ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 31, 2022

நீங்கள் மிகப் பெரிய டாக்டராக முடியும்

இன்று பெரும்பகுதியான மக்களுக்கு விஞ்ஞான அறிவால் வளர்ந்த நிலையில் உணவுடன் கலந்த விஷத்தன்மைகள் (பூச்சி மருந்துகள்) உடலில் பரவிக் கோப உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையில் இயக்குகின்றது. அதனால் உடலில் கடுகடுப்பு அதிகமாக இருக்கும்.

நாம் தவறு செய்தோமா…? இல்லையே…!

விஞ்ஞான அறிவிலே சிக்கி இன்று இந்த நிலைகளில்தான் நாம் இருக்கின்றோம். குருநாதர் இதையெல்லாம் உணர்த்தினார்… கண்டேன். அதைத்தான் உங்களிடம் சொல்கின்றேன் (ஞானகுரு)

மருத்துவம் படிக்கின்றார்கள்…
1.உடலில் இன்னென்ன குறைபாடுகள் இருக்கிறது
2.இன்னென்ன மருந்து இன்னென்ன வேலை செய்யும்
3.இன்ன மருந்தைக் கொடுத்து மாற்றினால் குறைபாடு நீங்கி உடல் சரியாகிவிடும் என்று அறிந்த பின்பு அதன் வழி செய்கின்றார்கள்.

ஆனால் தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும்…? என்ன ஆனதோ ஏது ஆனதோ…! என்று பதட்டம் அடைய வேண்டி இருக்கும்.

டாக்டர்கள் சில கருவிகளை வைத்து உடலில் அந்தந்த இடங்களில் நாடித் துடிப்புகளைப் பார்ப்பார்கள்.
1.இருதயத்தினுடைய வேகத் துடிப்பைப் பார்த்து… இந்த நிலைகள் தான் இருக்கும் என்று டாக்டர்கள் அறிகின்றார்கள்
2.சரியான மருந்தினைக் கொடுக்கின்றார்கள்.

இதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… இந்த உலகம் எப்படி இயங்குகின்றது…? எந்தெந்த நிலையில் இருக்கின்றது…? என்ற ஞானத்தைக் கொடுத்து அதைத் தெரிய வைத்தார்.

அதற்கு 20 வருடங்கள் ஆனது. காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து தான் அதை எல்லாம் கண்டேன்… உணர்ந்தேன்.

“டாக்டராக” ஒருவர் வந்தாலும்… படிக்கப்படும் போது அவர்கள் ஆரம்ப நிலையில் இருந்து படிப்படியாகத்தான் அந்த அறிவினுடைய ஞானத்தில் வளர்ச்சியாகி வருகின்றனர்.

அது முழுமையாகும் போது தான்…
1.இது இன்ன நோய்…
2.அது இந்த நிலையில் இருக்கிறது…
3.அதற்கு இந்த மருந்து கொடுக்க வேண்டும்…! என்று பழக்கப்படுத்திச் செயல்படுகின்றார்கள்.

பழக்கப்படுத்தி… அதைச் சரியான நினைவு கொண்டு மீண்டும் அவர்கள் செயல்படுத்திக் கொண்டு வந்தால் என்றால் அவர் உயர்ந்த டாக்டராக மாறுகின்றார்.

அதில் ஏமாந்து விட்டால் இதற்கும் அதற்கும் ஒத்துக்கொள்ளவில்லை என்றால்… ஒரு நொடி மாறினால்… இவர் கொடுக்கும் மருந்து நல்லது செய்வதற்குப் பதில் தீமைகளை உண்டாக்கிவிடும்.

ஒரே மருந்து தான் அந்த நோயைக் கேட்கும் ஒரே டாக்டர் தான் அந்த மருந்தினையும் கொடுக்கின்றார். இருந்தாலும்
1.மருந்து கொடுக்கப்படும் பொழுது இன்னொரு இடத்தில் துடிப்பு வேறாக இருக்கிறது என்றால்
2.அந்த எதிர்ப்பு நிலைகளைப் பரீட்சித்துப் பார்த்து அதற்குத் தகுந்த மாதிரி அதையும் அனுசரித்து
3,அதைத் தணிக்கும் மருந்துகளையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

சிலர்… அது என்ன…! இந்த டாக்டர் இத்தனை மருந்துகளைக் கொடுக்கிறார் என்றும் கேட்பார்கள்.
1.அறிந்து கொண்ட உணர்வு கொண்டு
2.அது வளர்ச்சியான நிலையில் கொண்டு செயல்படுத்துவது தான் அது.

ஆக… டாக்டருக்குப் படித்துக் கொண்ட மாதிரி உங்களுக்குள் வரக்கூடிய தீமைகளையும் நோய்களையும் நீக்கக்கூடிய சக்தியாக “பெரிய டாக்டராக… துருவ நட்சத்திரத்தின் உணர்வை…” உங்களிடம் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரம் “அத்தகைய டாக்டராக…” எப்படி வளர்ந்தது…? என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அதைச் சொல்லிக் கொண்டே வருகின்றோம்.

அதை வைத்து “நீங்களும் பெரிய டாக்டராக ஆக முடியும்..!”

உங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி ஒளியாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தியாக உங்களுக்குக் கிடைக்கும்.

அதற்குத்தான் இதை உபதேசிக்கின்றேன்.

October 28, 2022

மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்

ஐம்புலனை அடக்கிடவே அருள் புரியுங்கள் என்று பாடலைப் பாடுகின்றீர்கள். ஐம்புலனை அடக்குவது என்றால் என்ன...?

பார்த்தல்... சுவைத்தல்... கேட்டல்... நுகர்தல்... எண்ணல்... எனும் இந்த ஐம்புலன்களும் பெற்ற மனிதர்கள் எல்லோருமே தான் பெற்ற அருளை…
1.பார்த்தவுடன் பதட்டப்படாமல்
2.பார்க்கும் நிலையில் ஒன்றை எடை போடாமல்
3.பார்த்த பொருள் ஒன்றைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்றில்லாமல்
4.தான் பார்த்ததை ஒருநிலைப்படுத்தி
5.பார்த்த நிலைக்கு எதையும் முடிவு எடுக்காமல்
6.தான் பார்க்கும் அருளைப் பெற்ற “அந்த அருளின் சக்தியை” நல்வழியில் உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படித்தான் சுவைக்கும் கேட்பதற்கும் நுகர்வதற்கும் மன எண்ணத்திற்கும் எல்லாவற்றுக்குமே ஆண்டவன் அருளிய இத்தன்மை உள்ளது.

இத்தன்மை என்பது மனித ஜென்மங்கள் ஐம்புலனை அடக்கும் தன்மை மிருக ஜெந்துக்களுக்கு இல்லையப்பா...!

ஐம்புலனை அடக்கிடும் தன்மை பெற்ற மனிதனே தன் மன நிலையை அடக்கிடாமல்...
1.“வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்...” என்று இருக்கின்றார்கள்
2.வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாத மானிடர்கள்

ஆக இவ்ஐம்புலனை அடக்கி ஆளும் சக்தியையே அதி பேராசையினால் இவ்ஐம்புலனையும் அலைய விட்டு விடுகின்றார்கள்...! பேராசை நிலைக்கு அடிமைப்பட்டவன் தானப்பா இவ்ஐம்புலனையும் அலைய விட்ட ஒவ்வொரு மனிதனும்.

இந்த மனித ஜென்மங்களுக்கு ஆண்டவன் அருளிய “அரும் பெரும் பொக்கிஷமப்பா...” இந்த ஐம்புலனைப் படைத்தது.

மிருக உடலுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள... தன் உணவைத் தேட... ஆண்டவனால் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் ஒவ்வொரு காப்பு நிலை உள்ளதப்பா.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் என்ன செய்கின்றான்...?

ஒருவனை ஒருவன் ஏமாற்றி... ஒருவனுக்காக ஒருவன் ஒருவனை அழிக்கப் பல பில்லி சூனியங்கள் பல மந்திரங்கள் பல ஏவல்கள் எல்லாம் செய்கின்றனர்.

தன் எண்ணத்தையே பிறரையே அழிக்க உபயோகப்படுத்துகின்றனர்.
1.பிறரை அழிப்பது மட்டுமல்லாமல்
2.அந்நிலையே தன்னை வந்து தாக்குகிறது என்பதை அறியாமல்
3.தான் பெற்ற பாக்கியத்தை எல்லாமே சிதறவிட்டு வாழ்கிறார்கள் பல கோடி மக்கள்.

எவன் ஒருவன்...
1.பிறரையே எண்ணிக் கொண்டுள்ளானோ
2.அவன் வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லையப்பா...!

நீங்கள் கேட்கலாம்... தன்னையே பார்த்துக் கொண்டுள்ளவன் “சுயநலவாதியல்லவா” என்று...! நான் சொல்லும் சொல் அதுவல்லப்பா...!

நான் சொல்வதெல்லாம்...
1.உன்னை நீ உணர்ந்து
2.உன்னில் அந்த ஈஸ்வர சக்தியைப் பெற்று
3.உன் உழைப்பில் நீ உண்டு
4.உன்னைச் சார்ந்தோரின் நிலையை நீ பார்த்து
5.உன்னால் மற்றவர்களுக்குப் பயனை மட்டும் தான் அளிக்கும் நிலையில் நீ இருந்து
6.உன் வாழ்க்கையையே நீ அமைத்துக் கொண்டு
7.பிறரின் சொல்லுக்காக... அவச் சொல்லுக்காகப் பயப்படாமல்... பிறரின் புகழுக்காக ஏங்கிடாமல்… மயங்கிடாமல்
8.உன்னையே நீ நம்பு...! என்பதன் பொருளைப் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையே பூரிப்புடன் வாழும் வாழ்க்கை...!

நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழ்வதல்ல. எவன் ஒருவன் பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டோ பிறரைப் புகழ்ந்தோ வாழும் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல..!

மனித உடலில் மன நிலையில் கொதி நிலைதானப்பா..! அந்த மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டுமப்பா..! முடியுமப்பா...!

October 27, 2022

நல்லதைக் காக்க ஒரு சக்தி உங்களுக்கு வேண்டுமல்லவா…!

சந்தர்ப்பத்தில் ஒரு வேதனை வந்து விட்டால் நம்மால் ஒரு கணக்கைச் சீராக பார்க்க முடிகிறதா… ஒரு வேலையைச் சரியாகச் செய்ய முடிகிறதா… ஒரு சாமானை எடுத்துப் பத்திரமாக வைக்க முடிகிறதா…? இல்லை.

நாம் சரியாகச் செய்யவில்லை என்கிற பொழுது மீண்டும் வேதனைப்படுகின்றோம். அப்பொழுது எது இயக்குகின்றது…? காரணம் என்ன…?

நாம் நல்லது செய்து கொண்டிருக்கும் பொழுது
1.திடீரென்று ஒரு தவறான நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்கிறார்கள்..
2.தவறு செய்வோரை உற்றுப் பார்க்கின்றோம் அல்லது என்ன ஏது என்று விசாரிக்கின்றோம்…
3.உணர்ச்சிகளைத் தூண்டிய பின் அது நமக்குள் வளர ஆரம்பிக்கின்றது.

அந்த நேரத்தில் நாம் செய்து கொண்டிருக்கும் வேலையைச் சரியாகச் செய்வதற்கு மாறாகத் தவறாகச் செய்து விடுகின்றோம். ஐயோ… இவ்வளவு தூரம் நாம் செய்தும் அது சரியாகவில்லையே… பலன் இல்லாமல் போய்விட்டதே… நஷ்டமாகிவிட்டதே…! என்ற வேதனை வந்து விடுகின்றது

1.தவறு நடக்கிறது என்ற அந்த உணர்ச்சிகளை ஊட்டும் பொழுது நமக்குள் ஜீவன் பெறுகின்றது
2.நாம் சுவாசிக்கும் ஆன்மாவிலே அது புகுந்து கொள்கின்றது
3.உயிரிலே பட்டபின் அதற்குத்தான் சாப்பாடு கிடைக்கின்றது… நல்ல குணங்களுக்கு நல்ல சாப்பாடு போவதில்லை
4.ஆகையினால் நல்லதை நம்மால் இயக்க முடியாமல் போய்விடுகின்றது.

இப்படி நம் வாழ்க்கையில் தவறு செய்யாமலேயே ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் இயக்கத்திற்கு வருகிறது. நம் உடலில் அணுக்களாக விளைந்ததை மீண்டும் நினைவுபடுத்திய உடன் நமக்குள் இவ்வாறு சில மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றது. ஆனால் நாம் தவறு செய்வதில்லை.

இதைப் போன்ற தீமைகளை மாற்றுவதற்கு நாம் என்ன வைத்திருக்கின்றோம்…? அதற்கு ஒரு சக்தி வேண்டும் அல்லவா…!

அந்த சக்தி பெறுவதற்குத் தான் உங்கள் நல்ல குணங்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்பொழுது ஊட்டமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

நல்லதைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கி வருகின்றீர்கள். உங்களுடைய உணர்வுகள் எதையெல்லாம்… எப்படி எல்லாம் அது இயக்குகிறது…? என்பதை உணரும்படி செய்கிறோம்.

எதன் வழி கொண்டு…!

குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நான் (ஞானகுரு) எனக்குள் கலந்து வைத்திருக்கின்றேன்.
1.உங்களுக்குள் அதைக் கலந்து உண்மையின் உணர்வுகளைத் தெரியப்படுத்துகின்றோம்.
2.அந்த நல்ல நிலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்… அதை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைவோடு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் எண்ணத்துடனே இதை உபதேசிக்கின்றேன்.
4.கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உணர்வுகளில் அதை இணைத்துக் கொண்டே வருகின்றேன்
5.உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி தன்னாலே உங்களுக்கு வந்துவிடுகிறது

தன்னால் எப்படி வருகின்றது…?

அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள். அப்போது யாம் உபதேச வாயிலாகக் கொடுத்த அந்தப் பதிவு உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுவில் சிறிதளவு இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து உங்களுக்குள் அதைப் பெருக்க ஆரம்பிக்கும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி வளர வளர… உங்களுக்குள் அது சக்தி வாய்ந்ததாக மாறும். தீமை அகற்றும் சக்திகளை நீங்கள் பெறுகின்றீர்கள் உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

யாகத்தை வளர்த்து மந்திரங்களை ஓதும்போது தான் ஆண்டவன் வருவானா…! யாருக்காக...? யாரின் நிலைக்காக...?

சாமியார்கள் என்றாலே வேஷதாரிகள்... ஏமாற்றுக்காரர்கள்... சூனியக்காரர்கள்... என்றும்… தான் வாழும் வழிக்குத் சாமியார் என்ற வேடம் பூண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள்…! என்றும் உருவாக்கி விட்டார்கள்.
1.பல மதங்களைப் பரப்பி
2.பகவானைப் பணிவதற்குப் பல நிலைகளை மக்களுக்கு உணர்த்தி
3.பல கோடி ஜெபங்களை ஜெபித்து
4.ஆண்டவனை வணங்குவதையே மக்களின் மனதில் ஒருவித பயம் கலந்த உணர்வாக உண்டு பண்ணிவிட்டார்கள் இந்தப் பல வழிச் சாமியார்கள்.

இவர்களில் சிலர் பல மந்திரங்களை மக்களுக்குப் புரியாத பாஷையில் ஓதி ஒமகுண்டங்களை வளர்த்து அந்த ஓம குண்டத்தில் பொன்.. பட்டாடைகள்... பல வகைப் பதார்த்தங்கள்... இன்னும் பலவற்றைப் போட்டு ஓமங்கள் வளர்க்கின்றனர்.

எட்டுத் திக்கிலும் எட்டுப் பூசாரிகளை அமரச் செய்து அவ்வனைவரும் ஒன்று சேர்ந்து அந்த ஆண்டவனைக் கோடியார்ச்சனை என்ற பேரில் புரியாத சமஸ்கிருத மொழியில் ஓதுகிறார்கள்.

இந்த வழியில் யாகக் குண்டத்தை வளர்த்து மந்திரங்களை ஓதும் பொழுது தான்
1.அந்த ஆண்டவன் வருவானா அந்நிலைக்கு...?
2.யாருக்காக...? யாரின் நிலைக்காக...?

அத்தகைய சாமியார்கள் மக்களிடமிருந்து பொருள் பெறுவதற்காக யாகம் வளர்த்து மந்திரங்கள் ஜெபிக்கின்றனர். ஆக
1.பொருள் தருபவனுக்கு (மக்கள்) அந்தச் சாமியார்கள் செய்யும் பூஜையில் ஆண்டவன் வந்து அருள் தருவானாம்...!
2.ஆண்டவனுக்கு இவர்கள் (சாமியார்கள், பூசாரிகள்) தூதுவர்களாம்...!

பல ஆயிரம் செலவு செய்து யாக குண்டம் வளர்த்து அந்தப் பூசாரிகளுக்கு அன்னமளித்து பொருள் தந்து அந்த ஆண்டவனை வணங்கினால் இவன் செய்த பாவங்களும்.. இவன் எண்ணமும் மாறி.. அந்த ஆண்டவன் வந்து அருள் புரிவானாம்..!

