ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 17, 2018

வாழ்க்கையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!


மிருக உடலுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள… தன் உணவைத் தேட… இயற்கையாகவே ஒவ்வொரு மிருக இனத்திற்கும் “ஒவ்வொரு காப்பு நிலையுள்ளதப்பா…!”

ஆனால் ஆறறிவு பெற்ற மனிதன்தான் ஒருவனை ஒருவன் ஏமாற்றி ஒருவனுக்காக ஒருவன் ஒருவனை அழிக்கப் பல மந்திரங்கள் பல ஏவல்கள் சூனியங்கள் எல்லாம் செய்து…
1.தன் எண்ணத்தையே பிறரை அழிக்க உபயோகப்படுத்தி
2.பிறரை அழிப்பது மட்டுமல்லாமல்… அந்நிலையே தன்னையும் வந்து தாக்குகிறது… என்று அறியாமலும்
3.மனிதனாகத் தான் பிறந்த பாக்கியத்தையே சிதற விட்டு வாழ்கிறார்கள்.

நாம் வாழும் வாழ்க்கை பிறரின் ஏய்ச்சலுக்கும் போற்றலுக்கும் மயங்குதலும் அல்லது பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டும் பிறரைப் புகழ்ந்து கொண்டும் வாழும் வாழ்க்கை “வாழ்க்கை அல்ல…!”

எவன் ஒருவன் பிறரையே எண்ணிக் கொண்டுள்ளானோ அவன் வாழும் வாழ்க்கை நல்ல வாழ்க்கை இல்லையப்பா…! நீங்கள் கேட்கலாம்… தன்னையே பார்த்துக் கொண்டுள்ளவன் சுயநலவாதி அல்லவா என்று…!

நான் சொல்லும் பொருள் அதுவல்ல.
1.உன்னை நீ உணர்ந்து
2.உன்னில் அந்த ஈஸ்வர சக்தியைப் பெற்று
3.உன் உழைப்பில் நீ உண்டு
4.உன்னைச் சார்ந்தோரின் நிலையையும் நீ பார்த்து
5.உன்னால் பிறருக்குப் பயனை மட்டும் அளிக்கும் நிலையில் நீ இருந்து
6.உன் வாழ்க்கையை நீயே அமைத்துக் கொண்டு
7.உன் மனதில் பிறரின் அவச்சொல்லுக்காகப் பயப்படாமல் பிறரின் புகழுக்காக ஏங்கிடாமல்… மயங்கிடமால்..
8.உன்னையே நீ நம்பு என்பதின் பொருளைப் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கை தானப்பா “பெரும் பூரிப்பான வாழ்க்கை…!”