ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2019

மனதைக் காத்துக் கொள்ளும் மனோ சக்தி...!


நாம் பரிவு பண்பு அன்பு கொண்டவர்களாக இருக்கிறோம். ஒருவர் “ஐயா பசிக்கிறதே...! என்று கேட்கிறார். அந்த வேதனையான உணர்வை நாம் நுகர்கிறோம். இரக்க உணர்வு கொண்டு அவருக்கு உதவியும் செய்கிறோம்.

அவர் எந்த வேதனையிலிருந்து அந்த சோகக் குரலில வருகிறாரோ அந்தச் சோக உணர்ச்சியைத் தூண்டும் அணுவாக நமக்குள் விளைந்து விடும். இது சிவமாகின்றது. (சிவம் என்றால் உடல்)

அதே சமயத்தில் இன்னொரு பக்கம் ஒருவர் கோபமாக மற்றொருவரை உதைக்க வேண்டும் என்று கோபமாகப் பேசுகின்றார். கண்ணில் பார்க்கிறோம். அப்பொழுது அந்தக் கோப உணர்ச்சிகள் ஓ...ம் நமச்சிவாய...! என்று இது நம் உடலில் ஆகிறது.

அந்த உணர்வுகள் நமக்குள் வந்த பின் குறை காணக் கூடிய நிலையாகிவிடுகிறது. அதே உணர்வுடன் வந்ததும் வீட்டில் உள்ள நம் குழந்தையை உதைக்க ஆரம்பித்து விடுகின்றோம். இந்த உணர்வுகள் நமக்குள் சிவமாகின்றது. இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் உடலாகிக் கொண்டேயிருக்கிறது.

வேதனைப்படுகிறான்…! என்ற நிலையில் உதவி செய்தாலும் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும...? ஈஸ்வரா... என்று நம் உயிரிடம் வேண்ட வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.அவன் வேதனைப்பட்ட உணர்வை இதனுடன் சேர்த்துத் தணிக்க வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அணுவாக மாற்ற வேண்டும்.
3.அதை நம் உடலாக்க (சிவமாக்க) வேண்டும்.

இப்போது சொல்வது அர்த்தம் ஆகின்றதல்லவா...? அடுத்து நம் நினைவு எங்கே இருக்க வேண்டும்...?

யார் வேதனைப்பட்டார்களோ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். துன்பத்திலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று இந்த உணர்வின் ஒளியைப் பரப்பி விட வேண்டும்.

கஷ்டப்படுகிறான் என்ற நிலையில் அவனுக்குச் சாப்பாடோ பணமோ கொடுத்தாலும் அது எவ்வளவு நேரத்திற்கு இருக்கும்….? அன்றைக்குத் தான் சரியாகும். அடுத்தாற்போல நீங்கள் நிவர்த்தி செய்ய முடியுமா...? முடியாது...!

ஆகவே அவனுடைய துன்பத்தின் உணர்வுகள் உங்களுக்குள் வராது தடுத்தல் வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீ பெற வேண்டும்.
2.உன்னுடைய எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டும்
3.நீ நன்றாக இருப்பாய்…! என்ற இந்த உணர்வை வித்தாக அவனுக்குள் போட்டு விட்டு விட வேண்டும்.

அதை எண்ணினால் அவனுக்குக் கிடைக்கும். எண்ணவில்லை என்றால் கிடைக்கவில்லை. ஆனால் இந்த வித்தை நீங்கள் அங்கே ஊன்ற வேண்டும்.

இதே மாதிரி நண்பர்கள் நோயாக இருக்கிறார்கள். பார்த்தவுடனே அவர்கள் நோயைப் பற்றி அறிந்து கொள்ள விசாரிக்கின்றீர்கள். அந்த நோயை விசாரிக்க விசாரிக்க உங்கள் உயிரிலே அந்த உணர்ச்சிகள் பட்டவுடனே சோர்வு அடைந்து விடுகின்றீர்கள்.

சோர்வடைந்தவுடனே சோர்வடையச் செய்யும் அந்த அணுவாக உங்களுக்குள் விளைகிறது. அந்த நண்பரின் உடலில் விளைந்த உணர்வுகள் அவன் எத்தனை வேதனைப்பட்டானோ அதே சத்தை எடுத்து மீண்டும் நமக்குள் விளைய தொடங்கி விடும்.

அப்படியானால் நோயைப் பற்றிக் கேள்விப்பட்டவுடனே நாம் என்ன செய்ய வேண்டும்...?

"ஈஸ்வரா..." என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும். இரண்டு நிமிடமாவது இப்படிச் செய்ய வேண்டும்.

1.அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நண்பன் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.மகரிஷியின் அருள் சக்தியால் அவன் நலமாக வேண்டும் என்று சொல்லி விட்டு
3.இதை விட்டு விட வேண்டும்.
4.இப்படிச் செய்யப்படும் போது இந்த உணர்வு கலந்து வலிமை பெற்ற உணர்வுகள் உங்களுக்குள் சேரும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் எடுப்பதற்குச் சக்தியைக் கொடுக்கிறேன் (ஞானகுரு) இந்த உபதேசத்தின் மூலமாக...!

