ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2019

எமது உபதேசத்தைப் பதிவாக்கிக் கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு…!


யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாக இங்கே சொல்லிக் கொண்டு வருவதனைத்தையும் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் உங்களுடைய கருவிழி ருக்மணி, கவர்ந்த உணர்வலைகளை உங்களுடைய செல்களில் பதிவாக்குகின்றது.

1.ஒருவரை எமது அருள் ஞான உபதேசங்களைப் படிக்கச் சொல்லி
2.தாம் படித்ததைத் திரும்பச் சொல்லும்படி அவரைக் கேட்டால் அவருக்குச் சொல்லத் தெரியாது.
3.ஏனென்றால் இதில் உள்ள கருத்துகள் அடுக்கடுக்காக வரும்.

யாம் தந்தருளிய தியான முறையினைச் சீராகக் கடைப்பிடித்து வருபவர்கள் “தாங்கள் படித்த கருத்தினுடைய மூலங்களை அடுக்கடுக்காகச் சொல்ல ஆரம்பிப்பார்கள்...!”

காரணம் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று பதிவான உணர்வுகள் எலக்ட்ரான் என்ற முறைப்படி
1.அது காற்றில் இருப்பதை எடுத்து
2.நம்முடைய இயக்கச் சக்தியாக்க கூடிய ஞானம் வருகின்றது.

ஞானத்தின் தன்மை வந்தால், நமக்குள் தீமை புகாது வலிமை கிடைக்கும். நான் காட்டிற்குச் சென்று ஞானத்தைப் பெறுவேன்… பெற வேண்டும்...” என்று நினைத்தால் முடியாது.

ஒரு விஞ்ஞானி புதிய ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் இருக்கும் பொழுது பல சங்கடங்களை அனுபவிக்கலாம். அப்படி அவர் பல சிரமங்களை அனுபவித்துக் கண்டுபிடித்த இயந்திரத்தை நாம் சரியானபடி ஏற்றுக் கோண்டோமானால் அந்த விஞ்ஞான அறிவு நமக்குப் பயன்படும்.

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு கம்யூட்டரைச் செய்து கொடுக்கின்றார்கள். சிரமப்பட்டுத் தான் அதைச் செய்து கொடுக்கிறார்கள்.
1.ஆனால் அந்தக் கம்ப்யூட்டரை விளையாட்டிற்குத் தட்டிக் கொண்டிருந்தால்
2.பயன் ஒன்றும் இருக்காது.

அதைப் போன்று யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவு செய்து கொண்டபின் அந்த உபதேசித்த உணர்வுகளை நினைவுபடுத்தினால் நீங்கள் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை எளிதில் நுகர முடியும்.

1.உங்கள் உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை நுகர்ந்து
2.உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உணவாக கொடுக்க முடியும்.
3.நாம் அனைவரும், இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு கொண்டு வந்துவிட்டோம் என்றால் நாம் எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்க முடியும். நமக்குள் தீமைகள் வராது தடுக்க முடியும்.

மெய் வழி வாழ முடியும். மெய் ஞானிகள் கண்ட பேருண்மைகளை நாமும் கண்டுணர முடியும். மெய் ஞானிகளுடன் இணைந்து வேகா நிலை என்ற நிலையாக, அழியா ஒளிச் சரீரம் நாம் அனைவரும் பெற முடியும்.

எமது அருளாசிகள்.

சித்தர்களும் மகரிஷிகளும் சப்தரிஷிகளும் இந்தக் கலியில் யாரைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


பிண்டத்தைக் (உடல்) கொண்டே அண்டத்தையும் வான இயல் தொடர்பில் எல்லாம் அண்ட சராசரங்களையும் தன் ஞான விழிப் பார்வை கொண்டு அறிந்து உலகினுக்கு ஈந்த மகா மகான்களும் மகா மகரிஷிகளும் எத்தனையோ பேர் உண்டு.

