ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 31, 2019

நமக்கு ஆகாதவர்கள் யார் என்று அறிந்து கொள்ளுங்கள்... அவர்கள் மறைமுகமாகச் செய்யும் வேலைகளைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்


ஒரு உடலை விட்டு ஒரு ஆன்மா பிரிந்தால் சடங்குகள் என்ற நிலையில் சாஸ்திரங்கள் செய்து அந்த உடலைச் சுட்டுச் சாம்பலை எடுத்துக் கங்கையில் கரைத்து விட்டால் பாவங்கள் போய்விடும்..! என்று செய்கின்றனர்.

அதே சமயத்தில் புதைத்து விட்டால் அதற்காக மாவில் ஒரு பொம்மையைச் செய்து அவர் இந்த நிலையில் இருந்தார் என்று அவர் பேரைச் சொல்லி மந்திரங்களைச் செய்து மாவைக் கரைத்தால் (பிண்டத்தை) அவருடைய பாவங்கள் போய்விடும் என்று சாங்கிய சாஸ்திரங்கள் கூறுகின்றது.

பத்தாவது நாள் அல்லது பதினாறாவது நாள் அந்த வீட்டிலே சொந்த பந்தம் எல்லாம் அனைவரும் வந்து அவர் என்னென்ன பிரியப்பட்டுச் சாப்பிட்டாரோ அந்தப் பலகாரங்களைச் செய்து கொடுத்து விட்டு
1.எங்களுடன் நீ வாழ்ந்தாயே.. நீ இப்படிப் போய்விட்டாயே…
2.எங்களுடன் நீ இல்லாமல் இப்படிப் போய்விட்டாயே… என்று சொல்லி
3.எல்லாரும் அழுது கொண்டிருப்பது தான் வேலை.
4.ஆக அந்தத் துயரத்தை அதிகமாகக் கூட்டி அவரை ஒளிச் சரீரம் பெற முடியாத நிலையாக்கத்தான் முடிகிறது.

பதிமூன்றாவது அல்லது பதினாறாவது நாள் இதெல்லாம் செய்த பிற்பாடு சாதத்தை ஆக்கிக் காக்காய்க்குக் கொண்டு போய்க் கொடுத்தால்
1.அந்தக் காகம் சாப்பிட்டுவிட்டால்…
2.பாவ விமோசனம் ஆகிவிடும் என்று சாங்கியங்களைச் செய்து கொண்டுள்ளோம்.

பின் எண்ணையைத் தேய்த்து தலை முழுகி விட்டுச் சொந்தபந்தங்கள் எல்லாம் புதுத் துணியைக் கொடுத்துக் கட்டச் செய்து எல்லாம் பெருமைப்படும்படி செய்வார்கள்.

அவர் போய்விட்டார்…! ஆனால் உங்களுக்கு நாங்கள் ஆதரவாகப் பாதுகாப்பாக இருக்கிறோம்… துணிமணிகளைப் போடுகிறோம்…! என்று இந்த மரியாதைகளை எல்லாம் செய்வார்கள்.

தலைமகனைக் கூப்பிட்டு மாவிளக்கு செய்து… நெய் தீபம் இட்டு… முக்காடிட்டு… அந்தத் தீபத்தை அணையாமல் கொண்டு போய் விநாயகர் கோவிலில் காட்டி அங்கே அர்ச்சனை அபிஷேகம் செய்தால் “மோட்ச தீபம்…” என்று இப்படி சாங்கிய சாஸ்திரங்கள் கொண்டாடுகின்றனர்.

அடுத்து வரும் அமாவாசை அன்றைக்கு என்ன செய்வார்கள்…?

அவர் உடுத்திய துணி… அவர் சாப்பிட்ட உணவு… எல்லாம் போட்டுப் படைத்து அவருக்குச் சாப்பாடு கொடுத்து
1.எங்களுடன் வாழ்ந்தாய்… சொத்தெல்லாம் சம்பாரித்துக் கொடுத்தாய்
2.உங்களுக்கு ஆக்கிக் கொடுத்து விட்டு நாங்கள் சாப்பிடுகிறோம் என்று
3.சாப்பாட்டை வைத்துக் கும்பிடுவது தான் இன்றைய வழக்கில் உள்ளது.

அடுத்து சடங்கின் பிரகாரம் மந்திரங்களைச் சொல்லிப் பாவத்தைக் கரைக்க வேண்டும் என்ற நிலையில் செருப்பு குடை காய்கறி அவர் உட்கொண்ட பதார்த்தங்கள் எல்லாம் தானமாகக் கொடுப்பார்கள். சில வசதி படைத்தவர்கள் பசு மாட்டையும் கொடுப்பார்கள்.

1.பசு மாட்டைக் கொடுத்து அதன் வழி கொண்டு பாவத்தைப் போக்கியதால்
2.அந்தப் பசு மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு அப்படியே சொர்க்கத்துக்கே கொண்டு போய்விடுமாம்.
3.இப்படி எல்லாம் சொல்லி நம்மைச் சர்வ முட்டாளாக்கி வைத்திருக்கின்றார்கள் (அன்றைய அரசர்கள்)
4.அரசர்கள் கொடுத்த சாங்கிய சாஸ்திரங்களைத் தான் இன்று நாம் செய்து கொண்டு வருகின்றோம்.

ஏனென்றால் அந்தச் சாங்கிய சாஸ்திரங்களை அரசர்கள் ஏற்படுத்தினார்கள் அல்லவா..! அதற்கென்று ஒரு கூலி ஆளை வைத்திருப்பான். (அவர்கள் தான் இன்று குடுகுடுப்புக்காரராகவும் மந்திரவாதியாகவும் உள்ளார்கள்)

சாங்கியம் எல்லாம் செய்து தனித்துப் பிரித்து வைத்த பிற்பாடு முச்சந்தியில் இருக்கும் வீட்டு வாசல்படி மண்ணை எடுத்துக் கொள்வார்கள்.

இறந்த உடலை எங்கே கொண்டு புதைத்தார்கள்… அல்லது சுட்டார்கள்…? என்று அறிந்து கொள்வார்கள். அங்கே சென்று இறந்த ஆன்மா எந்தச் சாமி மேல் அவர் பக்தியாக இருந்தாரோ... எந்தெந்த வழிகளில் அதை வழிபட்டாரோ… அதை எல்லாம் வரிசைப்படுத்திச் சொல்லிக் கொண்டே வருவான்.