திட்டியவர்களைத் திருப்பி எண்ணும் போது பதட்டமும் கோபமும் வருகிறது அல்லவா...! அதே மாதிரித்தான் அந்த அருள் ஞானத்தை நீங்கள் பெறக்கூடிய தகுதியையைத்தான் பதிவாக்குகிறேன்.

மீண்டும் நீங்கள் நினைவாக்கும் பொழுது உங்கள் கண்ணுக்கு வந்து அந்த உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்க முடியும். அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி எடுத்துக் கலந்து பழக வேண்டும். இப்படிக் கலந்து பழகினால் தான் தீமைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் அடக்க முடியும்.

1.ஆனால் நோயாளியைப் பார்த்து எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு
2.அப்புறம் வீட்டிற்கு வந்து எல்லாம் நல்லதாக வேண்டும் என்று நினைத்தால்
3.நோயைப் பற்றிக் கேட்டறிந்தது உடலுக்குள் முதலில் அணுவாகிறது.
4.இரண்டாவது தடவை இதை மாற்றிக் கொண்டு போவதற்கு ரொம்ப சிரமம்.

ஏனென்றால் தன் நண்பன் நோயால் வாடுகிறான் என்று அதைப் பற்றுடன் பற்றும் போது தவறி உள்ளே (உடலுக்குள்) போய்விட்டது.
1.உடலுக்குள் போனதைக் குறைந்த பட்சம் அது அணுவாக உருவாவதற்கு முன்னாடி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு நிமிடமாவது எடுத்து உடலுக்குள் பாய்ச்சி விட வேண்டும்.
3.இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வந்து விடுங்கள். தீமைகள் வளராது.

ஏனென்றால் ஒரு செடி வளரும் பருவத்தில் அந்தச் செடியோடு உரத்தை இணைத்து விட்டோம் என்றால் நன்றாக இருக்கும். ஆகவே தீமையின் உணர்வுகள் நமக்குள் வளராது அப்போதைக்கப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.

இது தான் வாழ்க்கையே தியானம் என்பது.

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் நினைவைக் கொண்டு வரச் சொல்வதன் முக்கியத்துவம் என்ன...?


மகாபாரதத்தில் உயிரின் இயக்கத்தைப் பூஷ்மர் என்று வியாசகர் காட்டுகின்றார். பத்தாவது நாள் போரில் பூஷ்மர் வீழ்வதாகவும் ஆனால் அதே சமயத்தில் போர் முடியும் வரையிலும் அம்புப் படுக்கையில் படுத்திருப்பாதாகவும் காட்டியிருப்பார்.

பத்தாம் நாள் போரில் அர்ச்சுனன் பூஷ்மரை எப்படி வெல்கிறான் என்றால்
1.சிகண்டியைப் பீஷ்மருக்கு முன்னாடி நிறுத்தப்படும் பொழுது அவர் போர் செய்வதை நிறுத்திவிட்டு அம்பு எய்துவதைத் தாழ்த்துவார்.
2.அந்த நேரத்தில் நீ அம்பை எய்து அவரைக் கொல்ல வேண்டும் என்று தான் கண்ணன் அர்ச்சுனனிடம் சொல்வான்.

இதில் சிகண்டி என்பது துருவ நட்சத்திரம். கண்ணன் என்பது நமது கண்கள். அர்ச்சுனன் என்பது நம்முடைய கூர்மையான எண்ணங்கள்.

1.அதாவது நம்முடைய கூர்மை (இச்சைப்படும் எண்ணங்கள்) தீமையின் பக்கம் வலுவாக இருக்குமானால்
2.உயிர் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து
3.அதை நமக்குள் கௌரவர்களாகச் சிருஷ்டிக்கின்றது.
4.நம்மால் நல்ல குணத்தைக் காக்க முடிவதில்லை.

அதே சமயத்தில் வலுவில்லாத உணர்வின் எண்ணங்களை எடுத்தோம் என்றால் உயிர் அதை நமக்குள் எடுத்து உடலாகச் சிருஷ்டிப்பதில்லை.

ஆனால் உடலுக்குள் 1008 குணங்களில் உருவான அத்தனை அணுக்களுக்கும்  உயிர் உணவாக எடுத்து வளர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் நம்மால் நல்லதை வலுவாக நம் எண்ணத்தால் எண்ணி எடுக்க முடியுமா என்றால் முடியாது...! ஏனென்றால் உயிர் தாயாக இருந்து உடலில் இருக்கும் அணுக்களை வளர்க்கிறது.