எதைக் கொண்டு அதை எல்லாம் அவர்கள் உணர்ந்தார்கள்...?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தில் ஒலி ஒளி மணம் சுவை உணர்வு ஸ்பரிசச் செயல் மூலமாக
1.ஓசை கொண்டு கேட்டல்
2.ஒளி கொண்டு பார்த்தல்
3.சுவை கொண்டு சுவைத்தல்
4.மணம் கொண்டு நுகர்தல்
5.தேகமாகப் ஸ்பரிசித்தல் என்ற நிலைகளில்
6.ஐம்புலனின் இயக்கமாகச் செயல்படும் தன்மைகள் அனைத்தையும்
7.அறிவின் ஆற்றலால் அறிந்துணர்ந்து... தெளிந்ததை... ஆக்கபூர்வமான செயலாக
8.ஞான வழியின் தொடர்பில் பஞ்சேந்திரியங்கள் ஒளிபடும் செயலுக்கு வரைமுறை ஏற்படுத்தி
9.மனக்கட்டுப்பாடாக அவர்கள் வழி வகுத்துத் தந்ததே “சுவாச நாடிகள் பற்றிய காற்று நூல்...!”

எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாச அலையில் காமத்தின் அடியாக எழும் மோகமாக கீழான ஈர்ப்புச் செயலாகச் சரீரத்தின் அடிப்பகுதி இனிப்பு என்று காமச் சுவையைக் காட்டியது உலகோதய நடைமுறை வாழ்க்கையில் கீழாம் ஈர்ப்பாக உடல் தொடர்பாக இன்பம் பெறுதல் ஆகும்.

ஆனால்
1.இந்த மோகத்தை வென்ற ஞானி.. உயர் ஞான சித்திகளைப் பெற்று விட்டால்
2.அந்தக் காமச்சுவை கொண்ட மோகம் என்பது
3.“மேல் கரும்பாக... அவர்களுக்குச் சுவையற்றதாகத் தோன்றும்...!”

மண்ணினுள் வாசம் செய்யும் அந்தப் பிராணியைக் காட்டியதே மனத்தினுள்ள அந்த மோகத்தைக் காட்டவே..!

ஆண் பெண் என்ற உடல் கலப்பில் மூலாதாரத்தில் குதம் என்று பெயர் நாமப்படுத்திக் காட்டிய அந்த இடத்தில் நான்காகக் கிளைத்த அந்த நாடியானது... கால் கட்டை விரலிலிருந்து மேல் எழுந்து குறி ஸ்தானத்தில் பின்னிப் பிணையும் சூரிய சந்திர நாடிகளுடன்
1.உடல் தொடர்பால் இரண்டும் இணைந்து செயல்படும் பொழுது
2.விந்தின் செயலில் அக்கினி ஜுவாலையாகச் சூரியன் போல் பிரகாசித்து
3.அது சிற்றின்ப அறிவிற்குச் செயல்பட்டு விடுகின்றது.

ஆனால் ஒளி என்ற விந்து... சிரசின் உச்சிக்கு “நாத விந்துவாக.. மேலான அறிவாக...”
1.ஆத்ம ஞானி அதைச் சூரியப் பிரகாசமாக ஆக்கும் செயலில்
2.தன் ஆத்மாவே சிவலிங்க வடிவில் ஜோதியாகத் தெளிவுறும்.
3.இதுவே பாம்பு உள்ள இடத்தில் எலி இல்லை என்பது...!

நல்லெண்ணம் கொண்டு நல் சுவாசம் எடுத்திட வேண்டும் என்று கூறியவற்றில் தியானத்தின் வழித் தொடர்பில் தன்னை உணர்ந்து அறியும் பக்குவம் பெற்றிட வேண்டும் என்ற ஆரம்ப வழித் தொடர்பிலும்... ஆத்ம வலுவைப் பெற்றிட வேண்டும் என்ற எண்ணச் செயலிலும்... வைராக்கியச் சிந்தனையின் எண்ண வலு கொண்டே
1.உண்மையின் பாதையில் செல்லும் ஞானச் செல்வங்களே...!
2.நீங்கள் அனைவரும் இன்னும் உயரிய நிலை பெறவேண்டும் என்று
3.பேரன்பு கொண்டே ஈஸ்வரபட்டன் வாழ்த்துகின்றேன்...!

குருவை உடலோடும் ஏற்றுக் கொள்ளலாம். சூட்சம ஒளிச் சரீரம் பெற்றவர்களையும் குருவாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குரு என்பவன் சிஷ்யனின் உண்மை ஞானம் அறியும் உயர் ஞான அறிவிற்கு “ஞானப் பால் ஊட்டுபவனாக இருக்க வேண்டும்...!”

1.அன்பு சித்தர்களும்... அன்பு மகரிஷிகளும்... அன்பு சப்தரிஷிகளும்.. பாசம் கொண்டே தேடி வந்தது
2.இந்தக் கலியில் உண்மையான ஞான வித்துக்களைத் தான்...!
3.அதில் ஏன் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடாது...?

