ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2018

குருநாதர் சொன்ன அருளை நமக்குள் வளர்த்தால்…. “அது எவ்வளவு பெரிய வேலை செய்யும்…!” என்று தெரிந்து கொள்ளுங்கள்


சாமி செய்வார்… சாமி தான் (ஞானகுரு) எல்லாம் செய்வார்… என்று சொல்லிக் கொண்டு
1.சாமி சாப்பிட்டாலே போதும்…
2.நாங்கள் வளர்ந்து விடுவோம்…! என்று சொன்னால் நீங்கள் எப்படி வளர முடியும்…?

“எல்லாம் சாமி பார்த்துக் கொள்வார்…!” என்ற எண்ணத்தில் நீங்கள் இருந்து கொண்டு
1.உங்களுக்குச் சாப்பாடு எதுவும் இல்லாமல் எல்லாவற்றையும் நானே சாப்பிட்டேன் என்றால்..
2.சாமி சாப்பிட்டால் போதும்…! என்று நீங்கள் பட்டினியாக இருந்தால் என்ன ஆவது…?
3.யார் பார்ப்பார்கள்…?

நம்பிக்கை எப்படிப் போகின்றது…! தன்னை நம்பிக் கொள்வதில்லை. “சாமி தான்….,” என்று என்னைத்தான் நம்புகின்றனர்.

சாமி சொன்ன அந்த அருளை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால் அது எவ்வளவு பெரிய வேலை செய்யும்…! என்று தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

1.ஒவ்வொருவருக்கும் இந்த உபதேசத்தை எடுத்துச் சொல்லுங்கள்.
2.உங்களுக்குள் அருள் சக்தி விளைகின்றது.

தவறு செய்பவரைப் பார்த்து அவன் ரொம்ப மோசமான ஆள் “மோசமானவன்…!” என்று பேசிக்கொண்டே இருந்தால்… என்ன விளையும்…?

வீட்டிற்கு வந்தால் சண்டை நிச்சயம் வரும். வியாபாரம் மந்தமாகும். அடுத்தவர்களைப் போடா என்று சொல்லி… வம்புக்கு இழுத்துக் கொண்டு இருப்பீர்கள்.

வருமா வராதா…? நீங்கள் எதைப் பேசுவீர்கள்…? குறைகளைத்தான் பேசுவீர்கள். ஆனால் அதை நீக்குவதற்கு உண்டான மார்க்கங்களை நீங்கள் பேசிப் பாருங்கள்.

குறை என்று தெரிகின்றது. இப்படி நடந்தது என்று பார்க்கின்றீர்கள். அப்பொழுது
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும்.
2.அவர்கள் எப்படியும் அந்த இருள்களிலிருந்து விடுபட வேண்டும் என்று
3.அதனுடன் இந்த அருள் ஒளியைச் சேர்க்கின்றீர்கள்.
4.அப்போது அந்தக் குறை நமக்குள் வளராது
5.அவர்களுக்குள்ளும் வளராது தடுக்கின்றீர்கள்.

ஆகவே தீமைகள் இந்த வழியில் தான் நம்மைப் பாதிக்கின்றது. அதை அருள் ஒளி கொண்டு மாற்ற வேண்டும் என்று மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

நீங்கள் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்தத் தீமை உங்களைத் தாக்காது பாதுகாத்துக் கொள்வது நாமாக இருக்கின்றோம்.

அதே சமயம் நான் தயங்குகின்றேன். ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவேர் ஒளியாகி விட்டார். நான் அவரை விட்டு விட்டு இருந்தேன் என்றால் என்னாகும்…?
1.அவர் காப்பாற்றுவார் என்று சொன்னால்…..! “அந்த எண்ணம்….”
2.அவர் காப்பாற்றுவார் என்ற நிலையை… “அதை எடுத்தால்…”
3.அந்த எண்ணம் (நம் எண்ணம்) நம்மைக் காப்பாற்றும்…!

என் (ஞானகுரு) பக்கத்திலிருந்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தான் எல்லாச் சக்தியும் கொடுத்தார் என்று எண்ணாதீர்கள் என்று தான் சொல்கிறேன்.
1.அவர் கொடுத்த ஞான வித்தை உங்களிடம் விதைக்கின்றேன்… வளர்க்கின்றேன்…!
2.நீங்கள் அதை வளர்க்க வேண்டும்.

கடையில் பலசரக்கு காய்கறி எல்லாம் இருக்கின்றது. அதை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து நம் வீட்டில் வைத்துச் சமைத்து சாப்பிட்டால் தான் நம் பசி அடங்கும். மற்றவர்களின் பசியையும் போக்க முடியும்…!

சமைக்காமல் அதைச் சாப்பிட முடியுமா…!

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானிகளின் அருள் ஒளியை எடுத்து நமக்குள் சமைக்க வேண்டும்.
1.அந்த உயர்ந்த சக்தியை நம் உடலிலுள்ள அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுக்க வேண்டும்.
2.அதைப் பழகிக் கொள்ள வேண்டும்.
3.நீங்கள் ஒவ்வொருவரும் நம் குருநாதரைப் போன்று மாற வேண்டும்.

அணு குண்டைக் கண்டுபிடித்த விஞ்ஞானி கடைசியில் என்ன ஆகின்றான்…?


இன்று நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கப் பொறிகளே கடல் அலைகளில் பாய்ந்து மணல் போன்று மாறுகிறது.

விஞ்ஞானிகள் அந்த மணலை எடுத்து அதிலிருந்து கதிரியக்கங்களைப் பிரித்து எடுத்துச் சக்தி வாய்ந்ததாக மாற்றிக் கொள்கிறார்கள்.

