ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 30, 2018

வயிறு வலி… வயிற்றில் புண்… (அல்சர்) நெஞ்சு எரிச்சல்… இதெல்லாம் எதனால் வருகிறது…? எதனால் நெஞ்சைக் கரிக்கின்றது…?


வயிறு நிறையச் சாப்பிட்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். சந்தர்ப்பத்தில் உங்கள் குடும்பத்திலோ அல்லது எதிர்த்த வீட்டிலோ கடுமையாக இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள்.

நீயா...? நானா..? என்ற அளவிற்கு ஒருவரை ஒருவர் தாக்குகின்றார்கள். பார்க்கின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகின்றது. இழுத்துச் சுவாசிக்கின்றீர்கள்.

சுவாசித்த உணர்வுகள் உமிழ் நீராகி சாப்பிட்ட ஆகாரத்துடன் கலக்கின்றது. அப்புறம் கொஞ்ச நேரத்தில் பார்த்தால் “புஸ்...” என்று இரைப்பை (வயிறு) வீங்கிவிடும்.

இரைப்பை ஊதியவுடன் புளிப்பான சத்து எதிர்த்து வெளியில் வரும் (எதிர்கழிக்கும்) “ஏஏவ்வ்வ்வ்...!” என்று வரும். அப்புறம் பார்த்தால் நெஞ்சைக் கரிக்கும்.

முதலிலே சாப்பிட்ட ஆகாரம் இரைப்பையைப் பாதிக்காமால் இருப்பதற்காக அதிலே ஒரு முலாம் பூசி இருக்கும். ஆனால் நாம் சுவாசித்த இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி இரைப்பைக்குள் வந்து பாதுகாப்பாக இருக்கும் அந்த முலாமைக் கரைத்துவிடும்.

ஒரு பித்தளைப் பாத்திரத்தில் (அழுக்கு) களிம்பு பிடித்திருந்ததென்றால் அதில் புளியை வைத்துத் தேய்த்தால் என்ன செய்யும்...? அந்தக் களிம்பை எல்லாம் சுத்தமாக எடுத்துவிடும். அதைப் போல
1.நம் இரைப்பைக்குள் புளித்து விட்டது என்றால்
2.நல்ல சத்துக்கள் எல்லாவற்றையும் பிய்த்துக் கொண்டு வந்துவிடும்.
3.அதற்குப் பிறகு வேறு எதைச் சாப்பிட்டாலும் எரிச்சலாகும்.

சும்மா வெறும் வாழைப் பழத்தைச் சாப்பிட்டால் கூட எரியும். வாழைப் பழமோ இனிப்பாக இருக்கும். ஆனால் அதில் இருக்கக்கூடிய துவர்ப்போ கொஞ்சம் இறுக்கிப் பிடிக்கும்.

வாழைக்காயை முக்கால் பழமாக இருக்கும் போது கொஞ்சம் போல் சாப்பிட்டுப் பார்த்தால் தெரியும். அந்தத் துவர்ப்பும் மண்ணையப் பிடிக்கிறதும் கழுத்தைப் பிடித்துக் கொண்டு உள்ளுக்குள் திணறுவதைப் பார்க்கலாம். திணறிக் கொண்டு இருக்கும்.

ஏனென்றால் நம் சிறு குடல் அது சுருங்க முடியாமல் தடுக்கிறது. அப்போது எப்படியோ இக்கட்டுப் பிடிக்கிற மாதிரி இருக்கிறது...! என்னவோ தெரியவில்லை… இப்படி வலிக்கிறதே...! என்ற எண்ணம் தோன்றும்.

நாம் எந்தத் தப்பும் பண்ணவில்லை. வேடிக்கை தான் பார்த்தோம். ஆனால் அது இங்கே நெஞ்சைக் கரிக்கச் செய்கிறது. ஆனால் இதிலே வடிக்கப்பட்ட இரத்தமோ புளிக்கச் செய்த உணர்வு கலந்ததாகப் போகும்.

அந்த இரத்தத்தை இழுத்துச் சுத்தப்படுத்துவதற்காக இருதயம் பம்ப் (PUMP) செய்து உடலிலுள்ள எல்லாப் பக்கமும் அனுப்பும். அப்பொழுது என்ன நடக்கின்றது…?

உதாரணமாக நாம் உபயோகப்படுத்தும் காரில் பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் வைத்திருக்கின்றோம். இஞ்சின் அந்தப் பெட்ரோலை இழுத்து எல்லாப் பக்கத்திற்கும் வேண்டிய அளவுக்கு எடுத்து அதை இயங்கச் செய்கிறது.

