ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 30, 2014

மாட்டு ஜோதிடம்

1. கரு வித்தையை வைத்துத்தான் மாட்டை இயக்குகின்றான்
ஒரு சமயம் உப்பிலி, தார்வார் என்ற இடத்தில் மாட்டை வைத்து வித்தையைக் காண்பிக்கின்றான். மாட்டை வைத்து திரையைப் போட்டு வைத்திருக்கின்றான். அதிலே கரு வித்தையைச் சேர்த்து வைத்திருக்கின்றான்

உடுக்கையை அடித்துக் கொண்டு, உறுமி மேளத்தை உம்.., உம்.., என்று அடித்துக் கொண்டு வருகின்றான். ஒரு பொது இடத்தில் வந்தவுடன் என்ன செய்கின்றான்?

ஐயா பையிலே காசு எவ்வளவு இருக்கிறது? ஐயாவிடம் எவ்வளவு இருக்கிறது என்பான்? இதுவா., இவ்வளவு பணம் இருக்கின்றதா? இவன் அங்கே இருக்கிறது எல்லாவற்றையும் எடுத்துச் சொல்வான்.

ஐந்து ரூபாயா? பத்து ரூபாய் வைத்திருக்கிறாரா? என்று மாட்டிடம் கேட்பான்.

“இல்லை”.

நூறு ரூபாய் வைத்திருக்கிறாரா?

“ஆமாம்”, என்று மாடு தலையை ஆட்டும்.

அதிலே எத்தனை நூறு ரூபாய் நோட்டு?

பிறகு இது உண்மையா? அப்படி என்று கேட்டு நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு, “ஐயா, எடுத்துப் பாருங்கள் என்பான்.

சொன்ன மாதிரியே எல்லாம் இருக்கும்.

இப்படி வரிசையில் வந்து, நீங்கள் எதையாவது நினைத்துக் கொள்ளுங்கள் என்பான்.

ஒருவரைக் காண்பித்து, இவர் என்ன நினைத்தார் அப்படி இன்று நிறுத்திக் கொள்வான். இவர், இன்னென்ன மாதிரியெல்லாம் தொழிலுக்குப் போக வேண்டும் என்று நினைக்கிறாரா என்று மாட்டிடம் கேட்பான்.

“ஆமாம் என்று தலை” ஆட்டுகின்றது.

உறுதிதானா?

“ஆமாம்”

ஐயா. இந்த மாதிரி எல்லாம் நினைத்தீர்களா என்று அவரிடம் கேட்பான்.

ஆமாம் என்பார் அவர்.

இப்படி எல்லாவற்றையும் வரிசையிலே சொல்லிக் கொண்டு வருகின்றான். அப்படிச் சொல்லிக் கொண்டு வந்தவுடனே, உனக்கு சாப்பாட்டுக்கு ஐயா எவ்வளவு தருவார்?

அரை கிலோ தருவாரா அல்லது ஒரு கிலோ தருவாரா? அப்படி என்று கேட்டுக் கொண்டே ஒரு ஐந்து கிலோ தருவாரா? உறுதியாகத் தருவாரா? என்று மாட்டிடம் கேட்பான்.

அது “தருவார்” என்று தலையை ஆட்டும்.

ஐயா, நீங்கள் தருவீர்களா ஐயா? என்று அவரிடம் கேட்பான்.

ஆக அப்படிக் கேட்டவுடன், அவரும் ஆமாம் என்பார்.

ஆனால், கொடுத்ததெல்லாம் திருப்பி வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவான்.

ஒரு கிலோவிற்கு எவ்வளவு பணமோ அதை நீங்கள் கொண்டு வந்து கொடுங்கள். திருப்பி வாங்கிக் கொள்ளுங்கள். இந்த அரிசியை மாட்டுக்கு சாப்பாட்டுக்கு வாங்கிக் கொடுத்துவிடுங்கள். இப்படிச் சொல்லியே எல்லாவற்றையும் வாங்கிக் கொள்வான்.

இதையெல்லாம் கொடுத்திருக்கின்றார்கள். இதை வைத்துக் கொள்ளலாமா? ஆமாம் என்று சொல்வார்களா? என்று மாட்டிடம் கேட்பான்.

ஆமாம் என்று சொல்லும்.

இதை அப்படியே என்ன செய்கின்றான், அப்படியே கொடுத்ததையெல்லாம் வைத்துக் கொள்கின்றான். அப்புறம் கடைசியில் சொல்வான்.
2. இவனும் மக்களுக்கு செய்வினையைத் தான் செய்கின்றான்
ஏதாவது தோஷங்கள், கஷ்டங்கள் இருந்தது என்றால் அதை நிவர்த்திப்பதற்கு இந்த இடத்திற்கு வரவேண்டும் என்பான்.

நீ எந்த இடத்தில் குடியிருக்கிறாய் என்று கேட்டுக் கொண்டு,
ஆக நீ இந்த இடத்திற்கு வா என்கிறான்.

பெரிய கூடாரம் போல் போட்டு கலசங்களாக வைத்திருப்பான். இங்கே எல்லாப் பணத்தையும் வாங்கிக் கொண்டு, அங்கே அவன் இருக்கிற இடத்திற்கு வரச் சொல்கிறான்.

