ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 30, 2018

அகஸ்தியனுடன் ஐக்கியமாவது தான் நம் வேலையே...!


நமது குருநாதர் சாதாரணமாக... “ஒரு பைத்தியக்காரர்...!” போலத்தான் இருந்தார். ஆனால் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுத்துக் கொடுப்பார்.  
1.நம்மையும் ஒரு பைத்தியக்காரனாக ஆக்கிவிடுவார்.
2.கடைசியில் அதைத் தெளிய வைப்பார்.

ஆரம்பத்தில் என்னை (ஞானகுரு) வீட்டுப் பக்கம் உள்ள சாக்கடை அருகில் அமரச் செய்தார். அவரும் அங்கே உட்கார்ந்து கொண்டு காப்பி வாங்கிட்டு வரச் சொல்லி அந்தக் காப்பியில் சாக்கடையிலிருந்து  அள்ளிப் போட்டார். “இதைக் குடிடா...! என்கிறார்.

அன்றைய காலத்தில் கழிவு அறை கிடையாது. எல்லாம் சாக்கடைக்குள் தான் வரும் .அதை எடுத்துப் போட்டுச் சாப்பிடுடா...! என்கிறார். நான் எப்படிச் சாப்பிடுவது...?

தெருவில் நடந்து போகும் தெரிந்தவர்கள் அனைவரும் நல்லய்ய நாயக்கர் மருமகனுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது நல்லய்ய நாயக்கர் ஒரு பிள்ளையை வைத்து இருந்தார். அதைக் கட்டிக் கொடுத்தார். அது பைத்தியத்துடன் சேர்ந்து “பைத்தியமாக இருக்கிறது...!” என்று என் காதில கேட்கிற மாதிரி பேசிக் கொண்டு போகிறார்கள்.


என் மனைவியின் அம்மாவோ எம்மைக் கண்டபடி பேசுவார்கள் காதில் கேட்கும்படியாகப் பயங்கரமாக பேசுவார். இத்தனையும் சகித்துக் கொண்டு இருக்க வேண்டும். அத்தனை தாக்குதலுக்கு எல்லாரையும் பேச வைத்து அதில் என் மனம் நொறுங்காதபடி இத்தனை வேலைகளையும் செய்கிறார் குருநாதர்.

குருநாதர் திடீரென்று என்ன செய்வார்...? அப்பொழுது ஊருக்குள் டவுன் பஸ் போகும்.
1.நடு ரோட்டில் உட்கார்ந்து கொண்டு “கோடு போடுடா...!” என்பார்.
2.இந்தப் பக்கம் பஸ் போகக்கூடாது என்று எழுது... என்பார். “எழுதுடா...!” என்பார்.

அங்கே இருக்கிறவர்கள் எல்லாம் அட என்னய்யா...? இது மாதிரிச் செய்கிறாய்... நல்லைய்ய நாயக்கர் மருமகன் இப்படியா..? கடை வீதியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் என்னைத் தெரியும்.

குருநாதரைப் பார்த்து “சாமி......! என்றேன் நான்,

நான் சொன்னதைச் செய்டா... நான் சொல்வதை எல்லாம் சரி செய்கிறேன் என்று சொன்னாய்....! அல்லவா. அதன்படிச் செய்... என்கிறார்.

ஏனென்றால் ஆரம்பத்தில் என் மனைவி இறக்கும் தருவாயிலிருந்து காத்து அந்த அம்மாவை எழுப்பிய பின் “சொன்னதைச் செய்கிறாய் அல்லவா...” என்று வாக்கை வாங்கிய பின்னாடி இத்தனை பழி வாங்குகிறார் குருநாதர்.

அப்புறம் என்ன செய்கிறார்...? மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகள் எல்லாம் சாகக்கூடாது என்று டாக்டரிடம் போய் நீ இந்த சீட்டைக் கொடுத்து விட்டு வா...! என்றார்.
1.அதாவது நோயாளிகள் யாரும் சாகக்கூடாது.
2.இல்லை என்றால் “சொர்க்கலோகத்திற்கு” அனுப்பி வைத்து விடுவேன் என்று சொல்லுடா...! என்கிறார்.

நான் அங்கே போய் இதைச் சொன்னால் சும்மாவா இருப்பார்கள். அங்கே சீட்டையும் கொடுக்கவில்லை. நான் ஒன்றும் சொல்லவும் இல்லை. ஏனென்றால் குருநாதர் சொன்னபடி எழுதிச் சீட்டைக் கொடுத்தால்  “பைத்தியக்காரன்...” என்று என்னைச் சொல்வார்கள்.


குருநாதர் என்னிடம் கேட்கிறார்... நான் சொல்லச் சொன்னதைச்  சொன்னாயா...? திருடன்டா நீ...! சொல்லவே இல்லை. என்னையே நீ ஏமாற்றுகிறாய்...! அப்படி என்றால் எத்தனை பேரை நீ ஏமாற்றுவாய்...?  என்று இப்படிக் கேட்கிறார். இந்த மாதிரிப் பல வேலைகளைச் செய்தார்.