பீஷ்மரை (உயிரின் இயக்கத்தை) நேரடியாக யாரும் போரில் வெல்ல முடியாது என்பதனால் தான் கண்ணன் திருட்டு வழியைக் காண்பிக்கின்றான் என்று வியாசகர் உணர்த்துகின்றார்.
1.நம் உடலில் உள்ள மற்ற தீமையான அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது தடைப்படுத்த வேண்டும் என்றால்
2.உயிரின் இத்தகைய செயலாக்கங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

அதனால் பேடியைப் (ஆணும் இல்லை பெண்ணும் இல்லை) போன்ற நிலையில் உள்ள சிகண்டியை பூஷ்மருக்கு முன் நிறுத்தச் சொல்கிறான் கண்ணன்.

உதாரணமாக நாம் கிரகணம் என்று சொல்கிறோம் அல்லவா. கிரகண நேரத்தில் எந்தக் கோள் இடைமறிக்கின்றதோ அந்த நேரத்தில் ஏற்கனவே கிடைத்துக் கொண்டிருக்கும் சூரியனின் ஒளிக்கதிர்களை அது தடைப்படுத்துகின்றது.

தடைப்படும் சமயத்தில் சூரியனின் கதிர்களுக்குப் பதிலாக தடைப்படுத்தப்பட்ட கோளின் சத்துக்கள் போய்ச் சேர்கிறது.
1.கிரகணம் பிடிக்கும் கோள் நல்லதாக இருந்தால் பலன் கிடைக்கும்.
2.ஆனால் கேதுவோ ராகுவோ போன்ற கோள்கள் கிரகணம் பிடித்தால் விஷத் தன்மைகள் தான் பரவும்.
3.இது போன்று தான் நம் உயிர் வழியாக... உயிர் மூலமாக...
4.உடலுக்குள் புகும் தீமைகளை முழுமையாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

தீமையை வென்ற... நஞ்சினை வென்ற... உணர்வினை ஒளியாக மாற்றிய... அந்தத் துருவ நட்சத்திரத்தினை உயிருக்கு முன்னாடி புருவ மத்தியில் அடைப்பாக... கிரகணமாகக் கொண்டு வர வேண்டும்.

துருவ நட்சத்திரம் என்ன செய்யும் என்று நமக்குத் தெரியாத நிலையில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் அவருடைய துணையுடன் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உயிரிலே இணைக்கப்படும் பொழுது தீமைகள் முழுவதுமே தடைப்படுத்துகின்றது...!

எப்படி...?

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அந்த அகஸ்தியன் துருவனாகித் திருமணமானபின் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனான். வேகா நிலை பெற்று விண்ணுலகம் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன் தான்.

தன்னுடைய வாழ்க்கையில் அவன் அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்து சர்வ தீமைகளையும் வென்று சரவ நஞ்சினையும் வென்று எதையுமே ஒளியாக மாற்றிடும் ஆற்றல் பெற்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம்முடைய புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி
1.உயிரிலே மறைப்பாக அல்லது அடைப்பாகப் போடப்படும் பொழுது
2.அந்த அகஸ்தியன் எப்படி நஞ்சினை ஒளியாக மாற்றினானோ அதே போல் நாமும் அந்த நிலை பெற முடியும்.
3.உயிரின் செயலாக்கங்கள் தணிந்து
4.உயிருடன் ஒன்றி ஒளியாக வாழும் மெய் ஞானிகளின் இயக்கமாக நமக்குள் ஆகி
5.வாழ்க்கையில் இருள் சூழும் நிலையை நாம் மாற்றிட முடியும்.

அதனால் தான் மகாபாரதத்தில் பத்தாம் நாள் போரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வியாசகர் உணர்த்திக் காட்டியிருப்பார்.

நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளையும் துன்பங்களையும் சந்திக்கின்றோமோ அந்த நேரத்தில் எல்லாம் உடனடியாக
1.கண்ணன் காட்டும் அந்தத் திருட்டு வழியில் கண்களின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அங்கே நிலை நிறுத்தினோம் என்றால்
3.வெளியிலிருந்து வரும் எந்தத் தீமையும் நம்மை இயக்க முடியாது.

மாறாக நாம் எடுக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக நாம் இயங்கி நம்மையும் காத்து மற்றவரையும் காக்கக் கூடிய சக்தியாக நம்முடைய செயல்கள் அனைத்தும் அமையும்.

என்னுடைய அனுபவத்தில் இதைத்தான் செய்து கொண்டுள்ளேன்...!

அன்றாட வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்திக்கு எந்த அளவுக்குக் கொண்டு வருகின்றோமோ அந்த அளவிற்கு நாம் தீமைகளை அகற்றும் ஆற்றலைப் பெறுகின்றோம்.

அகஸ்தியனைப் பின்பற்றியவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை நிச்சயம் நாம் அனைவரும்  அடைய முடியும்.

January 30, 2019

நாடித் துடிப்பு பற்றிய பேருண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்… அந்த ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்…!


