ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2018

இந்தப் பரமபதத்தின் இரகசியம் தான் என்ன…!


மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று சாதாரண மக்களும் அறிந்துணர்வதற்காகப் பரமபதத்தைக் காட்டுவார்கள்.

இந்த வாழ்க்கையில் மனிதனானபின் மிருகத்திலிருந்து நாம் எப்படி மனித நிலைக்கு வந்தோம்…? மனிதனானபின் எப்படிப் பரமபதம் அடைவது…? என்று சிந்தித்துச் செயல்படும் நிலைக்குத்தான் பரமபதத்தின் படத்தைப் போட்டு அங்கே காட்டி இருப்பார்கள்.

பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம். உருட்டிக் கொண்டு போனவுடனே
1.முதலில் சிறு பாம்பு கடிக்கும். அது கடித்த பின் மீண்டும் கீழே கொண்டு போய் விட்டுவிடும்.
2.இதிலிருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்தவுடன் மேலே இருந்து கீழே வந்து விடுகின்றோம்.
3.இப்படி அதையெல்லாம் தப்பித்து மேலே போகும் போது அதை விடப் பெரிய பாம்பு கடிக்கிறது. மீண்டும் “திரும்பத் திரும்ப வந்து…!” பல சுழற்சிகள் ஆகி நாம் மேலே போகின்றோம்.
4.இன்னும் இரண்டே கட்டம்…! எல்லாவற்றையும் விடப் பெரிய பாம்பு அங்கே இருக்கின்றது.
5.பயத்தால் உருட்டிய உடனே தாயம் விழுந்துவிடும். மீண்டும் அந்த விஷமான நிலைகள் பட்டவுடனே “ஜர்ர்ர்...” என்று கீழே இங்கே பன்றிக்குள் கொண்டு வந்து நம்மை விட்டுவிடும்.
6.ஆகவே கீழ் நிலைக்குக் கொண்டு வந்து மிக மோசமான சரீரங்களை எடுக்கும் நிலையை அது மீண்டும் உருவாக்கி விடுகின்றது.
7.வாழ்க்கையில் நடக்கும் இத்தகைய பேருண்மைகளை நமக்கு நினைவுபடுத்தும் நாள் தான் ஏகாதசி.

பரமபதத்தை அடைய வேண்டும் என்றால் விருப்பு வெறுப்பு என்ற நிலை இல்லாதபடி ஒளியின் சரீரமாக நாம் பெற்று அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் செல்வது தான் ஏகாதசி என்பது.

அன்றைய நாளில் சொர்க்கவாசல் என்று கோவில்களை எல்லாம் திறந்து வைப்பார்கள். நமக்கு இதைக் கதையாகச் சொல்லி ஏதோ பேருக்கு சொர்க்க வாசல் வழியாகச் சென்று சாமியைக் கும்பிட்டோம்… போனோம்… வந்தோம்… இராத்திரியெலாம் விழித்திருந்தோம்… இரவு பரமபதம் விளையாடினோம் என்ற எண்ணம் தான் இருக்கும். (இன்று உள்ள சிலருக்கு இந்தப் பரமபதம் படம் என்றால் கூட என்ன…! என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை)

இந்தப் பரமபதத்தின் இரகசியம் தான் என்ன…!

நம் வாழ்க்கையில் எல்லாம் நல்லதைச் செய்வோம். அதே சமயம் நம்மை அறியாதபடி வேதனை என்ற நிலைகள் வரப்படும் போது அந்த விஷமான நிலைகள் “கொத்தப்பட்டு…!” நம் உடலுக்குள் நோய்களாகி விடுகின்றது.

நோயாகி விட்டால் இந்த மனிதச் சரீரத்தை இழந்து மீண்டும் இழி நிலையான சரீரத்தைப் பெற்று விடுகின்றோம்.
1.அதிலிருந்து மீண்டு மீண்டும் மனிதனாக வளர்ச்சியாகி பல கோடி சரீரங்களைப் பெற்று…
2.மீண்டும் இழந்து மீண்டும் வளர்ச்சி பெற்று…
3.இப்படியே இழந்து இழந்து… இன்று நாம் இந்தச் சுற்றிலேயே தான் இருக்கின்றோமே தவிர
4.மெய் வழியின் தன்மையை அடையும் தன்மை (பரமபதத்தை) இல்லாது நாம் இருக்கின்றோம்.
5.அந்த மெய் வழி செல்வதற்கு என்ன வழி…? என்ற நிலையைத்தான் அன்று மெய் ஞானிகள் பரமபதத்தின் மூலம் உணர்த்தினார்கள்.

பரமபதம் அடைவது என்றால்…
1.பரிணாம வளர்ச்சியில் கீழான உயிரினங்களிலிருந்து அடுக்கடுக்காகச் சென்று
2.மனித நிலைகள் பெற்று மனித நிலைகளிலிருந்து
3.உயிரை ஒளியாக மாற்றி உச்சியிலே செல்லும் போது தான்
4.அதாவது இந்த உடலை விட்டு (வெளியிலே) விண்ணிலே சென்று ஒளியாக நிற்க கூடிய நிலையைப் பரமபதமாகக் காட்டி
5.அதற்குகந்த நாளாக நாம் ஏகாதசியைக் காட்டினார்கள் ஞானிகள்.

நம் குருநாதர் சரீரத்தை விட்டு ஒளியாகச் சென்ற நந்நாள் வைகுண்ட ஏகாதசி (1971வது வருடம்). அவருடைய ஆத்மா வெளியே சென்ற பின் என்னை (ஞானகுரு) இயக்கியதும் பேசச் செய்ததும் பல உண்மையினுடைய நிலைகளை உணர்வதற்குண்டான நிலைகளையும் செய்தது.

சூட்சம நிலைகள் கொண்ட அவரின் தொடர் வழியே தான் 12 வருட காலம் பல அனுபவங்களைப் பெற்றேன். அவர் ஒளி முன் செல்ல… அவரைப் பின் தொடர்ந்து நான் சென்று… அவர் காட்டிய அந்த அருள் நெறிகளை அறிந்துணர முடிந்தது.

மனிதனுக்குள் இயக்கும் ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் உறுப்புகளின் இயக்கத்தையும் காட்டி மெய் உணர்வைப் பெறும் மார்க்கமாக  சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிக்க சக்திகளை எவ்வாறு பெற வேண்டும்..? என்று குருநாதர் எனக்கு அருளியது மார்கழி மாதம் தான்.

அதே போல மெய் வழி காணும் அந்த ஆற்றலை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆசையில் தான் இதை உங்களுக்குள் உணர்த்துகின்றோம்.

