ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2014

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையின் நிலைகள் - 8

பிறரைப் பார்த்து நாம் அங்கலாய்த்தால் என்னவாகும்?
அங்காளேஸ்வரியின் சிலையைப் பார்த்தோமென்றால், அங்காளேஸ்வரி ஒரு குழந்தையைத் தன் மடியில் படுக்க வைத்து குழந்தையின் குடலை உருவுவதைப் போன்று சிலை வடித்திருப்பார்கள்.

காரணம், மனிதர்கள் சிலர் மற்றவர்கள் நம்மைவிட பல விதத்தில் முன்னேறும் பொழுது இவர்களுக்கு நம்மைவிட இவன் முன்னேறுகிறானே என்ற அங்கலாய்ப்பு வந்து விடுகின்றது.

இப்படிப்பட்ட அங்கலாய்ப்பு உணர்வுகளைத் தன்னுள் எடுக்கும்பொழுது, எடுத்துக் கொண்ட அங்கலாய்ப்பு உணர்வுகள்
அவர்கள் உடலில் குழந்தை போன்றிருக்கும்
நல்ல குணங்களைக் கொன்று விடுகின்றது
என்பதே ஞானிகள் உரைத்த உண்மை.
சித்திரபுத்திரன் கணக்கு
நாம் எதனின் காட்சியைக் கண்களால் காணுகின்றோமோ அது சித்திரம் ஆகின்றது.

கண்களால் கண்ட காட்சியின் உணர்வுகள் நமது சுவாசத்தில் கலந்து நம்முள் ஜீவ அணுவாக விளைந்துவிடுகின்றது. இது புத்திரன்.

ஆக, சித்திரபுத்திரன் கணக்குப் பிரகாரம் எமன் தண்டனை அளிக்கிறான் எனும்பொழுது
நாம் எதனின் உணர்வைக் கவர்ந்து
நம்முள் விளையச் செய்தோமோ
அதனின் உணர்வின் செயலாக நமது எண்ணங்கள் இயங்கி
நமது உணர்வின் எண்ணங்களுக்கொப்ப
நம்மை உயர்ந்தவோ தாழ்த்தவோ செய்கின்றது.
எமன் என்பது யார்?
மனிதரின் சொர்க்கத்தையும் நரகத்தையும் எமன்தான் தீர்மானிப்பதாகக் கூறுவார்கள்.

எமன் என்பது நமது எண்ணங்கள்தான். நமது எண்ணங்கள் நல்லதாக இருக்கும் பொழுது நமக்குள் நன்மையும், தீயதாக இருக்கும் பொழுது தீமையும் விளைகின்றது.

ஆகவே, நமது எண்ணங்கள் எப்பொழுதும் நமக்கும் பிறருக்கும் நன்மை தருவதாக இருக்க வேண்டும்.

September 29, 2014

தீமைகளை நீக்க நாம் பழகிக் கொள்வோம் - 2

நமக்குள் எத்தனை குணங்கள் இருந்தாலும்
அதில் நாம் எதை நினைவுபடுத்துகின்றோமோ
அந்த குணத்தின் அடிப்படையில்தான் நாம் பேசுகின்றோம்.
அந்த நினைவுதான் நமக்கு ஞானம்.

நாம் கோபமாக அல்லது வெறுப்பாக இருக்கின்றோமென்றால் அந்த குணத்திற்குத்தகுந்தவாறுதான் ஞானம் வரும்.

இவைகளுக்கிடையில் மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத்தான் இந்த தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

இந்த முறைப்படி நீங்கள் தியானித்து ஓம் ஈஸ்வரா குருதேவா என்று புருவமத்தியில் உங்கள் உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கவேண்டும்.