இன்ன தெய்வத்தின் மேல் பற்று கொண்டார் என்ற நிலை வரும் பொழுது இறந்தவருடைய வீட்டில் அமாவாசை அன்று அப்பாவை (இறந்தவரை) நினைத்துக் கூப்பிடுவார்கள்.
1.அவர்கள் பாத மண்ணை வைத்து இவன் மந்திரத்தைச் சொல்லி இறந்த ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வான்
2.பின் அந்த ஆன்மாவை வைத்துப் பல பல வேலைகளைச் செய்வான்.
3.குட்டிச் சாத்தானாக மாற்றுவான்… பில்லி சூனியத்திற்குப் பயன்படுத்துவான்..
4.மற்றவர்கள் நோய்களைப் போக்கவும் பயன்படுத்துவான்.

கர்ப்பமான ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் அதை எடுத்துக் கொள்வார்கள். அதே போல் ஆஸ்பத்திரிகளில் உடைநீர் என்று எடுத்துக் கொள்வான். இது எல்லாம் மந்திரவாதிகள் செய்யக்கூடிய வேலைகள்.

அதை எல்லாம் எடுத்து வைத்து அதற்கென்று மந்திரத்தைச் சொல்லி கரு சிதைந்ததோ உடைநீரோ அந்த ஆன்மாக்களை வைத்து
1.கரு வித்தைகளைச் செய்வதும்
2.ஜோதிடங்கள் பார்ப்பதும்
3.சில குடும்பங்களைக் கெடுப்பதும்
4.தனக்கு ஆகாதவரைக் கெடுப்பதும்
5.குட்டிச் சாத்தானை வைத்துச் செய்யும் வேலைகளை எல்லாம் செய்வார்கள்.

இத்தகைய சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிய குடும்பங்கள் எல்லாம் பேயாகப் போய்… நோயாகப் போய்… அவர்கள் “சர்வ நாசமாகும் நிலைகளுக்கு…” அங்கே செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒருவர் அந்த உடலை விட்டுப் போன பிற்பாடு சாங்கிய சாஸ்திரப் பிரகாரம் நாம் சாப்பாடு வைத்துக் கூப்பிடுகின்றோம். ஆனால் கடைசியில் அவர்கள் நிலை என்ன ஆகிறது…?

இன்னொரு உடலுக்குள் போய் அவஸ்தைப்பட்டுப் அந்த உடலை விட்டுப் போன பின் தேளாகவோ பாம்பாகவோ பூச்சியாகவோ தான் இந்த ஆன்மா பிறக்கும்.

வீட்டுப் பக்கம் குடுகுடுப்புக்காரன் வருவான். பெரும்பகுதி அவர்கள் வீட்டிலே புது துணி கொடுத்தாலும் வாங்க மாட்டான். “கொஞ்சம் பழைய துணி இருந்தால் கொடுங்கள்…!” என்று அதைத் தான் கேட்பான்.

1.ஏனென்றால் உடலில் இருக்கக்கூடிய மணம் அதிலே இருக்கும்.
2.மந்திரங்களை அவன் ஜெபித்தவுடனே என்னென்ன செய்திருக்கின்றீர்களோ அந்த மணம் பட்டு
3.உங்கள் வீட்டுக்குள் அடுக்குப் பானையில் இருக்கும் சங்கதி எல்லாம் கூடச் சொல்வான்.

நமக்கு ஆகாதவர்கள் யார்..? என்று தெரிந்து கொள்வான். அங்கே போய் ஏதாவது ஒன்றைச் செய்து விட்டு “அவர்கள் தான் இந்த மாதிரி எல்லாம் செய்கிறார்கள்…!” என்று நம்மிடம் சொல்வான்.

அடப்பாவிகளா..! என்று நாம் நினைப்போம்.

இதை எல்லாம் வெளியிலே சொல்லக் கூடாது ஏனென்றால் ஆபத்தான விஷயங்கள் இருக்கிறது என்று நம்மிடம் “சத்தியம்” வாங்கிக் கொள்வான். 

ஆகாதவர்களின் தலை முடி… துணி… ஏதாவது எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சிநேகிதமாகப் பேசுவது போல் எல்லாம் கேட்டு வாங்கிக் கொள்வான்.

தலை முடி… துணி… அவன் வைத்திருக்கும் அந்தக் கருவையும் வைத்து சில மந்திரங்களைச் சொல்லி எடுத்து வைத்திருக்கும் பாத மணலில் போட்டு வீட்டில் தெளித்து விடுவான்.

1.மணல் பட்டதும் சில வீடுகளில் கை கால் வராமல் போகலாம்
2.பெண்கள் கருவுற்றிருந்தால் கரு சிதைந்து போகும்
3.இந்த மாதிரி எல்லாம் சில குடும்பங்களில் நிறைய நடக்கிறது… (சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிய குடும்பங்களில்…!)

காசைக் கொடுத்து மோட்சத்திற்கு அனுப்பலாம் என்று செய்யலாம். ஆனால் அப்படிப் போக முடியாது…!

இதை எல்லாம் தெரிந்து அறியாமல் இயக்கும் மந்திர தந்திரங்களிலிருந்து நீங்கள் விடுபடுங்கள்..!

ஞானத்தை வளர்க்கும் தியானத்தையும் தியானத்தின் மூலம் ஞானத்தையும் எப்படிப் பெறவேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


கண்டார் விண்டதில்லை… விண்டார் கண்டதில்லை…! இதன் பொருள் என்ன…?

கண்டார்..! என்பதற்கு…
1.இந்த உலகின் உண்மை ஞானத்தைக் கண்டவர்கள் விண்டு…
2.வீண் விரய நிலையில் புரளிகளாக எந்த உண்மையையும் சொல்ல மாட்டார்.

விண்டார் கண்டதில்லை… என்பதன் பொருள்
1.விண்டவன் தன் எண்ணத்தில் ஏற்றிக் கொண்ட செயலைத்தான் விண்டு புகட்டுகின்றான்.
2.இவன் கண்டது எவற்றை…?
3.ஞானப் போர்வையைப் புகழ்படுத்திக் காண்பவன் விண்டு உணர்த்தும் நிலையாகத் தான் அது இருக்கும்.