1.ஊரை ஏமாற்றி…
2.உள்ள நிலையைப் புரிந்திடாமல்...
3.தன் புகழைப் பரப்பப் பூஜை செய்பவர்கள் தான் பெரும்பாலனவர்களாக உள்ளார்களப்பா...!
4.இவர்களின் நிலைக்கெல்லாம் இந்தப் பல வழிச் சாமியார்கள் பெரும் தூதுவர்களப்பா...!

செய்த பாவத்தைக் கழித்திட பூஜை செய்துவிட்டால் பாவம் தீர்ந்துவிடுமா...? அவர்கள் தான் அதைப் பாவம் என்றே எண்ணுவதில்லையே...!

புகழுக்காகத் தான் சம்பாதித்த செல்வத்தை “அந்த ஆண்டவன் வந்து காப்பாற்றித் தர வேண்டும்...” என்பதற்காக அந்த ஆண்டவன் பெயரைச் சொல்லிப் பல பூஜை செய்கிறார்கள் இந்தப் பாமர மக்கள். “பெரும்பாலான பூஜை முறையே... இப்படித்தானப்பா உலகெங்கிலும் உள்ளது...!”

இந்த மனிதர்களை மாற்றிடவும் நல்வழியில் அழைத்துச் செல்லவும் நல் வழியில் பல சாமியார்கள் (நல் வழிச் சாமியார்கள்) இன்றும் உள்ளார்கள்... அன்றும் இருந்தார்கள்...!

பல ஜெபங்களை ஜெபிக்கச் சொல்லி மக்களின் மனதினிலே நல்ல உணர்வுகளை ஆழமாகப் பதிய வைக்க நல் வழிச் சாமியார்கள் எல்லாம் நாட்டம் கொண்டு நடந்திட்டார்கள்.

இன்னும் சில இடங்களில் சில சாமியார்கள் அந்த ஆண்டவனின் சக்திக்குப் பல வகை நாமங்களைச் சூட்டி புவனேஸ்வரி பூஜை... சௌண்டேஸ்வரி பூஜை... காமாட்சியம்மன் பூஜை...! என்று இன்னும் பல நாமங்களைச் சூட்டி அந்தச் சக்தியின் நிலைக்கே பல யாகங்களை வளர்த்துப் புகை மண்டலங்களை எழுப்பி
1.தான் வாழ… தன்னைச் சார்ந்தவர்கள் வாழ… தன்னை நம்பி வருபவர்களை வாழ வைக்க…
2.இப்படியும் பல நிலைகளைச் செய்கிறார்கள்.

நல்ல மணத்தைக் கொண்ட புகை மண்டலத்தை எழுப்பி அந்த ஆண்டவனை ஜெபிக்கும் பொழுது எந்நிலையில் நாம் ஜெபிக்கின்றோமோ அந்நிலையில் அவர் அவர்கள் ஜெபிக்கும் நிலைக்கு அந்தச் சக்தி நிலை வருகிறதப்பா...!

1.ஆண்டவனை வணங்கிட யாருக்கும் யாரும் தூது வேண்டாமப்பா...!
2.எல்லோருமே அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி அவன் அருளை எப்படியும் பெறலாமப்பா..!
3.அவனவன் எண்ணத்திலும் சுவாசத்திலும் தான் எல்லாமே இருக்கின்றதப்பா...!

ஓ...ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக…
உன்னையே... நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா...!
உன்னையே... நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா...!

உன்னை நான் பார்த்திடவே
என்னில் உன்னைக் கண்டிடவே
உன்னையே... நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா...!

உன் வழியில் சத்தியத்தை
உன் வழியில் தர்மத்தை
உன் வழியில் நியாயத்தை
உன்னை எண்ணும் இதயத்தில்
ஊன்றிடுவாய் ஈசனின் சக்தியே

ஓ...ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக
உன்னையே... நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா.

October 26, 2022

யாம் ஒவ்வொன்றாகச் சொன்ன உபதேசக் கருத்துக்கள் அனைத்தும் “விஷ்ணு தனுசாக உங்களுக்குள் பாயும்”

துருவ நட்சத்திரத்திலிருந்து அதிகமாகச் சக்திகள் நம் பூமிக்குள் வரக்கூடிய நேரம் அதிகாலை தான். நம் பூமி கவரக்கூடிய அந்த நேரத்தில் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனது...? என்று அந்த உணர்வுகளை உபதேச வாயிலாக உங்களுக்குக் கொடுக்கும் பொழுது
1.உங்கள் உணர்வுகள் ஒவ்வொன்றிலும் இது கலக்கின்றது.
2.உங்களிடம் இருக்கும் எல்லாக் குணங்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை இணைக்கும் ஒரு வித்தாக உருவாக்குகின்றோம்.

அக்ரிகல்ச்சரில் புது விதமாகப் பல வீரிய வித்துக்களை உருவாக்கிக் கொடுக்கின்றனர். அதற்குப் பிற்பாடு அதை விளைய வைப்பதற்கு எந்தெந்த நேரத்தில் நீரைப் பாய்ச்ச வேண்டும்...? உரங்களை எப்போது போட வேண்டும்...? அதற்கு வேண்டிய பக்குவங்களை எப்படிச் செய்ய வேண்டும்...? சொல்லிக் கொடுக்கின்றனர்.

அதைப் போன்று நான் (ஞானகுரு) உங்களுக்குள் பதிவு செய்த ஞான வித்திற்கு அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் ஆத்ம சுத்தி செய்து வந்தால் அந்தப் பேரருளை நிச்சயம் உருவாக்க முடியும்... பேரொளியாக நீங்கள் மாற முடியும்.

1.துருவ நட்சத்திரம் எப்படி அழியா ஒளிச் சரீரம் பெற்றிருக்கின்றதோ...
2.இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எந்த விஷத்தையும் ஒளியாக அது எப்படி மாற்றிக் கொண்டிருக்கின்றதோ...
3.அந்த உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து ஒளியான வித்துக்களாக உருவாக்குதல் வேண்டும்.

அவ்வாறு செய்து வந்தால் இந்த வாழ்க்கையில் வரக்கூடிய சில தீமைகளை நீங்களே விலக்கக்கூடிய நிலையும்... அதைச் சமப்படுத்தக்கூடிய நிலையும்... உணர்வுகளை ஒளியாக மாற்றக்கூடிய சக்தியும் எளிதில் பெற முடியும்.

அதற்குத் தான் அதிகாலை “துருவ நேரத்தில்...” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அருள் ஞான வித்தாக உங்களுக்குள் ஆழமாக ஊன்றி அதைப் பெருக்கச் செய்து கொண்டிருக்கின்றோம்.

தனுசுகோடி...! என்ற நிலைகளில் நான் ஒவ்வொன்றாகச் சொன்ன உபதேசக் கருத்துக்கள் அனைத்தும் தனுசாகப் பாய்ந்து உங்களுக்குள் அது முழுமை பெறக்கூடியதாக வளர்ச்சி பெறும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி இப்பொழுது ஏங்கித் தியானியுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்களுக்குள் ஈர்க்கப்படுகின்றது
2.அந்த ஒளி அலைகள் உங்கள் உடல் முழுவதும் பரவுகின்றது

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அது ஒன்றென இணைந்து பேரருளாக... பேரொளியாக... உருவாகும் அருள் சக்தி உங்களுக்குள் இப்பொழுது உருவாக்கப்படுகின்றது... பதிவாக்கப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் அரும் பெரும் சக்திகளை வளர்த்துக் கொள்ளும் அந்தத் தகுதியைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஏற்படுத்துகின்றேன்.

வசி…வசி…! என்ற வசிய மந்திரம்

மூவுலகை ஆட்டுவிக்கும் மூலவனே மும்மூர்த்தியின் வடிவம் என்ன...? என்ற ஒரு அன்பரின் கேள்விக்கு ஈஸ்வரபட்டர் அளித்த பதில் இது.

எட்டுத் திசையை நோக்கி எட்டுத் திசையிலும் உள்ள பாலரை வசியம் செய்து உன்னுள் ஈர்க்கப் பார்க்கின்றாய்.
1.”ஈஸ்வர சக்தி” உன்னுள் இருப்பதை அறியாமல்
2.பல பாலரை ஏனப்பா உன் வசியத்தில் ஈர்க்கிறாய்...?

இது ஆவியின் நிலையில் மந்திரவாதிகள் மந்திரிக்கும் ஜெபமப்பா...! ஆவிகளை எல்லாம் தன் வசம் இழுப்பதற்காக இந்த நிலையில் வசியப்படுத்துவான்.
1.உன்னையே நீ யார்...? என்று புரிந்து கொள்ளாமல்
2.பல ஆவிகளை ஏன் இழுக்கின்றாய் உன் வசியத்திற்கு...?

ஆவிகளின் நிலை எல்லாம் தன் எண்ணத்திற்கு... தன் பசிக்கு... எங்கு அதற்கு ஆகாரம் கிடைக்கின்றதோ அந்த நிலைக்கு வந்துவிடும். ஆவிகளை வசியப்படுத்திக் கொண்டு தான் மந்திரவாதிகளின் வேலை எல்லாம் நடக்கின்றதப்பா. நடுத் தெருவிலும் நடுஜாமத்திலும் அவர்கள் செய்யும் வேலை எல்லாம் இது தானப்பா..!

குடுகுடுப்பை அடித்துக் கொண்டு வருபவன் நடுஜாமத்தில் மயானக் காட்டில் அமர்ந்து தன் வசியத்திற்கு ஆவிகளை அழைப்பான். இந்நிலையில் ஜெபித்துத்தான் அந்நிலையில் அந்த ஆவிகளுக்குப் பிடித்த ஆகாரத்தை அளிப்பான். பல உண்மைகளை அந்த ஆவிகள் இவனுக்கு உணர்த்திடும்.

நடுநிசியிலே அந்தக் குடுகுடுப்பாண்டி நடந்து வீதி உலா வந்திடுவான். அவன் நடப்பதுவும் அவன் சொல்வதும் அவனுக்கு ஒன்றும் தெரியாதப்பா. அந்த ஆவிகள் தான் அவன் உடலில் அவன் வசியப்படுத்திய வழியில் வந்து ஒவ்வொரு இல்லத்திற்கும் சொல்லிக் கொண்டே செல்கிறது.

1.ஆனால் ஈஸ்வர சக்தியின் அருளைப் பெற்றவர்களின் இல்லத்திற்கு
2.இந்த ஆவிகள் சொல்லும் வாக்கெல்லாம் வந்து தாக்காதப்பா...!

நீ வசிய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் இந்த ஆவிகளின் நிலையிலிருந்து எப்பொழுது தான் மீளப் போகின்றாய்..? ஜெப நிலையே இன்னும் நீ புரிந்து கொள்ளவே இல்லையப்பா..!

மந்திரக்காரர்ளும் மாந்திரீகம் செய்பவர்களும் அவர்கள் ஜெபிக்கும் இடத்தில் பல வாசனைத் திரவியங்களைப் போட்டுப் புகை மண்டலத்தை எழுப்பிப் பல வகை உணவுப் பதார்த்தங்களையும் ஜீவராசிகளின் உணவுகளையும் வைத்து மந்திரம் ஜெபிக்கின்றார்கள்.

அந்த மந்திரத் தன்மையில் ஜெபிக்கும் பொழுது அதன் நிலைக்குகந்த ஆவிகள்... தீட்சண்ய ஆவிகள்... அகால மரணமடைந்த ஆவேச ஆவிகள்... தற்கொலை செய்த ஆவிகள்... பிறரினால் கொலை செய்யப்பட்ட ஆவிகள்... இந்த நிலையில் உள்ள ஆவிகள் எல்லாம் இவர்கள் படைக்கும் உணவுக்காக வரும்.

இவர்கள் ஜெபிக்கும் ஜெபத்தில் ஜெபம் என்றால் என்ன என்று எண்ணுகிறாய்...?

ஆவிகளுக்குண்டான உணவை எல்லாம் படைத்துப் புகை மண்டலங்களை எழுப்பி வசி...வசி...! என்று அந்த ஒலியின் நாமத்தை துர்மரண ஆவியின் நாமத்தை வைத்து வசி...வசி...! என்று வசியப்படுத்திக் கொள்கின்றார்கள்.

1.மந்திரம் சொல்வதும் தகட்டில் எழுதுவதும் ஓலையில் எழுதுவதும் எல்லாமே அந்த ஆவிகளின் வசியத்தின் மூலமாகத் தான்.
2.தன் பிழைப்புக்காக தன் உயிர் நிலையையே மாற்றிக் கொண்டு பல ஏவல்கள் செய்வதெல்லாம் அந்த ஆவிகள் தான்.

மாந்திரீகர்களின் மண்டை ஓட்டை வைத்து ஜெபிப்பது என்ன என்றால் எந்த ஆவியைத் தான் வசியம் செய்து வைத்துள்ளானோ அந்த ஆவியைத் தன் உடல் பின்னமாகி எந்த நிலையில் எங்கு அதனின் உடலின் மண்டை ஓடு உறுப்புகள் உள்ளது என்ற நிலையைச் சொல்லிவிடுகிறது.

அதை எடுத்துக் கொண்டு வந்து அவன் ஜெபிக்கும் பொழுது இன்னும் பன்மடங்கு அவனுக்கு அந்த ஆவிகளின் ஒத்துழைப்பு கிடைக்கிறது.
1.மாந்திரீகர்கள் அவர்கள் செய்யும் வேலைகளும்
2.இந்த மண்டை ஓடுகளும் மற்ற எலும்பு உறுப்புகளும்
3.பிறருக்குத் தெரியாத நிலையில் இருக்குமப்பா...!

மன நிலையில் சோர்வுள்ளவர்கள் மகான் என்று எண்ணி அவன் போட்டிருக்கும் சாமியார் வேஷத்தை நம்பி அவனை அணுகுகின்றார்கள்.

மனச் சோர்வடைந்த மக்கள் அவனை நாடிச் செல்லும் பொழுது
1.விபூதி வரவழைத்தோ புஷ்பம் வரவழைத்தோ இப்படிப் பல பல பொருள்களை வரவழைத்துக் கொடுப்பான்
2.மக்கள் அவன் அளிப்பதை நம்பி வாங்கிக் கொண்டு வந்து வீட்டிலே வைக்கின்றார்கள்.

இல்லத்திற்குள் வைத்தவுடன் எல்லாமே நல்லதாகத்தான் நடப்பதாகத் தெரியும். ஆனால் அதன் வேலை எல்லாம் இவன் உடலில் உள்ள அணுக்களை தன் நிலைக்குத் திசை திருப்பி அவன் உடலில் உள்ள அணுக்களைத் தன் வசப்படுத்த அவன் மன நிலையில் சுற்றிக் கொண்டே இருக்கும்.

அந்த ஆவி தன் நிலைக்குகந்த ஆகாரத்தையோ தன் நிலைக்குகந்த எண்ணத்தையோ அவனை எண்ண வைத்துக் கொண்டே இருக்கும்.

இந்த ஆவிகளின் நிலை எல்லாம்
1.அவன் உயிரணுவுக்கு வேண்டிய ஆகாரத்தை எடுத்து அவன் நிலையில் அவனை இருக்க விடாமல்
2.அவனையே தன் வசப்படுத்திக் கொண்டு அவனுக்குள் வந்து குடி அமர்கிறது அந்த ஆவி.

தன்னுள் இருக்கும் சக்தியை புரியாமல் மாந்திரீகரிடம் சென்று பல தீட்சண்ய ஆவிகளுக்குத் தன் நிலையையே விற்று விடுகின்றார்கள் புரியாத பாமர மக்கள்.

1.தேவர்களின் தேவனப்பா மனிதர்கள் எல்லாம்.
2.இந்த மனித உடலைப் பெறுவதே பெரும் பாக்கியமப்பா...! என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திடுங்களப்பா...!
3.மந்திர மாந்திரீக நிலைகளிலிருந்து… பிற ஆவிகளின் இயக்கத்திலிருந்து விடுபடுங்களப்பா…!

October 25, 2022

பற்றும் பாசமும் நம்முடன் வருவதில்லை என்றால் நாம் பற்ற வேண்டியது எதை…?

ஒரு நண்பன் மேல் பாசம் கொண்டு அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றேன். இந்த உணர்வு எனக்குள் பதிவாகின்றது. அதே நினைவுடன் கண் கொண்டு நண்பனைப் பார்த்த பின் மகிழ்ச்சியுடன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றேன்.

நண்பன் என்று வளர்ந்தாலும் காலப் போக்கில் அவன் என்னை மதிக்கும் தன்மை குறைந்து விட்டால் என்ன ஆகிறது…?