அதே மாதிரித்தான் சாக்கடைக்குள் இருக்கக்கூடியதை எடுத்துப் போட்டுக் காபியைக் குடி என்று சொல்கிறார். எனக்குப் பார்த்ததுமே  வாந்தி வருகிறது. (அவர் போடுவதைப் பார்த்தாலே)

ஆனால் அவர் ஜம்,.. என்று குடிக்கிறார். பாருடா...! எப்படி அற்புதமாக இருக்கிறது...! தேவாமிர்தமாக இருக்கிறது.......! என்கிறார்.

எப்படியோ நம்மைக் குடிக்க வைத்துவிடுவாரோ...! என்ற எண்ணத்தில் எனக்கு அப்படியே உமட்டலாகிறது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய நண்பர்கள் வருகிறார்கள். அதிலே ஒருவன் நான் மேஸ்திரியாக வேலை பார்க்கும் பொழுது என்னிடம் வேலை செய்தவன்.

மேஸ்திரிக்கு இப்படி ஒரு புத்தி வந்து விட்டது பார்...! என்று சொல்லிக் கொண்டு வருகிறான். என்னா... மேஸ்திரி...! கொஞ்சம் இங்கே ஒரு ஜோலி இருக்கிறது. இங்கே வாருங்கள்...! என்று அவன் என்னைக் கூப்பிடுகிறான்.

அவன் கூப்பிட்டால் நீ ஏன்டா போகிறாய்...? உட்காருடா என்கிறார். அவனைப் போகச் சொல்கிறார் குருநாதர். நான் காபியைக் குடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

காபி டம்ளரைக் கொடுத்தால் அந்த டீக்கடைக்காரன்.. ஐயா இந்த டம்ளரை உன் வீட்டுக்கே எடுத்துக் கொண்டு போ. காசைக் கொடுத்துவிடு. சாக்கடையை அள்ளிப் போட்டது என்று தெரிந்தால் யாரும் காபி குடிக்க வர மாட்டார்கள்...! என்று சொல்லிவிட்டார்.

முறுக்கு கடலைப் பருப்பு பொட்டுக் கடலை மூன்றையும் வாங்கி வரச் சொன்னார் குருநாதர். வாங்கிக் கொண்டு வந்தேன். சாக்கடைக்குள் “கொடு போடு..!” என்று சொன்னார்.

போட்ட பின்னாடி முருக்கு கடலை பொட்டுக் கடலை எல்லாவற்றையும் பொட்டலமாகக் கட்டி வாசனை வருகிற மாதிரி தனித் தனியாகச் சாக்கடைக்குள் அமுக்கி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து ஒரு பன்றி நுகர்ந்து பார்த்துக் கொண்டே வருகிறது. முதலில் பொட்டுக் கடலையை ஒன்றும் தொடவில்லை. நிலக்கடலைப் பருப்பைப் போய் எடுக்கிறது. இரண்டாவது முறுக்கைப் போய் எடுத்து வருகிறது. மூன்றாவது பொட்டுக்கடலையை எடுக்கின்றது.

பார்த்தாயாடா... அதற்குப் புத்தி எப்படி இருக்கிறது என்று...?

சாக்கடைக்குள் இருக்கும் நல்லதைத் தான் அந்தப் பன்றி எடுக்கிறது. நீயும் நல்லதை எடு. நல்லதை நீ ஏன் எடுக்கக் கூடாது...?
1.நான் நல்லதை எடுத்தேன்... எனக்கு ருசியாக இருக்கிறது.
2.கெட்டதெல்லாம் போய்விட்டதடா...! என்கிறார்.

கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரத்தை அப்படியே காட்டுகின்றார்.  உன் உயிர் கடவுள். பன்றியாக இருந்து தீமையை நீக்கித்தான் நீ மனிதனாக வந்திருக்கின்றாய்.

இப்பொழுது நீ தீமையை நீக்கவில்லை என்றால் மறுபடியும் அங்கே தான் போவாய். ஆகவே தீமையை நீக்குவதற்கு வழி என்ன...? அந்த இடத்தில் அமரச் செய்து கேள்வியைக் கேட்டுக் கேட்டுக் கேட்டுக் கேட்டுக் கேட்டு பதில் சொல்கிறார் குருநாதர்.

அவர் பேசுவதைக் காதிலேயே கேட்க முடியாது. அந்த அளவுக்கு அசிங்கமாகத் திட்டுவார். மேற் கொண்டு அடிப்பார். டொம்.. டொம்.. என்று அடி விழுகும்.
1.சகித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்.
2.விரட்டுவதற்கு என்ன வேலையோ... அதைத் தான் பார்ப்பார்

உன் மனைவியைக் காப்பாற்றினேன். நான் சொல்வதைச் செய்கிறேன் என்று நீ சொன்னாய். அதனால் நீ என்னிடமிருந்து தப்ப முடியாது...! என்று சொல்கிறார்,

இப்படித்தான் என்னைக் கொக்கி போட்டு மாட்டிப் பல வகைகளிலும்  இம்சை செய்தார். எங்கேயும் போக முடியவில்லை... வர முடியவில்லை...!

