ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 25, 2018

மதங்களும் மதத்திற்குள் பல இனங்களும் இனத்திற்குள் பல குலங்களும் உருவானதன் காரணம் என்ன…? தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒரு இனம் எப்படி வந்தது…?


மதத்தின் அடிப்படையிலேயும் மொழியின் அடிப்படையிலேயும் இனத்தின் அடிப்படையிலேயும் தான் பண்டைய கால அரசர்கள் ஆட்சி புரிந்தார்கள். மதத்தின் அடிப்படையில் தான் ஒழுக்கங்களையும் கற்பித்தார்கள்.

எங்கள் மதம் ஒழுக்கமானது… எங்கள் மதம் ஒழுக்கமானது…! என்ற நிலைகளில் அன்று மத போதனைகளை ஊட்டி அந்த மதத்திற்கு கீழ் இருக்கும் மக்களை ஒன்றிணைத்து மற்ற மதத்தினர் தன் மீது படையெடுக்காது வலு கொண்ட நிலைகளில் இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு அரசனும் ஆட்சி செய்தான்.

இந்தியாவில் எடுத்து கொண்டாலும் கிருஷ்ண பக்தர் விஷ்ணு பக்தர் முருக பக்தர் சிவ பக்தர் காளி பக்தர் என்ற நிலைகளில் தெய்வங்களை ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு குலதெய்வங்களை எடுத்து வைத்துக் கொண்டார்கள்.

ஒரு மனிதனுக்குள் இருக்கும் ஆயிரத்தெட்டு குணங்களைப் பிரித்து இந்தெந்த குணங்கள் இன்னது செய்யும் என்று தெய்வங்களாக உருவாக்கப்பட்டு அது காவியமாக எழுதி அந்த காவியத்தின் அடிப்படையில் நம் நாட்டு அரசர்கள் இயங்கினார்கள்.

ஆனால் முகமதியர் படையெடுத்து வரும் போது நம் (இந்திய) நாட்டு மக்களை அவர்கள் மதத்தில் இணைத்து விட்டால் ஆட்சியைச் சுலபத்தில் நடத்திட முடியும் என்று அவர்கள் முயற்சித்தார்கள்.

கிறிஸ்தவர்களும் நம் நாட்டிற்குள் வந்து அவர்கள் மதத்தைப் பரப்பி விட்டால் நாம் கொடுக்கும் கட்டுப்பாடுடன் இந்திய நாட்டை ஆட்சி புரிந்திட முடியும். இங்கே வரும் எதிர்ப்புகளை மாற்றிடலாம் என்று அவர்களும் அந்த மதத்தைப் போதித்தார்கள். புத்த மதமும் இப்படித்தான்...!

இதைப்போன்று தான் ஒவ்வொரு நாட்டிலும் அவரவர்கள் தான் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டு “எங்கள் இறைவனின் கட்டளை இது தான்…!” என்று மதத்திற்கொரு கடவுளை நியமித்துக் கொண்டார்கள்.

அதன் விதிகளைத் தெய்வங்களாக மாற்றி அதன் வழியில் குணங்கள் எவ்வாறு இருக்க வேண்டும்…? என்று ஒழுக்க நெறிகளைக் கொடுத்துத் தன் மதத்தைக் காத்திட அவ்வாறு ஏற்படுத்தினார்கள்.
1.இன்றளவும் அது தான் நடந்து கொண்டிருக்கின்றது.
2.மதப்போர்களும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது…!

ஓர் மதம் இன்னொரு மதத்தைத் தாக்க வரப்படும் போது அதனுடைய வலுவைக் கண்டு
1.தான் எப்படியும் ஒதுங்கி வாழ வேண்டும் என்று வந்தாலும்
2.அவர்களைத் தன்னுடன் இணைத்து அந்த மதத்துடன் ஒன்றிப் போகலாம் என்று இருந்தாலும் அல்லது
3.வேறொரு மதத்திலிருந்து இந்த மதத்துடன் இணைக்கச் செய்தாலும்
4.அதை மதத்திற்குள் ஓர் இனம்…! என்றும்
5.இழிவான இனம் (தாழ்த்தப்பட்டவர்கள்...!) என்றும் பிரித்தார்கள்.

காரணம் அடுத்த போர் வரும் போது இவன் நம்மைக் காட்டிக் கொடுத்து விடுவான் என்று இனம் கண்டு கொள்வதற்காக அவ்வாறு செய்தார்கள்.

அதாவது மதத்தின் அடிப்படையில் ஒரு நாடு இன்னொரு நாட்டைக் கைப்பற்றினால் அடுத்த மதத்திலிருந்து தன் மதத்தில் இணைந்தால் அவன் “இழிவான இனத்தைச் சேர்ந்தவன்...!” என்று மதத்திற்குள் ஒரு இனத்தை இவ்வாறு பிரித்தனர்.

இவ்வாறு தான் அந்த இனத்தைப் பிரித்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டார்கள். அதே சமயத்தில்
1.அந்த இனத்திற்கு இன்ன வரி (TAX) என்றும் இந்த இனத்திற்கு இன்ன வரி என்றும்
2.போர் செய்யும் பொழுது தன்னுடன் இணைந்து வலு கொண்டு செயல்படுபவர்களுக்கு இன்ன வரி என்றும்
3.இப்படிப் பிரித்துப் பிரித்துப் பிரித்து ஒவ்வொன்றையும் இனம் கண்டு கொள்ள இவ்வாறு செய்தார்கள்.
4.இப்படி வந்தது தான் மதங்கள் - ஒரு மதத்திற்குள் பல இனங்கள் - ஒரு இனத்திற்குள் பல குலங்கள்…!
மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் மதங்களும் இனங்களும் குலங்களும்…! எந்த ஞானியிம் அவைகளை உருவாக்கவில்லை.