அங்கே வரச் சொல்லி என்ன செய்கிறான்? யார் யாருக்கு இங்கே ஆகாதவர்களுக்கு, என்னென்ன செய்வினை செய்யவேண்டும் என்று கேட்டு, அதற்கு இவ்வளவு பணம் (FEES) என்று வாங்கிக் கொண்டு அதைச் செய்வார்கள்.

உப்பிலி தார்வார் ஊர் பக்கத்தில் இதே இனத்தைச் சேர்ந்தவர்கள் வேறு ஊர் பக்கம் சென்று இந்த வேலைகளைச் செய்வார்கள் இதே மாதிரி மாடுகளை வைத்துக் கொண்டு நம் தமிழ் நாட்டுப் பக்கமும் வருவார்கள்.
3. குருநாதருடைய வேலை
நான் இதையெல்லாம் அவன் என்னென்ன செய்கின்றான்? இவர்கள் அவனுக்குக் கொடுப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அங்கே முடிந்ததும் என்ன செய்தான்?

இன்னொரு இடத்தில் இதே வேலையைத் தொடங்குகின்றான். அதே மாதிரி ஒவ்வொன்றாக மாட்டிடம் சொல்லுகின்றான். ஆனால், என்ன ஆகிவிட்டது?

அந்த மாடு ஒன்றும் தலை ஆட்ட மாட்டேன் என்கிறது. அந்த மாடு ஒன்றும் செய்ய மாட்டேன் என்கிறது.
அவன் என்னென்னமோ செய்து பார்க்கின்றான்.
ஒன்றும் ஆகவில்லை.

“எவனோ.., என்னமோ செய்கிறான்? எவன் அது? உள்ளதைச் சொல். ஏய்., உன்னை என்ன பண்ணுகிறேன்.., பார் என்கிறான்.

நீயாக வந்து சொல்கிறாயா? இல்லை கையைக் காலை முடக்கட்டுமா? என்று சொல்கிறான்.

“நீ என்ன வேண்டுமென்றாலும் செய்டா..,” என்று நான் (ஞானகுரு) பேசாமல் அங்கே இருந்து கொண்டிருக்கின்றேன்.

இந்த மாடு ஒன்றும் பேச மாட்டேன் என்கிறது. அடுத்து அவன் என்ன சொல்கிறான். ஐயா, எவனோ பெரிய ஆள் போல் இருக்கின்றது, இதெல்லாம் இங்கே கெடுதல் பண்ணிக் கொண்டிருக்கின்றான்.

மாட்டைப் பார்த்து, “நீ சொல்லப்பா. அந்தப் பெரிய ஆள் எங்கே இருக்கின்றான்?” என்று கேட்கிறான்.

அந்த மாடு “கம்” என்று இருக்கின்றது.

நான் என்ன செய்தேன்? தனித்துப் போனால் வேலையைக் கண்டுபிடித்துவிடுவான் என்று கூட்டத்தோடு கூட்டமாக மெதுவாகக் கலைந்து போனேன்.

அவனால் ஒன்றும் முடியவில்லை. இந்த ஊரில் எவனோ பெரிய மந்திரவாதி ஒருவன் இருக்கின்றான், அவன் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு இருக்கின்றான், என்று சொல்கிறான்.

ஆகவே, இந்த ஊரில் உள்ளவர்கள் எல்லாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள், ஏதாவது கெடுதல் செய்துவிடுவான். நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான் அவன்.

இந்த மாதிரி நம் குருநாதர் சில நிலைகளில் எப்படி எல்லாம் மனிதர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஏமாற்றுகிறார்கள்? மற்றவர்களுக்கு எப்படித் தொல்லை கொடுக்கிறார்கள்? என்று நேரடி அனுபவமாகக் கொடுத்தார்.

May 29, 2014

வாலியை "மறைந்திருந்து தாக்கினான் இராமன்" ஏன்? - விளக்கம்

எண்ணத்தின் வலிமையான நிலைகளைக் காட்டுவதற்கு இராமாயணத்தில் வாலியைக்காட்டுகின்றனர்.

வாலி வலிமை பெற்றவன். அவனிடம் யார்  நேரிடையாகப்போர் செய்தாலும், அவர்களிடமிருந்து, பாதி பலத்தை வாலி எடுத்துக் கொள்வான் என்று, காவியத்தில் உணர்த்தியுள்ளார்கள்.

உதாரணமாக, ஒரு மனிதன் கோபத்துடனோ அல்லது வேகத்துடனோ வேதனைப்படும் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது,
அவர்களை நேரிடையாகப் பார்த்து,
அவர்கள் சொல்வதைக் கேட்டு அறிந்தால்,
அந்த உணர்வுகள் நம் நல்ல உணர்வுக்குள் இணைந்து,
வேதனையான உணர்வுகள்
நமக்குள் ஆட்சி புரியத் தொடங்கிவிடும். 
நம் நல்ல குணத்தைச் செயலாக்க முடியாது.
பாதி நல்ல குணம் வலு இழக்கப்படுகின்றது.

