ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 13, 2018

கை கால் குடைச்சல் கால் வலி குதிங்கால் வலி மூட்டுக்கு மூட்டு வலி கண் எரிச்சல் தலை வலி மேல் வலி உடல் வலி – இவைகள் வருவதன் காரணம் என்ன? நீக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்தவருடைய கஷ்டங்களை எல்லாம் காது கொடுத்து உற்றுக் கேட்கும் போது கேட்பவருக்குக் கை கால் குடைச்சல் வருகின்றது என்று நம்மில் (பெண்கள்) எத்தனை பேருக்குத் தெரியும்?

கஷ்டமென்று சொல்வதை அதிகக் கவனத்துடன் கேட்போம். என் பையன் அப்படிச் செய்கிறான் இப்படிச் செய்கிறான் என்பார்கள்.

அதற்குத் தகுந்த மாதிரி இன்னொரு வீட்டில் கஷ்டமாக இருந்தால் இருவரும் எங்கே உட்கார்ந்து பேசினார்களோ அங்கேதான் அமர்ந்து பேசுவார்கள்.

அங்கே உட்கார்ந்து பேச ஆரம்பித்தவுடன் இதே இராமாயணம் தான். சமையல் செய்வது போய்விடும். எல்லாம் போய்விடும். கடைசியில் என்ன உலகம்...! எல்லாம் போய்விட்டது என்பார்கள்.

ஏனென்றால் எந்தக் கஷ்டமானதைக் கூர்ந்து கேட்டார்களோ இந்த உணர்வுகள் அவர்களைச் சாடிக் கொண்டே இருக்கும். அதற்குத்தான் உதவும்.

காதிலும் கேட்டோம். வீட்டிலும் பதிவு செய்து விட்டோம். வீட்டிற்கு வந்தால் நிம்மதி இல்லை. இரவில் கை கால் குடைச்சல் கண் எரிச்சல், தலை வலி எல்லாமே வந்துவிடும். கடைசியில் டாக்டரிடம் தான் போக வேண்டும்.

நாம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்கின்றோம். அப்பொழுது உடனே எழுந்திருந்து விடலாம்.

ஆனால் அடிக்கடி சங்கடமாக பேசிக் கொண்டிருந்தால் உடலுக்குள் அங்கங்கே அந்த விஷம் தேங்கி நிற்கும். இந்த (சங்கடப்படும்) உணர்வுகள் வேகமாகத் தடுத்து நின்றவுடன் விஷம் அங்கேயே தேங்கிவிடும்.

நாம் மூச்சு (இந்தப் பிராணவாயு) எடுப்பதெல்லாம் சுற்றிக் கொண்டு வரும். அது கலந்து நரம்புகளில் இருக்கக்கூடிய உணர்வின் தன்மைகள் துடிக்க வேண்டும்.  

கொஞ்ச நேரம் சலிப்பும் சங்கடமும் வேதனையும் எடுத்திருந்தால் நம் உடலில் (கை கால் தலை இடுப்பு) மடக்கிக் கொண்டிருக்கும் இடங்களில் தடைப்பட்டால் இது போய் மோதியவுடன் அசுத்தங்கள் எல்லாம் அப்படி அப்படியே அடங்கிவிடும்.

அதைத் தான் மூட்டுக்கு மூட்டுக்கு வலி முழங்கால் வலி குதிங்கால் வலி என்றெல்லாம் சொல்வார்கள். நடக்கவே முடியாமல் கூட வரும். நாம் கவலையால் எப்படி அமர்ந்திருந்தோமோ அப்படியே அந்த வலி வரும்.

1.கால் நீட்டி அமர்ந்திருந்தால் மடக்க முடியாது.
2.மடக்கி அமர்ந்திருந்தால் நீட்ட முடியாது.
3.உட்கார்ந்திருந்தால் எழுந்திருக்க முடியாது
4.படுத்த நிலையிலிருந்து உடனே எழ முடியாது
5.வேலை செய்யும்போது தெரியாது படுத்தவுடன் கால் வலி பயங்கரமாக இருக்கும்
6.இந்த மாதிரிச் சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டே போவார்கள்.