இறந்தவர்களைப் பாசத்துடன் நினைக்கலாமா...?


நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற தாய் தந்தையரோ அல்லது கணவன் மனைவியோ அவர்கள் உயிராத்மாக்களை தியானித்தின் மூலம் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைத்து அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்து விடுகின்றோம்.

ஆனால் அதற்குப் பின் அவர்களைப் பற்றிய நினைவுகள் வரப்படும் போது
1.அவர்கள் இருக்கும் போது நம் குடும்பம் எப்படியெல்லாம் இருந்தது...?
2.அவர்கள் நம்முடன் இப்படியெல்லாம் வாழ்ந்தார்களே...?
3.உடலோடு இருக்கும் போது நமக்கு உழைத்துக் கொடுத்தார்களே...! என்ற நினைவுகள் வரக்கூடாது. 

அவர்கள் சப்தரிஷி மண்டலத்தில் ஒளியின் சரீரமாக இருக்கின்றார்கள். அந்தப் பேரருளுடன் அங்கே வாழ்கின்றார்கள். அந்த அருள் நிலையை நாமும் பெற வேண்டும். குடும்பத்தில் இருளை அகற்றிடும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினைத் தான் எடுத்துப் பழகவேண்டும்.

அவர்கள் உடலை விட்டுச் சென்றிருந்தாலும் நாம் அருள் ஒளியை எடுத்து நமக்குள் கூட்டி இருளை அகற்றிடும் சக்தியாக ஆக்கிடல் வேண்டும். அந்த நிலையைத் தான் நாம் பெறுதல் வேண்டும்.

இதை ஏன் இப்படிச் செய்ய வேண்டும்...? என்று தெரிந்து கொள்ளுங்கள்.

அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் உடலிலே இருந்த சங்கடங்கள் சலிப்புகள் வெறுப்புகள் வேதனைகள் போன்ற உணர்வுகள் நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாக இருக்கும் போது
1.அவரை எண்ணி நமக்குள் சோர்வான உணர்வுகள் வரப்படும் போது
2.அவர் பட்ட நோயின் உணர்வுகள் நமக்குள் எளிதில் கவரப்பட்டு
3.நம்மை அறியாது வேதனைப்படும் அணுக்களாக மாற்றி நம்மைச் சீர்குலையச் செய்துவிடும்.
4.பண்புடன் வளர்ந்தாலும் அவர் உடலிலே விளைந்த நோயைத் தான் நாம் நுகர முடியும்.

ஆகவே இதை போன்ற தீமைகள் வராது நோய்கள் உள்ளே புகாது தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று காலை துருவ தியானத்தில் (4 மணியிலிருந்து 6 மணிக்குள்) நமக்குள் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி நாம் தியானிக்கும் போது நம் ஆன்மாவில் மற்ற தீமையான வேதனையான உணர்வுகளை உள்ளே இழுக்கக்கூடிய சக்தி குறைகின்றது.

நாம் எவ்வளவு நேரம் துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவருகின்றோமோ அந்த அருள் ஒளி என்ற உணர்வுகள் நமக்குள் பெருகப் பெருக எந்த தீமையும் வராது தடுக்க முடியும்.

ஆனால் தியானத்தில் அமர்ந்திருந்தாலும் சிலருக்கு எண்ணங்கள் எங்கேங்கேயோ போகும். மற்றவர்கள் திட்டியது... குறையாகப் பேசியது..  கடன் கொடுத்தது... பணம் வராதது... என்று குடும்பப் பற்று கொண்ட உணர்வுகள் எத்தனையோ வரும்.

தியானத்தில் உட்கார்ந்ததும் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருகிறது என்றால்
1.உங்கள் உடலில் உள்ள தீமையான உணர்வின் அணுக்கள்
2.அதன் உணவுக்குத் தன் வலுவைப் பெறுகின்றது என்று தான் அர்த்தம்.

நாம் தியானிக்கும்போது இடை மறித்து இத்தகைய நிலை வந்தாலும் உடனே “ஈஸ்வரா...!” என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரைத் தொடர்பு கொண்டு கண்களைத் திறந்து
1.அந்த அருள் ஒளி பெறவேண்டும்...
2.அது எங்கள் உடலிலே பெறவேண்டும் என்று
3.இதை உடலுக்குள் திணித்தல் வேண்டும்.

அந்த அருள் ஒளியை எடுத்து இபப்டித் திணிக்கப்படும் பொழுது நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அதற்கு ஆகாரம் கிடைக்காதபடி தடுக்கப்படுகின்றது.

