ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 28, 2018

போக்கிரித்தனம் செய்பவர்களிடமிருந்து நாம் விடுபட என்ன செய்ய வேண்டும்...?

சந்தர்ப்பம் தெருவில் எத்தனையோ பேர் சண்டை போடுவதைப் பார்ப்போம். அதிலே போக்கிரியைப் பார்த்து இருப்போம். கடை வீதியில் அவன் ரௌடித்தனம் செய்து இருப்பான். அதைப் பதிவு செய்து இருப்போம்.

இந்த மாதிரி உணர்வுகளெல்லாம் நமக்குள் வந்தவுடனே அந்த ரௌடித்தனம் செய்தவனைப் பார்த்து “இவனையெல்லாம் அடக்க வேண்டும்” என்று நினைத்து வைத்து இருப்போம்.

இந்த மாதிரி உணர்வுகள் வரப்படும் போது அடுத்தாற்போல் சாதாரணமாக ஒருவன் ஏதாவது தப்பு செய்தால் நாம் என்ன சொல்வோம்?
1.“உன்னையெல்லாம் உதைத்தால் தான்டா சரி…!” என்று
2.அவன் (ரௌடியின்) உணர்வை இங்கே எடுத்து
3.இவனை உதைக்க வேண்டும் என்று வரும்.
4.தப்பு செய்பவனுக்குப் புத்தி சொல்வதை விட்டு விடுவோம்.

இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாமலே (போக்கிரியின்) உணர்வுகள் பதிந்தது மற்றவர்கள் தவறு செய்யப்போகும் போது அவன் தவறு செய்த இந்த உணர்வுகள் நம்மை இயக்கி இவனைக் குற்றவாளியாக ஆக்குகின்றது.

ஆனால் அவன் செய்த தவறைத் திருத்தும் உணர்வுகள் நமக்குள் வராது. இதைப் போன்ற நிலையில் இருந்து தான் தவறு வருகின்றது.

அதற்காகத்தான் ஞானிகள் “சதுர்த்தி…” என்று காட்டியுள்ளார்கள். காலையில் இருந்து இரவு வரையிலும் நாம் பார்த்த நிலைகளில் இந்த மாதிரி வினைகள் நமக்குள் வளராது அதைத் தடுத்து நிறுத்துதல் வேண்டும். சதுர்த்தி என்றால் நிறுத்துதல் என்று பொருள்
1.நம் தெரு முழுவதும் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும்.
2.எல்லோருக்கும் ஒருவருக்கொருவர் நட்பின் தன்மை வளர வேண்டும்.
3.நம் ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
4.நம் தெரு ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
5.ஒற்றுமையாக வாழும் அந்தக் சக்தி இங்கு படர வேண்டும்.

ஒவ்வொரு ஊரில் இருக்கின்றவர்களும் இந்த மாதிரி எண்ணிப் பாருங்கள். அங்கு மத பேதங்களோ இன பேதங்களோ இது வராது.

ஒருவருக்கொருவர் வெறுப்பான உணர்வுகள் வளர்க்கப்படும் போது ஒருவனை “மிரட்டிப் பழகி விட்டான்” என்றால் அதே நிலை வரும்.

அப்போது அவனைப் பார்க்கும் போதெல்லாம் “மிரட்டும் உணர்வுகள்” நமக்குள் வருகின்றது. அப்போது அதே செயலை “நாமும்…” செய்ய ஆரம்பிப்போம்.

ஒரு பாலுக்குள் காரம் பட்டால் காரத்தின் நிலைகள் செயல்படுவது போல நம்முடைய செயலும் உருவாகி விடும்.

ஆகையினாலே நாம் இதிலிருந்து நாம் ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி நாம் விண்ணுலகின் ஆற்றலை எடுத்து இங்கே பெற வேண்டும் என்று நாம் செலுத்த வேண்டும்.

நம் தெருவும் ஊரும் மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணா வேண்டும். அந்தக் குற்றவாளியை எண்ணவே வேண்டாம்.

1.ஊரில் வாழ்கின்றவர்கள் எல்லோரும் அந்த மகரிஷிகள் அருள்சக்தி பெற வேண்டும்.
2.அங்கே மகரிஷிகளின் அருள் சக்தியால் நல்ல எண்ணங்கள் வளர வேண்டும்.
3.ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று
நமக்குள் இதைத்தான் பதிவு செய்ய வேண்டும்.

தீமைகளைத் தடுத்து நிறுத்துதல் – சதுர்த்தி செய்ய வேண்டும். அந்த ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.