அந்த அணுவைப் பிளந்து அணுவின் வீரிய சக்தியைக் கவர்ந்து அதே சமயம் உப்புச் சத்து கொண்ட அந்தக் கடலின் – கண நீரால் ஹைட்ரஜனை வைத்து அதை எடுத்து அடக்குகின்றான்.

அவ்வாறு அடக்கி வைத்திருக்கும் அணு குண்டைத் தனக்கு வேண்டும் போது அதை இயக்கச் செய்து அதீத வீரிய உணர்வை இயக்கச் செய்கின்றனர் விஞ்ஞானிகள்.

அதே அணுக் கதிரியக்கத்தினை உந்து விசையாக வைத்து இதனுடைய வேகத் துரிதத்தைக் காட்டி பூமியின் ஈர்ப்பைக் கடந்து செயல்படுத்தும்படிச் செய்கின்றார்கள்.

இது மனிதனின் ஆறாவது அறிவால் உருவான நிலை. உடலின் இச்சைக்காக இதை உருவாக்குகின்றான். இத்தகைய விஞ்ஞானத்தின் நிலைகள் பெற்றாலும் அந்த விஞ்ஞானியும் அஞ்ஞான வாழ்க்கை தான் வாழ்கின்றான்.

இவன் செய்த ஒரு அணு குண்டின் தன்மை கொண்டு ஒரு பக்கம் வெடிக்கச் செய்தால் ஆயிரக்கணக்கான பேர் மடிகின்றனர்…. துடிக்கின்றனர்….!

அணு குண்டு செய்தவன் அதைக் கண்டு தன் செயலால் இத்தனை பேரையும் கொல்ல முடிகின்றது என்று மகிழ்ச்சி பெறுகின்றான்.

ஆனால் அத்தனை பேரின் வேதனையான உணர்வின் தன்மை இவனுக்குள் சேர்க்கப்படும் பொழுது சிதையுண்டு இவன் எதைக் கண்டு இரசித்தானோ இந்த உணர்வுகள் அவன் உடலில் விளைந்து அவன் உடலையே சிதையச் செய்துவிடுகின்றது.

மற்றவர்கள் எப்படி நரக வேதனைப்பட்டார்களோ அந்த உணர்வுகள் அவன் உயிருக்குள் பட்டு இந்த உயிர் உடலை விட்டுச் சென்றபின்
1.அவனுடைய வேகங்கள் குறையப்பட்டு
2.நரக வேதனைப்பட்டு ஊர்ந்து செல்லும் உயிரினமாக
3.துன்புற்று வாழும் உடலைத்தான் அவன் பெறுகின்றான்.
4.துன்பத்திலிருந்து மீளும் நிலை வராது.

நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகவே நீ ஆகின்றாய் என்று தான் கீதை சொல்கிறது.

ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று அதன் உணர்வை இரசித்து தன் வல்லமையைக் காட்டினாலும் மற்றவர்களைக் கொல்லும் போது அந்த வேதனை உணர்வுகள் இவனுக்குள் புகுந்து இந்த விஞ்ஞானி மடிகின்றான்.

அவன் மடிந்தாலும் அவன் உணர்வு கொண்டு இவனிடம் எவன் பயிற்சி பெற்றானோ அவனுக்கும் இதைக் கற்றுக் கொடுத்திருப்பான்.

அவன் இவனை எண்ணி அந்த விஞ்ஞானி… “எனக்குக் கற்றுக் கொடுத்து விட்டுப் போய்விட்டான்…!” என்று எண்ணினால் அவனுக்குள் சென்று இவன் உடலுக்குள் நோயாக மாறி அவனையும் வீழ்த்திவிடும். இப்படி
1.ஒன்றின் துணை கொண்டு ஒன்றின் நிலைகள் இயங்கும்
2.இந்த இயற்கையின் நிலையில் இருக்கப்படும் பொழுது
3.கடவுள் என்ற தன்மையில் தனித்த எவரும் இல்லை.
4.நாம் எண்ணும் எண்ணமே உள் நின்று இயக்குகின்றது.
5.“ஒன்று…” என்ற நிலை எங்குமே இல்லை.

பலவும் ஒன்றாகச் சேர்த்து உணர்வின் கலவை கொண்டு உணர்வின் இயக்கமாக ஒன்றியே நமக்குள் இருக்கப்படும் போது அதுவே உள் நின்று கடவுளாக இருக்கின்றது. ஏனென்றால்
1.கடவுள் ஒருவன் என்று நாம் எண்ணுகின்றோம்.
2.இது பிழை கொண்டது .

அணுக் கதிரியக்கத்தைப் பாய்ச்சி பலருடைய நிலைகள் மடியச் செய்து தான் பலரினுடைய உணர்வை நுகர்ந்தானென்றால் அந்த வேதனை உணர்வை இவனுக்குள் இரசித்து நுகரப்படும் பொழுது இவன் செய்கையால் இவனுக்குள் கடுமையான நோய்கள் வருகின்றது.

பெரிய பெரிய விஞ்ஞானிகளைப் பார்க்கலாம்….!

தன்னைக் காக்கும் நிலைகள் இல்லை. பல பல அரிய கண்டுபிடிப்புகளை அவன் கண்டுபிடித்தாலும் நோயின் தன்மை அதிகரித்து அவனுடைய உடல் உறுப்புகள் அகற்றப்படுகின்றது.

மீண்டும் விஞ்ஞான அறிவு கொண்டு உறுப்புகளை மாற்றுகின்றான். மாற்றினாலும் அவன் குறுகிய காலமே வாழ்கின்றான்.