எண்ணிலடங்காத மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொன்றாகக் கொடுக்கின்றோம்


மாமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறுவதற்கு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் வாக்காக (ஞான வித்து) உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

மெய் ஒளியினுடைய தன்மைகளை நீங்கள் பெற வேண்டும். மெய் ஞானிகள் கண்ட அந்த அருள் வழிகளிலே செல்ல வேண்டும் என்ற அந்த நினைவின் வலுக் கொண்டு யாம் (ஞானகுரு) சொல்லும் தியானத்தையும் ஆத்ம சுத்தி என்ற அருள் வாக்கினையும் நீங்கள் சரியான முறையில் கடைப்பிடித்தால்
1.அருள் ஞானியின் ஆற்றல் மிக்க அருள் சக்திகள் உங்கள் உடலுக்குள் ஊடுருவி
2.உங்கள் உடலிலில் இருக்க கூடிய துன்பங்களை அது நீக்கி
3.உங்கள் உணர்வுகள் அனைத்திலும் மகிழ்ச்சி ஊட்டவும்
4.உங்கள் சொல்லில் இனிமையும்
5.உங்கள் செயல் அனைத்தையும் நல்லதாக ஆக்கக்கூடிய நிலைகளும் ஏற்படுகின்றது.

அப்படி ஏற்படுத்துவதற்குத் தான் இதை அடிக்கடி உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றோம். எல்லாவற்றையும் நீங்கள் தெரிந்து கொண்ட பின் அதன் வழிகளிலே எடுப்பதென்றால் மிகச் சிரமம்.

ஒரு மாமரத்தின் வித்தைப் பூமியிலே விதைத்த பின் அது எத்தகைய சத்தின் தன்மையைத் தனக்குள் கொணர்ந்து அதனின் வளர்ச்சியில் அதே  மாமரத்தின் வித்தை எண்ணிலடங்காத நிலைகளில் அது வளரச் செய்கின்றதோ அதைப்போல
1.மகரிஷிகளின் அருள் வித்தான ஞான வித்தை உங்களுக்குள் பதியச் செய்யும் பொழுது
2.பதியச் செய்ததை மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வந்து அதைப் பெறவேண்டும் என்று நீங்கள் ஏங்கித் தியானித்தால்
3.யாம் (ஞானகுரு) போதித்த உணர்வின் அந்த மெய் ஞானிகளின் ஞான சத்தின் தன்மையை உங்களுக்குள் கவரும் சக்தியாக அது உருவாகின்றது.

அவ்வாறு அந்தச் சக்தியை நீங்கள் பெற்று உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எத்தகைய துன்பங்களையும் போக்கவும் அதேசமயம் மெய் ஞானிகள் சென்ற அருள் வழி கொண்டு உங்கள் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் வல்லமை உங்களுக்கே கிடைக்கின்றது.

அதைக் கிடைக்கச் செய்வதற்கு தான் அடிக்கடி சொல்வது.
1.நான் ஏதோ பின்னிப் பின்னிப் பேசுகிறேன் என்று எண்ண வேண்டாம்.
2.இந்தப் பின்னலுக்குள் பல நிலைகள் உண்டு
3.பல நூலின் தன்மை பின்னி வரும் போதுதான் அந்த பின்னலின் நிலைகள் கொண்டு
4.பலதரப்பட்ட ஆடைகளாகவும் அதை அழகுபடுத்தும் நிலையாகவும் வருகின்றது.

அதைப் போன்ற நிலையில் அந்த மெய் உணர்வின் சக்தி உங்களுக்குள் வரப்படும் போது
1.தெளிந்த சிந்தனைக்குரிய தியானத்தின் நிலைகள் வளர்ந்து
2.அதன் மூலம் பல ஆற்றல் மிக்க நிலைகளைக் குவித்து
3.உங்களுக்குள்ளேயே அருள் ஞான வழிகளை அது காண்பிக்கும்.
4.அந்த அருள் வழிகளிலே நீங்கள் சீராகச் செல்லவும் இது உதவும்.

குருநாதர் எவ்வழியில் எமக்குக் காட்டினாரோ அதன்படியே தான் உங்களை அறியாமலேயே மெய் ஞானத்தின் அருள் வழியில் நீங்கள் செல்லவும் விஞ்ஞான நிலையிலிருந்து வரக்கூடிய இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளவும் மெய் வழியின் தன்மையை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ளவும் மகரிஷிகள் பெற்ற அந்த ஆற்றல் மிக்க சக்தியை உங்களைப் பெறச் செய்யவும் இதைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

September 29, 2018

“ஊழ் வினையை…” நீக்கச் செய்யும் தியானப் பயிற்சி


நம் உடலில் நோய் வந்துவிட்டால் அந்த நோய்களை நீக்க மருந்தினை உட்கொள்கின்றோம். அந்த மருந்து இரத்தங்களில் பரவப்படும் போது நல்ல அணுக்களுக்கு வீரிய சக்தி கிடைக்கின்றது. அந்த நோய் குறையக் காரணமாகின்றது.

இருப்பினும் நம் உடலில் நோய்களை உருவாக்கிய அணுக்கள் முழுமையாக இறப்பதில்லை.
1.நல்ல அணுக்களுக்கு ஒரு கவசமாகத் தான் மாறியுள்ளதே தவிர
2.நோயை உருவாகும் அணுக்களை அடுத்து உருவாக்காமல் தடைப்படுத்தும் சக்தி
3.அந்த மருந்திற்கு இல்லை.
4.(ஏனென்றால் சிறிது காலத்திற்கு ஒன்றும் தெரியாது. நோயை உருவாக்கும் அணுக்களின் எண்ணிக்கை கூடியபின் மறுபடியும் மருந்தை உட்கொள்ள வேண்டும். இப்படித்தான் வாழ்கின்றோம்)
5.காரணம் நாம் முதலில் பதிவு செய்த உணர்வுகளின் “மூல வித்து…!” எலும்புக்குள் இருந்து கொண்டேதான் இருக்கும்.

உதாரணமாக எப்படி மரத்தின் கிளைகளை நீக்குகிறோமோ அது போல் தான் நாம் சாப்பிடும் மருந்துகள் அனைத்தும். மரக்கிளைகளை முழுவதும் வெட்டினாலும் சிறிது காலம் கழித்து மீண்டும் அந்த மரம் சிலிர்த்து எப்படி முளைக்கின்றதோ அதைப் போல தான் நமது உடலில் நோய்கள் மீண்டும் வளரத் தொடங்குகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு உறுப்புகளை மாற்றி அமைத்தாலும் அந்த உறுப்புகளை இழந்தபின் அவர்கள் சொல்லும் கட்டுப்பாட்டுடன் உணவுகளை நாம் உட்கொள்தல் வேண்டும். அந்தக் கட்டுப்பாடு தவறினால் துரித நிலையில் மரணம் ஏற்படுகிறது. இருப்பினும் நிலையான உணர்வுகளை நாம் சேர்க்க முடிவதில்லை.

இந்த வாழ்க்கையில் நாம் உற்றுப் பார்த்தது கேட்டது நுகர்ந்தது  அனைத்தும் ஊழ் வினை என்ற வித்தாக எலும்புக்குள் இருப்பதனால்
1.மருந்துகளை உட்கொண்டு மேலெழுந்தவாறு தசைகளிலோ மற்ற இடங்களிலோ உள்ள நோயை அகற்றினாலும்
2.“ஊழ்…” என்ற வித்தின் மூலமாக அது ஜீவன் பெற்று வளரத்தான் செய்யும்.
3.எந்த மருந்தை எடுத்துக் கொண்டாலும் எலும்புக்குள் இருக்கும் இந்த ஊழ்வினை என்ற மூல வித்தை அகற்ற முடியாது.

