ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 1, 2018

“எந்த நிலை வந்தாலும் நம் நிலை மாறாது,,, தீமையை நீக்கும் பழக்கமாக…” நாம் கொண்டு வருதல் வேண்டும்

நம் உடல் என்ன செய்கின்றது? நாம் சாப்பிட்ட உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிவிட்டு நல்லதை நம் உடலாக மாற்றுகின்றது.

அப்பொழுது நன்மை தீமை என்று தெரிந்து கொள்ளக்கூடிய நிலை இருக்கின்றது. தெரிந்தாலும் நாம் என்ன செய்கின்றோம்?

மாடு ஆடு இவைகளை வளர்க்கின்றோம். சாணத்தை அங்கேயே தான் போடுகின்றது. அது மேலேயே தான் படுக்கின்றது. அதற்கு முடிந்த அளவு அது தான். வேறு வழியில்லை.

நாம் அவைகளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றோம். இவ்வாறு கட்டிப் போட்டு வைத்த நிலைகளில் வேறு வழி இல்லை என்கிற பொழுது அந்த நிலை ஆகின்றது.

கட்டிப் போட்ட நிலைகளில் இப்படி இந்த உணர்வு பழக்கமாகிவிட்டால் வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றாலும் சாணத்தை இட்டபின் மீண்டும் அதிலேயே தான் படுக்கும்.

இயற்கையின் நிலைகள் இது. ஆக எதன் உணர்வு பட்டதோ அதனின் ஞானம் அங்கே வேலை செய்கின்றது.

இதைப் போன்று தான் நம் வழக்கிலும் நம்மிடம் நல்ல குணங்கள் இருப்பினும் பிறிதொருவர் தவறு செய்யும் உணர்வுகளை நாம் நுகர்ந்து பழகி விட்டால் அதனின் உணர்வுகள் நமக்குள் வந்தபின்
1.அந்தத் தவறின் நிலையையே வளர்க்கச் செய்யுமே தவிர
2.தூய்மைப்படுத்தும் நிலை இல்லாது
3.மீண்டும் அந்த அசுத்தமான சொல்லில் செயலில் தான் வாழ்க்கை அமையும்.
4.அதனின் உணர்வாகத்தான் நம் சொல்லும் செயலும் அமையும்.
ஆகவே இதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…? தூய்மைப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?

இருளை நீக்கி ஒளி என்ற உணர்வு பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும். அந்த அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
1.தீமைகளைக் கண்டு
2.தீமைகளை நுகர்ந்து
3.தீமைகளைச் சேர்க்கும் பழக்கத்தை மாற்றி
4.மகரிஷிகளை எண்ணி நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
5.அந்த அருள் ஆற்றலை நமக்குள் சேர்த்துத்
6.தீமைகளைத் தடுத்து நிறுத்தி
7.அந்த ஆற்றல்களை எல்லோருக்கும் பாய்ச்சி
8.மற்றவர்களையும் நல்லவராக்க வேண்டும் என்ற
9.இந்தப் பயிற்சியை நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

“எந்த நிலை வந்தாலும் இந்த நிலை மாறாது…!” உயிரையும் மகரிஷிகளையும் எண்ணி அந்த அருளாற்றலைச் சேர்ப்பதையே நம் பழக்கமாக நம் மூச்சாக நம் வாழ்க்கையாக அமைத்தல் வேண்டும்.