ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 14, 2018

எதிர் நீச்சல்...!


நீருக்குள் நீந்திச் செல்லும் மீன் தனக்குள் ஓட்டத்தின் வேகம் அதிகமாகி அது தேய்ந்து குறையும் போது - அதற்குள் மின் உற்பத்தி அதிகமாகும். மின் உற்பத்தி அதிகமாக ஆனாலும் நீருக்குள் இருக்கும் காந்தப்புலனுடன் உராய்ந்து உராய்ந்து வேகமான நிலைகள் உராய்ந்தபின் மீனின் உடலுக்குள் இருக்கும் காந்தப் புலன்கள் அது குறைந்து விடுகின்றது.

அது மீண்டும் தனக்குள் அந்த உணர்வின் சத்தாகப் பெற வேண்டும் என்றால் மீண்டும் நீருக்கு வெளியிலே வந்து வெளியிலே இருக்கும் காந்தப் புலனைத் தனக்குள் சுவாசித்தே ஆகவேண்டும்.

ஆகவே வெளியில் வந்து சுவாசித்துக் காந்த சக்தியைத் தனக்குள் கூட்டிய பின் மீண்டும் நீருக்குள் சென்று அதில் இருக்கக் கூடிய காந்தப் புலனறிவிற்குள் உராய்ந்து கரண்டை உற்பத்தி செய்து “எதிர் நீச்சலாகின்றது…!”

அதாவது நீரின் ஓட்டம் எவ்வளவு வேகமான நிலைகள் வந்தாலும் அதில் எதிர் நீச்சலாகித் தான் வாழ தான் எதை எண்ணியதோ அதை அடைய அதனின் வேகத்தின் துரித நிலைகள் பெறுகின்றது.

செங்குத்தான இடங்களில் இருக்கும் நீர் வீழ்ச்சிகளில் பார்க்கலாம். மீன்கள் அந்த நீர் வீழ்ச்சியில் மேலே ஏற முடியவில்லை என்றால்
1.மீண்டும் வெளியிலே வந்து தனக்குத் தேவையான காந்தத்தைச் சுவாசித்துச் சென்று
2.உள்ளே சென்று செங்குத்தான நீரின் வேகத்தின் சுழலிலும் அந்தக் காந்தப்புலனில் உராய்ந்து
3.தான் மேலே செல்லும் ஆற்றலை அது பெறுகின்றது.
4.நீர் எவ்வளவு வேகமாக விழுந்தாலும் அந்த மீன் மேலே செல்கின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்… நம் வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே நமக்குப் பல தீங்குகள் விளைவிக்கும் வேதனையோ சங்கடமோ வெறுப்போ துன்பமோ எத்தனை நிலைகள் வந்தாலும் அதனை எதிர்த்து எதிர் நீச்சலாகி நாம் விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும்.

ஏனென்றால் நம் புலனின் (ஐம்புலனறிவு) ஆற்றல் சாதாரண மனிதர்கள் பால் நாம் எண்ணத்தைச் செலுத்தும்போது இது நமக்குள் ஊடுருவி இந்தப் புவியின் ஈர்ப்பிற்குள்ளேயே நம்மைச் சிக்க வைத்து விடுகின்றது.

அத்தகைய உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றி விண் சென்ற ஒளியின் சுடராக இருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரும் மெய் ஞானிகளின் அருள் வித்துக்கள் விண்ணிலேயும் மிதந்து கொண்டு இருக்கின்றது. நமக்கு முன்னாடியும் படர்ந்து கொண்டுள்ளது.

அந்த அருள் வித்தின் தன்மையை நம் உடலுக்குள் புகுத்தச் செய்யும் இந்தச் சந்தர்ப்ப நிகழ்ச்சி தான் இந்த மெய் ஞான உபதேசம். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியிலேயும் அந்த ஞானியின் அருள் சத்தை நாம் பெற்றுப் பழக வேண்டும்.

அவ்வாறு பெற்றோம் என்றால்
1.எப்படி மீன்கள் செங்குத்தான நீர் வீழ்ச்சியிலும் அது எதிர் நீச்சல் ஆகின்றதோ
2.இதைப் போல மனிதர்களாக வெளியிடப்பட்ட மூச்சின் எண்ண அலைகள்
3.இந்தப் பூமியிலே வேதனை சங்கடம் சலிப்பு துயரம் துர்மரணங்கள் தீவிரவாதம் வன்முறைகள் இதைப் போன்று எத்தனையோ கொடிய உணர்வின் அலைகளாக வீசிக் கொண்டிருந்தாலும்
4.மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி இந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு சக்தியைக் கூட்டி நாம் இதையே சாதகப்படுத்தி
5,நம் உடலைச் சுத்தப்படுத்தி நம் உணர்வுகளைச் சுத்தப்படுத்தி தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற ஒளி நிலையை அடையலாம்.

அந்த நிலையை அடைவதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்…!