ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 1, 2018

விளம்பரப்படுத்தி யாரையும் மெய் ஞானம் பெறச் செய்ய முடியாது – "உள்ளபூர்வமாக ஆசை உள்ளவர்களுக்குத்தான் அதைக் கிடைக்கச் செய்ய முடியும்...!"


மெய் ஞானிகளின் சக்தியை எடுத்ததால் “அது கிடைத்தது...! இது கிடைத்தது...!” என்று நாம் மற்றவர்களிடம் வெளிப்படுத்தி அதன் மூலம் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டி மெய் வழிக்கு வருவதைக் காட்டிலும்
1.மெய் ஒளியைத் தான் பெற வேண்டும் என்ற ஆசை
2.அவர்களுக்குள் அது தூண்டப்பட்டு இங்கே வருவது தான் முக்கியம்.

பெரும் விளம்பரங்களைச் செய்து ஆசைகளையும் பேராசைகளையும் ஊட்டுவதைக்  காட்டிலும்
1.”தான் மெய் ஞானம் பெற வேண்டும்...!” என்ற ஆசை
2.அவரவர்களுக்கு அந்த உந்துதல் வரும் போது தான்
3.மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்திகள் அங்கே கிடைக்கும்.

ஏதோ இந்தச் சாமி (ஞானகுரு) சொல்கிறார். அவரிடம் போய் வரலாம் என்று இப்படிப்பட்ட உணர்ச்சிகளைத் தூண்டி அந்த உணர்வினுடைய வேட்கைகளில் வரும் போது அது நிலைத்திருக்காது. குட்பை...! (GOOD BYE) போட்டுப் போய்க் கொண்டிருப்பார்கள்.

1.தன் உள்ளத்தாலே மெய் உணர்வுகளைப் பெறவேண்டும்
2.மெய்ப் பொருளைக் காண வேண்டும்
3.இயற்கையின் பேருண்மைகளை உணர வேண்டும் என்ற வேட்கைகள் உருவாகி
4.அந்த வேட்கையின் அடிப்படையில் வரும் போது தான்
5.யாம் உபதேசிக்கும் இந்த ஆற்றலையும்
6.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மெய் ஒளியைப் பெறக் கூடிய தகுதியும் வருகிறது.

ஆகையினால் தான் அதிகமாக விளம்பரம் செய்வதோ மற்ற நிலைகளையோ யாம் கூடுமான வரை தவிர்ப்பது. காரணம் ஒவ்வொரு உள்ளத்திலும் அந்த ஆசை தோன்ற வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்ற வேட்கையை ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டச் செய்வதற்காகத்தான் அடிக்கடி இந்த உபதேசத்தின் வாயிலாக ஞானிகளின் அருள் வித்துக்களை உங்களுக்குள் பதிய செய்கின்றோம்.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் உணர்வின் எண்ண அலைகளை நேரடியாகத்  தொடர்பு கொள்ளச் செய்கின்றோம்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்கள் வெகு தொலைவில் எட்டாத தூரத்தில் இருந்தாலும்
1.உங்கள் எண்ணங்களை எங்கே எட்டும்படிச் செய்து
2.அங்கிருந்து வரும் சக்தியினை பெறச் செய்யும் சந்தர்ப்பத்தை உங்களுக்குத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

அந்த ஆற்றல்கள் உங்களுக்குள் பெருகி வளர்ச்சி அடைந்து வரும் பொழுது அதனின் உண்மையின் நிலைகளை நீங்கள் நிச்சயம் உணரலாம்.