வாலி என்ற நஞ்சான செயல்களை, நாம் பார்க்கப்படும் பொழுது, அந்த உணர்வுகள் நம்மை வீழ்த்திவிடும். ஆகவே, இதைத் தடுப்பதற்கு என்ன செய்யவேண்டும்?

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகள் சுக்ரீவன்

மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று, இன்று ஒளியின் சரீரமாக விண்ணிலே சுழன்று கொண்டு இருக்கும் துருவ நட்சத்திரம், சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளை, நம் எண்ணத்ததால் அதைக் கவர்ந்து, நுகர்ந்து அந்த உணர்வின் தன்மைகளை, நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்,
எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்
எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும்
என்ற உணர்வை நமது உடலுக்குள் செலுத்த வேண்டும்.

பிறகு, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் வேதனைப்பட்டவர்கள் பெறவேண்டும், அவர்கள் உடல் முழுவதும் படரவேண்டும், அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்  என்று,
நாம் மறைமுகமாக, 
நம் எண்ணத்தின் வலுவின் தன்மை கொண்டு
துருவ நட்சத்திரத்தின் அலைகளைப் பரப்பவேண்டும்.

இதைத்தான் சீதாராமன்,
வாலியை நேரிடையாகப் பார்க்காதபடி,
அதைக் காட்டிலும்  சக்தி வாய்ந்த கணையை,
(துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை)
றைந்திருந்து ஏவினான்,
வாலியின் செயலைத் தடுத்தான்,
என்று இராமாயணத்தில் உணர்த்தினார்கள்.  

May 28, 2014

லாட்ஜுகளில் CAMP போட்டு ஜாதகம் சொல்பவர்களின் உண்மை நிலை

1. செய்வினையை நீக்க யாகம் செய்ய வேண்டும் என்பார்கள்
அதாவது என்ன செய்வார்கள் என்றால், லாட்ஜுகளில் தங்கிக் கொள்வார்கள். லாட்ஜில் தங்கிக் கொண்டு என்ன செய்வார்கள் என்று சொன்னால், இந்தக் கருவித்தையை வாங்கி வைத்திருப்பார்கள்.

இவர்களைப் பார்க்க ஜாதகத்தைக் கொண்டு வருவார்கள்.

பார்த்தவுடனே உங்க வீட்டில் இன்னென்ன நிலைகள் எல்லாம் நடந்தது. இந்த மாதிரி நடந்தது. ஆக, இதற்கு 200 ரூபாய் பீஸ் (FEES) வாங்கிக் கொள்வார்கள். க்யூ வரிசையில் நிறுத்தி இந்த வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.

இங்கே செய்வினையைச் செய்தவுடனே, உங்கள் வீட்டில் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது, அதற்கு இப்படி யாகத்தைச் செய்யவேண்டும் என்று சொல்வார்கள். சொல்லிவிட்டு
அந்த யாகத்தைச் செய்து தருவதற்கு
இரண்டு பேரைத் தயார் செய்து வைத்திருப்பார்கள்.
2. யாகம் செய்வதாகச் சொல்லி (ஏஜெண்டை வைத்து நடத்தி) பணம் சம்பாதிக்கின்றனர்
அப்புறம் அந்த யாகத்தைச் செய்வதற்கு நாலாயிரம், ஐந்தாயிரம் கொடுங்கள் என்று பாவத்தைப் போக்குவதற்கு யாகத்தைச் செய்யச் சொல்வார்கள். ஜாதகக் குறிப்பை வைத்து அதற்கென்று ஏஜெண்டை வைத்துச் செய்கின்றார்கள்.

நான் சொல்லவில்லை. உங்கள் ஜாதகத்தில் நடப்பது இப்படி எல்லாம் இருக்கிறது.

ஆகவே, நல்ல வித்தைகளைத் தெரிந்தவரை வைத்துச் செய்யுங்கள் என்று சொல்கிற மாதிரி சொல்லி, அந்த ஏஜெண்டை வைத்துக் கொண்டே “தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள்”

இப்படிச் சொல்லி, அவர்களை வைத்து அதிலே செய்து பணத்தைப் பங்கு போட்டுக் கொள்வது. இப்படித்தான் சில நிலைகள் இந்த மாதிரித்தான் இன்றும் நடக்கின்றது.

ஏனென்றால், இந்த உலகில் எப்படி எல்லாம் மனிதன் ஏமாற்றப்படுகின்றான்? எப்படி எல்லாம் மனிதர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் நாம் ஏமாந்து கொண்டிருக்கின்றோம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

மனிதன் தான் வாழ்க்கையில் கஷ்டப்படும் பொழுதெல்லாம் நம்மையறியாமல் இந்த சூழ்நிலைகள் எல்லாமே வருகின்றது. இதிலிருந்தெல்லாம் நாம் மாறவேண்டும்.

இதே மாதிரி எத்தனையோ இடங்களில் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைப் போகச் சொல்லுவார். அங்கே தவறு நடக்கும் பொழுது, அங்கே போய் யாம் அவர் சொன்ன நிலைகளைச் செய்வது.

May 27, 2014

செய்வினையிலிருந்து தப்பிப்பது எப்படி...?