அதே சமயத்தில் பெட்ரோலில் வரும் அந்தக் கசடைச் சுத்தப்படுத்துவதற்கு ஒரு பில்டர் (FILTER) போட்டிருப்பார்கள். ஏனென்றால் இஞ்சினில் உள்ள வால்வு (VALVE) அடைத்து விடாமல் இருப்பதற்காக அதை வைத்திருப்பார்கள்.
1.வரும் அழுக்கை எல்லாம் அது வடிகட்டிச் சுத்தமாக்கும்.
2அந்த வால்வில் அழுக்குகள் அடைத்து விட்டால் பெட்ரோல் உள்ளே போகாது.

அதைப் போல ஆகாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட இரத்தத்தை இருதயம் இழுத்து உடல் முழுவதும் அனுப்பும் நிலையில்
1.அந்த இரத்தத்தில் விஷத்தின் தன்மை இருந்ததென்றால்
2.இருதயத்திலுள்ள வால்வுகள் வீக்கமாகி
3.இரத்தம் வருவதையோ போவதையோ தடைப்படுத்தும்.

இரத்தத்தை இழுப்பதற்காக வேண்டி பிஸ்டன் (PISTON) இழுக்கும். அப்படி இழுத்தவுடன், “பளீர்...!” என்று நெஞ்சை வலிக்கிறது என்போம். சுவாசிக்கும் பொழுது இங்கே “பளிச்...” என்று மின்னும்.
(ஏனென்றால் அங்கே சண்டை போடுவதைப் பார்த்தோம். அவர்கள் ஒருவருக்கொருவர் சப்தம் போடுவதைப் பார்த்தோம் அது நமக்குள் வந்து இவ்வாறு இயக்கும்)\

அப்படி மின்னியவுடன் எப்படியோ இருக்கிறது...! “பளீர்...பளீர்...” என்று மின்னுகிறது. இது வாயுவாக இருக்குமோ...? என்று நினைப்போம்.

இதிலிருக்கக்கூடிய வாயும் (GAS) விஷமும் சேர்த்து என்ன செய்கிறது...! இரத்தம் சீராகப் போவதை நிற்க வைத்து விடுகிறது. அப்போது அழுத்தமாகி விடுகின்றது.

அந்த அழுத்தத்தால் இங்கே நெஞ்சில் ஏதோ இறுக்கிப் பிடித்த மாதிரி ஒரு மூச்சுத் திணறல் போல ஆகும். இரத்தம் சரியானபடி எல்லாப் பக்கமும் (SUPPLY) போகாதபடி கிட்னிக்கு (KIDNEY) வரும்.

உதாரணமாக நாம் ஒரு அமிலத்தையோ அல்லது விஷமான பொருளையோ சாப்பிட்டுவிட்டால் வாந்தி வந்து வெளியிலே கக்கிவிட்டால் மரமரத்துப் போகின்றது.

அதே போல கிட்னி அந்த அசுத்த இரத்தத்தைச் சுத்தப்படுத்தாதபடி மரமரப்பாகி போகும். அதன் இயக்கமெல்லாம் செயலிழந்து போய்விடும். கிட்னி செயலிழந்தபின் விஷம் கலந்த இரத்தம் தன்னாலே உடலுக்குள் போனவுடனே மற்ற உறுப்புகளிலும் எரிச்சலும் வேதனையும் தோன்றும்.

ஏனென்றால் நாம் இரண்டு பேர் சண்டை போட்டதைப் பார்த்தோம், அங்கே எரிச்சலாகிப் போனது.
1.நம் உடலில் உள்ள நல்ல குணங்களின் சத்துடன்
2.அந்த இரண்டு பேரின் உணர்வுகள் மோதியவுடனே
3.ஐய்யய்யோ... அம்மம்மா...! என்று அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ அதே போல
4.நம் உடலுக்குள் இந்த உணர்வுகள் இயக்கி ஐய்யய்யோ... அம்மம்மா... “பளீர்...!” என்று குத்தும்.
5.ஏனென்றால் அங்கே சண்டையை வேடிக்கை பார்த்தோம். இது இங்கே உடலுக்குள் வந்து அதே மாதிரிச் சண்டை போடும்.