இது எதற்கு நமக்கு இந்தச் சிரமம்...? என்று விலக முடியுமா என்றால் முடியாது. குரு அருளினுடைய உணர்வுகள் எங்கயுமே தப்ப முடியாது.
1.தப்பு செய்யவும் முடியாது.
2.தப்பு செய்தால் நிச்சயம் அப்பொழுதே தண்டனை கிடைக்கும்.

ஏனென்றால் அந்த அளவுக்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னைக் கொண்டு வந்திருக்கின்றார்.
1.நீ தவறு செய்யவில்லை.
2.சந்தர்ப்பம் எப்படித் தவறு செய்யச் செய்கிறது என்று
3.இயற்கையின் உண்மைகளை அறியும்படிச் செய்தார்.

கடவுளின் அவதாரம் என்ற நிலையில் பிரபஞ்சத்தில் உயிர் தோன்றிய பின் பல கோடி உடல்கள் பெறுவதற்குண்டான காரணங்களையும் பன்றியாக ஆன பிற்பாடு மனிதனாகி மனிதனான பின் ஆசையின் உணர்வுகள் எப்படி எல்லாம் மாறுகின்றது...? என்று சாக்கடையில் உட்கார வைத்து இந்த உபதேசம் கொடுக்கிறார்.

1.அப்படியே அகண்ட அண்டத்தையும் காட்டுகின்றார்.
2.இந்த பிரபஞ்சத்தையும் காட்டுகிறார்.
3.இந்தப் பூமியையும் காட்டுகிறார்.
4.ந்த பூமிக்குள் எத்தனையோ வினைகள் இருககிறது
5.அதில் விளைந்த உணர்வுகள் கொண்டு தீமைகளை நீக்கி விண்ணுலகம் சென்றவன் அகஸ்தியன்.
6.”அவனுடன் ஐக்கியமாவது தான் உனக்கு வேலையே...!” என்று சொல்லி இத்தனையும் காட்டுகிறார்.

ஏனென்றால் குருநாதரிடம் பழகியவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள்...? அவர் எனக்கு இந்தச் சக்தியைக் கொடுத்தார் என்றால் கோயிலைக் கட்டுவேன். அதைக் கட்டுவேன். இதைக் கட்டுவேன்...! என்று நிறையப் பேர் வந்தார்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் கட்டியதிலும் எத்தனையோ அதிசயங்கள் தான் நடந்தது. யாரிடமும் பணம் கேட்டு வாங்கிக் கட்டவில்லை. குருநாதர் தான் கட்டுகிறார்.
1.நான் கட்டியதாக நினைத்தால் எனக்கு என்ன தெரியும்...?
2.நான் இதைச் செய்வேன்.. அதைச் செய்வேன்... என்று என்னால் ஒன்றும் சொல்ல முடியாது.
3.அவருடைய உணர்வுகள் தான் அங்கே இயக்கிக் கொண்டு வருகிறதே தவிர வேறு எதுவும் இல்லை.
4.அவர் செயல் தான்...! அதனால் தான் குருநாதர் பெயரை வைத்து விட்டேன்.

நீங்கள் தபோவனத்தில் உள்ள குரு பீடத்தை எண்ணுங்கள். உங்கள் சக்தி சக்தி எல்லாம் இங்கே இருக்கிறது. அதை எண்ணுங்கள்...! என்னை விட்டு விடுங்கள்,

1.சாமி (ஞானகுரு) சொன்னார்.... அந்த வழியில் நான் பெறுகிறேன்...! என்று அதை எண்ணினால் போதும்.
2.சாமி செய்வார்...! என்ற நிலைக்கு மாறாக
3.சாமி காட்டிய அருள் வழியில் அந்தக் குருபீடத்தின் அருள் ஒளியைப் பெற வேண்டும்.
4.வாழ்க்கையில் வந்த இருளை நீக்க முடியும் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.

அப்படி வந்துவிட்டீர்கள் என்றால் நாளைக்கு வரக்கூடிய விஷத் தன்மையிலிருந்து நமக்கு ஒரு பாதுகாப்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

ஏனென்றால் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் ஈர்ப்பு வட்டத்திற்குக் கொண்டு வர வேண்டும். நாம் இரத்தத்தில் இருந்து நம் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் அத்தனை அணுக்களுக்கும் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து ஒளியான அணுக்களாக ஒவ்வொருவரும் பெருக்கிக் கொள்ள வேண்டும்

இப்படி ஒரு தெளிவான நிலைகள் கொண்டு வளர வேண்டும்.

November 29, 2018

ஒருவர் திடீரென்று சிறிய வயதிலேயே இறந்து விட்டால் அதைப் பார்த்துப் பதறுகிறோம்… மனம் பதைபதைக்கிறது… அதை எப்படி மாற்றுவது…?