இவ்வாறு ஏங்கிவிட்டு மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர்ந்து, அதிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அந்த சக்தி பெறவேண்டும் என்று உடலுக்குள் தியானமிருக்கும் பொழுது காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் உடலில் எங்கெங்கெல்லாம் வலி வருகின்றதோ
அங்கெல்லாம் மகரிஷிகளில் அருள் சக்தி படரவேண்டும்,
உடலிலுள்ள நோய்கள் நீங்கவேண்டும்
என்ற இந்த உணர்வை எடுத்து
நீங்கள் தியானமாக வைத்துக் கொள்ளலாம்.

அப்பொழுது, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் துன்பங்கள் அனைத்தும் போகும், பிணிகள் நீங்கும்.

ஆக, மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எண்ணி எடுத்தால்தான் அந்த சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை பயன்படுத்திப் பழகிக் கொள்ள வேண்டும்.

September 25, 2014

உங்களால் முடியும் - ஞானகுரு

உங்களால் முடியும்
யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் தத்துவங்களை அறிபவர்கள் 
ங்களால் இந்தத் தத்துவங்களைக் கடைப்பிடிக்க முடியுமா?
அதன் பலன்களைப் பெறமுடியுமா?
என்று தங்களுக்குள் தன்னம்பிக்கையின்றி கேள்வி கேட்டு சோர்வடைந்துவிட்டால் அதுவே உங்களுக்குத் தடைக்கல்லாகிவிடும்.

ஆனால், “பெறுவோம்…”, “முடியும்…”, என்று தன்னம்பிக்கையுடன் கடைப்பிடித்தால் அதன் பலன்கள் உங்களில் நிச்சயம் விளையும்.
சகஜ வாழ்க்கையிலிருந்தே மெய்ஞானம் பெறமுடியும்
ஒரு விஞ்ஞானி, தான் ஒரு புதிய பொருளைக் கண்டறியும் திட்டத்தோடு தனது எண்ணத்தையும் கவனத்தையும் முழுமையாகச் செலுத்தி புதிய பொருளைக் கண்டறிகின்றார்.

இதைப் போன்று, தமது சகஜ வாழ்க்கையில் தாம் மெய்ஞானத்தைப் பெறவேண்டும் எனும் நோக்கோடு மெய்ஞானிகள் காண்பித்த அருள்வழியில் செயல்படும் மனிதர்கள் தம்மில் மெய்யுணர்வைப் பெறுகிறார்கள்.
நீங்கள் மெய்ஞானி ஆகின்றீர்கள்
தொழில்நுட்பம் சம்பந்தமான பாடத்தைப் படிக்கும்பொழுது நீங்கள் என்ஜினியராக ஆகின்றீர்கள்.

விஞ்ஞானம் சம்பந்தமான பாடத்தைப் படிக்கும் பொழுது நீங்கள் ஒரு விஞ்ஞானியாக ஆகின்றீர்கள்.

மருத்துவத்தைப் படிக்கும்பொழுது நீங்கள் ஒரு டாக்டராக ஆகின்றீர்கள்.

இதே போன்று மெய்ஞானத்தின் உணர்வுகளை உங்களில் வளர்க்கும் பொழுது நீங்கள் மெய்ஞானிகளின் அருள்வட்டத்தில் மெய்ஞானியாக ஆகின்றீர்கள்.
குருவின் துணைகொண்டு மெய்யுணர்வை வளர்க்க முடியும்
மாணவர்கள் தங்களது ஆசிரியரின்பால் உணர்வினைச் செலுத்தி
தங்கள் பாடங்களில் தெளிவினைப் பெறவேண்டும்
என்று எண்ணி ஏங்கினால்
பாடம் சம்பந்தமாக பல விளக்கங்களைத் தங்களுள் பெறமுடியும்.

இதே போன்று, சிஷ்யர்கள் தங்கள் குருவின்பால் உணர்வினைச் செலுத்தி குருவின் அருள்துணை கொண்டு மெய்யுணர்வின் தன்மையைத் தங்களுள் வளர்க்க முடியும்.