ஆனால் நாம் தப்புப் பண்ணவில்லை. இந்த மாதிரி நம் வாழ்க்கையிலே சேர்ந்து விடுகின்றது. இதைத் தடுப்பது யார்...? தடுப்பதற்கு என்ன ஆயுதம் வைத்திருக்கின்றோம்…? சாமி காப்பாற்றுமா…! சாமியார் காப்பாற்றுவாரா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

ஏனென்றால் நம் உயிர் தான் நாம் நுகர்ந்ததையெல்லாம் உடலுக்குள் அணுவாக மாற்றும் கருவாக உருவாக்கிக் கொண்டே உள்ளது. அதை நல்லதாக மாற்றியமைக்க வேண்டும் என்றால் மீண்டும் அவனிடம் தான் வேண்ட வேண்டும்.

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணிச் சுவாசிக்க வேண்டும். சுவாசிக்கும் பொழுது
1.அந்த அருள் ஒளியை நம் உயிர் ஒளியான அணுவாக மாற்றும்.
2.ஒளியான அணுவாக மாறிய பின் உடலுக்குள் இருக்கும் தீமைகளை அது அடக்கும்.
3.அதையும் ஒளியாக மாற்றும்.

அதாவது… தீமைகளைத் துடைக்க வேண்டும் என்றால் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும்… நம்மை உருவாக்கிக் கொண்டிருக்கும் உயிரிடம் நினைவைச் செலுத்தித்தான் செயல்படுத்த முடியுமே தவிர வேறு யாராலும் மாற்ற முடியாது.

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்…!

நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களையும் “நேரடியாக ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறச் செய்யும் தியானப் பயிற்சி...!”


துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சுவாசிக்க வேண்டிய முறை:-
எங்கள் அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் அவர் துருவனான நிலையும் துருவ நட்சத்திரமான அந்த பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவு அனைத்தையும் இப்போது துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.

அதனின்று வரும் பேரருளைப் பெற வேண்டும் என்று கண்ணைத் திறந்தே ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது கண்ணின் நினைவினை உங்கள் புருவ மத்தியில் நினைவினைச் செலுத்துங்கள். உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் நினைவினைச் செலுத்துங்கள்.
1.உங்கள் கண்ணின் நினைவினை உயிரில் இணைக்கும் போது
2.அந்த உயிரான காந்தத்தின் வழி துருவ நட்சத்திரத்துடன் இணைக்கப்படும் போது
3.அதனின்று வரும் பேரருளைக் கவர்கின்றது. 

இப்போது உங்கள் உயிரில் அது ஈர்க்கப்படும் போது துருவ நட்சத்திரத்திலிருந்து பேரருளும் அந்த பேரொளியும் உங்கள் உயிர் ஈர்க்கப்படும் போது
1.புருவ மத்தியிலே வெளிச்சம் வரும்.
2.சிலருக்கு அரிப்பு ஏற்படும்.
3.சிலருக்கு இந்த வலி ஏற்படும்.
4.சிலருக்குக் காட்சியாகவும் தெரியும்.

துருவ நட்சத்திரத்தை எண்ணும் போது அதைச் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலமும் உங்களுக்குத் தெரியும். அதாவது இன்று பிரபஞ்சத்தில் மற்ற நட்சத்திரத்தின் கூட்டத்தில் தனித்து வாழும் இந்த உணர்வுகளை நீங்கள் பார்க்கலாம்.

நம் உடலிலுள்ள இரத்தத்தைச் சுத்தப்படுத்த வேண்டிய முறை:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் இரத்த நாளங்களிலே செலுத்துங்கள்.

நம்முடைய சகஜ வாழ்க்கையில் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு கோபம் குரோதம் போன்ற உணர்வுகளை
1.நாம் பார்க்க நேர்கின்றது நுகர நேர்கின்றது.
2.இந்த உணர்வுகள் அனைத்தும் உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலக்கின்றது.
3.அப்பொழுது தீய உணர்வுகள் நம் இரத்தமாக மாறுகின்றது.
4.இந்த உணர்வின் இயக்கங்கள் இரத்தத்தில் கரு முட்டைகளாக மாறிப் பின் அணுக்களாக மாறுகின்றது.

இப்படி அணுக்களாக மாறிவிட்டால் நம் இரத்தத்தில் கோபம் அதிகமானால் இரத்தக் கொதிப்பும் வேதனை அதிகமானால் அதற்குத்தக்க வாத நோயோ சரவாங்கி நோயோ போன்ற வாதங்கள் 48ம் உருவாகின்றது.

ஆகவே அந்தந்த அணுக்களுக்குத் தக்க நம் உடலில் இரத்தங்கள் உருவாகி இந்த இரத்தங்கள் உடல் முழுவதும் படர்ந்து நமது உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு இதனின்று ஆகாரம் செல்கின்றது.

