ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 20, 2018

பைத்தியம் போன்று வாழ்ந்த நம் குருநாதரின் இரகசியங்கள் மற்ற யாருக்கும் தெரியாது…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் பித்தனைப் போலத்தான் இருந்தார். பல நிலைகளிலும் பல இன்னல்களைப் பட்டார்.

விண் செல்லும் மார்க்கத்தைக் கண்டுணர்ந்து விண்ணின் ஒரு அங்கமாக அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்.

மனிதனாக வாழ்ந்த காலத்தில் பிறர் அவரைப் பார்க்கும் போது தன்னைப் பைத்தியக்காரனாகத்தான் காட்டினார். ஆனால் அந்தப் பைத்தியக்கார நிலையில் அவருக்குள் எவ்வளவு பெரிய “ரகசியங்கள்” இருந்தது. ஆனால் நம் நிலைகளுக்கு அது தெரியாது…!

அதே குருநாதரை வைத்து நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… ரசமணி செய்கிறேன்…! என்று மந்திரங்கள் தந்திரங்கள் என்று இப்படியும் சில பேர் செய்திருக்கிறார்கள். அவர் பேரைச் சொல்லி இன்றும் செய்து கொண்டும் இருக்கின்றார்கள்.

ஏனென்றால் அவர் உடலில் பல உணர்வுகள் உண்டு. அவர் எடுத்துக் கொண்ட நிலைகளிலும் கற்றுணர்ந்த நிலைகளிலும் அவர் உடலில் பிணைத்த உணர்வுகள் பல உண்டு. அதன் வழியில் உடல் ஆசை கொண்டு பொருளை எண்ணுவோர்க்குத் தீமையே கிடைக்கும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் ஒளி பெற வேண்டுபவர்களுக்கு அந்த மெய் ஒளி கிடைக்கும். அந்த அருள் ஞானத்தை நாம் பெறுவோம் என்றால் மெய் வழி காணும் நிலைகள் கிடைக்கும்.

1.குருநாதர் நமக்கு அழியாச் சொத்தாக ஞானப் பொக்கிஷமாக
2.எவ்வளவோ புதையலைக் கொடுத்திருக்கின்றார்.
3.அதை எடுத்து அடுத்துப் பிறவியில்லா நிலையை நாம் அடைய வேண்டும்.
4.அந்தச் சக்தியை பெறுவதற்குண்டான நிலையைத்தான் நம் குரு வழியில் உங்களுக்குள் பதியச் செய்து கொண்டே வருகின்றோம்.

நாம் இந்த உடலில் இருக்கும்போதே அந்த அருளைப் பெற வேண்டும். அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவியும் இதைப் போல் எண்ணுதல் வேண்டும்.

இன்று துருவப் பகுதியில் பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியர் வழியில் விண்ணுலகம் அடைவோம். இன்னொரு பிறவி நமக்கு வேண்டாம். 

குருநாதரைப் போன்று என்றும் ஏகாந்த நிலை பெற்று விண்ணிலே அவருடன் சென்று ஐக்கியமாவோம்.