ஏனென்றால் அது நிலையானதாகி விடுகின்றது. ஆக ஊழ்வினை என்ற வித்தை மாற்ற என்ன செய்ய வேண்டும்...?

பாம்பினங்கள் தன் உணவுக்காக விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை விழுங்குகின்றது. விழுங்கிய உயிரினங்களின் உடல்களிலுள்ள விஷத் தன்மைகளை எல்லாம் தனக்குள் சத்தாக வடித்து எடுத்துக் கொள்கிறது.

இப்படிப் பல பல உயிரினங்களின் விஷத் தன்மைகள் சேரச் சேர உடலுக்குள் அது அடங்கிய பின் அந்த விஷமே பல வண்ணங்கள் கொண்ட நாக இரத்தினமாக உறைந்து விடுகின்றது.

இதைப் போல அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன நிலையில் அந்தத் துருவ நட்சத்திரம் சர்வ நஞ்சுகளையும் ஒடுக்கி அந்த விஷத்தையே உணவாக எடுத்து ஒளியாக மாற்றும் திறன் கொண்டது.

1.எல்லா விஷத்தையும் வென்று ஒளியாக இருக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அந்த உணர்வுகளைத்தான்
3.நமது குரு காட்டிய அருள் வழியில் இப்பொழுது உங்களைப் பெறச் செய்கின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் செவி வழி ஓதி… கண் வழி கவரச் செய்து… மூக்கு வழியாக நுகரச் செய்து… உடலிலிருக்கும் இரத்தங்களில் கலக்கச் செய்து… தீமைகளை நீக்கும் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பரவச் செய்கின்றோம்…! ஆகவே
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…!
2.அது எங்கள் இரத்தங்களில் கலந்து எங்கள் இரத்தங்களில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் ஈஸ்வரா…!
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உடல் முழுவதும் படர்ந்து உறுப்புகளில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் என்று
4.அந்தத் தீமையை நீக்கும் உணர்வினை ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கச் செல்லும் போது ஒரு பத்து நிமிடமாவது ஏங்கித் தியானியுங்கள்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள சிறு குடல் பெருங்குடல் கல்லீரல் மண்ணீரல் கணையங்கள் நுரையீரல் சிறுநீரகம் இருதயம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்,

நம் உடலில் உள்ள இந்த முக்கிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்களை வீரியமடையச் செய்ய இதை போல எண்ணி நினைவாற்றலைக் கூட்டி அந்த உறுப்புகளில் நல்ல அணுக்களின் தன்மையை உருவாக்க வேண்டும்.

வாழ்க்கையில் எது வந்தாலும் அந்தக் கவலையோ சஞ்சலமோ சோர்வோ நம்மை இயக்காதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குப் பெறச் செய்து பழக வேண்டும்.

ஏனென்றால் வேதனைப்படுபவரையோ வெறுப்படைந்தவரையோ சஞ்சலப்படுபவரையோ நாம் பார்த்தோம் என்றால்
1.கண்களில் உள்ள கருமணி அதைப் படமாக்கி
2.அந்த உணர்வின் உணர்ச்சிகளை அதனுடன் இணைத்துள்ள நரம்பு மண்டலத்தின் வழி கொண்டு
3.நம் உடல் உறுப்புகளில் உணர்ச்சிகளைத் தூண்டி செய்தியாக உணர்த்தி அதை உஷார்படுத்துகிறது.
4.அதே சமயத்தில் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி
5.நரம்பு மண்டலத்தின் வழியாக உடல் உணர்ச்சிகளைத் தூண்டி
6.நாம் நுகர்ந்த உணர்வுகளை எண்ணம் சொல் செயல் என்ற வழியில் வெளிப்படச் செய்கின்றது.

உதாரணமாக ஒரு டம்ளரில் விஷத்தைப் போட்டுக் கொட்டிய பின்பு அதைச் சீராகச் சுத்தம் செய்யாமல் மறு முறை பயன்படுத்தினால் அந்த டம்பளரில் தொக்கியுள்ள விஷம் மற்ற பொருளை அதிலே போட்டாலும் அதையும் விஷமாகத் தான் மாற்றும்.

அது போல வேதனைப்படுபவரைப் பார்த்து அவர் சங்கடப்பட்ட உணர்வுகளை எல்லாம் பேசிவிட்டு அடுத்து நீங்கள் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்தால் சீராக வராது. ஏனென்றால் கண்களில் உள்ள கரு மணிகளில் அந்த உணர்வுகள் அழுக்காகப் படிந்துவிடுகின்றது.

அந்த நேரத்தில் ஒரு நோட்டிலே எழுத வேண்டும் என்றாலும் எழுத்தின் வடிவம் சரியாக வராது. அல்லது ஒருவர் நல்ல விஷயத்தை நம்மிடம் சொன்னாலும் அதைக் கேட்கும் மனது இருக்காது. சோர்வும் சஞ்சலமும் எரிச்சலும் தான் நமக்கு வரும்.

அதே சஞ்சல உணர்வை எடுத்துத் தொழில் செய்தாலும் அது நமக்குச் சரியாக வருவதில்லை. உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆகவே அந்த விஷத்தைத் துடைக்க துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கண்களில் கரு விழிகளில் படரச் செய்ய வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கருமணிகள் பெற வேண்டும் என்று எங்கும் போது அது கரு மணிகளைத் தூய்மையாக்குகின்றது.

டி.வி. ரேடியோ ஒளி, ஒலி அலைகளை பரப்பும் போது அந்தந்த ஸ்டேஷனில் வைத்தால் அந்தந்த அலை வரிசையில் எடுத்துக் காட்சிகளைப் பார்க்க முடிகின்றது, ஒலியைக் கேட்கவும் முடிகின்றது.

அதே போல துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அரும்பெரும் சக்திகள் நம் பூமியில் நிறையப் படர்ந்துள்ளது. இப்போது நான் சொல்லும் போது நீங்கள் கேட்ட உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்ற உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் பெறச் செய்ய முடியும்.

கண்களில் உள்ள கரு மணிகளைத் தூய்மையாக்குவதும் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் வீரியத்தை அடிக்கடி ஊட்டிப் பழகிக் கொண்டால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு உடலிலுள்ள அணுக்களுக்குள் பெருகிப் பெருகிப் பெருகி
2.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடையும் சக்தி பெறுகின்றோம்.
3.அதற்காகத்தான் இதை உபதேசிக்கின்றோம்…!

பூமியின் ஈர்ப்புக்குள் சுழன்று கொண்டிருக்கும் உயிராத்மாக்களை எல்லாம் “விண் செலுத்த வேண்டும்...” என்றார் குருநாதர்

நமது குருநாதர் ஈஸ்வராய குருதேவர் என்று சொல்கிறோமே அவருடைய உயிராத்மா இதற்கு முன் எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன் விண் சென்று சப்தரிஷி மண்டலங்களை அடைந்தது.