அவன் உறுப்பை இழந்து பின் மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் அங்கே தடைப்படுத்தும் பொழுது மிருகங்கள் தனக்கு உணவில்லாத நிலைகள் ஏற்படும் பொழுது எப்படித் தவிக்கின்றதோ அதைப் போன்ற வேதனை தான் அதிகரிக்கும்.

இவன் இறந்த பின் யார் இவனைப் பின்பற்றுகின்றானோ அந்த மாணவன் உடலுக்குள் சென்றாலும் பிறரைக் கொன்று இரசிக்கும் உணர்ச்சியைத் தூண்டி அவனையும் வீழ்த்தும் உணர்வே வளரும்.
1.தன் குடும்பத்தையோ அல்லது பிறர் படும் துயரத்தையோ அவர்களால் அறிய முடியாது.
2.கடைசியில் மனிதல்லாத உருவைத்தான் இருவரும் பெறுவார்கள்.

அத்தகைய விஞ்ஞான அறிவைப் பற்றித்தான் இன்றும் நாம் போற்றிக் கொண்டுள்ளோம். ஆனால் அது அஞ்ஞான வாழ்க்கைக்கே வித்திடுகிறது என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

விஞ்ஞானம் உடல் இச்சைக்குத்தான் அடிகோலும். அழியா ஒளிச் சரீரமாக உயிராத்மாவை விண்ணுக்குச் செலுத்தும் மெய் ஞானத்தின் நிலைகள் இல்லை.

April 29, 2018

தீபாவளி அன்று அதிகாலையில் புத்தாடை அணிகின்றோம் – விளக்கம்


கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாள் என்பார்கள். கண்ணன் என்றால் நம் கண்கள்.

அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து மகரிஷிகளின் அருள் அக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எல்லோரும் எண்ண வேண்டும். நம் கண்ணின் நினைவுகள் விண்ணிலே இருக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்து எத்தனை பேர் மீது பகைமை கொண்டோமோ அதை எல்லாம் மறக்க வேண்டும்.

அந்த வைரத்தைப் போல எங்கள் சொல்லும் செயலும் வாழ்க்கையும் ஜொலித்திட வேண்டும். அதைப் போல நாங்கள் பார்க்கும் அனைவரது சொல்லும் செயலும் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

எல்லோரும் இப்படி அதிகாலையில் எண்ணும் பொழுது பகைமை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்த அசுரக் குணங்களைக் கொல்கின்றது. (நரகாசுரனைக் கொன்ற நாள்)

தீமைகளை இழுக்கக்கூடிய சக்தி இங்கே இல்லை என்றால் அந்த பகைமை உணர்ச்சியைத் தூண்டிக் கொண்டிருக்கும் உணர்வலைகளைக் காலையில் ஆறு மணிக்கு சூரியன் இழுத்து மேலே கொண்டு சென்று விடுகின்றது.

இரண்யன் எனக்கு எதிலேயுமே இறப்பு இல்லை என்று வரத்தைக் கேட்டு வாங்கிக் கொள்கின்றான். அதைத் தான் காவியத்தில் அன்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

இரண்யனுக்குக் கொடுத்த வரப்படி மனிதர்கள் நாம் ஈர்க்க மறுத்த அந்த நஞ்சான உணர்வுகள் வெளியில் வந்தவுடனே சூரியனே எடுத்து வைத்துக் கொள்கின்றான்.

ஏனென்றால் அது அவன் கொடுத்த வரம் தானே…! இது இல்லை என்றால் சூரியன் இயங்காது….!

ஒவ்வொரு அணுக்களிலேயும் இந்த விஷம் இல்லை என்றால் உணர்ச்சிகள் இயங்காது. எந்தக் குணமும் அது இயங்காது. ஆகவே
1.எல்லாவற்றையும் இயக்குவதற்கு நானே தான் மூலம்…!
2.அதே சமயத்தில் அதை இயக்கினாலும் அதை அடக்குவதற்கும் நானே தான் மூலம்…!
3.அப்பொழுது என்னால் தான் என்று “நான்…!” என்ற அகந்தை வருகின்றது.
4.”அதற்கு வலு கூட்டக் கூடாது…! என்பதற்குத்தான்
5.நமக்குள் அந்தப் பகைமை உணர்வுகள் உட்புகாதபடி தடுக்க வேண்டும் என்று
6.தீபாவளி அன்றைக்கு ஞானிகள் தெளிவாகக் கொடுத்தார்கள்.

அதிகாலை நான்கு மணியில் இருந்து ஆறு மணி வரையிலும் ஒவ்வொருவரும் இந்த ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

தீபாவளி அன்று காலையில் எண்ணெய் தேய்த்து விட்டு தலையை முழுகிவிட்டு நல்ல புத்தாடையை மேலே போடுகிறோம் என்றால் என்ன அர்த்தம்…?

1.அருள் மகரிஷிகளின் உணர்வை - அந்த அருள் ஒளியை
2.நம் ஆன்மாவில் புத்தாடையாக அணிய வேண்டும்.
3.இது தான் புத்தாடை என்பது.
4.இது வலு கூடினால் என்ன செய்கின்றது…? தீமைகள் அகலுகின்றது.

அதைத்தான் நாராயணன் மடி மீது வைத்து இரண்யனைப் பிளந்தான் என்றார்கள் ஞானிகள்.

பிளந்தான் என்றால் மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்தவுடன் நமக்குள் இருக்கும் பலவிதமான தீமை செய்யும் உணர்வுகள் பிரிந்து ஓடிவிடுகின்றது. தீமைகள் இங்கே தனக்குள் வராதபடி தடுத்து விட்டான். அந்தத் தீமைகளை வளர்க்கவில்லை.