1. மந்திரவாதி எப்படி ஜாலம் செய்கின்றான்?
ஒரு கிராமத்தில் ஒருவர் என்ன செய்தார்? குடும்பத்தில் அடிக்கடி கஷ்டம் வருகின்றது, சண்டை வருகின்றது என்று சொன்னவுடனே, உங்கள் வீட்டில் செய்வினை செய்து வைத்திருக்கிறார்கள் என்று வருகின்றார்கள்.

அப்பொழுது குருநாதர் என்ன செய்தார்? அதை அறிந்து கொள்வதற்காக வேண்டி, நீ சாதாரண மனிதனாக அங்கே போ என்று சொல்கின்றார்.

அதே மாதிரி அங்கே போனேன். கிராமவாசி மாதிரி அங்கே போய் நடக்கிற நிகழ்ச்சிகளையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மந்திரவாதி ஒரு விளக்கைப் பொருத்தி வைத்துக் கொண்டு அந்த வீட்டில் மூலை மூலைக்குச் சுற்றுகின்றான். அப்பொழுது ஒரு உரலுக்கு அடியில் இரண்டு முழம் தோண்ட வேண்டும் என்று சொல்லுகின்றான்.

அப்படி என்று சொன்னவுடனே, “ஆ” இங்கே இருக்கின்றது. எனக்கு எப்படியோ மயக்கம் வருகின்றது என்று ஜாலம் செய்தான். அப்புறம் கல்லைத் தூக்கு, அதை விரட்டித் தள்ளு.., அதைத் தள்ளு.., இதைத் தள்ளு.., என்று சொல்லிக் கொண்டு சப்தம் போட்டான்.

அப்புறம் என்ன சொல்கிறான்? தைரியமானவர்கள் யாராவது இரண்டு பேர் இங்கே வாருங்கள். அந்த கிராமவாசி மாதிரியே நானும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். அதே மாதிரி இரண்டு பேர் வந்தார்கள்.

இந்த இடத்தில் குழியைத் தோண்ட வேண்டும்.

“டக்” என்று சப்தம் கேட்டவுடனே. அப்படியே நிறுத்த வேண்டும் என்று சொல்கிறான் மந்திரவாதி.

இவன் என்ன செய்தான். இந்தக் கல்லை (உரலை) அடிக்கவும் இந்தச் சப்தம் கேட்டவுடனே “ம்.., வந்துவிட்டது, ஆ!.., என்று சொல்கின்றான்.

அப்படிச் சொன்னானோ இல்லையோ, உடனே கடப்பாரையை வைத்துக் கொண்டு “ஆட்டைக் கொண்டு வாருங்கள், வெட்டுங்கள், தண்ணீரை ஊற்றுங்கள். ஐயோ! என் உடலெல்லாம் எரிகிறது என்கிறான்.

ஆட்டை வெட்டி இரத்தத்ததை உள்ளே விட்டுவிட்டவுடன் தண்ணீர் நிறைய ஊற்று எரியுதே, எரியுதே என்று இவன் கத்துகின்றான்.

அடுத்து கையை வேறுவிதமாக வைத்துக் கொண்டு, “ஆ..,” கை வர மாட்டேன் என்கிறது., இரண்டு கோழியை எடுங்கள், ஆட்டை வெட்டு என்று சொல்கிறான்.

இவர்களும் தயாராக இருந்து கொண்டு அவன் சொல்வது அனைத்தையும் வெட்டுகின்றார்கள். இதையெல்லாம் பண்ணி முடிந்தவுடன் குழியிலிருந்து ஒரு தகடை எடுக்கிறான்.

இன்னார் பேரை இதிலே (தகட்டிலே) எழுதியிருக்கிறான். இன்னென்ன நிலைகளை எல்லாம் எழுதியிருக்கிறான் இப்படி எல்லாம் செய்திருக்கிறான் பாருங்கள், என்று சொல்லுகின்றான்.

இதிலே உங்கள் தலை முடியெல்லாம் இருக்கின்றது.
எலும்புத் துண்டெல்லாம் இருக்கிறது.
உடனே இதையெல்லாம் எரிக்க வேண்டும்.
அதனால் மண்ணெண்ணையக் கொண்டு வாருங்கள் என்கிறான்.

அதைக் கேட்ட வீட்டுக்காரர்கள் என்ன எண்ணுகிறார்கள்? “அடப்பாவிகளா.., நாங்கள் என்ன செய்தோம்? இந்த மாதிரியெல்லாம் செய்வினை செய்து வைத்திருக்கின்றார்களே” என்று சொல்கிறார்கள்.
2. ஆயிரக் கணக்கில் பணம் பறிக்கின்றார்கள்
உடனே, மந்திரவாதியிடம் இதற்குக் காசு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கேட்கின்றார்கள்.

வெட்டிய இந்த ஐந்தாறு ஆட்டையும், கோழியையும் இவன் எடுத்துக் கொள்கிறான். ஆனால், அதே சமயத்தில் பத்தாயிரம் ரூபாய் கேட்கிறான்.

ஏனென்றால், எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. ஒரு வேளை நான் இறந்துவிட்டால் என் பெண்டு பிள்ளைகளை நான் எப்படிக் காப்பாற்றுவது. அதனாலே பத்தாயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கூசாமல் கேட்கிறான்.