தீய உணர்வின் அணுக்கள் இரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் பரவப்படும் போது உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் தீய அணுக்கள் உருவாகி அந்தந்த உறுப்புகளில் நோயாகின்றது... வேதனையாகின்றது...!

கடும் நோயான பின் உடலை விட்டு உயிர் பிரியும் தன்மை வருகின்றது.
1.உடலை விட்டுப் உயிர் பிரியும் போது
2.எந்தெந்த உறுப்புகளில் எதனெதன் நிலைகள் பாழானதோ
3.அந்த உறுப்புகள் குறைவான நிலையில் உயிரான்மா வெளியேறும்.

உறுப்புகள் குறையும் பொழுது அதற்குத்தக்க மனிதனல்லாத உறுப்புகள் குறைவாக உள்ள உடலின் (உயிரினங்களின்) ஈர்ப்புக்குள் அழைத்துச் சென்று விஷம் கொண்ட உடலை அடுத்து உருவாக்கிவிடும்.

ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையில் நாம் கேட்டு பார்த்து நுகர்ந்து அறிந்து உணர்ந்த உணர்வுகள் அனைத்தும் ஈஸ்வரலோகத்தின் (உயிரின்) இயக்கமாகவும் நம் இரத்தத்தில் அணுத்தன்மை கருவாகும் இந்திரலோகமாகவும் அடைந்து விடுகின்றது.

 ஆகவே நம் உடல் உறுப்புகளைச் சீராக்க வேண்டுமென்றால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி அந்த உணர்வினை உமிழ் நீராக மாற்றி நல்ல இரத்தமாக உருவாக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை இரத்த நாளங்களில் செலுத்தி இந்த அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இருளை நீக்கி ஒளியாக மாற்றும் அணுக்களை நம் இரத்தத்தில் உருவாக்கும் நிலைக்கே இந்தப் பயிற்சி.

நுரையீரலுக்குச் செய்ய வேண்டிய தியானம்:-
சலிப்பு சஞ்சலம் வெறுப்பு என்ற உணர்வுகள் நுரையீரலில்  அணுக்களாக ஆனபின் ஆஸ்துமா போன்ற நோய்களும் வேதனை என்ற கடுமையான நிலைகளை எடுத்தால் T.B. என்ற நோய்களும் வருகின்றது.

இதைப் போன்ற அணுக்களை மாற்ற துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரலில் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உங்கள் நினைவினைச் செலுத்துங்கள்.

இருதயத்திற்குத் தியானிக்க வேண்டிய முறை:-
தீய உணர்வுகள் இரத்தங்களில் கலந்து இருதயத்திற்குள் செல்லப்படும் போது அங்கே அது எதிர்நிலையாகி இரத்தங்கள் உறையும் தன்மையாகின்றது.

அதே சமயத்தில் விஷத்தன்மை படர்ந்த பின் அந்த இருதயத்தை இயக்கும் அந்த நரம்பு மண்டலம் பலவீனம் அடைந்து மூச்சுத் திணறலும் நெஞ்சு வலியும் ஏற்படுகின்றது.

இதைப்போன்ற நிலைகளிலிருந்து மாற்ற துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயத்தில் படர்ந்து இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கி உங்கள் நினைவு அனைத்தும் இந்த இருதயத்திற்குள் செலுத்தி அந்த அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கல்லீரலுக்குத் தியானிக்க வேண்டிய முறை:-
அசுத்த இரத்தங்கள் கல்லீரலுக்குள் சென்றால் அது வீக்கம் ஆகும், அதிலேயும் மூச்சுத் திணறலும் வரும். சில நேரங்களில் வலியும் எரிச்சலும் வரும்.

கல்லீரலை அதை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் நினைவினை கல்லீரலுக்குள் செலுத்துங்கள்.

கணையங்களைச் சீராக இயக்கத் தியானிக்கும் முறை:-
சர்க்கரைச் சத்து உப்புச் சத்து போன்ற நிலைகளை மாற்றியமைக்கும் திறன் கொண்ட கணையங்களை உருவாக்கிய அணுக்கள் பலவீனமானால் சர்க்கரைச் சத்து உப்புச் சத்து உருவாகும். இரத்தக் கொதிப்பும் உருவாகும்.

அந்த மூன்றையும் சீராக்க கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கணையங்களுக்குள் நினைவினைச் செலுத்துங்கள்.