நன்றாக யோசித்துப் பாருங்கள். ஞானிகள் எப்படி காவியத்தைப் படைத்து நமக்குத் தெளிவாக்குகின்றார்கள் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

1.நமக்குள் எந்த அருள் உணர்வுகளை அரவணைத்தோமோ அந்தப் பேரருள் உணர்வுகள்
2.தீபத்தின் ஒளியின் இருள் விலகுவது போல் ஒளியின் சுடராக நம் ஆன்மாவில் பெருகி
3.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் பேரொளியாகி
4.அந்த அறிவின் தன்மையாக நம்மை இயக்கத் தொடங்கும்.

பிறக்காமலே பிறப்பவன் பிரகலாதன்...!


நமக்குச் சம்பந்தமே இல்லை. இருந்தாலும் பகைமை பாராட்டும் ஒருவர் மற்றவருக்கு இடைஞ்சல் செய்கிறார். அதை நாம் கண் கொண்டு உற்றுப் பார்த்தவுடனே நமக்குள் அந்த உணர்ச்சிகள் வந்து விடுகின்றது.
1.நமக்குள் இருக்கும் எல்லாக் குணங்களிலும் இது கலந்துவிடுகின்றது.
2.விஷம் கொஞ்சமாக இருந்தாலும் எதற்குள்ளும் ஊடுருவிடும் இல்லையா..?
3.உள்ளுக்குள் வந்தவுடன் நம் நல்ல குணத்தை அடக்கிவிட்டு இது முன்னுக்கு வந்து விடுகிறது.

சதா நல்லதையே தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் விஷத்திற்குண்டான இயக்கம் அப்படித் தான்…!

இரண்யன் என்ன செய்கிறான்..? எந்த வகையிலும் எனக்கு “இறப்பு வரக்கூடாது…” என்று வரம் வாங்குகிறான்.

பிரகலாதன் என்றால் ஒன்றிலிருந்து பிறக்கவில்லை. (பிரகலாதன் – பிறக்காதவன்)
1.ஆனால் பிறக்காமலேயே ஒரு உணர்வுக்குள் வந்து
2.அது எதிலே கலக்கின்றதோ (மோதுகின்றதோ)
3.அதை இயக்கக்கூடிய சக்தியாக உள்ளதைப் பிரகலாதன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

இந்தப் பிரகலாதனுடைய தன்மை என்ன…? அவன் நாராயணனை வணங்குகிறான்.

நாராயணன் (சூரியன்) அந்த ஒளியின் சுடராக வரப்படும் போது
1.நான் இல்லை என்றால் நீ பிறக்க முடியாது. நீ இயங்க முடியாது.
2.இரண்யாய நம என்று சொல் என்கிறான் இரண்யன்.
1.எதையுமே வெல்லக் கூடிய வல்லமை என்னிடம் உள்ளது.
2.இயக்கக்கூடிய வல்லமை இருக்கின்றது என்று
3.பிரகலாதன் கதையைக் காட்டுகிறார்கள் ஞானிகள்,

அதாவது விஷத்தின் தாக்குலால் தான் சூரியனும் உருவானது… சூரியனும் இயங்கிக் கொண்டுள்ளது…! தெளிவாகக் என்று காட்டுகிறார்கள். இது புற நிலைகள் கொண்டது.

அக நிலைக்கு (மனிதனுக்குள்) என்ன செய்தார்கள்…?

தூணிலும் இருக்கிறான்…! துரும்பிலும் இருக்கிறான்….! உன்னிலும் இருக்கிறான்…! என்னிலும் இருக்கிறான்…! என்று பிரகலாதன் சொல்லப்படும் போது “எங்கே அந்த நாராயணனைக் காட்டு…!” என்கிறான் இரண்யன்.

அதாவது அந்த அகந்தை என்ன செய்கிறது…? காட்டு…! அவனை அழித்துவிடுவேன்…! என்று அந்தக் கட்டிடத்தை… (தூணை) இடிக்கிறான். அது “விஸ்வ ரூபம்” எடுக்கிறது.

அப்பொழுது இவனுக்குள் என்ன செய்கிறது…? இந்தக் கட்டிடத்தை (தனக்குள்) இடிக்கிறான்.

அவன் (பிரகலாதன்) இடைமறித்து என்ன செய்கிறான்…? இந்த ஆறாவது அறிவு கொண்டு அருள் மகரிஷியின் உணர்வைத் தான் பெற வேண்டும் என்று எண்ணுகிறான்.

இந்தத் தீமை செய்யும் உணர்வு தனக்குள் உள்ளே புகாதபடி அந்த நினைவின் தன்மை கொண்டு வாசற்படி மீது அமர்ந்து இரண்யனை மடி மீது அமர்த்திப் பிளக்கிறான்.

உயிர் – நர நாராயணன்
மூக்கு – வாசல்படி
மடி – ஆன்மா (நெஞ்சுக்கு முன்னாடி இருக்கும் பகுதி)
இரண்யன் – உணர்வுக்குள் இயக்கும் நஞ்சு (விஷம்)
பிரகலாதன் – விஷத்தின் மோதலில் தன்னைக் காக்க வேண்டும் என்று “தோன்றும் உணர்வு”

தீமையின் உணர்வுகள் தனக்குள் புகாது மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து இங்கே புருவ மத்தியில் தடுத்துப் பழக வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்த வேண்டும். அது வலு பெறும் போது உள்ளுக்குள் போகாது தடுக்கிறது.

ஒவ்வொருவரும் இவ்வாறு செய்யும் பொழுது யாருடைய உடலுக்குள்ளும் நஞ்சு போகவில்லை என்றால் காலையில் 6 மணிக்கெல்லாம் சூரியன் (நாராயணன்) இழுத்துக் கொள்கின்றது.

