ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 3, 2018

அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டங்களை குருநாதர் கண்டுணர்ந்தார்.. விண் சென்றார் - அதை நாமும் பெறுவதற்கே “குரு பூஜை விழா...”

அகஸ்தியன் துருவனான பின் நமது பிரபஞ்சத்தையும் நமது பிரபஞ்சம் 2000 சூரியக் குடும்பங்களுடன் ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு எப்படி வாழ்கின்றது? என்பதனையும் உணர்ந்தான்.

இன்று நமது பிரபஞ்சத்தில் மனிதர்கள் இருப்பது போன்று இந்த 2000 சூரியக் குடும்பப் பிரபஞ்சத்திலும் நம்மைப் போன்று மனிதர்கள் உண்டு. மனிதனாக உருவாகியது உண்டு என்பதனை உணர்கின்றான்.

ஏனென்றால்
1.மின்னலின் ஒளிக்கற்றைகளை அவன் சுவாசித்து தனக்குள் வளர்த்திருந்ததால்
2.அந்த (மின்னலின்) மின் கதிர்கள் வெகு தூரம் எட்டிச் செல்வது போன்று
3..அவனின் நினைவாற்றல் எங்கேயும் செலுத்தும் திறன் பெற்றான்
4.அகண்ட அண்டத்தையும் அறிந்தான்.
5.அண்டத்திற்குள் அண்டங்களாக 2000 சூரியக் குடும்பங்கள் - 3000 சூரியக் குடும்பங்கள் என்று சுழன்று கொண்டிருப்பதை அறிகின்றான்.

ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் உயிரணுக்கள் வளர்ச்சி உண்டு. இந்தப் பூமியில் நாம் எதைச் செய்கின்றோமோ மற்ற சூரியக் குடும்பத்தில் நம்மைக் காட்டிலும் பன் மடங்கு சக்தி வாய்ந்த நிலைகளை மனிதர்களாக உருவான நிலையில் செயல் படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

நமது சூரியக் குடும்பத்தில் செயற்கைக் கோள்களை உருவாக்கி ஒவ்வொரு கோளும் எப்படி இயங்குகிறது என்று நமது விஞ்ஞானிகள் கண்டு கொண்டது போல இந்தப் பிரபஞ்சத்தில் எது இருக்கிறது? என்ற நிலைகளை அவர்கள் அறிகின்றார்கள்.

நம் பூமியில் என்னென்ன பாஷைகள் கொண்ட மனிதர்கள் உண்டோ எப்படி இந்த பாஷைகளை உருவாக்கினார்களோ அதை ஒலி நாடாக்களில் பரவச் செய்து அந்த ஒலிகள் (பாஷை) எந்தெந்தப் பிரபஞ்சத்திலிருந்து வருகிறது என்பதனைச் செலுத்தி தமிழா ஹிந்தியா என்று பார்க்கின்றான்.

அப்படி இருந்தால் அங்கு எத்தகைய மனிதன் வாழ்கிறான் என்கிற நிலையில் ஒலி நாடாக்களின் வழியாக இன்று விஞ்ஞானிகள் ஒவ்வொரு கோளையும் அறிகின்றார்கள்.

நமது சூரிய குடும்பத்திற்குள் உயிர் அணுக்கள் உண்டு. ஆனால் மனிதனைப் போன்ற உருவம் பெற்றவர்கள் பூமியைத் தவிர்த்து மற்ற கோள்களில் இல்லை.

ஏற்கனவே 20 வருடங்களுக்கு முன் நான் சொல்லியுள்ளேன். இவர்கள் எதைக் கண்டாலும் அங்கே மனித உருவைப் பார்க்க முடியாது. அந்தந்த உணர்வுக்கொப்ப அங்கங்கே அந்த உயிரணுக்கள் உருவாகும்.

சாக்கடைக்குள் சில நிலைகளை எடுத்துக் கொண்டால் அந்த  விஷத்தை உணவாக எடுத்துக் கொள்ளும் உயிரினங்கள் அங்கே வாழுகின்றது. அதன் உணர்வும் பெருகுகின்றது.

வியாழனுக்கு 27 உபகோள்கள் என்றால்   செவ்வாய்க்கு 8 துணைக் கோள்களும் மற்ற கோள்களுக்கும் இதைப் போல உப கோள்கள் உண்டு.

அந்த உப கோள்களிலும் இத்தகைய உயிரினங்கள் உண்டு. அதனின்று வெளிப்படும் உணர்வுகள் ஒரு கோளுக்குக் கோள் மாறிக் கொண்டே உள்ளது.

உயிரணுக்கள் புழு பூச்சியைப் போல் தான் உண்டு. ஆனால் அந்தக் கோள்களில் மனித வளர்ச்சி இல்லை. செவ்வாய்க் கோளில் உயிரணுக்கள் உண்டு. நாதகாரகன் என்று சொல்வார்கள்.

கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் இரண்டும்  மோதலாகும் போது மின்னலாகிறது.
1.அந்த மின் கதிர்கள் வியாழன் கோள் ஈர்ப்பு வட்டத்தில் சென்றால்
2.இரண்டும் இணைந்து வாழும் ஒரு இயக்கச் சக்தி அணுவாகின்றது.

ஆண்பால் பெண்பால் என்ற உணர்வுகள்  இணைந்தால் தான் அந்த அணுவும் ஒன்றைக் கவர்ந்து அதன் உணர்வில் வளர்க்கும்  தன்மை பெறுகின்றது.