கேள்வி:-
ஒரு சிறு வயது ஆத்மா தன் உடலை விட்டுச் சென்று விட்டது. நான் அவ்வளவாப் பழகவில்லை இருப்பினும். என் மனம் உடல் மிகவும் பதறியது.

இந்த நிலை ஆன்மீக முயற்சியில் இருக்கும் எனக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன பயிற்சி எடுக்க வேண்டும். என் மனம் நான் சொல்வதைக் கேட்காமல் பதை பதைக்கின்றது.

என் நிலையை விளக்குங்கள்...!

பதில்:-
இறப்பது யாராக இருந்தாலும் சரி
1.சிறு வயதோ முதிர்ந்தவரோ..
2.நல்லவரோ கெட்டவரோ…
3.வசதியானவரோ வசதியில்லாதவரோ…
4.நோயாளியோ திடகாத்திரமானவரோ…
5.சொந்தமோ பகையோ… ஆணோ பெண்ணோ…!
அவர்கள் உயிர் என்றும் அழிவதில்லை. உடல்கள் தான் அழிகின்றது. அந்த உயிரை யாரும் அழிக்க முடியாது. இதை முதலில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

உடலுடன் வாழ்பவர்களுக்கு விண் செல்லும் பாதையைக் காட்டுவதும் உடலை விட்டுப் பிரிந்து செல்பவர்களை விண்ணுக்கு அனுப்பி அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும் என்பதையும்…! இந்த இரண்டு நிலையைததான் என்னுடைய முன்னணியில் நான் வைத்துச் செய்து கொண்டிருக்கின்றேன்.

அது எப்படி அவ்வாறு இருக்க முடியும்…? என்று குழம்ப வேண்டியதில்லை.

இதற்கு முன்னாடி காலம் காலமாக இறந்தவர்களை எல்லாம் சற்று சிந்தித்துப் பாருங்கள். அதிலே மேலே சொல்லப்பட்ட எல்லா மனிதர்களும் அடங்குவார்கள். மற்றவர்கள் மீது பாசம் உங்களுக்கு மட்டும் இல்லை. எல்லா மனிதர்களும் பாசத்துடன் தான் வாழ்கிறார்கள்.

ஆனால் பாசத்துடன் வாழ்ந்தாலும் இறந்தவர்களைப் பற்றி எத்தனை நாள் எண்ணுகிறார்கள்…? எதற்காக எண்ணுகிறார்கள்..? எப்படி எண்ணுகிறார்கள்…? என்று பார்த்தால் அதில் ஒன்றும் முழுமையான அர்த்தம் இருக்காது. வருத்தமும் படுவார்கள். பின் சமாதானமும் பட்டுக் கொள்வார்கள். அவ்வளவு தான்…!

நாளை நாமும் இந்த உடலை விட்டு அகன்றால் இதே போல் தான் நினைப்பார்கள். பேசுவார்கள்…! ஒரு நாளோ ஒரு மாதமோ ஒரு வருடமோ அவ்வளவு தான் அதற்கு மேல் எண்ணிப் பார்க்கும் நிலை வராது. (விதிவிலக்காகச் சிலர் இருப்பார்கள் – ஆனால் கூடக் கொஞ்ச நாள் எண்ணுவார்கள் அவ்வளவு தான்..)

1.முன்னாடி இறந்தவர்களைப் பற்றிய அக்கறை இந்த அளவுக்கு இருக்கும் நிலையில்
2.ஒருவரைப் பார்த்து இறந்துவிட்டாரே என்று நாம் பதைபதைப்பதால் எந்தப் பலனும் இல்லை.

நாம் வேதனைப்பட்டால் இறந்தவர் திரும்ப வருவார் என்றால் பரவாயில்லை. நம்மையே நாம் காக்க முடியாத போது நாம் வேதனைப்பட்டு யார் யாரைக் காப்பது…?

ஆகவே நாம் மன பலம் கொண்டு சரி… அவர் இறந்து விட்டார்…! பிறவி என்ற இந்தத் துன்பக் கடலில் இருந்து விடுபட்டு அவர் என்றுமே பேரின்பப் பெரு வாழ்வாக அழியாத ஒளியின் சரீரம் பெறவேண்டும். சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று அதைத்தான் எண்ண வேண்டும்.

இதைச் செய்தால் வேதனையும் துடிப்பும் கலக்கமும் நமக்கு வராது. அதே சமயத்தில் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து அது புனிதம் பெறுகின்றது. அந்த ஆன்மா மூலம் நாம் விண்ணிலிருந்து உயர்ந்த சக்தியைப் பெறவும் ஏதுவாகின்றது.

இது தான் ஞானிகள் காட்டிய மெய் வழி.

ஆனால் நாம் மனிதர்களாக இருந்து கொண்டு “இரக்கப்படுகிறேன்…!” என்ற பேரில் தானும் நன்மை அடையாதபடி உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களையும் விண் செலுத்த முடியாதபடி மீண்டும் மீண்டும் இந்த உடல் பெறும் உணர்வுகளை வளர்த்து விஷத்தைச் சேமிக்கத்தான் பழகி வைத்திருக்கின்றோம்.

