ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 6, 2018

ஈஸ்வரபட்டர் கடவுளைப் பற்றிச் சொன்ன உபதேசம்…!

கடவுள் எங்கே உள்ளான் என்று புரிந்ததா…?

கால தேவனே தான் கடவுள்.. காற்றே தான் கடவுள்… ஒளியே தான் கடவுள்… மழையே தான் கடவுள்… உன் மனமே தான் கடவுள்… நீ விடும் சுவாசமே தான் கடவுள்… நீயே தான் உனக்குக் கடவுள்…! ஆக கடவுள் என்பது யார் என்று புரிந்ததா……?

ஒவ்வொரு மனிதனின் எண்ணமும் எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையில் தான் அந்தக் கடவுளும் உள்ளான். கல் என்று திட்டுகின்றான். கண் இல்லையா…? என்று திட்டுகின்றான். கல்லும் கண்ணுமல்ல கடவுள்…! உன்னுள் இருக்கும் அந்தக் கடவுளை உன் வாயால் நீ திட்டுகிறாய்.

கோவிலுக்குச் சென்று தான் ஈசனை வணங்கிட வேண்டும் என்பதில்லை. உன் மனம் எனும் கோவிலையே நீ பூஜை செய்…! என்ற பாடலும் இதற்காகவே…!

இந்த நிலை தெரியாத மனிதர்களுக்கு அந்தக் கடவுளைப் பற்றிய எண்ணம் வந்திடவே
1.பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து
2.தான் பெற்ற பயனைக் கோவிலாக்கி அந்தக் கோவிலில் குடியிருந்து
3.தெரியாத மனிதர்களுக்கு அவன் நிலையில் வேண்டும் பொழுது…
4.தான் செய்த சக்தியின் பூஜையின் பலனை வைத்து தவப் பலனை வைத்து தியானத்தின் பலனை வைத்து
5.ஏங்கி நிற்கும் எல்லோருக்குமே தன் நிலையில் வழி காட்டுகின்றார்கள்…. அதனின் பலனை அளிக்கின்றார்கள்…
6.பல கோடிச் சித்தர்களும்… ஞானிகளும்… மகரிஷிகளும்…! புரிந்ததா…..?

மன நிலையை உயர்த்திடவே மலை மேலே கோவிலமைத்தான்
மனதையே மலையாக்கி மலை போல நின்றிருந்தான்
மானிட ஜென்மத்தின் மமதையை அடக்கிடவே
மனதிலுள்ள பேராசை நிலையடங்கிடவே
மன்னிக்கும் மனம் வேண்டும் மானிடர்க்கு
மண்ணுடனே மண்ணாகும் இவ்வுடலுக்கு
மனமென்னும் கோவிலையே மணமாக்கும்
மணமெல்லாம் இவ்வுலகை மணக்கச் செய்யும்
மனதிலுள்ள இந்நிலையை மாற்றிடாமல்
மலை போல எனக்கருள வேண்டுமப்பா… ஈஸ்வரா…!