ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 25, 2018

“இரத்தக் குழாய் வெடித்து இறந்தார்கள்…!” என்று சொல்கின்றோம் ஏன்?

பிறர் செய்யும் குற்றங்களை நாம் பார்க்கும் பொழுது கோபத்தின் உணர்வாகின்றது. அடுத்து இப்படிச் செய்கின்றார்களே என்ற வேதனை வருகின்றது.

அவர்கள் செய்யும் குற்றங்கள் வேதனையாகி “நஞ்சு…” கலந்த உணர்வாக நமக்குள் மோதும் போது உடலுக்குள் சென்று அந்த உணர்வின் தன்மை கொதிப்பாகி அந்த அணுவின் அணுக்களாகப் பெருக்கமாகின்றது.

ஒரு விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பமே உருவாகின்றது. இது இயற்கையின் நியதி,

நம்மை இயக்கும் வேதனை உணர்வுகள் அந்த கொதிகலனான சுடு நீர் சென்றபின் கவன நரம்புகளில் (உயிர் பாகம்) தாக்கப்பட்ட பின் அது தாங்காது விரிந்து விடுகின்றது.

ஒரு பாத்திரத்தில் வெப்பம் அதீதமாகிவிட்டால் வாயு உற்பத்தியாகி (GAS) வெளிச் செல்லும் பாதையில்லாது அழுத்தமாகிவிட்டால் அந்தப் பாத்திரமே வெடித்து விபத்தாகின்றது.

1.நாம் எடுக்கும் உணர்வலைகள் அனைத்தும்
2.நம் கவன நரம்பில் பட்டுப் பின்பு
3.சிறு மூளைக்குச் சென்று அங்கிருந்து ஆணையிட்டுத்தான் உடல் உறுப்புகளை இயக்குகின்றது.

நுகர்ந்த உணர்வுகள் வடிக்கப்பட்டு அமிலமாக மாற்றும் தன்மைகள் வருகின்றது. எந்த பாகத்தின் தன்மை இந்தக் கொதிப்பின் உணர்வுகள் அதிகமாகச் செல்கின்றதோ அழுத்தமான பின் விரிந்து விடும்.

அப்படி விரியும் தன்மை வரப்படும் போது தான் மயக்க நிலையே நமக்கு வருகின்றது. முழு மயக்கமாகாதபடி சிறிதளவு நினைவிருந்து “எனக்கு இப்படி ஆகிவிட்டதே...” என்று மீண்டும் நினைவு வந்தால் வெடித்துவிடும்.

அல்லது மயக்க நிலை வருகின்றது என்று இந்த எண்ணத்தின் தன்மை அதிகரித்தால் இது கொதிப்பாகி நுண்ணிய நாளங்கள் வெடித்து இரத்த கசிவு ஆகிவிடும்.

உடனே மரணம் தான்.

ஏனென்றால் நாம் எடுக்கும் உணர்வுகள் உணர்ச்சி மிகுதியாகிக் கொதிப்படைந்தால் நாம் அடுத்து எந்த நிலை ஆவோம்..? எதுவாகப் பிறப்போம்…?  என்பதை ஞானிகள் அன்றே சொல்லி உள்ளார்கள்.

மனிதன் ஆவதற்கு மூலம் எது என்றும் நாம் வாழும் வாழ்க்கையில் எந்தக் குணத்தை அதிகமாக வளர்க்கின்றோமோ அந்த ஒவ்வொரு குணங்களுக்கொப்ப உருவங்களும் அதற்குத்தக்க வாகனங்களும் அமைத்து மனிதனான நிலையையும் தெய்வங்களாகக் காட்டியிருப்பார்கள்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வாகனத்தை வைத்திருப்பார்கள்.

கருப்பணசாமிக்கு மோப்ப நாயை வைத்துக் காட்டியிருக்கின்றார்கள் ஞானிகள். நம்முடைய சுவாச நிலையைக் காட்டுவதற்காகத்தான் நாயை வாகனமாகக் காட்டினார்கள்.

நாயை யார் வளர்க்கின்றார்களோ அது அவருக்குச் சாதகமாகத் தான் இருக்கும். நல்லவராக இருந்தால் அவர் சொன்னபடியெல்லாம் அது நல்லதைச் செய்யும்.

போக்கிரித்தனம் செய்து மற்றவர்களைத் தாக்குபவராக இருந்தால் அவர் வளர்க்கும் நாய் தன் விசுவாசத்தால் அவரைப் போன்றே நல்லவரைத் தாக்க வரும்.

இதைப் போன்று தான் நாம் எடுக்கும் மோப்பங்கள் (சுவாசம்)  தீமையான உணர்வுகளைச் சுவாசித்து விட்டால் அந்த உணர்வுகள் அனைத்தும் இருள் சூழச் செய்து நம்மை அறியாமலே தவறு செய்யும் நிலைகளுக்கு அழைத்துச் செல்லும்.

கொடூரமான நிலைகளாகப் பழி தீர்க்கும் உணர்வுகளை உருவாக்கும். ஏனென்றால் இருண்ட நிலைகள் வரும் போது சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

இதைப் போன்று மனித வாழ்க்கையில் நாம் சந்தர்ப்பத்தால் எடுக்கும் குணங்களும் அதனின் இயக்கங்களையும் காட்டுவதற்காகத் தான் உருவங்கள் அமைத்து அதற்கு முன் வாகனங்களை அமைத்து ஞானிகள் காட்டினார்கள்.

மனிதனான பின் தேய்பிறையாகச் செல்லாமல் தீமைகளை வென்றிடும் கல்கியாக அவதார புருஷனாக நாம் ஆக வேண்டும். அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்துத் தீமைகளை வீழ்த்திவிட்டு விண் செல்ல வேண்டும்.