அதே சமயத்தில் நாம் வலுக் கொண்டு மீண்டும் மீண்டும் எடுத்துச் செயல்படும் போது அந்தத் தீமைகள் பிடிப்பற்று விடுகின்றது.
1.காலையில் (6 மணிக்கு மேல்) சூரியன் இதை இழுத்துச் சென்று விடுகின்றது.
2.நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது.

May 30, 2019

குரு காட்டும் மெய் வழி - உங்கள் உயிரான ஈசனை நீங்கள் நம்புங்கள்


ஈசனுக்கு முன் நாம் எல்லோரும் ஒன்று...!

1.நாம் உருவாக்கும் நிலைகள் எல்லாம் ஒன்றி நமது உயிர் ஈசனாகின்றது.
2.அவன் அமைத்த கோட்டை இந்த உடல்.
3.இந்தக் கோட்டையை  நாம் எப்போதுமே புனிதப்படுத்த வேண்டும்.  
4.அவனுக்குள் ஒன்றி,  அவனாகவே ஆகவேண்டும்.

என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா...! என்று நாம் சொல்லும் இந்த உணர்வுகள் ஒலிஒளி... என்ற நிலையில்  உயிர்... என்று ஆகின்றது.

1.“நீயே தான் நான்...!
2.“நானே தான் நீ...!என்று
3.உயிரோடு ஒன்றி  ஒளியென்ற நிலை  நாம் என்றும் பெற்றிடுவோம்.

இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்றாலும், ஒவ்வொரு உடலிலும் காத்திடும் உணர்வினைச் சேர்த்துச் சேர்த்து  அதன் உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்களில் அதைக் காத்திடும் ஞானமும் அதன் வழி வளர்ச்சியும் பெற்று  இன்று மனிதனாகி உள்ளோம்.

இந்த உடலில், உயிர் நம்மை உருவாக்கியது என்று எல்லாவற்றையும் அறிந்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு என்றும் ஒளியின் சுடராக வாழ வேண்டும்.

உயிரின்  உணர்வில் எக்காரணம் கொண்டும் நஞ்சு அணுகாது காத்துக் கொண்டவர்கள் ஞானிகள். இந்த மனித உடலில் ஆறாவது அறிவில் விஷத்தைக் கலக்காது அதைத்  தடுக்கும் ஞானம் தான்  துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்குச்  சேர்ப்பிக்கும் நிலை.

அதைப் பெறும் நிலையாகத் தான்  இப்பொழுது உபதேசித்துக் கொண்டுள்ளோம். ஆகையால்
1.நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து
2.ஆறாவது அறிவை, அதனுடன் இணைக்கும் பருவம் பெற வேண்டும்.
3.ஆறாவது அறிவின் துணை கொண்டுதான் இன்று துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக இருக்கின்றது.

நாம் இந்த உடலை  விட்டு எந்த நிலையில் சென்றாலும் ஒரு கூட்டமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் உயிருடன் ஒன்றி,  உணர்வினை ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பில் அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணைந்திடல் வேண்டும். 

அங்கே இணைந்து விட்டால் அகண்ட அண்டமே இருண்ட சூழ்நிலைகள் கொண்டு பல பிரபஞ்சங்கள் அழிவைத் தேடிச் சென்றாலும் அந்தந்தப்  பிரபஞ்சங்களில் தோன்றிய  உயிரணுக்கள், அது ஒளியின் சுடராகத்தான் வாழும்.

எத்தனையோ கோடி ஆண்டுகள் என்றும் ஏகாந்த நிலை என்ற, அந்த நிலை பெறுவது இந்த மனித உடலில்தான்.  
1.நம்முடைய இந்த சந்தர்ப்பம்
2.மிகப் பெரிய சக்தி வாய்ந்த  குருவின் (ஈஸ்வரபட்டர்) அருளைப் பெற்றதினால்
3.நம் அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைத்துள்ளது.

நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும்  சக்தியைப்  பெற முடிந்தது. நமது குரு விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.

உங்களுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியாகவிஷத்தை ஒளியாக மாற்றும் திறனைப் பெறச் செய்வது. நாம் ஒவ்வொரு நாளும் உயிரின் முகப்பில் ஈர்க்கப்படும் பொழுது ந்தத்  துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்  உடல் முழுவதும் பரவுகின்றது.

