ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 22, 2026

அருள் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்... குரு அருள் உறுதுணையாக இருக்கும்

அருள் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்... குரு அருள் உறுதுணையாக இருக்கும்

 

உலகில் நடக்கும் எத்தனையோ நிகழ்ச்சிகளை... நடப்புகளை ஒளிபரப்பு செய்கின்றார்கள். டி.வி. மூலம் அந்தந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கும்போது அந்த அலைவரிசையில் இருந்து அதை நாம் காண முடிகின்றது.

இதைப் போல
1.மனித வாழ்க்கையில் தீமை நன்மை என்ற நிலையில் நாம் பதிவு செய்துள்ளோம்.
2.தீமை செய்வோரை எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது... தீமையின் செயலாக ஆக்குகின்றது
3.தீமையின் உணர்வே நமக்குள் உருவாகின்றது... நோயாகவும் மாறுகின்றது.

அவ்வாறு ஆகாதப்படி தடுக்க தீமை அகற்றிய அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அதை நினைவுக்குக் கொண்டு வந்து மகரிஷிகள் அருள் சக்திகளை நாங்கள் பெறுவோம்... எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி இந்த வாழ்க்கையைத் தொடருங்கள்.

1.துன்பமோ நஷ்டமோ கஷ்டமோ வந்தாலும் அதை மனதில் பதிவு செய்யாதீர்கள்.
2.மகரிஷிகள் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்... எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்...
3.உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று அதை வலுவாக்குங்கள்.

நோயாளியைப் பார்த்தால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்றும் அந்த நோய் நீங்க வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்றும் எண்ணுங்கள். பின் மகரிஷிகள் சக்தியால் அவர் நோய்கள் நீங்கி உடல் நலமாக வேண்டும் என்று சொல்லுங்கள்.

அவர்களையும் இதைப் போன்று மகரிஷிகள் அருள் சக்தியால் உடல் நலம் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணும்படி சொல்லுங்கள். அவ்வாறு அவர்களைப் பெறச் செய்தால்
1.முதலில் அவர்களை உற்றுப் பார்த்து நாம் பரிவுடன் நுகர்ந்து அவருக்கு உதவி செய்திருந்தாலும் அந்த உணர்வு நமக்குள் வராது தடுத்து
2.அருள் ஒளியை அவருக்குள் பாய்ச்ச முடியும்... இருளை அகற்ற முடியும்.

இந்த முறைப்படி செயல்பட்டு வாருங்கள்... எந்தத் தீமையும் நமக்குள் வளராது தடுக்க முடியும். தொழிலில் நஷ்டம் வந்தாலும் நஷ்டத்தைப் பற்றி எண்ணாதீர்கள்.

ஒரு வீட்டைப் புதிதாகக் கட்ட வேண்டும் என்றால் எத்தனையோ நிலைகளை அதற்குத் தயார் செய்கின்றோம். அதிலே குறைபாடுகள் வந்தால் திருத்திக் கொள்கின்றோம்.

இது போன்று புறநிலையில் குறைகள் வரும் போது அவைகளை நாம் திருத்திக் கொள்கின்றோம்.

1.எத்தகைய சூழ்நிலையிலும்... வாழ்க்கையில் நாம் எண்ணியது நடக்கவில்லை என்றால் வேதனைப்பட வேண்டியது இல்லை.
2.நாளை இதைச் சீர்படுத்துவோம்... உயர் ஞானத்தால் அதை மாற்றியமைப்போம்... தொழில் வளம் பெறுவோம்
3.எல்லா நலமும் வளமும் பெறுவோம் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.
4.உங்கள் எண்ணம் அதை ஈடேற்றும்... செயலாக்கும்.
5.மகரிஷிகள் உணர்வுகளுடன் ஒன்றியே நீங்கள் இதைச் செயல்படுத்துங்கள்.

எம்முடைய உபதேசங்களை எல்லாம் நீங்கள் கேட்கின்றீர்கள். விடிய விடிய அதைக் கேட்டுவிட்டுக் காலையில் எழுந்த பின் இராமனுடைய சகோதரி சீதையா...? என்பது போன்று மீண்டும் கேட்டு விடாதீர்கள்.

உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும்... அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த அருளை நீங்கள் ஒவ்வொருவரும் பரப்புங்கள். அறியாது வரும் இருளைப் போக்குங்கள். உங்கள் அருகில் உள்ளோருக்கும் உங்கள் பார்வையால் அவர்கள் தீமையைப் போக்கும் சக்தியாக நீங்கள் வளருங்கள்.

அந்தச் சக்தியை நீங்கள் பெறவே அடிக்கடி உபதேசிக்கின்றோம். அருள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.

டி.வி.யில் நாம் குறிப்பிட்ட ஸ்டேஷனைத் திருப்பி வைத்த பின் அதன் மூலம் கவர்ந்து படங்களை நாம் காணுவது போன்று அருள் ஞானிகள் உணர்வுகளைக் காற்றில் இருந்து எளிதில் பெற முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கினால் அந்த அருளை உங்களுக்குள் பெற ஏதுவாகும். உங்கள் சொல் பிறர் தீமைகளை அகற்றும். உங்கள் எண்ணம் உங்கள் தொழிலை உயர்வாக்கும்... வாடிக்கையாளர்களை உயர்வாக்க உதவும்.

ஆகவே... தியானத்தின் மூலம் உங்களுக்குள் அருள் சக்திகளைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
1.இருந்த இடத்திலிருந்தே உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க யாம் உதவி செய்கின்றோம்.
2.அருள் வழியில் வாழுங்கள்... அருளானந்தம் பெறுங்கள்.