1.உணர்ச்சிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவது தான் நாடித் துடிப்பு என்றும்
2.அந்த நாடித் துடிப்பின் வீரிய உணர்வுகளுக்குத் தகுந்த மாதிரித்தான் நம்முடைய செயலாக்கங்கள் என்றும்
3.மருத்துவர்கள் பார்க்கின்றார்கள்
4.(அன்று கருவி எதுவும் இல்லாமல் பார்த்தார்கள்… இன்று கருவிகளை வைத்துப் பார்க்கின்றார்கள்)

ஆகவே “நாடித் துடிப்பு…!” என்றாலும் உடலில் சில நோய்களின் உணர்வுகள் வரப்படும் பொழுது அதில் உறைந்த உணர்வுகளை ஸ்கேன் மூலம் (SCAN) பல விதமான நுட்பங்களை உபயோகித்துப் பார்க்கின்றார்கள்.

ஸ்கேன் மூலம் உடலுக்குள் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் துடிப்புகள் அதிர்வுகளாக ஒலி அலைகள் ஏற்படும். அந்த எக்கோ (ECHO) வருவதைப் பார்த்து
1.நாம் சுவாசிப்பதில் உடலில் அழுத்தம் அதிகம்...
2. நாம் சுவாசிப்பதில் உடலில் அழுத்தம் குறைவு...! என்ற நிலைகளுக்குத் தக்க
3.ஒலி அலைகளைப் பெருக்கிக் காட்டுகிறது…!
4.அதன் மூலம்.இரத்த நாளங்களில் ஏது கூட இருக்கிறது... எது குறைபாடாக இருக்கிறது என்ற வகைகளில்
4.அந்தந்த உறுப்புகளைப் பற்றி “இதிலே இன்னது தான்…! என்று கண்டறிகின்றனர்.
5.பின் அந்தக் குறைபாடுகளை அகற்றி நல்லதாக மாற்றுகிறார்கள்.

இயற்கையில் கை நாடி பார்ப்பது போலத் தான் ஒலி அதிர்வுகளை வைத்து
1.உடல் உறுப்புகளில் எங்கெங்கே மோதுகிறது...?
2.எதன் வழிகளில் அது செயலற்றதாக மாறுகிறது...? என்ற நிலைகளில்
3.மருத்துவத் துறையில் இவ்வாறு விஞ்ஞானி காண்கிறான்.

அதே போல குகை (CAVE) போல் ஒரு புற்று இருக்கிறது. அதற்குள் ஒரு பாம்பு புகுகின்றது என்றால் அதற்குள் சிறு கம்பியைத்தான் (PROBE) விடுகிறார்கள்.

புற்றுக்குள்ளிலிருந்து வரும் உணர்வின் ஒலி அதிர்வுகளைக் கவர்ந்து… அதை நுகர்ந்து… உள்ளே என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது…? என்று அப்படியே தெரிந்து கொள்கிறார்கள்.

இதே மாதிரி கர்ப்பமுற்ற தாயின் கருவில் வளரும் குழந்தைக்கும் இதே போல ஒலி அதிர்வுகளைக் கூட்டிக் “கருவிலே வளரும் குழந்தை என்ன செய்கிறது..?” என்று பார்க்கிறார்கள்.

விஞ்ஞானம் இவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்னேற்றம் அடைந்திருந்தாலும்
1.அவர்களால் உடலில் உள்ள தசைகளிலோ அல்லது உறுப்புகளிலோ இருக்கும் நிலைகளைத்தான் சீர் செய்ய முடிகிறது.
2.எலும்புக்குள் ஊனாக இருப்பதை அவர்களால் காணவும் முடியவில்லை… அதை மாற்றவும் முடியவில்லை.

சிறிது காலத்திற்கு இந்த உடல் வாழ்க்கைக்குத்தான் அதைப் பயன்படுத்த முடியும். உடலுக்குப் பின் உயிராத்மாவைக் காக்கும் எந்த நிலையும் அவர்களால் முடியவில்லை,

ஆனால் அன்றைய மெய் ஞானிகள் என்ன செய்தார்கள்...?
1.தன்னுடைய உணர்வலையால் - வரும் அலைகளை நுகர்ந்து
2.அதனின் ஆற்றலையும் அதற்குள் இருக்கும் நுண்ணிய நிலைகளை அறியக்கூடிய தன்மையையும்
3.அவ்வாறு வரும் அந்த உணர்வுகள் தன்னை இயக்காதபடி மாற்றிக் கொள்ளும் தன்மையையும் வளர்த்து
5.விண்ணின் ஆற்றலைப் பெற்று அதை உடலுக்குள் விளைய வைத்து உயிராத்மாவை வலுவாக்கி
5.உயிருடன் ஒன்றிய ஒளியாக… அழியாத ஒளிச் சரீரம் பெற்றார்கள்.

யார்...? அகஸ்தியன்...!

அவன் தாய் கருவில் சிசுவாக இருக்கும் பொழுதே விஷத்தை முறிக்கும் ஆற்றல் பெற்றதால் எத்தகைய விஷத்தையும் வென்றிடும் அதனின் உணர்ச்சியின் இயக்கங்கள் அவனுக்குள் விளைந்தது.

