ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2018

வைரத்தையும் வைடூரியத்தையும் பார்த்ததும் தர்மம் செய்வேன் என்று சொன்னதற்குத் “தர்மம் என்றால் என்ன..? என்று புரிந்து கொள்...! என்று தெளிவாக்கினார் குருநாதர்

ஒரு சமயம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஆனைமலைக் காட்டிற்குள் சில அனுபவம் பெறுவதற்காக என்னை (ஞானகுரு) அழைத்துச் சென்றிருந்தார்.

காட்டிற்குள் அமர்ந்து இரவு 12.00 மணி வரையிலும் கதையைச் சொல்லிக் கொண்டே வந்தார் குருநாதர்.

சரியாக இரவு 12 ம்ணி ஆனது. “பளீர்...!என்று ஒரு வெளிச்ச்சம் தெரிந்தது. பார்த்தவுடன் ஜெக ஜோதியாக இருக்கின்றது. எமது ஆயுளில் அந்த மாதிரி பார்த்ததே இல்லை.

பராசக்தி மாதிரி பெரிய தேவதை உட்கார்ந்திருந்தது. அவ்வளவு அழகாக இருக்கின்றது.

பார்த்தால் ஒரு கிண்ணத்தில் வைரம் இருக்கின்றது, ஒரு பக்கம் தங்கம் இருக்கின்றது, ஒரு பக்கம் வைடூரியம் இருக்கின்றது. இன்னும் என்னென்னவோ இருக்கின்றது.

இங்கே எம்மைக் கிள்ளுகின்றார் குருநாதர். “நிஜம் தான்டா... உண்மை தான்டா... நீ கனவில் பார்க்கவில்லை... உண்மை தான்டா...! என்று எம்மைக் கிள்ளுகின்றார்.

நாலாபக்கமும் கிள்ளுகின்றார். “நிஜம் தான்டாஎன்று கிள்ளுகிறார்.

யானைக்குப் பலமா...? எனக்குப் பலமா...?” என்று எம்மிடம் காட்டியவர். தும்பிக்கையைப் பிடித்து நிறுத்துகிறார். யானை இவரைக் கண்டால் பயந்து ஓடுகிறது.

யானையே பயந்து கொள்ளும் பொழுது எம்மை அவர் கிள்ளினால் எப்படி இருக்கும்...? நிஜமாகத்தான் இருக்கும் என்று கிள்ளிக் கிள்ளிக் காண்பிக்கின்றார்.

கிள்ளிக் காண்பித்தவுடன்இல்லை சாமி...!என்கிறேன் நான்.

இங்கே வாடா...! என்று கூட்டிக் கொண்டு செல்கிறார். “இதைத் தொடுடா...!என்கிறார். அங்கே இருக்கக்கூடிய வைரங்களையும், வைடூரியங்களையும் கையிலே அள்ளுடா...! என்கிறார், குருநாதர்.

தொட்டேன்... கையிலே நான் அள்ளிப் பார்த்தேன்...

பார்த்தவுடன்... இவையெல்லாம் நிஜம் தானடா...? என்று எம்மைக் கேட்கின்றார்.

ஆமாம் சாமி...! எல்லாம் நிஜம் தான் என்று நான் சொன்னேன்.

அதற்குக் குருநாதர் இதை வாங்கினால் என்ன செய்வாய்...? என்று எம்மிடம் கேட்டார்.

வாங்கினால் “தர்மம் பண்ணுவேன்...!” என்றேன்.

உடனே ஓங்கி ஒரு அடி கொடுத்தார்...! குருநாதர்.

வாங்கினால் தர்மம் செய்வேன் என்று யாம் சொன்னதற்காக ஓங்கி ஒரு அறை கொடுத்தார். என் தலை கிறு... கிறு.. என்று சுற்றியது. சாமியைக் காணோம்... அந்தப் பொருள்களையும் காணோம்... “எல்லாமே மறைந்துவிட்டது...!”

குருநாதர் எமக்கு விளக்கம் கொடுக்கின்றார்.

தர்மம் என்று நீ செய்தால் “நியாயமாக இருப்பவன்” உன் அருகில் வந்து வாங்க முடியாது.

சாப்பாடு போடுகிறாய்... தர்மம் செய்கிறாய்... என்றால் வருபவன் ஆயிரம் கஷ்டங்களைச் சொல்லி, இல்லாததெல்லாம் சொல்லி அவன் வாங்கிக் கொள்வான்.

அது கெட்டதற்குத்தான் போகுமே தவிர நீ நல்லதைத் தர்மம் பண்ணி நல்லதாக்க முடியாது.

நீ தர்மம் செய்யப்படும் பொழுது ஆயிரம் பொய்களைச் சொல்வான், இரக்கமாகச் சொல்வான்.

அதே சமயத்தில் நல்லவன் ஒருவன் இருந்தானென்றால் அவனை..., “இப்படி இருக்கிறான் அப்படி இருக்கிறான்” என்று குறையாகச் சொல்லிக் கொண்டு உன்னிடம் ஒண்டுவான்.

1.கெட்டது எல்லாவற்றையும் அவன் மேலே சொல்லி
2.நல்லவனைக் கெட்டவனாக்கிவிட்டு
3.உன்னிடம் பாசமாக நடித்து
4.உன்னிடம் வாங்கித் தின்பதற்கு வருவான்.

இதுதான் தர்மமாகிப் போகும்.

நீ சாப்பாடு போடுவதால் என்னென்ன நிலை இருக்கிறது...? தர்மத்தை நீ எப்படியடா காக்கப் போகிறாய்?

இவ்வளவு சிரமப்பட்டுத் தர்மம் செய்தால், முன்னாடி வருபவன் நல்லவனைத் தள்ளி விட்டு விடுவான். நல்லவனுக்குப் போட முடியாது. நீ எந்த அளவில் தர்மம் போடப் போகிறாய்? என்று கேட்டார் குருநாதர்.

தர்மம் என்றால் என்ன...?” என்பதை நீ தெளிவாகப் புரிந்து கொள் என்றார் குருநாதர்.

ஒருவன் சிரமப்படப் போகும் பொழுது நல்லதைச் செய்ய முயற்சிக்கின்றான் என்றால்
1.அந்த நல்ல வழியைக் காட்டி
2,நல்ல உபதேசத்தைக் கொடுத்து நல்லதைச் செய்து
3.அவனுக்குப் பொருளைக் கொடுத்தால் அதைக் காப்பான்.

அந்த அடி வாங்கியபின் தான் தர்மம் என்றால் என்ன? என்று இந்த விளக்கத்தைச் சொல்கின்றார் குருநாதர்.