September 24, 2014

தீமைகளை நீக்க நாம் பழகிக் கொள்வோம் - 1

நோய்களை நீக்கும் ஆற்றல்
புலி கருடன் போன்ற பல்வேறு உயிரினங்களுடைய உணர்வின் அணுக்களை இணைத்து விளைந்த தாவர இனங்களைக் கண்டுணர்ந்து, அத்தாவர இனங்களிலிருந்து நோய்களைப் போக்கும் விஷத்தன்மைகளை நீக்கும் மருந்துகளை உருவாக்கி
மனித இனத்தின் நல்வாழ்வுக்கு வழிவகை செய்த
மெய்ஞானிகளின் அருளாற்றலை நாம் பெற்றால்
நம்முள் உள்ள விஷத்தன்மைகள் நீங்கி
ஒளியின் உணர்வை நம்முள் பெறமுடியும்.
வேதனைகளை நீக்கும் மெய்ஞானிகளின் அருள் உணர்வுகள்
சலிப்பான உணர்வை நாம் நுகரும்பொழுது
நம்முள் உப்புச்சத்தை உருவாக்கும் அணுக்கள் உருவாகின்றன.

மற்றும் இதன் தொடர் கொண்டு அசுத்த வாய்வுகள் உருவாகி, நரம்பு மண்டலங்களில் தங்கி “பளீர், பளீர்” என்று வலி எடுக்கும்.

ஆகவே, மெய்ஞானிகளின் அருள் உணர்வை நம்முள் இணைத்து சலிப்பின் உணர்வை நம்மிடமிருந்து நீக்கும் நிலை பெறவேண்டும்.
விஷத்தன்மைகளை அகற்றும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள்
கருடனின் நிழல் தன் மீது விழுந்தாலே
சில வகை விஷம் கொண்ட பாம்புகள் இறந்துவிடும்.

அதைப் போன்று மகரிஷிகளின் அருள் உணர்வு எனும் நிழல் நம்மீது விழுந்தாலே நம்மிடம் அறியாது சேர்ந்த விஷத்தன்மைகள் அகன்று ஓடிவிடும்.
விஷத்தை வென்றது துருவ நட்சத்திரம்
ரோஜாவும் மல்லிகையும் மணம் பரப்புவதற்கு
விஷத்தின் இயக்கமும் காரணம்.
ஆனால், துருவ நட்சத்திரம் விஷத்தை வென்ற நிலை.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம்முள் சேர்க்கும் பொழுது நம்மிடமிருந்து வெளிப்படும் மணம் அனைத்து விஷங்களையும் தீமைகளையும் வெல்லக்கூடியதாக இருக்கும்.

September 22, 2014

காசிக்குச் சென்றால் பாவம் போகுமா...?

தாய் தந்தையரின் அருளாசி இல்லாது நமக்கு உயர்வு இல்லை
தாயின் அன்பினாலும்,
தந்தையின் அரவணைப்பினாலும் நாம் வளர்ந்தோம்.
அந்தத் தாய் தந்தையரின் அருளாசி இல்லாமல் நமக்கு உயர்வு கிடையாது. உயர்ந்த சக்தி பெறமுடியாது.

தாய் தன் குழந்தை உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று சதா தன் எண்ணத்தை வலுப்படுத்தியவர். ஆகவே, தாய் தந்தையரை நாம் முதல் தெய்வங்களாக வணங்கி நம்முள் நல் உணர்வின் எண்ணங்களை வலுப்படுத்துவோம்.

நம் தாய் தந்தையர் தெய்வ சக்தி பெறவேண்டும் என்று தியானிப்போம்.
ஐந்து புலனறிவு – பஞ்ச பாண்டவர்கள்
சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம், காந்தம், விஷம் இவை இணைந்து தனக்குள் ஈர்த்துச் சேர்த்துக் கொண்ட மணம், உணர்வு என்ற நிலையில் ஐந்து புலனறிவு கொண்டதாக இயங்குகிறது.