அகஸ்தியனுக்குள் விளைந்த அந்த நுண்ணிய ஆற்றல்கள் அனைத்தையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக நமக்கு முன் பரப்பி வைத்துள்ளது. அதை ஒவ்வொருவரும் நுகரலாம்.

அந்த அகஸ்தியனின் ஆற்றல்களை நுகர்ந்தால் நாமும் அவனைப் போன்று எல்லாவற்றிலும் வல்லவனாக உயர் ஞானம் பெற்று மெய் ஞானியாக ஆகலாம்…!

January 29, 2019

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்கு அடிக்கடி ஏன் கொண்டு வர வேண்டும்…?


உதாரணமாக மைக் (MIC) மூலம் ஒருவர் பேசப் போகிறார் என்றால் அவர் பேசுவதற்கு முன் அதைப் பல முறை பரிசோதிப்பார்கள்.

சப்தம் எப்படி வருகிறது…? எக்கோ (ECHO) இல்லாமல் இருக்கிறதா..? எல்லா இடங்களிலும் சப்தம் கேட்கிறதா…? இரைச்சல் இல்லாமல் இருக்கிறதா…? என்றெல்லாம் பார்த்து அதைச் சரி செய்து வைப்பார்கள்.

ஏனென்றால் அது சரியாக இல்லை என்றால் பேசுபவர் முக்கியமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தாலும் கேட்பர்களுக்கு அது முழுவதும் போய்ச் சேராது. அர்த்தமும் ஆகாது… எரிச்சலாகும் உணர்ச்சிகளைத் தான் தூண்டும்.

1.இது போல் தான் நம்முடைய குருநாதர் மூலம் (ஞானகுரு)
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அப்படியே தங்கு தடையில்லாது முழுமையாகப் பெறவேண்டும் என்றால்
3.அதைக் கிரகிப்பதற்கு நம் நினைவுகளைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

எப்படி…?

ஓ…ம் ஈஸ்வரா.. குருதேவா…! என்று அடிக்கடி சொல்லச் சொல்வதே இதற்குத்தான். அதாவது
1.எங்கெங்கோ செல்லும் நினைவுகளைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.நம் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றும் பொழுது
3.நம் ஆன்மாவில் இருக்கும் மற்ற உணர்வுகள் உயிரிலே படாதபடி  தடுக்கப்படுகின்றது.

அதே சமயத்தில் (கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றிய நிலையில்) ஞானகுரு உபதேசத்தைக் கேட்கும் பொழுதோ அல்லது படிக்கும் பொழுதோ அல்லது அதை எண்ணித் நினைத்துத் தியானிக்கும் பொழுதோ
1.அந்த அருள் உணர்வுகளை மட்டும்
2.காற்றிலிருந்து பிரித்துக் காட்டும்.

அந்த உபதேசக் கருத்துக்களில் உள்ள நுண்ணிய உணர்வுகள் உயிரிலே பட்ட பின் அதே உணர்ச்சிகள் தூண்டப்படுகிறது. அதன் மூலம் நாம் எந்த மகரிஷி அந்த உணர்வைத் தனக்குள் ஆற்றலாக வளர்த்துக் கொண்டாரோ அதை நேரடியாக நாம் பெறும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

அதன் மூலம் நமக்குள் மெய் ஞானத்தின் வளர்ச்சி கூடுவதற்கு ஏதுவாகின்றது. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிந்தித்துச் செயல்படும் அறிவாற்றல் பெறுகின்றோம்.

இப்படி வளர்த்துக் கொண்டால் நம்முடைய அறிவாற்றல் முதலில் செயல்பட்டதற்கும் இப்பொழுது செயல்படும் தன்மையிலும் அதிகமான உயர்வைக் காண முடியும்.

1.சரியான ஆலோசனை கேட்பதற்காக யாரையோ (நமக்கு நம்பிக்கையானவர்களை) தேடுவதற்குப் பதிலாக
2.நமக்குள் நாமே அந்த மெய் வழியைக் கண்டுணர முடியும்.
3.அதைச் சீராகச் செயல்படுத்தி வெற்றியையும் அடைய முடியும்.

என்னுடைய அனுபவம் அது தான்…! 

செல்வம் தன்னாலே தேடி வரும்...! அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்...?

இந்த மனித உடலுக்குப்பின் நாம் பெற வேண்டியது எது…? என்பதை உங்கள் எல்லோருக்கும் தெளிவாக்கும் தன்மைக்குத்தான் யாம் (ஞானகுரு) கொண்டு போகின்றோம்.

இன்று மனிதருடைய ஆசைகள் எப்படி இருக்கின்றது…? செல்வத்தைச் சம்பாதித்துவிடலாம்… செல்வத்தைத் தேடலாம்…! என்ற ஆசைகளில்தான் இருக்கின்றது.