கிட்னிக்குத் தியானிக்க வேண்டிய முறை:-
தீமையான உணர்வுகள் இரத்ததில் அதிகமாகி அந்த கிட்னிக்கு வந்தால் அது சீராக இயங்கும் தன்மை மாறி மயக்கடைந்து இரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மைகள் இழந்துவிடுகின்றது.

அதனால் அசுத்தமான இரத்தங்கள் உடல் முழுவதும் சென்று உடலில்  பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகின்றது.

இதைப் போன்ற நிலைகள் வராது தடுக்கக் கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

சிறு குடல் பெரும் குடலுக்குத் தியானிக்கும் முறை:-
உங்கள் சிறு குடல் பெரும் குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரரளும் பேரொளியும் பெற வேண்டும் என்று  நினைவைச் செலுத்தி அந்த அணுக்களைத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்யுங்கள்.

ஆற்றல்மிக்க சக்திகளை உடலுக்குள் நேரடியாகச் செலுத்தும் பயிற்சி:-
இன்று மருத்துவ ரீதியில் ஊசி மூலமாக மருந்தினை இரத்தத்தில் செலுத்தும் பொழுது மருந்து உடனடியாக உடல் முழுவதும் பரவி உடலில் நிவாரணம் ஏற்படுகின்றது. உடல் வலியோ வேதனையோ உடனே குறைகின்றது.

அதே போலத்தான் உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதன் உணர்வைக் கவர்ந்து கண்ணின் நினைவு கொண்டு உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தியைப் பெறச் செய்வதற்கே இந்தப் பயிற்சி.

நேரடியாக அந்தந்த உறுப்புகளுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்தும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலிலுள்ள அணுக்களுக்கு வீரிய உணர்வை ஊட்டித் தீமைகளை நீக்கும் அணுக்களாக ஒளியாக மாற்றுகின்றது.

 இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொண்டால் உங்கள் எலும்புகளில் உள்ள ஊன்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

அந்த வித்தின் தன்மை வளர்ந்தால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நேரடியாகக் கவர்ந்து
1.நோய்களை நீக்கும் தன்மையும்
2.சிந்திக்கும் ஆற்றலும் மனவலிமை பெறும் தன்மையும்
3.அருளைப் பெருக்கும் தன்மையும்
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்லும் சக்தியும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

கண்களில் உள்ள கண்மணிகளைத் தூய்மையாக்கும் பயிற்சி:-
வேதனை வெறுப்பு என்ற உணர்வுகளை கண்மணி வழியாக அதிகமாகக் கவர்ந்தால் வேதனையைக் கவரும் சக்தியாக மாறிக் கண் பார்வை குறைந்து விடுகின்றது. அல்லது பார்வையே கூட இழந்து விடுகின்றது.

இதை மாற்றக் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அதிலுள்ள விஷத் தன்மைகள் அனைத்தும் அகன்று அருள் ஞான சக்தியைக் கவரும் கண்மணிகளாக மாற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

பேரொளியான உணர்வுகளையும் பேரருளான நிலைகளையும் பெறும் அருள் கண்மணிகளாக வளரவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

நரம்புகளை வலுவாக்கும் பயிற்சி:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானித்து கண்ணின் நினைவினை அதிலே செலுத்துங்கள்.

இந்தப் பயிற்சியைச் சீராகக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நினைவாற்றல் தீமைகளை நீக்கும். அருளைப் பெருக்கும். வாழ்வில் நலம் பெறச் செய்யும். ஆனந்தப்படச் செய்யும்.

எலும்புக்குள் உருவாகும் ஊனை மாற்றத் தியானிக்க வேண்டிய முறை:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவினை எலும்பு மண்டலத்தில் செலுத்தி எங்கள் எலும்புக்குள் ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத்  துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

நாம் எதையெல்லாம் கண்மணி வழியாகப் பார்க்கின்றோமோ அது நம் எலும்புக்குள் இருக்கும் அந்த ஊனுக்குள் வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது.

அந்த வித்தின் உணர்வு உயிரின் துடிப்பால் அந்த உணர்வின் இயக்கங்களாகும் பொழுது அது அணுவாகி அணுவின் மலமாக நம் எலும்புக்குள் உருவாகின்றது.
1.எதனெதன் உணர்வுகள் அது உருவாகின்றதோ
2.அதனதன் உணர்வுகளைக் கவரும் சக்தி பெறுகின்றது.

இவை அனைத்தையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கவரும் சக்தியாக மாற்ற உங்கள் கண்ணின் நினைவினை எலும்புக்குள் ஊனாக உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களில் செலுத்துங்கள்.

