்ந்த இருளை ஆறாவது அறிவின் துணையை நாடி நீக்குவேன்...! என்று உறுதி கொள்ள வேண்டும்.

உயிரான தாயிடம் நாம் சேயாக இருந்து மெய் ஞானிகளின் அருளைப் பெற்று என்றும் பதினாறு என்ற நிலையாக பெரு வீடு பெரு நிலையை அடையும் தன்மையை இந்த மனிதச் சரீரத்தில் தான் உருவாக்க முடியும்.

1.ஆகவே சூட்சுமத்தில் இருக்கும் மகரிஷிகளின் அருளாற்றல்களை
2.உயிரின் துணை கொண்டு நாம் நமக்குள் இணைப்போம்.

அப்படி இணைக்கும் மார்க்கத்தைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் உங்களுக்குத் தொடர்ந்து உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.