ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2018

ஒருவர் நம்மைப் பற்றி இல்லாததைச் சொல்கிறார் என்று உணர்ச்சிவசப்பட்டு விடுகின்றோம் – அதைத் தடுக்கும் வழி

நாம் நல்லவர்களாக இருக்கிறோமென்றால் ஒருவர் சிறு குற்றமான செயலைச் செய்கிறார். அதை நம் மீது ஒரு பழிச் சொல்லாகச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அந்தச் சொல் வெறும் வார்த்தைதான். 

ஆனால் அதை நமக்குச் சொன்னவுடன் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நமக்குள் அடக்க முடியவில்லை.

அவன் குற்றம் செய்துவிட்டு இவ்வாறு நம்மைச் சொல்கிறானே...! என்று பதட்டமும் பயங்கரமான விளைவுகளும் ஏற்பட்டுவிடுகின்றது. ஏனென்றால்
1.அவர் செய்த உணர்வுகள் நமக்குள் இயக்கி
2.தவறு செய்யும் நிலைகளுக்கு
3.எங்கிருந்து அந்தத் தவறு வந்ததோ அவர்களை அழிப்பதற்கு வருகின்றது.

இல்லாததைச் சொல்கிறான் என்ற உணர்ச்சியின் வேகம் தூண்டுகின்றது. ஆனால் அதே சமயம் இந்த உணர்ச்சியுடன் சேர்ந்து உமிழ் நீராகச் சுரந்து நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது.

ஆகாரத்துடன் கலந்தவுடன் அது நம் உடலில் சத்தான ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தியிழந்து உடலுக்குள் அதனுடைய செயல்களைச் செயலாக்கத் தொடங்கிவிடுகின்றது. இரத்தமாக மாறி நம் தசைகளாக மாறிவிடுகின்றது.

இதனால் தலை வலி உடல் வலி அஜீரணம் போன்றவைகள் ஏற்படுகின்றது. வேதனைகள் அதிகமாகின்றது. அதே சமயத்தில் மனதிலும் அமைதியை இழக்கச் செய்துவிடுகின்றது. நல்ல சிந்தனையும் குறைக்கச் செய்கின்றது.

இதைக் கட்டுப்படுத்துவதற்கு மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

ஏனென்றால் மெய் ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் வந்த பெரும் தொல்லைகளை அடக்கிட விண்ணின் ஆற்றல்களைப் பெற்று அவர்கள் உடலிலே வந்த தீமைகளையெல்லாம் மாற்றித் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றனர்.

மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா... அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா... என்று உயிரான ஈசனிடம் வேண்டி மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.

அப்பொழுது உடனடியாகக் காற்றிலிருந்து இந்த ஞானியருடைய அருள் சக்தியை நாம் பெற முடிகின்றது. அவ்வாறு சுவாசித்து நம் உடலில் வரக்கூடிய துன்பங்களைப் போக்க இது உதவும்.

அதே சமயத்தில் விண்ணிலிருக்கும் மகரிஷிகளின் பால் புருவ மத்தியில் நம் நினைவாற்றல் இருப்பதால் மற்றவர்களின் உணர்வுகள் நம் சுவாசத்திற்குள் ஈர்க்காது.

நம்மை அவர்கள் எண்ணும் பொழுது நாம் சுவாசிக்கும் மகரிஷிகளின் உணர்வுகள் அவர்களுக்குள் ஊடுருவி அவர்களைப் பலவீனப்படுத்தும்.

அவர்களை இயக்கி உண்மையை உணர்த்தும்.