அதாவது அந்த அருள் ஒளியை எல்லோரும் எடுத்தோம் என்றால் நமக்குள் தீமைகள் உள்ளுக்குள் புகாதபடி தடுக்கின்றோம். நம்மை வேதனைப்படுத்தும் உணர்வுகளை நம் உடலுக்குள் வளர விடுவதில்லை.

ஆனால் இரண்யனோ தான் வரம் கேட்டபடி நாராயணனிடம் போய்ச் சேர்ந்து விடுகிறான். விஷ்ணு தான் வரத்தைக் கொடுக்கின்றான். ஆனால் நாராயணனிடம் போய்ச் சேர்ந்து விடுகின்றான். அதன்படி அவனுக்கு இறப்பில்லை என்று கொடுக்கின்றான்.

1.விஷ்ணுவிடம் கேட்கும் பொழுது விஷ்ணு (உயிர்) அவனைக் கொல்லவில்லை.
2.உன் வேலையைச் செய்…! நீ போ…! என்று தன்னிடமிருந்து தள்ளி விட்டு விடுகிறான்.

அந்தக் காவியத்தை ஞானிகள் எப்படிக் கொடுக்கின்றார்கள்…? ஞானிகள் கொடுத்த காவியத்தில் உள்ள “மூலத்தை” நீங்கள் அறிந்து கொண்டால் போதும்.

இரண்யனுக்குக் கொடுத்த வரப்படி அவனை அழிக்கவில்லை. ஆனாலும் இந்தத் தீமையை வளர்க்க விடாதபடி அவன் தன்னைக் காக்கிறான்.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரமாகப் போகும் போது தனது பங்காக ஒளியாக மாற்றுகிறான். NEGATIVE… POSITIVE…!

சுழற்சியின் தன்மை மோதலில் தான் சூரியனுக்குள்ளும் ஒளி வருகிறது, அதே உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுக்கும் போது துருவ நட்சத்திரமும் ஒளியாக மாற்றுகிறான்.
1.அந்த விஷம் இல்லையென்றால் அந்த உணர்ச்சியின் ஒலி அலைகள் பரவாது.
2.அவனுக்குள் அடங்கி (சூரியனாக இருந்தாலும் சரி - துருவ நட்சத்திரமாக இருந்தாலும் சரி) அது ஒளியாகப் பரவுகின்றது,

ஒரு பொருளுக்குள் விஷத்தின் தன்மை இல்லை என்றால் அந்தப் பொருளின் சக்தியையே
1.அது ஒளியாகக் காட்டாது.
2.அந்த அறிவாக இயங்காது.

அதனால் தான் ஞானிகள் விஷத்தை “ஆதி சக்தி” (ஆதியிலே உருவான சக்தி) என்று பெயரிட்டார்கள். ஆதி சக்தியின் அருள் பெற்ற “ஈஸ்வரா…!” என்று உயிரின் இயக்கத்தையும் தெளிவாக்கியுள்ளார்கள்.

எந்தப் பொருளில் இந்த விஷம் கலக்கின்றதோ அந்தப் பொருளின் மணத்தை வீரியமாக உணர்ச்சியை ஊட்டும்.
1.ஆனால் அதிகரித்து விட்டால்.....
2.இவனையே அது வீழ்த்தி விடும்.
3.மற்றது எல்லாவற்றையும் வீழ்த்தும்.

ஏனென்றால் நம்மை எது இயக்குகிறது…? நாம் எப்படி இயங்குகின்றோம்…? இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சும்மா நான் (ஞானகுரு) சொல்கிறேன் என்று கேட்டுவிட்டு அப்படியே போகக் கூடாது.

April 28, 2018

எண்ணியதை எண்ணியவாறு செய்து முடிக்கும் சூட்சமம்

வீட்டில் நாம் குழந்தைகளைச் செல்லமாக வளர்க்கின்றோம், ஆனால் “இப்படிச் செய்து கொண்டிருக்கின்றான்..,” என்று குறைகளைச் சொல்கின்றோம்.

நல்லவனாக்குகின்றோம். ஆனால், இந்தக் குறைகளைச் சொல்கின்றோம். பரிபக்குவமாக எடுத்துச் சொல்லும் நிலை இல்லை.

வீட்டிற்குள் சில நேரம் குறைகள் வந்துவிடுகின்றது. அவைகளைப் பரிபக்குவமான நிலைகளில் நிவர்த்தி செய்து பழகிக் கொள்தல் வேண்டும்.

பக்குவம் தவறிவிட்டால் என்ன ஆகும்?

ஒருவரை “வாருங்கள்..,” என்று அமைதி கொண்டு அன்பாகக் கூப்பிடுவதற்குப் பதில் உரத்த குரலில் அழுத்தமான நிலையில் “வாங்கஅ..,” என்று சொன்னால் இதுவே குற்றமாகிவிடும்.

பக்குவத்தின் நிலையில் எதையுமே நல்லவைகள் ஆக்குவதும் கெட்டவைகள் ஆக்குவதும், உணர்வை மாற்றுவதும், குணங்களை மாற்றுவதும், எதிரிகளாக்குவதும், நண்பனாக்குவதும் இவை எல்லாமே நம் உணர்வுகளின் பக்குவத்தைப் பொறுத்துத் தான் அமைகின்றது.

தொழிலிலோ மற்ற எதிலுமே சிறிது கஷ்டங்கள் வந்துவிட்டால் நாம் பக்குவமான நிலைகள் கொண்டு ஓரளவிற்குச் சிந்தித்துச் செயல்பட்டோம் என்றால் அதைச் சரியாக நிவர்த்திக்கும் தன்மை வருகின்றது. பகைமையைக் குறைக்கலாம்.