இவ்வாறு இயங்குகிறது என்பதற்கு “பஞ்ச பாண்டவர்” என்று காரணப் பெயரிட்டார்கள் ஞானிகள்.
அர்ச்சுனனுக்கு கண்ணன் சாரதியாக இருந்தான்
அர்ச்சுனன் என்பது உடலின் உணர்வுகள்.

கண்ணன் எனும் கண், தான் பார்த்த உணர்வு கொண்டு சாரதியாக இருந்து உடலின் உணர்வுகளை இயக்குகின்றது என்பதை மக்கள் அனைவருக்கும் உணர்த்திடும் நிலையாக ஞானிகள் அன்று கண்ணன் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்தான் என்று காவியமாக உரைத்தனர்.
மனித உணர்வின் இயக்கத்தின் நிலைகள்
தான் செல்வத்தை வைத்துக் கொண்டு இதைத் திருடிச் செல்ல,
“திருடன் வந்துவிடுவானோ..,
திருடன் வந்துவிடுவானோ..?”
என்று அச்சத்தின் உணர்வுகளை ஒருவர் தனக்குள் வளர்க்கும் பொழுது இந்த அச்சத்தின் உணர்வுகள் பரத்தில் (வெளியில்) பரவி, திருடனை இவரிடம் அழைத்தே வந்துவிடும்.

இது மனித உணர்வின் நிலைகள்.
சேவற்கொடியோன் - விளக்கம்
அதிகாலையில் கூவி, அன்று விடியப் போவதை முன் கூட்டியே அறிவிக்கும் சேவலைப் போன்று,
நமது ஆறாவது அறிவானது
நாளை என்ன நடக்கும் என்பதை
முன் கூட்டியே உணர்த்தும் தன்மை வாய்ந்தது.

ஆகையால், ஆறாவது அறிவின் வடிவான முருகனை சேவற்கொடியோன் என்று காரணப்பெயர் வைத்து அழைத்தனர் ஞானிகள்.
தீமைகளை வேகவைத்தால் அவை வளரமுடியாது
தாவர இன வித்துக்களை வேக வைத்து நிலத்தில் போட்டால் அவ்வித்துக்கள் முளைப்பதில்லை.

இது போன்றே தீமை தரும் உணர்வுகளை நாம் அறியாது நுகர நேர்ந்தால் உடனே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று எண்ணினால், நகர்ந்த அந்த அருள் உணர்வுகள் நாம் நுகர்ந்த நஞ்சான உணர்வுகளை ஒடுக்குகின்றது.

நஞ்சான உணர்வுகள் நமக்குள் விளைவதில்லை.
கொசு மனிதனாகின்றது? நாம் எப்படி மகரிஷி ஆகவேண்டும்?
மனித இரத்த வாசனையைக் கண்டு
மனிதர்களையே சுற்றி வந்து மனிதர்களைக் கடிக்கும் கொசு,
அது இறந்தபின் கொசுவின் உயிரான்மா
மனித ஈர்ப்புக்குள் சென்று அடுத்து மனித சரீரம் பெறுகின்றது.

இது போன்று, மகரிஷிகளின் அருள் ஒளியின் உணர்வுகளை எண்ணி ஏங்கி தம்முள் வளர்ப்பவர் அருள் ஒளியின் ஆற்றலைத் தம்முள் பெறுவார்கள்.
சந்தர்ப்பத்தை உருவாக்கும் திறன் பெற்றவன் மனிதன்
பிரபஞ்சத்தில் சூரியனின் இயக்க உணர்வுகள்
சந்தர்ப்பத்தால் மோதும்போதுதான் உருமாற்றங்கள் ஏற்படுகின்றது.