ஆனால் இந்த உடலுக்குச் செல்வம் தேவை என்று யாம் உணர்ந்து தான் இருக்கின்றோம்.

நீங்கள் செல்வத்தைத் தேடிப் போகின்றீர்கள் என்றால் அவ்வழியில் உங்களை முறைப்படுத்திச் சென்றால் செல்வம் தானாக உங்களைத் தேடி வரும்.

நீங்கள் வேண்டாம்…! என்று சொன்னாலும் செல்வம் தன்னாலே தேடி வரும். அமைதியும் கிடைக்கும்… சொல்லும் நன்றாக இருக்கும்… கேட்போரிடத்தில் தீய உணர்வுகளை நீக்கும்…!

இப்பொழுது நாமே தபோவனத்துக்குச் செல்வம் வேண்டும் என்று தேடிப் போய்க் கொண்டிருந்தால் பணம் வரும். ஆனால் கூடவே சங்கடமும் சேர்த்து வரும்.
1.அப்புறம் குழப்பம் தான் வரும்.
2.ஆகையினால் நாம் செல்வத்தை எண்ணுவது முக்கியமல்ல.

உலக மக்கள் அனைவரும் அருள் செல்வம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த அருள் செல்வம் தன்னாலே வரும். அருள் செல்வம் என்பது
1.நாம் பார்க்கும் அனைவரது உயிரையும் கடவுளாக (ஈசனாக) மதித்து,
2.உயிரால் உருவாக்கப்பட்ட அந்த உடலை ஆலயமாக மதித்து
3.அருள் மகரிஷிகளின் அருள்சக்தி ஈசன் வீற்றிருக்கும் அந்த ஒவ்வொரு ஆலயத்திலும் படர்ந்து
4.அனைவரும் அருள் ஞானிகளாக வேண்டும் என்று நாம் வேண்டுவது தான்.

ஆரம்பத்திலிருந்து யாம் இதைத் தான் செய்து வருகின்றோம். அருளைப் பெருக்கும் பொழுது  இருள் நீங்குகின்றது. அப்பொழுது பொருள் தன்னாலே சேரும்.

எதன் நிலையில் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்பதற்குத்தான் இவைகளை உங்களுக்குத் தெளிவாகக் கூறுவது.

நாம் சுவாசிப்பது எல்லாம் நானாகி... தானாகி மீண்டும் நானாகின்றது...! எந்த நானாக நாம் ஆக வேண்டும்...?


உலகத்தினுடைய நிலைகளில் எல்லாமே அந்த உணர்வுகள்தான் இயக்கமே தவிர
1.நான் அதைச் செய்தேன்... இதைச் செய்தேன்...! என்றால்
2.யாரும்... ஒன்றும் செய்யவில்லை...

எப்படி...?

நான் என்ற நிலைகளுக்கு வரப்படும் பொழுது, “தான் யார்... நான் யார்...?” என்று விநாயகனைப் போட்டு பிள்ளையார் சுழி போட்டு ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

புழுவிலிருந்து வளர்ச்சியாகி மனிதனாக வந்தோம் என்ற நிலையில் யானைத் தலையைப் போட்டு மனிதனுடைய உடலைப் போட்டு முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக விநாயகனைக் காட்டினார்கள்.

இந்தப் பிள்ளை யார்...? (பிள்ளையார்) என்று விநாயகனைப் போட்டு நான் யார்...? தான் யார்..? என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வதற்காகச் செய்தார்கள்.

1.”இப்பொழுது” நாம் எதை எண்ணுகிறோமோ... அதைச் சுவாசிக்கும் பொழுது “நான்” ஆகின்றது.
2.அது நம் உடலுக்குள் சென்றவுடன் “தான்” ஆகின்றது.
3.”இந்தத் தானாகி” நம் உடலில் அது செயல்படுகின்றது.
4.”இந்தத் தான்...” உடலுக்குள் உணர்வாக விளையப்படும் பொழுது மீண்டும் நானாகின்றது.

ஆகவே தான் யார்...? நான் யார்...?

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் நாம் எத்தனையோ கோபப்படுகிறோம்... ஆத்திரப்படுகிறோம்... சஞ்சலப்படுகிறோம்... சங்கடப்படுகிறோம்...! இவை அனைத்தும் தானாகின்றது. நாம் எண்ணுவது அனைத்துமே தானாகின்றது.

நான் நல்லதைச் செய்தேன்... ஆனால் எனக்கு இப்படிச் செய்கிறார்களே...! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். இந்த உணர்வெல்லாம் உயிருடன் ஒன்றி உயிருடன் சேர்க்கும் போது நானாகின்றது.

அப்படி எடுத்துக் கொண்ட உணர்வெல்லாம் தானாகி... நானாகி விடுகின்றது. “இந்தத் தான்” என்ற உணர்வின் நிலையாக உயிருடன் சேரும் பொழுது நானாகின்றது.