1.அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் இங்கே வரும் பொழுது தான்
2.பூமிக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனின் உணர்வுக்குள்ளும் அது பட்டு
3.அந்த உணர்வின் தன்மை மெய் ஒளிகளாக வளர்ந்து அதன் வழியாகப் (இன்றும்) பரப்பிக் கொண்டுள்ளது,

பல பாகங்களில் (வேறு பிரபஞ்சத்தில்) பரவினாலும் நம் பூமிக்குள்ளும் அந்த மெய் உணர்வுகள் பலவாறு பரவிக் கொண்டிருக்கின்றது என்ற நிலைகளை அவர் உணர்த்தினார்.

அதாவது பல கோடி ஆண்டுகளுக்கு முன் விண் அவர் சென்றிருந்தாலும் அந்தந்தக் காலத்தில் அவரிடமிருந்து வந்த ஒளி அணு மற்ற மனிதர்களுக்குள் ஈர்க்கப்பட்டு அவர்கள் மூலம் உணர்த்தி வந்தார்.
1.ஈஸ்வரபட்டர் என்ற நாமத்தில்
2.இப்பொழுது தற்சமயம் வெளிப்படுத்தியதும் அதைப் போன்ற நிலைகள் தான்.

மனிதர்கள் உடலை விட்டுச் சென்ற பின் பூமியின் பிடிப்பில் இருக்கும் அந்த உயிராத்மாக்களை எப்பொழுது... எவ்வாறு... விண் செலுத்த வேண்டும்..? என்ற உணர்வின் தன்மையை அந்த உடலிலிருந்து உணர்த்திச் சென்றார்.

தாய் தந்தையர் அவர்கள் எண்ணத்தால் கருவாகி நம்மை ஈன்றெடுத்து வளர்த்து ஆளாக்கினாலும் அவர்கள் உடலை விட்டுச் சென்ற பின் அந்த ஆன்மாக்களை எப்படி விண் செலுத்த வேண்டும்...? என்றும் அந்த மார்க்கத்தைக் காட்டினார்.

தாய் தந்தையரை நாம் எண்ணி எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று “உடலுடன் உள்ள நாம்.. உந்தித் தள்ள வேண்டும்...!”

அவ்வாறு அவர்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்க சக்திகளை
1.அவர்களுக்கு உணவாக ஊட்டச் செய்து
2.அந்த உணர்வின் சத்து கொண்டு ஒளியின் சரீரமாக அங்கே வளர்க்கச் செய்ய வேண்டும்.

அவ்வாறு வளர்க்கச் செய்யும் பொழுது தான் நம் உணர்வின் அலைகள் விண்ணை நோக்கிச் செல்லும்...! என்ற இந்த உண்மையின் நிலைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்தினார்.

அதாவது நம் முன்னோர்களை விண் செலுத்தினால் தான் நாமும் அவர்கள் வழியில் விண் செல்ல முடியும். இனம் இனத்தை வளர்க்கும் என்ற நிலையைக் காட்டினார்.

ஈஸ்வரபட்டரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா 1971வது வருடம் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று விண் சென்றது. அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்தது.

1.சப்தரிஷிகளாக ஆவதற்கு முன் - அவர்கள்
2.தன் மனித உடலிலிருந்து எவ்வாறு அந்த ஆற்றல்கள் பெற்றார்கள்...? என்றும்
3.எவ்வாறு சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்கின்றார்கள்...! என்ற நிலையையும்
4.விண் சென்ற பின் முதல் நிலையாக - ஈஸ்வரபட்டர் அந்தப் பேருண்மைகளை எமக்கு (ஞானகுரு) வழிகாட்டினார்.

குருநாதர் எப்படி எனக்குக் காட்டினாரோ அவர் காட்டிய வழிகள் கொண்டு தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையிலேயும் உங்களுக்கு இந்த உபதேசத்தின் வழி கொண்டு அதை யாம் ஊட்டுகின்றோம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை விண் செலுத்த வேண்டும்... அவர்கள் வழியில் நாமும் விண் செல்ல வேண்டும்... என்ற இந்த ஆசையை ஊட்டியதே அந்தக் குருநாதரின் உணர்வின் இயக்கம் தான்...!

September 28, 2018

என் குடும்பத்தைச் சார்ந்தோரின் வேதனை உணர்வு எப்படி என்னை இயக்குகின்றது...? எப்படிப் பாதிக்கின்றது...! என்று காட்டிற்குள் வைத்து அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்


ஞானிகள் காட்டிய மெய் உணர்வின் வழியில் நான் (ஞானகுரு) செல்வதற்காக வேண்டி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அனுபவபூர்வமாகப் பல உண்மைகளை எனக்குள் உணர்த்தினார்.

தீமைகளை என் உடலிலே புகச் செய்து உன் உடலில் தீய வினைகளாக அது எப்படி உருவாகின்றது...? அதை எந்தெந்த வழிகளில் எப்படி நீக்குவது...? என்று உபதேசித்தார்.

அதன் வழி இருபது வருடம் காடு மேடேல்லாம் அலைந்து நகருக்குள்ளும் சென்று அதை எல்லாம் அறிந்து கொண்டேன்.

ஆனால் என் குடும்பத்தில் குழந்தைகள் எல்லோரும் அப்பாவைக் காணோம் என்று ஏங்குகின்றார்கள். மற்ற குடும்பங்களில் எல்லோரும் மகிழ்ந்து வாழும் போது நம் தந்தையைக் காணோமே...! என்று வேதனையுடன் என்னை எண்ணுகின்றார்கள்.

1.அவ்வாறு அவர்கள் என்னை எண்ணும் போது
2.எனக்கு எப்படிப் பாதிப்பு வருகின்றது...?
3.அதனால் என்னுடைய சிந்தனைகள் எப்படி மாறுகின்றது...?
4.என் மனைவியும் அவ்வாறே கணவனைக் காணோம் என்று எண்ணும் போது எந்த நிலை ஆகின்றது...? என்பதனை
5.அங்கே காட்டிற்குள் வைத்தே உணர்த்துகின்றார்.

நண்பனுக்குள் நன்மை செய்தான் என்று எண்ணினால் விக்கலாகி நம் காரியங்கள் நல்லதாகின்றது. அதே சமயத்தில் துரோகம் செய்தான் பாவி...! என்று எண்ணினால் புரையேறி விபத்துக்கள் உருவாகக் காரணமாகின்றது. ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்ட நிலையில் இவ்வாறு ஆகின்றது.

அதைப் போன்று தான் உன்  மனைவியும் குழந்தைகளும் பாசத்தால்... உன்னைக் காணோமே...! என்று வேதனையுடன் எண்ணும் போது அது உன்னை எப்படிப் பாதிக்கின்றது...!

