ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 19, 2018

சறுக்...! என்று பயம் வந்தால் “நறுக்...!” என்று மகரிஷிகளின் அருள் சக்தியை எடுங்கள் – பயம் சறுக்... என்று ஓடிவிடும்...!


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) உபதேசித்த மெய் உணர்வுகளை அவர் காட்டிய அருள் வழியில் எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.

வளர்த்துக் கொண்ட நிலையில் அவர் காட்டிய நெறிகளை எல்லாம் நீங்களும் பெற வேண்டும் என்று தான் இயற்கையின் பேருண்மைகளை உங்களுக்குள் பதியச் செய்கிறோம்.

இப்போது டேப் ரிகார்டு (SOUND RECORDER) என்ன செய்கிறது…? நாம் பேசுவதை எல்லாம் அது அப்படியே பதிவு செய்கிறது.

அதே மாதிரி யாராவது திட்டினால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்..? அதைக் கூர்மையாகக் கவனிக்கின்றீர்கள். கவனித்த நிலையில்... “இருக்கட்டும்... அந்த அயோக்கியப் பயல் இங்கே வருவான்...! அவனை உதைக்க வேண்டும்...!” என்று நீங்கள் போகின்றீர்கள். இல்லையா...!

அதே மாதிரித்தான் இப்போது நான் சொன்ன மெய் ஞானிகளின் உணர்வுகளை எல்லாம் கேட்டு விட்டு
1.இருக்கட்டும்... கெட்டது எல்லாம் வரட்டும்...!
2.வந்தால்... மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு நான் அதைச் சுட்டு பொசுக்க வேண்டும்...! என்று எண்ணி விட்டீர்கள் என்றால்
3.அந்தக் கெட்டது எல்லாம் போய்விடும்.
4.இது தான் இதில் உள்ள வித்தியாசம்.
5.இதைத் தான் “நேரடி...!” என்பது.
6.அத்தகையை மெய் ஞானிகளின் சக்தியைத்தான் “நேரடியாக...!” உங்களுக்குள் பதிவு செய்து செய்கின்றோம்.

இதை இன்றைய விஞ்ஞானமும் நிரூபிக்கின்றது. ஒரு கம்ப்யூட்டரில் எதைப் பதிவு செய்கிறோமோ மீண்டும் அதைத் திரும்ப எடுத்தால் அதனுடைய செயலை அப்படியே (சரியாகக்) காட்டுகிறது.

ஜாதகக்காரன் உங்களுக்குக் கெட்ட நேரம் வந்து விட்டது என்று சொன்னால் அதைப் பதிவு செய்து கொள்கின்றீர்கள். நல்ல நேரம் எங்கே வருகிறது...! எல்லாமே என் நேரம் கெட்டதாகவே இருக்கிறது...! என்று அந்தக் கெட்ட நேரத்தையே உங்களிடம் வளர்த்து வைத்துக் கொள்கின்றீர்கள்.

உதாரணமாக ஒரு பாதையில் நடந்து போகின்றீர்கள். ஒருவன் நான் இந்த ரெக்கத்தில் போகும் போது
1.அங்கே பேய் இருந்தது...!
2.அதைப் பார்த்தவன் பயந்து விழுந்து விட்டான் என்று உங்களிடம் சொன்னால்
3,நீங்கள் அதைக் கேட்டு “ஆ..ஆ…!” அப்படியா...! என்று பதிவு செய்து கொள்வீர்கள்.
4.அந்த இடத்திற்கு நீங்கள் போனாலே தன்னாலே அந்தப் பயம் வரும்.

அப்போது அந்தப் பயத்தை நுகர்ந்து விட்டால் அதிலிருந்து என்ன செய்யும்…? பயம் அதிகமாக இருக்கும். நீங்கள் எங்கே சென்றாலும் அல்லது எங்கே இருந்தாலும்
1.சறுக்…! என்று சப்தம் கேட்டாலே அந்தப் பயம் வரும்.
2.தைரியமாகப் போனால் கூட இந்த உணர்வுகள் வந்து இயக்கும்.
3.அந்த அதிர்வு வரும்.

ஏனென்றால் இதெல்லாம் நாம் நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள்... நாம் அல்ல...! இதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்குத்தான் தான் உங்களுக்கு எப்போது “சறுக்...” என்று பயத்தால் வேதனை வருதோ அப்போது நறுக்... என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று சொன்னால் அல்லது புருவ மத்தியில் எண்ணிச் சுவாசித்தால் “சறுக்” என்று இந்தப் பயம் தன்னால் ஓடிப்போய் விடும். ஏனென்றால்
1.இதை உங்களிடம் வாக்காகப் பதிவு செய்கின்றேன்.
2.நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று ஆர்வத்தில் தான் சொல்கிறேன்.

கூடுமான வரையிலும் உங்களுக்கு வரும் சங்கடமான வேதனையான உணர்வுகளை நீக்கிவிட்டு அந்த மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதியச் செய்வதற்குத் தான் மணிக்கணக்கில் திரும்பத் திரும்பப் பேசுவது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகரும் பழக்க வந்துவிட்டால் உங்களுக்கு வரும் தீமைகளை நீங்களே போக்க முடியும். (இது மிகவும் முக்கியம்)