ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 27, 2018

முன்னோர்களை விண்ணுக்கு அனுப்பும் வித்தை...!


கேள்வி:-
முன்னோர்களை விண்ணுக்கு அனுப்பும் வித்தை...! அதை எவ்வாறு செய்வது...? என்பதைப் பதிவிடுங்கள். 

பதில்:-
1.ஈஸ்வரா….! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி வடக்குத் திசையில் பூமியின் வட துருவத்தை எண்ணி அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று நமக்குள் அந்தச் சக்தியை ஏற்றிக் கொள்ள வேண்டும்.

2.ஞானகுருவையும் மாமகரிஷி ஈஸ்வரபட்டரையும் மற்ற மகரிஷிகளியும் எண்ணி அவர்கள் துணையுடன் நம் முன்னோர்களிடம் உணர்வு பூர்வமாக உயிரின் வழியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்

3.விண்ணிலிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியை இழுத்து அதை முன்னோர்களின் உயிரில் முகப்பாக இணைக்க வேண்டும்
.
4.வில்லில் ஒரு அம்பை ஏற்றி அதை இழுத்துச் சரியான குறி பார்த்து விடுவது போல் முன்னோர்களின் ஆன்மாக்களை உந்தித் தள்ள வேண்டும்.

5.அல்லது பந்து விளையாட்டில் குறி பார்த்து இலக்கை அடைய அந்தப் பந்தைத் தள்ளி விடுவது போல் முன்னோர்களின் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுக்குள் தள்ளிவிட வேண்டும்.

6.இதெல்லாம் சூட்சமமாகத்தான் (கண்ணுக்குத் தெரியாமல்) செய்ய முடியும்.

7.விண்ணிலிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியை இழுக்க வேண்டும் கவர வேண்டும் நுகர வேண்டும் அதை உள்ளே இழுத்துச் சுவாசிக்க வேண்டும்

8.சுவாசித்த சப்தரிஷி மண்டலங்களின் சக்தியைக் கொண்டு முன்னோர்களின் ஆன்மாக்களைத் தள்ள வேண்டும் அதாவது மூச்சு வெளியே விடுவது போல் (அல்லது ஒரு பொருளைக் கையால் தள்ளுவது போல்) உந்த வேண்டும். முன்னோர்களின் ஆன்மாவைக் கவரக் கூடாது – இது முக்கியம்…!

9.இப்படித் தொடர்ந்து திரும்பத் திரும்ப உந்தித் தள்ள அந்த ஆன்மாக்கள் காற்றிலே எடை இல்லாது இருப்பதால் நம் உணர்வுகளின் காந்தத் தொடர்பு (இணைப்பு) கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பூமியின் ஈர்ப்பை விட்டுக் கடந்து மேலே செல்லும். ஒரு ராக்கெட் எப்படி மேலே போகின்றதோ அது போல் மேலே செல்லும்.


10.பூமியின் காற்று மண்டலத்திற்கு வெளியே சென்றதும் முன்னோர்களின் உயிரின் முகப்பில் நாம் இணைத்திருக்கும் சப்தரிஷி மண்டல உணர்வுகளும் ஏற்கனவே சப்தரிஷி மண்டலத்திலிருந்து பூமிக்குள் வந்து கொண்டிருக்கும் அலைகளும் சந்தித்தவுடன் இனம் இனத்தைக் கவரும் என்பது போல் அலுங்காமல் முன்னோர்களின் ஆன்மா சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் இழுத்துச் செல்லபட்டு விடும்.


11.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் முன்னோர்களின் உயிரான்மாக்கள் இணைந்ததும் ஆன்மாவில் இருக்கும் மனித உடல் பெறும் உணர்வுகள் கருகிவிடும். தங்கத்தில் திரவகத்தை விட்டதும் தங்கத்தில் உள்ள அழுக்குகள் நீங்கித் தங்கம் பளிச் என்று தக தக என்று மின்னுவது போல் முன்னோர்களின் உயிரான்மாக்கள் ஒளியாக ஜொலிக்கும். முன்னோர்கள் கணவன் மனைவியாக அங்கே இரு உயிரான்மாக்களும் ஒன்றி வாழும்,

12.மீண்டும் மீண்டும் நாம் நம் முன்னோர்கள் சப்தரிஷி மண்டலங்களின் சக்தி பெறவேண்டும். அவர்கள் பிறவா நிலை பெறவேண்டும் என்று உணர்வுகளை உந்திச் செலுத்தச் செலுத்த நாம் செலுத்தும் உணர்வுகள் அவர்களுக்கு ஆகாரமாகச் செல்லும்.

13.அதாவது தாய் தந்தையர் நமக்குப் பாலூட்டி பின் பல உணவுகளைக் கொடுத்துக் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்த்தது போல் நம் முன்னோர்களின் உயிரான்மாக்கள் அங்கே வளர்ச்சி அடையத் தொடங்கும்.

14.அவர்கள் அருளாசி எங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஏங்கினால் அங்கிருந்து நாம் அவர்கள் மூலமாக இன்னும் நிறைய அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

குறிப்பு:-
இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முன்னோர்கள் அங்கே இணைந்த நிலையை உணர முடியும். அதன் பின் உங்கள் ஆன்ம வலு கூடுவதையும் பார்க்கலாம். உங்கள் பேச்சும் மூச்சு செயல் எல்லாவற்றிலும் அந்த உயர்ந்த மாற்றங்களைக் காண முடியும். பேரருள் பேரொளியாக உங்கள் உடலிலிருந்தும் புருவ மத்தியிலிருந்தும் பாயும். கண்ணிலேயும் பார்க்கலாம். தீமைகளை அகற்றிடும் ஆற்றல்மிக்கவர்கள் ஆவீர்கள்.