அதை எடுத்து, அந்தப் பணத்தையும் வாங்கிக் கொண்டு போய்விடுகின்றான். அடுத்து இந்த மந்திரவாதி என்ன செய்கிறான்? என்று நான் பின் தொடர்ந்து போய்ப் பார்க்கிறேன்.
3. குருநாதர் செய்த வேலை
இந்த மந்திரவாதி இன்னொரு இடத்தில் அங்கேயும் அதே வேலையை ஆரம்பிக்கின்றான். அப்பொழுது நமது குருநாதர் ஈஸ்வராய குருதேவர் என்ன சொல்கிறார்?

“நீ லேசாகப் போய்விட்டு வாடா” என்று என்னிடம் சொல்கின்றார் குருநாதர். ஆக, இங்கே என்ன நடக்கின்றது?

அங்கே நான் போனவுடனே,
அந்த மந்திரவாதி என்னென்னவோ செய்து பார்க்கிறான்.
ஒன்றும் வரவில்லை. ஆக என்ன சொல்கிறான்?

இங்கே கடும் பூதம் இருக்கிறது, ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்கிறான்.

இதுவெல்லாம் இந்த இயற்கையில் மக்களை இப்படியெல்லாம் ஏமாற்றி மந்திர தந்திரங்களைச் செய்து, எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றார்கள் என்ற வகையில் அனுபவ ரீதியில் தெரிந்துதான் உங்களிடம் சொல்கின்றோம்.

உங்களிடம் இருக்கக்கூடிய அவன் சொன்ன இந்த உணர்வை எடுத்தபின், செய்வினை செய்திருக்கிறான் என்று அவனை எண்ணும்போது, இவனே (வந்த மந்திரவாதியே) உங்களுக்குள் பதிவு செய்கிறான்.

ஆகவே, இத்தகைய நிலைகளில் நீங்கள் சிக்காதீர்கள்.

May 25, 2014

பேயை ஒட்டுவதாகச் சொல்லி எப்படி ஏமாற்றுகின்றார்கள்?

1. ஆடு கோழிகளை வாங்கிக் கொள்கின்றனர்
ஒரு மந்திரவாதி, அவன் என்ன செய்தான்? நான் பேயோடு பேசுகின்றேன் என்று சொல்லிக் கொண்டு ஆடு, கோழி எல்லாம் காவு கொடுத்து சுடுகாட்டில் போய் “பேயை அடக்குகிறேன்., பாருங்கள்” என்றான்.

அப்படிச் சொல்லி குழியைத் தோண்டச் செய்தான். இரவு நேரத்தில் பெட்ரமாஸ் லைட் கொண்டு வைத்து, கோழி, ஆடு எல்லாம் கொண்டு வரச் சொல்லிவிட்டான்.

குழியைத் தோண்டும் பொழுது, “அது கேட்கும்”. அப்பொழுது உடனே நீங்கள் கோழியைக் கொடுத்துவிட வேண்டும் என்றான்.

குழியைத் தோண்டுகின்றார்கள்.

திடீரென்று, மந்திரவாதி பேய் மாதிரி கத்துகிறான். “ம்.., அடக்கிப்புடும், அய்யய்யோ.., என் கழுத்தை நெரிக்கிறதே… ஒரு ஆடு கொண்டாங்க, ஆட்டை வெட்டுங்கள்” என்று கத்துகின்றான்.

வெட்டியவுடனே, “உட்டுரும், போயிரும்” என்கிறான்.

இதெல்லாம் என்ன? எந்த வகையிலே என்ன செய்கின்றான் என்று பார்ப்பதற்காக நான் அங்கே போனேன்.
போய் அங்கே மறைந்திருந்தேன்.
முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மந்திரவாதி என்ன செய்கின்றான்? திரும்பத் திரும்ப ஆட்டைக் கொண்டு வா, கோழியைக் கொண்டு வா என்கிறான். இதெல்லாம் நடந்த பிற்பாடு, “ஆகிவிட்டது” என்று சொல்லிவிட்டு “இதைப் பகைத்துக் கொண்டேன்” என்கிறான்.
2. பாஸ்பரசைக் காண்பித்து, பேய் ஓடிவிட்டதாகக் காண்பிக்கின்றான்
அடுத்து என்ன செய்கின்றான் தெரியுமா! ஒடைக்காய் இருக்கிறது அல்லவா! அதற்குள் பாஸ்பரஸ் (WHITE PHOSPHORUS) போட்டு வைத்திருக்கின்றான் (மற்றவர்களுக்குத் தெரியாமல்).

அதை எடுத்துப் போட்டவுடனே, “போகுது பார், போகுது பார்” என்று காண்பிக்கின்றான். ஏனென்றால், பாஸ்பரஸ் போட்டால் அதிலிருந்து வெண்புகையாக வெளிச்சமாக வரும்.
 
அதைக் காண்பித்து, ஓடியே போய்விட்டது, தப்பித்து ஓடியே போய்விட்டது, பேய் ஓடுது பார்..!” என்கிறான் மந்திரவாதி.

