ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 20, 2018

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் “மகா மகான்களாக” நீங்கள் வரவேண்டும்…!

பிறருடைய பிணிகளிலிருந்து தீமைகளிலிருந்து அவர்களை விடுபடச் செய்யும் மகான்களாக நீங்கள் வளர வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் நம் குரு காட்டிய அருள் வழியில்… அந்த மகானாக மாறியே ஆக வேண்டும்.

இன்று விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வரப்படும் போது இது செய்யப்பட வேண்டும்.
1.உடலை விட்டு ஒருவர் போனபின்
2.அவரை நான் மகானாக ஆக்கினேன் என்று அந்த நிலைக்குப் போய்விடாதீர்கள்.
3.அவர் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று
4.அந்த உணர்வின் தன்மையைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
5.“நான் செய்தேன்…!” என்ற உணர்வு வந்து விட்டால் அகம் வந்துவிடும்.
இந்த அகத்தின் தன்மை துணிந்து விட்டால் இந்த உணர்வு கொண்டு “நான் இதைச் செயலாக்குகிறேன் பார்…!” என்று அகத்துடன் கூறுவோம்.

இந்த உணர்வின் தன்மை உடலில் உள்ள அணுக்களில் எதிர் நிலையை உருவாக்கும். பின் “உங்கள் வாக்குப் பலிக்காது..!”.

துன்பம் கஷ்டம் நஷ்டம் என்று கேட்டறியும் போதெல்லாம் அடுத்த நிமிடம் உங்களுக்குக் கொடுத்த ஆற்றலின் துணை கொண்டு ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

அருள் மகரிஷியின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்ற உணர்வினை உள் செலுத்தி அதைத் தடுத்துக் கொள்ளுங்கள்.

கஷ்டப்படுபவர்களிடமும் நஷ்டம் அடைந்தவர்களிட்ம் சொல்லி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை எண்ணி ஏங்கி எடுக்கச் சொல்லுங்கள். அப்படி எடுப்பதால்
1.குடும்பத்திலோ வியாபாரத்திலோ அது எப்படி இருக்கிறது என்ற தெளிந்த சிந்தனை வரும்.
2.அதை நீக்குவதற்குண்டான தக்க உபாயங்கள் வரும்.
3.உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலம் பெறுவர்.
4.உங்கள் வாடிக்கையாளர் நலம் பெறுவர்… பொருளைப் பயன்படுத்துவோர் நலம் பெறுவர்.
5.உங்கள் வியாபாரம் பெருகும். அருள் ஞானம் வளரும்.
6.அருள் வழியில் மகிழ்ச்சி பெறுவீர்கள் என்ற
7.உங்கள் வாக்கை அவர்களுக்குப் பதிவு செய்யுங்கள்.
இதே போன்று அவர்களையும் அதன் வழி செயல்படுத்தும்படிச் செய்யுங்கள்.

சிறிது காலம் செய்தால் அவர் உணர்வுகள் அங்கே விளைகின்றது. அவர் இந்த நல்ல நினைவாற்றலுடன் ஒரு பொருளை எடுத்துக் கொடுத்தால் மற்றவர்களுக்கும் நல்லதாகிறது.

அதே சமயத்தில் தன் வியாபாரத்திற்காக பொருளை வாங்கச் சென்றாலும் நல்ல பொருளைத் தரம் பார்த்து வாங்கும் நிலையும்  வருகிறது.
வேதனையான எண்ணம் கொண்டு
1.எனக்குக் கஷ்டம்… நஷ்டம்… என்ற உணர்வுடன் தொடர்பு கொண்டு சென்றால்
2.இந்த உணர்வின் அலைகள் ஒரு பொருளைத் தரம் பார்க்க விடாது.
3.தரம் இல்லாத பொருளை வாங்கி வருவோம்.
4.வியாபாரம் ஆகவில்லை… என்னை ஏமாற்றி விட்டான்…! என்று சொல்லுவோம்.