நான் நண்பனை மதிக்கின்றேன். ஆனால் நண்பனோ என்னைச் சரியாக மதிக்கவில்லை… சீராக எனக்கு உதவி செய்யவில்லை…! என்று
1.இந்த எதிர்பார்ப்புகள் அதிகாமன பின் நண்பனை வெறுக்கும் உணர்வுகள் வளர்கின்றது.
2.அன்று அத்தனை உதவி செய்தேன்… இன்று எனக்கு இப்படிச் செய்கிறான்… என்று அகம் கொள்ளுகின்றது
3.தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகள் கொண்டு அவனைக் குற்றவாளியாக்குகின்றது
4.முதலில் உதவி செய்த பண்புகளை மாற்றிவிட்டு அவனுக்குத் தீங்கு செய்யும் நிலையையே உருவாக்கி விடுகின்றோம்.

ஆக…. நமக்குள் இருக்கும் 108 அகமதிகளும் (108 விதமான குணங்கள்) அகங்கார நிலைகளும் “தன்னைத் தன்னைக் காத்திடும் நிலையாகவே” அது வருகின்றது.

விவசாயப் பண்ணைகளில் ஒரு செடியில் அதனுடன் மற்ற செடிகளின் கருக்களைச் சேர்த்த பின் அதற்குத்தக்க செடிகளில் மாற்றங்கள் அடைகின்றது.

இதைப் போன்று விஞ்ஞான அறிவு கொண்டு உயிரினங்களில் உள்ள அணு செல்களை எடுத்து மற்ற மற்ற உயிரினங்களில் இணைக்கும் போது உயிரினங்களிலே உருமாற்றங்களைச் செயல்படுத்தும் தன்மை மனிதனுக்கு வருகின்றது.

தாவர இனங்களை மாற்றுவது போல் உயிரினங்களை மாற்றுவது போல் தான் நாம் நுகரும் உணர்வுகளைச் சீர்படுத்தவில்லை என்றால்
1.அது நம் நல்ல குணங்களைத் தீமையின் உணர்வுகளாக மாற்றிவிடும்
2.உடலின் அமைப்பை மாற்றிவிடும்… குணங்களை மாற்றிவிடும்
3.பின் இருள் சூழும் நிலைகள் கொண்டு பரிணாம வளர்ச்சியில் வளர்ந்ததற்கு மாறாக தேய்பிறையான நிலைகளுக்கு அழைத்துச் சென்று விடும்.

மனிதர்களான நாம் ஆறாவது அறிவு கொண்டு இன்று பல பொருள்களை இணைத்துச் சுவை மிக்கதாக உருவாக்கி உணவாக உட்கொள்கிறோம்.

அது போல… நமது வாழ்க்கையில் கேட்டுணர்ந்த உணர்வுகளையும் அதனதன் இயக்கத்திற்கு விடாதபடி நாம் சமப்படுத்த வேண்டும்.

நல்லது கெட்டது என்று தெரிந்தாலும் நுகர்ந்த உணர்வுக்கொப்பத் தான் தனக்குள் சமப்படுத்தும் நிலை வருகின்றது. நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் வழியே வழி பார்க்கின்றது

1.நண்பன் என்ற நிலையில் எண்ணங்கள் பாசத்துடன் வரும் பொழுது காக்கும் நிலைகளை உருவாக்குகின்றோம்
2.ஆனால் சிறிதளவு பகைமை என்று உணர்வுகள் வந்து விட்டால் அவனைத் தாக்க வேண்டும் அவனை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வே வருகின்றது

ஆகவே பற்றும் பாசமும் இந்த உலகில் நமக்குள் பல நன்மைகளையும் செய்கின்றது தீமைகளையும் செய்கின்றது.

ஆனால் பற்றும் பாசமும் நம்முடன் வருவதில்லை. அப்படி என்றால் நாம் பற்ற வேண்டியது எதை…?

அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தான்…!

பிறிதொன்று நம்மை இயக்காதபடி அருள் ஒளி என்ற நிலைகளில்
1.அகண்ட அண்டத்திலும் நஞ்சின் தன்மை தன்னைத் தாக்கிடாது
2.அதை ஒளியாக மாற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து
3.பகைமை உணர்வுகள் எப்பொழுது உருப் பெறுகின்றதோ அதை அடக்குதல் வேண்டும்;.

மிளகாய் காரத்தின் தன்மை கொண்டது தான். மற்ற பொருளுடன் இணைக்கப்படும் பொழுது அந்தக் காரத்தின் உணர்ச்சிகள் தணிகின்றது. உப்பு கைப்பாக இருக்கின்றது… அதை மற்றவைகளுடன் சமப்படுத்தும் போது சுவையின் தன்மை கூடி மகிழ்ச்சி ஊட்டுகின்றது.

எனவே எதனை நாம் நுகர்ந்தாலும் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.அந்த அகங்காரத்தை எடுத்து விடாதபடி
2.அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.

அப்படி வளர்த்தோம் என்றால் நம்மை இருள் சூழாத நிலையும் ஒளியின் உணர்வாக மாற்றிடும் ஆற்றலையும் நாம் பெறுகின்றோம்.

இன்றைய உலகில் மனிதனின் அடுத்த நிலை வளர்ச்சிக்கு உதவும் “திறவுகோல்…”

இன்றைய உலகில் பல வகையான வாகனங்கள் உண்டு. ஒவ்வொன்றும் மனிதன் தனது எண்ண ஆற்றல் கொண்டு வேகமாகச் செல்லும் நிலைக்கு உருவாக்கப்பட்டது தான்.

ஆக அந்தந்த வாகனங்களின் கதிக்கொப்ப அது ஓடுவதைப் போன்று
1,மனித ஆற்றலின் உந்து விசையையும் அதிகப்படுத்தினால்
2.வேகம் கூட்டும் வாகனங்களின் ஆற்றலின் அறிவுத் திறன் வளர்ந்ததைப் போல்
3.மெய் ஞான வளர்ச்சியில் விருப்புடன் பயணிக்கும் பாதையே மனித சக்தியைக் கூட்டும் எண்ண ஆற்றல் ஆகும்.

உலகம் எப்படித் தன் ஈர்ப்புப் பிடிப்புடன் தன் வளர்ப்பின் செயலுடன் சுழன்று வருகிறதோ அதைப் போல்
1.நம் உயிராத்மாவை இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல
2.தன் எண்ணத்தின் உந்து விசையால் நீரமிலக் காற்றில் விண்ணுலக ஒளி அமிலத்தைச் சுவாசத்தால் உடல் எடுக்க
3.நாம் மேற்கொள்ளும் தவத்தின் தனித்துவத்தால் தரணியின் மெய்யை உணர்ந்து
4.தான் மெய் ஞான விழிப்பெய்த மூல நாடியாக மூச்சலையின் சக்திதனை மூலமாக்கிய
5.அந்த மகரிஷிகளின் சக்திகளை நாமும் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உணர்வின் எண்ணத்தில் செழிப்பின் ஆசைதானப்பா மனிதச் செயலின் மூலாதாரமே. ஆனால் வித்தை காணும் ஆசை ஓட்டத்தில் “பேராசையின் எண்ணம் கொண்ட விளைவுதானப்பா...” இன்றைய மனித நிலை.

யுகங்கள் யுகங்களாக மகரிஷிகளின் தொடர்பலைகள் வளர்ச்சியின் செயலுற்று அவர்கள் வழி வகுத்துத் தந்த அந்த மெய்ஞான விழிப்பே மனிதனின் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செயலாற்றும் “திறவுகோல்” ஆகும்.

இன்றைய விஞ்ஞானக் கலியுகத்தில் மனித ஞானத்தை விழிப்புறச் செய்ய மெய் ஞானிகள் கொண்ட ரிஷிகளின் தொடர் அலையின் கருத்தின் கோர்வைகளை அவர்கள் கண்ட உண்மைகளை இங்கே தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

செடி கொடிகள் எப்படித் தனக்கொத்ததை ஈர்த்து... வளர்ந்து... விளைந்த பின் பலன் தருவதைப் போல் நாமும் அந்த மாமகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய சுவாச அலையின் செயல் தன்மையைச் சீராக்கிடல் வேண்டும்.

1.இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெய்வ சக்தி பெற்று
2.இந்தப் பூமியின் சுவாச கதியில் ஒளிச் சரீரமாக உங்கள் ஆத்ம உயிரை மெய் ஞான விழிப்புப்படுத்துங்கள்.

October 24, 2022

நான் செய்வது எப்படித் தவறாகும்... என்று கேட்பது நாம் தானா...! அல்லது சுவாசித்ததா...?

மகாபாரதத்தில் கௌரவர்கள் நூறு பேர் என்றும் பாண்டவர்கள் ஐந்து பேர் என்றும் காட்டுகின்றார்கள். அதனின் உட்பொருள் என்ன...?

எந்த உணர்வின் தன்மை நாம் நுகர்கின்றோமோ அவை தான் நம்மை ஆளுகின்றது என்பதை ஞானிகள் காட்டியுள்ளனர். அதாவது
1.வெப்பம் காந்தம் விஷம் மணம் உணர்வு என்ற இந்த ஐந்து (பாண்டவர்கள்) நிலையில்
2.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ (கௌரவர்கள்) அதுவே அதன் வழியில் நம்மை ஆளுகின்றது
3.நம் உயிர் அதனின் உணர்வை இயக்குகின்றது - நம் உயிர் சக்தியாக இயக்குகின்றது.

நாம் நினைக்கும் (எண்ணும்) உணர்வுகளே நம்மை இயக்குகின்றது என்ற நிலையை அங்கே உருவாக்கி அதைக் கௌரவர்கள் என்று காட்டியுள்ளனர்.

ஒரு குணத்தை நான் எடுத்துக் கொண்டால் அதைக் காக்க வேண்டும் என்றும் அதே குணத்தைத் தான் நான் வளர்த்துக் கொள்ளும் நிலையும் வருகின்றது.

உதாரணமாக ஒருவர் மேல் நான் கோபத்தை வளர்த்துக் கொண்டால் அந்தக் கோபமே எனக்கு உகந்தது என்றும்... அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளும் நிலை இல்லாது அதை வழி நடத்த வேண்டும் என்றும்... அகங்காரம் கொள்ளுகின்றது.

அதே போல ஒருவர் தொழில் செய்தால்
1.அதிலே தான் தவறு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லாதபடி
2.நான் செய்தது எப்படித் தவறாகும்...? என்று பிடிவாத குணங்கள் இருப்பதும்
3.தெரியாதபடி ஒரு சொல்லைச் சொன்னாலும்... தான் நுகர்ந்த உணர்வுகள்... தான்... தனது... என்ற நிலையில்
4.தன்னைக் காக்க அதன் உணர்வுகளை நாம் வலுப்படுத்தும் போது தீமையின் உணர்வுகளே நமக்குள் வளர்கின்றது.

ஆகவே இதைப் போன்ற உணர்வுகள் தனக்குள் வளராது நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமா இல்லையா...?

ஆகையினால் தான் அதைக் கௌரவர்கள் என்றும் தனக்குள் எடுக்கும் குணங்கள் ஒவ்வொன்றும்... “தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையாகவே வரும்...” என்று மகாபாரதத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது.

ஒரு வேப்பமரம் கசப்பின் தன்மை கொண்டு தன் கௌரவத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. ரோஜாப் பூவோ தன் நறுமணத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. மற்ற மணங்கள் தனக்குள் வராது தடுக்கின்றது.

இதைப் போல ஒருவனைத் தாக்க வேண்டும் என்று எண்ணிவிட்டால் மற்றவர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
1.தான் வாழ வேண்டும் என்று எண்ணிவிட்டால் பிறருடைய துன்பங்களை நாம் பார்ப்பதில்லை... துன்பப்படுத்தியே நாம் வாழுகின்றோம்
2.துன்பப்படுத்துகின்றோம் என்று உணர்த்தினாலும் “எனது வாழ்க்கைக்காக நான் இதைச் செய்தேன்...” என்று
3.அசுர குணங்களைத்தான் அகங்களைக் கொண்டு தான் வாழ்கின்றோம்.

இவ்வாறு வாழும் நாம் எதனின் உணர்வை நாம் பெற்றோமோ அதனின் நிலையாகவே உயிர் நம்மை இயக்கி விடுகின்றது. அதனால் தான்...
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதன் உணர்வையே நீ பெறுகின்றாய்
2.அதை வளர்க்கின்றாய்... அதுவாக ஆகின்றாய் என்று கீதாச்சாரம் சொல்கிறது.

உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே...!

வாழ்க்கையில் வரும் மோதல்களில் இருந்து சஞ்சலமற்ற... சமமான நிலை பெற்றிட வேண்டும் என்றால்... எண்ணம் பரிசுத்தமாக நிலை பெற வேண்டும் என்றால்... எடுக்க வேண்டிய முயற்சி நுண்மின் காந்த ஒளியைத் தியானத்தின் மூலம் ஈர்த்துக் கொள்வதே ஆகும்.

பஞ்சேந்திரியங்கள் கொண்டு உணர்ந்திடும் தன்மை போல் ஆத்ம வலுவின் தொடருக்கு மனத் திறன் பெற வேண்டும். மனத் திறன் என்றால் என்ன...?

1.மனச் செவி
2.மனச்சுவை
3.மனத்தால் மணம் நுகர்தல்
4.சகலமும் பேரின்பமாக ஆனந்தத்தில் என்னும் மனஸ்பரிச உணர்வு என்ற இவை அனைத்தும்
5.ஸ்தூல (திட) சரீரம் கொண்டு சூட்சம ஒளிச் சரீரம் பெற்றிடும் அகச் செயலில் வலுக் கொள்ளும் நிகழ்வுகளப்பா...!
6.அனைத்திற்கும் தியானமே மூல காரணம்.

மூல காரணம் எனும் ஊண் தன்மையாகச் சரீரம் முழுமைக்கும் மெய் ஒளி பரவி உயிரான்ம சக்தியாக லிங்க உடலாக வெளித் தோன்றாத் தன்மையாக “என்றும் நிலை பெற முடியும்...”

ஆகவே அந்த ஆதிசக்தியுடன் ஒன்றிடும் சக்தி பெற வலுவின் வலுவாகும் மூலச்சக்தியின் குணத் தன்மைகளை உணர்ந்து கொள்ளும் பொழுது இந்த மானிடப் பிறவி... “கிடைத்தற்கரிய பிறவியாக அமைகிறது...!”

ஜீவன் பெற்று எத்தனையோ பிறவிகள் பெற்றே வாழ்ந்திடும் உயிர்த் தொகைகளின் சுவாச அலைகள் ஒலி ஒளி அலைகளாகக் காற்றில் பரவிப் படர்ந்தே உலவிக் கொண்டே உள்ளது.

பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மனிதனின் பரபரப்பாக வாழும் வாழ்க்கைக் தொடர் என்ற இன்றைய கால கட்டத்தில் தான் கொண்ட எண்ணங்களுக்கொப்ப காற்றிலே கலந்த அந்தச் சுவாச கதியை ஈர்த்து வினைச் செயலாகப் பற்பல வாழ்க்கை அனுபவங்களில் பெற்ற பயன் தான் என்னப்பா...?

1.சுவாசிக்கும் சுவாசமானது... சரீரத்தினுள் அமையப் பெற்றுள்ள முக்கிய நாடிகளில் ஓடி
2.சிரசில் அமைவுற்ற கட்டளைக் கேந்திர நாடிகளுடன் தொடர்பு கொண்டு
3.புறத் தொழில் கதிப்படும் உறுப்புகளாகிய கண் காது மூக்கு வாய் இவைகளில் ஓடி
4.அக்கினி கேந்திரமாகிய மூலாதாரம் எனப்படும் குதகுய்ய நாடிகளுடன் இணைந்து செயல்படும் செயலில்
5.அந்தந்த அவயங்களில் அமைவுற்ற காற்றுகள் தம் தம் செயலுக்கு உறுப்புகளின் நாடி வழியாக ஓடி
6.உடலுக்கு வெப்பத்தை உயிர் ஜீவனாக அளித்திடும் மூலாதார நாடிகளிலே
7.சரீர இயக்கத்தின் வினைச் செயல் மனிதன் கொண்ட எண்ண நிலைக்கொப்ப அனைத்துச் செயல்களும் நடைபெற்று ஓடிக் கொண்டுள்ளது.

செவிகளில் வலம் இடமாக ஓடிடும் நாடிகள் ஓர் ஓசையின் அலைகளால் மோதுண்டவுடன்
1.அந்த ஓசையின் பொருளை அந்தக் கணமே அறிந்து கொள்ளும் மிக நுண்ணிய கால அளவில்
2.சரீரத்தினுள் முக்கிய நாடிகளின் ஈர்ப்பின் செயலாக மூச்சலைகள் ஓடி
3.சிரசின் கட்டளைக் கேந்திரத்தில் பிடர்தல் (என்ற) ஓசைகள் மோதியவுடன் - செவியில் ஏற்படும் அதிர்வுகளில்
4.அறிந்து கொண்டிடும் அறிவாக மூலாதார அக்கினியின் தொடர்பு உண்டப்பா...!

வெப்பத்தாலோ மின்சாரத்தாலோ செயலுறும் இன்றைய இயந்திரங்கள் எதையும் ஒப்பிட முடியாத மனோசக்தித் திறன் தியானத்தின் மூலம் எடுக்கும் மிக மின் நுண் காந்த அலைகளால் செயல்படும் நிலை உணரத்தக்கது.