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

ஆக…
1.தன் ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் தியானம் வேண்டும்..
2.தியானம் பெற ஞானம் வேண்டும்.

ஞானம் என்பது மனிதனுக்கு எப்படி வளருகின்றது..?

பல குண நிலையில் வாழும் மனிதன்
1.தன் எண்ண கதியிலேயே… தன் குணமுடனே…
2.ஞானம் பெறல் வேண்டும் என்றால் எந்த ஞானமும் வளராது.
3.பல குணங்களுடன் உள்ளவனால் தியானத்தின் செயல் முறைக்கே வர முடியாது.

தியானம் என்பது… மனிதனின் குணத்தைச் சமமான சாந்த நிலை பெற்ற பிறகு
1.சாந்தத்தினால் இவ்வெண்னத்தை ஓ…ம் என்ற நாதமுடன் எடுக்கும் முறைப்படுத்தி
2.தன் கவன நிலையை அதன் வழி செலுத்தும் பொழுது தான் ஞானம் பிறக்கின்றது.

மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் இப்படியெல்லாம் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்வது இயற்கையே.

இருந்தாலும்… அந்த இயற்கையின் கதியில்… அதே வேகத்தில்… நம் எண்ணத்தைப் பாய்ச்சி விட்டால் வளரும் நிலையற்று அழிக்கும் நிலைக்குச் செல்கின்றான் மனிதன்.

நம் ஆடையில் ஏற்படும் கறையை…
1.எப்படி அகற்றினால் அது போகும் என்று “பாங்காக…” (பக்குவமாக)
2.மற்ற இடத்தில் கறைபடியாமல்…
3.படிந்த இந்தக் கறையைப் போக்க நம் செயல்கள் இருந்தால்…
4.துணி பாழ்படாமல் சுத்தமாக அகற்றி விடலாம்.

கறை படிந்து விட்டதே…! என்று சலிப்புப் பட்டு அதை அடித்துத் தோய்த்துச் செயல்பட்டால் அந்தக் கறையும் போகாது… துணி தான் நைந்து போகும்.

மின்சாரத்தைப் பாய்ச்சி ஒளியைக் காண்கின்றோம். எந்த அளவு விகிதம் செலுத்தப்படுகின்றதோ அதற்குகந்த வெளிச்சத்தைத் தான் அந்த மின் ஒளி ஏற்றித் தருகின்றது.

அதைப் போல்… இவ்வெண்ணத்தை எந்த ஒரு செயல்முறைக்கும்
1.சாந்தமாக ஞானத்தைக் கொண்டு ஆராய்ந்து செயல்பட்டால்
2.வாழ்க்கையில் ஏற்படும் குறைகளுக்கு வழி முறை அமைத்துக் கொள்ளலாம்.

சலிப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்திக் கொண்டால் கோபமும் அழுகையும் தான் ஏற்படும்.

எந்த ஒரு சூழ்நிலையானாலும்…
1.எண்ணத்தால் ஞானத்தைப் பாய்ச்சி அதிலுள்ள சிக்கலை அகற்றிவிட்டால் சாந்தமான சமநிலை பெற முடியும்
2.மேன்மேலும் நம் எண்ணத்தின் சாந்த நிலை கூடக் கூட… நம் எண்ணமே சாந்தமாகி
3.ஞானத்தால் எடுக்கும் வழித் தொடருக்குச் “சக்தி நிலை கூடுகிறது...”

சாந்தமான நிலை பெற ஞானத்தால் நம் வாழ்க்கையை வழிப்படுத்திக் கொண்டோமானால் தான் நாம் எடுக்கும் வளர்ச்சிக்கு வழி அமைத்துக் கொள்ள முடியும்.

எந்த ஒரு சிக்கலுக்கும் எண்ணத்தைத் தெளிவுபடுத்தும் ஆத்மாவினால்… சாந்த நிலை பெறுவது என்பது கடினமல்ல.
1.பல சிக்கல்கள் வந்தாலும்…
2.தன் எண்ணத்தைக் கொண்டு அவர்கள் தெளிவு ஏற்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.

ஆனாலும் அவர்களின் குண அமிலத்தில் அவர்கள் வளர்த்துக் கொண்ட “அவர்களுக்குச் சொந்தமான வளர்ச்சி நிலை தான்…” மேலோங்கி நிற்கும்.

எண்ணத்தைச் சாந்தப்படுத்தி சமநிலை பெறும் ஆத்மாவினால் நிச்சயம் ஞான ஒளி ஈர்ப்பின் வழியில் செல்ல முடியும்.

October 30, 2019

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மா விண் சென்ற நிலை – நடந்த நிகழ்ச்சி


ஒரு சமயம் மாயவரம் என்ற ஊரில் டாக்டர் ஒருவர் இருந்தார் அவருடைய தாயாருக்கு 80 வயது இருக்கும். கணவர் உடலுடன் இல்லை.

ஆனால் கணவர் உடலை விட்டுச் சென்றதும் அந்த அம்மா என்ன செய்தது…? “என் கணவர் என்னுடன் தான் இருக்கிறார்…!” (யாரும் சொல்லித் தரவில்லை) என்று அந்த எண்ணத்திலேயே இருக்கிறது.

பொட்டையும் தாலியையும் நீக்கும்படி மற்றவர்கள்  சொல்லியிருக்கின்றார்கள்.
1.என் வீட்டுக்காரர் என்னுடன் தான் இருக்கிறார்..
2.நீங்கள் ஏன் அதை நீக்கச் சொல்கிறீர்கள்…? என்று ஒரு போடு போட்டது.

இருந்தாலும் வெளியில் போனால் எல்லோரும் இதையே கேட்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே அடங்கி இருக்கின்றது.

அப்பொழுது இந்த மாதிரி ஒரு சாமி (ஞானகுரு) வருகிறார்… அவரைப் பார்த்து… என்ன ஏது..? என்ற விவரங்கள் கேட்டால் நல்லது…! என்ற எண்ணத்தில் இருந்தது, எனென்றால் நம்முடைய ஞான உபதேசப் புத்தகங்களை ஏற்கனவே அந்த அம்மா படித்திருக்கின்றது.