இவ்வாறு எண்ணும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் ஊனுக்குள் பதிவாகின்றது. எலும்புக்குள் ஏற்கனவே ஊனை உருவாக்கிய அணுக்களையும் பெறச் செய்யும் போது அருள் சக்தியைக் கவரும் ஊனாக உருவாக்க முடியும்.

தசைகளுக்கும் தோலுக்கும் தியானிக்க வேண்டிய முறை:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தசை மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் தசை மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தோல் மண்டலம் முழுவதும் படர்ந்து தோல் மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

குடும்பத்திற்குத் தியானிக்க வேண்டிய முறை:-
இவ்வாறு நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்தது போன்று எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

திருமணமானவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் கணவர்/மனைவி உடல் முழுவதும் படர்ந்து அவர் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

நாங்கள் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரையொருவர் மதித்து நடக்கும் ஆற்றலும்  சாவித்திரி போன்று எங்கள் இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றிப் பேரருள் பெற்று பேரின்பப் பெருவாழ்வு பெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்து எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் அகன்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் எங்கள் குடும்பத்தில் அனைவரும் வாழ்ந்து வளர்ந்து தொழில் வளம் பெருகி செல்வம் பெருகி செல்வாக்கு பெருகி அருள் ஞானம் பெருகி அருள் குடும்பமாக வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

தவமிருக்க வேண்டிய முறை:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் விவசாய நிலம் முழுவதும் படர்ந்து எங்கள் விவசாய நிலத்தில் பயிரிடும் பயிரினங்கள் அனைத்தும் செழித்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இந்த உலகம் முழுவதும் படர்ந்து உலகில் படர்ந்துள்ள நச்சுத்தன்மைகள் அகன்று  உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்று சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

நல்ல மழை பெய்ய அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் மனதார எண்ணி உங்கள் நினைவினை மேகங்களில் படரச் செய்து மேகங்களைக் கூடச் செய்து நல்ல மழை பெய்ய உங்கள் நினைவாற்றலைப் பாய்ச்சுங்கள்.

இவ்வாறு பாய்ச்சினால் உங்கள் உணர்வு அந்த மேகத்துடன் கூடி  மழை நீராகப் பெய்கின்றது. எல்லா நலமும் பெற வேண்டும் என்ற உணர்வு கலந்திருப்பதனால் மழை பெய்தால் தாவர இனங்களில் நல்ல அணுக்கள் உருவாகி அதனுடைய மலம் தாவர இனங்களுக்கு நல்ல உரமாகும்.

வாழும் மக்கள் வேதனை வெறுப்புடன் எண்ணினால் விஷக் கிருமிகளாகித் தாவர இனங்களை அது பாழாக்கி விடும்.

அதனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் இந்தத் தியானப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
1.ஞானிகள் வாழ்ந்த அருள் வாழ்க்கை வாழ்வீர்கள்.
2.மெய் ஞானம் பெறுவீர்கள்.
3.மெய் உலகை அடைவீர்கள்.

எமது அருளாசிகள்.

June 29, 2018

ஞானிகள் கொடுத்ததை அரசர்கள் மந்திர ஒலியாகப் பிரித்துக் கூடு விட்டுக் கூடு பாயும் நிலையாகத்தான் மாற்றினார்களே தவிர “விண் செல்ல முயற்சிக்கவில்லை…!”


1.தான் கண்டுணர்ந்த மெய் ஞானத்தின் தத்துவத்தை எடுத்துச் சொல்லி
2.அந்த மெய் உணர்வின் சத்தை “இப்படித்தான் வளர்க்க வேண்டும்…! என்று
3.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மெய் ஞானிகள் சொல்லியுள்ளார்கள்.

அன்று ஆண்ட அரசர்கள் அதைத் தனக்குள் ஏற்றுக் கொண்ட பின் தனது சத்தாக மாற்றிப் போர் முறைகளாக மாற்றி விட்டார்கள். அதே சமயத்தில் தன்னுடைய சுகபோகங்களுக்காக மதங்களை உருவாக்கி அதிலும் பல பிரிவுகளை உண்டாக்கி விட்டார்கள்

ஆனால் அந்த ஞானிகள் கொடுத்தது என்ன...?