இந்த உணர்வுக்கொப்பத் தான் அந்த அறிவின் தன்மை இயக்கும். அந்தப் பொருளையும் நமக்குக் கண் உணர்த்தும்.

கோபமாக இருக்கும் போது பாருங்கள் கண்கள் சிவக்கும். வேதனையான சமயத்தில் நீல நிறமாக இருளடைந்தது போன்று இருக்கும். அதனால் உடல் சோர்வடைவதையும் பார்க்கலாம்.

நினைவின் தன்மை கொண்டு கண்களால் உற்றுப் பார்த்துத்தான் பொருளைத் தேர்ந்தெடுக்கிறோம். அதைத் தான் கீதையில், “ நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகிறாய்” என்று சொன்னார்கள்.\

தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை கொண்டு சம்பாரிக்க எண்ணி பொருளைச் சேமிக்க விரும்புகின்றோம். அதற்குண்டான வழியில் நாம் சொல்லைச் சொல்லும் போது மற்றவர்கள் கேட்டுணரும் போது சிலர் பகைமையாக்கிக் கொள்வார்கள்.

பகைமை கொண்ட உணர்வை அவர்கள் எடுத்து விட்டால் நாம் செய்யும் காரியத்திற்குத் தடை விதிப்பார். அவர் சிக்கல்களை நமக்கு ஏற்படுத்துவார்.
1.அவர் தெரியாமல் செய்தாலும் அல்லது ஏமாற்றிச் சொன்னாலும் கூட
2.இந்த அருள் உணர்வுகள் கலந்தபின் ஏமாற்றுகிறார் என்று நமக்குத் தெரியும்.
3.ஏமாற்றும் உணர்வு வரும் போது அவனும் ஏமாறுவான்.
4.ஏமாற்றும் தன்மை வரும் போது சோர்வு வரும்.
5.சோர்வு வரும் போது வளரும் தன்மை குறைவு.
6.வளரும் தன்மை குறையும் போது வேதனை.
7.வேதனை என்ற உணர்வு வரும் போது நோய்.
இதைப் போன்ற நிலைகள் மனிதர்களை மாற்றி அமைத்து விடுகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் நடந்து மகா மகான்களாக நீங்கள் ஆக வேண்டும். விஞ்ஞான வழியில் வந்த அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து மக்களை மீட்க வேண்டும்.

அஞ்ஞான வாழ்க்கையாக இயக்கச் செய்யும் இந்தக் காற்று மண்டலத்தையே நம்மால் மாற்ற முடியும். அஞ்ஞான வாழ்க்கையாக இயக்கும் நிலை இந்தக் காற்றில் இருந்தாலும் அதை நுகராது தடுக்கும் தன்மையும் நமக்கு வரும்.
அனைவரும் காலை துருவ தியானத்தில் இதைப் போல செய்து அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணும் போது அனைவருக்கும் அருள் பாலிக்கும் உணர்வுகள் கிடைக்கிறது.

1.அடிக்கடி ஆங்காங்கு கூட்டு தியானங்கள் செய்யுங்கள்.
2.தியானம் செய்த பின் அந்த குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தில் வெளியிட்ட நூல்களைப் படித்துக் கொள்ளுங்கள்
4.உங்களால் சொல்ல முடியவில்லை என்றாலும் அந்த நூல்களை மற்றவர்களுக்குப் படித்துக் காட்டுங்கள்.
5.படிக்கும் போது மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அங்கே சக்தி வாய்ந்த அலைகளாகப் படருகின்றது.

ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதிக்கும் நிலையும் உயிரால் உருவாக்கப்பட்ட உடலை ஆலயமாகவும் மதிக்க முடிகிறது. மனிதனாக உருவாக்கிய நற்குணங்களைக் காக்கும் நிலையும் வருகிறது.

பிறரைக் காக்க வேண்டும் என்று எண்ணும் போது அந்த உணர்வின் தன்மை நமக்குள்ளேயே வளருகின்றது.