அந்தச் சாமியை நான் பார்க்க வேண்டும்…! என்று வீட்டை விட்டு வெளியிலே வரவில்லை. சந்தர்ப்பத்தில் நான் (ஞானகுரு) அந்த வீட்டிற்குப் போனேன்.

விபரத்தை எல்லாம் சொன்னவுடனே… எனக்குத் தெரிந்தோ தெரியாமலோ அப்படி ஒரு எண்ணம் வந்துவிட்டது. ஆனாலும் சாஸ்திரங்களைப் படிக்கப்படும் பொழுது எனக்கு உள் உணர்வு ஒன்று தோன்றியது என்று அந்த அம்மா என்னிடம் சொல்கிறது.

கணவனுடன் ஒன்று சேர்ந்து வாழ்கிறோம். கணவனும் மனைவியும் இரண்டு பேரும் ஒன்றாகிவிட்டால்
1.மனைவி இறந்ததும் கணவன் இறந்துவிடுகின்றான்..
2.அல்லது கணவன் இறந்ததும் மனைவி இறந்துவிடுகின்றாள்..
3.இப்படி இரண்டு பேரும் ஒன்று சேர்த்துப் போனவுடன் ஒரே உணர்வுடன் போகிறது
4.இது எங்கே போகிறது…? என்ற விளக்கம் எல்லாம் நான் (ஞானகுரு) கொடுத்தேன்.

எனக்கு இந்த மாதிரியான எண்ணம் எப்படி வந்தது…? என்று என்னிடம் கெட்டது. தெரிந்தோ தெரியாமலோ தான் நான் இப்படிச் செய்கிறேன் என்று அந்த அம்மா சொல்கிறது.

1.உங்கள் தாயின் கருவில் நீங்கள் சிசுவாக இருக்கப்படும் பொழுது
2.இதைப் பற்றிய உணர்வுகளை நீங்கள் கேட்டதனால் உங்கள் உடலில் விளைந்திருக்கின்றது (பூர்வ புண்ணியம்)
3.அந்த உணர்வு தான் உங்களை இயக்கியிருக்கிறது…! என்று சொன்னேன்.

“கணவர் என்னுடனே இருக்கிறார்” என்ற நிலைகளில் அவர்களை அறியாதபடி சாங்கியத்திற்கே அந்த அம்மா எதுவும் ஒத்துக் கொள்ளவில்லை… இறந்தவர்களுக்குச் செய்யும் சாங்கியங்களையே செய்யவிடவில்லை.

இருந்தாலும் அந்த அம்மாவின் கணவர் ஆன்மா வேறு எங்கேயும் போகவில்லை. எங்கேயும் போகாதபடி அந்த அம்மா உடலைச் சுற்றிக் கொண்டே தான் இருக்கிறது.

அதை நீ இப்பொழுது பார்க்கலாம் அம்மா…! என்றேன்
1.பார்க்கலாம் என்று சொன்னவுடன் தன் கணவரின் உணர்வுகள் தனக்குள் இருந்து
2.தன்னுடன் வாழ்ந்த காலத்தில் எப்படி மகிழ்ச்சி இருந்ததோ அதை எல்லாம் கண்ணில் பார்க்கின்றது.

அந்த ஆன்மா உடலுக்குள் செல்லவில்லை. ஆசை கொண்டு அந்த ஆன்மா எப்படிச் சுற்றிக் கொண்டிருக்கிறது…? என்ற உண்மையை உணர்கின்றார்.

அந்த அம்மாவின் பையன் அவர் ஒரு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர். இரண்டு பேருமே இதைப் பார்க்கின்றார்கள்,
1.இந்த உண்மையை இன்று தான் என்னால் உணர முடிந்தது
2.என் தாயின் நிலைகளில் எனக்கு அந்த அருள் கிடைக்க வேண்டும்
3.எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் அந்த அருள் கிடைக்க வேண்டும் என்று அவரும் எண்ணுகின்றார்.

இந்த உண்மையின் உணர்வுகளை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று அதிகாலையில் எடுத்து நீங்கள் வளர்த்துக் கொண்டு வாருங்கள்.

அந்த வலு கொண்டு உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாவை நீங்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள். யாம் சொன்ன முறைபப்டி அவர்கள் இருவரும் செய்த பின் அங்கே ஒளியின் சரீரம் பெறுகின்றார்.

இதற்கு முன்னாடி ஒரு பெரிய சாதுவைப் பார்த்தாராம். சில உபதேசங்களை அவர் கொடுத்தாராம். இராமாயண மகாபாரதக் காவியங்களைப் பற்றி சொல்லி இருக்கின்றார்.
1.இருந்தாலும் சாங்கியம் எதுவும் செய்யாதே..! என்று மட்டும் அவர் சொன்னார்
2.பாக்கி எனக்கு விவரங்களைச் சொல்லவில்லை,

ஆகவே என் கணவர் என்னுடன் தான் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தது, தாலி எனக்குள் இருந்தாலும் அவருடன் ஒன்றி “முழு மாங்கல்யக்காரியாக நான் போய்ச் சேர வேண்டும்…!” என்ற எண்ணத்தில் தான் செய்து கொண்டிருந்தேன்.

சில இடங்களில் சில உண்மைகள் அறிந்தோ அறியாமலோ இப்படி இருக்கின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் மூன்றரை இலட்சம் பேரைச் சந்தித்ததில்
1.எப்படி எல்லாம் இந்த உலகம் இயக்குகிறது…?
2.மனிதனான பின் இனி நமக்கு என்ன இருக்கின்றது…? என்ற நிலையில்
3.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற இந்த உறுதியை வைத்துக் கொள்ள வேண்டும்.
4.நாம் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைகிறோம்.

அதற்குத்தான் இந்த உபதேசமே…!

மனிதர்களுக்கு மட்டும் தான் ஆண்டவனா…? மற்ற ஜீவன்களுக்குக் கிடையாதா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


1.அமிலத்தின் கூட்டால் சிவ பிம்பம் (உடல்கள்) பெற்று
2.சக்தி ஒளி ஈர்ப்பில் ஜீவன் கொண்ட ஜீவத் துடிப்பு அனைத்துமே
3.ஆண்டவனுக்குப் பொதுவானது தான்.