இதே போல வாழ்க்கையில் வரும் தீமைகளை அந்தப் பரிபக்குவ நிலை கொண்டு மாற்றியமைக்க முடியும்.

ஒருவர் சொல்லும் தீமையான உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று தடுத்து நிறுத்தினால் “அதன் வேகத்தையும்.., துடிப்பையும்.., நிறுத்தி” உணர்வின் அறிவாக நமக்குள் சிந்தித்துச் செயல்படும் தன்மை வரும்.

யாருமே கெட்டவர்கள் அல்ல. “சந்தர்ப்பம்..,” அவர்களைக் கெட்டவர்களாக ஆக்குகின்றது.

அதிலிருந்து மீட்டிடும் நிலையே நம் குருநாதர் காட்டிய அருள் வழி.

அதற்காக வேண்டி ஒரு முரடனிடம் போய்ப் பரிபக்குவமாகப் பேசினால் கேட்பானா..,? ஒரு குடிகாரனிடம் போய்ப் பரிபக்குவமாகப் பேசினால் கேட்பானா..,?

நாம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர அவனிடம் பக்குவம் எடுத்துச் சொன்னால் கேட்க மாட்டான். அவன் கொடிய தவறு செய்ய விரும்புகின்றான். அவனிடம் பக்குவமாகச் சொன்னால் கேட்பானா..,?

ஒரு திருடன் இருக்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனிடம் போய், “ஏன் இப்படித் திருடுகின்றாய்..,?” என்று பக்குவம் சொன்னால் கேட்பானா? கேட்க மாட்டான்.

ஆகவே, அந்தத் திருடனின் உணர்வுகள் நமக்குள் வராதபடி நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் ஒரு நல்ல பொருளை வைத்திருக்கின்றோம் என்றால் தூசியின் தன்மை அதற்குள் படாதபடி மூடி வைக்க வேண்டும். அதைப் போன்று தான் தீமையின் உணர்வுகள் நமக்குள் போகாதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அதற்காக வேண்டி நாம் போக்கிரியையும் திருடனையும் பார்த்தால் பக்குவமாக நடந்து கொண்டால் எல்லாம் தலைகீழாகப் போய்விடும். நம் பக்குவமெல்லாம் தலை கீழாகக் கவிழ்ந்துவிடும்.

அவன் செய்யும் தவறுகள் நமக்குள் வந்து நாம் தவறு செய்யாமல் பரிபக்குவ நிலை கொண்டு தடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவன் தவறு செய்கின்றான் என்றால் தவறின் நிலைகளில் “இப்படிச் செய்கின்றான்..,” என்று அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் வந்தால் அதே தவறை நாம் செய்யும்படிச் செய்துவிடும். அதனால் பக்குவம் தவறிவிடும்.

இதைப் போல நம் வாழ்க்கை சீராக நடக்க பக்குவ நிலைகள் தேவை. எதெனெதன் நிலைகளை நமக்குப் பக்குவ நிலை தேவையோ அதற்குகந்த நிலையில் பக்குவப்படுத்தி நாம் பழகுதல் வேண்டும்.

பாட்டை மட்டும் பாடிவிட்டு..,
பல நினைவில் நான் இல்லாமல்
“பரிபக்குவ நிலை..,”
நான் பெற அருள்வாய் ஈஸ்வரா. 

உவர் மண் (வெடி உப்பு), கந்தகம் – “சத்ரு மித்ரு” இயற்கையின் இயக்கம்


உவர் மண்ணை எடுத்துக் கொண்டோம் என்றால் காலையில் பார்த்தோம் என்றால் அது ஈரமாக இருக்கும். அதைத் தோண்டி தண்ணீரில் வேக வைத்தோம் என்றால் அது தான் வெடி உப்பு.

வெடி உப்பு இதிலிருந்து தான் தயார் செய்கின்றார்கள்.

இந்த வெடி உப்பு என்ன செய்கின்றது…? இந்தப் பனியில் இது அமிழ்கின்றது. வேக வைத்துப் பிரித்து எடுத்துக் கொள்கின்றார்கள்.

அதே சமயத்தில் விஷத் தன்மைகள் பாறைகள் வழி வருவதை எடுத்துக் கொண்டால் கந்தகம்.

கந்தகம் என்ன செய்கின்றது...? கொதிகலனாக மாற்றுகின்றது. அதையும் கடல் பகுதிகளிலிருந்து தான் எடுக்கின்றார்கள்.

கந்தகத்தையும் வெடி உப்பையும் இது இரண்டையும் இணைத்தால் (TOUCH) உடனே வெடிக்கும்…!

கந்தகத்தையும் வெடி உப்பையும் எடுத்துத் தனித் தனியாகத்தான் வைத்து இருப்பார்கள். இது இரண்டும் மோதி விட்டால் உடனே தீ பிடிக்கின்றது. இயற்கையின் சிலை நியதிகள் இவை.

நாம் எடுக்கும் உணர்வுகள்… நாம் சுவாசிப்பது கந்தகம்.. அதாவது வெப்பமாகின்றது. சந்தர்ப்பவசத்தால்
1.வேறு சிலருடைய உணர்வை எடுத்துக் கொண்டால்
2.“சில்ல்ல்ல்…..” என்று உடனே நமக்கு வேர்க்கின்றது.
3.அந்த உப்புத் தன்மை ஏற்படும்.
4.யாருடைய குணங்களை எடுத்து வளர்க்கின்றீர்களோ “படீர்….” என்று வெடித்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது
5.உணர்ச்சியைத் தூண்டும் நிலைகள் என்பது இது தான்…!

