ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 15, 2018

அன்று நான் நன்மை செய்தேன்… ஆனால் பாவி எனக்கு இடைஞ்சல் செய்கிறான் என்று எண்ணினால் கடைசியில் எங்கே போவோம்…?


உதாரணமாக நம் மனித வாழ்க்கையிலே நாம் ஒவ்வொருவரையும் சந்திக்கின்றோம். நண்பராகவும் பழகுகின்றோம். ஆனால் நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது நல்லது செய்தார்...! என்று அவர் மீது மகிழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

அதே சமயம் வெறுப்பான எண்ணங்கள் தோன்றி விட்டால் நான் அன்று நன்மையைச் செய்தேன். ஆனால் எனக்கு இன்று தீங்கு செய்கின்றான் பார்…1 என்று
1.தான் செய்த நன்மையைத் தான் எண்ணுவார்களே தவிர
2.மற்றவர்கள் அவர்கள் செய்த நன்மையை ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை.

ஒருவருக்கு ஒருவர் தான் செய்ததை உயர்வாக எண்ணித் தன் கௌரவத்திற்காக அந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்ட பின் கடும் சொற்களாலே ஒருவருக்கு ஒருவர் ஏசிக் கொள்கின்றார்கள்.

இந்த உணர்வுகள் இரண்டும் பேர் உடலுக்குள்ளும் பதிந்து விடுகின்றது. பதிந்த பின் என்ன செய்கின்றது...?
1.நான் அன்று நன்மை செய்தேன்... எனக்குத் தீங்கு செய்தான் பாவி…
2.அன்று நன்மை செய்தேன்.... இன்று தீங்கு செய்தான் பாவி…! என்று
3.இதையே தான் தியானிக்க ஆரம்பித்து விடுகின்றோம்.

நாம் கடும் உழைப்பு உழைத்திருப்போம். நாம் சுவைமிக்க ஆகாரங்களைப் புசித்திருப்போம். அந்த ஆகாரம் நம் வயிற்றில் தேங்கி இருக்கும்.

ஆனால் நண்பனிடத்தில் நட்பாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட மகிழ்ச்சி இழந்த பின் அவனை நினைக்கும் போதெல்லாம் தீங்கு செய்தான்… தீங்கு செய்தான்…! என்று வேதனயையும் துன்பத்தையும் ஆத்திரத்தையும் எண்ணித் திரும்பத் திரும்பச் சுவாசிக்கும் பொழுது “மூஷிகவாகனா...!”

நாம் சுவாசித்த அந்த உணர்வின் தன்மை நமக்கு வாகனமாக அமைந்து நம் உடலைச் சோர்வடையச் செய்கின்றது. அந்த உணர்வின் உமிழ் நீர் நம் ஆகாரத்தையும் நஞ்சாக மாற்றுகின்றது.

நாம் பாலிற்குள் விஷத்தைப் போட்டுச் சாப்பிட்டால் நம்மை எப்படி மயக்கம் அடையச் செய்கின்றதோ இதைப் போல
1.ஆகாரத்திற்குள் இருக்கும் நல்ல சத்தையே நஞ்சாக்கும் தன்மையாக
2.அதி வீரியமான தன்மை கொண்டு நம் உடலிற்குள் இருக்கும் “இரத்தத்தையும்…” நஞ்சாக மாற்றுகின்றது.

நம் உடலுக்குள் பல நற்குணங்கள் பலவும் இருந்தாலும் வேதனையான உணர்வும் எரிச்சலான உணர்வும் கோபமான உணர்வும் கலந்து விட்டால் அந்த உணர்வின் சிந்தனையே மீண்டும் மீண்டும் வரும்.

பாலுக்குள் அது சுவைமிக்க பொருள்களைப் போட்டுப் பாதாமையும் போட்டிருந்தாலும் காரத்தைப் போட்டு விட்டாலோ அல்லது விஷத்தைப் போட்டு விட்டாலோ அது முன்னணியில் வந்துவிடுவது போல் நமக்குள் இந்தக் கடுகடுப்பான உணர்வு முன்னணியில் வந்துவிடும்.

அது வளர வளர எப்படி ஒரு விஷச் செடி பூமியிலே பட்டுவிட்டால் அது நீரின் சக்தியைக் காற்றில் இருந்து தனக்குள் எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்கிறதோ அதைப் போல நமக்குள் விளையும் ஒவ்வொரு வித்தின் தன்மையும் விஷம் கொண்ட உணர்வாக வளரச் செய்து நம் உடலுக்குள் நோயாக உருவாக்கி விடுகின்றது.

1.ஆனால் நாம் அதைத் தான் தியானிப்போம்….
2.வேறு யார் எதைச் சொன்னாலும் கேட்க மாட்டோம்…!
3.எனக்கு இப்படித் தொல்லையைச் செய்தான்… தொல்லையைச் செய்தான்… எனக்கு இம்சை கொடுத்தான்… என்ற எண்ணத்தையே நாம் சதா சுவாசிக்க நேருகின்றது.

இந்த அளவுக்கு வெறுப்பான எண்ணங்களை எடுத்த பிற்பாடு ஒரு நல்ல பொருளைக் கொடுத்து அதிலே “தரம் பார்க்கச் சொன்னால்… நாம் வெறுப்புடன் பார்த்து ஊ… ம்…! எங்காவது கொண்டு போய்ப் போடு…! என்போம்.

நல்ல பொருளை நாம் காண்பதே கடினமாகும். எதைப் பார்த்தாலும் வெறுக்கும் நிலை தான் வரும். நமக்குள் இந்த விஷத்தின் தன்மை ஓங்கி வளர்ந்த பின் இந்த உடலை விட்டு உயிராத்மா சென்ற பின் நமக்கு குடி இருக்கும் இடம் எதுவாகும்…?

எந்த நண்பன்பால் நாம் இந்த வெறுப்பை எடுத்துக் கொண்டமோ… யாரால் பல தொல்லைகள் வந்தது என்று சிந்தித்துத் திரும்பத் திரும்பத் தியானித்தோமோ… அந்த உடலுக்குள் புகுந்து இதே விஷத்தின் தன்மை கொண்ட தீயதை விளைய வைத்து அங்கேயும் நோயைத்தான் உருவாக்க முடியும்.

ஏனென்றால் பொதுவாக யாராக இருந்தாலும் சரி…! நான் எல்லோருக்கும் நன்மைதான் செய்தேன்… ஆனால் எனக்கு யாரும் நன்மை செய்யவில்லை என்ற இந்தப் பாட்டைத் தான் பாடுவோம்.
1,அப்படிப்பட்ட நிலைகளில் நம் எண்ணம் இருக்குமானால் அதனின் முடிவு கடும் வேதனையாகி
2.நோயைத்தான் தனக்குள்ளும் அடுத்த உடலுக்குள்ளும் உருவாக்க முடியும்.

ஆகவே நம் வாழ்க்கையின் எல்லை எது…? என்றும் இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…! என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்,