ஆக, இந்த மாதிரி சமுதாயத்தில் மேஜிக் வேலை பார்த்து காசுக்காக வேண்டி இப்படி நாட்டுக்குள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால், மக்களுக்குக் கஷ்டம் வந்தது என்றால்,
“அங்கே போ, இங்கே போ
அதைச் செய், இதைச் செய்” என்று சொல்லி
ஏமாற்றித்தான் காசை வாங்குகின்றார்களே தவிர,

அந்த உண்மையின் நிலையில் ஏதாவது செய்கின்றார்களா என்றால் ஒன்றுமே இல்லை.

May 24, 2014

செய்வினையை எடுப்பதாகச் சொல்லி எப்படி ஏமாற்றுகின்றார்கள்?

1. யாம் கொடுத்த அருள் ஞான சக்கரத்தை எடுக்கச் சொல்கிறான் மந்திரவாதி
ஒரு சமயம் என்ன ஆனது? மங்களூரில் ஒரு மந்திரவாதி இருக்கின்றான். நம் சொந்தக்காரர் ஒருவர் கோயம்புத்தூரில் பாத்திரம் செய்யக்கூடியவர்.

இவர் பாத்திரம் செய்யும் இடத்திற்குப் பக்கத்தில், காணாமல் போன ஒரு பெண் குழந்தைக் கண்டுபிடித்து, அதைக் கூட்டிக் கொண்டு வருகிறேன் என்று மந்திரவாதி சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

அதைக் கேள்விப்பட்ட இவர், தன்னுடைய கஷ்டத்தை நீக்க மந்திரவாதியைக் கேட்கும் பொழுது அவன் இவர் பாத்திரக் கடையில் வந்து பார்த்து,
பாத்திரம் செய்யக் கூடிய மிஷினுக்கு அடியில்
எந்திரத் தகடைப் பதித்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறான்.

அப்பொழுது நான் யாருக்கும் தெரியாமல் அங்கே வந்தேன்.

இதற்கு முதலில், முன்னாடி அவர் எம்மிடம் கஷ்டம் என்றும், வீட்டில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது, ஏன் என்று தெரியவில்லை என்று சொன்னார். என்னிடமிருந்து (ஞானகுரு) ஒரு சக்கரத்தை வாங்கி அவர் பாத்திரக் கடையில் மாட்டி வைத்திருந்தார்.

நான் கொல்லூரில் இருக்கும் பொழுது ஜெபம் பண்ணி அதை அவரிடம் கொடுத்து, நீ இந்த மாதிரி சொல்லி பூஜித்துக் கொண்டு வா என்று பாத்திர வியாபாரியிடம் கொடுத்தது.

இந்த மந்திரவாதி என்ன சொல்கிறான்?

நான் கொடுத்த சக்கரத்தை கடையில் அவர் மாட்டியிருப்பதைக் காட்டி, “இதிலேதான் எல்லாக் கெடுதலும் இருக்கின்றது” என்று அதைத் தூக்கி எடுத்து வைத்துவிட்டான்.

நான் இந்த உணர்வைத் தெரிந்துதான் இங்கே கடைக்குள் வருகின்றேன்.
2. சோடா பாட்டிலில் மண்ணை அள்ளிப் போட்டு ஏமாற்றுகின்றான்
அந்த மந்திரவாதி அங்கே ஒரு கடப்பாரையை வைக்கின்றான். ஒரு பாட்டில் வைத்திருக்கின்றான். அந்த பாட்டிலில் இந்த மண்ணை அள்ளிப் போட்டவுடன் “குபு.., குபு..,” என்று பொங்கி வருகிறது. பாருங்கள் எப்படியெல்லாம் பண்ணியிருக்கிறார்கள் என்று அவரிடம் சொல்கின்றான்.

ஏனென்றால், அந்த பாட்டிலில்
சோடாவை ஊற்றி வைத்திருக்கின்றான்.
மண்ணைப் போட்டால் தன்னாலே பொங்கி வரும்.
ஆக, வீட்டிலிருப்பவர்களுக்கு என்ன தெரியும்?

இதைப் பண்ணி முடித்தவுடன் அடுத்து என்ன செய்கிறான்? கடப்பாரை முனையை வைத்துக் கொண்டு, “நீ குத்து., குத்து.,” என்று சொல்லி அழுத்துகிறான் மந்திரவாதி.

“ம்..,” என்றவுடனே, உங்கள் வீட்டில் செய்வினை செய்திருக்கிறார்கள். மிஷினுக்கு அடியில் ஒரு சக்கரத்தை வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்கிறது. நீங்கள் அதை எடுக்க வேண்டும். அதற்கு இரண்டாயிரம் ரூபாய் ஆகும் என்றான்.

நீங்களே தோண்டுங்கள் என்கிறார்.

மந்திரவாதி தோண்டியவுடனே, அதே மாதிரி சக்கரம் மிஷினுக்கு அடியில் இருக்கின்றது.

“அடப்பாவிகளா, இந்த மாதிரி செய்து வைத்திருக்கிறார்களே” என்கிறார்.