இதை எல்லாம் நாம் மாற்றிப் பழக வேண்டும்.

குற்றத்திற்குத் துணையாகவும்... குற்றமற்றதைக் குற்றமாக்கிடும்... செயலையும் செய்தால் மனிதனல்லாத உருவாக ஆக்கிவிடும் உயிர்...!


சத்தியத்தையும் தர்மத்தையும் பற்றி அன்றைய ஞானிகள் சாஸ்திரங்களின் மூலமாக நமக்கு எத்தனையோ வகைகளில் உணர்த்திக் காட்டியுள்ளார்கள்.

ஆனாலும் அரசியல் சார்புடைய வக்கீல்களில் சிலர் அரசியலில் தவறு யார் செய்தாலும் அந்தத் தவறை மறைப்பதற்குத்தான் சட்டங்களைக் கொண்டு செல்கின்றனரே தவிர தவறு செய்யும் நிலைகளிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்று எந்த வக்கீலும் வருவதில்லை.

எந்தக் கட்சியின் சார்புடையவரோ... எந்த மதத்தின் சார்புடையவரோ... அதன் அடிப்படையிலேயே
1.தான் படித்த கல்வியின் திறனைப் பயன்படுத்தி...!
2.தவறுகளை ஓங்கி வளர்க்கவும்
3.தவறு செய்யாதவனைக் குற்றவாளியாக்கவும்
4.படிப்பின் திறமை கொண்டு அவனைக் கொலை செய்யவும்
4.கொலைகாரனாக மாற்றவும் குற்றமுடையவனாக ஆக்கவும் என்ற நிலைகளுக்கு வந்துவிட்டது.

அரசியல்வாதிகளும் சரி... மதவாதிகளும் சரி...! கடவுளின் பேரைச் சொல்லி மதத்தின் பேரைச் சொல்லி...! எந்த மதத்தின் சார்புடையவரோ அவருடைய கடவுள் என்ற நீதியை வைத்துச் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டாலும் - தவறுகளையே செய்கிறார்கள்.

1.சட்ட ரீதியாகத் தவறிலிருந்து மக்களை மீட்ட வேண்டும்...
2.குற்றம் செய்வோனிடம் நீ குற்றம் செய்திருக்கிறாய்...! என்று சுட்டிக் காட்டி
3.அந்தக் குற்ற இயல்புகளிலிருந்து அவனைத் திருத்த வேண்டும் என்ற நிலை இல்லை.

அதாவது குற்றம் செய்பவனுக்குத் தண்டனையும் குற்றமில்லாதவனை நிரபராதியாக்கி அவனைக் காத்திட வேண்டும் என்று தான் வக்கீல்கள் வாதித்தல் வேண்டும்.

ஆனால் சட்டம் படித்த வக்கீல்கள் அவருடைய வாதத் திறமை கொண்டு குற்றமற்றவனைக் குற்றமாக்குவதும் குற்றம் புரிபவனைக் குற்றமற்றவனாகக் காட்டும் நிலைகள் தான் இன்றைய நிலைகள் வளர்ந்து கொண்டுள்ளது.

இதைப் படிப்போர்கள் வருத்தப்பட்டுக் கொண்டாலும் சரி... அல்லது  இந்தச் சாமியார் (ஞானகுரு) என்ன செய்து விட்டார்...? இவர் மட்டும்  யோக்கியமா...? என்று நினைத்துக் கொண்டாலும் சரி.

குற்றமற்றதைக் குற்றமாக்கும் இயல்பில் உள்ளோர்களின் நிலை எல்லாம்....
1.அவர்கள் உயிர் அவருக்குள் எண்ணிய நிலைகள் எதுவோ அதன்படி
2.அவர் உடலுக்குள் இருக்கும் உண்மை நல்ல உணர்வினுடைய அணுக்களை அழித்தே தீரும்.
3.குற்றமற்றவருக்குத் தீங்கிழைத்து அதன் வழியில் இவர்கள் நுகரும் உணர்வுகளை
4,அவர்கள் உயிர் உடலுக்குள் உருவாக்கி அதற்குண்டான விளைச்சலைக் காட்டும்.

இந்த மனிதனின் வாழ்க்கையில் பிறருக்குத் தெரியாமால் நாம் மறைமுகமான நிலைகளில் எத்தகைய தவறு செய்தாலும் அந்தத் தவறின் நிலைகளை
1.உயிர் அப்பதைக்கப்போதே அணுவாக மாற்றி அந்த அணுக்களைப் பெருக்கி
2.அந்தத் தவறின் நிலையையே உடலுக்குள் உருவாக்கி நையச் செய்யும்.
3.மனிதனல்லாத  உருவாக மாற்றி அமைத்துவிடும்.

இதிலிருந்து எவரும் தப்ப முடியாது...!