ஆண்டவனின் சக்தி என்று ஆண்டவனை வேண்டி… இறைஞ்சிப் பணிந்து பல பாடல்களைப் பாடி… ஆண்டவனைப் பெண்ணாகவும் ஆணாகவும் ஒளியாகவும் தாயாகவும் சகோதரர்களாகவும் அவரவர்கள் வழி வந்த மதக் கோட்பாட்டின் முறைப்படியெல்லாம் இறைஞ்சித் துதி பாடுகின்றனர்.

இந்த ஆறறிவு படைத்த மனித ஜெந்துக்களுக்கு மட்டும் தான் ஆண்டவன் சொந்தமா…?

சிறு அணுவும் “அவனன்றி அசையாது…!” என்று உணர்த்துபவனும் மனிதன் தான்.

ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அவ்வணுவையே உயிராகக் கொண்ட ஆடு மாடுகளையும் தன்னை ஒத்த மனித இனத்தையே கூட நரபலி தருபவனும் ஆண்டவனுக்குச் சமர்ப்பித்துத் தன் வேண்டுதலை நிவர்த்திக்கடன் செய்து ஆண்டவனை வணங்குபவனும் இதே மனிதன் தான்…!

ஆடு மாடுகளுக்கும் மற்ற பிராணிகளுக்கும் அந்த ஆண்டவன் சொந்தமில்லையா…?
1.மனிதனுக்கு மட்டும் தான் அந்த ஆண்டவன் சொந்தம் என்றால்
2.மற்ற ஜீவராசிகளும் ஆண்டவன் படைப்பே…! என்று துதிபாடும் அந்த ஆண்டவன் எங்குள்ளான்…?

தவறான வாழ்க்கை நெறியில் உள்ளவனும் வாழ்கின்றான். நல் ஒழுக்கக் கோட்பாட்டில் உள்ளவனும் வாழ்கின்றான்.

எல்லா ஜீவராசிகளுக்கும் ஆண்டவன் உள்ளான் என்று உணர்த்தும் எல்லா மதத்தினரும் தன் சுவை உணவிற்காகத் தன்னை ஒத்த ஜீவ பிராணிகளை உண்டு தான் வாழ்கின்றார்கள்.

இவனுக்குச் சொந்தமான அந்த ஆண்டவன் வந்து மற்ற ஜீவ பிராணிகளைப் பலியிட்டு உண்ணாதே…! என்று உணர்த்தியிருக்கலாம். அஜ்ஜீவன் பிரியும் நேரத்தில்… அதன் ஓலத்தைக் கேட்டு… ஏன் அந்த ஆண்டவன் வந்து அவற்றைக் காப்பாற்றியிருக்கக் கூடாது..?

ஆண்டவனைச் சொந்தம் பாராட்டி ஆண்டவனைத் துதித்து வணங்குபவனுக்கு அந்த ஆண்டவன் சொந்தம் என்றால் மற்ற பிராணிகளுக்கு ஆண்டவனின் சக்தி சொந்தமில்லையா…? அப்படிப்பட்ட ஆண்டவன் என்பவன் எங்குள்ளான்…?

1.தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்…
2.நீரிலும் இருப்பான் நெருப்பிலும் இருப்பான்…
3.நினைத்த நினைப்பிலும் இருப்பான்… என்னும் ஆண்டவன்
4.எப்படி மனிதனுக்கு மட்டும் சொந்தமாகின்றான்…?

மதத்தவர் என்ற அடிப்படையில் குறிப்பிடுவதாக எண்ணி யாரையும் சாடுவதாக நினைக்க வேண்டாம்..! உள்ள உண்மையை உணர்த்துகின்றோம்.

எல்லா மதங்களிலுமே கடவுள் அன்பானவன் என்று சொன்னாலும் பிற பிராணிகளை அடித்து உணவாக உட்கொள்ளும் நிலை தான் உள்ளது.

ஆண்டவனின் செயலை இந்த மாமிசம் புசிப்பவர்கள் செய்யும் முறையில் மட்டும் குற்றம் காணவில்லை. மாமிசம் புசிக்காதவரின் செயல் என்ன…?

1.ஆண்டவனைப் பக்தித் துதி பாடி பஜனைகள் பல செய்து
2.ஆண்டவனாகக் கோவிலில் உள்ள கர்ப்பச் சிலைக்கு நீராலும் பாலாலும் வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் ஆராதனை செய்து
3.சுத்தமாக ஆச்சாரமுடன் கோடி அர்ச்சனைகளையும் பல கோடிப் புஷ்பங்களைச் சாத்தி வணங்கி
4.அந்த ஆண்டவனின் அருள் பரிபூரணமாகப் பெற்றுவிட்ட உவகையுடன் வருபவனுக்கு
5.அவன் வரும் வழியில் அவன் ஜாதிப் பிணைப்பு என்ற இனத்தவரன்றி
6.மற்றவரின் உடலோ சில கழிவுகளோ தன் மேல் பட்டுவிட்டாலும் உடனே பெரும் கோபம் கொண்டு
7.அந்த ஆண்டவனுக்குத் தான் செய்த பூஜை முறையிலேயே அபசாரம் நடந்து விட்டதாக உள்ளம் உலைந்து…
8.நீ வணங்கும் ஆண்டவன் என்பவன் யார்…? அந்த ஆண்டவனுக்கு உள்ள சக்தி யாவை…? என்று வினவினாலும்
9.உடனே கோப அலையைத் தன்னுள் ஏற்றிப் பெரிய தவறு நடந்து விட்டதாகச் செயல்படும் ஒரு சாராரும் உள்ளனர்.

என் (ஈஸ்வரபட்டர்) வினாவில் ஆண்டவன் யார் என்பது யாரென்றே புரியவில்லை.
1.ஆண்டவனின் உண்மை நிலை உணராதவன்
2.எங்கோ காணத் துடிக்கின்றான் அந்த ஆண்டவனை.

மரக்கறியும் அணு தான்.. மற்ற பிராணிகளின் உடலும் அணு தான்…! எல்லாமே அணுவாக உள்ள பொழுது… “அணுவின் அணுவாக” அக்காந்த மின் அலையின் ஜீவ சக்தியில் கலந்துள்ள அனைத்துமே ஆண்டவனின் சக்தி தான்.