அதாவது நன்றாக இருக்கும் நாம் கோபத்தையும் ஆத்திரத்தையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் எடுத்த பின்
அந்த நானாக...
கோபப்படுபவனாக..
ஆத்திரப்படுபவனாக..
சஞ்சலப்படுபவனாக...
சங்கக்டப்படுபவனாக... மாறி விடுகின்றோம்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா...!

நல்ல மனிதனாகப் பிறந்து வந்திருக்கின்றோம் என்ற நிலையில் தான் யார்... நான் யார்...? என்ற நிலைகளை அந்த விநாயக தத்துவத்தை அகஸ்தியன் தெளிவாக்கினான்.

நாம் எண்ணக்கூடியதை எல்லாம் நம் உயிர் உடலாக தானாக நானாக ஆக்கிவிடுகின்றது. அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்...?

இதைப் போன்ற தீமைகளைக் கடந்து சென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் இணைத்தல் வேண்டும். அதை நமக்குள் பெருக்க வேண்டும்.

அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்தால் நம் உயிர் அந்தத் தானாக... நானாக... நம்மை ஆக்கும். ஞானத்தின் உணர்வாக நம்மை இயக்கும்.

இதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்...!” என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இதைவிட சாஸ்திரங்கள் நமக்குக் கூற வேண்டும் என்று நினைக்கின்றீர்களா...?

எவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்...? சாஸ்திரங்கள் எதுவும் பொய்யல்ல...! நாம் பொய்யாக்கி வைத்திருக்கின்றோம். உண்மையை நாம் உணராது மறைக்கப்பட்டது... மறைந்தே போய்விட்டது.

அது தெளிவாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் இதை உணர்த்துகின்றோம்... உறுதிப்படுத்துகின்றோம். நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்... தெளிந்து கொள்ளுங்கள்.

அந்தத் தெளிவின் தன்மை அடைந்த பின் நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கும் இதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
1.இந்தத் தெளிவின் தன்மையை நீங்கள் வளர்க்க வேண்டும்.
2.உங்கள் பார்வை பிறரைத் தெளிவாக்க வேண்டும்... தெளிவாக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும்.
3.உங்கள் பார்வை பிறரைத் தெளிந்த நிலைகள் பெறச் செய்யும் சக்தியாக வர வேண்டும்.
4.உங்களைப் பார்த்தாலே அவர்கள் தெளிந்திடும் மனம் பெற வேண்டும்.

அந்தச் சக்தியை ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்பதே என்னுடைய (ஞானகுரு) தியானமும் தவமும். ஒவ்வொரு நிமிடத்திலேயும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

January 28, 2019

தெய்வத்தைக் காவல் காக்கும் தெய்வங்கள்...!


துவாரபாலகர்கள் என்றால் நாம் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பகுதி ஆலயங்களில் முன்னாடி இது இருக்கும்.

துவாரபாலகர்களைக் காவல் தெய்வம் (வாயிலைக் காப்போர்) என்றும் சொல்வார்கள். சந்நிதானத்தில் இருக்கும் கடவுளைப் பார்க்கச் செல்லும் முன் துவாரபாலகர்களைக் கடந்து தான் செல்ல முடியும்.

1.நம் உயிரே ஈசனாக கடவுளாக உள் நின்று இயக்குகிறது.
2.அந்த உயிர் இருக்கும் இடம் நம் புருவ மத்தி.
3.அந்தப் புருவ மத்திக்குக் கீழே தான் நம் மூக்கின் இரு துவாரங்களும் இருக்கின்றது.. (துவாரபாலகர்கள்...!)
4.அதாவது... இரண்டு துவாரங்கள் (துவார) வழியாக நாம் சுவாசிப்பதை எல்லாம்
5.நம உயிர் அணுவாக உருவாக்கும் கருவாக (பாலகர்கள்) உடலுக்குள் மாற்றிக் கொண்டே இருக்கின்றது என்று
6.நாம் புரிந்து கொள்ள ஞானிகள் அவ்வாறு காட்டுகின்றார்கள்.

நாம் சுவாசிக்கும் உணர்வலைகள் (காற்று) மூக்கின் வழி கூடி புருவ மத்தியில் பட்டால் தான் எண்ணம்... உணர்வு... உணர்ச்சி... சொல்... செயல்... எல்லாமே இயங்கும்...!

சுவாசிக்கவில்லை என்றால் உயிரிலே எதுவும் படாது. உயிரிலே படவில்லை என்றால் எதையுமே நாம் அறியவோ உணரவோ முடியாது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம்முடைய சுவாசத்தை... அதாவது துவாரபாலகர்களை நாம் கொஞ்சமாவது எண்ணிப் பார்க்கின்றோமோ...? என்றால் இல்லை...!