மிஷினுக்கு அடியில் இந்தச் சக்கரம் இருந்ததனால்தான் உங்களுக்குக் கஷ்டம். அதனால், இந்தச் சக்கரத்தை மூன்றாவது வீட்டில் கொண்டு போய் அவர்களுக்குத் தெரியாமல் வைத்துவிடுங்கள். இந்தக் கஷ்டம் அவர்களுக்குப் போகட்டும் என்கிறான் மந்திரவாதி.
3. என்னப் பார்த்தவுடன் மந்திரவாதி மயங்கி விழுந்தான்
அப்பொழுது அந்தச் சக்கரத்தை எடுத்தவுடனே நான் என்ன செய்தேன்? திடீரென்று அங்கே உள்ளே சென்றேன். என்னப்பா சக்கரம் எங்கே? என்றேன்.

இவ்வளவையும் சொன்னானே அந்த மந்திரவாதி.., என்னைப் பார்த்தவுடனே “ஆ..,” என்று மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டான்.

அப்புறம் எழுந்து, “என்னை மன்னித்துவிடுங்கள்” என்றான். வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுத்தான். யாம் சுற்றுப்பயணத்தின் போது  நடந்தது இந்த நிகழ்ச்சி.

May 23, 2014

மந்திரத்தை நம்பலாமா?

1. உங்கள் வீட்டில் செய்வினை செய்திருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு உள்ளே வருவார்கள்
இப்பொழுது சாதாரணமாக ரோட்டில் போகின்றவன், டொய்ங், டொய்ங் என்று வாத்தியத்தை வாசித்துக் கொண்டு வருவான். என்ன என்று நாம் அவனைக் கூர்ந்து கவனித்தால் என்ன செய்வான் தெரியுமா?

ஐயா வீட்டில் இந்த மாதிரி கஷ்டம் இருக்கிறது.
உங்கள் வீட்டில் பொருள் வைத்திருந்தீர்கள்,
அது காணாமல் போய்விட்டது.
உங்கள் வீட்டில் செய்வினை செய்திருக்கின்றார்கள்
என்றெல்லாம் சொல்வான்.

நாம் என்ன செய்வோம்? இங்கே வாப்பா என்று அவனைக் கூப்பிடுவோம்.

அவன் என்ன செய்வான்? நம் உடலில் உள்ள உணர்வைக் கவர்ந்து, எல்லாவற்றையும் எடுத்துச் சொல்வான்.
                                
உங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்கள், சொந்தக்காரர்கள் இந்த மாதிரி எல்லாம் கெடுதல் செய்து வைத்திருக்கின்றார்கள் என்றெல்லாம் சொல்வான்.

நான் எல்லா உண்மைகளையும் சொல்கின்றேன். நிச்சயமாக நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது. எப்படியென்றால் நான் சொல்வேன் என்பான். பிறகு என்ன செய்வான் தெரியுமா?

ஒரு பொம்மையை வைத்திருப்பான். அதில் ஒரு ஆணியை வைத்து அடிப்பான். அடித்துக் கொண்டே சத்தியமாகச் சொல்டு ஒவ்வொருவரும் நீங்கள் எடுத்து இ. உண்மையை வெளியில் சொன்னால் நீ என்ன செய்வாய்? என்று பொம்மையைப் பார்த்துக் கேட்பான். ஜக்கம்மா!.., மண்டையைப் பிளந்துவிடு என்பான்.

இப்படியெல்லாம் சொல்லி, யாரிடமும் சொல்ல மாட்டீர்கள், நான் சொல்லட்டுமா என்பான்.

நாம் பயத்துடன் சரி என்போம்.

உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் அல்லது சொந்தக்காரர் இந்த மாதிரி செய்வினை செய்து வைத்திருக்கின்றார்கள். அதனால் உங்கள் குடும்பத்தில் தொல்லை வருகின்றது. நீங்கள் செய்யும் வியாபாரமெல்லாம் மந்தமாகின்றது என்று சொல்வான்.

அப்படியே புட்டுப் புட்டு வைத்துவிட்டானே என்று நாம் நினைப்போம்.

அடுத்து இன்னொன்றும் சொல்வான். உங்கள் வீட்டுக்குள் இந்த இடத்தில் அடுக்குப் பானைக்குள் இவ்வளவு பணம் வைத்திருக்கின்றீர்கள் என்பான். அந்த ரூபாய் நோட்டில் இன்ன நம்பர் கூட போட்டிருக்கின்றது என்பான்.

அடப் பாவி, இதையெல்லாம் சொல்கிறானே என்று எல்லாம் உண்மை என்று நம்புவோம்.

அப்பொழுது முழுமையாக நாம் நம்பியவுடன் என்ன செய்வான்?
2. நம்முடைய பழைய துணிகளைக் கேட்டு வாங்கிக் கொள்வார்கள்
கொஞ்சம் பழைய துணி கொண்டு வாருங்கள் என்பான். ஏனென்றால், நம் உடலில் போட்டிருக்கும் துணியும், பாத மண்ணும் எடுத்துக் கொண்டால், நமது ஈர்ப்பு உணர்வுகள் இந்த மண்ணிற்குள் இருக்கின்றது.

உடலிலே உள்ள மணம் அந்தத் துணியில் இருக்கின்றது. தலை முடியில் உச்சியின் தன்மை சிந்திக்கும் தன்மை, ஆக இந்த மூன்றையும் எடுத்துக் கொண்டு தான் இந்த குடுகுடுப்பைக்காரர்கள் சொல்வர்கள்.

