ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 13, 2018

என் மனைவி மூலமாகத் தான் பழனியில் "மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரைப் பற்றிய உண்மைகளை...!" அறியும் சந்தர்ப்பம் எனக்கு உருவானது...!

இயற்கையின் நிலைகளிலே இந்தியாவில் தோன்றிய மெய் ஞானியான அகஸ்தியன் தான் மெய் உணர்வுகளை இந்த உலகிற்கே உணர்த்தியவன்.

1.ஒரு சூட்சம சக்தி அது உறைந்து திடமாகும் போது “சிவம்” என்றும்
2.அந்தச் சிவத்திற்குள் இயக்கச் சக்தியின் உணர்வை “சக்தி” என்றும்
3.இரண்டும் சேர்ந்து சிவசக்தியாக இயங்குகிறது என்றும்
4.சிவமில்லை என்றால் சக்தி இல்லை... சக்தி இல்லை என்றால் சிவமில்லை...! என்றும் ஆதியிலே கண்டுணர்ந்தான்.

சக்தியின் தன்மை ஓர் திடப்பொருளாக ஆனபின் தான் அது உருவத்தின் தன்மை அடைகின்றது. தன் உணர்வுடன் அணைத்துக் கொள்கின்றது... உணர்வின் சத்திற்கொப்ப அது இயங்குகின்றது... என்ற நிலையை அன்று அகஸ்தியன் தெளிவுற எடுத்துரைத்த உணர்வுகள் தான் பின் வந்த ஞானிகளால் காவியப் படைப்பாகப் படைக்கப்பட்டது.

ஆனால் அரசர்கள் இதை மதங்களாக மாற்றி மதத்தின் அடிப்படையில் சாங்கிய சாஸ்திரங்களாக உருவாக்கித் தனக்குச் சாதகப்படுத்திக் கொண்டார்கள். இப்படி ஒவ்வொரு நிலையிலேயும் மாற்றியமைக்கப்பட்டதால் நாம் ஞானிகளின் உண்மைகளை உணர முடியாத நிலையாகி விட்டது.

ஞானிகள் கொடுத்த நிலைகள் அரசர்கள் கையிலே சிக்கப்பட்டதால் அதை அவர்கள் தன்னுடைய சுகபோகத்திற்காக மறைத்து விட்டனர். காலத்தால் அது மறைந்து போய்விட்டது. நாம் யாரும் அதை அறிந்துணர்ந்து அதன் வழிகளிலே செல்ல முடியாத நிலைகள் ஆகிவிட்டது.

என்னுடைய (ஞானகுரு) சந்தர்ப்பம் நான் படிப்பு அறிவே இல்லாதவன். நானும் ஒரு மூடன் தான். நிர்மூடத்தனமாக எதையும் செய்வேன்... எதையும் பேசுவேன்... என்ற இந்த நிலை பெற்றவன் தான்.

இருந்தாலும் என் மனைவி நோயாக இருக்கப்படும் போது மெய் ஞானியான ஈஸ்வராய குருதேவரை நேரடியாக அணுகும் சந்தர்ப்பம் அமைந்தது. ஆனால் அவரை நான் பித்தராகத்தான் பழனியிலே சந்தித்தேன்.
1.அவரைப் பித்தன் என்றே நான் வெகு காலம் பார்த்திருந்தாலும்
2.பித்தனுக்குள் மறைந்து உள்ள ஆற்றல் மிக்க சக்தியை
3.நான் பின்னாடி தான் அறிந்து கொள்ள முடிந்தது.

என் மனைவிக்கு வாத நோய் எப்படி வந்தது...! என்றும் அதை நீக்குவதற்காக குருநாதர் தன் வாக்கைக் கொடுத்த்து வெறும் விபூதியால் என் மனைவியை எழுப்பினார் என்று அறிந்து கொண்ட பின் தான்
1.அவர் பித்தனல்ல...
2.அவர் பெரிய மகான்...! என்று நான் எண்ண வேண்டிய நிலை வந்தது.

என் மனைவி ஒரு மாதத்தில் பூரண குணம் அடைந்த பின் அவர் சொன்ன நிலைகளைப் பின்பற்றினேன். மனைவிக்கு நோய் எப்படி வந்தது...? மனைவியின் உணர்வுகள் எதனால் மாறியது...? மனைவியினுடைய சுய நினைவுகள் கெட்டது எப்படி...? அதை எப்படி மாற்ற வேண்டும்...?

அதே சமயத்தில் இதைப் போன்ற நிலை
1.ஒவ்வொரு மக்களுக்கும் நோய்களும் துன்பங்களும் அது எவ்வாறு ஏற்படுகின்றது...?
2.தவறே இல்லாத நிலைகள் இருந்தாலும் தவறுகள் எப்படி ஏற்படுகின்றது...?
3.அதை எல்லாம் எப்படி நீக்குவது...? என்ற அந்த உண்மைகளை எல்லாம்
4.சுமார் 12 வருட காலம் காடு மேடெல்லாம் என்னை இந்தியா முழுவதும் சுற்றச் செய்து அனுபவபூர்வமாக உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஒவ்வொருவரும் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம். நீ எந்த அளவுக்குத் தெளிவுபடுத்தி மனிதனாக உடல் பெற்று வந்தாயோ இதற்கு அடுத்த நிலையாக உன் வாழ்க்கையில் வந்த விஷத்தை நீக்க
1.மெய் ஞானிகளின் அருள் வழியில் நீ செல்.
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நீ உனக்குள் வளர்த்துக் கொள்.
3.இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் அந்த மெய் ஞானத்தில் வளர வேண்டும் என்று நீ எண்ணு.

நீ இதை எண்ணி எண்ணி வளர்த்து வந்தால் அந்த உணர்வின் தன்மையே உனக்குள் வளரும். நீயும் மெய் ஞானியாக ஆவாய். கீதையிலே கண்ணன் சொன்னது போல் நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய்...! என்று குருநாதர் சொன்னார்.

எனக்கு எப்படி குருநாதர் மெய் ஞானத்தைப் பெறும் சந்தர்ப்பம் என் மனைவியால் கிடைத்ததோ அதே போல் நீங்கள் துன்பம் என்று இங்கே வரும் பொழுது அதை நீக்க மெய் ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் பெறக்கூடிய சந்தர்ப்பமாக இந்த உபதேசத்தின் வாயிலாக ஞான வித்துக்களாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் நீங்களும் மெய் ஞானியாக ஆகலாம். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்...!