இந்தச் சரீர வாழ்க்கையில் எதிர் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் செவி நாடிகள் நம் ஆத்மாவின் பதிவுச் செயலுக்கு முக்கிய பங்கேற்கின்றன.

1.எண்ணங்களில் மோதல்களால் (உணர்வுகளால்)
2.கனம் கொண்ட சுவாச அலைகளைச் சுவாசமாக ஏற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம்
3.உடனுக்குடன் உயர் மின் நுண் காந்த அலைகளை ஈர்த்து
4.அனைத்துமே நமக்கு நன்மை அளித்திடும் செயலே என்ற மனதின் திடம் கொண்டு
5.“சுபம் சுபம் சுபம்...!” என்ற ஒலி நாதத்தை ஏற்படுத்தி
6.நம் ஆத்ம பதிவில் நல்மதியின் உயர் ஞான ஒளியாக
7.”ஆத்மாவின் மூலம்” வலுப் பெறவேண்டுமப்பா..!

ஏனென்றால் உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே...!

சுபம்... சுபம்... சுபம்...!

October 23, 2022

நஞ்சை ஒளியாக மாற்றிடும் மார்க்கத்தைத் தான் உங்களுக்குக் காட்டிக் கொண்டு வருகின்றோம் - ஞானகுரு

1.சூரியன் நஞ்சினைப் பிரிக்கின்றது
2.ஆனால் துருவ நட்சத்திரமோ நஞ்சினை ஒளியாக மாற்றுகின்றது.

சூரியன் தனது நிலைகளில் நஞ்சினைப் பிரித்து மற்றதுடன் மோதும் பொழுது தான் ஒளிக் கதிராக மின்னுகின்றது. நஞ்சின் தாக்குதலால் வெப்பத்தின் தணல் கூடி ஒளியின் தன்மையாக மாறுகின்றது.

ஆனால் மனிதனாகி அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன பின் நஞ்சின் தன்மை தனக்குள் அருகில் வரும் பொழுது அதை ஒளியின் சிகரமாக மாற்றுகின்றான்.
1.அந்த அகஸ்தியனைப் போன்று நஞ்சினை அடக்கி ஒளியாக இணைத்து
2.ஒளியின் சிகரமாக மாற்றும் தன்மை நாமும் பெற வேண்டும்.

மனிதனாக ஆனவன் தான் இதை உருவாக்க முடியும். அதைத் தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்றும் முழு முதற் கடவுள் என்றும் காட்டுகின்றார்கள்.

ஆக… இந்த மனித உடல் பெற்ற பின் அருள் ஒளியினை உருவாக்கும் முழுமையான கடவுளாக நாம் ஆகின்றோம். அதன் வழியில்
1.மகா சாந்தம் என்ற நிலைகளில்
2.மகா என்று சர்வத்தையும் சாந்தப்படுத்தும் உணவுகளை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்.

நமக்குள் ஒன்றிணைந்து வாழும் இந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்டால் எந்த நஞ்சினையும் வென்றிடும் சக்தியாக… உள் நின்று நஞ்சினை ஒளியின் சிகரமாகக் கூட்டும் ஆற்றல் பெறுகின்றோம்.

உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வளர்ந்து வந்ததைத் தான் விநாயகர் தத்துவத்தில் “முழு முதல் கடவுள்…” என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

ஆகவே அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் வாழ்வோம். நமக்குள் புகும் இருளை புகாது அதைத் தடுத்து நம்மைப் பாதுகாப்போம். அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்.

அனைவரும் மலரைப் போன்ற மணம் பெற… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழத் தியானிப்போம்… தவமிருப்போம்.

ஒருநிலைப்படுத்துவது தான் மெய்ஞான விழிப்பு

1.கண் கொண்டு பார்த்தல் (காட்சிகளும் காட்சிப் புலனறிவும்)
2.நாசி கொண்டு சுவாசித்தல் (சுவாச ஓட்ட வாசனைகளை அறிந்திடும் அறிவு)
3.வாய் கொண்டு சுவைத்தல் (சுவை குண அறிவு செயல்பாட்டில் உணர்தல்)
4.செவிப்புலனறிவு (ஓசைகளின் தன்மைகள் தெளிதல்)
5.தொடு புலனறிவு (ஸ்பரிசித்தலில் உணர்வு கொண்டு அறிந்து கொள்ளுதல்) என்றிட்ட ஐந்து பஞ்சேந்திரியங்கள் மனித உடலுக்குள் செயல்படுகின்றன.

அவைகள் செயல்படும் நிலையில் புறத்திலிருந்து வரும் மோதல்கள்... அந்த அமில குணத்தன்மைகளை அவயங்கள் தத்தம் செயலுக்கு சரீரத்தின் கட்டளைக் கேந்திரமாகச் “சிரசின் உச்சிப் பகுதியில்...” செயல் கொண்டே உள்ளது.

ஆகவே அகச் செயலாகச் சுவாச ஓட்டங்களின் தொடருக்கு
1.நொடிக்கும் குறைவான கால ஓட்டமாகச் செயல் கொண்டு
2.சரீர இயக்கமே ஆத்ம ஒளியால் பகுத்தறிவு எனும் ஞான தீபமாகச் செயல் கொண்டு
3.அறிதல்... உணர்தல்... தெளிதல்... என்றிட்ட முத்தொடர் செயலில்
4.ஆக்கபூர்வமானவனாக நாம் ஆகுதலே மெய்ஞான விழிப்பு.

அந்த அகச் செயலில் எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம் ஆகும்.

மனம் ஒருநிலைப்பட்டபின் தான் தியானம் என்றால்... எப்பொழுதப்பா உன் மனதை ஒருநிலைப்படுத்தப் போகின்றாய்...?

தியானத்தில் அமர்ந்தவுடன் வந்து வந்து மோதிடும் “வாழ்க்கைச் சாகர எண்ண நிலைவோட்ட அலைகள்” படிப்படியாக விலகி மனதின்கண் அமைதி கொள்ளவே இந்த எளிய தியானத்தைக் கொடுக்கின்றோம்.

நாங்கள் “ஆத்ம பலம் பெற்றிட வேண்டும் ஈஸ்வரா...” என்றே புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை ஈர்த்து எண்ணத்தின் வலுவைப் பெற்று விட்டால்
1.உயிராத்மாவின் பேரானந்த நிலையைச் சொல்லால் விளக்கிக் கூற முடியாது
2.“உணர்ந்தறியும் அனுபவ ஞான ஆனந்த நிலையே நித்திய சுபம்...!”

October 22, 2022

பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற அந்த ஒன்றை அடிப்படை ஆதாரமாக வைத்து வாழ்வோம்

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவரும் இருளை அகற்றி ஒளியாக மாற்றிடும் அருள் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை வளர்த்துப் பழகுதல் வேண்டும்.

கூட்டுத் தியானங்களின் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து வெளிப்படுத்தும் போது எல்லோருக்குள்ளும் அது ஓங்கி வளர்கின்றது.
1.இப்படி ஒருவருக்கொருவர் நாம் தொடர்பு கொண்டு பதிவான உணர்வுகளின் துணை கொண்டு
2.அடுத்து நாம் எங்கிருந்து தியானித்தாலும் அந்த அருள் உணர்வுகள் நமக்குள் ஒன்றாக இணைகிறது.

இப்படி வலுக் கொண்ட உணர்வின் துணை கொண்டு எல்லோரும் சேர்ந்து தியானித்து இந்த அருள் சக்திகளைப் பெருக்கி அதை நமக்குள் அடிக்கடி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது போன்று வளர்ந்து வந்தாலும் கூட... சில சந்தர்ப்பங்களில் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக வெறுப்பு வேதனை என்று ஏற்பட்டால் அதைக் கவர்ந்தால்... அது நாம் போகும் பாதையைத் தடைப்படுத்தும் நிலையாக வந்து விடுகின்றது.

1.தடைப்படுத்தும் நிலையாக வரும் பொழுதெல்லாம்... அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பருகி... தடைகளை நீக்கி
2.நம்முடன் இணைந்து வாழும் நிலைகளை வளர்த்து அருள் ஒளியின் உணர்வாக உருவாக்கி
3.அருள் ஒளியின் சுடராக மாற்றி அமைத்தல் வேண்டும்.

எத்தனையோ கோடிச் சரீரங்களில் நரகவேதனைப்படுத்தி ஒன்றுக்கு உணவாகி அதிலிருந்து மீண்டு... நஞ்சினை வென்றிடும்... வேதனையை அகற்றிடும்... சொர்க்க பூமியாகத் தான் இந்த மனித உடல் வளர்ந்து வந்துள்ளது.

நம் உயிரே சொர்க்கவாசலாக உள்ளது. சொர்க்கம் என்ற நிலையாக என்றும் எதனையுமே வென்றிடும் தன்மை பெற்று... அகண்ட அண்டத்தில் வரும் சக்திகளை ஒளியின் சுடராக மாற்றி அமைக்கும் வேகாநிலையை நாம் அடைய முடியும்.

நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து அந்த அருள் சக்தியைப் பெருகுதல் வேண்டும். ஒருங்கிணைந்து அந்தச் சக்திகளைச் சேர்த்தது தான் துருவ நட்சத்திரம்.

நாம் அனைவரும்... “அனைவரும் நலம் பெற வேண்டும்...” என்று தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை வளர்க்க வளர்க்க... பகைமைகள் நமக்குள் சேராது நஞ்சினை வென்றிடும் ஆற்றல்களைப் பெறும் தகுதி பெறுகின்றோம்.

இந்த வாழ்க்கையில் பேரின்பத்தை நாம் வளர்த்தல் வேண்டும். பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையை உருவாக்குதல் வேண்டும். உடலை விட்டு அகன்ற பின் பெரு வாழ்வாக அமைகிறது.

ஆகவே... இந்த உடல் வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் தெளிவாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
1.இந்த உடல் நமக்கு சொந்தமல்ல... இந்த உடலை வைத்து அருள் ஒளியை நமக்குள் சொந்தமாக்குதல் வேண்டும்
2.ஒரு விளை நிலம் இருப்பினும் அதிலுள்ள மணலை நாம் உட்கொள்வதில்லை.
3.விதைகளை மண்ணிலே விதைத்து நமக்கு வேண்டியவைகளாக விளைய வைத்து உருவாக்குகின்றோம்
4.அதில் விளைந்ததைத்தான் சமைத்து உணவாக உட்கொள்கின்றோம்... உட்கொண்ட பின் உயிருடன் ஒன்றி வாழுகின்றோம்.

இதைப் போன்று தான் அருள் ஒளியின் உணர்வின் தன்மையை நமக்குள் விளைய வைத்து... அந்த ஒளியுடன் ஒன்றினால் அந்த உணர்வுக்குத் தக்க நாம் ஒளியின் சரீரம் பெறுவது உறுதி...!

ஆகவே...
1.பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற அந்த ஒன்றை அடிப்படை ஆதாரமாக வைத்து
2.இந்த வாழ்க்கையில் வரும் துன்பங்களை நமக்குள் அந்த உணர்ச்சிகளை ஊட்டாதபடி
3.அதைத் தடைப்படுத்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

இரவு படுக்கும் முன் செய்ய வேண்டிய முக்கியமான தியானப் பயிற்சி

ஒவ்வொரு நொடியிலும் மனிதனுக்குள் ஓடும் பலதரப்பட்ட எண்ணத்தின் சுவாசங்கள் வீரியமாகச் செயல்படும் தன்மைக்கு... “சங்கிலித் தொடர் போல் அந்த எண்ண ஓட்டமே...” ஒவ்வொரு நாளும் கொள்ளப்படும் செயலாக நிகழ்கிறது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான் தெரியாதது இல்லை)

1.அவ்வாறு எடுக்கும் சுவாச ஓட்டத்தின் கனத்தினால்
2.மீண்டும் மீண்டும் அந்தச் சுவாச ஓட்டத்தின் வீரியம் கொண்ட எண்ணத்தின் பதிவு நிலையாகச் செயல் கொள்கிறது.
3.அதுவே “விதியாகவும்” மாறுகிறது.

வாழ்க்கையில் அன்றாட அலுவல்களில் பலரைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களைப் பற்றிய எண்ணங்களை இந்த ஜீவ பிம்பச் சரீரத்தின் காந்த ஈர்ப்பினால் உடலுக்குள் ஈர்த்துக் கொண்டே தான் உள்ளோம்.

அதிலே எந்தெந்தக் குணத் தன்மைகளை ஈர்த்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவு நிலைக்கொத்த குணத் தன்மைகளுக்குத் தக்க ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் அதை எண்ணியே வலுக்கூட்டி ஆத்மாவும் சரீரமும் பாதிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் நிலை ஆகிறது.

அன்றாடம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கிச் சரீரத்தைத் தூய்மைப்படுத்திடும் செயல் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைகள்... உணர்வுகள் மாற்றம் கொள்ளும் கால கட்டத்தில் எல்லாம்
2.எண்ணத்தை வானை நோக்கி உயர்வாகச் செலுத்தி
3.ஜீவ காந்தச் சரீரம் கொண்டு உயர் காந்த மின் அணுக்களை ஈர்த்துக் கொண்டு
4.சுவாச கதியில் உணர்வுகள் மாற்றம் கொள்ளும் செயலின் வீரியத்தை
5.தியானத்தில் ஈர்த்துக் கொள்ளும் நற்சுவாச அலையால் சமன்படுத்தி மனதின் திறத்தைக் காத்திடல் வேண்டும்.
6.அதனால் சரீரமும் பாதிப்படையாது... பல நன்மைகளும் ஏற்படுமப்பா...!

புலரும் காலைப் பொழுது முதற் கொண்டு இரவு உறங்கும் காலம் வரை சரீரத்தில் ஈர்த்துக் கொண்ட அணுக்களின் குணத் தன்மைகளில்...
1.ஈர்க்கப்பட்ட அந்த அணுக்கள் அனைத்தும்
2.உறங்கும் காலப் பொழுதில் மீண்டும் சுவாசத்தின் நிலையில் ஜீவன் கொண்டிடும் செயல் சூட்சமமாக நிகழப் பெறும்.

அதிலே நல்லதும் உண்டு… கெட்டதும் உண்டு...! ஆனால் கெட்டது ஜீவன் பெறாதபடி அதனின் வினைச் செயலை மாற்றி... நல்லாக்கம் பெற்றே வலுவாக்கிடும் நிலையை “உறங்கும் முன் எடுக்கும் தியானத்தின் தொடரில் கொண்டு வர வேண்டும்...!”

1.எங்கள் உடலுக்குள் இருக்கும் அத்தனை உயிரணுக்களும்
2.ஒளி அணுக்களாகச் சக்தி பெற்றிட வேண்டும் ஈஸ்வரா...! என்ற எண்ணம் கொண்டு
3.உயர் மின் காந்த அணுக்களை ஈர்த்துப் பல முறை உடலுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். (படுக்கும் முன்)

காலையிலிருந்து இரவு வரை நம் சுவாசத்தில் ஈர்க்கப்பட்ட அந்த மாற்று நிலை கொண்ட உயிரணுக்களும்
1.இந்தச் சரீரத்தினுள் நற்சக்தி பெற்று
2.நல் அணுக்களாக மாற்றம் கொள்ள வேண்டும் என்ற
3.உயர்ந்த எண்ணம் கொண்டு ஆத்ம சுத்தி செய்து உறங்கினால்
4.இரவு முழுவதும் வலுக் கொண்டு ஓடும் இந்தத் தியான நினைவோட்டத்தால்
5.உயர் ஞானம் சித்திக்கும் செயலாக நல் நிலை பெற்றிட முடியும்.

October 21, 2022

அகஸ்தியனைப் போன்று நாமும் “அனைத்தையும் ஒளியாக மாற்றும் திறன் பெற வேண்டும்…”

1.அகஸ்தியன் தன் வாழ்க்கையில் கண்டுணர்ந்த பேருண்மைகளைத் தன் மனைவிக்குப் பாய்ச்சி

2.உணர்வை இரண்டறக் கலந்து ஒரு அணுவின் தன்மை உருவாக்கி அந்த உணர்வின் தன்மை மாற்றமடைந்து
3.விண்ணுலகிலிருந்து வரும் நஞ்சினை அடக்கி உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவன்.

எதை உற்று நோக்கி உணர்வின் தன்மை தனக்குள் கவர்ந்து… எதைப் பெற வேண்டும் என்று தன் உடலிலே உருவாக்கினார்களோ அவர்கள் இரு உயிரும் ஒன்றாகி “துருவ நட்சத்திரமாக” இன்றும் உள்ளார்கள்.

சூரியன் தனக்குள் உருவான பாதரசத்தைக் கொண்டு புறத்திலிருந்து வரும் விஷத்தைத் தாக்கி அதைப் பிரித்து விடுகிறது. அதனால் தான் அதைப் பிரிக்கப்படும் போது ஒளிக்கதிர்களாகப் பரவுகிறது.