ஆனால், மனிதர்கள் அந்த சந்தர்ப்பங்களை உருவாக்கும் திறன் பெற்றவர்கள்.
நாம் எதை எண்ணி ஏங்கி எடுக்க (சுவாசிக்க) வேண்டும்?
பட்டுப் புழு தன்னைச் சுற்றி கூடு கட்டி,
தான் கட்டிய கூட்டிற்குள்ளேயே அடைபட்டுவிடுகின்றது.

பின், தான் கூட்டிலிருந்து வெளியில் வரவேண்டும் என்ற உணர்வை எண்ணி ஏங்கி எடுத்து பட்டுப் பூச்சியாக உருமாறி வெளிப்படுகின்றது.

இதைப் போன்று துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கி தியானிக்கும்பொழுது துருவ மகரிஷிகளின் அருள் சக்தியினை நாம் பெறும் பருவம் பெறுகின்றோம்.

அப்பொழுது, இந்த உடலைவிட்டு அகன்றால் நாம் என்றும் பதினாறு என்ற அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.
காசிக்குச் சென்றால் பாவம் போகுமா?
பாவத்தைத் தொலைக்க இராமேஸ்வரம், காசி கங்கை போகிறேன் என்று சொல்கிறார்கள். அப்படிப் போனால் நமது பாவங்கள் அனைத்தும் போய்விடுமா?

நமக்குள் அருள் உணர்வுகளைப் பெருக்கும் பொழுதுதான் பாவங்கள் தொலையும். மகிழ்ச்சியின் உணர்வுகள் பெருகும்.

September 21, 2014

பழனியில் பித்தரைப் போன்று இருந்த ஈஸ்வரபட்டரின் சரித்திரம் (பூர்வாங்கம்)

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் மங்களூரில் ஏழ்மையான ஒரு குடிமகனாகப் பிறந்தார். ஈஸ்வர மங்களா என்ற ஊரில் ஒரு சிறு கோவில். அவர் தாய் தந்தையர் பூஜித்து வந்த ஆலயம் அது.

அன்னை தந்தையர் அந்த ஆலயத்தில் பூஜித்து வந்தாலும், இளமைப் பருவத்தில் ஐந்து அல்லது ஆறு வயதுள்ள போது தாய் தந்தையருடன் அந்த ஆலயத்திற்குச் செல்வது அவருடைய வழக்கம்.

ஆனால், அந்த ஈஸ்வர மங்களா என்பது ஒரு கிராமம். அங்கே பரம்பரையாக இன்று
ஒரு குழந்தைக்கு ஈஸ்வரன் என்றால்
அடுத்து இரண்டாவது தலைமுறைக்கும்
ஈஸ்வரா என்று பெயர் வரும்.

அதிலே இந்த மனை அந்த மனை என்று மனைகளுடைய பெயர்களை மாற்றிக் கொண்டிருப்பார்கள். அப்பொழுதுதான் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதற்காக அவ்வாறு செய்வார்கள்.

அவ்வாறு வளர்ந்த வந்த நிலையில் அவருடைய தாய் தந்தையர்கள் காலரா நோயில் சிக்கி மரணமடைந்து விடுகின்றார்கள். ஏழ்மையின் நிலையில் அவர் தவித்துக் கொண்டிருந்தார். மற்ற சொந்தக்காரர்களும் அப்பொழுது அவரைக் கவனிக்கவில்லை.

ஆக, அன்னை தந்தை நினைவு கொண்டு அவர்கள் பூஜித்து வந்த ஆலயத்தில் நினைவுகளைச் செலுத்தி, அந்த நிலையிலேயே தன் சிறிய வயதில் ஏங்கிக் கொண்டிருந்தார்.

அன்னை தந்தையரை இவர் ஆறு வயதிலேயே பிரிய நேர்ந்தாலும் அவர்கள் சொந்தக்காரர்கள் யாரும் இவரை அணுகி நேசிக்கவில்லை.