November 28, 2018

பிறவி நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது...!


தெய்வப் பிறவி மனிதப் பிறவி! என்ற பாகுபாடு எல்லாம் பிறக்கும் பிறவியில் இல்லை.

தேவனுக்கு அடுத்தது மனிதப் பிறவி என்கின்றார்கள். தேவப் பிறவியாக யாரும் பிறப்பதில்லை. உயிர் அணுக்கள் தோன்றிய நாள் முதலே சமமான நிலையில்தான் எல்லா உயிரணுக்களுமே ஜீவன் பெற்றன.

ஆண்டவனாகவும் மனிதனாகவும் பேயாகவும் மிருகமாகவும் மற்ற எல்லா ஜீவ ஜெந்துக்களாகவும் ஆனதெல்லாமே
1.அச்சக்தியின் அருளில் சமமான நிலையில் வந்த உயிரணுக்கள் எல்லாம்
2.அதனதன் சுவாச நிலை கொண்டு பல நிலை கொண்ட ரூபமெடுத்து ஜீவன் பெற்று வாழ்கின்றது.

உலக ஆரம்பத்தில் உயிர் பெற்ற நாம் எல்லாருமே ஆண்டவனாகவும் மனிதனாகவும் மற்ற ஜீவராசிகளாகவும் இன்றைய உலகில் ஜீவன் பெற்று வாழ்வதெல்லாம்
1.நாம் அன்று எடுத்த
2.அதே போல இன்று எடுக்கும் சுவாச நிலை கொண்டு
3.நமக்கு நாமே தேடிக்கொண்ட நிலைதான்!

இன்றுள்ள நிலையையாவது நிலை நிறுத்தி வாழ்வதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.
1.ஆண்டவன் பிறப்பு வேறு!
2.மனிதன் பிறப்பு வேறு! என்ற
3.மாறுபட்ட நிலை அச்சக்தியின் அருளிலிருந்து நாம் பெறவில்லை.

நாம் இன்று மனித உடல் பெற்று வாழும் வாழ்க்கையை அதிலுள்ள உண்மையை ஊன்றிப் பார்த்தால் தெய்வ நிலையில் இருந்து மனித நிலைக்கு வந்ததுதான்.

மனிதனின் நிலை கொண்டு நம் நிலையை நாம் உணர்ந்து நாம் விட்டு வந்த தெய்வப் பிறவியை நாம் ஏற்கும் நிலையே நமக்கு முன்னாடி உள்ளது.

ஆகவே
1.தெய்வத்தின் தெய்வமாகக் கலந்துறவாடும் நிலையை ஏற்ற நாம்
2.இந்தப் பிறவியிலேயே அப்பாக்கியத்தைப் பெற்று வாழ்ந்திட வேண்டும்.
3.மனிதனின் நிலை - தன்னை அறிந்து வாழ்ந்திட வேண்டும்.
4.தன் நிலை உணர்ந்து தான் வாழும் வாழ்க்கை என்பது “காலமும் நேரமும் பார்த்து அது வருவதில்லை!

ஏனென்றால் காலத்தையும் நேரத்தையும் பார்த்துக் கொண்டு மனிதன் தன் நிலையில் தன் சுவாசத்தையும் எண்ணத்தையும் கெடுத்துக் கொள்கின்றான்.

அப்படிக் கெடுத்துக் கொள்வதால்தான் மனிதனுக்கு அடுத்துத் தெய்வமாகும் நிலையை மாற்றி ஆவி உலகில் அல்லல் பட்டுக் கொண்டு பல ஜென்மங்கள் ஜென்மங்களாக பல ஜீவராசிகளின் ஜென்மங்களைப் பெற்றுச் சுற்றிக் கொண்டே உள்ளான்!

அந்த நிலையை நாம் ஏன் பெற வேண்டும்?

நல்ல நினைவு இருக்கும் இந்த நேரத்திலேயே மனிதப் பிறவியின் உய்வைக் காணுங்கள். அந்த நிலையை அடைந்த தெய்வ நிலைகள் பெற்ற
1.மெய் ஞானிகளுடன் ஒன்றி வாழும் தகுதியை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளியின் சரீரம் பெறுங்கள்.
3.அகண்ட அண்டத்தில் என்றுமே நிலைத்திடும் நிலையாக வேகா நிலை அடையுங்கள்.

புறக்கண்ணின் இயக்கமும்... அகக்கண்ணின் செயலும்...!


பிறருடைய வேதனைகளைக் கேட்டறிந்து பிறருடைய துயரங்களைக் கேட்டறிந்து உதவி செய்யும் பண்புடன் நாம் சென்றாலும் இந்தப் பண்பால் கவரப்பட்ட உணர்வுகள் நம் உடலுக்குள் இயக்கித்தான் அந்தப் பண்பின் அன்பால் அவர்களுக்கு நன்மையைச் செய்கின்றோம்.

