ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 4, 2018

பேய் வந்து ஆடுகின்றது... பேய் மாதிரி இருக்கின்றான்...! என்று சொல்கிறோம் அதனின் உண்மை நிலை என்ன...?


நீ பேயாகப் போ...! என்று ரிஷி சாபமிடுவார். ஐயனே... எனக்கு இதிலிருந்து விடுபட வழி ஏதேனும் வழி இல்லையா...? என்று கேட்பார்கள்.

நீ நல்லவனைத் தீண்ட எண்ணுவாய். அவன் நிழல் பட்டு நீ மறுபடியும் மனிதனாகப் பிறப்பாய். நல்ல நிலைகள் பெறுவாய் என்று ரிஷி சொல்வதாக நம் சாஸ்திரங்களில் உரைக்கப்பட்டுள்ளது.
1.இதிலே ரிஷி என்பது நம் உயிர் தான்,
2.நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுக்கொப்ப அடுத்த உடலை அல்லது
3.அடுத்த நிலையை எப்படிப் பெறுகிறோம்...? என்பதை உணர்த்துவதற்காக அதைக் காட்டினார்கள் ஞானிகள்.

பேயாகப் போகிறது என்றால் எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும் அவனுக்குள் அது புகுந்தால் ஆட்டிப் படைத்து விடுகின்றது.

எத்தனையோ தர்மத்தைச் செய்திருப்பார். ஐயோ இப்படி இருக்கின்றானே...! என்று பார்த்து ஏங்குவார். அப்போது இதே மாதிரி ஒரு இறந்த ஆத்மா பாசத்தினால இவர் உடலுக்குள் குடி புகுந்து விடும்.

இன்றைய மனிதர்களில் சில பேர் இரக்கத்துடனும் இருப்பார்கள். பாசத்துடனும் இருப்பார்கள். அவர்களிடம் பயம் ஜாஸ்தியாக இருக்கும். பற்று கொண்ட நிலையில் ஏதாவது எதிர்பாராத சம்பவம் (அசம்பாவிதங்கள் – தற்கொலை, கொலை, விபத்து) நடந்து விட்டால் அதைப் பார்த்தாலோ அல்லது கேள்விப்பட்டாலோ போதும். உடனே அதிர்ச்சி அடைவார்கள்.

1.இப்படி அதிர்ச்சி அடைவது பெண்களிடம் அதிகமான நிலைகளில் உண்டு.
2.ஏனென்றால் பயத்தால் ஈர்க்கும் சக்தியும் கவரும் சக்தியும் அவர்களிடம் ஜாஸ்தி இருக்கும்.
3.பெரும்பகுதிப் பெண்களுக்கு இதனால் கை கால் குடைச்சல்... அடிக்கடி தலைவலி தலை சுற்றல்... இதெல்லாம் கண்டிப்பாக இருக்கும்.

திடீரென பயந்தால் பிறிதொரு (இறந்த) ஆத்மா உடலுக்குள் வந்து விடுகின்றது. நமக்குள் வந்த பின் அந்த எண்ணம் பேயாக நம்மை இப்படியெல்லாம் இயக்கத் தொடங்குகின்றது.

ஏனென்றால் மனித உடலை விட்டு வெளியே சென்றால் எப்படியும் மனித உடலுக்குள் புகுந்து தான் மீண்டும் மனிதனாக வேண்டும்.

ஆனால் மனிதனாக வாழ்ந்து பொழுது எந்தெந்த நோய்வாய்ப்பட்டு முழுமையாக (உடல் நோய் அல்லது மன நோய்) ஆனானோ அந்த எண்ணத்தை வைத்து இயக்கினால்
1.நோயாகத்தான் உருவாக்க முடியுமே தவிர
2.அங்கே குழந்தையாகப் பிறக்க முடியாது.
3.மனிதனின் கடைசி நிலை இப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்குத் தான் நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவாத்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிக்கச் சொல்கிறோம்.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று ஒரு நாளைக்குக் குறைந்தது ஐம்பது முறையாவது தியானிக்க வேண்டும்.

அறியாத நிலைகளில் பிற ஆன்மாக்கள் நம் உடலிற்குள் வந்து அது மறு ஜென்மம் பெறுவதற்குண்டான நிலையே இல்லாத போது
1.அந்த ஆன்மாக்கள் நம்மை இயக்காத வண்ணம் தடுப்பதற்கு
2.இந்தத் தியானம் உதவும்.

இந்த முறைப்படி நாம் தியானிக்கவில்லை என்றால் அதனுடைய உணர்வை நமக்குள் இயக்கத்தான் செய்யும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மாக்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது அந்த ஆன்மாக்கள் மோட்சம் அடைகின்றது.