கந்தகம் ஒரு எரி பொருளாக மாறுகின்றது. வெடிக்கும் தன்மை கொண்ட உப்பை இதனுடன் சேர்த்தவுடனே “சத்ரு.. மித்ரு..” என்ற நிலைகள் வருகின்றது.

அதாவது… “இயற்கையில்”
1.ஒரு பொருள் உருவாக்குவதற்கும்
2.ஒரு பொருளை இயக்குவதற்கும் இந்த நிலைகள் தான் காரணம்
(இதைப் பார்க்கலாம்)

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவேர் இது இரண்டையுமே எனக்கு நேரடியாகக் காட்டுகின்றார். அவர் உணர்த்திய இயற்கையின் இயக்கத்தின் பேருண்மைகளைத்தான் உங்களிடம் சொல்கிறோம்.

நம்மை எது இயக்குகின்றது என்பதை “நம்மை நாம் அறிய…!” இது உதவியாக இருக்கும். அதற்குத்தான் சொல்வது.

கருமாரி உருமாரி திருமாரி" - அகஸ்தியன் பெற்ற அதிசய ஆற்றல்கள்


அகஸ்தியன் ஐந்து வயது இருக்கப்படும் பொழுது அவன் தாய் தந்தையர் இருவருமே சந்தர்ப்பத்தால் இறந்து விடுகின்றார்கள்.

ஏனென்றால் அவர்கள் தங்கள் உடல்களில் பூசிக் கொண்ட தாவர இனச் சத்துகளின் விஷங்கள் உடலுக்குள் ஊடுருவி உயிரான்மாவில் பெருகி அதனால் உயிர்கள் வெளியேறி விடுகின்றது.

ஆனாலும் தன் குழந்தை என்ற பாசத்தால் குழந்தையின் உடலுக்குள் இரு உயிரான்மாக்களும் சென்று விடுகிறது.

அந்தக் குழந்தையோ (அகஸ்தியன்) தாய் தந்தையின் ஏக்கத்தில் சூரியனைப் பார்த்து ஏங்குகின்றது...! கதறுகிறது...! (சூரியனைத்தான் அன்றைய மக்கள் கடவுளாக வணங்கி வந்தனர்)

அகஸ்தியன் அவ்வாறு விண்ணை நோக்கி ஏங்கும் போது சூரியனின் உணர்வின் ஆற்றலால்
1.அன்னை தந்தையர் தனக்குள் ஈர்ப்பாக எவ்வாறு வந்தார்கள் என்று (தனக்குள்ளே) அவனால் உணர முடிகிறது.
2.தன்னுள்ளே நின்று... “என் தாய் தந்தை என்னைக் காக்கின்றார்கள்...!” என்று அறிகின்றான்.

அவர்களின் ஆற்றல்களின் துணை கொண்டு சூரியனைப் பார்க்கப்படும் போது சூரியனுக்குள் எதிர் மறையாக மோதிக் கொண்டிருக்கும் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சு பிரிவதைப் பார்க்கின்றான்.

அதே சமயத்தில் தான் கவர்ந்து கொண்ட உணர்வுகளைச் சூரியன் அமிலமாக... “பாதரசமாக மாற்றி” அதைப் பரவெளியில் உமிழ்த்திக் கொண்டிருப்பதையும் காணுகின்றான்.

1.அந்தப் பாதரசம் மற்றொன்றோடு மோதும் போது (வெப்ப காந்த அலைகள் – வெயில்)
2.அந்தந்த உணர்வுகளை மாற்றி அதைத் தனதாகக் கவர்ந்து
3.அதனதன் உணர்வலைகளாக எவ்வாறு செல்கிறது...? என்ற நிலையும் அகஸ்தியன் கண்டுணர்கின்றான்.

இன்று விஞ்ஞான அறிவால் ஒரு அணுவின் தன்மையைக் கூர்மையாக அறிந்து அறிந்து இத்தனை ஆண்டுகளாக வளர்ந்த பாறை என்று காணுகின்றார்கள்.

அதைப் போல இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை அந்த இளம் பிஞ்சு உள்ளத்திலேயே எளிமையில் கண்டுணர்ந்தான் அகஸ்தியன்.

சூரியன் எவ்வாறு உருவானது என்ற நிலையும் கடவுள் எவ்வாறு உருவானது என்ற நிலையும் அவன் சிந்தனைக்குள் கிளரச் செய்து விண்ணின் நிலையை அவன் நுகருகின்றான்.

ஒவ்வொரு அணுவின் தன்மையைப் பிளந்து பிளந்து ஆரம்பத்தில் அணுக்கள் எவ்வாறு உருவானது என்ற நிலையையும் உணர்ந்து வெளிப்படுத்துகிறான்.

ஆதியிலே பேரண்டம் எவ்வாறு இருண்ட சூழ்நிலைகள் இருந்தது..? அதிலே அணுக்கள் எப்படி உருவானது…? என்று விண்ணுலகின் தோற்றத்தை அகஸ்தியன் கண்டுணர்கின்றான்.

பேரண்டம் இருண்ட நிலையில் இருந்த அக்காலத்தில் நஞ்சு கொண்ட ஓர் அடர்த்தியான ஆவி நஞ்சற்ற நிலைகளில் மோதும் போது (BIG BANG என்பார்கள் விஞ்ஞானிகள்)
1.நஞ்சின் தன்மை  கொண்டு அதன் தாக்குதல் தாங்காது வெப்பமாகி
2.அது சுக்கு நூறாகத் தெறித்து சிதறுண்டு ஓடுகின்றது.
3.அவ்வாறு ஓடும் பொழுது அதனின் ஓடும் பாதையில் ஈர்க்கும் சக்தியான காந்தம் உற்பத்தியாகின்றது.
4.விஷம் காந்தம் வெப்பம் இது மூன்றும் சேர்த்து ஒரு அணுவின் தன்மையாக அடைகின்றது
5.முதன் முதலில் ஒரு இயக்க சக்தியாக இது எவ்வாறு உருவானது என்ற நிலையை
6.இந்த ஐந்து வயதுக் குழந்தை அகஸ்தியன் கண்டுணருகின்றான் .

