ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 15, 2018

உங்கள் கண்ணின் நினைவாற்றல் கொண்டு (ANTENNA POWER) “துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்...!”


கண்ணன் கருவிற்குள் இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்று அன்று ஞானிகள் காட்டினார்கள். வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும் அந்தத் துன்பத்தை நீக்க
1.ஈஸ்வரா...! என்று புருவ மத்தியிலிருக்கும் நம் உயிரை வேண்டி
2.மனித வாழ்க்கையிலே துன்பத்தை வென்று உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிச் சென்ற துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற நினைவை
4.நம் கண்ணான ஆன்டெனாவிற்கும் கண்ணனாக உபதேசித்த நம் கண்ணிற்குள்ளும் அதைச் செலுத்தி
5.விண்ணிலே நினைவைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளிலும் படர வேண்டும் என்று ஏங்கிடல் வேண்டும்.

எப்படி...?

சாதாரணமாக ரேடியோவோ டி.வி.யோ பார்க்க வேண்டும் என்றால்  ஆன்டெனா என்று ஒரு சாதனத்தை அதனுடன் இணைத்து வெளியிலே வைத்திருப்பார்கள். அந்த ஆன்டெனாவிற்குள் காந்தத்தை பரப்பச் செய்திருப்பார்கள்.

வெளியிலிருந்து வரக்கூடிய காந்த அலைகளை இந்த ஆன்டெனா கவர்ந்து டி.வி.க்குள் மோதியவுடன் அந்தந்த அலை வரிசையின்  உணர்வுகளைப் படமாகக் காட்டுகின்றது.

இதைப் போன்று தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் நினைவின் எண்ண அலைகளைக் கண்ணான ஆன்டெனா மூலமாக விண்ணிலே பாய்ச்சச் செய்கின்றோம்.

எதை எண்ணி ஏங்குகின்றமோ அந்த உணர்வின் அலைகளை இந்தக் காற்றிலிருந்து கவர்ந்து நேரடியாக நம் உடலுக்குள் சென்று அந்த உணர்வின் எண்ண அலைகளாகப் பரப்பி அந்த உணர்வின் நிலையை நமக்குள் செயலாக்கும்.

மனித வாழ்க்கையில் வரும் வேதனைகளையும் இன்னல்களையும் தடுக்க அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று
1.எல்லோருடைய நினைவையும் கூட்டி
2.கண்ணின் நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏக காலத்தில் ஏங்கும் பொழுது
3.உங்கள் அனைவருக்கும் அந்த நேரடித் தொடர்பு கிடைக்கின்றது.

அதாவது தீமையை நீக்கி மெய் ஒளி பெறும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் செலுத்தும் போது
1.நமக்குள் இருக்கும் ஒவ்வொரு உணர்வின் தன்மைக்கும் அது உபதேசிக்கப்பட்டு
2.மெய் உணர்வின் வழியில் அதன் உணர்வுகள் நமக்குள் செயலாக்கத்திற்கு வரும்.
3.என்றுமே அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் நினைவின் அலைகளை துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளச் செய்வதற்கே இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.