ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 8, 2018

பிரபஞ்சம் உருவாகி முழுமை அடைந்து அதில் உருவான உயிர் விண் செல்லும் பக்குவம் – “அகஸ்தியன் கண்ட மெய் வழி”

ஆதியிலே விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பம் உருவானது. வெப்பத்தின் தன்மை வரும் போது தான் ஆவியானது. ஆவியின் தன்மை தான் விஷமானது. விஷத்தின் தாக்குதல் தான் மீண்டும் வெப்பமாகின்றது.

வெப்பத்தின் நிலை வரும் போது தான் அது நகர்ந்து ஓடுகின்றது. அப்போது காந்தம் என்ற உணர்வு உருவாகின்றது. காந்தம் என்ற உணர்வு உருவானபின் தன் அருகிலே இருப்பதைக் கவர்ந்து மோதி வெப்பமாகின்றது.

இதிலிருந்த விஷத்தின் தன்மை எதன் மணத்தை அது நுகர்ந்ததோ அதன் மணத்தை வெளிப்படுத்தும் அணுவாக ஒரு இயக்க அணுவாக மாறுகின்றது.

இப்படித்தான் உலகம் உருவானது என்பதனை அகஸ்தியன் அணுவின் இயக்கத்தை அறிந்துணர்ந்தான்.

ஆகவே அதன் வழி சிறுகச் சிறுக சிறு துளி பெரு வெள்ளம் போல
மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிராக வைத்து பாற்கடலைக் கடைந்தார்கள் வியாசகர் சொன்னார்.

பல அணுக்களின் தன்மையால் பூமி உருவானது என்ற நிலையை அன்று வியாசகர் அகஸ்தியன் கண்ட உண்மையை வெளிப்படுத்தினார்.

சிறுகச் சிறுக சேர்ந்த உணர்வுகள் அதனின் சுழற்சி வேகம் கூடக் கூட நெருப்பாக மாறி அந்த பூமிக்குள் வெப்பத்தின் தன்மை அதிகரித்து அதிகரித்து பாறைகள் எல்லாம் உருகி உருகி கடைசியில் அமில சக்தி அடைகின்றது நட்சத்திரமாக.

அமில சக்தியான பின் அது தூவும் உணர்வுகள் தான் அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர பால்வெளி மண்டலமாக மாற்றுகின்றது.

ஒரு நூலாம்படைப் பூச்சி தன் மலத்தால் நூலாம்படையாக வலை விரித்து அதில் சிக்கும் மற்ற உயிரினங்களை உணவாக எடுத்துக் கொள்கின்றது.

இதைப்போலத்தான் நட்சத்திரங்களும் தன் அமிலங்களைக் கக்கப்படும் போது வலை போன்று விரிந்து அகண்ட அண்டத்தில் பரவி வரும் உணர்வுகளை இது கவர்ந்து அதை உணவாக உட்கொண்டு சூரியனாக மாறுகின்றது.

சூரியனாகி அதனுடைய வளர்ச்சியில் தன் ஈர்ப்பு வட்டத்தில் இந்தப் பிரபஞ்சத்தையே உருவாக்குகின்றது. இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கும் சக்தி பெற்ற தன் வளர்ச்சியிலே மனிதனை உருவாக்குகின்றது.

நமது சூரியக் குடும்பத்தில் பூமியில் உருவான மனிதன் சில் உண்மைகளைக் கண்ட பின் மின்னல்கள் தாக்கி கடல்களிலே படும்போது மணல் ஆவதை அதற்குள் இருக்கும் நிலையை வடிகட்டி கதிர் இயக்கப் பொறிகளாக மாற்றுகின்றான்.

இன்று அணு குண்டுகளாகவும் லேசர் கதிரியக்கங்களாகவும் அதை உருவாக்கி விட்டார்கள்.

தன்னுடைய உடல் ஆசைக்காக வேண்டி நாட்டு ஆசைக்காக வேண்டி உலகை அழித்திடும் தன்மைகளாக அது இந்த உலகம் முழுவதற்கும் பரவி விட்டது.

நம் பூமியில் விளைவதை சூரியன் கவர்ந்தாலும் அது கவர்ந்து செல்லும் பாதையில் மற்ற கோள்களும் இந்தக் கதிரியக்கங்களை கவர்ந்து இன்று நமது பிரபஞ்சமே கதிர் இயக்கமாக மாறிவிட்டது.

மனிதனின் விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட இந்த நிலையால் உலகமே இருள் சூழும் நிலைக்கு வந்து விட்டது. சூரியனும் சிறுகச் சிறுக செயல் இழந்து கொண்டு இருக்கின்றது. அது செயலிழக்கும் பொழுது அதனுடன் சேர்ந்த நம் பூமியும் அது செயல் இழக்கும்.

இங்கே வாழும் மனிதர்களும் அசுர உணர்வு கொண்டு தீவிரவாதம் என்ற நிலைகளில் ஒருவருக்கொருவர் கொன்று சாப்பிடும் நிலை வருகின்றது.

பாதரசங்களை உருவாக்கும் சூரியனுக்குள் விஞ்ஞானக் கதிரியக்கச் சக்திகள் கலக்கப்பட்டு அந்த பாதரசங்களைக் கருகிய விஷத் தன்மையாக மாற்றி உமிழ்ந்து கொண்டுள்ளது.

சூரியன் செயல் இழக்கும் தன்மையால் சூரியனால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமும் செயலிழக்கும் நிலை ஆகின்றது. நான் (ஞானகுரு) சொல்வது வெறும் சொல்லாகச் சொல்லவில்லை.

இந்த உணர்வுகளை நீங்கள் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவாக்கினால் சூரியனின் இயக்கத்தை நீங்கள் உணர முடியும். சூரியன் தொடர் கொண்டு இந்தப் பிரபஞ்சம் இயங்குவதையும் நீங்கள் உணர முடியும்.

ஆனால் இதிலிருந்து தப்பிய இந்தத் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் என்றுமே அழிவதில்லை. எத்தகைய நஞ்சானாலும் அதை மாற்றி விடுகின்றது.

நம் பூமியின் துருவத்திற்கு நேராக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எப்போதும் நீங்கள் பெறலாம். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத்தான் அடிக்கடி வலியுறுத்துகின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அங்கே துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்கின்றோம். பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவான பின் நினைவைக் கூட்டி நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் ஒவ்வொருவரும் பெற முடியும்.

விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் விஷத்தைப் பரப்பினாலும் அதில் இருந்து மீட்டுக் கொள்ளும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை உபதேசிக்கின்றோம். இப்பொழுது பதிவாகின்றது.
1.இதனை நீங்கள் நினைவு கூறுங்கள்.
2.கூட்டுத் தியானம் செய்யுங்கள்
3.கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று பாய்ச்சுங்கள்.
4.கருவிலே வளரும் சிசு இதைப்பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைப்போல எண்ணி இவ்வுலகில் வரும் விஷத் தன்மைகளை மாற்றி இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ முடியும்.

1.“ஆறாவது அறிவு ஏழாவது நிலையாக”
2.உலக இருளை மாய்த்திடும் அருள் கூட்டத்துடன் நாம் இணைந்து
3.அமைதியும் சாந்தமும் பெற்று ஏகாந்த நிலையாக எதிர்ப்பே இல்லாத நிலையாக
4.என்றும் அருள் ஒளிச்சுடராக பேரானந்த நிலையாகச் சந்தோஷ உணர்வுடன் நாம் வாழ முடியும்.