ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 7, 2018

பிறருக்குத் தீங்கு செய்யும் நிலையை நாம் செயல்படுத்தினால் அது முதலில் “நமக்குத் தான் தீங்காகும்…!”

உதாரணமாக நாம் ரோட்டிலே சென்று கொண்டிருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

ரோட்டைக் கடந்து அந்தப் பக்கம் கிடக்கும் ஒரு பொருளை எடுக்க வேண்டும் என்று அதன் மேல் ஏக்கமாகச் செல்லும் போது “திரும்பிப் பார்க்காது..” நாம் சென்றால் என்ன ஆகும்?

ரோட்டைக் கடக்க வேண்டும் என்றால் இரு புறம் பார்த்து வாகனம் எதுவும் வராத நிலையில் பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும்.

இதைப் போலக் கடக்கத் தவறினால் நாம் சென்று அந்தப் பொருளை எடுப்பதற்கு முன் இங்கே பஸ்ஸிலே தாக்கப்பட்டு நம் நினைவுகள் நம் ஆசைகள் அனைத்தும் இங்கே அடிபட்டு விடும்.

அதைப் போன்று தான் நாம் தொழில் செய்யும் போது “வேகமாகச் சம்பாதிக்க வேண்டும்…” என்று அந்த ஒன்றை மட்டும் செலுத்தினால்
1.அந்த நாட்டத்தின் வேகம் அதிகமாகின்றது.
2.மேலும் அதற்குத் தகுந்த நண்பரும் இணைந்து விட்டால்
3.பொருள் ஈட்டும் எண்ணங்கள் இன்னும் அதிகமாகி விடுகின்றது.

நம் நண்பனும் அதே போல செயல்படுத்தத் தொடங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அந்தச் சமயத்தில் நாம் செய்யும் வியாபாரத்தையே அடுத்தவர்கள் செய்து அவர்களும் பிழைக்க வேண்டும் என்று எண்ணினால் நம் எண்ணங்கள் எப்படி வருகின்றது…?

அவர்களை “எப்படியாவது கெடுக்க வேண்டும்” என்ற எண்ணங்கள் நமக்கு நிச்சயம் தோன்றும். நம் வியாபாரத்தையே தொடங்குகின்றார்கள் என்று பொறாமை ஏற்பட்டு விடுகின்றது.

அதைத் தாங்க முடியாத நிலையில் அவர்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் இடைஞ்சல் செய்ய வேண்டும் என்ற அந்த எண்ணத்தின் வித்தை வளர்த்து அந்த எண்ணமே நமக்குள் "மூஷிகவாகனா"
1.அவர்களுக்கு எந்தெந்த வகையில் கெடுதல் செய்ய வேண்டுமோ
2.அந்தக் கெடுதலான வேண்டாத சொற்களைச் சொல்லி
3.அவர்கள் வியாபாரத்தை மறைக்கச் செய்வோம்.
4.இதைப் போன்ற உணர்வுகள் நமக்குள் தீய வினையாகச் சேர்ந்து விடுகின்றது.

நமக்குப் பின்னாடி வரும் விளைவினை அறியாது ரோட்டினைக் கடந்து சென்று அங்கே கிடக்கு பொருளை எடுக்கச் செல்வது போல் இது நம்மை அறியாமல் நம்முடைய சந்தர்ப்பம் அவருக்கு இடைஞ்சல் செய்த உணர்வுகள் தீய வினைகளாக தீய விளைவுகளாக நமக்குள் வளர்ந்து விடும்.

ஆக நம்மை வீழ்த்திவிடும் என்ற இந்த எண்ணங்கள் நமக்கு வருவதில்லை.

தான் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் தன் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்ற எண்ணமும் சேர்ந்து… அடுத்தவர்கள் செய்வதைத் தாங்காதபடித்  தீங்கு விளைவிக்கும் எண்ணங்கள் உருவாகி அதை நாம் சுவாசித்தவுடனே நம் உயிர் இயக்கி உடலுக்குள் ஜீவன் பெறச் செய்து விடுகின்றது.

ஜீவன் பெற்ற உணர்வுகள் உடலுக்குள் பாய்ந்தபின் அவர்களுக்கு எந்த வகையில் தீங்கு செய்ய வேண்டும் என்ற மறைவிடத்தைக் காட்டி தீங்கு விளைவிக்கும் செயலைச் செய்யப் புலனறிவான கண்கள் நமக்கு வழி காட்டும்.

தீங்கினைச் செய்ய வேண்டும் என்று உற்றுப் பார்த்தது ஊழ்வினையாக நமக்குள் பதிவாகின்றது. அதை மீண்டும் மீண்டும் நாம் நினைவுபடுத்திச் சுவாசிக்கும்போது இந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி அணுக்களாக உருவாகி  நம்மை அதுவாகவே ஆக்கிவிடும்.

இதைத்தா கீதையிலே "நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்" என்ற நிலைகளக் காட்டியுள்ளார்கள். ஒவ்வொரு நிலையிலும்
1.பிறருக்கு நாம் தீங்கு விளைவிக்க எண்ணினால்
2.முதலில் நாம் தான் அதுவாகின்றோம் என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

ஆகவே சந்தர்ப்பத்தால் நம் வாழ்க்கையில் வரும் இத்தகைய தீய வினைகளை நாம் நிறுத்திப் பழக வேண்டும்.