அப்புறம் ஒரு படி அரிசி வேண்டும் என்பான். கடைசியாக ஒரு கருப்புத் துணி கொண்டு வந்தால் பரவாயில்லை என்பான்.

ஏனென்றால், கருப்பு அது பாவத்தின் நிலை. அதைக் கொண்டு மூடவேண்டும் என்று சொல்வான். அப்புறம் உங்கள் வீட்டில் இன்னொரு பழைய துணி இருக்குமே என்பான். அது இன்ன மாதிரி கலரில் ஐந்து துணி வேண்டும் என்பான். உங்கள் வீட்டில் இந்த மாதிரி ஒரு தலை முடி இருக்கும் பாருங்கள். அதை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்பான்.

ஆக, வெளியிலே இன்னார் இதைச் சொன்னதால் இந்த மாதிரி ஆகிவிட்டது என்று சொல்லிக் கொண்டு என்ன செய்வான்? ஐந்து ரூபாய், பத்து ரூபாய், நூறு ரூபாய் என்று சொல்லிக் கொண்டே ஆயிரம் ரூபாய் கூட வாங்கிவிடுவான்.

எல்லாவற்றையும் எடுத்து பந்து போல சுருட்டிக் கொள்வான். இதில் தீய வினைகள் எல்லாம் அடங்கியிருக்கிறது என்பான்.
அதைக் கொண்டு போய்
சுடுகாட்டில் இராத்திரி 12 மணிக்குப் போடவேண்டும்.

அங்கே உள்ள கிணற்றில் போடும் பொழுது, “பூதம் திடீரென்று பாயும்’ என்று பயத்தை ஊட்டுவான். நீங்கள் போடுங்கள், நான் வரட்டுமா என்பான், நடந்த நிகழ்ச்சி இது.

நாம் என்ன செய்வோம்? பயந்து போய் நீங்களே கொண்டு போய் போடுங்கள் என்போம்.

அதற்கு என்ன செய்வான்? இத்தனையும் நான் செய்ய வேண்டுமென்றால், என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். நான் திடீரென்று போய்விட்டால் என்ன செய்வது? அதனால், இன்னும் கொஞ்சம் சேர்த்து, ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்தால் பரவாயில்லை என்று சொல்லி வாங்கிக் கொள்வான்.

பின், நடந்தது எதையும் சத்தியமாக யாரிடமும் சொல்ல மாட்டீர்கள் அல்லவா? சொன்னால் என்ன ஆகும்? (உடனே ஆணியை எடுத்து அடிப்பான்).

ஒரு (முதல்) வீட்டில் இதையெல்லாம் செய்வான். இவ்வளவு நடந்த பிறகு என்ன செய்வான் தெரியுமா?
3. முதல் வீட்டில் சொன்னது போன்றே அடுத்த வீட்டிலும் சொல்லி ஏமாற்றுவார்கள்
அடுத்து, பக்கத்து வீட்டில் போய் இதே மாதிரியே சொல்லி (அதாவது பக்கத்து வீட்டுக்காரர் செய்வினை செய்திருக்கிறார்), அங்கேயும் முதல் வீட்டில் வாங்கியதை விட அதிகமாகவே பணத்தை வாங்குகின்றான். ஆனால்,
முதல் வீட்டில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
இதெல்லாம் நடந்த நிகழ்ச்சி.
ஊருக்குள் இது மாதிரி நடந்து கொண்டிருக்கின்றது.

குருநாதர் இவர்கள் எல்லாம் என்ன செய்கின்றார்கள் என்று அறிவதற்காக வேண்டி, என்னை இப்படி வேஷம் போடச் சொன்னார். நானும் ஒரு பிச்சைக்காரன் போல போகின்றது. ஒரு அழுக்குத் துண்டைப் போட்டுக் கொண்டுதான் செல்வது.

ஏனென்றால், இதையெல்லாம் ன்றைக்கு அரசர்கள் கிரிபவனம் வருவார்கள். அதே மாதிரி ஒரு டென்டைப் போட்டுக் கொண்டு ஜோதிடம் என்ற பெயரில் காடாறு மாதம், நாடாறு மாதம் என்று இந்த மாதிரி ஆள்கள் (மந்திரவாதிகள்) ஊருக்குள் வருவார்கள்.

ஆக, நானும் அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று அவர்களுக்குத் தெரியாமலேயே, ஒரு பைத்தியக்காரன் மாதிரி இருந்து
அவர்கள் என்ன செய்கின்றார்கள்?
ஏது செய்கின்றார்கள் என்று பார்த்துக் கொண்டு வந்தது.

தொடர்ந்து பார்த்துக் கொண்டே வந்தால், ஒரு வீட்டில் ஜோதிடம் சொல்கிறான் என்றால், அடுத்து பக்கத்து வீட்டில் இன்னும் கொஞ்சம் சொல்லி பணத்தை அதிகமாகவே வாங்கிக் கொள்கின்றான்.

இப்படியெல்லாம் ஊருக்குள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. தான் பிழைப்பதற்காக இப்படிச் செய்கின்றார்கள்.