1.ஒன்றின் துணையுடன் ஒன்று வாழ
2.ஒன்றை அழித்துத்தான் மற்றொன்று வாழ முடிகின்றது.
3.ஆவியாகி அமிலமாகி ஜீவனாகிப் பிம்பமாகி..
4.பிம்பம் ஆவியாகி அமிலமாகி ஜீவனாகி பிம்பமாகி ஆவியாகி…
5.மீண்டும் மீண்டும் சுழன்று ஓடும் சுழற்சி கதியின் சக்திக் கூட்டிற்கு
6.எல்லாமில் எல்லாமாக நிறைந்துள்ள ஆண்டவனின் சக்தி பிறந்து… வளர்ந்து… மடிந்து… பிறந்து… சுழன்று கொண்டே உள்ளது.

முதல் எது…? கடைசி எது….? உலகச் சக்தியில் முதலும் கடைசியும் உண்டா…?

முடிவில்லா மூலவனே மும்மூர்த்தியானவனே…! என்ற பொருளின் தத்துவம் இப்பொழுது புரிந்ததா…?

October 29, 2019

உடலிலே சில நேரம் ஊசி குத்துவது போல் வலி வருகிறது... அது எதனால்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்


ஒருவன் நம்மைத் திட்டினால் அவனின் உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது, பதிவான உணர்வை மீண்டும் மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அந்தத் திட்டிய உணர்வுகள் வந்து
1.நம் உடலிலே அத்தகைய அணுக்கள் பெருக்கி விட்டால்
2.இதற்கும் நமக்குள் இருக்கும் நல்ல குணத்திற்கும் இரண்டுக்கும் போர் முறையே வரும்.
3.பளீர்…ர்ர் பளீர்…! என்று உடலிலே மின்னும்.

ஆனால் நமக்கு அது என்ன என்று தெரிவதில்லை. ஏனென்றால் நமக்குள் அணுக்கள் உருவாக்கப்படும் பொழுது எதிர் நிலையான உணர்வுகள் பாய்ச்சப்படும் பொழுது நம் தசைகளில் சில நேரங்களில் பளீர்… பளீர்… (ஊசி குத்துவது போல்) என்று மின்னும்.

இவை எல்லாம் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மையே அங்கே அப்படி வருகின்றது.

ஆகவே நம் உயிரை ஈசன் என்று உணர்ந்து கொண்ட பின் ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை நாம் எப்படிக் கோவிலாக மதிக்க வேண்டும்…? இந்த உடலான சிவனை எப்படி மதிக்க வேண்டும்…? என்ற நிலையில் நாம் சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும்.

ஏனென்றால் இந்த மனிதனின் நிலையில் உயர்ந்தவன் “அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகர்ந்தோம் என்றால் நமக்குள் வரும் தீமையை நீக்கி நம் ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றது,
1.தூய்மையான உணர்வுகள் வளர வளர
2.அந்தத் துருவ நட்சத்திர்த்தின் பற்று நமக்குள் அதிகரிக்கின்றது.

அத்தகைய பற்று வளர்ந்தால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் எதனை வளர்த்துக் கொண்டோமோ இந்த உயிர் அங்கே அழைத்துச் சென்று அதிலிருந்து வரக்கூடிய உணர்வை எடுத்து ஆறாவது அறிவாக உள்ள நிலையை ஏழாவது ஒளியாகப் பெறச் செய்கின்றது,

இந்த மனித வாழ்க்கையில் நாம் அன்பு பண்பு பாசம் என்று வளர்த்தாலும் பிறருடைய துயர்களை நாம் கேட்டறிந்து தான் உதவி செய்கிறோம்.

அந்தத் துயரமான உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது துயரத்தை ஊட்டும் அணுத் தன்மையை நம் உயிர் உருவாக்கி விடுகின்றது.

மீண்டும் மீண்டும் அவர்களை நாம் எண்ணும் பொழுது அந்த அணுக்களின் தன்மை பெருகி
1.நம்மையறியாமல் நல்ல அணுக்கள் மடிந்து விடுகின்றது.
2.நம்மை அறியாமலே நம் நல்ல குணத்தையும் காக்க முடியாமல் போய்விடுகின்றது,
3.நம் உயிரான ஈசனையும் மறந்துவிடுகினறோம்
4.அதனால் மனித உடலில் வரும் தீமைகளைத் தூய்மைப்படுத்த மறந்து விடுகின்றோம்.
5.பற்றால் நமக்குள் வரக்கூடிய தீமைகளிலிருந்து நமக்கு விடுபடத் தெரியவில்லை.  

“விடுபட வேண்டும்” என்றால் என்ன செய்ய வேண்டும்..? என்பதற்குத் தான் இப்பொழுது ஒவ்வொரு நிலைகளிலும் தெரிந்து அந்த அருள் சக்திகளைப் பெறக்கூடிய உணர்வுகளை உங்களுக்குள் கொடுக்கின்றோம்.

இதைத்தான் “தொட்டுக் காட்டுவது…!” என்று சொல்வது.

நுகர்ந்த உணர்வுகள் ஒவ்வொன்றும் உங்களுக்குள் எப்படி இயங்குகிறது…? உங்களுக்குள் தீமைகள் விளைவது எப்படி…? என்று அறிந்து
1.அந்தத் தீமைகளிலிருந்து விலகும் அருள் உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது
2.இது இரண்டையும் கலந்து நீங்கள் நுகர்கின்றீர்கள்.
3.நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் அணுவாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது,
4.இந்த அணுக்கள் பெருகி விட்டால் உங்கள் உடலுக்குள் தீமை என்ற உணர்வின் அணுக்களை இது வளராது தடுத்துவிடும்.

நாம் எடுக்க வேண்டிய உயர் மின் காந்த அலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


எண்ணத்தைக் கொண்டு தான் உணர்வை அறிகின்றோம். உணர்வைக் கொண்டு தான் எண்ணம் செயல்படுகின்றது.

இவ்வெண்ணமும் உணர்வும் இயங்க… இந்தப் பன்னிரெண்டு வகை குண அமிலங்களின் நிலையினால்
1.எண்ணத்தைக் கொண்டு உணர்வும்…
2.உணர்வைக் கொண்டு எண்ணமும்… இயங்கி வாழும் ஜீவாத்மாக்கள் எல்லாம்
3.இக்குண அமிலத்தையே ஒருநிலைப்படுத்தி எண்ணத்தைச் செயல்படுத்த வழி பெற்றால் தான்
4.இஜ்ஜீவ உடலுக்குள் உள்ள காந்த மின் அலையின் ஈர்ப்பை அதிகமாகச் சேமிக்க முடியும்.

