ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 18, 2024

“காற்று நூல்” தருவது எதற்கப்பா…?

ஜீவ பிம்பச் சரீரத்தின் அகக்கருவிகளான மனம் அறிவு நினைவாற்றல் செயல்படுதலின் முனைப்பு கொண்டு அண்டசராசரங்களையும் பஞ்ச பூதத் தத்துவமாகச் சரீரத்தில் கண்டுணர்ந்த செயலுக்குத் தெய்வீக உருவ அமைப்புகளை ஞானிகள் காட்டியதே “உயர் ஞானத் தெளிவிற்கே…!”

அதனை எல்லாம் இன்று இந்த மனித குலம் எடுத்துக் கொண்ட விதங்களை என்ன என்று சொல்வது…?

பக்தியாகப் பஜனைகள் பாடுகின்றார்கள்
1.ஆனால் நாத விந்து தான் நாராயணன் என்பதை உணர்ந்தானா…?
2.நாராயணன் நீருக்குள் சர்ப்பப் பஞ்சணை மேல் பள்ளி கொண்டுள்ளான்…! என்று சித்தர்களால் சூட்சமமாகக் காட்டப்பட்டது.

“பச்சை வண்ணப் பரந்தாமன்…” என்று கூறிய நாராயணன் வயிற்றுப் பகுதியுள் நாபியுள்ள இடத்தில் சர்ப்பம் போல் வட்டமிட்டு ஓடும் பஞ்ச பூதத் தத்துவ நாடிகளைச் செயல்படுத்திடும் பத்துத் தலைகள் போன்ற பச்சை வண்ண நாடி நீரமிலம் என்று கூறப்பட்ட தொப்புள் இடத்தில் (நாபி) சுதியுற்றுச் செயல்படும் விதமே
1.குளிர்ந்த நீருக்குள் நாராயணன்…
2.அதாவது சரீர உஷ்ணத்தைக் குதம் என்றிட்ட மலவாய்ப் பகுதியில் சிறிது தூரத்தில் மேலே உள்ள
3.வெப்பமிலம் செயல்படும் அதி உஷ்ணத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திடும் செயலே “உஷ்ண நாதம் - காத்திடும் விஷ்ணு…!” என்பது.

மூலத்தைக் கணபதி என்றும்…
குறிப்பகுதி பிரம்மன் என்றும்…
நாபிப் பகுதி விஷ்ணு என்றும்…
இருதயப் பகுதியை உருத்திரன் என்றும்…
கண்டப் பகுதியை மஹேஸ்வரன் என்றும்…
நெற்றிப் பகுதியை சதாசிவன் என்றும்…
சிரசின் உச்சிப் பகுதியை ஆயிரம் இதழ் மலர்ந்த தாமரையினுள் ஆகாய ஜோதி என்றும்… ஈஸ்வரர் என்றும்…
மறை பொருளாக நற்சுவாசம் கொண்டு உண்மையை உணர்த்த வந்த ஞானிகளின் செயல் இன்று மாறு கொண்டு விட்டது.

இந்தக் காற்று நூல் தருவதெல்லாம் எதற்கப்பா…?

எந்தப் பொருளிலும் உண்மையை அறிதலே ஞானம். காற்று நூல் காட்டி உண்மையை உணர்த்தியது மூச்சைப் பிரித்தறியும் எண்ணச் செயலுக்கு அல்லவப்பா…! அந்த எண்ணம் கூடச் சுவாசத்தை மாற்றிவிடும்.

ஈஸ்வரபட்டனாகிய யான் சுட்டிக் காட்டும் இந்தப் பேரின்பத் தியான வழிதனில் நல்லெண்ணம் கொண்டு ஆத்ம வலுவைக் கூட்டி உயர்ந்த நிலை பெறவே “எல்லோரையும் அன்புடனே அழைக்கின்றேன்…!”

எண்ண வலு பெற்றிடும் நம் தியானத்தில்
1.சுவாசத்தின் செயலை உணராது செயல்படாமல்
2.உணர்வுடன் கூடிய சுவாசம் எடுத்திட்டாலே அனைத்து நற்பயன்களும் சித்திக்கும்…!
3.ஆத்மாவும் சுயப் பிரகாசத்தைப் பெற்றிடும்…!

ஒரு வழிப்பாதை

விஞ்ஞானிகள் ஒரு இராக்கெட்டை பூமியின் பிடிப்பிலிருந்து விடுபட்டு விண்ணிலே வீசுவதற்கு “மிகவும் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு தான்” அதைச் செயல்படுத்துகின்றார்கள்.

விண்ணின் ஆற்றலை இங்கிருந்து அறிந்துணர்வதற்காக “ரேடர்” என்ற சாதனமும் “எக்ஸ்ரே” போன்ற சில செயலாக்கங்களையும் அதனுடன் பொருத்துகின்றார்கள்.

ரேடர் என்ற நிலையும் எக்ஸ்ரே என்ற நிலையும் வைத்துத் தான் பல பல உணர்வின் தன்மையைக் கண்டறிகின்றனர் விஞ்ஞானிகள்.

இதைப் போன்று தான்
1.மனிதனாக இருக்கும் நாமும் “ஞானிகள் உணர்வின் சக்தியை” நமக்குள் செலுத்தி விண்ணின் ஆற்றலைப் பெற முடியும்.
2.கண்ணை ரேடராக வைத்து… கண்ணின் நினைவலைகளை எக்ஸ்ரேவாக வைத்து…
3.மற்ற காந்த அலைகளுடன் தொடர்பு கொள்ளும் போது விண்ணின் சக்தியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

ஆனால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒலி ஒளி என்ற… “காந்தப்புலனின் ஆற்றல் மிக்க நிலைகளை…” அது எந்த அளவிற்கு இணைக்கின்றோமோ அதன் வழி கிடைக்கின்றது.

