ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 30, 2018

கௌரவப் பிரச்சனை என்று ஒவ்வொரு(வருக்கும்) குடும்பத்திலும் உண்டு – அதை நீக்கினால் தான் நிம்மதியும் அமைதியும் மகிழ்ச்சியும் வரும்...!

பையன் மேல் நாம் வெறுப்பாக இருப்போம். அவன் நல்லது செய்துவிட்டு வந்தாலும் கூட லேட்டாகிவிட்டது என்கிறபோது அவனை நினைத்தவுடன் “அவன் எப்பொழுது பார்த்தாலும்... இப்படித்தான் இருக்கிறான்...” என்று சொல்வோம்.

பையன் ஒரு காரியத்திற்குப் போனால் லேட்டாகி அந்தக் காரியத்தை முடித்துவிட்டு வருவான். “ஜெயித்துவிட்டு வந்தால் கூட...” நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

அவன் சென்று வந்த காரியம், என்ன என்று கேட்காதபடி “அவன் இப்படித்தான்... எப்பொழுது சென்றாலும் லேட்டாக வருவான்...!” என்று அவனைத் திட்டவும் பேசவும் ஏசவும் தான் செய்வோம்.

1.அவன் உண்மையைச் சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
2.பொய் சொல்கின்றான் என்ற எண்ணம்தான் தோன்றும்.
3.அதைக் கேட்டறிவதற்குத் தாமதமாகும்.
4.நல்லது நினைத்தாலும் கூட நம்மையறியாமல் அந்த உணர்வுகளை நிற்கச் செய்யும்.
5.அந்த உணர்வின் தன்மை அவனைக் கெட்டவனாக மாற்றச் செய்யும்.

இதைப் போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் சரி தொழிலும் சரி ஒருவர்பால் கெடுதலான எண்ணங்களை வைத்து விட்டால் அந்த உணர்வின் பார்வையிலே பேசும் பொழுது
1.எந்த நல்லதைக் செய்தாலும்,
2.அந்த எண்னங்களுக்குத் தப்பாகத்தான் தெரியும்

இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டுமென்றால் முதலில் நாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று “ஆத்ம சுத்தி” செய்து கொள்ள வேண்டும்.

நாம் எடுக்கும் இந்த ஆத்ம சுத்தியின் நிலைகள் மகரிஷிகள் அருள் சக்தி உள்ளுக்குள் சென்று அந்த மெய்யை உணர்த்தும். அறியாமையிலிருந்து மீட்க நமக்கு அந்தச் சக்தி உதவும்.

குடும்பத்திற்குள் இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நிறைய உண்டு.

மாமியாருக்கும் மருமகளுக்கும் பிடிக்காது. மகனுக்கு அப்பாவைப் பிடிக்காது. கணவனுக்கும் மனைவிக்கும் ஆகாது. அந்த அளவுக்கு இன்று பெரும் பகுதி ஆகிவிட்டது. இன்றைக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த நிலைதான்.

சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் பிறிதொரு உணர்வுகள் நமக்குள் வந்து நம்மை அவ்வாறு இயக்கி நம் நல்ல உணர்வுகளை மாற்றிவிடுகின்றது. பகைமையை உண்டாக்கி விடுகின்றது.

சிலருக்கு இது கௌரவப் பிரச்சனையாக மாறிவிடுகின்றது. நேருக்கும் நேர் பேசாதபடி கடுமையான நிலைகள் ஆகிக் கடைசியில் இரண்டு பேரும் மிகுந்த வேதனைக்குள்ளாவார்கள்.

இதையெல்லாம் மாற்றவில்லை என்றால் வாழ்க்கையில் எல்லாம் இருந்தாலும் நிம்மதியோ அமைதியோ இழந்த நிலையாகத்தான் வாழ வேண்டியதிருக்கும்.

உங்கள் உணர்வலைகள் மாறாமல் இருப்பதற்கு ஒவ்வொரு நிமிடமும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்.

யார் மீது பகைமையோ கருத்து வேறுபாடோ இருக்கின்றதோ அவர்களுக்கு எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் கிடைக்க வேண்டும் என்று உயிரான ஈசனிடம் புருவ மத்தியில் வேண்டிச் செலுத்திப் பாருங்கள்.

ஒன்று சேர்க்கும் சந்தர்ப்பாம் தன்னாலே வரும்.

வெறும் வார்த்தையிலே சும்மா சொல்கிறோம் என்று எண்ணிவிடாதீர்கள். உங்களுக்குள் வரக்கூடிய எத்தகைய துன்பத்தையும் போக்குவதற்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை வாக்காகக் கொடுத்துப் பதிவு செய்கின்றோம்.

உங்கள் உடலுக்குள் அணுவாக விளைந்து விட்டால் உங்கள் அனுபவம் பேசும்...!