ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 27, 2018

கோவிலில் வைக்கப்பட்டுள்ள தெய்வச் சிலையின் மகிமை…!

ஒருவர் கஷ்டமாக இருப்பார் நஷ்டமாக இருப்பார் வேதனைப்பட்டு இருப்பார் துன்பப்பட்டு இருப்பார் துயரப்பட்டு இருப்பார் எல்லாம் பட்டிருப்பார்.

ஆனாலும் இங்கே கோவிலுக்குள் போனவுடன் அந்த ஞானிகளின் எண்ணங்களை எடுத்து ஒருங்கிணைக்க வேண்டும்.

எப்படிக் குழம்பு வைக்கும் பொழுது எல்லாம் ஒன்றாகச் சேர்த்துச் சுவையாக இருக்கின்றதோ இதைப் போல நாம் துன்பத்தை நீக்கி இன்பத்தின் நிலைகள் பெறவேண்டும் என்று எல்லோரும் ஒருங்கிணைந்த நிலைகளில் சொல்லி கோவிலுக்குள் ஒலிபரப்பும் பொழுது அங்கே எதிரொலிக்கும்.

எப்படி..?

ஒரு மேக்னட்…! (காந்தம்). அதாவது மலைகளிலே அதிகமாக உயரமாக வளர்ந்து தன் காந்தத்தின் நிலையாக இழுக்கப்பட்டு நெடு நெடு என்று வளர்ந்திருக்கும். அதே சமயத்திற்குள் அந்தக் கல்லுக்குள் மறைந்த நிலையில் காந்த அலைகளும் பதியப்பட்டு இருக்கும்.

அத்தகைய மலைகளில் எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு தான் ஆலயத்தில் தெய்வச் சிலையாக வைத்துள்ளார்கள் ஞானிகள்.

கோவிலுக்குள் சென்று நாம் அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் இடும் இன்பமான அலைகள் அங்கே படரப்பட்டு சிலையின் காந்தத்தால் ஈர்க்கப்படுகின்றது.

சாதாரண மக்களும் அந்தச் சிலையைப் பார்த்து எண்ணியதும் அந்த உயர்ந்த சக்தியைப் பெறச் செய்வதற்காக வேண்டி அந்த மெய்ஞானி ஆலயத்தை அவ்வாறு அமைத்தான்.

கோவிலுக்குள் போனவுடன் தீபாராதனை காட்டுகின்றார்கள். இருட்டறைக்குள் சாமி இருக்கின்றது.

நம் உடலுக்குள் மறைந்திருக்கும் நல்ல குணம் அதைப் பார்க்கப்படும் பொழுது தெரிந்துணர்ந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று வானை நோக்கி எண்ணி நாம் ஏங்கவேண்டும்.

சாமி மேலே நறுமணமான மலர்களைப் போட்டிருப்பார்கள்.

எனக்குள் நல்ல குணத்தைத் தெய்வமாக உருவாக்கி இந்த உடலுக்குள் நீ எந்த மணம் பெற வேண்டும் என்று காட்டுவதற்காக மலரைப் போட்டிருக்கிறார்கள்.

மலரின் மணம் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் மணக்க வேண்டும். எங்கள் பேச்சும் மூச்சும், நறுமணங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணும் பொழுது, இந்த உடலிலே நறுமணம் வருகின்றது.

ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் இப்படி ஏகோபித்த நிலைகள் ஒவ்வொருவரும் எண்ணும்படி வைத்துள்ளார்கள் அன்றைய ஞானிகள்.

இதையெல்லாம் நான் (ஞானகுரு) சொல்லவில்லை. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்னது.

நான் படிக்கவில்லை. எமக்குக் கோவிலைப் பற்றியும் தெரியாது. இந்த ஸ்தல விருட்சத்தைப் பற்றியும் தெரியாது. அவர் சொன்னதைத் தான் உங்களிடம் சொல்லுகின்றோம்.

குருநாதர் எம்மிடம் கோவிலுக்குப் போனால் இப்படித்தான் கும்பிட வேண்டும் என்றார்.
1.நாம் அந்த எண்ணத்தை எடுக்கும் பொழுது தெய்வமாகின்றது.
2.எண்ணிய எண்ணம் இறையாகின்றது இறைவானாகின்றது.
3.அந்த உணர்வின் சக்தி நமக்குள் தெய்வமாகின்றது.
4.அந்த செயலின் தன்மையாக நாம் ஆகின்றோம் என்ற செயலின் தன்மையை குருநாதர் சொன்னார்.

அதைத்தான் யாம் உங்களிடம் சொல்லுகின்றோம்.