எந்த விஷத்தின் தன்மை தனக்குள் மோதுகின்றதோ நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி உணர்வின் தன்மை மின்னலாக வருகிறதோ அதைப் போல் பிரித்தபின் ஒளிக்கதிர்களாகப் பரவுகிறது… ஒளி அலைகளாக நம் பிரபஞ்சத்திற்குள் மாறுகிறது. இது சூரியனின் இயக்க நிலை.

அதைப் போன்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் வரும் விஷத்தின் தன்மைகளைத் தனக்குள் இணைத்து… விஷத்தின் தன்மையைப் பிரித்து விட்டு ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றான் அகஸ்தியன்… மனிதனாக ஆன பின் அது முழுமையான கடவுளாகின்றது.
1.ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டு
2.என்றும் பதினாறாக பிறவி இல்லா நிலை அடைந்து வாழ்ந்து கொண்டுள்ளான்… வளர்ந்து கொண்டுள்ளான்.

அதே சமயத்தில் அகண்ட அண்டத்தில் வெளிப்படும் எத்தகைய கடும் நஞ்சாக இருந்தாலும்… அதையும் அடக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றான்… ஏகாந்த நிலை கொண்டு வாழ்கின்றான்.

அவனைப் பின்பற்றிச் சென்ற அனைவரும் அதே வழியில் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தச் சூரியனே அழிந்தாலும்… இதன் எதிர்காலம்…! நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து மற்ற விஷத்தன்மை அதிகமாகக் கவர்ந்து எடுத்து விட்டால் அதன் உணர்வின் தன்மை (பிரபஞ்சம்) மாற்றம் அடைகின்றது.

ஆனால் மற்ற நட்சத்திர மண்டலங்களின் சக்திகளை எடுத்து
1.நம் பூமிக்குள் பல பொருள்களுடன் சேர்த்து இணைத்துப் பல பொருளாக உருவாக்கும் நிலையும்
2.கதிரியக்கப் பொறிகள் கடலில் பட்ட பின் மணலாக மாறுவதும்
3.அதே சமயம் இந்த கதிரியக்கப் பொறிகளை அடக்கச் செய்யும் அந்த மோதலில்
4.நமக்குண்டான வெப்பத்தை… பூமியில் சமப்படுத்தும் உணர்வின் நிலைகளை உருவாக்கும் தன்மை பெற்றது 27 நட்சத்திரங்களின் ஆற்றல்கள்.

ஒவ்வொரு செடியிலும் இந்த 27 நட்சத்திரங்களின் உணர்வுகள் கலவை கலந்துள்ளது.
1.அந்த உணர்வின் பொறிகள் வரப்படும் பொழுதுதான் செடிக்குள் வெப்பமாகி
2.தன் இனம் எதுவோ புவியின் ஈர்ப்பால் தன் இனத்தின் உணர்வை இழுத்துக் கவர்ந்து செடியாக விளைகின்றது.

இது எல்லாம் இயற்கை நியதிகள்…. அன்று அகஸ்தியன் கண்டது.

சாமி (ஞானகுரு) சொல்கின்றார்… எனக்கு ஒன்றும் தெரியவில்லையே…! என்று இதை விட்டு விடாதீர்கள்.

1.எல்லாம் தெரிந்து கொண்டு யாரும் வருவதில்லை… எல்லாம் தெரிந்து கொண்டு நான் இதைச் சொல்ல வரவில்லை
2.குரு காட்டிய உணர்வு கொண்டு தெரிந்து கொண்டேன் அவர் உணர்வைத் தொடர் கொள்கின்றேன்
3.எனக்குள் இருளை அகற்றும் அந்த உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றேன்
4.உங்கள் செவிகளில் படுகின்றது… அதை நுகர்கின்றீர்கள்… உங்கள் இரத்தங்களிலே கலக்கின்றது
5.மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அகஸ்தியன் கண்டதை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்
6.அவன் அடைந்த எல்லையை நீங்களும் அடையலாம்.

மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனை

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் கொள்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் - ஆத்திரம் - ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு - விரக்தி - குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக...” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்... மூலாதாரம்.... நாபி... இருதயம்... கண்டம்... நெற்றி... தலையின் உச்சிப் பகுதி... முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடிடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாக சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தில் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடிடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது...?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு... பித்தம்... மன நோய்:-
குறுகிய மன நிலை... மருள்... பொறாமை... ஏக்கம்... உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்... தோல் வியாதி:-
மோகம்... செருக்கு... அதி ஆசைகள்... என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்...!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடிடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்... திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல...!
1.நல் எண்ணக் குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்... அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.

October 20, 2022

மனதை நாம் நொறுங்கவிடக் கூடாது... மற்றவர் மனதை நொறுக்கவும் கூடாது

உதாரணமாக... கண்ணாடியில் எழுத்துக்களை எழுதும் பொழுது பக்குவமாகச் செயல்படுத்தவில்லை என்றால் கண்ணாடி உடைந்துவிடும். நமது மனதும் ஒரு கண்ணாடி போன்றது தான்...!

1.நமக்கு அனைத்துமே தெரிந்திருக்கலாம்
2.இருந்தாலும் அடுத்தவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி சமமாகப் பதிவாக்கவில்லை என்றால் அவரின் மனம் நொறுங்கிவிடும்.

“நன்மையாகவே இருந்தாலும்” அழுத்தத்தின் தன்மை கொண்டு பக்குவம் தவறி மற்றவர்களுக்குச் சொல்லால் சொல்லப்படும் போது மனது கண்ணாடி போன்று உடைந்து விடுகிறது.

மனம் உடைந்து விட்டால் திரும்பச் சரி செய்வதே கடினம். பக்குவ நிலைகளை இழந்தால் நம் மனம் நொறுங்கி விடுகின்றது ஆகவே அதைப் போன்று சிதறுண்டு போகாதபடி பக்குவ நிலைகள் கொண்டு நாம் வாழ்தல் வேண்டும்.

1.காரியம் வெற்றி பெற வேண்டும் என்று அழுத்தத்தின் தன்மை கொண்டு
2.கோப உணர்வையோ வேக உணர்வையோ எடுத்தால் சாந்த உணர்வுகள் சுக்கு நூறாகத் தெறித்து விடுகின்றது.
3.அன்பு கொண்டு அரவணைக்கும் மற்றவர்களின் நல்ல மனதையும் நமது சொல் சிதறச் செய்து விடுகின்றது.

வாழ்க்கையில் பரிபக்குவம் கொண்டு வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

அருள் வழியைப் பெறுதல் வேண்டும். இருளை அகற்றிடும் அருள் ஞானம் பெறுதல் வேண்டும்.

நம் குரு காட்டிய வழியினை வெறும் “சொல்லால் மட்டும் சொல்லிவிட்டுப் போகாதபடி...” காலத்தை அறிந்து பக்குவ நிலை கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

1.அருள் ஒளியின் உணர்வை நாம் நுகர்ந்தால் அந்தப் பக்குவம் தன்னாலே வரும்
2.அருள் சக்திகளை நுகர மறந்தால் பக்குவம் தவறி விடுகின்றது.

பலகாரம் செய்கிறோம் என்றால் அதிலே எண்ணை காயும் பருவத்தை அறிந்து எந்தப் பொருளை இணைக்கின்றோமோ அதற்குத் தக்க அதிலே சுவையின் தன்மை வருகின்றது.

வடையைச் சுடுகிறோம் என்றால் எண்ணை காய்ந்திருக்க வேண்டும் அது காய்ந்திருக்கின்றதா...? என்றும் நாம் முதலில் சரி பார்த்தல் வேண்டும்.

பார்த்தபின் மாவைத் தட்டிப் போட்டால் வடை சுவையாக இருக்கும். என்னை காயாதபடி வடையைச் சுட்டால் எனண்ணையை அதிகமாக ஈர்த்துவிடும்... சுவை கெட்டுவிடும்.

1.ஆகவே அடுத்தவரிடம் நாம் பேசும் பொழுது பக்குவம் பார்த்துச் சொன்னோம் என்றால்
2.இணைந்து வாழும் தன்மையும் அவர்களைத் திருத்தும் நிலையும் தன்னுடன் அரவணைக்கும் தன்மையும் வருகின்றது.

அதைத் தான் இராமன் அம்பை எய்தான் என்றால் அதைத் திரும்ப வாங்கிக் கொள்வான் என்று சொல்வது.

1.நாம் சொல்லும் உணர்வுகள் எதுவோ... அதுவே பதிலாக நமக்குள் வரும்.
2.ஒன்றி வாழ்வதும்... இணைந்து வாழ்வதும்... பிரிந்து வாழ்வதும்... எல்லாமே நாம் வெளிப்படுத்தும் சொல்லின் இணக்கத்திற்குள் தான் உண்டு.
3.நான் உங்களை மகிழச் செய்யும் நிலைகள் கொண்டு வந்தால்... அதே மகிழ்ச்சி என்ற நிலைகளை எனக்குக் கொடுக்கின்றீர்கள்.

ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பாய்ச்சினோம் என்றால் கல்யாணராமன் ஆகின்றோம்.

நீங்கள் மகிழ வேண்டுமென்ற எண்ணம் கொண்டு நான் சொன்னால் உங்களுடைய உணர்வு எனக்குள் இணைந்து வாழும் தன்மையாக வருகின்றது. என் சொல்லும் உங்களுடன் இணைந்து வாழ்கின்றது. மகிழ்ச்சி பெறும் தன்மை கொண்டு மகிழச் செய்யும் உணர்ச்சியாக இயக்குகிறது.

எண்ணங்களின் இணக்கமும்... எண்ணத்தின் உணர்ச்சியும்... நமக்குள் எவ்வாறு இயக்குகின்றது...? என்று எண்ணத்தால் இயக்கும் நிலைகளை விஷ்ணுவின் மறு அவதாரம் இராமன் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

வெப்பத்தின் உணர்வு கொண்டு ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக அது எவ்வாறு இயக்குகிறது...? என்று சூரியனின் இயக்கத் தொடர்களைக் காட்டி உணர்வின் இயக்கங்களை நமக்கு ஞானிகள் காட்டினார்கள்.

உணர்வின் இயக்கம் தனக்குள் வலுவாகப் படும்பொழுது உணர்த்த வேண்டும்... உணர வேண்டும்... பார்க்க வேண்டும்... என்ற நிலையாக “எண்ணத்தால் தான் கண்கள் உருவானது...” என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.

ஞானிகள் நமக்குக் காட்டிய நிலைகளை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கையாக வாழும் அருள் சக்தி பெற வேண்டும்.

நீரைக் குடித்துத் திகட்டலை அகற்றுவது போல்… “மகரிஷிகள் உணர்வைப் பருகி… மனதை அமைதிப்படுத்த வேண்டும்”

அறுசுவை உணவுகள் உண்டிடும் காலத்தே உட்கொள்ளும் பொருள்களின் சுவைகள் அது காரமோ... புளிப்போ... உவர்ப்போ.. இனிப்போ.. துவர்ப்போ.. கையிப்போ..! எந்தச் சுவை ஆகினும் அந்தச் சுவைகளின் குணங்களின் கன பரிமாண அடர்வின் தொகுப்பில் திகட்டல் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்..?

உடனே நீரைத் தான் தேடிச் சென்று குடிக்கின்றோம். நீரை உட்கொண்டு அந்தச் சுவைகளைச் சமன்படுத்துதல் போல் ஜீவ காந்த சரீரம் கொண்டிடும் உணர்வில் கனமான சுவாச அலைகளை நீக்கிட என்ன செய்ய வேண்டும்...?

1.அந்தச் சுவைகளுக்கெல்லாம் வீரியமான உயர்வெண்ண மின் காந்த அலைகளை
2.மகரிஷிகளை எண்ணி ஈர்த்திடும் செயலில்
3.நம் சுவாச ஓட்டம் அமைதி கொண்டு நம்முடைய உணர்வின் குணங்களும் சமன் கொள்ளும்
4.நம் சுவாசமும் நாடியும் சீராகும்.

சுலபமாகப் பெற்று உயர்ந்திடும் இந்தத் தியானத்தின் வழியில் செயல்படுத்தும் “மனத்தின் திறன்” என்பதெல்லாம் அவரவர்களின் எண்ணத்திற்கொப்பத்தான் கொள்ள முடிந்திடும்.

தான் கைக்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும்... காரியமாற்றும் நிலையிலும்...
1.தன் ஆத்ம உயர்வுக்காக வேண்டி
2.எண்ணிச் சுவாசித்திடும் பக்குவம் தானப்பா ஆத்ம சுத்தி என்பது.

சரீர வாழ்க்கையில் சுவாச ஓட்டத்தின் செயலில் மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் எடுக்கும் உணர்வுகளின் வீரியத்தால் நமக்குள் மாற்றம் கொள்ளச் செய்யும் செயல்களாக பயம்... கோபம்... மோகம்... ஆவேசம்... ஆத்திரம்... பழி.... ஆகிய இந்தக் குணங்களின் மோதல்களால் முதலில் பாதிக்கப்படுவது சரீரம் தானப்பா…!

அது எப்படி என்றால்...
1.சுவாச ஓட்டங்கள் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படும் செயலில்
2.சிறுகச் சிறுகக் கூட்டிக் கொள்ளும் அந்த உணர்வுகளின் வலுவினால்
3.இரத்த நாளங்கள் குழைவு கொண்டு
4.நரம்பு ஓட்டங்களில் தளர்வு பெற்று
5.எலும்புகளின் ஊண் ஒளி குறைவுபட்டுத் தளர்வுறும்.

பக்குவமாக அந்தக் குணங்களை விலக்கிக் கொண்டு நல் நிலை பெறுவதற்கே இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதமப்பா...! அதனால் சரீர சுத்தியும் கிடைக்குமப்பா...!

October 19, 2022

திடுக்... திடுக்... என்று பயமும் பதட்டமும் நமக்கு வரக் காரணம் என்ன...?

1.கண்ணின் கருவிழிக்குப் பேர் “ருக்மணி (படமாக்குவது)” என்றும்
2.கண்ணின் காந்தப் புலனறிவுக்குப் பேர் “சத்தியபாமா (உண்மையை உணர்த்துவது)” என்றும் ஞானிகள் வைத்துள்ளார்கள்.
3.அந்த இரு சக்திகளையும் சேர்த்துத் தான் “கண்ணன்” என்றும் காரணப் பெயர் வைத்தனர்.

உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கின்றோம். எதிரிலே ஒரு பஸ் வேகமாக வருகின்றது... நம் கண்களின் கருவிழி அதை நம் உடலில் பதிவாக்குகின்றது.

நம் மீது மோதும் நிலைகள் கொண்டு வருவதை அந்த உணர்வலைகளைக் கவர்ந்து உயிருடன் இயக்குகின்றது. அப்போது “பஸ் நம் மீது மோதி விடுமோ...!” என்ற அச்சத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
1.அதனின்று விலகிச் செல்ல கண்கள் நமக்குப் பயன்படுகின்றது.
2.விபத்து ஏற்படாமல் அந்த நேரத்தில் காப்பது நமது கண்களே.

ஆகவே கண்ணன்... கண்கள் நம்மை வழி நடத்துகின்றது. தீமையான உணர்வுகளைக் கண்டபின் அந்தத் தீமையிலிருந்து விடுபட விபத்துகள் வரும் என்று கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து விபத்திலிருந்து நம்மைக் காக்கின்றது.

அப்படி விபத்திலிருந்து காத்தாலும் பஸ்ஸின் வேகத்தைக் கண்டு அந்த அச்ச உணர்வு உயிரிலே பட்டு வேகமாகப் படும் பொழுது “பயத்தை ஊட்டும் அதிர்வுகள்...” ஏற்படுகின்றது.

1.கண்கள் அந்த உண்மையை உணர்த்தினாலும்... நம்மைக் காத்தாலும்
2.நாம் நுகர்ந்த பயமான உணர்வை உயிர் இயக்கி உடலைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றாலும்
3.நுகர்ந்த பயமுறுத்தும் உணர்வை ஓ...ம் நமச்சிவாய... என்று ஜீவ அணுவாக... நம் உடலாக மாற்றி விடுகின்றது.

ஒரு இடத்தில் இருவர் சண்டை இடுகின்றனர்... கடுமையாக மோதுகின்றனர். பயங்கரச் சொல்களையும் விபரீதப் பேச்சுகளையும் பேசுகின்றனர்.

நாம் அதைப் பார்க்க நேர்ந்தால் கண்ணின் கருவிழி அதைப் பதிவாக்குகின்றது. அவர்கள் செயல்களை உற்றுப் பார்த்துச் சண்டையிடும் உணர்வின் தன்மை நுகரச் செய்கின்றது.

அவர்கள் தவறு செய்கின்றனர்... பயங்கரமாக மோதிக் கொள்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
1.நாம் நுகர்ந்ததைக் கண் உயிருடன் இணையச் செய்கின்றது
2.உயிரோ அந்த உணர்வினை ஓ...ம் நமச்சிவாய... என்று ஜீவ அணுவாக உடலாக மாற்றி விடுகின்றது.

