ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 18, 2018

இந்தப் பிரபஞ்சமே அழியும் காலம் நெருங்கிவிட்டது…! என்று விஞ்ஞானிகள் இனிமேல் வெளிப்படுத்துவார்கள்…!


இந்தப் பிரபஞ்சம் முழுமையாகச் சிதைந்து போகும் காலம் நெருங்கிவிட்டது. ஏனென்றால் எங்கே அணு குண்டுகளை வைத்திருக்கின்றானோ அது வெடித்து அதிலிருந்து வெளியில் வரும் புகை மண்டலங்கள் சூரியனிலிருந்து வரக்கூடிய ஒளிக் கதிர்களைத் தடுத்து நிறுத்திவிடும்.

பின் பூமிக்குள் அனைத்தும் உறைபனியாக மாறும். விஷத் தன்மைகள் (கதிரியக்கங்கள்) பரவி புவி எடை கூடும் நிலை வரும் போது சூரியனைக் கடந்தே விலகிச் செல்லும்.

அதே சமயத்தில் சூரியனின் இயக்கத்தை முழுவதையும் அது தடைபடுத்தும் போது இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கோள்களும் சிதைந்து அதனதன் ஈர்ப்பு வட்டத்தைக் கடந்து செல்லும் நிலைகள் வருகின்றது.
1.இன்று சொல்கின்றேன் (உபதேசம் செய்த வருடம் 2001).
2.விஞ்ஞானிகள் இனிமேல் நிச்சயம் இதை வெளிப்படுத்துவார்கள்.
3.ஏனென்றால் இயற்கையின் சூழ்நிலை இப்படி இருக்கின்றது.

இந்தச் சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள அனைத்துக் கோள்களும் சிதைந்து போகும் காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஏனென்றால் மனிதனுக்கு மனிதன் தீவிரவாதம் என்றும் அரக்கத்தனமாக இரக்கமற்றுக் கொன்று குவித்து அதை ரசித்து வாழும் உலகமாக மாறிவிட்டது.

1.மனிதனை மனிதனாக மதிப்பதில்லை.
2.எதிரியை வீழ்த்தினால் போதும்… தான் இறந்தால் பரவாயில்லை…! என்ற இந்த உணர்வுகள் முழுமை அடைந்து விட்டது.
3.தொழிலின் நிமித்தம் சரி.. வாழ்க்கையிலும் சரி… ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி…! ஒருவரை ஏமாற்றி அவரைக் கொலை செய்து வாழும் தன்மை தான் வருகின்றது
4.ஏமாற்றும் உலகமாகச் சென்று இதனால் பெரும் வேதனையாகி அசுர உணர்வாகி மிருகத் தன்மையான செயலுக்குச் செல்லும் தன்மையே வருகின்றது.

நாட்டுக்கு நாடு எதிரி என்ற நிலைகள் வரும் போது போர் முறை கொண்டு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் அதுவும் அல்லாதபடி “விஷக் கிருமிகள் கொண்ட - கெமிக்கல் கலந்த ஆயுதங்களையும் பயன்படுத்துவதால்…!” விஷத் தன்மைகள் நம் பூமியிலே அதிகமாகப் பரவிவிட்டது.

இங்கே பரவிய இந்த அணுக் கதிரியக்கங்கள் நம் பிரபஞ்சம் முழுவதற்கும் பரவப்போகும் போது
1.எல்லாக் கோள்களும் சூரியனை விட்டுப் பிரிந்து செல்லும் தன்மை வருகின்றது.
2.மற்ற பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம் கோள்கள் சிதைந்து ஓடும் தன்மை வருகின்றது.

இதே போலத் தான் மற்ற பிரபஞ்சத்திலிருந்து சிதைந்து வரும் கோள்கள் நமது பிரபஞ்சத்திற்குள் ஊடுருவி வருகின்றது என்று பத்து இருபது வருடங்களுக்கு முன் சொல்லியிருக்கின்றேன்.

காரணம்…. இதைப் போன்று விஞ்ஞான அறிவு வளர்ந்து கொண்ட நிலையில் விஷத் தன்மைகள் பரவி அந்தப் பிரபஞ்சம் செயலிழக்கப்பட்டது. அதில் இருந்து வந்த சிதைந்த பகுதிகள் நமது பிரபஞ்சத்திற்குள்ளும் வந்தது. அத்தகைய பகுதிகள் வியாழன் கோளில் வந்து விழுந்து இணைந்தது. (20 வருடத்திற்கு முன் பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள்)

அதே போன்ற நிலைகள் நாம் வாழும் இந்த உலகிலும் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டு இருக்கும் இந்தக் காலத்தில் இந்த உடலில் நல்ல நினைவுடன் இருக்கும் பொழுதே பிறவியில்லா நிலை அடையும் நிலையாக ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஒவ்வொருவரும் சேர்த்து வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதனின் வலு கூடினால் இந்த மாற்றத்தின் விஷத்தின் தன்மை நமக்குள் வராது தடுக்க முடியும் என்பதனை உஙகளுக்குள் தெளிவாக்குகின்றோம்.

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பத்து இருபது வருட காலம் எம்மைக் (ஞானகுரு) காடு மேடெல்லாம் அலையச் செய்து காட்டு விலங்குகள் எப்படி வாழ்கின்றன…? உயிர் இனங்கள் எப்படி மாற்றம் ஆகின்றன…? நகரங்களில் மக்கள் எப்படி இருக்கின்றனர்…? மனிதனான நீ என்ன செய்ய வேண்டும்…? என்று அவர் கண்ட மெய் உணர்வுகளை என் உடலுக்குள் பாய்ச்சி உண்மையின் உணர்வின் தன்மை அறியச் செய்தார்.

ஏனென்றால் இந்த இரண்டாயிரத்து நான்கிற்கு (2004 டிசம்பரில் நடந்த நிகழ்ச்சி) மேல் உலகம் எப்படிப் போகும்…? என்று 1970களில் அன்றே சொன்னார்.

அவர் சொன்ன நிலைகள் எல்லாம் அப்படியே (இன்றும்) நடந்து கொண்டு தான் இருக்கின்றது. நானும் வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றேன். எம்முடன் தொடர்பு கொண்டவர்களுக்கு இது எல்லாம் தெரியும். இந்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்கும் இது தெளிவாகத் தெரியும்.

ஆகையினால் இனி வரும் காலத்தில் மெய் ஞானிகளுடன் ஒன்றிடும் பக்குவத்திற்கு நாம் ஒவ்வொருவரும் தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக நாம் நம்முடைய மூதாதையர்களின் உயிரான்மாக்களை அவசியம் விண் செலுத்த வேண்டும்.

தியானத்தின் மூலம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெருக்கி அதன் துணை கொண்டு
1.நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்.
3.அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்வோம்.
4,அவர்கள் ஒளியானால் அவர்கள் மூலம் மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் நாம் பெற முடியும்.

கடவுளின் அவதாரத்தில் வராகன் எப்படிச் சாக்கடையில் உள்ள நாற்றத்தை நீக்கி நல்ல உணர்வு பெற்றதோ இதைப்போல எத்தகைய விஷத் தன்மைகள் இனிமேல் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலிற்குள் சேர்த்து இந்த உடலுக்குப் பின் என்றும் ஒளி என்ற நிலையை நமக்குள் சிருஷ்டித்து விட்டால்
1.மகரிஷிகள் வாழும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தில்
2.ஏகாந்த நிலை கொண்டு என்றுமே நாம் அங்கு வாழ முடியும்.