“நீ எதையோ பெற வேண்டும்...!” என்று உன்னை நான் அழைத்து வந்தேன். இருந்தாலும் உன்னைச் சார்புடையோரும் உன் மீது உள்ள பாசத்தால் இப்படி மனைவியையும் மக்களையும் விட்டு விட்டு “இப்படி அலைகின்றானே...” என்று உன்னை எண்ணும் போது எல்லோருடைய சாப அலைகளும் உன் உடலை எப்படி இயக்குகின்றது...?

அவர்கள் சாபம் இடும் நிலைகள் எதனால் வந்தது...? மனைவி மக்கள் எப்படி எண்ணுகின்றனர்...? இதை நீக்குவது எப்படி...?  நீ எப்படி மாற்றப் போகின்றாய்...? என்று அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

இருபது வருடம் வெளியிலே சுற்றினாலும் சரியான சாப்பாடு இல்லை. தண்ணீரும் இல்லை. காட்டுக்குள் சென்றால் குருநாதர் சொன்ன வழியில் பேரீச்சம்பழம் தான் உணவு. சில நேரங்களில் வெறும் பச்சிலைகள் தான் உணவு.

ஊருக்குள் வந்தால் தான சாப்பிட முடியும். ஏதாவது பிரியப்பட்டுச் சாப்பிட வேண்டும் என்றாலும் கூட ஒரு இட்லிக்கு மேலே சாப்பிட முடியாது.

சுற்றுப் பிரயாணம் எல்லாம் முடிந்த பிற்பாடு அந்த ஒரு இட்லியை இரண்டு இட்லியாக மாற்றிருக்கிறேன். அவ்வளவு தான். பட்டினியாகவே இருந்ததால் அதை மாற்ற முடியவில்லை.
1.ஆனால் மெய் ஞானத்தை அதிகமாகச் சேர்க்கிறேன்.
2.அந்த நிலை தான் உள்ளது. (இப்படித்தான் நான் கற்றுணர்ந்து வந்தேன்)

ஏன் இதைச் சொல்கின்றேன் என்றால் இன்று உலகில் மதம் இனம் மொழி என்ற நிலையில் தீவிரவாதங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டு விஷத் தன்மைகள் அதிகமாகப் பரவி விட்டது.

திடீரென்று இத்தனை கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. அதில் இத்தனை பேர் இறந்தனர் என்று இதைப் போன்ற செய்திகளை நீங்கள் டி.வி. மூலம் பார்க்கும் பொழுது எங்கோ நடப்பதை உங்கள் கண்கள் (ANTENNA) கவர்ந்து உடலுக்குள் பதிவாக்குகின்றது.

அதே மாதிரி கொள்ளையர்கள் வீடு புகுந்து அங்கிருப்பவர்களைக் கொன்று விட்டுப் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று டி.வி. மூலமாகப் பார்த்தால் அதுவும் உடலுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.

இதைப் போன்ற உணர்வுகள் நாளுக்குள் நாள் நமக்குள் பதிவாகி நல்லதைச் சிந்திப்பதற்கு மாறாக பயத்தின் உணர்ச்சிகள் அதிகமாகிச் சிந்தனை இழந்து தவறு செய்வோராக மாறிக் கொண்டே வருகின்றோம். நல்ல சிந்தனை இழந்தபின் உடலிலே நோய்களாக உருவாகின்றது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் என்ன செய்வது...?

எத்தனையோ இன்னல்களிலிருந்து மீண்டு மனிதனாக வந்தாலும் சந்தர்ப்பத்தால் சுவாசிக்கும் இத்தகைய தீமையான உணர்வுகளால் நல்ல உடலுக்குள் அசுத்தம் சேர்கின்றது.

அதனால் மனித உடலை உருவாக்கிய நல்ல குணங்கள் அழிந்து கீழான உயிரினங்களாகப் பிறக்க நேர்கின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்றார் குருநாதர். ஆகவே
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக நீ எண்ணு
2.அவனால் அமைக்கப்பட்ட உடல் கோயில் என்று நீ மதி
3.மனிதனாக உருவாகக் காரணமான நல்ல குணங்களைத் தெய்வமாக நீ மதி என்றார் குருநாதர்.

ஈசனால் உருவாக்கப்பட்ட அந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தும் நிலையாக மெய் ஞானிகளின் உணர்வுகளை அவர்களைப் பெறச் செய். மெய் ஞானிகளின் உணர்வுகள் அவர்கள் உடலில் விளைந்தால் அவர்கள் எண்ணம் சொல் செயல் புனிதம் பெறும். அவர்களை அறியாது இயக்கிக் கொண்டிருக்கும் சாப வினை தீய வினை பாவ வினை பூர்வ ஜென்ம வினைகள் எல்லாம் அகலும் என்றார்.

குருநாதர் எமக்கு இட்ட அந்த அருள் பணியைத்தான் இப்பொழுது செய்து கொண்டு வருகின்றோம்.

கடவுள் பேரைச் சொல்லி மந்திரங்களை ஜெபிக்கச் செய்து ஆவியை வைத்து “இது தான் கடவுள்...!” என்று ஏமாற்றுப்வர்கள்


ஒவ்வொரு மதங்களுக்கும் ஒவ்வொரு மந்திரங்கள் உண்டு. அந்த மந்திரத்தின் தன்மை ஜெபிக்கப்படும் போது ஒரு மனிதனுக்குள் விளைந்த இந்த மந்திரத்தின் உணர்வலைகள் வெளிப்படுகின்றது.
1.அவன் மடிந்த பின் அதே மந்திரத்தை இன்னொருவன் வலிமை கொண்டு ஜெபித்தால்
2.அவனுக்குள் மந்திரம் ஜெபித்து இறந்தவனின் ஆன்மா வந்துவிடும்.

இப்படி மந்திரங்களை ஜெபித்துச் சில ஆவிகளுடைய உணர்வுகளைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றனர்.

அத்தகைய மந்திரங்களை ஜெபித்துக் கொண்ட பின் லேசர் (LASER) இயக்கம் மெஸ்மரிசம் (MESMERISM) என்ற நிலைகளில் சில உணர்வுகளைச் செலுத்திய பின் யாருக்குச் செலுத்துகின்றார்களோ அவர்களுடைய நினைவு இழந்து விடுகின்றது.

இப்படி நினைவு இழக்கச் செய்து மருத்துவ ரீதியாக ஆபரேஷன் செய்கின்றார்கள். சில ஆவிகள் உடலுக்குல் வந்தால் அதற்கு நினைவு தெரியாது.

இதைப் போன்ற நிலைகளில் முறைப்படுத்திச் சில மருந்துகளை உபயோகப்படுத்திப் பழகிய அந்த டாக்டர் எதிர்பாராத நிலையில் உடல் பற்று கொண்டு இறக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

அதே சமயத்தில் அவர் பக்தி கொண்ட நிலையில் மந்திரங்களை ஜெபித்திருந்தால் இறந்தபின் அந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் சென்று அந்த உணர்வின் வேகத்திலேயே அது வேலை செய்யும். அவர் கற்றுணர்ந்த உணர்வுகள் எல்லாம் அவர் புகுந்த உடலுக்குள் வருகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் உலக அனுபவம் பெறுவதற்காக நான் (ஞானகுரு) சுற்றுப் பயணம் செய்யும் போது ஒரு சமயம் ஒரு இடத்தில் இதைப் போன்ற நிகழ்ச்சி நடக்கின்றது.