இந்த அணுக்களில் கார்த்திகை நட்சத்திரம் அதிகமானால் ஆண் செடிகளை உருவாக்கும். ஆண் பாறைகளைத் தான் உருவாக்கும்.

ரேவதி நட்சத்திரத்தின் உணர்வு கலந்தால் அது பெண்பால் என்ற நிலைகளில் மற்ற தாவர இனங்களை வளர்க்கும் சக்தி பெறுகின்றது என்பதனை உணர்ந்தான் அகஸ்தியன்.

நம் பிரபஞ்சத்தில் என்ன இருக்கிறதென்று இன்று விஞ்ஞானிகள் கருவிகள் மூலம் கண்டாலும் அன்று தனது மெய்ஞான அறிவின் தன்மை கொண்டு இந்தப் பிரபஞ்சத்தில் எவை எவை வாழுகின்றது என்பதை உணர்ந்து கொண்டவன் அகஸ்தியன்.

1.நமது பிரபஞ்சத்தில் வெளிப்படும் உணர்வினை மற்ற பிரபஞ்சங்கள் உணவாக எடுக்கின்றது
2.மற்ற பிரபஞ்சத்தின் உணர்வுகளை நமது பிரபஞ்சம் கவருகின்றது.

இன்று ஒரு மனிதனின் உடலில் விளைந்த உணர்வுகள் அவருடன் சேர்ந்து பழகும் போது அந்த உணர்வை நுகர்ந்தால் இவன் உடலில் விளையும் நோய் அங்கேயும் விளைகின்றது.

ஒரு மனிதன் ஞானத்தைப் பற்றி பேசுகிறானென்றால் அதைக் கேட்டால் அந்த ஞானத்தின் உணர்வுகள் இன்னொரு மனிதனுக்கு வருகின்றது.
1.நேற்று வரை ஞான சூன்யமாக இருப்பினும்
2.ஒரு ஞானவானிடம் சேர்க்கப்படும்போது அவன் உணர்வுகளும் மாறுகின்றது.

ஆகவே இப்படி இந்த இயற்கையின் நிலைகளில் எப்படி மாறுகின்றது என்பதனைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவன் அகஸ்தியன்.

இக்ஷ்வாகு வம்சம் என்று  கவர்ந்து கொண்ட உணர்வுகளை இந்த உயிர் அந்த உணர்வுக்கு ஒப்ப பல கோடி இன்னல்களை மறந்து நம்மை மனிதனாக உருவாக்கியது என்று அறிகின்றான்.

1.நாம் நுகர்ந்த உணர்வுகள்
2.எதன் சுவையோ அந்த உணர்வின் எண்ணங்களாகி
3..எண்ணங்களால் நம்மை எப்படி இயக்குகிறது என்றும் அறிந்தவன் அகஸ்தியன்.

அகண்ட அண்டத்தின் உணர்வினை அகஸ்தியன் கண்ட உண்மையின் உணர்வினை நமது குரு என்னிடம் பதிவு செய்தார்.

இந்த உணர்வின் ஆற்றல் கொண்டு இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறதென்று உணர்ந்து கொண்டேன்.

அதே உணர்வின் தன்மையுடன் யாம் சொல்லும் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நீங்கள் இச்சைப் படுகிறீர்கள். இந்த உணர்வின் தன்மை நீங்கள் நுகரப்படும் போது குரு கண்ட உணர்வுகள் உங்கள் உடலில் பதிவாகின்றது.

அகஸ்தியன் எத்தனையோ பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அவன் வாழ்ந்தவன் அவன் உணர்வைப் பின் வந்தவர்கள் எடுத்தார்கள். சப்தரிஷி மண்டலமாக இன்றும் உள்ளார்கள்.

நமது குருநாதரும் அதன் வழியில் இந்த உடலை ஒளியாக மாற்றிச் சென்றவர்.
1.குரு எப்படி இந்த உணர்வின் வழிகளில் இச்சைப்பட்டு
2.நஞ்சினை வென்று ஒளியின் உடலாக ஆனாரோ
3..அவர் பதிந்த உணர்வு இந்த உடலில் பதிந்தபின் அதை உங்களிலே பதியச் செய்கின்றேன்.
அதே வழிப்படி நீங்களும் இச்சைப் பட்டு இந்த வாழ்க்கையில் இருளை அகற்றி அந்தப் பேரருளைப் பெற வேண்டுமென்ற உணர்வை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த வாழ்க்கையில் நம்மை எதிர்த்துத் தாக்கும் விஷத் தன்மையை மாற்றி நமது உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் வாழும் இடத்திற்கே நாம் செல்லலாம்.
1.அவர் ஏகாந்த நிலை கொண்டு இருக்கின்றார்.
2.அதன் வழியில் நாமும் செல்ல முடியும்.

இதை நினைவுபடுத்துவதற்குத் தான் குரு விழா என்று குரு பூஜையாக வைத்திருக்கின்றோம். இதை நம் உடலிலே ஏங்கிப் பெற்று அவர் சென்ற வழியில் நாம் சென்றால் அது குருவாக நமக்கு வழிகாட்டும்.

இந்த வாழ்க்கையில் மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்து உயிருடன் ஒன்றி நாம் என்றுமே... “ஏகாந்த நிலை... ஏகாதசி...!” என்ற நிலையும் நாம் அடைய முடியும்.

உங்களுக்குள் இதைப் பதிவு செய்தால் நான் அதை முதலில் பெறுகின்றேன். அதன் வழியில் எல்லோரும் பெறுகின்றோம்.