ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 21, 2018

பிறந்த (பிறக்கின்ற) குழந்தையின் ஜாதகத்தைக் கணிப்பதைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

ஒரு குழந்தை வீட்டில் பிறந்தவுடன் அந்த வீட்டில் உள்ள பெரியவரும் தன் வாயால் சொல்வதில்லை. பிறந்த நேரம் எப்படி உள்ளதோ…?!
1.ஜாதகக்காரனிடம் கேட்டால் பகர்ந்திடுவான்.. என்ற எண்ணத்துடன்
2.ஓடுகின்றார்கள்…… ஜாதகத்தைப் பார்க்க.

அந்த ஜாதகக்காரனின் தன்மையிலே சொல்கின்றதாம்…! குருவும் கேதுவும் சனியும் சந்திரனும் சூரியனும் புதனும் வியாழனும்…! இதை எல்லாம் பகர்ந்தவன் யாரப்பா…?

ஒன்பது கட்டம் போடுகின்றான். புதனின் பார்வையிலே சந்திரன் படுகின்றானாம். கேதுவின் நிலை பார்க்கின்றதாம்…! சனி உச்சத்தில் உள்ளதாம்.. சுக்கிரன் நடக்கின்றானாம்…! எப்படி இருக்கிறது பார்த்தாயா…?

குழந்தை பிறந்தவுடன் இப்படிப் பகர்கின்றான் பாவக்காரன். அந்தக் குழந்தையின் ஜாதகத்தையே வளரும் காலமெல்லாம்
1.அக்குழந்தையை வளர்ப்பவனுக்கும்
2.அக்குழந்தை விபரம் வந்த பிறகும்
3.ஜாதகக்காரன் சொல்வது தான் மனதினுள்ளே பதிகின்றது.

அதை வைத்து வளர்த்திட்டால் அந்த எண்ணத்தில் வைத்து வளரும் வளர்ப்புத்தான் வந்திடும். ஜாதகத்தில் வந்ததனால் எண்ணத்தில் ஊன்றிவிடுகின்றது.

அந்த “எண்ணமே தான் மனிதன்…!” என்று பல முறை பகர்ந்திட்டேன்,

எண்ண வடிவில் வருவதெல்லாம் கால நிலையில் வந்திடுமப்பா. ஜாதகத்தில் வந்ததல்ல அந்நிலை. ஜாதகம் ஜோதிடம் என்பதெல்லாம் பொய்யுமல்ல… நடப்புமல்ல…!

முன் ஜென்மத்தின் நிலையையும் கண்டிடலாம். இந்த ஜென்மத்தின் நிலையையும் கண்டிடலாம் என்னும் நிலையில் தான் ஆதிகாலத் தவசிகள் பெரும் தவமிருந்து பெற்றிட்டார்கள்.

1.ஓலைச் சுவடி முறையின் முறையிலே
2.நாடி நரம்பு என்ற வழியினிலே
3.ஒருவன் ஜாதகத்தைத் தெரிந்திட அவனின் நாடியைப் பார்த்தால் தெரிந்துவிடும் 
4.அவன் மூன்று ஜென்மக் கதையும் - முன் ஜென்மக் கதையும் நடக்கும் ஜென்மமும் அடுத்த ஜென்மமும்.

எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள் பெரும் ஆத்திரக்காரர்கள்… அழித்துவிட்டார்கள் தான் பிழைக்கும் வழிக்காக. போகர் எழுதிய நாடியெல்லாம் நடு ஆற்றில் விட்டுவிட்டார்கள்.

எழுதுகிறார்கள் ஜாதகத்தை… புதனைச் சனி பார்ப்பதாக…!

ஜாதகம் என்பது முன் ஜென்மத்தில் நடந்தவற்றைத் தெரிந்து இந்த ஜென்மத்தில் நடப்பதைச் சொல்வது தான். திரித்துவிட்டார்கள் ஜாதகத்தின் உண்மை நிலையை.

இன்று ஜாதகம் பார்ப்பதெல்லாம் பேராசையின் ஆவலால் தான். ஆகவே ஜாதகத்தைப் பார்க்க எங்கும் சென்றிட வேண்டாம். உன் நிலையிலேயே உன் உள்ளத்திலேயே உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொண்டால் தெரிந்துவிடும் “ஏழு ஜென்மப் பலனும்…!”