ஏனென்றால் நம்முடைய சகஜ வாழ்க்கையில்
1.கண்களில் பார்ப்பதையும்
2.காதில் கேட்பதையும்
3.வாயில் சுவையை அறிவதையும்
4.உடலின் உணர்ச்சிகளையும் பரிசீலனை செய்கின்றோம்.
5.அதைச் சரி செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து கூடுமானவரை சரியாக்குகிறோம்.

ஆனால் இலவசமாக நாம் சுவாசிக்கும் இந்தக் காற்றைப் பற்றி துவாரபாலகர்களைச் சிறிது கூடக் கவலைப்படுவதில்லை. எது ஒன்று இலவசமாகக் கிடைக்கின்றதோ... அதை நாம் சிறிதும் சட்டை செய்ய மாட்டோம்... இது தான் நம்முடைய் வழக்கம்.

கெட்ட வாசனை ஏதாவது வந்தால் தான் என்ன...? என்று பார்ப்போம். மற்றபடி நாம் சுவாசிக்கும் சுவாசத்தில் எது வந்தாலும் எல்லாவற்றுக்கும் அனுமதி கொடுத்துவிடுகின்றோம்.

நம்முடைய சுவாசத்தின் வழி நல்ல உணர்வுகள் உடலுக்குள் செல்கிறதா... அல்லது தீமையான உணர்வுகள் செல்கிறதா...? என்று பரிசீலிப்பதும் இல்லை...! அதைப் பற்றிய சிந்தனையும் இல்லை.

நம் மூக்கின் வழியாகச் செல்லும் அந்த உணர்வுகளைத் தடுத்து நிறுத்தி உயரிய சுவாசமாக நல்ல உணர்வாக ஈசன் வீற்றிருக்கும் உடலான ஆலயத்திற்குள் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் காவல் தெய்வமாக வைத்துக் காட்டியுள்ளார்கள்.

1.ஏனென்றால் மனிதனுடைய ஆணிவேரே இந்தச் சுவாசம் தான்.
2.நம்முடைய அந்தச் சுவாசத்தைச் சரி செய்தாலே
3.வாழ்க்கையில் வரும் எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம்.

அத்தகைய சுவாசத்தைச் சரி செய்யத்தான் நம் குருநாதர் உயிர் வழி சுவாசம் என்று ஆத்ம சுத்திப் பயிற்சியைக் கொடுத்துள்ளார்.

உயிர் வழி சுவாசம் என்றால்
1.நமக்குள் ஈசன் இருக்கின்றான்... நம்மை அவன் தான் இயக்குகின்றான்... அவனுக்குள் எந்த அசுத்தத்தையும் கொடுக்கவே கூடாது..! என்ற எண்ணம் கொண்டு
2.புருவ மத்தியில் இருக்கும் நம் உயிரிடமே கண்ணின் நினைவைச் செலுத்தி அதை வேண்டி (ஏங்கி)
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
4.அந்த மகரிஷிகளீன் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
5.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும் என்று
6.இத்தகைய உணர்வுகளைத் திரும்பத் திரும்பச் சுவாசித்தால் இதுவே உயரிய சுவாசமாகும்... “உயிர் வழி சுவாசமாகும்...!”

இதனால் நம் ஈசனும் மகிழ்ச்சி அடைகின்றான். இந்த உடலான சிவமும் மகிழ்ச்சி அடைகின்றான். நாம் பார்க்கும் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.

ஆண்டவனுக்குச் செய்யும் பணி என்பது இது தான்.

இப்படிப்பட்ட சேவையை நம் உயிரான ஆண்டவனுக்குச் செய்தால் அவனுடன் ஐக்கியமாகலாம். அவனுடன் ஒன்றிடலாம். அவனைப் போன்றே அழியாத நிலை பெறலாம்.

ஏனென்றால் உயிருக்கு என்றுமே அழிவில்லை. உடல் தான் அழிகிறது. உயிர் போய்விட்டது என்று நாம் சாதாரணமாக விட்டுவிடுகின்றோம்.
1.உடலைக் காக்கத்தான் ஒவ்வொருவரும் முயற்சிக்கின்றோமே தவிர
2.உயிரைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லை.

ஆனால் மெய் ஞானிகள் உயிருடன் ஒன்றியே இன்றும் விண்ணிலே ஒளியாகப் பேரொளியாக ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் சென்ற வழியில் நாமும் நம்முடைய சுவாசத்தைச் (துவாரபாலகர்களை) சீர்படுத்தினால் நிச்சயம் அவர்கள் அடைந்த எல்லையை அடையலாம்.

ஆலயங்களில் அதனால் தான் உள்ளே இருக்கும் அந்தத் தெய்வத்தையே காக்கும் தெய்வமாகக் காவல் தெய்வமாகக் காட்டி நாம் எல்லாம் எளிதில் புரிந்து கொள்ளும்படி செய்தார்கள்.

இனியாவது அந்த ஞானிகள் சொன்ன முறைப்படி உயிரான ஈசனுக்கு உயர்ந்த சுவாசத்தைக் கொடுப்போம். உயிருடன் ஒன்றுவோம்...!

ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா...!