அவ்வாறு ஏழ்மையில் வாடிக் கொண்டிருக்கும் அந்த நிலையில் ஆனால், எதிர்பாராதவிதமாக ஆற்றல்மிக்க சக்தியே அங்கு அவருக்குள் இயங்கத் தொடங்கி, அந்த இளமைப் பருவத்திலேயே உலகம் முழுவதற்கும் அவர் சுற்றுப் பயணம் செய்துள்ளார்.

இளமைப் பருவத்தில் ஆதிசங்கரர் எவ்வாறு சென்றாரோ அதே போன்று, இவருடைய இளமைப் பருவத்தில் இவர் அறியாதபடியே பல ஆற்றல்களை இவர் பெற்றார்.

ஒவ்வொரு பாஷையும் இந்த பாஷைதான் என்று சொல்ல முடியாது. அந்த அளவிற்கு அனைத்து பாஷைகளையும் அறிந்திடும் ஆற்றல் கொண்டு பல நிலைகளில் அவருக்குள் செயல்பட்டது.

ஐந்து அல்லது ஆறு வயதில் வெளியே கிளம்பி இந்த பூமி முழுவதும் வலம் வந்துள்ளார். இந்த பூமிக்குள் எத்தனை பாஷைகள் உண்டோ அத்தனையும் இவருக்குத் தெரியும்.

நமது சூரிய குடும்பத்தின் தொடர் கொண்ட 2000 சூரியக் குடும்பங்கள் உண்டு. இப்படி ஏனைய எத்தனையோ சூரியக் குடும்பங்கள் இருப்பினும் இந்த 2000 சூரியக் குடும்பங்களில் உயிரினங்கள் வளர்ச்சி பெற்ற சில பூமிகளும் உண்டு.

அதிலே இருக்கும் பாஷைகளையும் அங்கே நடக்கும் சம்பவங்களையும் அடிக்கடி அதைக் கண்டுணரும் சக்தியும் இவருக்குள் வந்துள்ளது.

ஏனென்றால், குரு எமக்கு இதையெல்லாம் முதலிலேயே சொல்லவில்லை. பின் அவருடைய நிலைகளை அறிய வேண்டும் என்று எண்ணும்போதுதான், அவருடைய வாழ்க்கையின் நிலையைப் பற்றி அதை ஒவ்வொரு நிலையிலேயும் எமக்கு உணர்த்தினார்.

அவர் எமக்கு உணர்த்திய ஒவ்வொரு நிலையையும் நீங்களும் அறிய முடியும், உணர முடியும்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த உணர்வலைகள் இங்கே படர்ந்திருப்பதையும், அவர் கண்ட பேரண்டத்தின் நிலைகளையும் காணும் பாக்கியம் உள்ளோருக்கு (உங்களுக்கு) இது கிடைக்கவும் செய்யும்.

நான் கல்வியறிவு இல்லாதவன். நமது குருவும் அதே போன்று தான் அவர் கல்வியில் ஞானமில்லாதவர். ஏனென்றால், அவருக்குள் ஆட்கொண்ட ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டுதான் உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார்.

இந்த 2000 சூரியகுடும்பத்தின் உண்மை நிலைகளையும் உணர்ந்தறிந்தவர் நமது குருநாதர். அவர் அறியாது அவருக்குள் இருந்த ஆற்றல்மிக்க சக்தியின் நிலைகள் கொண்டு பேரண்டத்தின் நிலைகளை அவர் அறிய முடிந்தது.

இருப்பினும், அவர் பித்தரைப் போன்றுதான் இந்த உலகிலே உலாவிக் கொண்டிருந்தார். அதன் காரணத்தை யாம் அவரிடம் யாம் கேட்டோம்.

இந்தப் பித்தனான உலகிலிருந்து
மக்கள் பித்தைப் போன்று வாழ்க்கை வாழ்ந்திடும்
ஒவ்வொரு பித்து நிலைகளிலிருந்து
மக்கள் மீளவேண்டும் என்ற சிந்தனைதான் எனக்கு
என்று அப்பொழுது எமக்கு அடிக்கடி உபதேசிப்பார்.