இது எல்லாம்... நாம் தவறு செய்யவில்லை என்று இருந்தாலும்
1.தவறு செய்பவருடைய நிலைகளை நம் கண்கள் உணர்த்துகின்றது.
2.ஆனால் பதிவாக்கிய பின் உயிரோ அதை உடலாக மாற்றி விடுகின்றது.

அச்சுறுத்தும் உணர்வு உடலுக்குள் அணுக்களாக மாறிவிட்டால் அந்த பயமுறுத்தும் உணர்வைச் சுவாசிக்கும்போது “உயிரிலே படும்போதெல்லாம்” நாமும் பயந்து அதற்குத் தக்கவாறு வாழ்க்கை அங்கே நடக்க நேர்கின்றது

பயமுறுத்தும் உணர்வுகள் அதிகமாகி அந்த அணுக்கள் பெருகத் தொடங்கினால்...
1.நம்மை அறியாமலே அடிக்கடி பதட்டமடையும் அல்லது நடுக்கம் அடையும் உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும்.
2.ஒரு காரியத்தையோ தொழிலையோ செய்ய வேண்டும் என்று வலுவாக எண்ணினாலே பதட்டமும் பயமும் வரும்... மன உறுதி இழக்க நேரும்.

அதனால்... சோர்வும் சஞ்சலமும் அடைந்து “என்னால் முடியவில்லையே...” என்று வேதனைப்படும் பொழுது - வேதனை என்பது விஷம்...! நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தையும் உயிர் இந்த உடலில் விஷமான அணுவாக மாற்றி விடுகின்றது.

அதனால் தான் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை” என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

நாம் எதையெல்லாம் எண்ணிச் சுவாசிக்கின்றோமோ அதனின் உணர்வினை உணர்த்தினாலும் அதனதன் அணுவாக உருவாகித் தன் இனத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றது.

நாம் தவறு செய்யாமலேயே பல நிலைகள் இப்படி வருகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் பல கோடிச் சரீரரங்களில் தன்னைக் காட்டிலும் வலுவான மிருகங்களின் உணர்வுகளை எடுத்து ஒவ்வொன்றில் இருந்தும் பாதுகாப்பான உணர்வுகளை எடுத்துத் தப்பிடும் உணர்வுகளை எடுத்துத் தான் மனிதனாக வந்துள்ளோம்.

அதாவது வலுவான உணர்வை நுகர்ந்து நுகர்ந்து தான் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து... இன்று வந்துள்ளோம்..

முதலிலே சொன்ன மாதிரி இன்றைய மனித வாழ்க்கையில் பயமான உணர்வுகளையோ... சண்டையிட்டோர் உணர்வுகளையோ... அல்லது நோயாளியின் உணர்வுகளையோ எடுக்க நேரும் போதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி
2.அதிலிருந்து வரும் உணர்வுகளை உயிர் வழியாக நுகர்ந்து
3.நம் உடல் முழுவதும் பரப்பச் செய்ய வேண்டும்.

காரணம் அந்தத் துருவ நட்சத்திரம் நஞ்சினை வென்றது... உணர்வினை ஒளியாக மாற்றியது. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் அதிலே இரண்டறக் கலந்த செம்பு பித்தளையும் ஆவியாக மாறித் தங்கம் பரிசுத்தமாவது போன்று
1.துன்பப்படுத்தும் உணர்வுகளை நம் கண் கவர்ந்தாலும்
2.அந்த உண்மைகளை உணர்த்தினாலும்
3.அதிலிருந்து விலகிச் சென்றாலும்
4.நுகர்ந்த உணர்வு நம் உடலுக்குள் ஜீவ அணுவாக மாறுவதற்கு முன்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கொண்டு நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விபத்துக்களோ அல்லது அது போன்ற அதிர்ச்சியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலோ அந்தக் காலங்களில் எல்லாம் ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று பல முறை எண்ணி ஏங்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்திரத்தின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும். பயமான உணர்வலைகள் நீங்க வேண்டும்... என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்... நாங்கள் மன பலம் பெற வேண்டும் ஈஸ்வரா...! என்று எண்ணினால் நம் எண்ணத்தை வலுவாக்கும். அனுபவத்தில் பார்க்கலாம்...!

நெஞ்சுக் குழியில் இருக்கும் “தாய் மூச்சு நாடி”

கோப குணத்தின் உந்துதலால் அந்த நேரத்தில் நாம் ஈர்த்துக் கொள்ளும் சுவாசமே கனம் கொண்டதாக மாறுகின்றது. கோப குணத்தின் வீரியம் எத்தகையதோ அதற்கேற்றாற்போல் சரீர நாடிகளும் இயங்கி அந்தக் கோப குணத்தின் கார அலை நம் சரீரத்தைத் தாக்குகின்றது.

அப்படித் தாக்கும் நிலையில் ஆண் பெண் இருபாலருக்குமே
1.மார்புப் பகுதியின் மையத்தில் வயிற்றுப் பகுதியின் மேற்புறத்தில்
2.”சிறிய குழிவு..” போன்ற பகுதியினுள் ஓர் மூச்சு நாடி ஓடுகின்றது
3.அதுவே மிக முக்கிய நாடியப்பா…! –
4.தாய் மூச்சு நாடி...! என்பது அது தான்.

நாபி நாடியுடன் இணைந்து செயல்படும் அந்தத் தாய் மூச்சு நாடி தாக்கப்படும் காலத்தில்... அருகில் அமைந்துள்ள இரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் செயலில் அதைத் தூண்டி... இருதயத்தின் தொடர்புடன் இணைந்து கொண்டு
1.அதற்குள் ஓடும் மூச்சுக் காற்றால்
2.எடுத்துக் கொண்ட குணத்தின் வீரிய உணர்வு தாக்கிடும் செயல் நிலையே இருதய நோய் (HEART ATTACK).

ஜீவ காந்தம் கொண்ட மனிதச் சரீரம் உணர்வு கொண்டு இயங்கும் இயக்கத் தொடரில் உடல் தனக்குத் தேவையானதைப் பெறும் (சுகமாக அனுபவிக்கும்) செயலில் எது...எது.. எப்பொழுது செயல்படுகிறது...? என்ற பாங்கில் அந்தந்தக் கால கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் காரணமே “பசி... மோகம்.. தாகம்...” என்பதாகும்.

இவைகள் எல்லாம் நீங்கி அந்தத் தேவைகள் பூர்த்தி பெற்றாலும் ஈர்த்துக் கொண்டிருக்கும் உணர்வுகளின் குணங்களின் சுவாசத்தினால் நிகழ்வது என்ன…?

ஏனென்றால் அனைத்து குணங்களின் சுவையே நம் ஆத்மாவின் பதிவு நிலை ஆகின்றது. அப்படிப் பதிவானது அதே தொடரின் செயலில் கனம் கொண்ட சுவாசமாக மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றது.
1.அத்தகைய வினைச் செயலின் பதிவாகக் களங்கமுறுவது ஆத்மாவும்... சுவாசமும்... செயல் கொள்ளும் ஜீவ சரீரமும் தான்...!
2.ஆக ஆத்ம சக்தியுடன் இணைந்து தான் சரீர சுத்தியும் செயல் கொள்ளுமப்பா…!

வாழ்க்கையில் பலதரப்பட்ட மோதலில் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் குணங்களின் நல்லெண்ண நற்சுவாசச் செயலே ஆத்ம சுத்தி.

அன்றாட வாழ்க்கை நிலையில் எத்தனையோ பல காரியங்களை நாம் செயல்படுத்துகின்றோம். அப்பொழுது பலருடைய எண்ணங்களின் தொடர்புகள் சுவாசத்தின் ஈர்ப்பில் வந்து சேர்கிறது.

நண்பர்கள்.. உறவினர்கள்... மற்றைய அலுவல்களில் சந்திக்க நேரும் பொது ஜனத் தொடர்புகள்... ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடும் செயல்களில் எல்லாம்
1.பிறரது எண்ணங்களின் குணநலன்கள் நம் சுவாசத்தின் ஈர்ப்பினால் பெற்று
2.அந்தக் குணங்களின் அமில குணச் சுவை அணுக்கள் சரீரத்திலும் கலந்து
3.அதே குணங்களின் உணர்வலைகள் ஆத்மாவிலும் பதிவு நிலை பெறுகின்றது.

புவி ஈர்ப்பின் பிடிப்பில் சுவாச ஓட்டத்தில் ஈர்த்துக் கொள்ளும் சுவாசம் கனம் கொண்ட எண்ணத்தின் வீரியத்திற்கொப்பச் செயல்படும் நிலையில் ஆத்மாவில் பதிவு பெறும் மாற்று நிலைகளின் கழிவை நீக்கவே இந்தத் தியான முறையச் சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழியாக
1.வாழ்க்கையில் உணர்வின் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் எல்லாம்
2.எண்ணத்தின் உணர்வில் உயர்வைக் கூட்டி...
3.ஒளியின் பிரகாசமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளை விண்ணிலிருந்து புருவ மத்தியில் ஈர்த்துக் கொண்டு
5.நம் ஜீவ காந்தச் சரீரம் கொண்ட அந்த கனமான சுவாச அலைகளைச் சமன்படுத்தி
6.உயர்வைக் கூட்டி நல்லாக்கம் பெறல் வேண்டும்...!

ஆகவே
1.நாம் செயல்படும் செயலில் கொள்ளும் நிதானமே...
2.நம் உயிர் ஆத்ம ஞான வளர்ப்பிற்குப் பிரதானம்...!

October 18, 2022

நம்மை ஒளியாக மாற்றும் பொறுப்பு உயிருக்கு இருக்கிறது

விண்ணிலே ஒளியின் சரீரமாகச் சுழன்று கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்தும்… அதனைப் பின்பற்றிச் சென்ற சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும்… வெளி வரும் ஒளிக் கற்றைகளை நமது பூமி துருவப் பகுதியின் வழி கவர்ந்து பரமான நம் பூமியில் பரலோகமாக மாற்றிக் கொண்டே வருகின்றது.

இந்த பரமான பூமியில் பரலோகமாகக் காற்றிலிருப்பதை நுகர்ந்தவர் அவரவர் உணர்வுகளுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைந்து…
1.மனிதனான பின் அரும்பெரும் சக்தி பெற்ற அந்த உணர்வுகள் பூமியில் படர்ந்து இருப்பதை நமது குருநாதர் காட்டி
2.அருள் ஒளியினை எனக்குள் பதிவு செய்தார்… அதை உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன்.

அந்தப் பதிவினை மீண்டும் நினைவு கொண்டு நுகர்ந்தறியப்படும் போது அந்த அருள் ஒளியை அனைவரும் பெற முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ளுதல் வேண்டும்.

தன்னம்பிக்கை கொண்டு இந்த வாழ்க்கை வாழும் போது
1.நாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எந்த அளவுக்கு நுகர்கின்றோமோ அதை நமக்குள் உருமாற்றம் செய்வதும் உயிரே.
2.ஆக… உயிரே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றது
3.நாம் நுகரும் அருள் உணர்வுகளை உடலில் பரவச் செய்கின்றது… இந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது
4.உணர்வுக்கொப்ப இந்த உடலை இயக்குகின்றது.

இது உயிரின் வேலை.

நம் கண்ணின் வேலையோ நாம் எதிரில் இருப்பதைப் படமாக்கிப் பதிவாக்கி விடுகின்றது உடலுக்குள். ஆனால் நாம் செல்லும் பாதையில் இது பிழையான இடம்… இது தவறான இடம்… என்பதனை நம் கண் வழிகாட்டுகின்றது. தீமையிலிருந்து விடுபடும் உணர்ச்சிகளை ஊட்டி நம்மைக் காக்கின்றது.

நமது கண்களால் உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மை உயிரிலே கொடுக்கப்படும் பொழுது நுகர்ந்த உணர்வை அறிகின்றோம். நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலை உயிர் இயக்குகின்றது.

தீமை என்று கண் உணர்த்தினாலும்… அப்போது அந்தச் சமயத்தில் தீமையிலிருந்து விடுபட்டாலும்… நுகர்ந்த உணர்வு தீமையின் அணுக்களாக உருவாகி விடுகின்றது.

ஆகவே நாம் நுகர்ந்த உணர்வுகளை… உயிர் அந்த உணர்வுகளின் வழி நம்மை வழி நடத்தினாலும் அந்த உணர்வின் சத்து ஓ…ம் நமச்சிவாய… என்று நம் உடலாக மாறுகிறது.

பரலோகத்தில் இருப்பதை - உயிரணு தாவர இனச் சத்துக்களை எல்லாம் நுகர்ந்த பின் தாவர இனச் சத்திற்கொப்ப அந்த உணர்ச்சிகள் வந்து உடல்கள் பெற்றது.

இதைப் போன்று பல பல எண்ணிலடங்கா தாவர இனத்தின் உணர்வுகளை நுகர்ந்து… பல பல உடல்கள் மாற்றம் அடைந்து… மனிதனாக உருவாக்கும் தன்மை பெற்றது… தீமைகளை நீக்கிடும் சக்தி பெற்றது.

இருந்தாலும் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக ஆனபின் இந்தப் பிரபஞ்சத்தின் ஆற்றலையும் அகண்ட அண்டத்தின் ஆற்றலையும் அவைகளின் இயக்கங்களையும் கண்டுணர்ந்தவன் “அகஸ்தியன்…”

1.அவனுக்குள் விளைந்த அந்த உணர்வுகளை நாம் கவர்ந்தால்
2.நமது நினைவாற்றல் அகஸ்தியன் கண்ட அந்த அகண்ட அண்டத்திலும் பரவி
3.அதை நாம் நுகர்ந்து பேரருள் பேரொளி என்ற உணர்வினை நமக்குள் உருவாக்கிட முடியும்.

தாவர இனங்களுக்கு உரமிட்டு அதனை எப்படிச் செழிப்பாக வளர்க்கின்றோமோ அதே போன்று
1,அகஸ்தியன் உணர்வை நாம் நுகர்ந்து
2.நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு வீரிய சக்தியை ஊட்டி
3.ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

அந்த மெய் ஞானி கண்ட உண்மையைப் பெறச் செய்வதற்குத் தான் இதை எல்லாம் பயிற்சியாகக் கொடுக்கின்றோம். அகஸ்தியனின் உணர்வினை உங்களுக்குள் பாய்ச்சுகிறோம்.

அதை நினைவுக்குக் கொண்டு வந்து அகஸ்தியன் உணர்வை வளர்த்தால் வாழ்க்கையில் நீங்கள் நுகர்வதை எல்லாம் உங்கள் உயிர் ஒளியின் சரீரமாக மாற்றி அமைத்து விடுகின்றது.

தீமைகளிலிருந்து விடுபடும் உணர்ச்சியை ஊட்டி… நஞ்சு புகாது தடுத்து நிறுத்தும் நிலையாகவும் இது அமைகின்றது.

சுவாச நிலையை மாற்றாதபடி… நாடிகளின் இயக்கங்களைச் சீராக்காதபடி… பூரண நலம் கிடைக்காது

மனிதனின் சரீரமானது எண்ணம் கொண்டு ஜீவ காந்த ஆற்றலின் கதியினால் இயங்கும் இயற்கைச் செயல்பாட்டில் சரீரம் நலிவுறும் காலங்களில் எல்லாம் அதைக் குணப்படுத்த நவீன மருத்துவ விற்பன்னர்கள் (DOCTORS) பல பல முறைகளைக் கையாளுகிறார்கள்.

நோயின் குணங்களை அறிந்து அந்த நோய் அகலச் செயல்படுத்தும் இன்றைய மருத்துவத்தில் நோய்வாய்ப்படுபவனின் சரீரம் மருத்துவர் கொடுக்கும் மருந்தின் குண அமிலத்தை ஏற்றுக் கொண்டு நோயை அகற்றிடச் செயல்படுகிறது.

ஆனால் நோயின் கடுமை வீரியம் கொண்டால் உட்கொள்ளும் மருந்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் முதிர்வாகிச் சரீர அவயங்களில் பெரிய பாதிப்பு எற்படத் தொடங்கிவிடுகிறது.

இவைகளை மருத்துவர்கள் கண்டு கொண்டு அந்த நோயின் கடுமைக்கு ஏற்ப அறுவைச் சிகிச்சை முறைகளையும் (SURGERY) கற்ற அறிவின் ஞானம் கொண்டு செயல்படுத்துகிறார்கள்.

மருத்துவம் மனிதனை இன்றைக்குக் காத்துக் கொண்டிருப்பது இதைப் போன்ற வழிகளில் தான். ஆனால்
1.மனிதனுடைய சந்தர்ப்பத்தினால் அவன் எடுத்துக் கொண்ட குணங்களின் கடுமையால் தான் சுவாச ஈர்ப்புத் தன்மையே மாறுகிறது.
2.அதனால் சரீரத்தில் நலிவுகள் ஏற்படத் தொடங்குகிறது
3.இன்றைய மனிதனின் செயல்பாடுகள் இப்படிப்பட்ட விதி வழி செல்கின்றதப்பா…!