நம் உடலைக் காக்கின்றோம். உயிரியான ஈசனை உணர்கின்றோம். மெய் உணர்வைப் பெருக்குகின்றோம். அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து மெய் ஞான வாழ்க்கைக்குச் செல்லுகின்றோம்.

விஞ்ஞான உலகத்தால் அஞ்ஞானமாக வாழ்ந்து அசுர உணர்வு கொண்டு மதத்திற்கு மதம் இனத்திற்கு இனம் அசுரர்களாக மாறும் நிலை வந்து விட்டது.

இதனின் நிலைகளை உணர்த்தும் விதமாக – நம் உடலுக்குள் அடிக்கடி தீங்கான நிலைகளை எடுக்கும் போது
1.இந்திரலோகத்துக்குள் அசுரன் புகுந்து
2.எங்களைச் செயலற்றதாக மாற்றுகின்றான் என்ற காவியத் தொகுப்பே உண்டு,

வேதனை வெறுப்பு கோபம் என்ற நிலைகளை வளர்த்து விட்டால் நல்ல காரியத்தைத் தடுக்கும் நிலைகள் நம் உடலுக்குள் வருகிறதென்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காட்டினார்கள்.

மனித உடலான இந்திரலோகத்தில் பகைமை உணர்வுகள் நுழைய இடம் கொடுத்தால் அந்தப் பகைமை உணர்வுள் ஆட்கொண்டு அது நம்மைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

பழி தீர்க்க வேண்டும் என்ற அசுர உணர்வுகளாக மாற்றுகின்றது. அசுரனாக மாறி அசுர செயல்களைச் செய்தால் பிறிதொன்றைக் கொன்று உணவாக உட்கொள்ளும் புலியாகவோ நாயாகவோ நரியாகவோ மாற்றுகின்றது.

இது போன்ற அசுர உணர்வுகளிலிருந்து மாறி அருள் ஞானியின் உணர்வுகளை எடுத்து அனைவரும் மெய் ஞான வாழ்க்கை பெற வேண்டும் என்றும் மெய் ஞானியின் உணர்வுகள் அனவருக்குக்குள்ளும் வளர வேண்டும் என்றும் அவர் உடலுக்குள் அறியாது சேர்ந்த தீமையின் நிலைகள் நீங்க வேண்டும் என்றும் ஆங்காங்கு கூட்டு தியானங்களை ஏற்படுத்துங்கள்.

ஒருவர் துன்பப்பட்டால் தனித்து இருப்பதற்கு மாறாக அந்தக் குடும்பத்தில் ஒன்று சேர்ந்து கூட்டுத் தியானத்தை மேற்கொண்டு ஒரு கலசத்தைத் வையுங்கள்.

1.கலசத்திற்கு முன் அமர்ந்து 48 நாள் இந்த நினைவை நீங்கள் கொள்ளுங்கள் என்று சொல்வோம்.
2.அதை வைத்து அவர் தொடரும் போது சிறுகச் சிறுக அவர் குடும்பத்தில் உள்ள குறைகள் நீங்கும்.
3.நினைவாற்றலைப் பெருக்கிக் கொண்டிருக்கும் அருள் உணர்வுகள் வளரும்.
4.பகைமை உணர்வுக்கு இடம் கொடுக்காமல் அருள் வழியில் வளரச் செய்யும்.

இந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது பகைமையற்ற வாழ்க்கையை நமக்குள் வாழச் செய்கிறது.

நீங்கள் எடுப்பது மகரிஷிகளின் குரு அருள். உங்கள் சொல்லையும் செயலையும் பிறர் நுகரும் போது நீங்கள் அங்கு ஈசனாக உருவாக்க வேண்டும்.

இதன் வழி நாம் பக்குவப்பட்டு உலகைக் காத்திடும் நிலை வர வேண்டும். வருவீர்கள்…! நீங்கள் ஒவ்வொருவரும் மகானே…!