இதற்கெல்லாம் காரணம் நாம் கேட்டுணர்ந்த சுவாசித்த உணர்வுகள் விஷத் தன்மையாகி நம்மைப் பலவீனப்படுத்தும். உடல் உறுப்புகளுக்குள் அங்கங்கே தேங்கி விடும்.

நாம் சுவாசித்த பிராணவாயு அங்கங்கே போகும்போது அதற்குத்தக்க இவையெல்லாம் தேங்கிக் கொள்ளும். நாம் தவறு செய்தோமா…?

பிறருடைய கஷ்டங்களையும் சிரமங்களையும் கேட்டு அறிந்து கொண்டோம்.
1.அதைச் சுத்தப்படுத்துகின்றோமா...?
2.அல்லது அவர்கள் கஷ்டங்களைச் சொல்லும் பொழுது உங்கள் கஷ்டமெல்லாம் நீங்கும்
3.இனிமேல் கஷ்டமே உங்களுக்கு வராது என்று ஏதாவது நல்லதைச் சொல்லக் கற்றிருக்கின்றோமா...?
4.சற்று சிந்தித்துப் பாருங்கள்.

கஷ்டத்தைக் கேட்டு நாம் வேதனைப்படத் தெரிந்து வைத்திருக்கின்றோம். என்னிடமும் நிறைய கஷ்டம் இருக்கின்றது என்று நம் கஷ்டங்களையும் பதிலுக்குச் சொல்லி கஷ்டமானவைகளைப் பேசுவதே பழக்க வழக்கமாக இருக்கின்றது.

உடல் வலி மேல் வலி எல்லாம் வந்த பிற்பாடு என் நேரம் சரியில்லை...! தெய்வம் என்னைச் சோதிக்கின்றது...! அது சரியில்லை.. இது சரியில்லை...! எதை எதையோ சொல்லத் தொடங்குகின்றோம்?

நாம் நுகர்ந்த சங்கடமான உணர்வுகள் தான் இவ்வளவுக்கும் காரணம் என்று எண்ணுவதில்லை. அதைத் தூய்மைப்படுத்தாதபடி அதனால் வந்த உடல் வலியினால் வேதனையை வளர்க்கத்தான் முடிகின்றது.

இதை யார் தூய்மைப்படுத்துவது...? தெய்வம் வந்து தூய்மைப்படுத்துமா..? சாமியார் துடைப்பாரா...?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை வாக்காகச் சொல்லிப் பதிவாக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

அடுத்து அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா உடலுக்குள் செலுத்தினாலே போதும்.

1.கண்ணின் நினைவு துருவ நட்சத்திரத்தின் பால் இருக்க வேண்டும்
2.ஈஸ்வரா என்று புருவ மத்திக்குக் கொண்டு வர வேண்டும்
3.தலையிலிருந்து கால் வரை உடல் உறுப்புகள் முழுவதும் அந்த உணர்வலைகளைப் பாய்ச்ச வேண்டும்
ஒரு நிமிடத்திலிருந்து ஐந்து நிமிடத்திற்குள் அப்படியே ஒரு சர்குலேசன் மாதிரி இதே போல் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். இது தான் ஆத்ம சுத்தி என்பது.

இதைச் செய்து வாருங்கள். உங்கள் நோய்கள் விலகிவிடும். உங்கள் மனக் கவலைகள் நீங்கும். தொழில் எந்த முன்னேற்றம் அடைய முடியுமோ அதை அடைய முடியும்.

நாளைய விஞ்ஞான அழிவுகளிலிருந்து வரக்கூடிய சில விஷத்தன்மையில் இருந்து மீட்டுக் கொள்ள உதவும். இவ்வளவு சுலபமாகச் சொல்வதினால் நீங்கள் அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.