பூமி ஈர்த்துச் சமைக்கும் சுவாசத்தின் செயலில் நன்மை தீமை என்று கலந்தே காற்றினில் படர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கை மோதலில் மனிதன் தான் ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட எண்ணம் வலு நிலை பெற்று விடுவது “சுவாசத்தின் கதியினால் தான்…!”

சரீரத்திற்குள் அமைந்து வினைச் செயலாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான நாடிகள்: மூலாதார நாடி... நாபி நாடி... மார்பு நாடி... கண்ட நாடி... சிரசில் நெற்றிப் பகுதியில் சிவசக்தி நாடி... சிரசின் உச்சியில் ஈஸ்வர நாடி.... ஆகும்.

இவைகளுடன் சேர்ந்து சரீர அவயங்களில் புறத் தொழில் புரிந்திடும் செயலாகச் செயல்பட்டு ஓடிடும் நாடிகள் கண்... காது... நாசி... வாய்... கை கால் உறுப்புகள்.. ஒவ்வொன்றுமே சரீர வளர்ச்சிக்காக இயங்கினாலும்
1.அந்த வளர்ப்பின் முதிர்வாக...
2.கடைசியில் மனிதனின் சரீரத்தில் ஏற்படுகின்ற நோய் நொடிகள் அனைத்திற்கும் மூல காரணம் எது…?

உலகோதய வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் செயல்படும் குணங்களில்
1.பயம் கோபம் மோகம் ஆத்திரம் அவசரம் வெறி வேதனை உள்ளிட்ட
2.பல்லாயிரம் கிளைகளாகக் கிளைத்திடும் அந்தக் குணங்களின் செயல்பாடே
3.சுவாசத்தின் கதியாக நாடிகளில் ஓடுகின்றது.
4.அந்தந்தக் குணங்களின் வீரியத்திற்கொப்ப இரத்த நாளங்களைத் தூண்டச் செய்து
5.மேலே சொல்லப்பட்ட அக… புற நாடிகளில் ஓடும் சீரான சுவாச ஓட்ட கதி முழுவதையுமே அது மாற்றி விடுகின்றது.

அதே சமயத்தில் சரீர உள் அவயங்கள் செயல்படும் செயலிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வேதனைகளை உண்டாக்குகின்றது. அந்த வேதனையின் உச்ச நிலையே நோயாக மாறுகின்றது.

நோயாக ஆன நிலையில் இயற்கையின் கதியை அதாவது சரீர இயக்கத்தின் இயல்பையே மாற்றிவிட்டு தான் பெற வேண்டிய உயர் நிலைக்கே விபரீதத்தை விளைவித்துக் கொள்கின்றான் மனிதன்…!

சுவாச நிலை சுவாச நிலை என்று பல முறை சொல்கிறோம். அந்தச் சுவாச நிலையைச் சரி செய்ய வேண்டுமா இல்லையா..?
1.சுவாச நிலையை மாற்றாதபடி
2.நாடிகளின் இயக்கங்களைச் சீராக்காதபடி
3.மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்குமா…?

October 17, 2022

வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற ஒரு தெளிவான "முன் சிந்தனை (PLAN) வேண்டும்..."

புதிதாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்றால் ஒரு இன்ஜினியரை வைத்து அதற்குத் தேவையான பிளானைப் போடுகின்றோம். தேவையான பொருள்களை வாங்கிக் கொத்தனாரையும் மற்ற ஆட்களையும் வைத்து அந்த வீட்டைக் கட்டுகிறோம்.

ஆக... வீட்டைக் கட்டுவதற்கு முன்னாடியே எப்படி...? என்ன...? ஏது...? என்று எல்லைகளை வகுத்து விட்டுத் தான் வேலைகளை நாம் செய்யத் தொடங்குகின்றோம்.

அதே போல் ஒரு பலகாரத்தை செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே அரிசியை ஊறவைக்கின்றோம். ஊறிய பின் அதை அரைத்து மற்ற பொருள்களை அதனுடன் சேர்த்து அதைப் புளிக்க வைக்கின்றோம்.

ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து மாவினை எடுத்து வடையாகச் சுடும் போது அதற்குத் தக்க ருசியும் சுவையும் பலகாரத்தில் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளை எவ்வாறு நாம் தெளிந்து செயல்படுத்துகின்றோமோ அதைப் போல் நமது வாழ்க்கையிலும்... எதை... எக்காலத்தில்... எப்படிச் செயல்படுத்த வேண்டும்...? என்ற பக்குவ முறைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாவை அரைத்து வைத்துவிட்டுப் பத்து நாளைக்குச் சேமித்து வைத்தால் அது அதிகமாகப் புளித்துப் போய் விடுகின்றது. ஆனால் பத்து நாள் சேமித்து வைக்க வேண்டும் என்றால் அதை ஒரு ஐஸ் பெட்டியில் பத்திரமாக வைத்தால் கெடாமல் இருக்கின்றது.

விஞ்ஞான அறிவில் வாழும் நாம் இப்படிப் பக்குவப்படுத்துவது போன்று
1.அந்த மெய் ஞானிகளுடைய உணர்வு கொண்டு நமக்குள் அருள் ஒளியைப் வளர்த்து
2.அதை வைத்துப் பக்குவப்படுத்தி... நம்மை நாம் பாதுகாத்தல் வேண்டும்.
3.சமயம் வரும் பொழுதெல்லாம் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து
4.வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

பொருள்கள் கெட்டுப் போகாது அதை பாதுகாக்க எப்படிச் செயல்படுத்துகின்றோமோ அதைப் போன்று நமக்குள் தீமையான உணர்வு வந்தால் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் கொண்டு அந்தத் தீமை நமக்குள் வளராதபடி பாதுகாத்தல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் அருள் ஒளியை நுகர்ந்து நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பாதுகாத்து என்றும் வேகா நிலை பெறும் தன்மையை உறுதிப்படுத்தி இந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து பழகுதல் வேண்டும்.

ஆகவே குரு காட்டிய அருள் வழியில்...
1.அருள் ஒளி பெறுவோம்
2.இருளை அகற்றுவோம்
3.ஒளியான உணர்வை வளர்ப்போம்
4.ஒளியின் சரீரமாக நிலைப்போம்
5.நிலையான ஒளி சரீரத்தைப் பெற இந்த வாழ்க்கையினை அருள் வாழ்க்கையாக மாற்றி அமைப்போம்.

புறத்தில் காணுவதை விடுத்துவிட்டு நீ கண்டு கொள்ளடா… உன் ஆத்ம ஜோதியை…! – இராமலிங்க அடிகள் சொன்னது

ஐந்து திருமுறைகள் பக்தியின் பரவசமாகக் கொண்ட நிலையை மாற்றி
1.ஆறாம் திருமுறையில் மெய்யொலியாக உண்மை ஞானமாக
2.ஆத்ம தரிசனம்... என்றும் ஜோதி தரிசனம்... என்றும் காட்டினார் இராமலிங்க அடிகள்.

மனிதன் தன் ஆத்ம அறிவைக் கூட்டிக் கொள்ள “மதி ஒளி” என்னும் சிந்திக்கும் திறன் ஆய்வில் கண்டும் கேட்டும் உணர்த்தும் என்பதில்
1.“அறிவை அறிவால் அறிவர்...!” என்ற சூட்சமமாக “இராமலிங்கச் சித்தன்” வெளிப் போந்த மெய்
2.அந்த ஞானத்தை மனித சமுதாயம் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டது...?

பக்தி கொண்டு பஜனை பாடவும்.. பரவசமாக அந்தச் சித்தன் உரையைப் பேச்சுக்கலை ஆற்றவும்... திருவிழாக்கள் என்ற பேரில் வாண வேடிக்கை வினோதங்கள் கவனத்தை ஈர்க்கவும்.. செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்தச் சித்தன் ஸ்தூல சரீரம் கொண்டு உலவிய கால கட்டங்களில் மனிதனின் போக்கு ஆராவாரம் கொள்ளும் செயல்களை விடுத்து மெய் ஞானம் கொண்டு உயர்ந்திடவே மெய்ப் பொருளைக் கொள்ளப்பா... கொள்...! என்று “ஏக்கமுடன் கூவியே அழைத்தான்...!”

ஆறாவது திருமறையை உணர்த்த வந்த செயலை ஒதுக்கித் தள்ளிய சமுதாய நிலையைக் கண்ட பின்...
1.கண்ட பின் “கடை விரித்தேன் கொள்வாரில்லை...!” என்றுரைத்து
2.“மீண்டும் பிறப்பில் வருவேன்... இந்த உலகின்கண் மற்றொரு பாகத்தில்...!” என்ற அந்தச் சித்தனின் சொல் வாய்மை
3.பிறப்பின் தொடரில் “நடைமுறைக்கு வந்துவிட்ட சூட்சமத்தைத்தான்...” இன்றைய மனிதன் அறிந்து கொண்டானா...?

போற்றி...போற்றி...! என்று போற்றிடவே துடிக்கின்ற மனிதனின் செயலில் மெய் ஞான விழிப்படையத் தடுக்கின்ற நிலையின் காரணமே தான் கொண்ட அதி ஆசை நிலை தானப்பா.

1.ஆக “பூசத்தில் ஜோதி கண்டேன்... பிறவிப்பயன் பெற்று விட்டேன்...!” என்று
2.தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு புகழ்ந்திடும் வழிக்கன்றோ செல்கிறான் மனிதன்.

கண்டவன் விண்டிடுவானா...? பெற்றதின் பயனை...! ஏதோ மனதிற்கு ஒரு நிறைவு ஹன நேரத்திற்கு என்று உரைப்பவனே மீண்டும் உலகோதயத்தில் அகப்பட்டே தத்தளிக்கின்றான்.
1.அருள் செல்வம் என்பது எதுவப்பா...?
2.இராமலிங்கம் காட்டிய ஜோதித் தத்துவம் எதுவப்பா...?

ஒரு புறம் சூரியன் மறு புறம் சந்திரன் காணுகின்ற கால கட்டத்தில் நடுவிலே ஜோதி காட்டியதே உயிராத்ம தரிசனம்...! “நான்” என்பதன் கருப்பொருளை உணர்த்தவே... உணர்ந்து கொள்ளவே காட்டப்பட்டது அந்தத் ஜோதித் தத்துவம்.

சூரியன்... சந்திரன்... ஜோதி விளக்கு... அனைத்தும் இருளகற்றும் ஒளிகள். இருளகற்றும் ஒளியை மனிதன் தன் ஐம்புலன்களில் ஒளி கொண்டு கண்டு உணர்வதுவே “கண் ஒளி கொண்டு தான்...!”

கண்ணொளி கொண்டு ஜோதி தரிசனம் காண்கின்றவன் - தான் காண்பது ஜோதியே என்று அறிந்து கொள்ளும் ஒளி... “அறிவின் ஒளியப்பா...!

1.அறிவின் ஒளி கொண்டு காண்கின்ற ஜோதியை
2.நான் ஜோதி தரிசனம் கண்டேன் என்று உரைத்ததில்
3.ஜோதி தரிசனத்தைக் கண்டு கொண்ட “நான்” என்பதே உயிராத்மாவாகிய ஜோதியப்பா…!

“நீ கண்டு கொள்ளடா… உன் ஆத்ம ஜோதியை…!” என்று கூறாமல் கூறிச் சொல்வித்த இராமலிங்க சித்தனாரின் உண்மை நிதர்சனம் என்றுமே மாறாத சத்தியத்தின் சக்தியப்பா…!

இன்றைய விஞ்ஞான உலகம் ஆத்ம சிந்தனையின் சக்தியை அறிந்து கொள்ள ஆவல் கொண்ட கலியின் கடைசிக் காலத்தில் “இராமலிங்க வள்ளல் சித்தன்” கொண்ட ஆத்மாவின் வலுவே
1.உலகின் ஒரு கண்டத்தில் செயல் கொண்டிருக்கும் உண்மையின் பொருள் கண்டு கொண்ட பின்பாவது
2.மனிதன் தன்னை உணர்ந்து கொள்ளும் செயலுக்கு ஊக்கமளித்திடச் செயல் கொள்ளட்டும்.
3.அழிவின் பாதையில் மனித சமுதாயத்தையே அழைத்துச் சென்று கொண்டிருக்கும் விஞ்ஞானமும்
4.ஆத்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும்… என் ஆசிகள்…! (ஈஸ்வரபட்டர்).

October 16, 2022

உடலையும் சொத்தையும் தான் பார்க்க விரும்புகிறோம்... உயிர் பிரிந்த பின் எதைப் பார்க்கப் போகின்றோம்...!

உயர்தரக் கல்வியை உருவாக்கி இந்த உணர்வின் தன்மைகளைத் தனக்குள் பதிவாக்கி அதன் மூலம் இன்று விஞ்ஞானத்தைப் பெருக்கிக் கொண்டே வருகின்றார்கள்.

ஒரு இன்ஜினியரோ அந்த விஞ்ஞான அறிவுப்படி இயந்திரங்களின் உறுப்புகளைப் புதிது புதிதாகச் செயல்படுத்தத் தொடங்குகிறான்.

ஒரு இயந்திரத்தில் அதனுடைய இயக்கப் பொறிகள் எங்கெங்கே அழுத்தங்கள் அதிகமாக இருக்கின்றதோ அதற்குத்தக்கவாறு ஒரு வலுகொண்ட சக்தியினை உலோகங்களின் மூலம் கொடுக்கின்றனர்.

அதே போன்று ஒவ்வொரு பொருளுக்கும் அந்த இயந்திரங்களை இயக்குவதற்கு இன்ஜினியர்கள் முதலில் ஒருவர் கண்டுணர்ந்து உருவாக்கி இருந்தாலும்
1.அடுத்து அதிலே சந்தர்ப்பத்தால் எப்படிப் பழுதடைந்தது...?
2.அந்தப் பழுதை எப்படி மாற்றுவது...? என்ற நிலைகளைக் கண்டுணர்கின்றனர்
3.துரித நிலைகள் கொண்டு பழுதடைவதை நீண்ட நாள் பழுதடையாமல் பாதுகாக்கும் யுக்திகளை எண்ணுகின்றார்கள்
4.நீண்ட நாள் பழுதடையாதபடி இயந்திரப் பாகங்களின் உலோகங்களை மாற்றி
5.அதனை எந்தெந்த நிலைகள் செயல்படுத்த முடியும் என்று உருவாக்குகின்றார்கள்

அதாவது சரி செய்ய வேண்டும் என்ற நிலையில் தன் உணர்வின் எண்ணங்களைக் கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டி அந்தப் பாகங்களைச் செய்கின்றார்கள்.

பண்டைய காலங்களில் மனிதனுக்குப் பற்கள் இல்லை என்றால் அதை வைத்துத்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞான காலத்தில்
1.பழுதடைந்த பற்களை நீக்கிவிட்டு
2.அதற்கென்று புதிதாக உருவாக்கப்பட்ட பற்களை வைத்து மாற்றி
3.கடினப் பொருள்களை மென்று உணவாக உட்கொள்ளும் நிலைகளுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

அதே போல் உடல் உறுப்புகளில் பின்னமாகிவிட்டால் கூடுமான வரையிலும் செயற்கை முறையில் அதே உறுப்புகளைச் செயலாக்கும் தன்மையும் வந்துவிட்டது.

இப்படி... மனிதனுக்குள் பழகிய நிலைகள் கொண்டு மனித உடலைத்தான் இவர்களால் பார்க்க முடிகின்றது.

ஆனால் ஞானிகளோ விஷத்தை வென்றிடும் உணர்வை தனக்குள் வளர்த்து விஷத்தை வென்றிடும் அருள் உணர்வுகளை தனக்குள் பெருக்கி இந்த பிரபஞ்சத்தில் விஷத்தின் தன்மை வந்தால் அதை அடக்கி தனக்குள் ஒளியின் தன்மையாக மாற்றிடும் சக்தி பெற்றனர்.

அதிலே ஆதியிலே தோன்றிய அகஸ்தியன்
1.மீண்டும் அவன் தான் பிறவிக்கு வராதபடி அத்தகைய உணர்வினைத் தனக்குள் வளர்த்து
2.உடலை விட்டுப் பிரிந்து சென்றால் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆகும் தன்மை பெற்றான்.

கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாக இணைந்து இரு உணர்வும் ஒன்றென இணைந்து வாழ்ந்தனர்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இருவருமே விண்ணுலக ஆற்றலை எடுத்து நஞ்சினை வென்று ஒளியான அணுக்களை உருவாக்கி உடலை விட்டுச் சென்ற பின் துருவத்தின் எல்லையில் இருந்து கொண்டு பூமி கவரும் உணர்வுகளை ஒளியின் உணர்வாக மாற்றிக் கொண்டு உள்ளார்

அவர்கள் பெற்ற சக்திகளைத் தியானித்து அதை நுகர்ந்த அக்கால மக்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

உயிரணு தோன்றி மனிதனாகி கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமாக ஆனதும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் வேகாநிலை அடைகின்றனர்.