அதன் மூலம் நன்மைகளை அவர்களுக்குச் செய்தாலும் அவரின் உணர்வுகள் நமக்குள் வந்தபின்
1.சூரியன் எவ்வாறு தனக்குள் வரும் நஞ்சினை வெளியிலேயே மோதி வீழ்த்துகின்றதோ
2,மகரிஷிகள் எவ்வாறு தீமைகளை வீழ்த்தி உணர்வை ஒளியாக (நன்மையின் சக்தியாக) மாற்றிக் கொண்டார்களோ
3.அதைப் போல நாமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று அந்தத் தீமைகளை வீழ்த்திட வேண்டும்,

அது எவ்வாறு…?

நாம் கண் கொண்டு பார்க்கும் உணர்வின் தன்மைகள் வெளியிலிருந்து தான் நம் ஆன்மாவிற்குள் வருகின்றது. ஆன்மாவில் வந்த பின் தான் மூக்கின் வழியாகச் சுவாசிக்கச் செய்து அதைப் புருவ மத்தியிலிருக்கும் நம் உயிர் நுகர்கின்றது.

உயிரிலே பட்ட பின் இந்த உணர்வின் தன்மையை உணர்ச்சிகளாக இயக்கி நம் உடலுக்குள் அந்தச் சத்தைப் பரப்புகின்றது.

அதாவது தீங்கு செய்கின்றான்... தீங்குடன் இருக்கின்றான்... வேதனைப்படுகிறான்...! என்ற இந்த உணர்வுகளை எல்லாம் கண் கவர்ந்தாலும் இங்கே ஆன்மாவாக மாற்றி உயிரின் இயக்கத்தால் ஈர்த்து உணர்வின் அலைகளைப் பரப்பி “அகக்கண்ணாக...! இருந்து நமக்குள் உணர்த்துகின்றது உயிர்.

1.புறக்கண்களால் நாம் பார்த்துக் கவர்ந்த உணர்வுகளை நம் ஆன்மாவாக மாற்றி
2.அது உயிருடன் ஒன்றும் பொழுது இதை அகக்கண்ணாக மாற்றி (உள் உணர்வாக) உடலுக்குள் உணர்த்துகின்றது.
3.இப்படித்தான் பிற தீமைகள் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

இதைப் போன்ற விளைவுகளிலிருந்து தப்புவதற்குத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற வலுவான உணர்வைத் தனக்குள் பதிவு செய்து புறக்கண்ணின் நினைவை அகக்கண்ணான உயிருடன் ஒன்றி உள்முகமாகத் தனக்குள் பல முறை செலுத்த வேண்டும்.

இப்படிப் பல முறை சொல்லி உள்ளே செலுத்தும்போது நம்மை அறியாத தீமைகளை அகற்றுவதும் அந்த ஞானியின் உணர்வு இங்கே வரப்படும் போது தான் நம் ஆன்மாவில் இருக்கும் அந்தத் தீமைகளைப் பிளக்கவும் செய்கின்றது.

தீமையின் தன்மையை பிளக்கும் இந்த நிலையைத்தான் விநாயகர் தத்துவத்திலேயும் காட்டப்பட்டது. மாரியம்மன் ஆலயத்திலும் காட்டப்படுகின்றது.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் செலுத்தி நம் உடலில் உட்புகுந்த தீமைகளைப் பொசுக்க வேண்டும். அதாவது
1.வெகு தொலைவிலேயே...!
2.நம் ஆன்மாவில் வரும் போதே..!
3.அந்தத் தீமைகளை அகற்றிடல் வேண்டும் என்ற மகரிஷிகள் காட்டிய பேருண்மையை நாம் உணர்வோம் என்றால்
4.நமது வாழ்க்கையில் பேரின்பத்தை அடையும் நிலை பெறுகின்றோம்.

“எந்த மகரிஷியின் உணர்வை...!” நமக்குள் அதிகமாக வளர்க்கின்றமோ இந்த உடலை விட்டு நாம் அகன்ற பின் நாம் அங்கே அவர்களின் அருள் வட்டத்திற்குள் செல்கின்றோம்.

ஒருவன் நம்மை வேதனைப்படுத்துகின்றான் என்றால் அவனை எண்ணி எண்ணி “எனக்குத் துன்பம் செய்தான்...! என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் இறந்த பின் அவன் உடலிலே தான் சேர்கின்றோம்.

குடும்பத்தில் பாசத்தால் “என் பையன் அடுத்து என்ன செய்வான்...! என்று எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொண்டால் அந்த உணர்வின் தன்மை வரும் போது பையன் உடலிலே சென்று நாம் நோயைத் தான் உருவாக்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து மனிதன் விலகி அந்த மெய் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் பெருக்கி மெய்ப் பொருளை நாம் காண வேண்டும்.

ஆகவே அந்த மகா ஞானிகள் நமக்குக் காட்டிய அந்தச் சாஸ்திரத்தைத் தெளிவாக எடுத்து அந்தச் சாஸ்திர விதிப்படி உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.

November 27, 2018

ஞானிகள் சொன்ன சிரச்சேதமும்… அரசர்கள் செய்த சிரச்சேதமும்…!