1.உன்னை அறியாது இருள்கள் எப்படி வருகின்றது...?
2.இதை மாற்றியமைக்க நீ என்ன செய்ய வேண்டும்...?
3.விண்வெளியின் ஆற்றலை நீ எப்படிப் பெற வேண்டும்...?
4.மனிதன் விண் செல்வது எவ்வாறு...? என்று அந்த ஞானிகள் பல சக்திகளைக் காட்டியிருந்தாலும்
5.ஆட்சி செய்த அரசர்களோ அதைத் தனக்குச் சாதகமாகப் பற்றிக் கொண்டார்கள்.

ஞானிகள் கொடுத்ததை அரசன் தன் இச்சைக்கு ஏற்ப அவன் உணர்வின் எண்ணங்களைக் கலந்து அந்த எண்ணங்களின் அடிப்படையில் மக்களையும்  கேட்கச் செய்து மதங்களாக உருவாக்கி அவன் உணர்வின் சக்தியை மந்திர ஒலியாகப் பதியச் செய்து விட்டான்.

ஒவ்வொரு மதத்தின் மூலமாகவும் நீ இந்த மந்திரத்தைச் சொன்னால்… “அந்த ஆகம விதிப்படி... ஆண்டவன் உனக்கு இன்னது செய்வான்...! என்று மக்களுக்குள் (நமக்குள்) பதியச் செய்து விட்டார்கள்.

ஒரு மனிதன் இறந்து விட்டால் அந்த இறந்த மனித உடலில் இருக்கக்கூடிய உணர்வின் எண்ணங்களைக் கவர்ந்து சக்தி வாய்ந்த மனிதனாக அன்றைய அரசன் மாறினான்.

கூடு விட்டுக் கூடு பாயும் நிலைகள் என்று கடந்த காலங்களிலே அரசர்களால் விளைவிக்கப்பட்டது இது தான். அவ்வாறு செய்பவர்களைத் தான் முனிவர்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் மகா ஞானிகளும் மகரிஷிகளும் இயற்கையின் தன்மையிலே இருளை நீக்கி மெய்ப் பொருள் காணும் நிலையை வெளிப்படுத்தினர்.

அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் சாதாரண மக்கள் மத்தியிலே அது படப்பட்டு அந்த உணர்வின் ஆற்றல் இயக்கப்பட்டால் “மக்கள் யாரும் தன்னை மதிக்க மாட்டார்கள்...!” என்பதால் ஞானிகள் சொன்ன மெய்ப் பொருளை மாற்றிவிட்டு மனிதர்கள் உடலிலிருந்து வெளி வரும் உணர்வலைகளை மந்திர ஒலிகளாகப் பிரிதெடுத்து அரசன் வாழ்ந்து வந்தான்.

தன்னைக் காப்பதற்காக அந்த மந்திர ஒலிகள் கொண்டு ஏவல் செய்து அடுத்த நாட்டிற்குள் இருப்பதை “அறிதல் என்ற நிலையில் கண்டறிந்து எதிரிகளை வீழ்த்துவதும் எதிரிகளை மடக்குவதும் போன்ற நிலைகளைச் செயல்படுத்தினார்கள்.

மிளகாய்... மிளகாய்... மிளகாய்... மிளகாய்... மிளகாய்... மிளகாய்... என்று ஆயிரம் தரம் சொன்னால்
1.அந்த மிளகாய் எப்படிக் காரமான உணர்வை எடுத்து அது விளைய வைத்துக் கொண்டதோ
2.அந்த மிளகாய்ச் சத்தினை நமக்குள் வளர்த்துக் கொள்ளப் போகும் போது
3.அதை அறியும் ஆற்றலாக வரும்.

அதாவது இந்தப் பூமியில் கல் மண் இவைகளிலிருக்கும் ஒவ்வொரு காரச் சத்தும் எதிர்நிலையாகும் போது ஒவ்வொரு உணர்ச்சியின் தன்மை பொங்கப்பட்டு அந்த உணர்வின் அலைகள் மாறுபட்டு
1.அந்த மிளகாய் காரத்தின் தன்மை எப்படி அடைந்தது...?
2.காரமான நிலைகள் கொண்டு இந்தப் பாறையிலே அது எப்படி விளைந்தது...? என்பதனை
3.இந்த மந்திர ஒலியால் கண்டுணரும் தன்மையும் வந்தது.

இப்படி வரக்கூடிய காலங்களில் தான் உலோகக் காலங்களாக மாறுகின்றது. பாறையின் தன்மையை ஒரு மனிதனில் விளைய வைத்ததைப் பல ஆயிரம் ஆயிரம் கோடி முறைகள் சொல்லப்படும் போது
1.மனிதனுக்குள் ஒரு பொருளின் இயக்கம் அது எதிர்நிலையாகும் போது
2.எதிர்நிலையான இந்த உணர்வின் சக்தி எப்படிக் கார உணர்ச்சியைத் தூண்டும் நிலையாக வருகிறது என்றும்
3.அந்த உணர்ச்சிக்குத்தக்க அது உருவம் எப்படி அமைந்தது என்ற உண்மையினுடைய நிலைகளையும் அன்று அரசர்கள் கண்டுணர்ந்தார்கள்.