இதைப் போன்று  உடல் உறுப்புகளை உருவாக்கிய  அணுக்களின் முகப்பின் இயக்கத்தில் உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது குரு எமக்கு எப்படிச் செய்தாரோ அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது நாம் அனைவரும் ஒளியின் சரீரம் பெறும் தகுதி பெறுகின்றோம்.

1.நாம் அனைவரும் ஈஸ்வரபட்டர் காட்டும்  வழியில்  செல்வோம்.
2.குருவின் துணையால் அஞ்ஞானத்தை அகற்றி மெய் ஞானத் தொடரில் இந்த வாழ்க்கையைத் தொடர்வோம். 

துன்பங்களையும் துயரங்களையும் தணியச் செய்து நல்லதாக மாற்றும் சக்தி...!


காரமான பொருள்களைத் தனியாக உட்கொள்ளும் போது அந்தக் காரத்தின் உணர்ச்சி தான் முன்னிலையில் நிக்கும். காரம்... காரம்... என்று தான் சொல்லிக் கொண்டேயிருப்போம்.

ஆனால் இந்தக் காரத்தை அடக்க “சப்...!” என்று இருக்கும்
1.மற்ற காரம் இல்லாத பொருள்களை இதனுடன் இணைக்கப்படும் போது
2.காரத்தின் தன்மை குறைந்து சுவை மிக்க நிலைகளாக உருவாகின்றது.

நமது வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ இத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தறியப்படும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அவை எல்லாம் உருவாக்கப்படுகின்றது.

ஏனென்றால் பிறருடைய துயரங்களையும் துன்பங்களையும்   கேட்டறிந்து
1.அவர்களுக்கு உதவிகள் செய்தாலும்
2.கேட்டறிந்த அந்த உணர்வுகளை நாமும் நுகர நேர்கின்றது.
3.அந்தத் துயரப்படும் உணர்வுகள் நமக்குள் வந்த பின் நம்மையும் துன்பப்படச் செய்கிறது
4.அப்பொழுது நாம் நுகர்ந்த அந்தத் துன்பமான உணர்வுகளை தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா...!

அடுத்த கணமே ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிடம் கேட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினை உடலுக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.

முதலில் சொன்ன மாதிரி தனிக் காரத்தை அடக்கப் பல நல்ல சரக்குகளைச் சேர்த்து அதைச் சுவைமிக்கதாக மாற்றுவது போன்று
1.நாம் கேட்டறிந்த துன்பமான துயரமான உணர்வின் தன்மையை அடக்க
2.வலுவான அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளைக் கூட்டி விட்டால்
3.நாம் நுகர்ந்த தீமைகளைத் தணியச் செய்து நல்ல உணர்வின் அணுக்களாக மாற்றும்.

நாம் நல்ல குணங்கள் கொண்டு இருக்கும் பொழுது ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனைப்படும் உணர்வின் தன்மை அதிகரித்து நல்ல குணத்தின் வலிமையை அது குறைந்து விடுகின்றது.

ஆகவே நம்முடைய நல்ல குணத்தின் தன்மையை நாம் அதிகமாக வலு பெறச் செய்ய வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவசியம் நாம் நுகர வேண்டும்.

 அப்பொழுது உயிரான ஈஸ்வராலோகத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உருவாகத் தொடங்குகிறது.

"பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்...!" என்ற நிலையில் ஆறாவது அறிவால் அருள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து தீமை செய்யும் உணர்வுகள் நம் உடலில் உருவாகாதபடி அருள் உணர்வுகளை உருவாக்கிடல் வேண்டும்.

தீமை என்ற உணர்வுகளைக் குறைத்து தீமைகளை அகற்றிடும் வலிமை கொண்ட உணர்வின் அணுக்களாக எடுக்கும் போது
1.ஈஸ்வரலோகத்தில் அந்த உணர்வுகள் உருவாக்கப்பட்டு
2.நம் இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது அது இந்திரலோகத்தில் கருத்தன்மை பெற்று
3.தீமைகளை மாற்றிடும் வலிமை பெற்ற பிரம்மலோகமாக... நல்லதைச் சிருஷ்டிக்கும் பிரம்மலோகமாக (உடலாக) மாறுகின்றது.

இத்தகைய நிலைகளை நம் உடலுக்குள் உருவாக்கினால் தீமையை அகற்றிடும் வலிமை பெற்று இந்த உடலை விட்டுச் சென்ற பின் நமது உயிரான்மா ஞானிகள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லைக்குச் செல்கிறது.

உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளியின் சரீரமாக நாம் ஆகின்றோம்...!