1.இந்தப் பிரபஞ்சமே மடிந்தாலும் சூரியனே அழிந்தாலும் அவைகள் அழியாது
2.எத்தகைய விஷத்தன்மையும் அவர்களைப் பாதிக்காது அதனை ஒளியாக மாற்றிக் கொண்டு
3.அகண்ட அண்டத்தில் ஏகாந்த நிலையில் வாழ்கின்றனர்.

அவர்களைப் போன்று நாமும் நுகர்வதை எல்லாம் ஒளியாக மாற்றி மகிழ்ச்சி பெறும் உணர்வாக மாற்றிடும் அந்த சக்தி பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது ஒளியாக மாற வேண்டும்.

பல ஞானிகளும் மகரிஷிகளும் முனிவர்களும் இந்த மனித உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று கடும் தவம் இருந்து உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக விண்ணிலே உள்ளார்கள்.

அவர்களிடம் இருந்து வெளிப்படும் அந்த ஒளியான உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பூமியில் பரவச் செய்து கொண்டேயுள்ளது.
1.அதனை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்கினால் அவர்கள் அடைந்த நிலையை நாமும் அடையலாம்
2.அதை உருவாக்கும் நிலைக்குத் தான் என்னுடைய உபதேசமே (ஞானகுரு).

“வாய் பேசாமல்... காதிலே எதுவும் கேட்காமல்...” நம்மால் இயல்பாக இருக்க முடிகின்றதா...?

உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் அனைத்தையும் சுற்றி ஓடும் ஒளி நாதம் செயல் கொள்ளும் திறன் என்ற தொடரை அறியும் முன் “இடும்பன்” காட்டிய தத்துவ மூலத்தை அறிந்திடல் வேண்டும்.

உயிரான்ம சக்தியைக் கேடாக்க முயலும் வினைச் செயலையும் அந்தக் கேட்டினால் ஏற்படும் விளைவாகச் சங்கடமான அலைகள் எப்படித் தாக்குகின்றது...? என்ற விதம் அறிந்துணரப்பட வேண்டிய ஒன்று.

தீமைகள் தாக்கும் நிலையில்...
1.உயிரான்ம மூலக்கலப்பு - உயிர்ச் சக்தியும் ஆன்ம சக்தியும் இணையாத் தன்மை கொண்டு
2.பிரிவு என்கிற மனோபாவனையில் செயல்படும் தன்மை வருகின்றது.

அந்தத் தீதெண்ண குண சக்தியின் வலுவினால் ஆத்ம சக்தியின் வலுக்கூட்டும் தொடர்பையே நிறைவுறாச் செயலுக்கு அது தன் செயலை நிகழ்த்தி விடுகின்றது.

1.தீவினைச் செயல்பாடு - உயிர் சக்தியைப் பரிபூரணமாக ஆட்கொண்டு விட்டால்
2.உயிர் சக்தியின் வீரிய வலுவைத் அது தன் வலுவாக்கி
3.இடும்பச் சித்தன் காட்டியபடி அந்தத் தீதெண்ண குணங்கள் வீரியம் கொள்ளும்.

அது தனக்கொத்த கிளைகளைப் பரப்பிக் கொண்டு ஆன்மா என்றிட்ட உயர் சக்தி இருக்குமிடம் தெரியாமல் அனைத்தையும் மறைத்துத் தான் பெற்று வலுவாக்கிய சங்கட அலைகளைப் பஞ்சேந்திரியங்கள் மூலம் செயல்படத் தொடங்கும்.

1.அதாவது சக்கர வியூகம் செயல்படும் நிலையில்
2.எண்ண உணர்வின் வலு மூலம்... மெய் என்ற வட்டத்தை அடுத்து
3.வாய் என்ற சக்கர வட்டத்தை உடைத்துத் தன் குணச் செயலை நிகழ்த்தும்.
4.வாய் வழியாக அந்தச் சங்கடத்தையும் சோர்வையும் கோபத்தையும் வேதனையையும் சொல்லாக வெளிப்படுத்தச் செய்யும்.

அவ்வாறு வெளி வந்த சங்கட அலைகள் யாரை எண்ணிச் சொல்லப்படுகின்றதோ... சொல்லப்பட்ட பொருளின் கருத்தில் நிலை பெற்றிருப்பவர்
1.அந்தச் சங்கட அலைகள் தன் உயிராத்ம சக்தியை ஆட் கொண்டு உண்டு விடாமல் இருக்கும் பொருட்டு
2.தன் சரீரத்தில் உள்ள பஞ்சேந்திரியங்களை முதலில் வசப்படுத்திக் கொள்ள முனைதல் வேண்டும்.
2.பின் உள் நிகழ்வின் செயல்முறை தானாக வசமாகும்.

போகப் பெருமான் தன் அனுபவத்தின் இடர்பாட்டில் இடும்ப குணச் செயலை அறிந்து தன் உயிராத்ம சக்தியை எப்படிக் காத்துக் கொண்டாரோ அந்தப் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

செயற்கைக்கோளை விண் செலுத்துவது போல் முன்னோர்களை நாம் விண் செலுத்த வேண்டும்

நம்முடைய முன்னோர்களையும் குலதெய்வங்களையும் வணங்கி வருகின்றோம். அவர்கள் குல வழியில் தான் நாம் வந்திருக்கின்றோம்.

இருந்தாலும் இறந்த பின் அந்த ஆன்மாக்கள் நம் குடும்பத்தில் வந்து “அருளாடத் தொடங்குகின்றது...”
1.அவர்கள் உடலில் வந்த நோயும் அவர்கள் அடைந்த கஷ்டமும் நம் குடும்பத்திற்குள்ளும் பாய்கின்றது.... அதனால் நாமும் துன்பப்படுகின்றோம்.
2.இப்படித் தான் நடக்கின்றதே தவிர அது நம்மைத் தெளிவாக்காது... நமக்குத் தெளிவான நிலைகளையும் அது உருவாக்காது.

இதை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்...?

அருள் ஒளி பெற்று ஒளியின் சரீரமாக நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளையும் நாம் நுகர்ந்து பழக வேண்டும். அதை நமக்குள் வலுப்பெறச் செய்ய வேண்டும்.

முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை உந்தித் தள்ளி அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்க வேண்டும். அங்கே இணைக்கப்படும் பொழுது
1.அவர்கள் உடலில் பெற்ற நஞ்சின் உணர்வுகள் அங்கே கரைகிறது.
2.குலதெய்வங்களின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டல சுழற்சி வட்டத்தில் இணைகிறது
3.அருள் ஒளி பெற்றுப் பிறவில்லா நிலை அடைகிறது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டர் துணை கொண்டு தொலைதூரத்தில் இருக்கும் கோள்களையும் படமாக்குகின்றார்கள். அதை எலக்ட்ரானிக்காக மாற்றி ஒலி நாடாக்களில் பதிவாக்குகின்றார்கள்.

ஒலி நாடாக்களில் பதிவானதை ஒரு இராக்கெட்டின் முகப்பில் வைத்து செயற்கைக் கோளை இணைத்து விண்ணிலே ஏவுகின்றார்கள்.
1.அந்த முகப்பில் இருக்கும் நாடாவில்... எதனின் உணர்வின் இயக்கமாக எலக்ட்ரானிக்காக மாற்றினானோ
2.பதிவான அதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நுழைந்து அந்தக் கோளின் சமீபத்திற்கே கொண்டு சென்று விடுகின்றது.

அங்கே சென்ற பின் அதன் உணர்வுகளை நுகர்கின்றது... ஒளி அலைகளைப் பரப்புகின்றது. அதை வைத்து அதில் இருக்கக்கூடிய நிலைகளைக் கவர்ந்து புவியில் இருந்து அந்த உண்மைகளை விஞ்ஞானி அறிகின்றான்.

இதைப் போன்று தான்
1.சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து
2.அதை நம் குலதெய்வங்கள் முன்னோர்களின் உயிரான்மா முகப்புகளில் இணைத்து
3.உந்தித் தள்ளினோம் என்றால் நேரடியாக சப்தரிஷி மண்டலத்துடன் இணைகிறது.

அதிகாலையில் இவ்வாறு செய்யப்படும் பொழுது அவர்கள் உடலில் பெற்ற நஞ்சுகள் (மீண்டும் இன்னொரு உடல் பெறும் உணர்வுகள்) எல்லாம் கரைகிறது. கரைந்ததை ஆறு மணிக்கெல்லாம் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து சென்று விடுகின்றது.

அந்த நஞ்சுகளை எல்லாம் ஓசான் திரைக்கு அப்பால் தள்ளி மாற்றி அமைத்து விடுகின்றது. அதே சமயத்தில் ஒளி உணர்வு பெற்ற அந்த உயிரான்மாக்கள் பூமியைக் கடந்து சென்று விடுகிறது.

ஆனால் அருள் ஒளி என்ற உணர்வுகள் புவியின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலுகின்றது. நஞ்சினை ஒளியாக மாற்றிடும் உணர்வின் துணை கொண்டு வாழும் நிலை பெறுகின்றது.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால்... சூரியனே ஒரு சமயம் அழிந்தாலும் அல்லது செயலிழந்தாலும்... இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் கூட...
1.இதிலே விளைந்த உயிரணுக்கள் ஒளியின் சரீரம் பெற்ற பின்
2.ஏகாந்த நிலைகள் கொண்டு அகண்ட அண்டத்தில் பயணம் செய்யத் தொடங்கிவிடும்.
3.அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை வென்று ஒளியின் சரீரமாகவே வாழும்.

இங்கு மட்டுமல்ல... ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உயிரணு தோன்றி மனிதரான பின் இப்படி ஒளி நிலை பெறுவது தான் கடைசி நிலை. ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலையாக ஒளி நிலை பெறுவது.

இதைத்தான் ஈரேழு லோகத்தை வென்றவன் விண் சென்றான்...! என்று ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

சூரியனிலிருந்து வரக்கூடிய கலர் ஆறு... ஒளி எழு. மனிதனுடைய அறிவு ஆறு... அதை வைத்து உணர்வுகளை ஒளியாக்கும் போது ஏழு.

சூரியனிலிருந்து வரக்கூடிய நிலையும்... மனித உடலில் உணர்வை ஒளியாக மாற்றிவிடும் நிலையும்... இந்த ஈரேழு லோகத்தையும் வெல்லக்கூடியவன் என்றும் நிலையான ஒளியின் சரீரம் பெறுவான் என்று காவியங்கள் தெளிவாக நமக்குக் காட்டுகின்றது.

அந்த நிலையை நாம் அனைவரும் பெறுவோம்...!

October 15, 2022

“சக்கர வியூகம்” நம் உயிருக்கு வசப்பட (CONTROL) வேண்டும்

“இரத கஜ துரித பதாதி...” என்ற நால்வகைப் படைகளையும் வியூகம் என்ற மெய்யை வைத்து முதன்மைப் படைக் கேந்திரமாக எத்தன்மை காக்கப்பட வேண்டுமோ... அந்தச் செயலின் உயர் தனித்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

இருந்தாலும்... அதற்கு எதிர்மறையான சத்துரு குண எண்ணச் செயல் வீரியம் தன் ஆதிக்கத்தை நிலைப்படுத்திட தன் எண்ணம் கொண்டு உடலில் இருக்கும் சகலத்தையும் தன் வசமாக்கிட எண்ண முயற்சிக்கும்.
1.அது தன் குண உயர்வையே பிரதானமாக்கி
2.தனக்கொத்த வலுவில் வலுக்கூட்டிக் கொண்டு
3.சக்கராயுத நடுநிலைத் தலைமையை (உயிர்+ஆத்மா) அடைந்துவிட முயற்சிக்கும்.

அதனால் எழும் போராட்டத்தைச் சுட்டிக் காட்டப்படும் பொழுது உயிரான்ம தத்துவ சரீர கதியில் அந்தத் தீமையின் உணர்வுகளின் செயலாக்கங்களை உணர்ந்து அறியும் கேந்திரங்களில் மெய் என்பது “முதல் வியூகம்...”

இந்தச் சரீர கதிக்கு ஆகார நிலைப்படுத்தும் செயல் வழி கேந்திரம் வாய்... மெய்யை வட்டமிட்ட இரண்டாவது சக்கராயுதம்...! இவை இரண்டையும் வட்டமிட்டுக் காக்கும் அடுத்த நிலை நாசி...!

நாசி என்று கூறும் பொழுது வியூக மையத்தில் காக்கப்படும் உயிரான்ம சக்தியைப் போல்
1.வட்டமிட்டுச் சுழலும் “காக்கும் சக்கர வியூகத்தின்” மையப் பகுதியை
2.காக்கப்பட வேண்டிய அந்த சுவாசத்தின் வீரிய குணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று தொடரையும் சுழன்றோடும் செயல்பாட்டில் “செவியும்” இது அனைத்தையும் சுற்றிச் சுழன்றோடும் “விழிப்பார்வை” செயல்படுத்தும் நிலையும் உள்ளது. ஆக செயல்படுத்தும் சக்தியாக முன்னிலையில் நிற்பது விழியின் தொடரே...!

சரீர இயக்கத்தில் உணர்த்திட்ட இந்த வழியின் முக்கியச் செயல்பாட்டில் “அடக்குதல்...” என்பதன் பொருள் என்ன...?

ஒவ்வொரு படைப் பிரிவையும் கட்டளையிட்டு அந்தக் கட்டளையின் கீழ் வழிமுறைப்படுத்தி நடந்திடும் பக்குவம் ஒவ்வொன்றிலும்
1.முதன்மை பெறும் ஒவ்வொரு அணியின் படைத் தளபதியும்
2.தன் சக்தியின் செயலாற்றலினால் துரித கதி கொண்டு
3.செயல்படுத்தித் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது “தற்காப்பு...!”

இந்த உண்மையை அறிந்து ஒவ்வொரு படைப்பிரிவிலும் எண்ணம் கொண்டு செயல் கொள்ளும் படை வீரர்கள் அந்தக் கட்டளையின் உயர் சக்தியின் தன்மையை உணரும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் படைகளுக்குள் குழப்பம் நிலவி விட்டால் ஒவ்வொன்றும் தன் தன் எண்ணம் கொண்டு தன்னிஷ்டம் போல் உலவிடும் செயல்பாட்டின் விபரீதம் ஆகி... பஞ்சேந்திரியத் தத்துவத்தில் “தீமையான செயல் தான்” வலுக் கொள்ள நேரும்.

அப்படிப்பட்ட குழப்பத்தின் நிகழ்வால் உடலுக்குள் ஒருமைப்பாடற்ற தன்மை உருவாகி உயிரான்ம சக்தியைத் தாக்கி அதை வலுவிழக்கச் செய்யும். மேலும் காக்கும் சக்கராயுதத்தையும்... அதாவது வியூகம் என்ற தொடர்புபடுத்திய பஞ்சேந்திரியச் செயல்களையும் கேடாக்கிவிடும்

1.குழப்பத்தின் வழியாகச் செயல்படும் தீதெண்ண அமில குண வீரிய சக்தி காந்த அமில ஈர்ப்பின் செயலால்
2.அது தன் வீரியம் கொண்டு பஞ்சேந்திரியங்கள் அடக்கும் முறைகளை உடைத்து... உள் நுழைந்து செயல் கொண்டு
3.உடலில் உள்ள உயர்ந்த சக்திகளையே அத்தகைய குணங்கள் உண்டுவிடும்.

உயிர் சக்தி வலுப் பெற… எண்ணம் கொண்டு செயல்படுத்தும் நல்லாக்கச் செயல் நிகழ்வில்... தன் வீரியத்தைக் காத்துக் கொள்ளும் செயல்பாட்டிற்கு... முதலில் செயல்படுத்துவது ஒன்றுண்டு.

சரீரத்திற்குள் இயங்கி மற்றவைகளையும் இயக்கும் இந்தப் பஞ்சேந்திரியங்களை உயர் சக்தியின் மூல கேந்திரமத்திற்கு... அதாவது
1.உயிர் சக்தியின் வசப்படி...
2.உணர்வுகளின் எண்ண ஓட்டம் செயல் கொண்டிடும் விதத்திற்கு
3.அவைகளை அடக்கி ஆளப் பழகுதல் வேண்டும்.

அப்படியானால் தன் சரீரத்தில் இருக்கும் கோடானு கோடி “அத்தனை உயிரணுக்களையும் வசமாக்கிட வேண்டும்...” என்றால் என்ன செய்ய வேண்டும்...?
உணர்தல்...
சுவைத்தல்...
நுகர்தல்...
செவிமடுத்துக் கேட்டல்...
விழியின் செயல் திறன்...
இவை அனைத்திலும் ஓர் பக்குவத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

உயிரான்ம சக்தி உணர்த்தும் கட்டளைகளை... எண்ணத்தின் வலுச் செயலாற்றல் கொண்டு நல்வினையாக்கமாக எண்ணிப் பெறப்படும் செயலில்
1.நிலையாக நின்றிடும் தனித்துவச் செயல் திறனை
2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது ஆசிகள் (ஈஸ்வரபட்டர்)