காற்றிலும்… நீரிலும்… ஒளியிலும்… இக்காந்த மின் அலையின் சக்தி இருப்பதனால் தான் பூமியின் ஜீவித சக்தியே சுழன்று ஓடுகின்றது.

மின்சாரம் காண… “இச்சக்தி அலையை அதிகமாகக் குவித்து” அதனை ஒளியாக்கித் தருகின்றனர் செயலுக்குகந்தபடி எல்லாம். அதே காந்த மின் அலையின் சக்தி தான் ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் உள்ளது.

நம் ஜீவ உடலுக்குள் உள்ள மின் அலையைக் காட்டிலும் மின் அலையைக் குவித்து மின்சாரமாகச் செயலாக்க அந்தக் காந்த மின் அலை உடலில் ஏறும் பொழுது (CURRENT SHOCK) அந்த ஜீவ உடலில் உள்ள அலையையும் எடுத்துக் கொண்டு உடலை ஜீவனற்றதாக்கி விடுகின்றது.

காந்த மின் அலை இல்லாவிட்டால் ஜீவத் துடிப்பே இல்லை.

எந்த வீரிய சக்தி கொண்ட மின் அலையும் உலர்ந்த மரத்திலும் ஜீவ சக்தியைப் பிரித்துப் பல உஷ்ணங்களை ஏற்றி வடிவமைத்த கண்ணாடிகளிலும் பாய்வதில்லை.

இதுவே சிறிது ஈரச்சத்து அதிலிருந்தாலும் உடனே அம்மின் அலை பாய்கிறது. இம்மின் அலையின் சக்தி எல்லா ஜீவ சக்தியிலும் அதனதன் வளர்ச்சிக்கொப்பக் கூடியும் குறைந்தும் உள்ளது.

1.இம்மின் அலையை எடுக்கும் முறையைக் கொண்டு
2.நம் எண்ணத்தை ஞானத்தில் செலுத்தினால் தான்
3.ஞானத்தின் ஈர்ப்பு நமக்கு ஜீவ சக்தியின் சுவாச அலையில் தாக்கி
4.சுவாச அலையினால் நாம் எடுக்கும் எண்ணம் கொண்டெல்லாம் நம் உயிரணுவுடன் மோதி
5.நாம் எடுக்க வேண்டிய ஞான சக்தியின் ஒளி காந்த மின் அலையை
6.நம் ஜீவ உயிரும் இந்த உடலின் பல கோடி அணுக்களும் எடுக்க முடியும். (இது முக்கியமானது)

இதன் தொடர்ச்சியை மேன்மேலும் கூட்டிச் செயல்பட்டு இந்த உடல் என்ற கூட்டை அழியா உடலாகக் காயகல்பத்தை உண்டு தான் போகனும்… கொங்கணவனும்… இவர்களின் நிலையை ஒத்த பலரும் செயல்பட்டனர்.

இச்சக்தி மின் அலையைப் பெறவே சித்து நிலை பெற்ற சப்தரிஷிகளுக்குள் ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் சென்ற வழி முறையின் ஈர்ப்பு சக்தியில் மாற்றம் இருந்தாலும்
1.அவ்வழித் தொடர் ஞானத்தில் சுழன்ற பிறகு ஒரே நிலையில் தான்
2.”ஒரே நிலையில் தான்” என்பது ஒரு நிலையான காந்த மின் அலையின் தொடர்ச்சியுடன் தான் கலந்தார்கள்.

ஆண்டவனின் சக்தியை ஒன்றே குலம்… ஒருவனே தேவன்…! என்றும் அவ்வாண்டவனுடன் கலப்பதற்கு ஜோதி நிலை கண்டால் அச்சக்தியைப் பெறலாம் என்றும் அன்று உணர்த்தினார்கள்.

அஜ்ஜோதி நிலை பெறும் வழித் தொடர் என்னப்பா…? ஜோதி நிலை பெற்று விட்டால் ஆண்டவனாகி ஆண்டவனுடன் கலந்து நின்று முற்றுப் பெறுவதுவா…?

ஆண்டவனின் சக்தி ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் இக்காந்த மின் அலையின் சக்தியுண்டு. ஆனால் அச்சக்தியை உணர்ந்து நம் ஜீவாத்மா உயிர்ச் சக்தியை நாம் எடுக்கும் எண்ண ஜெபத்தால் கூட்டி இந்த உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் (பன்னிரெண்டு குண அமிலங்களும்) அச்சக்தி அணுவை வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

ஆனால் நம்முள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தை அதனதன் குணத்தின் செயலுக்கே நம் உணர்வையும் எண்ணத்தையும் செலுத்தினோம் ஆனால் இதே சுழற்சி வட்ட வாழ்க்கையில் தான் சுழல முடியுமே அன்றி பூமியின் ஈர்ப்பிலிருந்து மீளும் வழி இல்லை.

ஆக.. இந்த உலக ஆத்மாக்களின் குன்றிய எண்ணச் சுழற்சி பேராசை வாழ்க்கையில் தன்னையே மரித்துக் கொள்வதோடு அல்லாமல்… மெய் ஞானத்தை உணர்த்தி உலகாயும் ஒளியாயும் நீராயும் காற்றாயும் நாம் வாழ வழி அமைத்த சப்தரிஷிகளின் சக்திக்கே… தன்னை வளர்த்துப் படைத்த சக்திக்கே… ஊறு விளைவிக்கின்றான் இன்றைய மனிதன்.

தன் ஞானத்தை இக்காந்த மின் அலையின் ஈர்ப்பைப் பெற வளர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு ஜீவனுக்கும் முடியும். ஆனால் ஞானத்தை வளர்க்கவும் செயலாற்றவும் முடியாத இயற்கையிலே பல சக்திகளை அறிந்த மிருக ஜெந்துக்களுக்கு நமக்குள்ள (மனிதன்) சந்தர்ப்பம் இல்லை.

ஆனால்….
1.நம்மில் நாம் எந்த ஆண்டவனைக் காணத் துடிக்கின்றோமோ
2.அவ்வாண்டவனால் நமக்குள் பல சக்தி அலைகளை படைக்கப் பெற்று வழி வந்த நாம்
3.நம் நிலையை உணராமல் இன்று வாழ்கின்றோம்.