அவரோ படிப்பில்லாதவர். அவர் உடலுக்குள் இந்த டாக்டரின் ஆன்மா புகுந்த பின் அந்த டாக்டர் செய்த வேலை எல்லாம் செய்யத் தொடங்கினார். உடல் நிலை மிகவும் மோசமானவர்களை இவரிடம் (படிப்பறிவு இல்லாதவரிடம்) கொண்டு வந்து விட்டால் போதும்.

அந்த உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத தீயதுகளை ஆபரேஷன் (OPEN SURGERY) செய்து அகற்றுகிறார்கள் அல்லவா. அதே மாதிரி அவர் அகற்றி விடுகின்றார்.
1.அவரிடம் கத்தியுமில்லை.
2.வேறு ஆயுதமும் இல்லை.

வட இந்தியா பக்கம் சுற்றுப் பயணம் செய்யும் போது இது கண்கூடாகக் கண்ட நிலை. ஏனென்றால் இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் இதே மாதிரி சில அமானுஷ்யமான நிலைகள் செயல்படும் நிலையில் என்ன என்று தெரியாதபடி
1.தெய்வங்களின் பேரைச் சொல்லியும்
2.ஆண்டவன் பேரைச் சொல்லியும் மதங்களாக உருவாக்கப்பட்டு விடுகின்றது.

எங்கள் கடவுள் சக்தி வாய்ந்தவர். பல பல அபூர்வ நிலைகளை எல்லாம் செயல்படுத்துவார் என்று மதத்தின் உணர்வுகளைத் தனக்குள் சேர்க்கப்பட்டு மதத்திற்கு மதம் இனத்திற்கு இனம் போர் செய்யும் நிலைகளைத்தான் இன்று ஊட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

மதத்தின் கோட்பாட்டின்படி (அது எந்த மதமாக இருந்தாலும் சரி) மந்திரங்களை ஜெபிக்கும் நிலையை முறைப்படுத்தி வைத்திருப்பார்கள்.  அதை ஜெபிக்கும்படி சொல்வார்கள். ஜெபித்தால் “ஆண்டவன் உன்னைக் காப்பாற்றுவார்...!’ என்று நம்மை வசியப்படுத்தி விடுவார்கள்.

ஆண்டவன் அருளைப் பெற அந்த மந்திரத்தை இத்தனை முறை ஜெபிக்க வேண்டும். இன்னென்ன வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதற்குண்டான வழி முறைகளயும் உருவேற்றுவார்கள்.

இதே வாழ்க்கை முறையில் வாழ்ந்து இறந்த பின் நம்முடைய ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்தி பில்லி சூனியம் ஏவல் போன்ற வேலைகளுக்கு அதைப் பயன்படுத்திப் பல வேலைகளைச் செய்து “இது தான் கடவுள்...!” என்று சொல்வார்கள்.

மெய் ஞானிகள் கண்ட உண்மைகளை அறியும் ஞானத்தின் உணர்வுகள் இல்லை. தான் அறியவும் இல்லை. மற்றவரையும் அறியச் செய்யவிடவில்லை. இது தான் இன்றிருக்கும் நிலைகள்.

ஏனென்றால் நம் உயிரே கடவுள். நாம் எதை எண்ணுகின்றோமோ எதைச் சுவாசிக்கின்றோமோ உயிரிலே பட்ட பின் எண்ணம் சொல் செயலாக அது இயக்குகின்றது.

1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் சுவாசிக்கும் உணர்வு தான்
2.தெய்வமாக நின்று நம்மை இயக்குகின்றது.
3.நம் வாழ்க்கையையும் வழி நடத்துகின்றது.

மெய் ஞானிகள் கண்ட வழியினை குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உணர்த்துகின்றோம். மெய் ஞானிகள் பெற்ற அருள் உணர்வைப் பெறுவதற்குண்டான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகின்றோம்.

மெய் ஞானத்தின் உணர்வை நீங்கள் சுவாசித்தால் அது உங்களுக்குள் விளைந்து அவர்கள் கண்ட மெய் உணர்வுகளைத் “தன்னைத் தான் அறிதல்...!” என்ற நிலையில் நீங்கள் உணர முடியும்.

1.வான இயல் புவி இயல் உயிரியல் என்ற அடிப்படையில்
2.இயற்கையின் இயக்கத்தை அந்த மெய் ஞானத்தை மெய் பொருளைக் காணலாம்
3.மெய் ஒளி பெற்று என்றுமே அழியாத ஒளி உடலாகப் பெற முடியும்.
4.உங்களை நீங்கள் நம்புங்கள்.

September 27, 2018

கொசு பேன் மூட்டைப் பூச்சி பல்லி இவைகள் எல்லாம் நாம் வாழும் வீட்டிற்குள் எப்படி உருவாகின்றது…?


உடலிலே சிலருக்கு அடிக்கடி அரிப்பு ஏற்படும். தலையையும் சொறிந்து கொண்டே இருப்பார்கள்...! இதற்கு என்ன காரணம்...?

வாழ்க்கையில் அடிக்கடி சஞ்சலமோ சலிப்போ வேதனையோ பட்டால் நாம் வெளிப்படுத்தும் அந்த மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

அதனுடன் சேர்ந்து நம் உடலிலிருந்து வெளிப்படும் மணமும் கலந்து விட்டால் அணுக்களாகின்றது. அத்தகைய அணு செல்கள் உயிரினங்களாகிச் சஞ்சலப்படுவோர் சிரசிலே பேன்களாகவும் உடலிலே சீலைப் பேனாகவும் உருவாகின்றது. அதனால் இனம் புரியாத அரிப்புகள் உடலிலே ஏற்படுவது.

அதே போல
1.நாம் சலிப்பாகச் சஞ்சலமாக வெளியிடும் மூச்சலையையும்
2.நாம் கழிக்கும் மலத்திலிருந்து வெளிப்படும் ஆவியின் தன்மையையும்
3.நம் உடலிலிருந்து வெளிப்படும் மணத்தையும் சூரியன் காந்த சக்தி கவருமேயென்றால்
4.எல்லாம் சேர்ந்து இணைந்து கொசு இனங்களாக உருவாகின்றது.
5.கொசுவாக ஆன பின் மனிதனுடைய இரத்தத்தையே உறிஞ்சி வாழும் நிலைகள் பெறுகின்றது.

எந்த மனிதனின் இரத்தத்தை அதிகமாக அது குடித்ததோ அதனின் நினைவு கொண்டு மனிதன் ஈர்ப்பிற்குள் அந்த உயிராத்மா கவரப்பட்டு மனிதனின் உணர்வின் துணை கொண்டு மனிதனாகவே உருபெறும் வளர்ச்சிக்கு வருகின்றது.

