ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 5, 2018

நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேதமந்திர சொரூபாய வெகு கோடி – “அருணகிரிநாதர் பாடியது”

அருணகிரிநாதர் தான் வாழ்ந்த காலத்தில் செல்வச் செருக்கினால் பல தவறுகள் செய்தார். தவறை உணர்ந்தபின் அடுத்த பிறவியாவது நல்லதாகப் பிறக்க வேண்டும் என்று கிளிக் கோபுரத்தின் மீது ஏறி உயிரை மாய்த்திட எண்ணுகின்றார்.

அருணகிரியின் சகோதரியோ தன் தம்பியின் மீது கொண்ட பாசத்தால் பல ஞானிகளை எண்ணி அந்தத் தத்துவங்களை எல்லாம் தன் தம்பி பெற வேண்டும் என்று எண்ணியது.

1.தன் தம்பி “நல்லவனாக வேண்டும்… நல்லவனாக வேண்டும்…” என்ற உணர்வுகளை
2.அதிகமாகத் தனக்குள் வளர்த்துக் கொண்டது.

அப்படி இருந்தாலும் “அவன் திருந்தினபாடில்லை என்ற நிலையில் ஆசையின் நிமித்தமாகப் பொருளைக் கேட்டுக் கட்டாயப்படுத்தும் பொழுது “என் உடலையே நீ பயன்படுத்திக் கொள்…” என்ற நிலையில் சகோதரி மூர்ச்சையாகி மரணமடைகின்றது.
ஆன்மா பிரிந்தாலும் தம்பி மீது பாசமாக இருந்ததால் அருணகிரியினுடைய உடலுக்குள் செல்கிறது.

அவரைக் காத்திட வேண்டும் என்ற எண்ண உணர்வுகளை அதிகமாக வளர்த்ததால் அவர் உடலுக்குள் சென்ற பின் அருணகிரியின் நினைவலைகளைத் தூண்டச் செய்து
1.அவர் கீழே விழுந்து தன் உடலை மாய்த்து விட வேண்டும் என்ற நிலைகளை மாற்றி
2.அவரைக் கீழே விழாத படி தடுக்கின்றது.

ஞானிகளையும் மற்றவர்களையும் வணங்கி அந்த ஞானத்தின் சக்தி அருணகிரிநாதருக்குக் கிடைத்து ஞான வழியில் செல்ல வேண்டும் என்று ஏங்கிய நிலையில் ஒரே உணர்வுடன் வாழ்ந்து வந்தார் அருணகிரியின் சகோதரி. (திருமணமும் அவருக்கு ஆகவில்லை.)

அவர் உடலில் விளைவித்த அந்த உணர்வின் ஆற்றல்கள்  அருணகிரிநாதர் உடலுக்குள் நின்று உணர்ச்சிகளைத் தூண்டி ஞானத்தின் வழித் தொடர் கொண்ட உணர்வுகளைப் பெறச் செய்தது.

ஆக காற்றிலே படர்ந்து கொண்டிருக்கும் மெய் ஞானிகளின் உணர்வுகளை அருணகிரிநாதர் சுவாசிக்கப்படும் பொழுது
1.அவர் அறியாத நிலையில் இருந்தாலும்
2.ஞானிகளால் வெளியிடப்பட்ட அந்த உண்மைகளை
3.அவர் பாடலாகப் பாடத் தொடங்கி விடுகின்றார்.
4.மரணத்திற்கு பதில் “நாத விந்துகள் ஆதி நமோ நமோ…” என்று பாடினார்.

ஒவ்வொரு உணர்வின் தன்மையும் அதற்குள் இருக்கக்கூடிய மணமும் ஒரு அணுவுக்குள் எது சேர்ந்ததோ அதுதான் “ஆதி…”
1.அதை மனிதனுக்குள் நாம் சுவாசிக்கப்படும் பொழுது
2.அந்த உணர்வின் இயக்கமாக நமக்குள் சேர்கின்றது.
3.அதுதான் “நமோ நமோ” நம் உடலுக்குள் அது சேர்கின்றது என்று காட்டினார்.

“நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேத மந்திர சொரூபாய நமோ நமோ… வெகு கோடி…!”

நாம் எடுத்துக் கொண்ட “ஆதி…”யின் சக்தி நம் உணர்வாக நமக்குள் சேர்கின்றது. அதாவது ஆதியிலே தோன்றிய அந்த உணர்வுகளை (சுவாசிக்கும்போது) உடலாக சேர்த்துக் கொள்கிறோம்.

வேத மந்திர சொரூபாய… நமோ நமோ…, வேகு கோடி… சுவாசிக்கும் உணர்வுகளுக்கொப்ப பல பல ரூபமாக… வெகு கோடியாக… ஆகின்றது.


சுவாசிக்கும் நிலைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள இங்கே வெகு கோடி என்ற இந்தத் தத்துவத்தை அவர் வெளிப்படுத்துகின்றார்.