October 28, 2019

மனமே இனியாகிலும் மயங்காதே… பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…!


ஒருவரை நல்லவராக எண்ணுகின்றோம். அந்த உணர்வுகள் நமக்குள் விளைகிறது. அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் “நல்லவர்…” என்று தான் எண்ணுகின்றோம்.

அதே சமயத்தில் ஒரு சந்தர்ப்பம் பகைமையாகி விட்டால் மோசமானவன்… ஏமாற்றுகின்றான்…! நண்பனாகப் பழகினான்… கெட்டவனாகி விட்டானே…! என்கிற பொழுது அது நமக்குள் விளைகிறது.

ஆகவே நாம் எண்ணியது எதுவோ அதுவே உருவாகி மீண்டும் பகைமையையே உருவாக்குகிறது. ஏனென்றால் “உயிருடைய வேலை இது தான்…!”

ஏனென்றால் இதை எல்லாம் உணரும்படி குருநாதர் எல்லா இடங்களுக்கும் சுற்றிப் பார்த்துப் பல உண்மைகளை எனக்கு உணர்த்தி..
1.இதிலிருந்தெல்லாம் மனிதன் எப்படித் தெளிய வேண்டும்…?
2.எவ்வாறு வாழ வேண்டும்…? எவ்வழியில் வாழ வேண்டும்…? என்று காட்டினார்.

ஒரு சமயம் பனிப் பாறைகள் இருக்கும் இடமாக பத்ரிநாத்துக்குப் போகச் சொல்கிறார் குருநாதர். வெறும் கோவணத் துணியுடன் தான் அங்கே போகச் சொன்னார்.

1.அவர் சொன்ன ஒரு நட்சத்திரத்தின் உணர்வுகளை நான் எடுத்தால் தான்
2.அதைச் சுவாசித்தால் தான் என் உடல் சூடாகும்… அங்கிருக்கும் குளிர் பாதிக்காமல் இருக்கும்…!

நான் சொன்னதை எடுக்காமல் விட்டுவிட்டால் நீ இறந்து விடுவாய் என்பார். அவர் சொன்னபடியே எடுத்து நான் சென்று கொண்டிருக்கும் பொழுது பழனியில் இருக்கும் என் பையனைப் பற்றி நினைவு வந்தது.

அவனை அங்கே ஊரிலே விட்டு விட்டு வந்தேன்… இப்பொழுது அவன் அங்கே என்ன செய்கிறானோ…? என்ற எண்ணினேனோ இல்லையோ குருநாதர் சொன்னதை எடுக்க விட்டு விட்டேன்.

உடனே என்னுடைய இருதயம் என்ன செய்கிறது…? அப்படியே பட… பட… பட… என்று இரைய ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் உயிரே போய்விடும் போல் இருக்கிறது.

ஆனால் அடுத்த நிமிடம் குருநாதர் வருகிறார்…! ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த மாதிரி வரும் பொழுதெல்லாம் எனக்குள் நினைவு படுத்துவார்.

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல் மறைவதைப் பாராய்…!

இப்பொழுது உன் உடல் இரைகிறது. நீ போய்விட்டால் யாரைப் போய் பார்க்கப் போகிறாய்..? காப்பாற்றப் போகிறாய்…! உன்னையே காப்பாற்ற முடியவில்லையே…!

நேற்றிருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா..?
என்று கேட்கிறார் குருநாதர்.

இந்த மனித உடலை நீ சதமாக எண்ணுகிறாய். உன்னிடம் சொன்னதன் நிலைகளை
1.நான் அந்த அருள் ஒளி பெற வேண்டும்
2.என் பையன் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வை நீ செலுத்தியிருந்தால்
3.இந்த நிலை வராதே…! என்று இதை அந்த இடத்தில் உணர்த்துகின்றார்.

ஒவ்வொரு நிமிடமும் இந்த வாழ்க்கையில் உயர்ந்த எண்ணங்களுடன் நாம் இருப்பினும்… நம்மை அறியாமலே நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நம்மை எப்படிப் பாதுகாப்பற்றதாக மாற்றுகிறது என்ற நிலையை அங்கே நிதர்சனமாக உணர்த்துகின்றார்..

உங்களை யாம் இப்பொழுது தியானமிருக்கச் சொல்கிறோம். உங்கள் குழந்தை மீது நீங்கள் மிகவும் பிரியமாக இருக்கின்றீர்கள். அது என்ன செய்கிறது…?

நன்றாகப் படிக்கிறேன் என்று நினைத்துப் பரீட்சை எழுதினான். ஆனால் அதிலே தோல்வி அடைந்தால் என்ன நினைக்கின்றீர்கள்…?

இத்தனை பணத்தைச் செலவழித்தேனே… படிக்காமல் போய்விட்டானே...! என்று வேதனைப்படுகின்றீர்கள். இவ்வளவு செலவழித்தேன்… இந்த மாதிரி ஆகிவிட்டதே…! என்று சொல்லி இந்த ஆசையை வைக்கும் பொழுது
1.அந்தக் குழந்தையைப் பாதுகாப்பதற்கு மாறாக
2.இப்படித் தொலைத்து விட்டாயே…! என்ற வேதனையைத் தான் எடுத்து வருத்தப்படுகின்றீர்கள்.

அதற்குப் பதிலாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து நமக்குள் வலுவாக்கிக் கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும்
2,என் குழந்தைக்குக் கல்வியில் நல்ல ஞானம் வர வேண்டும்…
3.அதற்குண்டான சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால் அந்த வேதனை நம்மைப் பாதிக்காது.

அவனுக்குள் இந்த உண்ர்வுகள் பாய்ந்து அவனையும் சிந்திக்கச் செய்யும். எதனால் தோல்வி அடைந்தோம்…? என்று அறிந்து அதை மாற்றிச் சரியான பாதையில் செல்லும்படிச் செய்யும்.

வேதனையையும் துன்பத்தையும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் எண்ணி வாழ்வதை விடுத்து என்றுமே நாம் அருள் வழியில் சென்றிடல் வேண்டும்.

குருநாதர் எனக்குக் காட்டிய இந்த அருள் வழியைத்தான்…!