வெறுப்பும் வேதனை கொண்டு படுக்கையில் படுக்கப்படும் போது சீலைப் பேனாகத் தோன்றினாலும் பெண்கள் பெரும் பகுதி அதைச் சீப்பால் நசுக்குவார்கள். நசுக்கப்பட்ட அந்த உயிரணுக்கள் அவர் உடலுக்குள்ளே தான் சேரும்.

மீண்டும் அது பட்ட வேதனையின் தன்மைகள் வரப்படும் போது அந்த அலைகளும் மனித உடலில் இருந்து வெளிப்படும் மூச்சலைகளும் கலந்து அதுவே மூட்டைப் பூச்சிகளாக வளரத் தொடங்கி விடுகின்றது.

கொசுவானாலும் மூட்டைப் பூச்சியானாலும் மனிதனைக் கடிக்கும் நிலைக்கே வருகின்றது. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தத் தீமையின் விளைவுகள் பல்லிகளாகவும் உருவாகின்றது.

மீண்டும் மீண்டும் இதைப் போன்ற உணர்வுகளை எடுத்து வளர்த்த நிலையில் நம்முடைய விளை நிலைத்தில் பயிரினங்களை வளர்த்தாலும் அதில் விளைந்த முத்துகளை வீட்டில் கொண்டு வந்து வைத்தாலும் நாம் இடும் மூச்சலையால் அதிலும் பூச்சிகளும் வண்டுகளும் விழுந்து அதை உணவாக உட்கொள்கின்றது.

ஒருவருக்கொருவர் வெறுத்திடும் நிலையோ அழித்திடும் நிலைகளையோ கொண்டு வந்தால் வீட்டிலே தேள்கள் உருவாகின்றது. இதைப்போன்ற நிலையில் அசுர குணங்களின் அணுக்கள் நமக்குள் விளைந்த பின் நல்ல தசைகளாக உருவாக்கிய அணுக்களை அது கொன்று புசித்துத் தசைகள் கரையும் நிலையும் நம் எண்ணங்கள் சிதையும் நிலையும் வளர்ந்து நம்மை நரகலோகத்திற்கே அழைத்துச் சென்று விடுகின்றது.

நாம் வாழும் வீட்டில் இதைப் போன்ற தீமைகள் உருவாகாதபடி ஆறாவது அறிவின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் கவர்ந்து அந்த அசுர சக்திகளை ஒடுக்கி நல்ல சக்திகளாக மாற்றிட வேண்டும்.

1.காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததும் சரி…
2.அதே போல இரவிலே தூங்கச் செல்லும் போதும் சரி…
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்ற எண்ணங்களை
5.நமக்குள் ஓங்கச் செய்தல் வேண்டும்.

இதனால் நம் மனமும் உடலும் தூய்மை அடைகின்றது. வாழ்க்கையில் வரும் சலிப்பையும் சஞ்சலத்தையும் அகற்ற முடிகின்றது. சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் கிடைக்கின்றது.

தொழிலையும் சீராக்க முடிகின்றது. சகோதர உணர்வுகள் வளர்கின்றது. இதே உணர்வுடன் விவசாயம் செய்யும் பொழுது நிலங்கள் பண்பட்டுப் பயிரினங்களும் செழிப்பாகின்றது. மகிழ்ந்து வாழ்ந்திடும் நிலைகளை நாம் பெற முடிகின்றது.

உயிருக்குள் ஏற்படும் அதீத வெப்பத்தின் தணலால் உண்டாகும் விளைவுகள்..!


நம் உயிரின் இயக்கத்தை ஈசன் என்றாலும் அதற்குள் ஏற்படும் துடிப்பினால் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள். அதே சமயத்தில் விஷ்ணுவிற்குக் காளி என்றும் பெயரை வைத்திருக்கின்றார்கள். ஏன்...?

சிறு தீயை வைத்து அதை விளக்காக ஏற்றும் போது அந்த விளக்கின் ஒளியில் நாம் பொருள்களைக் காண முடிகின்றது. சிறு தீயின் உதவியால் பாத்திரத்தை வைத்துச் சமையல் செய்ய முடிகின்றது.

அதிக தீயை வைத்துக் கொதிகலனாக்கும் பொழுது கடினமான இரும்பையும் உருக்கி விடுகின்றோம். இரும்பையே உருக்கும் அத்தகைய நெருப்போ மற்றதை எல்லாம் அழித்திடும் சக்தி பெற்றது. அதே போலத்தான்
1.சாதாரண எண்ணங்களை எண்ணும் போது
2.நமது உயிரின் இயக்கத்தின் ஓட்டத் துடிப்பு குறைந்து
3.சாந்த நிலையாக நம்மை இயக்கச் செய்கிறது.
4.ஆனால் அதுவே இயக்கத்தின் வேகத் துடிப்பு அதிகமாகும் போது வெப்பத்தின் தணல் அதிகமாகின்றது.
5.அப்படி வெப்பத்தின் தணல் அதிகமாகும் போது மற்றதை எரித்திடும் உணர்வின் அலைகள் நமக்குள் பெருகுகின்றது.
6.அதனால் தான் விஷ்ணுவைக் காளி என்றும் பெயரை வைத்து அழைக்கின்றார்கள்.

உதாரணமாகப் பிறர் நம்மைப் பற்றித் தவறான சொல்களைச் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாம் அதைக் கேட்கும் போது உணர்ச்சி வசப்பட்டுக் கோபம் அடைகின்றோம்.
1.அந்தக் கோபத்தால் சிந்திக்கும் திறன் இழந்து
2.சாந்தமாகப் பேசும் இயக்கத்தையும் இழந்து விடுகின்றோம்.

ஏனென்றால் அவர் சொன்ன தவறான உணர்வை நுகர்ந்த பின்  அந்தக் கொதிகலனாக ஏற்படும் உணர்வின் சக்தியை நமக்குள் உருவாக்கி விடுகின்றது நமது உயிர்.

தவறான உணர்வை நுகர்வோம் என்றால் விஷ்ணு ஓங்காரக் காளியாக மாறி நெருப்பின் தணல் அதிகமாகி
1.எவன் தவறு செய்கிறானோ அவனின் உணர்வும் நம் நல்ல உணர்வும்
2.இந்த இரண்டும் சேர்க்கப்படும் போது இயக்கத்தின் ஓட்டம் அதிகமாகின்றது.
3.அதனால் ஏற்படும் விளைவுகள் அந்தத் தீமையைக் கொதிகலனாக மாற்றுகின்றது.

செடியோ செத்தைகளோ நெருப்பில் விழுந்தால் கருகி விடுகின்றது. ஆனால் இரும்போ அந்த வெப்பத்தைத் தாங்குகின்றது. ஆக நெருப்பின் தணல் நமக்குள் கொதிகலனாக அதிகமாகும் போது நம் நல்ல உணர்வுகள் தாங்காது இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது...!

அப்பொழுது நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றி நல்லதை விளைய விடாது இது தடுக்கின்றது. இதையும் உருவாக்குவது யார்…? நமது உயிரே.