அதைப் போன்றுதான் மந்திரத்தைச் சொல்லி ஒரு மனிதனின் ஆத்மாவைத் தனக்குள் இழுத்து அந்த உணர்வின் தன்மையை வீரியமாக வளர்த்துக் கொண்டபின் எந்த உடல் எனக்கு ஏற்றதோ... அந்த உடலுக்குள் சென்று... “கூடு விட்டுக் கூடு பாய்ந்தார்கள்...!”

தன் உடலில் வளர்த்துக் கொண்ட இச்சைகளை இந்த உடலில் அனுபவித்த பின் இன்னொரு உடலுக்குள் சென்று இதை அங்கேயும் மாற்றிக் கொண்டார்கள்.

அரசனும் அவனை மிகவும் அணுகியுள்ளவர்களும் இதை  வளர்த்துக் கொண்டு கூடு விட்டுக் கூடு பாயும் நிலையைச் செயல்படுத்திக் கொண்டு வந்தார்கள்.

உதாரணமாக ஒருவருக்கு நாம் உதவி செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஏனென்றால் அவர் தன் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட இன்னல்கள் பல.

அந்த இன்னலை நீக்க நாம் உதவி செய்கிறோம், அந்த உதவியால் தொழில் வகையிலும் குடும்பத்திலும் அவர் முன்னேற்றம் அடைகின்றார்.  கஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு எனக்கு நல்ல நேரத்தில் உதவி செய்தார் “மகராசன்...!” என்று நம்மைப் பற்றி அவர் எண்ணுவார்.

இப்படி எண்ணினாலும் கடைசியில் நோய்வாய்ப்பட்டு இறக்கும் பொழுது உதவி செய்தவரை எண்ணி ஏங்குவார். அந்த ஏக்க நிலையில் உடலை விட்டுப் பிரியும் உயிராத்மா உதவி செய்தவர் உடலுக்குள் விடுகின்றது என்பதை மெய் ஞானிகள் அன்று சொன்னார்கள்.

இதை அரசன் தனக்குச் சாதகப்படுத்தி எந்தெந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கட்டுப்படுத்தலாம் என்று மனித அந்த உயிராத்மாக்களைத் தனக்குள் எடுத்து ஏவல் செய்யப் பயன்படுத்தினார்கள்.

ஏவல் செய்யப்பட்டு
1.ஒரு பொருளை மாற்றுவதும் ஒரு பொருளை இயக்குவதும்
2.ஒரு எண்ணத்தை இயக்குவதும் ஒரு எண்ணத்தை மாற்றுவதும்
3.ஒருவனை அடிமைப்படுத்துவதும் அவன் எண்ணத்தை சிதறச் செய்வதும் போன்ற வேலைகளை எல்லாம் அரசர்கள் அன்று செய்தார்கள்
(இன்றும் இது நடந்து கொண்டு தான் இருக்கின்றது)

அன்று ஞானிகள் சொன்ன அந்த உண்மைகளை அரசர்கள் தங்களுக்குச் சாதகப்படுத்திக் கொண்டார்கள். ஞானிகள் இதை எதிர்த்தால் அவருடைய சிரசு இருக்காது. “இது முறையற்றது...!” என்று சொல்லும் பொழுது அரசனுக்கு எதிரியாகின்றான்.

அப்பொழுது அவரை அரசன் வீழ்த்திடும் நிலை வருகின்றது. அவன் சாகும் போது வெறுப்பின் தன்மை கொண்டு இறக்கின்றான். அவ்வாறு வெறுப்புடன் இறந்திருந்தால் அந்த வெறுப்பான உணர்வுகள் அரசனை அழித்துவிடும்.

ஆக மெய் உணர்வைக் காணாத நிலைகள் இவன் எடுத்த தீய வினைகள் தீய விளைவுகளை உருவாக்கி
1.அரசர்களும் எவரும் வாழ்ந்தவர் இல்லை.
2.அரசனுடைய நிலைகள் அனைத்துமே மடிந்து விட்டது.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உணர்த்திய உண்மைகளை உங்களுக்கும் சொல்கின்றோம்.