ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 18, 2018

பூமியைச் சமப்படுத்த அதைத் திசை திருப்பிய “அகஸ்தியனின் ஆற்றல்கள்”

இயற்கையில் விளைந்த நிலைகளைக் கண்டுணர்ந்து அதைச் சீராக்கும் நிலைகள் பெற்றவன் மெய் ஞானியான அகஸ்தியன்.

மெய்யை உணர்ந்த அந்த அகஸ்தியனால் தான் இன்றும் இந்தப் பூமி நிலைத்து நின்று ஒரு சீராகச் சுழல்கின்றது.

1.தென்னாடுடைய சிவனே போற்றி
2.எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று
3.அந்த அகஸ்தியரைத்தான் நாம் போற்றித் துதித்துக் கொண்டு இருக்கின்றோம்.

ஆதியிலே பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தன் எண்ணத்தை விண்ணுலகில் செலுத்தி அணுவின் ஆற்றலை அறிந்துணர்ந்து இந்தப் புவியின் மாற்றத்தையும் கண்டுணர்ந்ததவன் அகஸ்தியன்.

சூரியன் தனக்குள் வரும் நஞ்சினைப் பிளந்து நல்ல உணர்வினை ஒளியாக மாற்றுகின்றது. அதே சமயத்தில்
1.பூமிக்குள் நஞ்சுகள் அதிகமாகக் குவிக்கப்படும் போது
2.சூரியனின் காந்த ஈர்ப்புக்குள் சிக்காது மறைவாக வரப்படும் போது
3.அந்தப் பகுதி சரியாக இயங்காத நிலையாக இருந்தது.

அந்தப் பகுதியைச் சீராக்குவதற்காகத் “தான் இருந்த பகுதியை” (தென் பகுதி) விண்ணை நோக்கி ஏகி அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்தப் பகுதியைச் சூரியன் பக்கமாகச் சுழலச் செய்ய வைத்தவன் மெய் ஞானி அகஸ்தியன்.

அணுக் கதிரியக்கங்களைக் கண்டுணர்ந்த விஞ்ஞானிகள் பூமியின் ஒரு பகுதியில் அணு குண்டுகளை வெடிக்கச் செய்தால் அதிலிருந்து கிளம்பும் புகை மண்டலம் சூரியனிலிருந்து வரும் வெப்ப காந்தங்களைத் தடைபடுத்தி பூமியின் இயக்கத்தை செயலிழக்கச் செய்துவிடும்.

சூரியனின் வெப்ப காந்தம் படவில்லை என்றால் அந்தப் பகுதி உறை பனியாகிவிடும். பின் நிலை தடுமாறி சுழற்சியின் தன்மையாகி கடல் பகுதிகள் இடம் மாறி நம் தமிழ் நாடு எல்லாம் காணாமல் போய் விடும்.

இதைப் போன்ற நிலைகளை விஞ்ஞானிகளால் வெறித்தனமாக நாளை செய்யவும் முடியும்.

ஆனால் அன்று மெய் ஞானியான அகஸ்தியன் தன் உணர்வின் எண்ணத்தை நினைவின் ஆற்றலை விண்ணிலே பாய்ச்சி வெப்பங்களைக் குவிக்கச் செய்து பூமியை நேர்க் கோட்டிலே சுழலச் செய்தான்.

ஒரு பக்கம் உறை பனியானாலும் மற்ற பக்கம் அதைக் கடல்களாகக் உருகச் செய்தான். அதனால் இன்று வரை பூமி சீராக ஓடிக் கொண்டுள்ளது.

இதைத்தான் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சிறு குட்டிக் கதையாகச் சொல்லி இருப்பார்கள்.

சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் ஆகும் போது கூட்டங்கள் அதிகரித்து விட்டால் இந்தப் பூமியின் நிலையே மாறிவிடும். அதைச் சமப்படுத்துவதற்காகக் “கூழையாக இருக்கும் அகஸ்தியனை… சிவன் கூப்பிட்டு “நீ தெற்கே போ…!” என்றான்.

தெற்கிலே தோன்றிய அந்த அகஸ்தியன் பூமியைச் சூரியன் பாகம் சீராகத் திருப்பியதால் தென் பகுதியில் வெயில் அதிகமாகவும் மற்ற பக்கம் வெயில் தணிந்து குளிர் பகுதியாகவும் ஆகி சம நிலை பெற்றது.

பூமியைச் சமப்படுத்திய இந்த உணர்வு கொண்டு எதை நுகர்ந்தானோ அந்தத் துருவப் பகுதியில் நின்று அதன் வழி வருவதை உணவாக உட்கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் செயல்படுத்திக் கொண்டுள்ளான்.

இதையெல்லாம் சாதாரணமாக நினைக்க வேண்டாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இந்த உணர்வின் தொடர் வரிசையை அனைவருமே காணலாம்.

அகஸ்திய மாமகரிஷியின் உணர்வை நுகர்ந்த மனிதர்கள் எல்லோரும் மகரிஷிகளாகி விட்டார்கள். நாமும் அந்த அகஸ்தியரின் அருள் பெறவேண்டித் தியானிப்போம்.

விஞ்ஞானத்தின் விளைவால் வரும் அழிவுகளிலிருந்து நம்மைக் காப்போம். உலகைக் காப்போம்.