1.மனிதனுக்குள் பண்பற்ற நிலைகள் செயல்படுவதை நிறுத்திவிட்டுப் பண்புடன் இயக்கப்பட வேண்டும்.
2,சகோதர உணர்வுகள் உருபெற வேண்டும்.
3.ஒருவருக்கு ஒருவர் இரக்கமான செயல்கள் கொண்டு வர வேண்டும்
4.மனிதன் என்ற பண்பில் இயங்க வேண்டும் என்று தான் மதங்கள் அனைத்துமே கூறுகின்றது. எதிலும் குறை இல்லை.
5.ஆனாலும் அன்று மகான்கள் கூறிய இந்தத் தத்துவங்களை அரசர்கள் தனித்தன்மை வாய்ந்ததாகக் கொண்டு சென்றார்கள்.

மகான்கள் ஒவ்வொரு நாட்டிலும் தோன்றி இருந்தார்கள். அந்த மகான்கள் காட்டிய நிலைகளை அரசர்கள் தன் மதம் என்ற நிலைகளில் உருவாக்கிக் கொண்டார்கள்.

அதே சமயத்தில் அந்த மகான்கள் செய்ததைக் (சொன்ன தத்துவங்கள்) காக்கப்பட வேண்டும் என்பதற்காக அதைத் தவறுவோர் எவரோ அவர்களுக்குக் “கடும் சிரச்சேதம்…! என்று உலக மதங்கள் எல்லாமே கூறுகின்றது.

“சிரச்சேதம்…” என்ற ஒரு தண்டனையை அன்று ஆண்ட அரசர்கள் பிறருக்குக் கொடுத்தார்கள் ஏன்…? ஞானிகள் சொன்ன சிரச்சேதம் எது…?


மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் அறியாது வரும் தீமையை விளைவிக்கும் உணர்வுகளைத் தடுப்பதற்காக
2.மகான்கள் காட்டிய அறநெறியின் உணர்வை நமக்குள் உட்புகுத்தி
3.அந்தத் தீமைகளைச் செயலற்றதாக மாற்றுதல் வேண்டும்.
4.அந்தத் தீமைகள் நம்மை இயக்காது தடுத்தல் வேண்டும் என்று தான் சொன்னார்கள்.
5.இது தான் அந்த மகான்கள் கூறிய உண்மை நிலைகள். (அதாவது தீமையான உணர்வுகளுக்குள் மகானின் நல்ல உணர்வுகளைப் பாய்ச்சி அதைச் செயலற்றதாக – சிரச்சேதம் செய்யச் சொன்னார்கள்)

ஆனால் அவர்கள் சொன்னதை அரசர்கள் தனக்குள் பிடிவாதமாக வைத்துக் கொண்டு மகான்களின் செயலை மாற்றித் தன்னைச் சுகபோகவாசியாக அமைத்துக் கொள்ள அரசர்கள் பெரும் பிழைகளைச் செய்து விட்டார்கள்.
1..மக்களை நல்ல வழியில் வழி நடத்தும் அந்த ஞானத்தை அவர்கள் காக்கும் வழி அற்று
2.மற்றதைப் பழி தீர்க்கும் உணர்வாகக் கொண்டு சென்று அதைச் செயலாக்கினார்கள்.

மாற்று மதங்கள் (மதத்தினர்) வந்தால் அவர்கள் கடவுள் வேறு… நமது கடவுள் வேறு…! என்று இப்படித் திரிபு பண்ணி விட்டார்கள். சரித்திரத்தைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்
1.மதத்தின் அடிப்படை வைத்துத் தான்
2.உலகப் போர்கள் அனைத்தும் நடந்து உள்ளது.

மதத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு இந்த (எங்கள்) மதத்தில் நல்ல ஒழுக்கங்கள் உண்டு. இந்தக் கடவுள் எங்களுக்குச் சரியான உத்தரவு கொடுத்துள்ளார். அதன் வழிகளில் தான் நாங்கள் நடக்கின்றோம் என்று சொல்வார்கள்.

இப்படிச் சொல்லி அடுத்த நாட்டின் மக்களை எல்லாம் போர் முறையில் அடிமையாக்கிக் கொண்டு தன்னுடன் இணைந்து செயல்படுவதற்காக அந்தத் தத்துவத்தை அங்கே புகுத்துகின்றார்கள்.

இன்றைய உலகம் அந்த அரசர்கள் முன் மொழிந்த தத்துவத்தில் தான் அடிமைப்பட்டுக் கொண்டுள்ளது. ஞானிகள் சொன்ன தத்துவப்படி நல்ல பண்புகளை வளர்க்காதபடி மற்றவரை அடிமைப்படுத்தும் நிலையாகவே சென்று கொண்டுள்ளது.

இதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டுமா இல்லையா…? மகான்கள் காட்டிய வழியில் தெய்வீகப் பண்புகளை வளர்க்க வேண்டுமா… இல்லையா… என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.