நமது குருநாதர் இளமையிலே ஏழ்மையில் வாடிவந்த நிலையிலிருந்து தீமைகளிலிருந்து விடுபட்டு, அவர் உடலிலே விண்ணின் ஆற்றல்களைப் பெருக்கி அந்த உணர்வு கொண்டு ஒளியின் சரீரம் பெற்று, இன்றும் அவர் விண்ணின் ஆற்றலுடன் சுழன்று கொண்டுள்ளார்.

ஆகவே, பேரண்டத்தின் உண்மைகளை கண்டுணர்ந்த இயக்கம் அவருக்குள் இருந்தாலும், அதன் வழிகொண்டு
எதை எதை, எவ்வாறு பெறவேண்டும் என்று உபதேசித்து
எமக்குள் அதைப் பதிவு செய்தார்.

அவருக்குள் விளைந்த விண்ணிலே உள்ள சப்தரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகள் அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வின் அலைகள் எமக்குள் பதிவு செய்த அந்த சக்தி இங்கே படர்ந்து கொண்டுள்ளது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பெற்ற அந்த அனைத்து ஆற்றல்களையும் நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை இப்பொழுது இங்கே உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

எமது குரு அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

September 19, 2014

தியானத்தின் மூலம் எமனையும் அடக்கி ஆளக்கூடிய ஒளியை நமக்குள் உருவாக்கலாம்...!

நாம் கண்களால் மற்றவர்களின் செயலைப் பார்த்து
அந்த உணர்வை நாம் சுவாசித்து
உடலுக்குள் அது சத்தாகும் பொழுது சித்திரபுத்திரனாகின்றது.
நம் உடலுக்குள் நம் குழந்தையாக
நம்முடன் இயங்குகின்றது என்று பொருள்.

அந்த குணம் விளைந்து நம் உயிராத்மாவில் சேர்கின்றது. அது உயிராத்மாவில் சேர்ந்தபின் சித்திரபுத்திரனாகின்றது. உயிராத்மாவில் சேரும் கணக்கில் மறு உடல் அமைகின்றது.

இதைத்தான் சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று காவியத்தில் கூறப்பட்டது.

எமன் என்பதும் பாசக் கயிறு என்பதும், எந்தெந்த குணத்தை நாம் எண்ணத்தால் எடுத்தோமோ அந்த எண்ணத்தால் நாம் சுவாசித்ததுதான்.

நாம் எதன் மேல் அடிக்கடி எண்ணுகின்றோமோ
அதுதான் பாசக் கயிறு.
அந்தப் பாசக் கயிறுதான் எமன்.

பல கோடி சரீரங்களில் வேதனை என்ற விஷத்தைத் தாங்கிக் கொண்டு தன்னைப் பாதுகாக்கக்கூடிய எண்ணத்தை எடுத்து அதையே எமனாக மாற்றி
தனக்கு நல்ல இடம் வேண்டுமென்று ஏங்கிய
அந்த உணர்வின் சத்து உயிராத்மாவில் சேர்ந்து
அந்த எண்ணம் எமனாக மாறி
நல்ல உணர்வைக் கொடுக்கின்றது.

ஆகவே, இந்த மனித உடலுக்குள் நாம் எமனையும் அடக்கி ஆளக்கூடிய ஒளியை நமக்குள் சிருஷ்டியாக்க வேண்டும்.

நாம் ஒளியாகும் பொழுது தீயதை மாய்த்துவிட்டு உருபெரும் சக்தியாக மாறவேண்டும். உங்கள் எண்ணத்தால் ஒளியின் உணர்வைச் சிருஷ்டியுங்கள்.

உங்கள் உடலை உருவாக்கிக் கொடுத்த அன்னை தந்தையின் உடலுக்குள் அனைத்தும் உண்டு என்று நம்புங்கள். தாய் தந்தையை மதியுங்கள்.