அதாவது பல காந்தங்கள் (மேக்னட்) கொண்டு சுழற்றப்படும் போது (ஜெனரேட்டர்) எந்த அளவிற்கு மின்சாரம் அதிகமாக அதிலே உற்பத்தி ஆகின்றதோ… அதைப் போன்று நாமும் ஆற்றலைப் பெற முடியும்.

இதைப் போன்று தான்
1.விண்ணிலிருந்து வெளிப்படும் காந்த அலையின் தன்மை அது படர்ந்து பரவி வருவதை… பூமியின் செயல்கள் அது இழக்கச் செய்தாலும்
2.அதே உணர்வின் தன்மையை காந்த அலைகளாக நாம் மோதும் பொழுது
3.ஒரு சீரான நிலைகள் கொண்டு… ஒரு வழிப் பாதையில் நம்முடைய எண்ணங்களை ஒருங்கிணைக்கச் செய்யப்படும் பொழுது
4.உடலை விட்டு உயிராத்மாக்கள் பிரிந்து வெளியே சென்றால் அந்த உணர்வுடன் நாம் தொடர் கொண்டு…
5.அனைவரும் சேர்ந்து ஏக குரலில் நாம் உணர்வின் ஒலியை எழுப்பி உந்தித் தள்ளப்படும் போது
6.அந்த உயிராத்மாக்களை விண் செலுத்த முடிகிறது… விண்ணிலிருந்து வரும் சக்திகளைப் பெறவும் முடிகிறது
7.எந்தக் குடும்பத்தில் யார் இதைச் செயல்படுத்தினார்களோ அந்த குடும்பத்தார் ஈர்ப்புக்கு சப்தரிஷி மண்டல ஒளி அலைகள் கிடைக்கின்றது.

ஆகவே… குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவருமே உடலை விட்டுப் பிரிந்தவர்களை விண் செலுத்தி… குலதெய்வங்களாக அவர்களை எண்ணி… அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வுடன் தொடர்பு கொள்ளும் பொழுது… அந்த ஞானியர்கள் நம் பூமியிலே வாழ்ந்த காலத்தில் அவர்கள் வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க சக்திகளை சுலபத்தில் நாம் எடுத்துச் சுவாசிக்க முடியும்.

அந்த மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்களை நீக்கி…
1.மெய் ஒளியின் சுடராக எப்படி ஆனார்களோ…
2.எந்த விண்ணின் நிலை அடைந்தார்களோ…
3.அவர்கள் சென்ற பாதையில் நாமும் சென்று அதை எட்டிப் பிடிக்கும் ஆற்றல் நமக்குக் கிடைக்கின்றது.

இது தான் ஞானிகள் கண்ட வழி…!

இந்த உடலில் நல்ல நினைவுடன் இருக்கும் பொழுதே நாம் இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.

காரணம்… காற்று மண்டலம் நச்சாக இருக்கும் இந்த வேளையில் வராகன் எப்படிக் கெட்டதை எண்ணாது… அந்த நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்து எடுத்ததோ இதைப் போன்று தியானம் எடுத்துக் கொண்ட அனைவருமே தனது வாழ்க்கையில் வரக்கூடிய
1.சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ சோர்வோ வெறுப்போ பயமோ ஆத்திரமோ அதை எல்லாம் பலவீனப்படுத்தும் நிலையாக
2.ஒவ்வொரு நிமிடத்திலும் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொண்டு
2.மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் உருவாக்கும் ஆற்றலைப் பெற வேண்டும்.

நாம் எண்ணி எடுக்கும் உணர்வுகளைப் பிரம்மமாக இருந்து நம் உயிர் தான் சிருஷ்டிக்கின்றது. ஆகவே உயிரை நாம் ஈசனாக மதிப்போம். அந்த உயிரின் துணை கொண்டு தான் உயர்ந்த சக்திகளை நாம் பெற முடியும். அந்தப் பக்குவத்தைத்தான் இப்பொழுது உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

விஞ்ஞானிகள் ரேடார் என்ற சாதனத்தைக் கம்ப்யூட்டருடன் இணைத்து விண்ணின் ஆற்றலைச் சுலப நிலைகள் கொண்டு எப்படி அறிந்து கொள்கின்றார்களோ இதைப் போன்று தான்
1.மூதாதையரின் ஆன்மாக்களை நாம் உந்தி விண்ணிலே செலுத்தி ஒளிச் சரீரம் பெறச் செய்யும் போது
2.சப்தரிஷி மண்டலத்தின் ஆற்றல் நமக்குள் பெருகுகின்றது… எண்ணும் பொழுதெல்லாம் அது கிடைக்கிறது.

அந்த உணர்வின் தன்மையைச் சுவாசித்து உடலுக்குள் ஒவ்வொரு நிலையிலும் சேர்க்கப்படும் போது மெய் ஒளியின் சுடராக நாம் எடுக்க முடியும்.

ஆகவே… வாழ்க்கையில் வரும் தீமைகளை மறந்து… மெய் ஒளி பெற வேண்டும் என்ற எண்ணங்களை உங்கள் எல்லோருடைய உள்ளங்களிலும் ஒருங்கிணைத்து… இதைப் பதிவு செய்கிறோம்.

ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தியைப் பெறுவதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தத் தகுதி ஏற்படுத்துகின்றோம்
1.மகரிஷிகளும் இதைத்தான் செய்தார்கள்
2.என் குருநாதரும் அதைத் தான் செய்தார்.
3.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கும் அதைத் தான் யாம் செய்கின்றோம் (ஞானகுரு).