அங்கு நடக்கும் அதிசயங்களையும் அற்புதங்களையும் பார்த்து உணர்கின்றான். அவன் உணர்ந்த நிலைகள் அனைத்தும் அவனுக்குள் விளைகின்றது.

இந்தச் சக்தி அவனுக்கு எப்படிக் கிடைத்தது...?

1.ஆரம்பத்தில் தாயின் கருவில் பெற்ற நஞ்சினை வென்றிடும் சக்தியும்
2.ஐந்து வயதில் அவனுக்குள் இணைந்த அன்னை தந்தையின் இரு உயிராத்மாக்களின் சக்தியும்
3.அந்த நஞ்சின் சக்திகளும் அகஸ்தியனுக்குள் வலு கூடப்பட்டு
4.பேரண்டத்தில் ஒரு அணுவின் தன்மை எவ்வாறு நஞ்சால் இயக்குகிறது என்ற நிலையை அவன் கண்டுணர்ந்தான்.

அவன் கண்டுணர்ந்த உணர்வுகள் அவன் உடலுக்குள் விளைந்து “அவனின் மூச்சலைகளாக...” அது விண்ணுலகிலும் படர்ந்துள்ளது. இந்த மண்ணுலகிலும் (நம் பூமியிலும்)  படர்ந்துள்ளது.

அகஸ்தியன் தான் உணர்ந்த பின் எல்லாவற்றுக்கும் பெயரிடுகின்றான்.
1.நெருப்பைப் பராசக்தி என்றும்
2.காந்தத்தை லட்சுமி என்றும்
3.விஷத்தை ஆதிகருமாரி என்றும் பெயரிடுகின்றான்.

ஆதி கருமாரி என்றால் இருண்ட நிலைகள் இருக்கும் போது அதற்குள் நஞ்சு கொண்டது நஞ்சற்றதைத் தாக்கப்படும் போது
1.இருண்டது வெப்பமாகி ஒளியாக மாறுவதும்
2.தாகுதலால் நகர்ந்து போவது ஈர்ப்பின் சக்தி அடைவதும்
3.ஒரு இயக்கச் சக்தியாக எவ்வாறு மாறுகிறது என்று அவன் உணர்ந்தான்.

அதாவது கருமாரி... உருமாரி... திருமாரி.. என்று இருண்ட நிலைகளிருந்து எப்படி “இயக்கச் சக்தியாக – கடவுளாக...!” உருவாகின்றது என்று காரணப் பெயரிடுகின்றான் அகஸ்தியன்.

அவன் எதையெல்லாம் வெளிப்படுத்தினானோ அந்த நினைவலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இங்கு படரச் செய்துள்ளது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த அலைகளை நுகரும் பொழுது என்னாலும் அதை அறிய முடிந்தது. உணர முடிந்தது. உங்களாலும் அறிய முடியும்... உணர முடியும்...!

உதாரணமாக இன்று விஞ்ஞான அறிவால் விண்ணுலகில் நக்கும் நிலைகளை இயந்திரத்தின் துணை கொண்டு புகைப்படமாக எடுக்கிறான். அந்த ஒளி அலைகளை இங்கே பதிவாக்கிப் பிரித்துத் தரையிலிருந்து படமாகவும் எடுக்கிறான்.

அந்த உணர்வின் ஒளி அலைகளையும் நாதத்தின் தன்மையும் அதனுடைய அடர்த்தியையும் இன்று விஞ்ஞானி  கண்டுணருகின்றான்.

விஞ்ஞானிகள் எத்தனையோ இப்படிக் கண்டறிந்து வெளிப்படுத்தினாலும் மெய் ஞானிகள் கண்டுணர்ந்ததை இன்னும் துரும்பளவு கூடச் சொல்லவில்லை. ஏனென்றால்
1.நான் (ஞானகுரு) படிப்பறிவு அற்றவன்.
2.மூன்றாவது வகுப்பு கூட முழுமையாகப் படிக்கவில்லை.
3.எனக்கு விஞ்ஞான அறிவும் இல்லை.
4.புத்தகங்களையும் படித்ததில்லை.

ஆனால் விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசுகிறேன் என்றால் அந்த மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை எனக்குள் பதிவானது. பதிவானதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து வளர்த்துக் கொண்டேன்.

அப்படி வளர்த்த நிலைகள் கொண்டு தான் என்னால் அறிந்துணர முடிந்தது. அதை உங்களுக்கும் எடுத்துரைக்க முடிகின்றது. இது உங்களுக்குள் பதிவான பின் அண்டத்தின் நிலைகளை நீங்களும் கண்டுணரவும் முடியும்.

அண்டத்தில் உருவானது தான் இந்தப் பிண்டத்திலும் இருக்கின்றது. அதை அறியும் உணர்வுகள் வரப்படும் போது உங்களுக்குள் இது ஒளியாக மாறி அந்த மெய் ஞானிகளின் உணர்வுடன் உங்கள் உயிரான்மாவும் ஒன்றுபடும்.

1.பிறவியில்லா பெரு நிலையை நீங்கள் அடைய முடியும்.
2.அதற்காகத் தான் இதை உங்களுக்குள் பதிவாக்குகிறோம்.

அகஸ்தியன் பெற்ற அதிசய ஆற்றல்களை ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறோம்.