மதித்தபின், உயிரைக் கடவுளாகவும், உடலைக் கோவிலாகவும் உங்கள் உடலுக்குள் சிந்தனையைத் தூண்டச் செய்யும் ஆற்றல்மிக்க நற்குணங்களை நேசியுங்கள்.
அந்த நற்குணங்களின் தன்மை கொண்டு
மெய்ஞானியின் அருள் ஒளியை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

ஆக, இதன் வழி சென்றால் அகஸ்தியன் குடும்பமாக விண் சென்று ஒளியின் சரீரம் ஆனது போன்று, நாமும் குடும்பமாக அவர்களைப் பின்பற்றி அந்த சப்தரிஷி மண்டல எல்லையை அடையலாம்.

September 17, 2014

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையின் நிலைகள் - 5

குரு என்பது எது?
குரு என்பது
நாம் எதை ஆழமாகப் பதியச் செய்கின்றோமோ,
அதை நாம் மீண்டும் எண்ணும் பொழுது
எந்த எண்ணத்தை எண்ணுகின்றோமோ
அந்த எண்ணத்தின் உணர்வலைகள்
குருவாக நின்று நமக்குள் செயல்படுத்துகின்றது. 
ஆறாவது அறிவு – தகப்பன் சாமி
ஆறாவது அறிவின் தன்மையான முருகனை தகப்பன்சாமி என்பார்கள். அதாவது, முருகன் தன் தந்தையான சிவனுக்கே பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவம் என்பது உடல்.

உதாரணமாக, ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
நாம் தீமையை நீக்கும் ஒரு உணர்வை நுகரும்போது
நுகர்ந்த உணர்வு உயிரில் மோதி
உடலுக்குள் இயக்கமாகின்றது. பிரணவமாகின்றது.

இதனின் இயக்கத்தையே சிவனுக்கு முருகன் பிரணவ மந்திரத்தை உபதேசித்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நாம் எடுக்க வேண்டிய அக்னி சட்டி
மாரியம்மன் கோவிலில் இருப்பது நெருப்பு, அக்னி சட்டி. நெருப்பைக் கொண்டுதான் நாம் இயற்கையில் விளைந்த தாவர இனங்களில் உள்ள விஷமான நிலைகளை மாற்றிவிட்டு நல்லதாக ஆக்குகின்றோம்.

இதைப் போலத்தான், ஞானிகள் தம் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட மிகமிக சக்தி வாய்ந்த உணர்வைக் கொண்டு தம் உடலில் வந்த வேதனை என்ற நஞ்சினை நீக்கி உயர்நிலை பெற்றார்கள். அவர்கள் வெளியிட்ட மூச்சலைகள் அக்னி குண்டம்.
அந்த நெருப்பை நாம் நுகர வேண்டும்.
நுகர்ந்து அந்நிலை பெற நாம் தியானிப்போம். 
துருவ நட்சத்திரத்தை நுகர்ந்து நறுமணமாக்கவேண்டும்
காய்கறிகளையும், மற்றும் பல பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு குழம்பு வைப்பதற்காக அடுப்பில் வைக்கப்படும்போது,
அதில் போடப்பட்ட பொருள்கள்
தங்கள் மணத்தை இழந்து
குழம்பாக புதுமணத்துடன் வெளிப்படுகின்றது.

இதைப் போன்று, தீமை ஒன்றினை நாம் கண் கொண்டு உற்றுப் பார்த்து தீய உணர்வை நாம் நுகர நேரும் சந்தர்ப்பத்தில்,
துருவ நட்சத்திரத்தை எண்ணி
தம்முள் பேரருள் பேரொளியின் உணர்வை இணைத்தால்
நம்முள் தீய உணர்வுகள் ஒடுங்கி
அருளுணர்வின் மணமாக நம்மிடமிருந்து வெளிப்படும்.