ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 27, 2018

திருமணமான பெண்ணின் குலதெய்வங்கள் யார்...? யாரை எண்ணி விண் செலுத்துவது...?

கேள்வி:-
ஆண் என்றால் முன்னோர்கள் என்றால் அவர்களின் பரம்பரையை எண்ணி ஒளியை அடையச் செய்யலாம். பெண் என்பவள் எந்த முன்னோரை அனுப்ப வேண்டும். இரு அதாவது கணவர் மற்றும் பெண்ணின் முன்னோரையும் சேர்த்து எண்ண வேண்டுமா…?

பதில்:-
உடலை விட்டுப் பிரிந்த பின் உயிராத்மாவில் ஆண் என்ற நிலையோ பெண் என்ற நிலையோ எதுவும் கிடையாது. நுகர்ந்த உணர்வுக்கொப்பத் தான் அது அடுத்த உடல் பெறும்.

குலதெய்வங்கள் என்று இப்பொழுது நாம் கும்பிடுவது இதெல்லாம் அரசர்கள் இட்ட முறைகள். பெண் என்பவள் திரும்ணமான பின் தன் கணவர் கும்பிடும் குலதெய்வத்தைத்தான் கும்பிட வேண்டும் என்ற அரசர்கள் இட்ட அந்தச் சட்டங்களை இன்றும் நாமும் விடாது பிடித்துக் கொண்டுள்ளோம்.

முன்னோர்கள் என்றால் நம் அம்மா அப்பா அவர்களின் சுற்றத்தார்! அவர்கள் அம்மா அப்பா அவர்களின் சுற்றத்தார்! என்று இப்படியே கொடி போல் படர்ந்து கொண்டே போகும்.

எப்படிப் பார்த்தாலும் எல்லோரும் இந்த முறைப்படி முன்னோர்களை விண் செலுத்தும் பழக்கத்திற்கு வந்து விட்டால் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் இந்தக் காற்று மண்டலத்திலே இருக்கவே இருக்காது.
1.எல்லோரையுமே எல்லோரும் சேர்ந்து விண் செலுத்தும் வாய்ப்பாக
2.அது அத்தகைய சந்தர்ப்பமாகிவிடும்,

ஆகவே உங்கள் கேள்விக்கு இடமே இல்லை.

என்னுடைய பிரார்த்தனையில் உலகில் எல்லா உயிராத்மாக்களுமே குருநாதர் அருளால் விண் செல்ல வேண்டும் என்று தான் உந்தித் தள்ளிக் கொண்டிருக்கின்றேன்.

ஆனால் நம் முன்னோர்கள் என்று எதற்காகச் சொல்வது என்றால் அவர்கள் உடலில் விளைந்த உணர்வு நமது உடலாக இருப்பதால் அதன் துணை கொண்டு எளிதில் அனுப்பலாம் என்பதற்குத்தான்.

அந்த உணர்வின் பதிவு இல்லை என்றால் அதற்குண்டான ஒரு இணைப்பு அல்லது ஒரு துணை வேண்டும். அதனால் தான் குறைந்த பட்சம் அவரவர் குடும்பத்தில் உள்ள முன்னோர்களை அனுப்பும் பழக்கத்திற்கு உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை நீங்கள் எளிதில் விண்ணுக்கு அனுப்பலாம். அதே போல் உங்கள் கணவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை உங்கள் கணவர் எளிதில் அனுப்பலாம்.

ஆனால் நண்பராகப் பழகினால் ஆணோ பெண்ணோ அதை யார் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
1.யாரை விண் செலுத்துகின்றோமோ
2.அவரின் உணர்வு (இரத்த வழித் தொடர்பு) நமக்குள் பதிவு இருக்க வேண்டும்.
3.அப்பொழுது தான் அனுப்ப முடியும். (இது தான் முக்கியம்)
4.கணவன் வழி என்றோ மனைவி வழி என்றோ அப்படிக் கிடையாது.


அதே சமயத்தில் மகரிஷிகளுடன் வலுவான தொடர்பு கிடைத்தது என்றால் அவர்கள் துணையுடன் யாரை வேண்டுமானாலும் விண்ணுக்கு அனுப்பலாம்.