ஒருவன் தவறு செய்கின்றான். கண்ணுற்றுப் பார்த்த பின் அவனின் உணர்வைத் தவறென்று உணரப்படும் போது எதிர் நிலையாகி உராய்வின் தன்மை அதிகமாகிறது.
1.அதிலே ஏற்படும் தீயின் ஓட்டத்தால் உணர்வின் ஆக்கங்கள் அதிகமாகின்றது.
2.நம்முடைய சிந்திக்கும் திறனை மறைத்து விடுகின்றது.
3.அந்தக் கொதித்தெழும் உணர்வின் சத்து நமக்குள் ஆழமாகப் பதிந்து இரத்தக் கொதிப்பாக வருகின்றது.
4.அடுத்து நாம் எதைச் சிந்தித்தாலும் சிந்திக்க முடியாத நிலைகளும்
5.சிறு குறைகளைக் கண்டாலும் கூடக் கொதிக்கும் தன்மையாக நமக்குள் விளைந்து விடுகின்றது.

சாதாரண நெருப்பில் ஒரு பொருளை இட்டால் அது அப்படியே இருக்கின்றது. ஆனால் மரக் கட்டையை அதிகமாகச் சூடாக்கினால் அது  நெகிழ்ந்து வளைவது போல
1.நமது உயிரின் ஓட்டத்திற்குள் நுண்ணிய அலைகளாக இயக்கும் நரம்பியலின் தன்மைகளை
2.அதற்குள் இருக்கும் அமிலத்தை (ACID) இது குடித்து விடுகின்றது.

நரம்புகளுக்குள் அமிலத்தின் (ACID) தன்மை இயங்கவில்லை என்றால் நமது அங்கங்கள் சுருங்கி விடும். அதனால் தான் இரத்தக் கொதிப்பு உள்ள சிலருக்குக் கை  கால்கள் சுருங்கி விடுவதும் உள் நாக்கு இழுத்துக் கொள்வதும் அல்லது செயலற்றதாகவும் ஆகி  விடுகிறது.

நீரைக் கொதிக்க வைத்து அதிலே மரக்கட்டையைப் போட்டால் அந்தக் கட்டையை எடுத்து நாம் வளைக்க  முடியும். ஏனென்றால் நீரின் ஆவிகள் கட்டைக்குள் சென்று அதைச் எளிதாக்குகிறது.

இதைப்போலத்தான் நாம் எடுக்கும் உணர்வுகள் சீரான வெப்பத்தின் தன்மையாக வரும்போது எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ நரம்புகள் சீராக வளைந்து கொடுத்து நம்முடைய செயல்களுக்கு ஆக்கமாகின்றது.

ஆனால் அதுவே அதிகமான வெப்பத்தின் தன்மை கூடும்போது  நரம்புகளில் உள்ள அமில சக்திகளை மாற்றி வடிகட்டும் திறன் இழந்து நாம் சுவாசித்த உணர்வுகள் அந்த அமிலத்தையே கொதிக்கச் செய்து முழுமையாக விழுங்கி விடுகிறது.

அப்பொழுது அந்த அமிலத்தின் துணை கொண்டு உறுப்புகளை இயக்கக்கூடிய அந்த நரம்புகள் சுருங்கப்படும் போது கை கால்களை எல்லாம் முடக்கி விடுகின்றது.

இதற்கெல்லாம் வைத்தியம் பார்த்தார்கள் என்றால் நரக வேதனையை அனுபவிப்பார்கள். எல்லோரைப் போல நன்றாகத்தான் இருந்தோம். ஆனால் இன்று நம்முடைய நிலை இவ்வாறு ஆகி விட்டதே என்ற எண்ணங்களினால் சோர்வும் வேதனையும்படும் போது நஞ்சின் தன்மை அதிகரித்து விடுகின்றது.

வேதனை பெருகும் போது நமது உடல் உறுப்புகள் சீராக இயங்காது. உறுப்பின் தன்மையும் சிறுகச் சிறுக மாறி உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் மடியத் தொடங்கி விடுகின்றது. பின் எலும்புருக்கி (டி.பி.) நோயாகின்றது.

நாம் எடுக்கும் நல்ல உணர்வினுடைய அணுக்கள் அதனுடைய மலத்தால் தான் நல்ல எலும்பாக உருவானது. ஆனால் வேதனை என்ற உணர்வுகள் தாக்கும் போது விஷத்தைக் குடித்தால் நாம் எப்படிக் குறுகுகின்றோமோ அதைப் போல்
1.வேதனையால் உருவான அணுக்கள் பெருகிய பின் அதனுடைய மலத்தை இடும் போது
2.நல்ல எலும்பாக உருவாக்கிய அணுக்களை அது விழுங்கத் தொடங்கி விடுகின்றது.
3.எலும்பையே அது தின்றுவிடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. பிறர் செய்யும் தவறுகளையும் அவர்கள்படும் வேதனைகளையும் நாம் பார்த்துக் கேட்டுணர்ந்த நிலைகளால் இவ்வாறு வந்துவிடுகின்றது

காரிலே பிரேக் ஆயில் (OIL BRAKE) குழாய்கள் மூலம் சென்று எப்படி வேலை செய்கின்றதோ ஆயில் ஜாக்கி (HYDRAULIC JACK) மிகப் பெரிய இயந்திரங்களைத் தன் அழுத்தத்தின் தன்மை கொண்டு தூக்குவது போல
1.நமது உணர்வின் நினைவலைகள்
2.நரம்பியல்களுக்குள் இருக்கும் அமிலத்தின் மூலமாக இயக்கப்பட்டு
3.எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்குக் கையோ காலோ அதனதன் உறுப்புகளை இயக்குகின்றது.

நல்ல உணர்வின் அமிலமாக இருந்தால் சீராக இயக்குகின்றது. ஆனால் வேதனையால் பெருகும் உணர்வின் அமிலத் தன்மைகள் நரம்புகள் வழி கூடி எலும்புடன் ஒட்டிய நிலைகளில் இயக்கும் பொழுது அங்கங்களைச் சீராக இயக்க முடியாதபடி ஆகின்றது.

அதனைத் தொடர்ந்து நாம் சுவாசிக்கும் வேதனையான உணர்வுகள்  நுரையீரலில் இருக்கும் சுவாசப் பைகளிலும் குடிகொண்டு அதனுடைய மலத்தை உமிழ்த்தி சுவாசப் பையை உருவாக்கிய அணுக்களையும் உட்கொள்ளத் தொடங்கி விடுகின்றது. காச நோயாகின்றது.

இப்படி சந்தர்ப்பத்தால் நாம் எடுக்கும் உணர்வுகளால் மனித உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் மடிகின்றது. அதைக் கொன்று புசிக்கின்றது, நாம் எண்ணிய எண்ணத்தால் உறுப்புகள் நலிவடைகின்றது.

இதிலிருந்து நாம் விடுபட வேண்டுமா இல்லையா...? சிந்தியுங்கள்...!